Monday, April 08, 2013

அந்தக்காலத்துலே ஒரு தி க காரர்! ஊன்னா ஆன்னா சிலை செஞ்சுடுவார்!

தசாவதாரம் சினிமா அநேகமா  எல்லோரும் (கமலைப்பிடிக்காதவர்களும் இதில் சேர்த்திதான்) பார்த்துருப்பீங்கதானே?  குலோத்துங்க சோழன் வைணவத்துக்கு எதிரியாப் போயிட்டான்.  அரியும் சிவனும் ஒன்னு  அதை அறியாதவன் வாயிலே  மண்ணு என்றது அவனுக்குத் தெரியலை, பாருங்க!

வைணவத்தைப் பரப்பிக்கொண்டிருந்த  ராமானுஜரை எப்படியாவது போட்டுத்தள்ளனுமுன்னு  தன்னுடைய ஆட்களை விட்டுத்தேடச் சொல்றான்.  தேடிப்போன ஆட்கள் யாரும் ராமானுஜரை இதுக்கு முன்னே பின்னே பார்த்ததில்லை.  ராமானுஜரும் அவருடைய சீடன்  கூரத்தானும்  இருக்குமிடம்போய்ச் சேர்ந்த காவலரிடம், நான் தான்  நீங்கள் தேடி வந்த ராமானுஜர்னு  ஆள் மாறாட்டம் பண்ண,  கூரத்தானை பிடிச்சுக்கிட்டுப் போயிடறாங்க. குருவை எப்படியாவது தப்பிக்கவைக்கணுமுன்னு சீடனுக்கு  ஆசை.

கூரத்தானைப் பிடிச்சுப்போய் குலோத்துங்கன் முன்னே நிறுத்தினாங்க. இது ராமானுஜர் இல்லைன்னு அவனுக்குத் தெரியவந்துச்சு. (யாராவது ஒற்றர்கள் பத்த வச்சுருப்பாங்க) ராமானுஜர் இருக்கும் இடத்தைச்சொன்னால் உன்னை விட்டுடறேன்னு  ஆசை காமிச்சுப் பார்த்தான்.  கூரத்தான் வாயைத் திறக்கலை. நீ சொல்லலைன்னா உன் கண்ணைப் பிடுங்கிப் போட்டுருவேன்னு பயமுறுத்தறான் சாளுக்கிய சோழ பரம்பரையில்   வந்த  முதலாம் குலோத்துங்கன். சாளுக்கிய சோழன்( 1070 -1120)

'என்ன ஆனாலும் சொல்லமாட்டேன்.  நீ என்ன என் கண்ணைப்பிடுங்கறது?  நானே பிடுங்கிப் போட்டுடறேன் பார்'னு  தன் கண்களைக் குத்திக்கிட்டு  பார்வையை இழந்தார் கூரத்தாழ்வார். தப்பிப்போன குரு  கர்நாடகத்தில் மேலக்கோட்டை என்ற  திருநாராயணபுரம் ஊருக்குப்போய் அங்கே பெருமாளுக்குச் சேவை செஞ்சுக்கிட்டு வர்றார். 12 வருசம் இப்படியே போனது. கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடை செய்து,  தாழ்ந்த இனம் என்று  சொல்லி ஒதுக்கி வைக்கப்பட்ட  மக்களை  கோவிலுக்குள் அழைத்துப்போய்  சாமி தரிசனம் செஞ்சு வச்ச புரட்சிக்காரர் இவர்.

உண்மையான வைணவனுக்கு  சாதி பேதம் கிடையாது. பெருமாள் எல்லோருக்கும் பொதுவானவன் , அவன் மேல் அன்பு கொண்ட அனைவரும் வைணவர்களே என்பது இவர் கொள்கை.  இவர் கட்சியே ஆதி காலத்து தி.க.  திருமால் கட்சி!!!!


அங்கிருந்து கிளம்பும் சமயம் ஊர் மக்களும் பக்தர்களும் இவர் பிரிவைத் தாங்க முடியாமல் அச்சு அசலா இவரைப்போலவே ஒரு சிலை செய்து வணங்க ஆரம்பிக்கிறாங்க. சிலையைக் கண்ட ராமானுஜர்  மக்களின் அன்பை அனுகிரகிச்சு  அந்த சிலைக்கு  'தமர் உகந்த திருமேனி' என்று ஆசி வழங்கறார். அப்பவே அவருக்கு  வயசு 80 !


இந்தக் காலக்கட்டத்துக் கிடையில்  சாளுக்கிய சோழனுக்கும்  புத்தி தெளிவேற்பட்டு  செஞ்சது தப்புன்னு உணர்ந்தான். பொதுவா இவன் நல்லவன்தானாம். நிலவரியை மட்டும் விட்டுட்டு பாக்கி எல்லா வரிகளையும்   தூக்கிட்டான். சுங்கம் தவிர்த்த சோழன் என்ற புகழுக்கு உரியவன். பார்வை இழந்த  கூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைக்குப்போய்  அழகனை கும்பிட்டுக் காலம் கழிக்கிறார்.  12 வருசத்துக்குப்பிறகு   ஒரு சமயம் ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்திக்கிறாங்க. அப்போதான்  இவர் கண் பார்வை போன விஷயமே  தெரியுது. மனம் உருகி காஞ்சி பேரருளாளரை வேண்ட, மீண்டும் கண் பார்வை கிடைச்சது.

