Friday, September 09, 2016

தேவிப்பட்டினம், கடலுக்குள்ளே கிரகதேவதைகள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 84)

கிழக்குக்கடற்கரைச் சாலை  அட்டகாசம்!   அருமை!    அன்றைக்குப் போக்குவரத்தும் அவ்வளவா இல்லை! இந்த ஊர் அதிராம்பட்டினம்.   நாலைஞ்சு நாளைக்கு முன்னால் பாண்டிபஸாரில் ஒருகடையில் விளக்கு வாங்குனப்ப, அந்தக் கடைக்காரர்கள்  அவுங்க ஊர்  அதிராம்பட்டினமுன்னு    சொன்னது  நினைவுக்கு வந்துச்சு.
பஸ்ஸ்டாண்டு, கடைத்தெரு மட்டும் கொஞ்சம் பிஸியா பரபரப்பா இருக்கு.  டீ ப்ரேக் னு   கடைத்தெருவில் வண்டியை ஓரங்கட்டிட்டு நம்மவரும் சீனிவாசனும் போய் டீ  குடிச்சாங்க.  எனக்கு இளநீர் வேணுமுன்னு  சொல்லிட்டேன். எங்கே கண்ணில் படுதோ அங்கே குடிச்சால் ஆச்சு.
மல்லிப்பட்டினம், மனோரா, மணமேல்குடி,  கடந்து  மீமிசல் வரும்போது இளநீர் கண்ணில் பட்டது.  ரொம்பவே வயசான பெரியவர் இளநீர் விக்கறார். இவுங்கெல்லாம் டீ குடிச்சு ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிருச்சு.  தாகம்      தீரட்டுமுன்னு   ஆளுக்கு ஒரு இளநீர் ஆச்சு.



தொண்டி என்ற பெயரைப் பார்த்ததும்  உப்பளம் தெரியுதான்னு பார்த்தேன். வண்டி போகும் வேகத்தில்   லேசாத் தெரிஞ்சது:-)
இந்தப் பகுதியில் ஏராளமான ஊர்கள் பட்டினமென்று  இருக்கு.  மல்லிப்பட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், சத்திரம்பட்டினம், பாசிப்பட்டினம் என்ற வரிசையில் நாம் இப்போ தேவிபட்டினத்துக்குப் போய்க்கிட்டு இருக்கோம். ஊருக்குள் நுழையும்போது  மணி ஒன்னு அடிக்கப்  பத்து நிமிட்.

கடலுக்குள் இருக்கும் நவகிரகக்கோவில் என்பதால்  பகலில் மூடி வச்சுருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். நல்லவேளையா அப்படித்தான் இருந்துச்சு.
ராமாயணகாலத்துலே, பாலம் அமைத்து இலங்கை செல்லும் முன் ராமனே இங்கே வந்து  தோஷநிவர்த்திக்காக பூஜை செஞ்ச தலமாம். கடல் தண்ணிக்குள்ளே ஒன்பது  கற்கள் அங்கங்கே  இருக்கு.  அந்தக் காலத்துலே  தண்ணீர் குறைவா இருக்கும்  நேரங்களில் தண்ணிக்குள் நடந்துவந்து  சாமி கும்பிட்டு இருப்பாங்க.  இப்ப  இந்த நவகிரகக் கற்களைச் சுத்தி    நடைமேடை போட்டுருக்காங்க.  நல்ல டெக்கிங்.  கால்களை நனைச்சுக்காம நடந்துபோய் சுத்தி வந்து சாமி கும்பிட்டுக்கலாம்.
ஒரு அம்பது மீட்டர் தூரம் நடக்கணும். ஒரு நுழைவு வாயில் கட்டிடம் இருக்கு.  ஒருபக்கம் காவல்துறையினருக்குன்னு  சிகப்பு நிறமும், இன்னொரு பக்கம் திருக்கோவில் அலுவலகம்னு  லேசான காவி நிறமுமா இருக்கு. நடுவில் ஒரு  க்ரில் கேட்.  இந்தாண்டை  ஒரு  வளைவு. தலையில் ராமலக்ஷ்மண சீதாவுடன் ஆஞ்சி.

