Friday, April 12, 2013

ஆனைக்கோவில் அகிலா !


'வெய்யில் மண்டையைப் பொளக்குது.கொஞ்சநேரம்தான் ரெஸ்ட் எடேன். கோவில் எல்லாம் நாலுமணிக்கு மேல்தான்  திறப்பாங்க. எதுக்கு இப்பவே கிளம்பு கிளம்புன்னு ஆடிக்கிட்டு இருக்கே'ன்னார் கோபால். மூணரை வரை பொறுமை காத்தேன். ஆச்சு. கிளம்புங்க நாம் போகவும் கோவில் திறக்கவும் சரியா இருக்கும். நாலுமணிக்கு வெளியே வந்தால் இந்த ஹொட்டேலின் அடுத்த பகுதியில் ஏதோ விழாவுக்கு அலங்காரம் நடக்குது.

குடும்பவிழா. கல்யாணமோ இல்லை  வேற எதோ! இப்பெல்லாம் இது நல்ல வசதியாப்போச்சுல்லெ.... திருமணமண்டபங்களில் மட்டுமே நடந்த கல்யாணங்கள் எல்லாம்  ஹொட்டேல் ஹாலில் நடக்குது. சாப்பாடும் அங்கேயே  ஏற்பாடு. மெனு சொல்லிட்டால் எல்லாம்  கச்சிதமா  நடந்துரும். இடம், பந்தல், மேளம்,சமையல் இப்படி ஒவ்வொருவராத் தேடி அலைவது மிச்சம்.  என்ன ஒன்னு  காசு செலவு கொஞ்சம் கூடுதலா இருக்கும்.இப்போதைய ட்ரெண்ட் இம்மாதிரி விழாக்களில் தங்கள் செல்வச்செழிப்பைக் காட்டுவதுதானே! கூந்தல் இருப்பவர்கள் கொண்டை போட்டுக்கட்டுமே!

காட்டழகிய சிங்கரை தரிசிக்கணும்.  மத்யானம் வெங்கட் அப்பாவோட பேசும்போது  'சாயங்காலம் போகணும்' என்று சொல்லிக்கிட்டு இருந்தேன்.  கல்லூரிச்சாலையைக் கடந்து போறோம். செயிண்ட் ஜோஸஃப்  சர்ச் நம்ம கேமெராக் கண்ணிலே விழுந்துச்சு. இறங்கிப்போய் பார்த்திருக்கலாமோ! 1792  வது வருசம் கட்டப்பட்டது.

பரபரப்பான சாலை. வண்டி போய்க்கிட்டே இருக்கு. போகும்வழியில் காவிரிப்பாலம் கடக்கும்போது பாலத்தின் கைப்பிடிச்சுவரில் அங்கங்கே  பூந்தொட்டிகள் வச்சு அலங்கரிச்சு இருக்காங்க. பாலத்தினிடது பக்கம்  ஏதோ சிற்பம் போல ஒன்னு  கண்ணில் பட்டது. திரும்பி  வரும்போது  அந்தப்பக்கம் பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் இடது பக்கம் திருச்சி மலைக்கோட்டை சிற்பம் வச்சுருக்காங்க.  ஓஹோ....அப்ப முந்தி கண்ணில் பட்டசிற்பம்  ஸ்ரீரங்கம் கோவிலா இருக்கலாம். குறுக்கே வண்டிகள் ஓடுவதால்  சரியாத் தெரியலை.


வலப்பக்கம் ஒரு கோவில் கோபுரம். திரு ஆனைக் கோவில்.  இங்கேயும் வரணும்தான். ஆனால் முன்னுரிமை சிங்கத்துக்கு! .  கொஞ்சதூரத்தில் வலப்புறம் திரும்பிய ரோடுக்குள் நுழைஞ்சது வண்டி. நெல்சன் ரோடு.  இன்னும் கொஞ்ச தூரத்தில் ஸ்ரீமத்  ஆண்டவன் கல்லூரி. அதைத்தாண்டுனதும்   ஒரு  அரை நிமிசத்தில்  கோவில்.  பெரிய இடமா இருக்கு.  உள்ளே நுழைஞ்சு போறோம். இடது பக்கம் ஒரு மண்டபம். கம்பியழி இருந்துச்சுன்னு நினைவு.   கோவில் அஞ்சு மணிக்கு மேலேதான் திறப்பாங்கன்னு காவல்காரர் வந்து சொன்னார்.  முதல்லே  மச்சானைப் பார்த்துட்டு  வான்னு சிங்கம் விரட்டுதோ?

அப்போ  ஆனைக்கோவில்  போயிட்டு வரலாமுன்னு போனோம். ஒன்னரை கிமீட்டர் தூரம்தான் இருக்கும் ரெண்டு கோவில்களுக்குமிடையில். அர்ச்சனை, ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் ஒன்னும் வேணாமுன்னுட்டு கேமெராச் சீட்டு மட்டும் வாங்கினோம்.  வளாகத்துலே நுழைஞ்சவுடன்  வாங்கோ என்றாள் அகிலா. குளிச்சு முடிச்சு அலங்காரம் செஞ்சுக்கிட்டு  சிரிச்ச முகத்தோடு பளிச்!

 வலது பக்கம் அவளுடைய மஹால்! பத்து வயசுக்குட்டிப் பொண்.  அர்ஜுன் நாயரின் கவனிப்பில் இருக்காள். ரொம்பவே சமர்த்து. அஸ்ஸாம் மாநிலத்துக்காரி. இப்போ  அட்டகாசமான ஐயராத்துப் பொண்ணாகிட்டாள்.  மடிசார் கட்டிக்கலை என்ற குறை மட்டுமே!   கொஞ்சம் உயரமான மேடையில் நிற்கிறாள்.  அதில் ஏறிப்போக சின்னதா ரேம்ப்,சரிவான  அமைப்பு.



 அர்ஜுன் பாப்பான்   ஆனதால் சம்ஸாரம் முழுவன் மலையாளத்திலாணு.  பாப்பான்(மலையாளம்) = யானைப்பாகன் .காலில் கொலுசு ! படம் எடுக்கும்போது  ஞான், 'காலு காணிக்கு மோளே'ன்னதும் அழகா காலைக் கொஞ்சமாச் சரிச்சுக் காமிச்ச அழகு இருக்கே .... ஹைய்யோ!!!