ராம அவதாரத்தில் லக்ஷ்மணனாகவும், க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் ராமானுஜனாகவும் (ராமனின் அனுஜன்) அவதாரம் செஞ்சவர் ஸ்ரீராமானுஜர். இவருக்கு யதிராஜர் என்ற பெயரும் அன்பர்களால் அளிக்கப்பட்டது. யதி என்றால் துறவி. துறவிகளுக்குள் இவர் அரசர், யதிராஜர்! (இந்தப்பெயரைத்தான் காலப்போக்கில் எத்திராஜ்ன்னுச் சொல்லிக்கிட்டு இருக்கோம்)

இவர் அவதரிச்ச  தலம்  ஸ்ரீபெரும்புதூர்.  இவருக்கு அளிக்கப்பட்ட  யதிராஜர்  என்ற பட்டப்பெயரையே ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தாயாரும் தனக்கானதாக்கிப் இவரைப் பெருமைப்படுத்தி இருக்காங்க. யதிராஜநாதவல்லி. பொதுவாப் பெருமாள் கோவில்களில்  இருக்கும்   சொர்க்கவாசல் இந்தக்கோவிலில்  கிடையாது. ராமானுஜர் அவதார தலம் என்பதால்  இது நித்ய சொர்க்கவாசல் தலம்! அவதரிச்ச நாள் பிங்கள வருசம்  சித்திரை மாதம்   சுக்லபட்சம் பஞ்சமி திதி  திருவாதிரை நக்ஷத்திரம்  கூடிய திருநாள். (ஏப்ரல் மாசம் நாலாம் தேதி, 1071 ஆம் ஆண்டு)

 உலக மக்கள் அனைவரும்  விண்ணுலகில் நற்பயன் அடைய வேணுமுன்னு  தமக்குத் தன் குருவினால்  ரகஸியமாக உபதேசிக்கப்பட்ட எட்டெழுத்து மந்திரத்தை  கோவில்மதில்மீது ஏறி ஊர் முழுசும் கேட்க  வைத்தவர் இவர். ஓம் நமோ நாராயணாய!!!! இந்த மந்திரத்தை உபதேசித்த குரு இவரை சீடனாக ஏற்குமுன்  17 முறை  இவருடைய பொறுமையை சோதனை செய்தாராம். ஒவ்வொருமுறை அவரை அண்டி, சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி யாசிக்கும்போதும் இன்று போய்விட்டு  இன்னொருநாள் வா என்று 17 முறை அலைக்கழித்தாராம். பதினெட்டாவது முறைதான் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

ஊர்மக்களுக்கு  ரகசிய மந்திரத்தை உரக்கச் சொல்லிய ராமானுஜர், தன்னுடைய குருவின் வாக்கை மீறிட்டோமேன்னு  தண்டனையை எதிர்பார்த்து குருவின் முன் போய் நிற்க,  'நீரே எம்பெருமானார்' என்ற ஆசிகள் குருவிடமிருந்து கிடைச்சதாம்!

பிறந்த ஊரை விட்டு இவர் பிரிந்து போனவுடன், ஊர்மக்கள்  மனம் வருந்தி  இவரை ஒரு சிலையாக  வடித்துவைத்து  வழிபடத் தொடங்குனாங்க. அந்த சிலைதான்  ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இருக்கும் ஸ்ரீராமானுஜர் சந்நிதியில் மூலவர்.  தானுகந்த திருமேனி!

 இவர் இன்னும் உயிருடன் தங்களிடையில் வாழ்வதாகவே மக்களுக்கு எண்ணம்.  இந்த  ஒரு நம்பிக்கையால் ஐப்பசி மாசம் முதல் தை மூல நட்சத்திரம் வரை இவருக்கு வெந்நீர் அபிஷேகம்தானாம். குளிருக்கு அடக்கமாக் கம்பளிச் சொக்கா, தலைக் குல்லா எல்லாம் உண்டாம். தினமும் காலையில் அவருக்கு நிவேத்தியம் (ப்ரேக் ஃபாஸ்ட் ) சப்பாத்தியும் பாலுமாம்.

காஞ்சியில்  இருந்த ராமானுஜரை, நம்ம ரெங்கன் வாவான்னு சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு வரவழைச்சுட்டான். அங்கே வைணவ மடத்தின் தலைவராகவும் கோவில் நிர்வாகங்களில் பணியெடுக்கும் வாய்ப்பும் வந்து சேர்ந்துச்சு. சீர்திருத்தம் செய்யும் மனசு சும்மா இருக்குமோ?

கோவில் காரியங்களில்  அஞ்சு பதவிகள் என்று இருந்ததைப் பத்தாக்கினார். அதிகாரம் ஒரே இடத்தில் குமிஞ்சு இருப்பதைவிட  பரவலாக இருந்தால் நல்லது. இன்னும் பொறுப்போடு வேலை நடக்குமே!

திருப்பதியார் ,திருப்பணி செய்வார், நம்பிகள், உள்ளூரார், விண்ணப்பம் செய்வோர், திருக்கரகக்கையார், ஸ்தானத்தார், பட்டர்கள், ஆரியபட்டர்கள், தாசநம்பிகள்  இப்படி பத்து குழுக்கள். இதில்லாமல் ஏகாங்கிகள், சத்தாத முதலிகள் என்னும் வகையில் எட்டு வைணவத்துறவிகள், வேத்திரபாணிகள் என்று வகைவகையான குழுக்கள். கருவூலத்தின் தலைமை அலுவலர் வேலைக்கு  எடுக்கும் நபர் ஒரு   வேளாளராக   இருக்கவேண்டும் என்றார்.  அந்தந்த பிரிவினருக்கு உள்ள கடமைகள். சிறப்புரிமைகள் எல்லாம்  வகுத்தவரும்  ராமானுஜரே!

ஒவ்வொரு வேலைக்கும் திறமையான ஆட்களைத் தெரிவு செய்வதில் வல்லவரா இருந்தார்.  சமையலுக்கு உப்பு, மிளகு , மசாலாச் சாமான்கள்  எடுத்துக்கொடுப்போர்,  கோவில் கதவுகளுக்கு முத்திரை இட ,களிமண் அரக்கு தயாரித்தல் , சிற்பிகள், கொடிகள் தோரணம் இவைகளுக்கு வண்ணம் தீட்டும் சம்மியர்கள், ஸ்வாமிக்கு  புது நகை செய்யவும் பழையதைப் பழுதுபார்க்கவும் பொற்கொல்லர்கள், கோவில்விளக்குகள் பாத்திரபண்டங்கள்  செய்வோர்,  மடைப்பள்ளியில்  ஸ்வாமிக்கு மண்பாண்டச் சமையலுக்கான  மண்பாண்டங்கள் செய்து கொடுப்போர் (தினமும் புது பாண்டம்!),பெருமாளின்  உடுப்புகளைத் துவைக்கும்  ஈரங்கொல்லிகள் என்ற சலவையாளர்கள்,  தச்சர்கள், நெசவாளர்கள், தைய்யல்காரர்கள், தொங்கும் விதானங்கள், மடிப்புத்தொங்கல்கள் திரைச்சீலைகள் போன்றவைகளுக்கு சரிகை வேலைப்பாடு செய்பவர்கள்,  பெருமாள் குடை, ஆலவட்டம் பல்லக்கு அலங்கரிக்கும் துணிகள்  தயாரிப்பவர்கள் என்று  ஒரு வேலையைக்கூட  விடாமல் கவனித்து ஒழுங்கு செய்திருக்கார்.

