Friday, September 02, 2016

ஸ்ரீசக்கர ராஜா திருக்கோவில் கும்பகோணம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 81)

பயணத்தில் இருக்கும்போது, நெருங்கிய தோழி ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டிருந்தப்ப,  சக்ரபாணி கோவிலுக்குப் போகலையான்னு கேட்டாங்க.  போகணும். 'போனமுறை போனப்ப கோவிலில் பவர் கட். இருட்டுலே தட்டுத்தடுமாற வேண்டியதாப் போச்சு. இந்தமுறை பொழுதோட போகணும்'னு சொன்னேன்.  'அங்கே  சக்கரைப்பொங்கல் வழிபாடு ஒன்னு செஞ்சுருங்க. குடும்பத்துலே சுபகாரியம் நடக்கட்டும்'னு சொன்னாங்க.  'அதுக்கென்ன.... செஞ்சாப் போச்சு'ன்னேன்.  குடும்பநலன் என்ற கொக்கி அப்படியே நம்மை இழுத்துருது பாருங்க.

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் தரிசனத்துக்குப்பின் நேரா சக்ரபாணி கோவிலுக்குப் போயிடலாமுன்னு நம்ம சீனிவாசனிடம் சொல்லிட்டு  ரிலாக்ஸா வேடிக்கை  பார்த்துக்கிட்டு இருந்தேன்.  பத்து கிமீ கூடக் கிடையாது. அஞ்சரைக்குள்ளே போயிடலாமுன்னு நினைச்சால்....  யானையும் குதிரையுமா கண்ணில் பட்டதும்  ஸ்டாப் போட்டாச். யானைக்கு தும்பிக்கை ஸ்டாண்ட் இருக்கு :-)

நல்ல அழகான யானையும் குதிரையும்! கிராமதேவதைக் கோவில்போல  இருக்கு.  கோவில்னு பெருசா ஒன்னும் இல்லை. ஒரு மரத்தில் சாமியை ஆவாஹனம் பண்ணி இருக்காங்க போல! மரச்சாமி.  பக்கத்துலே ஒரு ஓலைக்குடிசையில் ஒரு  சாமி சந்நிதி.  மாரி அம்மன்னு நினைக்கிறேன். இல்லே எல்லையம்மனா?

இறங்கிப்போய் க்ளிக்கலும் தரிசனமும் ஆச்சு. காவிரி ஆற்றுப் பாலத்துக்குப் பக்கத்துலே இது இருக்கு.  பாலம் கடந்து  இடப்பக்கம் திரும்பினால் சக்ரபாணி கோவில்!
ஸ்ரீசக்கர ராஜான்னு  பெயர் போட்ட அழகான அஞ்சு நிலை  ராஜகோபுரம்! கோபுர வாசலுக்குள்   நுழைந்தால்  ஒரு வட்ட வடிவ  வசந்த மண்டபம்.  ரொம்ப அழகா இருக்கு! அப்புறம் கண்ணுக்கெதிரே பலிபீடம் கொடிமரம் எல்லாம் ஜொலிப்போ ஜொலிப்பு!

கொடிமரத்துக்கு  இடப்பக்கம் கோவிலுக்குள் வருவதற்கான இன்னொரு வாசல்!   கொடிமரம் தாண்டி   கோவில்மண்டபத்துக்குள் போகும் வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா ன்னு மூணு முறை எழுதி   இருக்கும் நியான் விளக்கு. மேலே  ஆதிசேஷன்மேல் தேவிகளுடன் வீற்றிருக்கும் பெருமாள்!
கோவிலில்  வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் ரெண்டரை வாரம் கூட இல்லை, மகாமகத்துக்கு இல்லையா? அதான் பெயிண்டிங்  எல்லாம் செஞ்சு  வண்ணக்கலவைகளில்  கோபுரமும் அதில் இருக்கும் சிலைகளும், மற்ற இடங்களும் பளிச் பளிச்!

கோவில் புஷ்கரணி சுத்தமா இருப்பது மகிழ்ச்சி . பக்கத்தில் இருக்கும் மரங்களின் இலைகள் உதிர்ந்து மிதக்குதே தவிர ப்ளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் இல்லையாக்கும்! இது அமிர்த புஷ்கரணி! அளவான  திருக்குளம்!
மண்டபம் தாண்டி அந்தாண்டை இருக்கும் கோபுரவாசல் வழியா அடுத்த பிரகாரத்துக்குள் போறோம்.  நல்ல   கருங்கல் மதில்சுவருக்குள்ளே  கருவறை.  உசரத்தில் விமானம் எட்டிப் பார்க்குது!    மூலவர்சந்நிதிக்கு  ஒரு இருவது படிகள் ஏறிப்போக வேணும்.  இங்கே போக ரெண்டு வாசல்கள்.  உத்தராயண வாசல், தக்ஷிணாயண வாசல்.

வலம் வரும்போது  தக்ஷிணாயண வாசல்  முதலில் வருது. ஆனால்  மூடி வச்சுருக்காங்க. ஆடி மாசம் முதல்  மார்கழி வரைதான் இதன்வழி போகமுடியும்.


தை முதல் ஆனிவரை உத்தராயணகாலம் என்பதால் அந்த வாசல்  திறந்து வச்சுருக்காங்க.  சுத்தி வந்து படிகள் ஏறி  அந்த வழியாகப் போறோம்.  வெளியே ஒரு பக்கமா பெண்கள் குழு ஒன்னு  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்  சொல்லிக்கிட்டு இருக்காங்க. தெரிஞ்ச சமாச்சாரம் என்பதால் காதுக்கு இதமா இருக்கு!  ஒரு நிமிசம் நின்னு கேட்டுட்டு   உத்தராயண வாசல் உள்ளே நுழைஞ்சு போறோம்.
அர்த்தமண்டபம் தாண்டி கருவறையில் நின்ற கோலத்தில் மூலவர்!  எட்டு கைகள்! சங்கு, சக்கரம், வில், கோடாரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரைன்னு ஒவ்வொரு கையிலும் ஒன்னு!  முகத்தில் மூணு கண்கள்!
நம்ம சூரியனுக்குத் தான்தான் ரொம்பவே முக்கியப்பட்டவன். தான் இல்லையென்றால் உலகமே இருளில்  என்று கர்வம் ஏற்பட்டுருக்கு.  இதைத் தெரிஞ்சுக்கிட்ட நம்ம சார்ங்கபாணிப் பெருமாள், ஒரே கல்லில் ரெண்டு  மாம்பழமுன்னு  இன்னொரு இடத்தில்  தேவர்களுக்கு இம்சை கொடுத்து வந்த  ஜலந்தாசுரனை  அழிக்கத் தன்னுடைய கையில் இருக்கும் சக்கரத்தைச் சுழற்றி அனுப்பி இருக்கார்.  அது போய்  வேலையை முடிச்சுக்கிட்டு  நேரா வந்து காவிரியில் மூழ்கி, அப்படியே போய் அங்கே கரையில் உக்கார்ந்துருந்து தவம் செஞ்சுக்கிட்டு இருந்த பிரம்மாவின் முன்னால்  காவிரியில் இருந்து  எழுந்துருக்கு! அந்த இடத்தில்  இவரை சக்கர ராஜான்னு  பிரதிஷ்டை செஞ்சு பிரம்மா வழிபட்டுருக்கார். காவிரியில் இந்த இடத்துக்கு சக்கரப் படித்துறைன்னு பெயர்!
இதுக்குள்ளே கர்வம் கூடிப்போன சூரியன் வழக்கத்தை விட அதிகமான  ஒளியையும் உஷ்ணத்தையும் அனுப்பிக்கிட்டு இருக்கான். ஜீவராசிகள் சூடு தாங்காம வெக்கையில் வாடுது.  சக்கரராஜா பார்த்தார். சூரியனிடமிருந்த அத்தனை ஒளியையும்  தன்னுடைய ஆகர்ஷண சக்தியால்  தனக்குள்  இழுத்துக்கிட்டார்.

உலகமே இருட்டாகிப்போச்சு. திக்குதிசை தெரியாம தவிக்குது ஜீவராசிகள் எல்லாம். தேவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து  சக்கரராஜனிடம், சூரியனுக்கு ஒளியைக் கொடுக்கவேணுமுன்னு  விண்ணப்பிக்கிறாங்க.  அப்போ மும்மூர்த்திகளும் தம்மில் சங்கமிக்க அக்னி கொழுந்துவிட்டு எரியும் கேசத்துடன்  தோன்றியவர்,  சரி போகட்டுமுன்னு ஒளியைத் திருப்பிக் கொடுத்தார்.

 எனக்கு இங்கே நியூஸியில் கண்கண்ட தெய்வம் சூரியன்தான்.   குளிர்காலம் ஆரம்பிக்கப்போகுதுன்னு  ரெண்டு மாசத்துக்கு முன்பே உடல்ரீதியா உணரத்தொடங்கிருவேன்.  குளிர்காலம் முடிஞ்சதுன்னு இங்கே எல்லோரும் கூத்தாடினாலும் அதுக்குப்பிறகும் ரெண்டு  மாசம் போனால்தான் லேசா சூடு உரைக்கும்.

ஒளி மங்கிப்போன சூரியனுக்குத் தன்னுடைய தவறு புரிஞ்சது.   மனம் வருந்தி இங்கே வந்து சக்கரராஜாவை  தியானம் செஞ்சு  மன்னிப்புக்கேட்டு, தன்னுடைய ஒளியை திரும்பவும்  அடைஞ்சார்னு  கோவில் புராணம் சொல்லுது.

மூலவர் சக்கரம் தரித்துள்ளதால் சக்கரபாணின்னும் பெயர்.  ஊர் மக்கள்  சக்ரபாணி கோவில் என்றுதான் சொல்றாங்க. கோவிலிலும் முந்தி சக்ரபாணி கோவில் என்ற பெயர்ப் பலகைதான் இருந்துச்சு. இப்ப சக்கர ராஜான்னு  நியான் விளக்கால் சொல்றாங்க.
சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு   நேரில்  தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற  முக்கண்!  அதனால்  இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க.  உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.

இவரையும் பெருமாளாவே நினைச்சு கும்பிட்டுக்கிட்டேன். பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும்  கூடவே போற குணம் இருக்கே!  நம்ம தஞ்சாவூர் மன்னர் ஸெர்ஃபோஜி அவர்கள் இந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டி இருக்கார்.  இவருக்கு வந்த கடும் நோயை குணப்படுத்தியதற்கான நன்றிக் கடன். மன்னருடைய  ஆளுயரப் பித்தளைச் சிலை மகாமண்டபத்துச் சுவரையொட்டி இருக்கு. என்னவோ வெள்ளையா பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க.


அழகான யானைகள் இழுக்கும் தேர் மண்டபத்தில் தாயாருக்குத் தனிச்சந்நிதி.  விஜயவல்லி, சுதர்ஸனவல்லின்னு  பெயர்கள். தாயார் சந்நிதி வாசலில் விஜயவள்ளி தாயார்னு தான் எழுதி இருக்கு.