அர்ஜுன் நாயரின் சொந்த ஊர் புனலூர்.  இவருடைய  அச்சன் (அப்பா)ஸ்ரீ பத்மநாபபுரம் கோவிலில்  பாகராக இருக்கார்.   அகிலா இங்கே வருமுன் கொஞ்சநாள்  ஸ்ரீ பத்மநாபபுரத்தில்  தங்கி இருந்து அர்ஜுன் கூடவே அச்சனிடம் ட்ரெய்னிங் எடுத்துட்டு வந்துருக்காள். வெய்யில்  தெரியாமலிருக்க இவளுடைய மஹாலில் முன்பக்கம் தென்னோலைகளால்  ஒரு சார்ப்பு  இருக்கு.

இதுக்கு முந்தி கோவில் யானையா 48 வருசம் இருந்த சாந்தி, ஜூலை 2010 சாமிகிட்டே போயிருச்சாம்:(   எல்லாம் அர்ஜுனோடு இத்திரி மலையாளம் ஸம்ஸாரிச்சதில் கிட்டிய நியூஸாணு.

ரெண்டு யானைகளுக்கிடையில் அர்ஜுன் நாயர்:-)

'கோவில் திறந்து எல்லோரும் போறாங்க, வா சீக்கிரமு'ன்னு கோபால் குரல் கொடுத்தார். நல்ல பெரிய வளாகம்தான். 18 ஏக்கராம். அஞ்சு பிரகாரங்கள். கோவிலுக்கு வயசு  ஆயிரத்துக்கும் மேலே!

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் இது  நீர். இப்பதானே நாலு நாளைக்கு முன்  சிதம்பரம் போனோம். அது ஆகாயம்.  காவிரியின்  கரையோரம் நாவல்மரங்கள் நிறைந்த காடாக  இருந்த இந்த இடத்திற்கு வந்த  பார்வதி சிவனை பூஜிக்க எண்ணி, ஆற்றுத் தண்ணீரைக் கொண்டே ஒரு லிங்கம் செஞ்சாங்க. அதையே ஒரு நாவல் மரத்தடியில் பிரதிஷ்டை  செஞ்சு பூஜையும் முடிஞ்சது. பார்வதி கிளம்பிப்போயாச்சு. அப்போ ஏதோ சாபவசத்தால்  யானையும் சிலந்தியுமா ரெண்டு இங்கே வந்து சேர்ந்தன.  மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்தைப் பார்த்ததும் பக்தி மேலிட்டு யானை காவிரி நீரைத் தன் துதிக்கையால் மொண்டு  சிவனுக்கு அபிஷேகம் செஞ்சது.

பார்த்துக்கிட்டே இருந்த சிலந்தி  பரபரன்னு சிவலிங்கத்துக்கு மேலே பந்தல் போல வலை  பின்னுச்சு. சருகு, குப்பை எல்லாம் லிங்கத்துமேலே விழாமல் காப்பாத்தமே! மறுநாள் யானை  திரும்ப அபிஷேகம் செஞ்சதும் வலை பிச்சுக்கிச்சு. உடனே சிலந்தி திரும்பவும் வலை பின்னி வச்சது. தினமிப்படியே யானை அபிஷேகம் செஞ்சதும் வலை  பிய்ஞ்சு போவதும் மீண்டும் வலை பின்னுவதுமா ரெண்டுக்கும்  இடைவிடாத  போராட்டம்.  இப்படியே விட்டால் வேலைக்காகாதுன்னு  தீர்மானிச்ச சிலந்தி ஒருநாள் ஓசைப்படாம யானையின் துதிக்கைக்குள் நுழைஞ்சு  அதை  இம்சிக்கவும் வேதனை தாங்காத யானை  துதிக்கையை ஓங்கி ஓங்கி  அடிச்சுச் சுழற்றவுமாய்  போராடி  கொஞ்ச நேரத்தில் ரெண்டும் செத்துப்போச்சு.

தினமும் தனக்கு அபிஷேகம் செஞ்சதால் மனம்மகிழ்ந்து போன அபிஷேகப்ரியனான  சிவன் யானைக்கு மோட்சம் கொடுத்து சிவகணங்களுக்குத் தலைவனாக்கிட்டார். சிலந்தி  மனிதனாக ஒரு அரசகுடும்பத்தில் பிறந்தது.  கோச்செங்கட் சோழன்.  பூர்வ ஜென்ம வாசனையோ என்னவோ....யானைகள் முட்டினாலும் தகர்க்க முடியாத  நல்ல வலுவானவைகளாகவும்,  புயல், மழைக்காலங்களில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக வந்து தங்கிக்கொள்ள வேண்டியும்   காவிரிக் கரை ஓரமாகவே 70 சிவன் கோவில்களைக் கட்டினான். கருவறை வாசல்கள் எல்லாம் சிறியதாக யானை புக முடியாதபடி கட்டி இருக்கான். (ஏய் யானைப்பயலே,  அபிஷேகமா ? இனி எப்படி வந்து  தண்ணீ ஊத்துவே?) இவைகளுக்கு  மாடக்கோவில்கள் என்ற பெயர். கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவிலே இந்த  ஜம்புகேஸ்வரர் ஆலயம்தான்.

இவ்வளவு கவனமாக இவன் இருந்தும்கூட  இந்த இடத்துக்கு  ஆனைக்கோவில் என்ற பெயர் வந்திருக்கு பாருங்களேன்!  திரு என்ற  மரியாதைச் சொல்லுடன்  சேர்த்து, திருவானைக்கோவில்.

சின்ன வயசு காலத்துலே அதென்னவோ ரெண்டு பக்கமும் தூண்கள்  அணிவகுக்கும்  பிரகாரமுன்னாவே  எனக்கு ராமேஸ்வரம் கோவில்தான்  நினைவுக்கு வரும். அங்கெ மட்டும்தான் அப்படி இருக்குன்னு நினைச்சுக்குவேன்.  இப்பவும் அந்த நினைப்பு வந்து சிரிக்கவைக்கும்:-)

இங்கே கண்பார்வைக்குள் அடங்காம விரிஞ்சு நீண்டு போகும் பிரகாரத்துக்குள் நுழைஞ்சதும்  அந்த நினைப்பு வந்துச்சு:-))))  ஊஞ்சல் மண்டமும் மற்ற சந்நிதிகளுமா  அட்டகாசமா இருக்கு !

சமயக்குரவர் நால்வரும் வந்து பாடிய  பாடல் பெற்ற ஸ்தலம்.   ஈசன் ஜம்பு மரத்தடியில்  இருந்ததால் ஜம்புகேஸ்வரர். நீரினால்  செய்த மூலவர் என்பதால்  கருவறையில் எப்போதும்  காவிரி நீர்    இருந்துகொண்டே இருக்கு.  ஆறு வறண்டு போனாலும்கூட   இங்கே லேசான ஈரம் இருக்குமாம்.  வெள்ளம் வரும் காலங்களில் முழங்காலளவு தண்ணீர் தேங்கிவிடுமாம். கருவறையில் மூலவர் தரை மட்டத்தில் இருந்து கொஞ்சம் தாழ்ந்தே இருக்கார்.

மூலவரை தரிசிக்கப்போனால் அங்கே கருவறைக்கு முன்  கட்டங்கட்டமா ஜன்னலாட்டம்  ஒரு சுவர்.  எண்ணிப்பார்த்தால் ஒன்பது  ஓட்டைகள். அட!  நம்ம உடுபியில்  ஸ்ரீ கிருஷ்ணனை இப்படித்தானே நவத்வார ஜன்னலில் பார்த்தோம்! ஜன்னல்வழியாக மூலவரைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டேன்.  இன்னும் கொஞ்சம் சுவர் தாண்டி அந்தப்பக்கம் போகமுடியுமோ என்னவோ...கம்பித்தடுப்பு அந்தப்பக்கம் இருக்கு. ஸ்பெஷல் தரிசனம் போல!

எனெக்கென்னமோ இந்த  நவத்வார ஜன்னல் புதுசா இருக்கோன்னு ஒரு சம்ஸயம். ஒரு 24 வருசத்துக்கு முன்னே இந்தப்பக்கம் ஒரு பயணம் செஞ்சோம். அப்போ சின்னக் கருவறையைக் கிட்டே போய்ப் பார்க்கும் வாசல் ஒன்னு வழியா போன நினைவு. வெளியே வரும்போது தலையைக் குனிஞ்சு போங்கோன்னு அர்ச்சகர் சொல்லிக்கிட்டு இருந்தார்.

உச்சிகாலப்பூஜைக்கு  ஒரு ஆரஞ்சுப் புடவையை சுத்திக்கிட்டு  இன்னொரு அர்ச்சகர்  அம்பாள் சந்நிதிக்குப்போறதைப் பார்த்துட்டு  நாங்களும் சந்நிதிக்கு ஓடுனோம். நல்ல கூட்டம்.  ஆனாலும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் தரிசனம் கிடைச்சது. பெரிய கம்மல் போட்டுருந்தாங்க.தாடகம் என்று சொல்லணுமாம்.

இந்தமுறையும் அம்பாளை  நிம்மதியா சேவிக்க முடிஞ்சது. கூட்டமே இல்லை.  உள்ளூர் மக்கள்ஸ், பொழுதுசாய வருவாங்களா இருக்கும்.

ஞானம் வேணுமுன்னு தவம் இருந்த ஒருவருக்கு  அருள் செய்யத் தாம்பூலம் போட்டுக்கிட்டு சாதாரண மனித உருவில் போன அம்பாளை யாரோன்னு அந்தாள் விரட்டிவிட, இந்த பாக்கியம் இவனுக்கில்லைன்னு  கோவில் உள்ளே தூங்கிக்கிட்டு இருந்த வரதன் என்றொரு  பேமாலத்துக்கு (அப்பாவி) கிட்டே போய், வரதா வாயைத் திறன்னதும்,  தூக்கத்துக்கிடையில்  கனவுன்னு தன்னிச்சையா வாயைத் தொறக்க  அம்பாள் தாம்பூலத்தை  அவன் வாயில் உமிழ்ந்துட்டுப் போயிட்டாள். பொழுது விடிஞ்சு பார்த்தால் வரதனுக்கு  ஞானம் கல்வி எல்லாம் சித்திச்சுருக்கு. வாயைத் திறந்தால் கவி மழை!  கவி காளமேகம்தான் அந்த வரதன்!

இந்த உமிழ்தல் அப்போ அந்தக் காலத்தில் அருவருப்பான விஷயமா இருந்துருக்காதோ என்னவோ!!!!


பாருங்க குழந்தை உடலும்  மீசை முகமுமா  முயலகன்!   ஆனந்த தாண்டவமாடும் ஈசன்.  விஷ்ணு சங்கு  ஊதிட்டார்ப்பா.  படவிளக்கத்துக்குச் சமமா  உபயதாரர் விளக்கம்:-)  போகட்டும் ...இந்த வகையிலாவது அருமையான படங்கள் காணக்கிடைக்குதே!

இந்த நவ சக்திகள் நவ வீரர்கள் படம்.... கதை என்னவோ? தெரிஞ்சவுங்க சொல்லுங்க ப்ளீஸ். எங்கே நம்ம  இராஜராஜேஸ்வரி(மணிராஜ்)???

முருகன் சந்நிதிக்குப்போகும் பிரகார மேடையின் உள்சுவற்றில்  அமர்க்களமான படங்கள் ஏராளம்.  சித்திபுத்தியுடன்  மயில் வாகனத்தில் புள்ளையார்!


பிரகாரங்கள் எல்லாமே படுசுத்தமா இருப்பது  மனநிறைவைத் தந்தது.

பிரகாரங்களின்   திண்ணை மேடைகளில்  கூட்டத்தைக் கட்டுப்படுத்தன்னு கம்பித்தடுப்பு  வச்சுருக்காங்க. அழகு அழகுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே அதுக்கு திருஷ்டி பரிகாரம் போல!  இதைப்பிடிப்பிக்க அந்தக் கல்தரையில் ஓட்டை ப்போட்டு ஆணி அடிச்சுன்னு ஆரம்பிச்சு  கொஞ்சம் கொஞ்சமா  எல்லாத்தையும் பாழாக்குனாத்தான் இவுங்களுக்கு நிம்மதி வரும்:(


குரத்தி(??!!) மண்டபத்தூண்களில் அழகிய சிற்பவேலை!  ப்ரியா ப்ரொமோட்டர்ஸ் ,போர்டை கொஞ்சம் மேலே  உசரத்தில் மாட்டி வச்சுருக்கப்டாதோ? அப்படியே கொஞ்சம் தரையைப் பழுது பார்த்தால் தேவலை.


நம்ம கோவிலில் எடுத்த  படங்களை ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். நேரம் இருந்தால்  பாருங்கள்.


ஆமாம்.... இது ஆனை கும்பிட்ட கோவில் என்பதால் திருவானைக்கோவில் என்பதுதானே சரி. அப்ப ஏன் திருவானைக்காவல் என்கிறார்கள்?

தொடரும்.............:-)






62 comments:

said...

‘இரண்டு யானைகளுக்கிடையில் அர்ஜுன் நாயர்’ -இப்படி தன்னைத் தானே கிண்டலடிச்சுக்கற துணிச்சல் துளசி டீச்சருக்குத்தான் உண்டு! அகிலாவின் படமும், அவள் பற்றிய தகவல்களும் அருமை. ஆனை கும்பிட்ட கோவிலை ஏன் ‘கோவில்’ங்காம, ‘காவல்’ங்கறாங்க? சரியான கேள்விதான்! பதிலை யாராவது சொல்றாங்களான்னு பாக்க ஆவலோட நான்!

said...

திருவானைக்கா.....

சமீபத்திய பயணத்தின் போது அங்கே சென்று நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது!

அகிலா, அர்ஜுனிடம் நானும் பேசிக்கொண்டு இருந்தேன்! :)

அந்த நவத்வாரங்களின் வழியே சாதாரண தரிசனம். பத்து ரூபாய் கட்டணம் கொடுத்தால் உள்ளேயே சென்று தரிசனம். நின்று நிதானித்து தரிசனம் செய்து வரலாம். காவேரியில் தண்ணீர் அதிகமாகும்போது இங்கே கர்பக்கிரகத்திலும் தண்ணீர் அதிகமாகும்.

said...

எந்த ஒரு சிரமமும் இல்லாமலேயே ஊர் சுற்றி வருகிறோம் உங்கள் தயவால். என்ன அற்புதமான படங்கள், தகவல்கள், தல புராணங்கள்! திருச்சி நான் பிறந்துவளர்ந்த ஊர் என்றாலும் இங்கெல்லாம் நான் போனதே இல்லை என்ற என் வருத்தம் இப்போது மறைந்தே போகிறது உங்களால். நன்றி டீச்சர்.

said...

நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்

said...

காலில் கொலுசு ! படம் எடுக்கும்போது ஞான், 'காலு காணிக்கு மோளே'ன்னதும் அழகா காலைக் கொஞ்சமாச் சரிச்சுக் காமிச்ச அழகு இருக்கே .... ஹைய்யோ!!!

அழகு .!! அழகு ..!

said...

சூரபதமன் கொடுமையை அழித்து தேவர்களையும் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் தன் ஐந்து முகத்டோடு அம்மையின் அம்சமான கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் முகமும் கொண்ட ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணில் இருந்தும் ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அப்போது வெப்பம் தாங்காமல் அன்னை மலை மகள் கௌரி ஓடிய போது பார்வதி தேவியின் பாதச்சிலம்பிலிருந்து தெறித்த நவரத்தினங்களில் இருந்து நவ வீரர்கள் தோன்றினர்.

ஐயனின் நெற்றிக்கண்ணில் இருந்த வந்த பொறிகளை அக்னி தாங்கி கங்கையிலே சேர்க்க ஆறும் குழந்தைகளாயின

.கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்த இக்குழந்தைகளை அன்னை பார்வதி ஒன்றாக்கி ஸ்கந்தனாக்கினார்.

மாணிக்கவல்லி் - வீரபாகு

தரள வல்லி - வீர கேசரி

புஷ்பராக வல்லி - வீர மகேந்திரர்

கோமேதகவல்லி - வீர மகேசர்

வைடூரியவல்லி - வீரபுரந்தரர்

வச்சிரவல்லி - வீரராக்கதர்

மரகதவல்லி - வீர மார்த்தாண்டர்

பவளவல்லி - வீராந்தகர்

நீலவல்லி - வீரதீரர்.

மேலும் நவ சக்திகளின் வியர்வையிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர் முருகப்பெருமானின் படைவீரர்களாக.

said...

கணேஷ், யானைன்னு சொல்லிக்கறதில துளசிக்கு ரொம்ப இஷ்டம்.
இல்லாட்டா பூனை:)
துளசி படங்களை ஆல்பத்தில் பார்த்துவிட்டேன்.
மீண்டும் இங்கே கருத்துகளோடு பார்ப்பது அருமை.
நாங்கள் திருவானைக்கா போனபோது
சந்நிதியிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டுக் கொண்டிருந்தார்கள்.!!!நடை பூரா ஜலம்தான்.
என்ன ஒரு பெருமை மிக்க கோவில். அந்த மதில் சுவர் உய்ரம் இன்னும் மனசில் நிற்கிறது.
என் தங்கை அங்கெதான் இருக்கிறால். எது ஒண்ணுன்னால் கோவிலை 18 பிரதிஷணம் பண்ணிவிடுவாள்.

அருமையாக ஊரும் கோவிலும் காண்பிக்கும் துளசி மோள்க்கு வளர் நன்னி.

said...

http://jaghamani.blogspot.com/2011/05/60.html

திரு ஆனைக்கா அண்ணல்

said...

ஆகா.. இவர் வேற ஆளா இருக்காரே. நான் சொல்றது அகிலாவோட கேர் டேக்கர். நாங்க போனப்போ சின்னப் பையனா யாரோ இருந்தாங்களே.

சாந்தி ரொம்பப் பிரபலமாம். அதைப் பாக்கவே சும்மா சும்மா தெனமும் உள்ளூர்க்காரங்க கோயிலுக்குப் போவாங்களாம். பாகர் கிட்ட சொல்லி அவங்க வீட்டுக்கு வரச் சொல்லி திங்கிறதுக்குக் குடுப்பாங்களாம். சாந்தி ரொம்பப் பிரபலமா இருந்திருக்கு. ஏன்னு கேட்டா யாருக்கும் தெரியல. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோயிலுக்கு கொடுத்த யானை.

திருவானைக்காவலில் (கோவில் அல்ல) எனக்குப் பிடித்ததே அந்த அமைதிதான். நெருக்கித் தள்ளும் கூட்டமில்லாமல் நிம்மதியா ஈசனோடும் உலகாளும் அம்மையோடும் பேசிட்டு வரலாம்.

ஆனைக்கோயில்னா ஆனையோட கோயில்னு ஆயிரும். ஆனையில் காவலில் இருந்ததால் ஆனைக்கா. திருவானைக்கா-தான் பழைய பேரு. வல்-பின்னாளில் சேந்தது. கோவில்-னு சிதைந்தது வரலாறு அறியாமையால்.

said...


. //இது ஆனை கும்பிட்ட கோவில் என்பதால் திருவானைக்கோவில் என்பதுதானே சரி. அப்ப ஏன் திருவானைக்காவல் என்கிறார்கள்?//

ஆனை இங்கே காவல் இருந்ததால் ஆனைக்காவல் என்பது தான் சரியாக இருக்கும் என்று கோபால் நினைத்திருப்பார் என்று நான் நினைப்பது தவறு இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அது சரி என்று மேடம் வல்லி நரசிம்மன் அவர்களும் சொல்வார்கள் என்று எங்கள் வூட்டுக்காரி சொல்கிறாள் என்று நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளும் அதே சமயத்தில் , நீங்களே உங்கள் கேள்விக்கு பதிலும் இட்டிருக்கிறீர்களே , என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. நீங்கள் இட்ட பதில் எங்கா ?

யோசியுங்கள். விடை தெரியவில்லை என்றால் திரு.கோபாலை கேட்கவும்.

மீனாட்சி பாட்டிக்கு பிடித்த வரி

:ரெண்டு யானைகளுக்கிடையில் அர்ஜுன் நாயர்:-)

நான் உங்கள் பதிவினைப்படிக்கும்பொழுது இந்தப்பாடலைக் கேட்டதும் எனது பாக்கியம்.

இங்கே வந்து கேளுங்கள்.
www.subbuthatha.blogspot.in

சுப்பு தாத்தா.

said...

பெயர்க்காரண விளக்கம் அருமை... நன்றி...

அருமையான படங்கள்... அன்பர்களின் கருத்துரை விளக்கமும் அருமை...

said...

Visit : http://subbuthatha.blogspot.in/2013/04/blog-post_12.html

said...

பாம்பே ஜெயஸ்ரீயின் 'அகிலாண்டேஸ்வரி' த்விஜாவந்தி பாடலுடன், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை சேவித்தாகிவிட்டது.
உங்களைப் பார்த்தவுடன், அகிலாவுக்கும் சந்தோஷம் தாங்கலையோ? கொலுசு காண்பிக்கும் அழகு காணக்கண் கோடி வேண்டும்!

ஆல்பத்தையும் பார்த்து ரசித்தேன்.

said...

உச்சிகாலப்பூஜைக்கு ஒரு ஆரஞ்சுப் புடவையை சுத்திக்கிட்டு இன்னொரு அர்ச்சகர் அம்பாள் சந்நிதிக்குப்போறதைப் பார்த்துட்டு நாங்களும் சந்நிதிக்கு ஓடுனோம். நல்ல கூட்டம். ஆனாலும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் தரிசனம் கிடைச்சது. பெரிய கம்மல் போட்டுருந்தாங்க.தாடகம் என்று சொல்லணுமாம்.


அந்த யானை பெண் குழந்தையாக அத்தனை அழகாக இருந்ததே ..! பூஜை நிறைந்ததும் ஜம்பூ என்று பிளிறியதே ..!

சின்னவயதில் இந்த கோவிலில் என்னை காணாவிட்டால் அம்மா சரியாக இந்த யானையைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னை கண்டுபிடித்துவிடுவார்களாம் .. நானும் யானைப்பைத்தியம் தான் .

மற்ற கோவில்களில் கம்பீரமான பெரிய ஆண்யானைகளை தந்தங்களுடன் பார்த்து வியந்திருந்த போது அழகாக குட்டியாக பெண்யானையாக இருக்கும்
திரு ஆனைக்கா யானை மிகவும் கவர்ந்தது ..

said...

http://jaghamani.blogspot.com/2012/08/bloghtml-post_3.

அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி

வருகைதாருங்கள்....

said...

http://jaghamani.blogspot.com/2012/08/bloghtml-post_3.

அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி

வருகைதாருங்கள்....

said...

பாப்பான் - யானை பாகன் ,
பேமாலம் -- அப்பாவி

இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் .

கமல்ஹாசன் விஜய் டி வி ல பேமானி க்கு அர்த்தம் நேத்து( 11 -04-20 13) சொன்னதும் இன்னிக்கு காலைல நீங்களும் ...
ராமானுஜர் பத்தியும் அவர் பேசினாரு .coincidence ?

said...

எங்க அண்ணாமலையில் = அபிதா
ஆனைக்காவிலே = அகிலா

பொதுவா, உலக அம்மாக்கள், அப்பாவை விட, ஒசரம் கம்மியாத் தான் இருப்பாங்க;

ஆனா, ஆனைக்காவில் நெடிதுயர்ந்து நிக்கும் அம்மா!
அவ பார்வையில் அப்பிடியொரு அன்பு; நாள் பூராப் பாத்துக்கிட்டே இருக்கலாம்;

சீரங்கத்தில் கெடைக்கும் "அடிப்பிடிப்" பொங்கலை விட,
ஆனைக்காவின் சர்க்கரைப் பொங்கல், தேவாமிர்தமா இருக்கும்; சாப்புட்டீங்களா டீச்சர்?:)

said...

Thanks to Arjun!
குட்டிப் பொண்ணு, அகிலாவைப் பார்த்துக் கொள்ளும் பாந்தம் தெரியுது;

அழகான கொலுசுகள், அழகான கால் நகங்கள்; Manicure/Pedicure செஞ்சிப்பாளோ?:)
பொதுவா, யானை குளிச்சிட்டு வந்து நிக்கும் போதே, கன்னங் கரேல்-ன்னு ஒரு தெய்வீக அழகு தெரியும்;

இவ "அம்மா", சாந்தியும் பாத்து இருக்கேன்;
நடிகர் திலகம் சிவாஜி குடுத்தது (சாந்தி = அவர் மகள் பேரு)

சாந்தி, மற்ற யானைகளைப் போல் அல்லாமல், எதைச் செஞ்சாலும், ஒரு ஈடுபாடு/ லயிப்பு தெரியும்;
ஆனைக்காவில், நண்பகல் பூசையில், அர்ச்சகரே அம்மன் வேடம் தரித்துச், சிவ பூசை செய்வது வழக்கம்; அப்போ யானையும் உடன் இருக்கும்;

பூசையின் போது, சாந்தி பராக்கு பாக்காது; தனக்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒன்னு பண்ணுறாங்க-ன்னு ஓரமா இருக்காது;
அவரு மணி அடிச்சா, இது தலையாட்டும்; கலசத்தில் இருந்து பூ எடுத்து, ஈசன் மேல் போட்டா, இதுவும், துதிக்கையை ஈசன் மேல் நீட்டுவது போல் நீட்டும்;
So cute; My love at 1st sight:)

இன்று அந்த யானை இல்லாவிட்டாலும்...
அதன் நினைவு இன்னமும் இருக்கு;

அப்பா, Transfer ஆகி, இங்கு இருந்த போது, விடுமுறைக்கு அம்மா/ நான்/ தங்கச்சி வரும் போதெல்லாம், சாந்தி கிட்ட போணும்-ன்னு ஒரே அடம் பிடிப்பேன்:)

said...

//சீரங்கத்தில் கெடைக்கும் "அடிப்பிடிப்" பொங்கலை விட,
ஆனைக்காவின் சர்க்கரைப் பொங்கல், தேவாமிர்தமா இருக்கும்; சாப்புட்டீங்களா டீச்சர்?:)
//

ஏன் ரவி(நினைவிருக்கா என் பேர் ஷைலஜா உங்க அன்பு அக்காதான்):) ஆனைககா சக்கரைபொங்கல் அரவணையை விட சுவையானதா நான் சாப்பிட்டதே இல்லை.

துள்சிமேடம் அட்டகாசப்பதிவு போட்டோஸ் அமர்க்களம் அந்த ஊர்ப்பக்கம் இருந்த எனக்கு மலர்கிறது நினைவுகள்!

said...

யானை - சிலந்தி
= ரெண்டு பேருமே பக்தர்கள் தான்;
= ஆனா, ஆனைக்கு மட்டும் மோட்சம் ஏன்?

யானை = வலையை மட்டுமே கலைத்ததே தவிர, சிலந்தி மேல் வன்மம் கொள்ளவில்லை;
சிலந்தி = வன்மம் கொண்டது; அழித்தும் + அழிந்தும் ஈசனைப் பற்றியது;

தன் பூசையை விடச், சக அடியார்கள் மேல் "வன்மம் இல்லா அன்பு";
= இதையே ஈசன் விரும்புகிறான்;
= இதையே இக்கதை உணர்த்தும் என்பார் சேக்கிழார்;

அதே போல் தான் சுந்தரர்/ ஏயர்கோன் கலிக்காம நாயனார் கதையும்;

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்
"கூடும் அன்பினால்" கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்


said...

//இந்த உமிழ்தல் அப்போ அந்தக் காலத்தில் அருவருப்பான விஷயமா இருந்துருக்காதோ என்னவோ!!!!//

:)
இந்தக் காலத்திலும் தான்!

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய்
---

திரு-ஆனைக்-காவல்/ திரு-ஆனைக்-கோவில்

ராகவன் சொன்னது போல், ஆனைக்கா என்பதே சரி;
* கா = சோலை
* ஆனைக் கா = ஆனை உள்ள சோலை!

தாடங்கம்
= தாலகம்/ தால் அங்கம்
= தாலம் -ன்னா பனையோலை; அதிலிருந்து செய்யும் தாலி, தாலகம் -ன்னு பல்வேறு அணிகள்;

காதில் மாட்டிக் கொள்வது = தாலகம்;
காதோலை/ கருகமணி -ன்னு இன்னிக்கும் கிராமத்தில் அம்மனுக்குச் சாத்துவாங்க;

சங்கராச்சாரியார் அம்மனுக்கு போட்ட நகை -ன்னு சொல்லுவாங்க; இருக்கட்டும்!
அதுக்காக, நல்ல தமிழ்ப் பெயர்களை எல்லாம் சம்ஸ்கிருதம் ஆக்கியாக்கி, மாத்தாம இருந்தா நல்லா இருக்கும்!

தாலகம் = தாடங்கம்
மரைக்காடு = வேதாரண்யம்
etc etc...

said...

//முருகன் சந்நிதிக்குப்போகும் பிரகார மேடையின் உள்சுவற்றில் அமர்க்களமான படங்கள் ஏராளம்//

டீச்சர், கையைக் குடுங்க!
எனக்கு என்ன ரொம்பப் பிடிக்குமோ, அதையே சொல்லி இருக்கீக:)

எத்தனை படங்கள்/ ஓவியங்கள்-ல்ல? அத்தனையும் Good Oil Paintings!
ரொம்ப வித்தியாசமான ஓவியங்களும்!

மயில் மேல் "பிள்ளையாறு" தான் இருப்பான்; இங்க "பிள்ளையாரு" வரைஞ்சி இருப்பாங்க!

அதே போல், சிவ-பார்வதி தாண்டவம்; அதில் முருகனும் Dance ஆடுவான்:) தையாத்-தக்கா -ன்னு கையைத் தூக்கிட்டு:)

அன்னை, நீரில் பிடிக்கும் லிங்கம்; அந்த நீர் லிங்கத்தின் நிழலும் நீரிலேயே தெரியும்; யாரு வரைஞ்சாங்களோ; Hats Off!

ஈசன், மாட்டின் மேல் ஒய்யாரமாச் சாஞ்சி நிப்பாரு;
அப்போ, மாடு நாக்கை நீட்டி, அவரைத் தடவும் ஓவியம்:) I like it!
----

ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டீக;
திருவானைக்கா = கோயிலுக்கு உள்ளேயே பச்சைப் பசேல் -ன்னு மரங்கள்;
உள்ளே நுழையும் போதே, இரு பக்கமும் பச்சைப் பசேல்!

said...

அடடா, St Joseph ஆலயம் பாக்கலையா?
லூர்து மேரி இருப்பாங்க; சந்தனப் பேழையில்! Same as Our Lady of the Lourdes in France!

ரொம்ப அழகான Church; மலைக்கோட்டையில் இருந்து பாக்கும் போது,
அந்தப் பக்கம் எப்படி அரங்கனின் கோபுரம் கம்பீரமோ,
இந்தப் பக்கம், அன்னையின் கோபுரம் கம்பீரம்!
---

தேவாரம் சொல்லி முடிச்சிக்கறேன்; அம்மா அகிலாவுக்கு...

வானைக் காவில் வெண்மதி - மல்கு புல்கு வார்சடை
தேனைக் காவில் இன்மொழி - தேவி பாகம் ஆயினான்
"ஆனைக் காவில்" அண்ணலை - அபயமாக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார்க்(கு) - ஏதும் ஏதம் இல்லையே!!

ஏதும் ஏதம் இல்லையே!!
ஏதும் ஏதம் இல்லையே!!

said...

காலில் கொலுசு ! படம் எடுக்கும்போது ஞான், 'காலு காணிக்கு மோளே'ன்னதும் அழகா காலைக் கொஞ்சமாச் சரிச்சுக் காமிச்ச அழகு இருக்கே .... ஹைய்யோ!!!//

அகிலா கால்கொலுசும் அது காட்டிய அழகும் அழகுதான்.

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் கந்தபுரணம் மூலம் உங்கள் கேள்விக்கு விளக்கம் அளித்துவிட்டார்கள்.

திரு +ஆனை+ கா,+திருஆனைக்கா
கா என்றால் சோலை .
திருகோலக்கா, திருநெல்லிக்கா என்று சிவஸ்தலங்கள் உள்ளன்.
திருவானைகாவல், திருநெல்லிக்காவல் என்று சொல்லும் வழக்கம் உள்ளது.

said...

//சின்ன வயசு காலத்துலே அதென்னவோ ரெண்டு பக்கமும் தூண்கள் அணிவகுக்கும் பிரகாரமுன்னாவே எனக்கு ராமேஸ்வரம் கோவில்தான் நினைவுக்கு வரும். அங்கெ மட்டும்தான் அப்படி இருக்குன்னு நினைச்சுக்குவேன். இப்பவும் அந்த நினைப்பு வந்து சிரிக்கவைக்கும்:-)//
ஆமாங்க !!!


ஆல்பம் அருமை . கோவிலுக்கு போயிட்டு வந்த திருப்தி . போட் டோக்களும் விளக்கங்களும் கதைகளும் மிகச்சிறப்பு . நன்றி நன்றி !!!

said...

ரீச்சர்

வெய்யில் வேண்டாம். அது அதிக சூடு. வெயில் போதுமே....

http://4varinote.wordpress.com/2013/04/08/guest20/

:))

said...

கோவிலின் விஸ்தீரணம் பிரமிக்க வைக்கிறது .
அகிலா குட்டி அழகி !!!. எவ்ளோ பதவிசா உங்க கூட போஸ் கொடுத்துருக்கு .அருமை .
உங்க அனுபவம் எங்க அனுபவம் ஆயிடுச்சு. நன்றிகள் பல .

said...

கால் கொலுசைத் தூக்கிக் காண்பிக்கிற அகிலா மனசைக் கட்டிப் போட்டு விட்டாள்:)! வெரி க்யூட்.

படங்களும் பகிர்வும் அருமை.

said...

அப்படியே இதையும் ஒரு முறை கேட்டுக்குங்க

http://www.youtube.com/watch?v=8zQAnKcl4wU

said...

குரத்தி(?)

குரத்தின்னா தலைவி. அதிசயமா சரியா எழுதி இருக்காங்க. சந்தோஷப்படுங்க.

said...

சிறுவயதில் விடுமுறைக்கு திருவானைக்கா சென்றபோது அனேகமாகத் தினம் கோவிலுக்குப் போன நினைவுகள் திரும்பி வந்தன.

உங்களுக்கு ராமேஸ்வரம்.. எனக்கு சுசீந்தரம். சம்பந்தமே இல்லை, இருந்தாலும் தூண்களைப் பார்த்தால் சுசீந்தரம் தான் சட்டென்று மனதில் வரும். ராமேஸ்வரமும் போனதில்லை.

breathtaking photos.

said...

டீச்சர்,
வெயில்/ வெய்யில்
வாழ்த்துகள்/ வாழ்த்துக்கள்
= இவை இரண்டுமே சரியான தமிழ் வழக்காறுகளே!
= இரட்டைப் பயன்பாட்டால் வந்த ஒரு பொருள் பன் மொழிகள்!

http://4varinote.wordpress.com/2013/04/08/guest20/comment-page-1/#comment-760

தவறான சொற்களைக் களைகிறேன் என்ற போக்கில்,
நல்ல தமிழ்ச் சொற்களையெல்லாம், நம் தமிழ் மொழியில் இருந்து விரட்டி விடாது இருப்பது நம் கடமை;

வீட்டில் ஒட்டடை அடிக்கும் போது,
வீட்டின் பளிங்கு யானைப் பொம்மையை உடைக்காது காப்போம்!
- முருகனருள்!

said...

எந்த ஒரு சிரமமும் இல்லாமலேயே ஊர் சுற்றி வருகிறோம்

said...

நான் நேரில் சென்றதுபோல் இருந்தது வாழ்த்துகள்

said...

இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

ஜம்புகேஸ்வர் இருதடவை அருகே தர்சிக்கும் பாக்கியம் கிடைத்தது. அகிலாண்டேஸ்வரி சந்நிதியில்தான் பல வருடங்களுக்கு முன் எங்கள் அண்ணாவின் திருமணம் நடந்தது. மீண்டும் தர்சித்து மகிழ்ந்தேன்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

//ஏன் ரவி(நினைவிருக்கா என் பேர் ஷைலஜா உங்க அன்பு அக்காதான்)//

oops
sorry-kka! i am not in as good situation as u think;
thatz why not much correspondence & hiding mode;

teacher - thillai appar - ambala vaaNar pathivu pOttu, intha pEsaa madanthai-yai pEsa vachitaanga:)
sorry, will mail later:)

said...

வாங்க பாலகணேஷ்.

பார்த்தீங்கல்லே.... இதுவரை யாரும் ஒப்புக்கொள்ளலை. ஆனைக்காவாம்!

அவுங்க பேச்சு கா வுடலாமா:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதானே பார்த்தேன். முன்பொருமுறை கிட்டே போய் பார்த்த நினைவு இருக்கேன்னு!

அப்போ இந்த நவத்வார ஜன்னலைக் கவனிக்காமக் கோட்டை விட்டுருப்பேன் போல!

said...

வாங்க கீதமஞ்சரி.

உள்ளூர் சமாச்சாரமுன்னால் ஒரு அசட்டை வந்துருது.இங்கெதானே இருக்கு...அப்புறம் பார்த்துக்கலாமுன்னு.

அது தப்புன்னு ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே இங்கே எங்கூருக்கு 'வந்த' நிலநடுக்கம் பாடம் சொல்லிக் குடுத்துருக்கு:(

ஊரில் பாதி அழிஞ்சுபோய் இடிபாடுகளை அகற்றினபிறகு இருக்கும் வெற்றிடத்தைப் பார்க்கும்போது முந்தி இங்கே என்ன இருந்துச்சுன்னு நினைச்சுப்பார்த்தால்........ சுத்தம்.

ஒன்னும் கவனத்தில் இல்லை:(

எவ்ளோ அசட்டையா இருந்துருக்கோமுன்னு நினைச்சு வருந்தாத நாளில்லை இப்போ:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்க பின்னூட்டங்களே என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டன என்பதே உண்மை.

ஆழ்ந்த கருத்துக்களோடுள்ள விரிவான விளக்கங்கள் தந்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

என்னைப்போல் பலருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

said...

வாங்க வல்லி.

தங்கை அங்கேயா????


அட!

said...

வாங்க ஜிரா.

அதென்ன காவல்? யானை காவல் காத்துச்சா? பூஜைதானே செஞ்சது, இல்லையோ?

கா இப்போ காவலாகி இருக்கோ?

நீங்க சொன்னீங்க பாருங்க.... அந்த மன அமைதியான தரிசனம். அது உண்மை உண்மை!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

சோடா ஒன்னு உடைச்சுக் கொடுக்கவா:-)))))

நீங்க அனுப்பிய பாடல் பிரமாதம்! சுட்டிக்கு நன்றி.

அநேகமா அக்காவோட ச்சாய்ஸாத்தான் இருக்கணும்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பதிவு கால் சொன்னா பின்னூட்டங்கள் முக்கால் சொல்லுதே!!!!

said...

வாங்க ரஞ்ஜனி.

அகிலாவால் இங்கே கோலாகலமான கொண்டாட்டங்கள்தான்!!!!

காலழகும் கொலுசழகும் ஆஹா ஆஹா....

http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/blog-post.html இங்கே இன்னொரு கால்கொலுசு பாருங்க.

தனிமடல் கிடைச்சதா?

said...

வாங்க சசி கலா.

இப்படித்தான் எதிர்பாராத இடத்தில் 'பொருள்' கிடைக்குமாம்:-)))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

சக்கரைப்பொங்கல்? மூச்....

டீச்சர் கண்ணை மட்டும் திறந்து வச்சுக்கிட்டு வாயைக் கட்டிக்குவேன் என்பது தெரியாதா? அப்படி ஒரு விரதமாக்கும்,கேட்டோ:-))))

அகிலாவுக்கு நெய்ல் பாலீஷ் வாங்கித்தந்துருக்கலாமோ?

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா... நெல்லிக்கா, கோலக்கான்னு கூடப்பெயர்கள் இருக்கா?

தகவலுக்கு நனறி.

இனி கொஞ்சம் சிவனைப்பற்றியும் படிக்கணும் நான்.

பாருங்களேன், நம்ம இராஜராஜேஸ்வரி எப்படியெல்லாம் விளக்கங்கள் அளித்து நம பதிவைப் பெருமைப்படுத்திட்டாங்கன்னு!!!

said...

வாங்க கொத்ஸ்.

இப்படி எழுதுனாத்தான் தலை நீட்டுவீரா?

வெய்யிலின் தாக்கம் வெயிலில் இல்லை:(

கதை சொல்லியின் தமிழில், கொஞ்சம் அழுத்துனாதான் எஃபெக்ட் கூடும்.

சப்போர்ட்டுக்கு நம்ம கே ஆர் எஸ் இருக்கார்:-))))


இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார் என்று இருக்கே. பாவம்.... தலை பத்திரம். சீழ் வந்தா கஷ்டம்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பாண்டிச்சேரி லக்ஷ்மியின் காலும் அழகுதானே? இதுகளுக்கெல்லாம் கொலுசு போட்டதும் அழகு கொஞ்சுதேப்பா.

said...

கொத்ஸ்,

பாடல் சுட்டிக்கு நன்றி.ரசித்தேன்.

குரத்தி..... ஓ அந்தக் குரத்தியா?

நல்லவேளை . வல்லினமா இருந்தால் கோவிலில் சாதிப்பிரச்சனை வந்துருக்கும், இல்லெ?

said...

வாங்க அப்பாதுரை.

ராமேஸ்வரம் முன்னொருகாலத்தில் கூட்டமே இல்லாம அமைதியா இருக்கும். அதிலும் அந்தப் பிரகாரங்களில் ஆளரமே இருக்காது!!!!

இப்போ எப்படி இருக்கோ? நான் போய் நாப்பது வருசத்துக்கு மேலாச்சு.

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

தொடர்ந்து வருவதில் எனக்கு(ம்) மகிழ்ச்சி.

said...

வாங்க பால சுப்ரமணியன்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க கீதமஞ்சரி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மாதேவி.

அண்ணாவின் திருமணம் இங்கேயா? ஆஹா...... ஆஹா.....

உங்கள் நினைவில் நீங்காத இடம்தான் இந்தக் கோவிலுக்கு !!!

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஷைலூ.

உள்ளூர்க்காரர் வந்ததால் நான் கவனமாக எழுதணும் இல்லே? கை நடுங்குதேப்பா!!!

ஸ்க்வாஷ் கேம் நடக்குது இங்கே பார்த்தீங்களா?

said...

வாங்க கே ஆர் எஸ்.

பின்னூட்டங்களால் பெருமை பெற்ற 108 பதிவுகளில் இது இடம் பெற்றது!

தூள் கிளப்பறீங்க.!

மனம் கனிந்த நன்றிகள்.

said...

ஒவ்வொருமுறையும் இங்கே சென்று விட்டு வருவோம். அகிலாண்டேஸ்வரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்....

குபேர லிங்கத்தை பார்த்தீர்களா? அன்னதானக் கூடத்தை தாண்டி பின்னாடி சென்றால் தரிசிக்கலாம். பெரிய லிங்கம்.

தாடகத்துக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆதி சங்கரர் தான் அன்னையின் உக்ரத்தை குறைப்பதற்காக போட்டு விட்டாராம்.இப்படித் தான் நினைக்கிறேன். தவறாக இருந்தால் இராஜராஜேஸ்வரி மேடம் சரி செய்யுங்கள்...

said...

பதிவு...பின்னூட்டம்....அனைத்தும் அருமை...