முந்தியெல்லாம்  கோவிலுக்குள் போக அஞ்சு ரூ கட்டணம் வசூலிச்சாங்களாம். அதுக்குன்னு டெண்டர் விட்டு காசு பார்த்துருக்காங்க.  அந்த ஒப்பந்த காலம் முடிஞ்சதும் பொதுமக்களும் ஊர்மக்களுமா எதிர்ப்பு காமிச்சதால் இப்ப கட்டணம் ஒன்னும் இல்லை. இலவசம்தான்.
இந்த நேரத்தில் கடலில் தண்ணீர்  குறைவா இருக்கு.(Low tide)  நாம் அங்கிருந்தபோதே  தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா அதிகம் ஆகிக்கிட்டு இருந்தது. வெளியே தெரிஞ்ச சின்னக் கல் இப்போ நீரில் மூழ்க ஆரம்பிச்சது.

கிரக தோஷம், பரிகாரம் பண்ணிக்கணுமுன்னு  ஏராளமான மக்கள் வந்து  போய்க்கிட்டு இருக்காங்க.  இதுலே  பரிகாரம் பண்ணி வைக்கறோமுன்னு சிலர் பூஜாரிகளா இருந்து  பூஜை செஞ்சு தர்றாங்களாம்.  பரிகாரம் பண்ணிக்க வரும் இளம்பெண்களுக்கு இவர்களில் சிலரின் அத்துமீறல் காரணமா என்னென்ன கஷ்டங்களோ நடந்துவருதுன்னு  நல்லவர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கன்னும் தகவல் கிடைச்சது.   இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் இருக்கோ.....   யார் கண்டா?

எல்லா நல்லதுகளிலும் கெட்டதைக் கலந்துரும் மனுசனைவிடக் கொடிய  ஜென்மம் வேறேது?  ப்ச்.... :-(  பரிகாரம் செஞ்சுக்கப்போகும் பக்தர்கள், தங்கள் பெண்களை இரவு எட்டுமணிக்குப் பரிகார பூஜைக்குத் தனியாக  அனுப்பாதீங்க. கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதான்.  நீங்க குடும்பத்தோடு பகலில் போய்  அங்கே  பரிகாரம் செஞ்சுக்கிட்டு அப்படியே திரும்பி வந்துருங்க.    '  இருட்டுனபிறகு தனியா வா' ன்னு சாமி,  சொல்லலை என்பது நினைவிருக்கட்டும். 




நாங்க  நடைமேடையில் ஒரு வலம் வந்து, கொஞ்சம் க்ளிக்ஸ் எடுத்துக்கிட்டோம். மொட்டை வெயில் என்பதால்  'கோவிலில்'  யாரும் இல்லை. ஒரே ஒருத்தர் தண்ணியில் இறங்கி 'கிரகங்களை' சுத்தி வந்து கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.  நவபாஷாணம் என்றும் இந்த இடத்துக்கு ஒரு பெயர் இருக்கு.

வெளியே  எதிர்ப்பக்கம் ஒரு கோவில். இந்தாண்டை மரத்தடியில் நிறைய நாகர்கள், இன்னொரு மேடையில்  கோவில் கட்டிடம்போல ஒன்னு. அதுக்குள்ளேயும் நாகர்கள்.


பக்தர்களுக்காக ஒரு சங்கல்ப்ப மண்டபம், உடைமாற்றும் அறை, கழிப்பிடம் இப்படி  இருக்கு. இருக்குன்னு மட்டும் சொல்லிக்கறேன்.  எப்படி இருக்குமுன்னு நீங்களே ஊகிச்சுக்கலாம்.....


பக்கத்துலேயே  முத்தரையர்கள் சமூகத்தினர் கட்டி இருக்கும் முத்துமாரியம்மன் கோவில்  சின்னதா  மூணு நிலைக் கோபுரத்தோடு  அழகாவே இருக்கு! அடுத்து கம்பி வலை போட்ட ஒரு அல்லிக்குளம்!