வலம் வரும்போது  இன்னொரு அழகான மண்டபத்தை இடிச்சுக் கட்டிக்கிட்டு இருக்காங்க. மஹாமகம் கொடியேற்றம் இன்னும் பத்தேநாளில் (ஃபிப் 13) இருக்கு என்பதால் வேலைகள் பரபரன்னு நடக்குது.
அங்கே  குளத்தில் விசேஷமுன்னா இங்கே ஏன்னு  சம்ஸயம்.  மஹாமகக் குளத்தில் நீராடி, கரையில் இருக்கும் பதினாறு மண்டபக் கோவில்களை தரிசனம் செஞ்சதால் நமக்குக் கிடைக்கும் புண்ணியத்தின் பலன்கள் எல்லாம் நமக்கில்லையாம்.  அவை சக்கரபாணிக்கே சமர்ப்பிக்கறதுதான் மரபாம்.  அதுதான்.... ஊருலே கல்யாணம், மார்பிலே சந்தனமுன்னு  இங்கே ...
சும்மாச் சொல்லக்கூடாது.... கோபுரச்சிற்பங்கள் எல்லாம் பளிச் பளிச்!
ராமாயண ஸீன் ஒன்னு....  தூக்கமுடியாமல்  சிவதனுஸைத் தூக்கிட்டு வர்றாங்க அஞ்சுபேர்!  ராமர் எடுத்தார் ஒடித்தார்..........
வழிபாட்டுக்கான கட்டணம் செலுத்த  அலுவலகத்தில் கேட்டதுக்கு,  'கொஞ்சம் இருங்க. மடைப்பள்ளியில் இருந்து கோபி ன்னு  ஒருத்தர்  இதுக்கெல்லாம் பொறுப்பு. அவரை வரச் சொல்றோ'முன்னு சொன்னாங்க.  அதுவரை இங்கே அங்கேன்னு  தூண்களின் அழகைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அஞ்சு நிமிசத்தில் வந்துட்டார் கோபி.
அவரிடம் நம்ம தேவைகளைச் சொல்லி அதுக்கான கட்டணம் கட்டினோம்.  மறுநாள் காலை  எட்டு மணிக்கு  வந்துருங்கன்னு  சொன்னார்.  நம்முடைய பயணத்திட்டத்தில்  இதுக்கான நேரம் இல்லை என்பதால்  நீங்க பிரஸாதங்களை  இங்கே வர்ற மக்களுக்கு விநியோகம் பண்ணிருங்கன்னோம். பூஜைக்கான  மாலை, மற்ற பூஜை சாமான்களை  இப்பவே எப்படி வாங்கித் தர்றதுன்னு அதுக்கு ஒரு தொகையையும் பெரியவரிடம் கொடுத்துட்டு,  மனசுக்குள் பெருமாளிடம் பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்.

சும்மா சொல்லப்டாது!...  ஊர் திரும்பிய ரெண்டே மாசத்தில் பிரார்த்தனை பலிச்சுருச்சு. நம்பணும். நம்புனாதான் சாமி!  மகளுக்குக் கல்யாண நிச்சயமாகி எங்கள் மனசு குளிர்ந்தது உண்மை.  வர்ற தையில் திருமணம்!  வழிபாடு நடத்திக்கோன்னு சொன்ன தோழிக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கேயும்  பதிவு செஞ்சுக்கறேன்.

பொதுவாப் பெருமாள் கோவில்களில் சக்ரத்தாழ்வார் சந்நிதி இருக்குன்னாலும், தனிப்பட்ட கோவில் இது மட்டும்தான்னு   சொல்றாங்க.

வாங்க,  இன்னொரு இஷ்டக்கோவில் ஒன்னும் பார்த்துக்கலாம்.  நாளைக்கு நேரம் இருக்காது........

தொடரும்.........  :-)


14 comments:

said...

ஓம் நமோ நாராயணாய '. நல்ல செய்தி.

said...

வாங்க நன்மனம்!

உங்க நல்ல மனசுக்கு நன்றி!

said...

நல்ல செய்தி....

இன்னுமொரு கோவில் உங்களோடு பார்த்ததில் மகிழ்ச்சி.....

said...

//முகத்தில் மூணு கண்கள்//
மூணு கண் பெருமாள் இவர் மட்டும்தானா டீச்சர் ?

//காவிரில் இந்த இடத்துக்கு சக்கரப் படித்துறைன்னு பெயர்!//
காவிரியில் - ய விட்டுப்போயிடுச்சோ ? anyway பெரியவா சொன்னா பெருமாளே சொன்னமாதிரி.

//மகளுக்குக் கல்யாண நிச்சயமாகி எங்கள் மனசு குளிர்ந்தது உண்மை. //
சந்தோசம். வாழ்த்துக்கள்.

said...

ஆஹா அருமை !!! இங்கயும் ரெண்டு தாயாரா ?? அப்போ சக்கரமா இல்லை சக்கர வடிவில் எஜமானனா ??

said...

வாங்க விஸ்வநாத்.

எனக்குத் தெரிஞ்சு முக்கண் பெருமாள் இவர்தான். தெரியாம வேறெங்கிலும் இருக்காரோ என்னமோ............

அந்த 'ய' காவிரியில் முங்கிருச்சு. இப்போ மீட்டுக்கொண்டு வந்தேன்:-) நன்றீஸ்!!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

சக்கரத்தாழ்வாரேதான். பெருமாள் கூடவே இருப்பதால் அந்த சுபாவம் வந்துருக்கு. ரெண்டு பெண்டாட்டி.........

said...

வாழ்க வாழ்க. உங்கள் மகளின் திருமணம் இனிதே நடைபெற்று நீடூடி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

நம்பிக் கை வைத்துச் செய்தால் நடக்கும் என்பதால்தான் அது நம்பிக்கை. நாராயணன் அருள் உங்களுக்கு இருக்கிறது.

மனுசங்க கால் வெச்சுக்க இப்பல்லாம் சின்ன ஸ்டூல் வெச்சிக்கிற மாதிரி நின்னுக்கிட்டேயிருக்கும் யானையோட தும்பிக்கைக்கும் ஒரு ஸ்டேண்டு.

கோபுரப் பொம்மைகள் பளிச் பளிச். அருமையா இருக்கு.

என்னடா கோயில் மண்டபமெல்லாம் தென்னாட்டுப் பாணியில் இல்லாம வடநாட்டுப் பாணியில் இருக்கேன்னு பாத்தா... சர்போஜி கட்டியதுன்னு நீங்களே காரணத்தைச் சொல்லீட்டீங்க.

said...


எது எது எப்போ எப்போ நடக்க வேண்டுமோ அது அது அப்போ அப்போ நடக்கும் வேண்டுதல் என்பது சொல்லிக் கொள்ள ஒரு திருபதி காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை திருமணம் நன்கு நடக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்

said...

'நிறைய தகவல்களோடு விஸ்தாரமாச் சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்ன சிலவற்றை நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது பார்த்ததில்லை (நாங்கள் தேவையான அளவு நேரம் செலவழிக்காததால்)

"நியூஸியில் கண்கண்ட தெய்வம் சூரியன்தான். குளிர்காலம் ஆரம்பிக்கப்போகுதுன்னு ரெண்டு மாசத்துக்கு முன்பே" - இங்க எங்களுக்குக் கண்கண்ட தெய்வம் வருணன் (இல்லை. அவர் மழைக்குன்னா. குளிருக்குள்ள தெய்வம்). வெயில் வறுத்தெடுக்குது. எப்போடா நவம்பர் வரும்னு இருக்கு. மின்னல் வேகத்துல 5 மாதம் போய் திருப்பி வெயில் உக்கிர மூர்த்தியா வந்துடுவார்.

வாழ்த்துக்கள். கோபால் சார் ரொம்ப மகிழ்ச்சியா இருப்பார்.

said...

கும்பகோணத்தில் நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்று. தற்போது உங்கள் பதிவு மூலமாக மறுபடியும். நன்றி.

said...

கும்பகோணம் போய் அங்கிருந்து பக்கத்துல இருக்கற கோவில்களுக்கெல்லாம் போகணும்ன்னு மகள் சொல்லிக்கிட்டிருக்கா. தகவல்களையெல்லாம் இங்கிருந்துதான் சுடப்போறேன். கோவிலுக்குப் போனப்றம் புள்ளைங்களுக்கு கதை சொல்லணுமே :-)

வருங்கால மாமியாருக்கும் மாமனாருக்கும் வாழ்த்துகள்.

said...

ஸ்ரீசக்கர ராஜா கோவில் ..ஆஹா அழகு...



said...

வாழ்த்துக்கள்!!!! மகளின் கல்யாண சேதி கேட்டு சந்தோசம். கோபால் அவர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்களை கூறவும்.மிகமிக சந்தோசம் துளசி😉.