கோவிலில் ஒட்டடை நீக்கிகள், கோவில் கோபுரங்களில்  வளரும் புல்லுருவிச் செடிகளைக் கவனித்து அகற்றுவோர் , காவிரியின் அக்கரையிலிருந்து  கோவில் மடைப்பள்ளிக்குப் பால்தயிர்  கொண்டுவரும் நபர்கள்  ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தும் படகுகளின் படகோட்டிகள்  இப்படி  ரங்கனுக்கு  சேவை செய்யும்  ஆட்களில் ஒருவரைக்கூட  விடவில்லை!!!!  கோவில் ஒழுகு என்னும்கோவில் வரலாற்று நூலில் எல்லாம் விரிவாக இருக்காம்.

அந்தப்புத்தகம் கிடைச்சால்  வாங்கிக்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு.  திருவரங்கம் திருக்கோயில் புத்தகம் வாங்கும்போது விசாரிச்சேன். அவுங்க அப்படி ஒன்னும் இல்லையேன்னுட்டாங்க.  ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். நான் அலுவலகத்தில் போய்க் கேட்டுருக்கணும். எப்படியோ விட்டுப்போச்சு:(

ராமானுஜரைத் தண்டிக்க அழைத்து வர ஆணையிட்டவனாக வைணவ குருபரம்பரை நூல்கள் குறிப்பிடும் கிருமிகண்ட சோழன் என்பவன் குலோத்துங்கன் அல்ல, அவ்யபதேச்யன் என்று குறிப்பிடப்படும் ஒரு குறுநில மன்னன் என்றும் அந்த நிகழ்வுகளின் பின்னுள்ள உள்நாட்டுக் கலகங்கள் பற்றியும் ஆதாரபூர்வமான செய்திகளை கோயிலொழுகு நூல் வழங்குகிறது என்று வாசிச்சது முதல்  அடடா..... உண்மையான சரித்திரம் என்பது இன்னும் எழுதப்படவில்லை என்று சொல்வது எவ்வளவு உண்மை  என்று உணர்ந்தேன். இப்பப்பாருங்க  நானே இந்தப் பதிவின் முன்பகுதியில் சாளுக்கிய சோழன் கொடுமை செஞ்சுட்டான்னு எழுதி இருக்கேன். இது நான் வாங்கிய ' திருவரங்கம் திருக்கோயில் 'புத்தகத்தில் உள்ளதே!

தினமும் ரங்கனுக்குள்ள வேலைகளையும் டைம்டேபிள் போட்டு வச்சுருக்கார்.  காலையில் ஆறேகால் மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி.  வீணை இல்லேன்னா சிதார்  இசை கேட்டுத்தான் கண் திறப்பானாம்! கொடுத்து வச்ச மஹராஜன்!

பாரீஸ் பயணத்தில் Palace of Versailles பார்க்கப் போயிருந்தோம். அரசனின் பள்ளியறையில் பட்டுத்துணிகள் உள்ள விதானத்துடன் தங்கக்கட்டில்!  கட்டிலின் கால்பக்கம்  இடுப்புயரத்தில் ஒரு தடுப்பு.  காலையில்   இசைக்கலைஞர் குழு ஒன்று வந்து வாசிச்சு மன்னரை எழுப்புவாங்களாம். சின்ன  மன்னருக்கே இப்படின்னா  ஈரேழுலகங்களையும் படைத்தவரைப் பற்றிச் சொல்லணுமா?  ப்ரெஞ்சு மன்னர்களின்   வாழ்வு அங்கே புரட்சி நடக்கும்வரை கொண்டாட்டமா இருந்துருக்கு!

திருப்பதியில் பாருங்க 24 மணி நேரம் நிக்கறது பத்தாதுன்னு நிம்மதியாத் தூங்கக்கூட விடமாட்டாங்க. கிட்டத்தட்ட 12 மணிக்குக் கோவிலைப் பூட்டிட்டு காலையில்  ரெண்டு மணிக்கெல்லாம்  சுப்ரபாதமுன்னு சாமியை எழுப்பிருவாங்க.  அதைக்கூட நம்ம எம் எஸ் அம்மா இனிய குரலில் பாடுவதைப்போல் இல்லாமல்  .... ப்ச்.

கண் முழிச்சவுடன்  எதிரில் தெரியும் காட்சி மங்கலமா இருக்கவேணாமா?  இதுக்கு  யானையும் பசுவும் வந்து நிக்கும்.  கோவில் சோதிடர்  அன்றைக்கு என்ன நாள், திதி , நக்ஷத்திரம், யோகம், கரணம் னு பஞ்சாங்கம் வாசிப்பார். (அவனுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் மிதப்புதான்!!!)

அப்புறம் பெருமாளுக்குப் பல் தேய்ச்சு, கை கால் சுத்தம் செஞ்சு  கண்ணாடி காமிக்கணும்.  சரியா இருக்கான்னு பார்த்துப்பார்.  (தந்த சுத்தி, கர சுத்தி, பாத சுத்தி) அப்புறம் குளியல். வெந்நீராக்கும்! பகல் குளியலுக்கு மட்டும் பச்சத்தண்ணி. அப்புறம்  வெண்ணெய் பூசுதல்,  குங்குமப்பொடி சாத்தல்,  மார்புக்கும் பாதங்களுக்கும்  சந்தனக்குழம்பு .வெள்ளிக்கிழமைகளில் பச்சைக்கற்பூரம் கலந்த எண்ணெய்!   அப்புறம் ட்ரெஸ் சேஞ்ச். நெத்தியில் கஸ்தூரி நாமம்,  நகை நட்டுக்கள், புதுசா அன்றலர்ந்த பூமாலைகள்.  இவை எல்லாம் இசைக்கலைஞர்களின் வீணை இசை கேட்டபடியே ஜாலியா!