இன்னொரு மாரியம்மன் கோவில் கூட இருக்கு. அது சக்தி பீடத்தில் ஒன்னுன்னு சொன்னாங்க.  கோவில் மூடி இருக்கும் நேரம் என்பதால் நாம் போகலை.  வெளியே இருந்தாவது பார்த்திருக்கலாமோ.....  ப்ச் ....

தேவிபட்டினத்தை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிப்போறோம்.   இன்னும் 70 கிமீ பயணம் இருக்கு இப்போதைக்கு!


தொடரும்.........  :-)



15 comments:

said...

//அந்த ஒப்பந்த காலம் முடிஞ்சதும் பொதுமக்களும் ஊர்மக்களுமா எதிர்ப்பு காமிச்சதால் இப்ப கட்டணம் ஒன்னும் இல்லை. இலவசம்தான்.//
//பக்தர்களுக்காக ஒரு சங்கல்ப்ப மண்டபம், உடைமாற்றும் அறை, கழிப்பிடம் இப்படி இருக்கு. இருக்குன்னு மட்டும் சொல்லிக்கறேன். எப்படி இருக்குமுன்னு நீங்களே ஊகிச்சுக்கலா//

காசும் குடுக்கமாட்டோம், சுத்தமாகவும் இருக்கணும் னா முடியுமா ? அப்போ காசு குடுத்தா சுத்தமா இருக்குமா ன்னு கேட்கக்கூடாது.

said...

வாங்க விஸ்வநாத்.

அதான் பதிலை நீங்களே சொல்லியாச்சே :-)

said...

அதிராமப்பட்டினம் - எனது நண்பர் ஒருவரின் ஊர். தனது ஊர் பற்றி அடிக்கடிச் சொல்வார். ஆனால் சென்றதில்லை!

தொடர்கிறேன்.

said...

தொண்டின்னவுடனே எனக்கு எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு முதன்முதல்ல கடலைக் காண்பித்தது தொண்டியில்தான். நாலு -அஞ்சு வயசிருக்கலாம். எனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும். மணலில் நடக்கும்போது கடல் வெல்ல ஜலம் என்று சொல்லி போயக் குடித்துப்பார்க்கச் சொன்னார். அப்புறம் மீனவர் உதவியால் சின்ன போட்டில் (கட்டுமரம்) 50 அடி கூட்டிச்சென்றார்.

இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வது physically கஷ்டமாயில்லையா?

said...

//எல்லா நல்லதுகளிலும் கெட்டதைக் கலந்துரும் மனுசனைவிடக் கொடிய ஜென்மம் வேறேது? ப்ச்.... :-( பரிகாரம் செஞ்சுக்கப்போகும் பக்தர்கள், தங்கள் பெண்களை இரவு எட்டுமணிக்குப் பரிகார பூஜைக்குத் தனியாக அனுப்பாதீங்க. கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதான். நீங்க குடும்பத்தோடு பகலில் போய் அங்கே பரிகாரம் செஞ்சுக்கிட்டு அப்படியே திரும்பி வந்துருங்க. ' இருட்டுனபிறகு தனியா வா' ன்னு சாமி, சொல்லலை என்பது நினைவிருக்கட்டும். //

இப்படி வேறு நடக்கிறதா?
நன்றாக சொன்னீர்கள் .
எங்கும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.

said...

பொதுவாவே பட்டினமெல்லாம் கடற்கரை ஊர்கள். காவிரிப்பூம்பட்டினம் கேள்விப்பட்டிருப்பீங்க. கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த ஊர். இப்ப அது கடலுக்கு அடியில இருக்குன்னு ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா அதுக்கு மேல ஆராயக்கூடாதுன்னு ஏதோ ஒரு பேர் தெரியாத தடை. ஆராய்ஞ்சா எது வெளிய வந்துரும்னு பயப்படுறாங்களோ! :)))))))))))))))))

தண்ணிக்குள்ள நவக்கிரகங்கள். இப்படி இருக்குறது இது ஒன்னுதான்னு நெனைக்கிறேன்.

