Friday, September 16, 2016

கந்தமாதன பர்வதம் ! ராமேஸ்வரம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 87)

ரொம்பப் பக்கத்தில்தான் கந்தமாதன பர்வதம் என்று ராமர் பாதம் இருக்கும் மலை இருக்கு. அங்கேயும் போயிட்டு வந்துடலாமேன்னு போனோம். ராமநாதஸ்வாமி கோவிலில் இருந்து மூணு கி மீ இருக்கும்.  என்னுடைய  முந்தையப் பயணத்தில் ஒரு குதிரை வண்டியில் இங்கே வந்தோம்.  அப்போ பொட்டல்காடா ஒன்னுமே இல்லாமல் இருந்த  இடம்,   இப்போ ஊர் வளர்ந்துபோய் ரெண்டுபக்கமும் வீடுகளும் நெருக்கமாக் கடைகளும் சந்துபொந்துள்ள தெருக்களுமாக் கிடக்கு.
நல்ல படிகளுடன் மேலேறிப்போகும் விதமாக்கட்டி எழுப்பி இருக்காங்க.  கீழே பயணிகளுக்கான  தீனிக் கடைகள்.  இளநீர் கடையை மட்டும் பார்த்து வச்சுக்கிட்டேன்:-)

மேலேறிப்போனால் ஒரு கருவறை மட்டும் நடுவிலே. சுத்திவர வெராண்டா கைப்பிடிச் சுவருடன் இருக்கு. கருவறையை ஒட்டியே திண்ணை போன்ற அமைப்பு.  கருவறைக்குள்ளே  தரையில் கல்லில் பதிந்த ராமனின் பாதங்களின் தடம். தீபாராதனை காமிச்சார் பூசாரி.  கும்பிட்டுக்கிட்டோம்.
மேலே: சுட்டபடம்தான். ரொம்பப் பழசு போல. இப்ப கருவறைக்கும் வெளிப்புற தூண்களுக்குமிடையில் திண்ணை போலக் கட்டி  விட்டுருக்காங்க.

ராமலக்ஷ்மணர்கள் சுக்ரீவனின் சேனையுடன்  இங்கே வந்து சேர்ந்துட்டாங்க. உயரமான இடமா இருப்பதால் ,  இங்கிருந்து இலங்கை தெரியுதான்னு  ராமர்  குன்றின் மேலேறி வந்து நின்னு பார்த்தாராம். அப்ப அவர் பாத அடையாளம் பதிஞ்சுபோச்சுன்னு  ஒரு ஐதீகம். பாவம்.... அவருக்கு யார் இந்த ஐடியா கொடுத்தாங்களோ.....  இப்பவும் இங்கே நின்னு பார்த்தால் இலங்கை தெரியுதுன்னு  கட்டிவிட்ட கதைகள் உலாத்துதே  :-)

இல்லையில்லை, ராமருக்காக  வானரங்கள் பாலம் கட்டும் வேலைக்காக கற்களைக் கொண்டு வந்து  சேர்த்தப்ப,  இதன் மீது இருந்து வேலை நடப்பதைக்  கவனிச்சுக்கிட்டு இருந்தார்னு ஒரு கதையும் உண்டு.   நட்புக்காக போனாப் போகட்டுமுன்னு   வந்து  உதவி செய்யும்போது....   ராமன் மேஸ்த்ரி வேலை செஞ்சாராக்கும்...........  ஆனாலும் நம்மாட்களின் கற்பனைத் திறனுக்கு எல்லையே இல்லை !!!

சுந்தரகாண்டம் வாசிக்கும்போது,  ஆஞ்சி  ஒரு மலையின் மேலேறி அங்கிருந்து தாவி இலங்கையை நோக்கிப்  பறந்து போனார்னு  வரும். அப்போ அந்த  மலையின் மீது இருந்த பூ மரங்கள் , ஆஞ்சியின்  பாதங்கள் அழுந்தினதால்   அந்த  அதிர்ச்சியில் தங்கள் மேல் இருந்த மலர்களை உதிர்த்தனன்னு  இருக்கும். இவ்ளோ பூ மரங்கள் இருக்கும்  மலை ( இப்போ  சின்னக் குன்றின் அடையாளம் கூட இல்லை) எவ்ளோ வாசனையா இருந்துருக்கும்.  அதான் கந்தமாதன பர்வதமுன்னு பெயர் வந்துருக்கலாமோன்னு எனக்கொரு சம்ஸயம். கந்தம் =  மணம்.

 வலம் வரும்போது  எல்லா திசைகளிலும்  ராமேஸ்வரம் முழுக்கத் தெரியுது.  முள்மரங்கள் போல ஏராளமா இருக்கு இந்தப் பக்கங்களில்.  அந்தப் பச்சைகளுக்கு இடையில் மஞ்சளாத் தெரியும் கோபுரம் அழகுதான்.
கோவிலில் இருந்து வெளியே வந்தமே, அப்போ நேரா அறைக்குப்போய் கெமரா கொண்டு வந்துருக்கலாம்.  என்னவோ அப்போ தோணலை.  என்ன மடத்தனம்  பாருங்க.....
அந்தத் திண்ணையிலே உக்கார்ந்தால்  சுகமான காத்து, ஆனந்தமா இருக்கு.  பத்து நிமிசம் உக்கார்ந்துட்டுக் கீழே இறங்கி வந்து இளநீர்  வாங்கிக் குடிச்சுட்டு அறைக்கு வந்தோம்.

எல்லாருக்கும் ஒன்னரை மணி நேர ஓய்வு கொடுத்தேன்.  மணி ஆறாகுது.  ஏழரைக்குக் கிளம்பிப்போய் சாப்பிட்டு வரலாமுன்னு ப்ளான்.
ஓலைப்பொட்டியில் இருந்து  மரச்சொப்புகளை வெளியில் எடுத்து வச்சு ஆசை தீரப் பார்த்தேன். அந்தக்காலம் போல நிறைய வகைகளும் இல்லை, கையில் எடுத்தால்      நல்லா மொழு மொழுன்னும் இல்லை.  கிடைச்சதே  அதிகம். குற்றம் சொல்ல வேணாமுன்னும் தோணுச்சு.

WIFI  இருக்குன்னாங்களேன்னு பார்த்தால் வேலை செய்யலை. வரவேற்புக்கு ஃபோன் செஞ்சால்  கீழே தரைத்தளத்தில் மட்டும்தான் வேலை செய்யுமாம். போச்சுடா.....    ஃபைவ் ஸ்டார் ஹொட்டேல்னு பேர் வச்சுக்கிட்டு..........  ப்ச்........
கீழே இறங்கிப்போனால்.........   லாபி முழுசும் மக்கள் வெள்ளம்.  பகலில் யாரும் இல்லாமல் காலியாக் கிடந்த இடம், இப்படி!  சுற்றுலாப்பயணிகள்!  சுத்திப் பார்த்துட்டு, இருட்டுனதும் கூட்டுக்கு  வந்தாச்சு :-) ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோனுடன்  WIFI க்காகக் கூடுன கூட்டம்!  நாமும்  ஜோதியில் கலந்தோம்.


காகிதக்கூழில் செஞ்ச ராமாயணக் காட்சிகள்  இருக்கும்  சுவர் அலங்காரம் உண்மைக்குமே ரொம்ப அழகா இருந்துச்சு.


ஏழரைக்குக் கிளம்பி  கோவிலை நோக்கிப்போறோம். அங்கேதான்  கடைத்தெரு, சாப்பாட்டுக் கடைகள் எல்லாம் இருக்கு. சபரீஷ் ரெஸ்ட்டாரண்டுன்னு ஒன்னு கண்ணில் ஆப்ட்டது.  பார்க்கவும் ஓக்கே.
உள்ளே போனால் எதிர்பாராத வகையில் அன்பான உபசரிப்பு.  உள்ளேயும் நல்லாவே இருந்தது.  எனக்கு இட்லி கிடைச்சது. நம்மவருக்கும் சீனிவாசனுக்கும் அவரவர் விருப்பப்படி.

நமக்குப் பரிமாறியவர்  பெயர்  குமார்னு நினைக்கிறேன்.  புதுமாப்பிள்ளை!  மனநிறைவோடு வாழ்த்திட்டு, மறுநாள்  பகல் சாப்பாடு இங்கேதான்னு சொல்லிட்டு வந்தோம்.


தொடரும்..........  :-)




12 comments:

said...

நாளை தனுஷ்கோடியோ ? தெரியாதெனினும் தொடர்கிறேன்.

said...

ராமேஸ்வரத்துக்கு மூன்று முறை போயிருக்கிறேன் என்ன துரதிர்ஷ்டம் தனுஷ் கோடி போக முடியவில்லை, எனக்கு அந்த சிதிலங்க்சளையும் மிச்சங்களையும் காண விருப்பம் இருந்தது இப்போது சாலை தயாராய் இருக்கும் என்று நம்புகிறேன் என்பதிவில் தனுஷ்கோடி பார்க்க முடியாததைப் பற்றி எழுதி இருந்தேனே

said...

உங்க கேமராவை முக்கியமான இடத்தில் (பாத தரிசனம்) கொண்டுபோக விட்டுட்டீங்களே. மதியம் சாப்பாடு அங்கேதான்னா, இரவு உணவு நன்றாயிருந்திருக்கும் போல் தெரிகிறது. தோசை நின்றுகொண்டே சாப்பிடுவதற்கா

said...

இராமேசுவரத்துல மலையெல்லாம் இருக்கா. இராமேசுவரமே ஒரு தீவு. அங்கிருந்து இலங்கைக்குப் பாலம் கட்டுறதுக்கு முன்னாடி இராமேசுவரத்துக்கு வர்ரதுக்கே பாலம் கட்டியிருக்கனுமே.

// இல்லையில்லை, ராமருக்காக வானரங்கள் பாலம் கட்டும் வேலைக்காக கற்களைக் கொண்டு வந்து சேர்த்தப்ப, இதன் மீது இருந்து வேலை நடப்பதைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார்னு ஒரு கதையும் உண்டு. நட்புக்காக போனாப் போகட்டுமுன்னு வந்து உதவி செய்யும்போது.... ராமன் மேஸ்த்ரி வேலை செஞ்சாராக்கும்........... ஆனாலும் நம்மாட்களின் கற்பனைத் திறனுக்கு எல்லையே இல்லை !!! //

வால்மிகி கம்பன் படி.. கட்டப்பட்டது அணை. சேதுன்னா வடமொழியில் அணைன்னு நெனைக்கிறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம். பாலம்னா இப்ப இராமேசுவரத்துக்குப் போகுதே. அதுதான் பாலம். அந்தரத்துல போறது பாலம். பாலம் தொங்கிக்கிட்டு இருக்கும். அல்லது தூண் மேல இருக்கும்.

அதே போல பாலம் கட்டுறப்போ இராமர் வேடிக்கை பாக்கல. பாலம் கட்டி முடிச்சதும் அவரைக் கூட்டீட்டு வந்து காட்டுறாங்க.

சினிமால அனுமார் கல்லுல ராம் ராம்னு எழுதிக் கொடுக்க அதைக் குரங்குகள் கடல்ல போட்டதாக் காட்டுறாங்க. கதைப்படி பாலம்/அணை கட்டுனது அனுமார் இல்ல. நளன் அப்படீங்குற குரங்கு எஞ்சினியர். எல்லாக் குரங்கும் கல்லு கொண்டு வந்துச்சு. அனுமாரும் கல்லு கொண்டு வந்தாரு.

// இப்பவும் இங்கே நின்னு பார்த்தால் இலங்கை தெரியுதுன்னு கட்டிவிட்ட கதைகள் உலாத்துதே :-) //

எம்.ஜி.ஆர் சமாதியில் வாட்ச் ஓடுற சத்தம் கேக்குதுன்னு கூட நம்பி காது வெச்சுக் கேக்குறாங்க. மண்ணுக்குள்ள இருந்து சத்தம் கேக்கனும்னா.. அது வெளிய இருந்தப்போ எவ்வளவு சத்தத்தோடு ஓடியிருக்கனும்னு யோசிச்சுப் பாருங்க. :))))))))))))))))))))))))

said...

நீங்கள் கூறியுள்ள இடங்களுக்குச் சென்றுள்ளோம். பகிர்வுக்கு நன்றி.

said...

நம்பிக்கை - அது தானே எல்லாம்!

தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வதற்கு நன்றி.

இன்னும் ஒருநாள்தானே? பொறுத்திருந்து பாருங்களேன் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒரு நகரின் அழிவுகளை நேரடியாப் பார்த்து , கண்களில் நீர் தீரும்வரை அழுது முடிச்சுட்டோம் எங்க ஊரில் :-(

உங்க ராமேஸ்வரம் பதிவுகளை வாசித்திருக்கேன்.

சாலைகள் ரெடியாத்தான் இருக்கு. திறப்பு விழாவில் என்னென்ன அரசியலோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அறைக்கு வந்து எடுத்துக்கிட்டுப் போகணுமுன்னு அப்பத் தோணலை பாருங்க.....

தொப்பி தோசையை உங்களுக்கு விருப்பமென்றால் நின்னுக்கிட்டேயும் சாப்பிடலாம்! யாரும் ஒன்னும்சொல்ல மாட்டாங்க:-)

said...

வாங்க ஜிரா.

அணையா பாலமா என்னும் சந்தேகம் இன்னும் இருக்கு போல! அணை கட்டிட்டு, அப்புறம் தண்ணீர் இல்லாத இடத்தில் பாலம் கட்டி இருப்பாங்களோ?

எம்ஜிஆர் சமாதி........ நானும் அப்போ 'காது கொடுத்துக் கேட்டேன்.... ' என்று ஒரு பதிவு போட்டுருக்கேன் :-)

http://thulasidhalam.blogspot.co.nz/2009/09/blog-post_25.html

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நன்றி. தகவல் பிழை உண்டோ? இருந்தால் சொல்லுங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதே அதே.... இல்லைன்னா வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்?

தொடர்வருகைக்கு நன்றி.