எல்லாம் ரெடின்னதும்  திரையை தூக்கிருவாங்க, அதற்குரிய பணியாட்கள்.   தரிசனம் கொடுக்க  ஆரம்பிச்சுருவார்.  ஒரு மணி நேரம் பார்க்க வர்றவங்களைப் பார்த்தாச்சு. அப்புறம் ப்ரேக் ஃபாஸ்ட். ஆனதும்  வெற்றிலைபாக்கு ன்னு தாம்பூலம்.  சுவைச்சு முடிச்சதும் வாய் கொப்புளித்தல்.  அப்புறம்  ஊர் சுத்தக் கிளம்புதல் இப்படி பயங்கர பிஸி லைஃப்! வருசத்தின் 365 நாளில்  322 நாள் புறப்பாடுன்னா பாருங்க!  வாரம் ஒரு நாள் லீவுன்னாலே ஜாஸ்தி.

இப்படியெல்லாம்  பெரும் ஆளின் தேவைகளை உணர்ந்து  அவன்  அரண்மனையின் ராஜ்ய பரிபாலனத்தை  ஒழுங்கு செய்தவர்  தன்னுடைய 120 ஆவது வயதில்,   இவர்  அவதரித்தபோது இருந்த அதே பிங்கள வருசம், மாசி மாதம், சுக்லபட்சம் தசமி   நாளில்   சாமிகிட்டே போயிட்டார்!

தர்மோ நஷ்ட என்று அசரீரி ஒலிச்சதாம்!  தான் உடுத்திய ஆடையையும், சூடிய துளசி மாலையையும்,  பொற்கிண்ணத்தில் எண்ணெயையும்  ரங்கனே  கொடுத்து அனுப்பினாராம்.

இவரைப் பள்ளிப்படுத்த  வைணவமடத்தில் இருந்து கிளம்பி பெரிய  ஊர்வலம் வருது.  அப்போ அசரீரியாக  பெருமாளின் வசந்த மண்டபத்துலேயே  அவரை வைக்கும்படி உத்தரவாச்சு. அதான் ஏகப்பட்ட மண்டபங்கள் இருக்கேன்னால்...   இந்த  குறிப்பிட்ட வசந்த மண்டபம்தான்  ராமானுஜர் கோவில் விவகாரங்களைப் பார்க்கப்  பயன்படுத்திய  ஆஃபீஸாக  இருந்தது!

இங்கே அவரை திருப்பள்ளிப்படுத்திய பின் இந்த மண்டபத்தையேஅவர் சந்நிதியாக மாற்றி விட்டார்கள்.  துறவிகளை எரிக்கும் வழக்கம் இல்லை. பள்ளிப்படுத்திய இடத்தின் மேலே மூலவர் சிலை ஒன்று உள்ளது. தானே ஆன திருமேனி என்று சொல்கிறார்கள்.  இன்னும் உயிரோடு இருக்கிறார். தலை முடி, கை நகங்கள் வளர்கின்றன என்றெல்லாம் வாசித்துள்ளேன். வாசலில் வேற இப்படி ஒரு போர்டு.





ஒருவித எதிர்பார்ப்புடன் சந்நிதிக்குள் நுழைந்தேன். மூலவர்  பத்மாசனம்  போட்டு சிலையாக உக்கார்ந்துருக்கார். கண்கள் பாதி திறந்த நிலையில் இருக்கிறதோ? (ப்ரமையா  இருக்குமோ?) இடது கை மடியிலும் வலது கை உயர்த்தி ஆசி வழங்கும் பாவனையிலும் இருக்கார். லேசா சுவாசம் வருதோன்னு கூடத் தோணுச்சு.
இவருடைய சந்நிதிக்குப் பக்கத்தில் மீசைக்கார பார்த்தசாரதி கோவில் கொண்டுள்ளார்.


இந்தப்பதிவு எழுதுமுன் கொஞ்சம் வலை வீசுனதில்  கிடைத்த  ஒரு தகவல் அடுத்த பாராவில். அநேக உள்ளூர்க்காரர்களுக்கு  இது தெரியுமாம். அதீத ப்ரேமையாலும்  மரியாதையாலும்  பூவுலகில் இருந்து மறைந்தவரையும் இன்னும்  இருக்கார் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தால்  எழுந்த விஷயம் என்றுதான் நினைத்துக் கொள்ள வேணும். நான் முதலில் Fossil  உருவாகுவது போலவோ என்றே நினைத்தேன். ஆனாலும்  அப்படி ஆக மில்லியன் வருடங்கள் ஆகவேணுமே.  இவர் மறைந்து இன்னும் ஆயிரமாண்டுகள் கூட ஆகலையேன்னு ............

ஸ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் மூலவரான இராமானுஜரின் திருமேனி அவர் உயிர் நீத்த உடல் என்று சிலர் நம்புகிறார்கள். உடையவருடைய திருமேனி அந்தச் சந்நிதியில் மூலவருக்குக்கீழ் திருப்பள்ளிப்படுத்தப்படுள்ளது என்பதுதான் உண்மை. உடையவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டபின் அந்த இடத்தில் மெழுகால் ஆன விக்ரஹமாகச் செய்யப்பெற்றதுதான் இந்தத் திருமேனி. இந்த விக்ரஹம் உருவாக்கப்பட்டபோது, அவர் திருமேனியில் சாத்தப்பட்ட காவி வஸ்திரங்கள் மெழுகுடன் சேர்த்துக் குழைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருமேனிக்கு இரண்டு முறை குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைக்கொண்டு திருமஞ்சனம் செய்து பாதுகாக்கப்படுகிறது.



தரிசனம் முடிஞ்சு  நடந்து வரும்போது அருங்காட்சியகமும், தேவஸ்தான அலுவலகமும் கண்ணில் பட்டன. ரெங்கவிலாஸ் மண்டபம் சமீபித்தோம். கொடிமரத்தில்  கம்பிகள் போட்டு அதில் ஏராளமான பூட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப்பற்றிக் கேக்கணுமுன்னு நினைக்கும்போதே  கே எம்முக்கு,   கோபால்  பணம் கொடுத்து 'பைபை' சொல்லிட்டார். 'பாவம் அவரும் காலை ஆறில் இருந்து இங்கேதானிருக்கிறார்.   வீட்டுக்குப்போய் வரட்டுமு'ன்னு அனுப்பிட்டேன் என்றார்.

பூட்டு சமாச்சாரம்தான் என்னன்னு தெரியலை. பெஸண்ட் நகர் வேளாங்கன்னி கோவிலிலும்  இப்படி பூட்டுகளைத் தொங்கவிட்டு வழிபாடு செய்வதைக் கவனிச்சுருந்தேன்.

இந்தத் திருச்சுற்றில்தான் ராமானுஜர் சந்நிதிக்குப்போன வழியில் அன்னதானக்கூடமும் பிள்ளைலோகாச்சாரியார் சந்நிதி என்று எழுதிய மண்டபமும் இருக்கு.இடப்பக்கம் சந்நிதியில்  வழக்கம்போல் மூடிய  கம்பிக்கதவு

ரெங்க விலாஸின் முன்பக்கம் இருக்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதிப்படிக்கட்டில் அமர்ந்து  பதிவுலக நண்பரை   செல்லில் கூப்பிட்டு  'சுற்றிப் பார்த்துவிட்டோம்' என்ற (அபாய)அறிவிப்பைச் சொன்னதும்  எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டவர் 'அசையாமல் இரும். இதோ வருகிறேன்' என்றார்!!!!

தொடரும்...........:-)))))

==================================================================

கோவிலொழுகு புத்தகம் பற்றிய மேல் விவரங்கள் இங்கே.

மொத்தம் 7 பாகம்,


வெளியிட்டோர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214, கீழை உத்தரவீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.
தொலைபேசி: 0431-2434398, 98842-89887 , 90424-53934.
மின் அஞ்சல்: krishvasu19@gmail.com

அனைத்து பாகங்களும் சேர்த்து, விலை ரூ. 3000 (ஏப்ரல்-30, 2011 வரை சலுகை விலை ரூ. 2400).
ஏப்ரல்-30 வரை தனிப்பட்ட பாகங்கள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தபால் செலவுகள் தனி (பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்).

சென்னையில் கிடைக்குமிடம்:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, புதிய எண்: 36, நாயக்கமார் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33.
தொலைபேசி: 044 – 24715120

ஒவ்வொரு பகுதிகளும் பற்றிய சிறு குறிப்பு:

பகுதி 1 (2 பாகங்கள்): புராணக் குறிப்புகள் முதல் ஸ்ரீராமானுஜர் காலம் வரையிலான வரலாறு. மேலும் பராசர பட்டர் தொடங்கி கி.பி 1623 முத்துவீரப்ப நாயக்கன் காலம் வரையிலான வரலாறு.

பகுதி 2 (2 பாகங்கள்): கி.பி 1623 முதல் 1803, கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வரும் வரையிலான வரலாறு. கந்தாடை ராமானுஜ முனி உட்பட இக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள் வரலாறு.

பகுதி 3 (3 பாகங்கள்): கிபி. 1803 முதல் 2003 வரை கோயில் உரிமைகள் தொடர்பாக தென்கலையார் தொடுத்த நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள். சித்திரை முதல் பங்குனி வரை நடைபெறும் பல்வேறு விழாக்கள். ஒழிபியல் என்ற தலைப்பில் கோயில் பற்றிய பல துணுக்குச் செய்திகள்.

பகுதி 4 (2 பாகங்கள்): ஸ்ரீரங்கமஹாத்மியம் நூல் தரும் கோயில் விவரங்கள். பங்குனிப் பெருவிழா மற்றும் அதன் வரலாறு பற்றி விரிவான விவரணங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசாரியர்கள் உரையின்படி.

பகுதி 5 (2 பாகங்கள்): நாதமுனிகள் முதல் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். விஜயநகர, மதுரை மன்னர்கள், தஞ்சை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய முழுமையான விவரங்கள்.

பகுதி 6 (3 பாகங்கள்): கூரத்தாழ்வான் திருவரங்க வாழ்வும் பணியும். கூரேச வைபவம் என்ற நூல் கூறும் குறிப்புகள். ஆழ்வான் அருளிய 5 சம்ஸ்கிருத தோத்திர நூல்களின் மூலமும் உரையும்.

பகுதி 7 (2 பாகங்கள்): முதலியாண்டான் தொடங்கி மணமாள மாமுனிகள் வரை இராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். திருவரங்க கோயில் அமைப்பு. கோயிலின் அனைத்து பகுதிகள் (கோபுரங்கள், தூண்கள், மண்டபங்கள், சன்னிதிகள்..), சிற்பங்கள், சித்திரங்கள் பற்றிய விரிவான விவரணங்கள். சில வரலாற்றுப் புதிர்கள் குறித்த பிற்சேர்க்கை.

தனித்தனி பகுதிகளின் விலை & மற்ற விவரங்கள் அறிய பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.


பி.கு: நண்பர் ஜடாயுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  அவருடைய பதிவில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன்.

முன் அனுமதி பெறவில்லை. மன்னிக்கணும் ஜடாயு அவர்களே! 


38 comments:

said...

இந்த கோவில் ஒழுகு என்ற புத்தகம் ஒரு சிலர் வீட்டில் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அதை ஜெராக்ஸ் எடுக்க இயலுமா அல்லது ஸ்கான் செய்து அனுப்ப இயலுமா என்றும் கேட்டு இருக்கிறேன்.

மூலம் இராமானுஜர் திருமேனி.. இது பற்றியும் திருவரங்கத்தில் இருக்கும் பெரியவர்களை தொடர்பு கொண்டு
கேட்க இருக்கிறேன். இருந்தாலும்

ஃபார் எனி ஹ்யுமன் பாடி டு பி பிரிசர்வ்டு, எம்பால்மிங் இஸ் அப்சொல்யூட் நெஸஸிடி.

கோவாவிலே ஒரு கிருஸ்துவ செயின்ட் எம்பால்ம் நிலையிலே ஒரு நாலைந்து வருசத்துக்கு
ஒரு முறைதான் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அதெல்லாம் பார்த்தா, அந்தக் காலத்துலே இந்த எம்பால்மிங் டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு சான்ஸே
இல்லை.

சென்டிமென்ட் ஒரு பக்கம். டு பி ப்ராக்மேடிக் அன்ட் ப்ராக்டிகல் இஸ் அனதர்.

அப்படிப்பார்த்தா, நீங்க சொல்ற தசாவதாரம் படத்துலே ....

வேண்டாம்.... அவங்கவங்க. எப்படி புரிஞ்சுக்கிறாங்களொ அதுவே இருந்துட்டு போயிட்டும்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

said...

நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும் இராமானுஜரின் socialisa எண்ணங்கள் அவரை ஆச்சாரியாரா ஏத்துட்டுஇருக்கும் பல வைணவர்களே தீண்டாமை எண்ணம் மேலோங்க தான் இன்னமும் இருக்காங்க :( . (வெளில காமிச்சுக்கலனாலும் மனசளவுல அவங்க மாறலை )
அவருடைய குரு பக்தி , அந்த பக்தியையும் மீறின பொதுநலம் ....கண்கள் பனித்தன .

ஏன் சப்பாத்தி .... நம்ம சாப்பாடு ஏன் இல்ல ?

மீண்டும் நன்றி .

தாளிகுமோசை ஜெயஸ்ரீக்கும் இப்போ நன்றி அவங்க ப்ளாக் பாக்கலேன்ன உங்களை எப்போ தெரிஞ்சுட்டு இருந்திருப்பேனோ .
இப்போ வேற எதுவும் படிக்கறது இல்ல . only துளசிதளம் . என் பொண்ணு கேக்கறா ... என்ன துளசிதளம் ல ஒக்காந்துட்டியா ..
தேங்க்ஸ் துளசி .

said...

ஒருவேள கோவில் ஒழுகு புக் கெடச்சா நாங்கள் படிக்க இயலுமா

said...

ரெங்கவிலாஸ் மண்டபம் சமீபித்தோம். கொடிமரத்தில் கம்பிகள் போட்டு அதில் ஏராளமான பூட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன..//

என்ன காரணம் என்று அறிய ஆவல்.

மதுரையில் சாமி சன்னதியில் கொடிமரம் பக்கத்தில் இருக்கும் சட்டைநாதர் சாமி இருக்கும் கதவில் நிறைய பூட்டுகள் தொங்கும் காரணம் தெரியாது.

உடைவர் பற்றிய விரிவான செய்திகள் , படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது..

said...

விளக்கங்களுக்கு தகவல்களுக்கு நன்றி...

said...

அரங்கன் ஊர்வலம் வரும் போது ராமானுஜர் சன்னதி தாண்டி கருவறைசெல்லும் போது சுவாமியின் பாதங்கள் தண்ணீரால் கழுவப்பட்டு பட்டுத்துண்டால் துடைக்கப்படுமாம் ..

ராமானுஜர் உடலம் அங்கே இருப்பதால் தீட்டு கழிக்க அப்படி செய்வதாக சொன்னார்கள்..

said...

எவ்ளோ விவரங்கள்!!!

பூட்டு என்ன வேண்டுதலுக்காக இருக்கும்????

அந்தக் காலத்துல கோயில்கள் வெறும் வழிபாட்டுக்கூடங்களா இல்லாம வரலாற்று ஆவணங்களைப்பதிவு செய்யற ஆப்பீசாவும் இருந்துருக்குது இல்லே :-))

said...

//இந்த கோவில் ஒழுகு என்ற புத்தகம் ஒரு சிலர் வீட்டில் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அதை ஜெராக்ஸ் எடுக்க இயலுமா அல்லது ஸ்கான் செய்து அனுப்ப இயலுமா என்றும் கேட்டு இருக்கிறேன். //

திரு கிருஷ்ணமாச்சாரி என்பவர் தமிழில் பதிப்பித்திருக்கிறார். மொத்தம் பதிமூன்றோ, பதினைந்தோ பாகங்கள். ஒரு பாகம் ஆயிரத்துக்கும் மேலே விலை. :))))) இங்கே தான் தெற்கு, கீழச் சித்திரை(?) வீதியில் இருக்கிறார்.

said...

துளசி,

தசாவதாரம் படம் இன்னமும் பார்க்கலை. ஹிஹிஹி, எனக்குக் கமலைப்பிடிக்காது தான். ஆனாலும் படம் பார்க்கலை. ஒரு நாள் தொல்லைக்காட்சியில் ஒரே ஒரு காட்சி காட்டினாங்க. அதிலே பெருமாள் விக்ரஹத்தை அநாயாசமா தூக்கிண்டு கதாநாயகி ஓடறாப்போல!

ஹிஹிஹி, நினைக்க நினைக்க சிப்பு சிப்பா வந்தது. அதுக்கப்புறமா பார்க்கவே வேண்டாம்னு வைச்சுட்டேன்.

said...

அவசரச்சேதி.

நண்பர்களுக்கு:

ஆர்வம் கொண்டு விசாரித்தமைக்கு நன்றிகள்.

கோவிலொழுகு புத்தக விவரங்களை இடுகையின் கடைசியில் சேர்த்துள்ளேன்.
ஒருமுறை பார்த்துக்கொள்ளூங்கள்.

சென்னையிலும் வாங்கும் வசதி இருக்கிறது.

said...


http://tinyurl.com/d3e56a4

கோயிலொழுகு 7 பகுதிகள் பதினெட்டு பாகங்கள் கொண்டது. விலை 3,700/-க்குள்ளாக.

said...

// முன் அனுமதி பெறவில்லை. மன்னிக்கணும் ஜடாயு அவர்களே! //

அன்புள்ள துளசி அவர்களே, இதற்கு எதற்கு அனுமதி, மன்னிப்பெல்லாம்? அது பொதுத் தளத்தில் உள்ள தகவல் தானே? தாராளமாக நீங்கள் காப்பி பேஸ்ட் செய்யலாம் :))

அரங்க நகரின் பெருமையையும் ஸ்ரீராமானுஜரையும் பற்றீ அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். புகைப்படங்களும் அருமை. மிக்க நன்றி.

said...

மிக்க நன்றி !!

said...

தலைப்புக் கயமை செஞ்சுட்டேன். இது சூடான இடுகையில் இருக்கு என்பதை இப்போதான் கவனிச்சேன்!!!


ஓம் நமோ நாராயணாய!!!!!

ராமானுஜரே...... யூ ஆர் ஸோ க்ரேட்!!

ஆச்சாரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்/\

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

எம்பாமிங் கூட ஒருசில மாதங்கள்தானே நிற்கும். இப்படி வருசக்கணக்கா St Francis Xavier உடலை வச்சுருக்காங்கன்னா வேற எதாவது ரகசிய முறை இருக்கோ என்னவோ?

ஏதாயாலும் ஆன்மா பிரிஞ்சு போன வெறும் பூத உடலை காப்பாற்றி வைக்கணுமான்னு அடிக்கடி யோசிப்பேன்.

இயற்கையோடு அதை கலக்கவிடுவதுதானே நல்லது.

பொதுவா நமக்கு இந்த செண்டிமெண்ட் அதிகம். அதிலும் சாமி சமாச்சாரமுன்னா..... அப்படியே எல்லை இல்லாமப் போயிருது.

கூரத்தாழ்வாரைக்கூட தசாவதாரத்துலே கூறு போட்டுட்டாங்கதான். பாவம் அவர் கண்ணில்லாமல் 12 வருசம் கஷ்டப்பட்டார். இங்கே அவரை ஒரேதா போட்டுடறாங்க:(

சோழனின் வெறுப்பைக் கோடி காமிக்க தசாவதாரத்தைச் சொன்னேன். அம்புட்டுதான்:-)

said...

வாங்க சசி கலா.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/11/blog-post.html

இது ஒரு நாலு வருசத்துக்கு முந்திய பதிவு.

சப்பாத்தி ஏன்னு கேக்கத் தோணலை:(

ஒருவேளை சிலை ஸ்தாபக சமயத்துலே இருந்த பட்டர் ஸ்வாமிகளுக்குச் சப்பாத்தி தின்னும் நிர்பந்தமோ என்னவோ? அதுவே பின்னாளில் சம்ப்ரதாயமாப் போயிருக்கணும்.

ரெங்கனுக்கு என்னென்ன செய்யணுமுன்னு சொன்னவர்,தான் பொறந்தஊரில் வச்ச சிலைக்கு என்னென்ன நிவேத்யமுன்னு எழுதி வைக்கலை பாருங்கோ!!!

said...

வாங்க கோமதி அரசு.

சாமி வேறெங்கேயும் போயிடக்கூடாதுன்னு சிம்பாலிக்கா சொல்றதுதான் இந்த பூட்டோ????

கோவில் சந்நிதிகளைத் திறக்கும் பொறுப்பில் இருந்தஒருவர் கைமறதியாக் கொண்டு வந்துட்ட பூட்டு வேறெங்காவது வச்சுக் காணாமப் போயிருமோன்னு கண்ணில் பட்ட கம்பியில் பூட்டி வைக்க , அதைப்பார்த்த ஒருவர் இப்போ வழிபாடு இப்படியான்னு அவருமொரு பூட்டுப்போடன்னு ஆரம்பிச்சுருக்கலாம்:-)

இல்லைன்னா.....

புதுசா பூட்டு வியாபாரம் ஆரம்பிச்ச ஒருவர் தன் கடையில் விக்க வச்சருக்கும் முதல் பூட்டை சாமிக்குப் படைக்க..... அதைப்பார்த்து அடுத்தஆள் பூட்டுவாங்கிப்போட.....

எப்படியோ அவர் கடையில் வியாபாரம் கொழிச்சிருக்கும் இல்லே!!!

ஆமாம்....இதுக்கான சாவியெல்லாம் என்ன ஆச்சு????

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்வருகைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நீங்க சொன்ன விளக்கம் ரொம்பப் பொருத்தமா இருக்கு.

வேறொரு மடற்குழுமத்தில் பக்தர்கள் ராமானுஜர் சந்நிதிக்குப்போய்விட்டு வெளியே வரும்போது கால்களைக் கழுவிட்டு வரணும் என்று பேச்சு வந்தப்ப உள்ளூர் ஆட்கள் அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்ல விவாதம் பரபரப்பாப் போனது! இப்ப நீங்க சொன்னதை அங்கே யாருமே சொல்லலை. இதோ..அங்கே போய் நான் சொல்லிட்டு வரப்போறேன்.

நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவுங்க மட்டும் வரலாற்றை பதிவு பண்ண வேணாமா:-)))))))))))))

கொடிமரத்துக்குப் பக்கத்திலேயே ஒரு பூட்டுக் கடை போட்டுருந்தா நாலு காசு கூடுதலாப்பார்த்துருக்கலாம்,இல்லே!!!!

பதிவு நல்லா எழுத வரணுமுன்னு வேண்டிக்கிட்டு நானும் ஒரு பூட்டு போட்டுட்டு வந்துருக்கலாம். இப்பத் தோணுது.:(

said...

வாங்க கீதா.

ஒரு ஃபன்னுக்காக ஒருமுறை பாருங்களேன்:-)))

முகுந்தா முகுந்தான்னு ஒரு பாட்டு ஸீன் எனக்கு ரொம்பப்பிடிச்சது. பாலித்தீவில் கலைநிகழ்ச்சியில் காமிக்கும் ஷேடோ பப்பெட் ஷோ போல தசாவதாம் காமிக்கும் பாட்டு ஸீன் அது.