பரிகாரம்னு வந்தவங்க கிட்ட வம்பு பண்ண அர்ச்சகன்களை என்ன செஞ்சாலும் தகும். கோயில் பெருச்சாளிதான் சிவன் மேல அசிங்கப்படுத்தும்னு ஒரு சொலவடை இருக்கு. கோயில்ல இருக்கும் எல்லாரும் பெருச்சாளிகள்னு நான் சொல்லல. ஆனா காஞ்சிபுரத்து தேவநாதன் மாதிரியான அர்ச்சகன்களும் இருக்காங்க. என்ன செய்றது! :(

இளனி விக்கிற பெரியவரைப் பாராட்டனும். இந்த வயசுலயும் உழைக்கிறாரே. ஆனா இந்த வயசுலயும் உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளுனது யார்னோ எதுன்னோ தெரியல. பாவம்.

said...

முன்பொரு முறை தேவிப்பட்டினம் போயிருந்தபோது கடலில் படகில் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்தது நினைவிலாடுகிறது

said...

சொல்ல வந்ததை ராகவன் சொல்லிடாப்டி. பட்டினம் என்றால் கடற்கரை ஊர். இப்போ இல்லாத காவிரிப்பூம்ப்பட்டினம் பத்தி அவரே சொல்லிட்டாலும் இப்போ இருக்கிற நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம் என எல்லாமே கடற்கரை ஊர்கள்தான். பட்டணம் என்றால் நகரம். அது வேற மேட்டர்.

said...

// இப்போ இல்லாத காவிரிப்பூம்ப்பட்டினம் பத்தி அவரே சொல்லிட்டாலும் இப்போ இருக்கிற நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம் என எல்லாமே கடற்கரை ஊர்கள்தான். பட்டணம் என்றால் நகரம். அது வேற மேட்டர். //

ஆமா.. நாகப்பட்டினம் அதிராமப்பட்டினம் எல்லாம் மறந்துட்டேன்.

பட்டணம் என்ன மேட்டர். சொல்லுங்களேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்த ஊரை ஆதிரைன்னு குறிப்பிடறாங்க. இந்தப் பெயரில் சில பதிவர்களையும் பார்த்த நினைவு!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எனக்கு ஒருமுறை தூத்துக்குடி உப்பளங்களைப்போய் பார்க்கணுமுன்னு இருக்கு. த்வார்க்கா பயணத்தில் ஒரு இடத்தில் பார்த்துருக்கேன். ஆனால் பாத்தி கட்டி கடல் நீரை நிரப்பின்னு பார்க்கலை.

ஃபிஸிகலாக் கஷ்டம்தான். ஆனால் பார்க்க வேண்டிய இடங்களில் குறைஞ்ச பட்சம் 10% ஆவது பார்த்துக்கணுமுன்ற வெறி இருக்கே. பயணத்தில் எனக்கு சாப்பாடு கஷ்டம் ஒரு பக்கமுன்னா........... ஓய்வறை கஷ்டம் வேற:-(

பாவம். நம்ம கோபால். போகுமிடங்களில் எல்லாம் எனக்கான சௌகரியத்தைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். அதுக்கே அவருக்கு என் ஸ்பெஷல் நன்றியைச் சொல்லிக்கறேன்.

said...

வாங்க கோமதி அரசு.

இந்த அக்கிரமக்காரர்களுக்கு அரசியல் பலம் வேற இருக்காம். வேறெங்கே போய்ச்சொல்லி அழ? :-(

said...

வாங்க ஜிரா.

வரவர அநியாயங்களும் அக்ரமங்களும் பெருகிக்கிட்டே போகுது ....ப்ச்... :-(

இந்த வயசிலும் உழைக்கும் பெரியவர் தன்மானச்சிங்கம்தான்! நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தண்ணீர் குறைவாக இருக்கும்போது நடந்தும், அதிகமா இருக்கும்போது படகிலும் போய் பூஜை செய்வாங்கன்னு முந்தி நான் வாசிச்சு இருக்கேன். இந்த நடைமேடை ரொம்ப சௌகரியமா இருக்கு. சமீபத்துலேதான் போட்டுருக்காங்கபோல !

said...

வாங்க கொத்ஸ்.

பட்டணத்துக்காரர்கள் எல்லாம் வந்து பட்டினத்தைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி !