Monday, September 05, 2016

ராமசாமியின் தூதன் நானடா ராவணா, என்றவன்.... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 82)

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்'னு பாடிக்கிட்டே ராம(ர்)சாமி கோயிலுக்குள் நுழைந்தேன். வயதான பட்டர், ராமலக்ஷ்மண சீதை திருமேனிகளைக் காமிச்சு விளக்கிக்கிட்டு இருந்தாலும் என் மனசென்னவோ வீணை வாசிக்கும் ஹனுமானைப் பார்க்கப் பரபரத்துக்கிட்டே இருந்துச்சு. இரா.முவின் பத்திகளில் படிச்சேனே...... மலர்வனம் லக்ஷ்மியும் மடலில் நினைவுபடுத்திட்டுப் போயிருந்தாங்களே......உள்பிரகாரத்தை ரெண்டு முறை வலம்வந்தேன். கண்ணில் அனுமனைக் காணோம்....

      "இன்னும் எத்தனை முறை சுத்தறதா இருக்கே? காணோம் காணோமுன்னா ..... யாராவது எடுத்து ஒளிச்சுவச்சுட்டாங்களா என்ன? பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

யாருமே கண்ணுலே படலையே.....'பேசாம ' அந்தப் பட்டரையே 'கேக்கலாமு'ன்னு மூலவர் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். பாவம் ரொம்பவே வயசானவர். கண்ணும் மங்கலா இருக்கு போல. ரெண்டு நிமிசத்துக்கு முன் என்னைக் 'கண்ட' பாவம் அடியோடு இல்லை. ஆள் நடமாட்டம் பார்த்ததும் 'டகால்'னு எண்ணெய் தீபத்தின் பிடியைப் பிடிச்சுத் தூக்கியபடி ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், சீதாப் பிராட்டின்னு டேப் ரிக்காடர்போல ஆட்டோமாடிக்காச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வீணை வாசிக்கும் ஹனுமார் எங்கே இருக்கார்ன்னு தவிப்போட கேட்டேன். அதே தீபத்தால் இங்கேன்னு வலதுபக்கம் கையைக் காமிச்சார். அட! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கார், காலை மடிச்சு அரைமண்டி போட்டவிதமா. வெயிஸ்ட் கோட்டா போட்டுருக்கார்? தங்க(???)க்கவசம் போல இருக்கே!!!!
சைடு போஸ் மட்டும்தான் தெரியுது. ராமனுக்கு மட்டுமே முகம் காட்டும்விதமா.......... நான் ஒருத்தி...முதலில் இங்கே சந்நிதிக்கு வந்தப்பயே கண்ணைச் சுழற்றி இருந்தால்..... பட்டுருப்பார். நான்தான் ஒரு மனசா, ஒரு முகமா ராமன் மேல் கண்ணு நட்டுவச்சுட்டேனே...  

  பிரகாரம் முழுசும் ஸீன் பை ஸீனா ராமாயணம்தான். அழகானச் சித்திரங்கள். சுவர்களில் காமிக்ஸ் புத்தகம். கும்பகர்ணனை எழுப்பும் யானைகள். ஹைய்யோ..........
வயசான பட்டரைத் தவிர்த்து இதெல்லாம் அப்படிக்கப்படியே!!!!    நான் என்ன அரசியல்வியாதியா?  அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சுன்னு  மத்தி மாத்திச் சொல்ல?

அருள்மிகு இராமஸ்வாமி திருக்கோயில்  (தென்னக அயோத்தி) என்ற போர்ட்
அழகான அஞ்சு நிலைக் கோபுரவாசலைக் கடந்தால் அழகழகான சிற்பங்களைத் தாங்கி நிற்கும் தூண்களுடன் பெரிய மண்டமம். நடுவிலே  பலிபீடம், கொடிமரம். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் அதோ....  அங்கே தெரிகிறார்!
இந்த மண்டபத்துலே மட்டும் 62 தூண்கள். ஒவ்வொன்னிலும் நாலு பக்கமும் சிற்பங்களைச் செதுக்கி இருக்காங்க.  நின்னு ஒவ்வொன்னா ரசிக்க ஒரு முழு நாள் எடுத்து வச்சுக்கணும்.  அது வர்ற பயணத்துக்கு ................
மூலவரைப் போய் சேவிச்சுக்கிட்டோம்.  ராமனும் சீதையும்  ஒரே  ஆசனத்தில் அமர்ந்து இருக்க, லக்ஷ்மணன்,   பாடிகார்ட் மாதிரியும் அதே சமயம் பவ்யமாயும் நிக்கறார். அப்பவும் கையில் வில் இருக்கு.  பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீசறார்.  அப்ப நம்ம ஆஞ்சி?  இதோ... நமக்கிடதுபக்கம் கருவறைக்குள்  ஒரு கையில் வீணையும், இன்னொரு கையில்   ஓலைச்சுவடியுமா (ராமாயணம்) காலை ஒருமாதிரி மடிச்சு    உக்கார்ந்துருக்கார்!  இப்ப இவரிருக்குமிடம் நமக்குத் தெரிஞ்சு போச்சுன்றதால்   அங்கே  போய் நின்னதும், தலை தானாகவே இடப்பக்கம்தான் முதலில் திரும்புது எனக்கு :-)
தென்னக அயோத்தின்னு சொன்னது ரொம்பச்சரி. அண்ணந்தம்பிகள் நால்வரை இப்படி ஒரே இடத்தில் பார்ப்பது அபூர்வம்தான்!

பிரகாரத்தில் வலம் வந்தால் இன்னொரு  வியப்பு காத்திருக்கும்!

 ராமாயணம் முழுசும் சித்திரங்களாக!!   மூணு வரிசையில்!  இடப்பக்கம் மேல் வரிசையை மட்டும் பார்த்துக்கிட்டே போகணும் ஒரு முழு சுத்து வந்ததும் ரெண்டாவது வரிசை அதேபோல்  வலம் வந்து பார்க்கணும். கடைசியில்  மூணாவது வரிசை மட்டும்...........   நமக்கும் கருவறையை வலம் வந்து  மூணு சுத்தும் ஆச்சு!  முழு ராமாயணத்தைப் பார்த்தும் ஆச்சு!












சின்னப்பசங்களுக்கு சித்ரக்கதை ரொம்பப்பிடிக்கும்!  இங்கே பாருங்க    கணையாழி கொடுக்கும் ஸீனில் ரெண்டு அனுமன் ரெண்டு சீதை :-)

தஞ்சாவூர் மன்னர் ரகுநாத நாயக்கர் இந்தக் கோவிலை 400 வருசங்களுக்கு முன்னே கட்டி இருக்கார்.  ராமனுக்காகவும் ராமாயணத்துக்காகவும்  இப்படி ஒரு கோவில் கட்டணுமுன்னு தோணி இருக்கு பாருங்க அவருக்கு!
இங்கே கும்பகோணத்துலே நடக்கும் மகாமகத் திருவிழாவில்  உள்ளூரில் இருக்கும் 12 சிவன் கோவில்களுடன், அஞ்சு பெருமாள் கோவில்களும் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும்.  அவைகளில்  இந்தக் கோவிலும் ஒன்று.

சார்ங்கபாணி கோயில்,
சக்கரபாணி கோயில்
இராமஸ்வாமி கோயில்
ராஜகோபாலஸ்வாமி கோயில்
வராகப்பெருமாள் கோயில்
என்ற அஞ்சு கோவில் பெருமாள்கள் காவிரிக்குப்போய் வருவாங்க.

கொடிமரம் தங்கமா ஜிலுஜிலுன்னு ஜொலிக்குது.  பழைய கொடிமரம் பழுதாகிப் போனதால் இது போன வருசம் வச்ச புதுக்கொடிமரம்!
துண்களைப் பார்க்கன்னே இன்னொருக்கா வர என்னை சகாயிக்கணும் என்ற கோரிக்கையை ராமனுக்கு வச்சுட்டே அங்கிருந்து கிளம்பினேன்.
கோவிலுக்கு வெளியே வந்தால்... கும்பகோணம் ஸ்பெஷல்ஸான  உலோகச்சிற்பங்களின் கடைகள்.  விற்பனை மட்டுமில்லாம இங்கேயே செய்யறாங்க.  ஒரு குறிப்பிட்ட வகைக் களிமண்ணால்  வார்ப்பு செய்யும் வேலைகள் நடக்குது.




அங்கே நம்மாள் ஒன்னு....... ரொம்பப் பெருசு......  ரொம்பப்புளிக்குதே  இந்தப் பழமுன்னு க்ளிக்கினதோடு சரி :-)
அறைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  கீழே இருக்கும் ரைஸ் இன் ஸ்பைஸில்  ராச்சாப்பாடு ஆச்சு. நம்மவருக்குப் பூரியும் எனக்கு தோசையும்!

நாளைக்கு  இங்கே இருந்து கிளம்பறோம்.  போய் எல்லாத்தையும்  பொட்டியில் அடைச்சு வச்சுட்டுக் கிடக்கலாம். நாளைக்கு கொஞ்சம் நீண்டபயணம் இருக்கு.

தொடரும்.......  :-)



13 comments:

said...

அருமை. நன்றி.

//ரொம்பப்புளிக்குதே இந்தப் பழமுன்னு //
டீச்சருக்கே புளிக்குதுன்னா அப்போ அம்பானி வந்து வாங்கினாதா உண்டு.

said...

உங்கள் புண்ணியத்தில் மூலவர் தரிசனம் ஆச்சு. எப்படி சிற்பக்கடையில் நிறைய நேரம் செலவழிக்காமல் இருந்தீர்கள்?

said...

டீச்சர், இந்தக் கோயில் 108ல் வராதுன்னு நெனைக்கிறேன். சரியா?

வீணை வாசிக்கும் அனுமார் படம் கிடைக்குமா டீச்சர்?

ஓவியங்கள் அழகா இருக்கு. நல்ல பராமரிப்புன்னும் தெரியுது.

said...


நான் போனபோது பார்த்ததைவிட ஓவியங்கள்புதிதாய்த் தெரிகின்றன சிற்ப சாலை பார்த்த நினைவில்லை. வாழ்த்துகள்

said...

ஓவியங்கள் வெகு அழகு.....

said...

தூண்களின் சிற்பங்கள் மிகவும் தத்ருபம்...

ராமாயண சித்திரங்கள்...அடடா கொள்ளை அழகு...அருமை

said...

வாங்க விஸ்வநாத்.

அதென்ன டீச்சருக்கே............!!!!

விலை ஒரு பக்கம் இருக்கட்டும். வெயிட்டைப் பார்க்கணும் இல்லையோ? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுக்கும் 30 கிலோவில் நான் என்னதான் வாங்கி அடைப்பேன் :-(

said...

வாங்க நெல்லைத் தமிழன்.


'தடா' போட கூடவே ஒருத்தர் இருப்பதை மறந்துட்டீங்களா? :-)

said...

வாங்க ஜிரா.

ஓவியங்களைப் போனவருசம் வண்ணம் கொடுத்து சரி பண்ணி இருக்காங்க. எல்லாம் மூலிகை வண்ணங்களாம்!

படம்? பப்படம்தான்........ கோவிலே அவரைப் படம் எடுத்து விற்பனைக்கு வச்சால் கோவிலுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனா.... இவுங்க செஞ்சுட்டாலும்............:-(

கவசம் எல்லாம் செய்ய எப்படி ஸ்வாமிகளை அளக்கறாங்கன்றது கொஞ்சம் தேடிப் பார்க்கணும்.இல்லே?

இது 108 லே இல்லை. சக்கரராஜாவும் தான்! சில நல்ல கோவில்கள் 108 இல் வராதது கொஞ்சம் வியப்புதான். புது 108 ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா? !!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சிற்பச்சாலைன்னு தனியா ஒன்னும் இல்லை. நுழைஞ்சு போகும் மண்டபத்துலேதான் சிற்பங்கள். நாம்தான் கோவிலுக்குள் நுழைஞ்சவுடன் மூலவரை நோக்கிப் போயிடறோமே.... சுத்திமுத்திப் பார்க்கறோமோ?

ஓவியங்களுக்கு மீண்டும் மூலிகை வண்ணம் சேர்த்துப் புதுப்பித்து இருக்காங்க. அதான் பளிச்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆமாம்.... குழந்தையைக் கூட்டிப்போங்க ஒருமுறை. ரோஷ்ணிக்கு ரொம்பப் பிடிக்கும்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துருக்கலாம்......... அருமையோ அருமைதான்!

said...

ரெண்டு சீதை ரெண்டு அனுமார் கதை சொல்லிட்டீங்களா? சட்டுன்னு ஞாபகத்துக்கு வரலையே..
ஒரு ட்யூஷன் கிளாஸ் எடுங்க ரீச்சர்..