அதுலே ஒரு சின்னப்பையன் குத்து விளக்கைத் தட்டிவிட்டுட்டு முழிப்பது போன்ற சின்னச்சின்ன சமாச்சாரங்களைக் கவனியுங்கோ!இன்னும் சிப்பு சிப்பா இருக்கும்:-)))))

யூ ட்யூப்லே இருக்கேப்பா.
http://www.youtube.com/watch?v=ahKeeQrhVXg

said...

oops....

http://www.youtube.com/watch?v=40TgEVBFU_E

கீதா, முதலில் கொடுத்த சுட்டி வெறும் பாடல் மட்டும். இதுலே பாருங்க ப்ளீஸ்.

said...

நண்பர் ஜடாயு அவர்களே,

மிகவும் நன்றி.

said...

வேறொரு மடற்குழுமத்தில் பக்தர்கள் ராமானுஜர் சந்நிதிக்குப்போய்விட்டு வெளியே வரும்போது கால்களைக் கழுவிட்டு வரணும் என்று பேச்சு வந்தப்ப உள்ளூர் ஆட்கள் அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்ல விவாதம் பரபரப்பாப் போனது! இப்ப நீங்க சொன்னதை அங்கே யாருமே சொல்லலை. இதோ..அங்கே போய் நான் சொல்லிட்டு வரப்போறேன்.////////


ஆமாங்க துளசி .. மந்திராலயம் சென்றபோது கூட அங்கிருந்து நேரே இல்லத்திற்கு வரக்கூடாது ..அது சமாதி .. ஆகவே பஞ்சமுகி என்னும் அருகில் உள்ள அனுமன் தலத்திற்குச்சென்று வணங்கிவிட்டுத்தான் வீடு திரும்பவேண்டும் என்பது ஐதீகம் என்று தெரிவித்தார்கள்..

ராமானுஜரையும் ,ராகவேந்திரரையும் தெய்வமாக வணங்கினாலும் இப்படி தீட்டு என்று சொல்லி சில சடங்குகள் செய்யும்போது சங்கடமாகத்தான் உணரமுடிகிறது...!

said...

ரஷ்யாவில் லெனின் அவர்களின் உடலை நீண்ட வருடங்கள் கெடாமல் வைத்திருந்து காட்சியாக்கினார்களே..!

said...

வளர்ந்த நாடுகளாக இருந்தாலும்,அன்புக்குரியவர்களை பிரியக் கூடாது என்றால்,சாதரண விஷயங்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்கின்றனர்.

அதிகம் பேசும் மனைவியின் வாயிற்கு ஒரு பூட்டு போட்டால் தேவலை என நினைக்கும் தமிழக ஆண்கள் சேலத்தில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பூட்டு போட்டு பிரார்த்தனை செய்வர்.பிரான்ஸ் நாட்டிலும், இதே பூட்டு தான் பிரார்த்தனை பொருளாக இருக்கிறது..

அங்குள்ள சீயன் நதியின் இடையில் அமைந்துள்ள பாலத்தின் தடுப்பு கம்பி வலைதான் பிரார்த்தனை கூடமாக அமைந்துள்ளது.தம்பதியாக இருந்தாலும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி, பெயரை மட்டும் ஒரு பூட்டில் எழுதி இந்த பாலத்தில் பூட்டிவிட்டால், அவர்கள் பிரியமாட்டார்கள் என்பது பிரான்ஸ் மக்களின் நம்பிக்கை.

காதலர் தினத்தன்று மட்டும்,ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தில் பூட்டு போட்டனர் தங்களின் அன்பு துணைக்காக.அன்பு செலுத்துங்கள் அடுத்தவர் மேல் என்று தான் அனைத்து மதங்களும் சொல்கிறது,ஆனால் கேட்பார் தான் யாருமில்லை.மூடநம்பிக்கையாக இருந்தாலும் இப்படி பூட்டு போடுவது அன்பை அதிகரிக்கச் செய்யும் என்றால், நாமும் கூட போடலாமே ஒரு பூட்டு.

said...

பூட்டு முனியப்பன் கோயில்
சேலம் - ஏற்காடு சாலையில் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ளது ஆலங்குட்டை பூட்டு முனியப்பன் கோயில்.

ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் வெற்றி பெற மாணவ - மாணவியர் இங்கு வந்து பூட்டுத் தொங்கவிட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்தப் பிரார்த்தனை பக்தர்களிடையே பரவ ஆரம்பித்து விட்டது. வீட்டில் மாமனார், மாமியார் கொடுமையா? நாத்தனார் அட்டகாசமா? குடிகாரக் கணவன் தொல்லையா? அவ்வளவு ஏன்... காதல் கைகூடி வரவேண்டுமா? எல்லாவற்றுக்கும் போடு ஒரு பூட்டு!

பூட்டோடு பூஜைப் பொருட்களுக்கு நூறு ரூபாய். பூஜைத் தட்டு உங்கள் கைகளுக்கு வந்துவிடும். முனியப்பனிடம் வைத்து வேண்டிக்கொண்ட பின்னர், உங்கள் கோரிக்கையை வெள்ளைத் தாளில் எழுதி, பூட்டுடன் சேர்த்து ஒரு கவரில் போட்டு, பிரார்த்தனை ஸ்டாண்டில் கட்டி விட வேண்டும்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மீண்டும் இங்கு வந்து தங்களின் பெயர் எழுதியுள்ள உறையைப் பிரித்து, பிரார்த்தனைப் பூட்டை கோயிலின் ஒரு தொட்டியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பூட்டு மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளார் பூட்டு முனியப்பன்," எனக் கூறுகிறார் கோயில் பூசாரி கிருஷ்ணன்.
-


said...

ஸ்ரீ ராமானுஜர் சந்நிதிக்குச் சென்றதும், அர்ச்சகர் காட்டுவது கட்டை விரல் நகத்ததான்.
வளர்ந்துவருகிறது.
என்று ஒரு பட்டாச்சாரியார் சொன்னார். உள்ளே ஒரே இருட்டு.
பிரமை பிடித்த நிலையில் வெளிவந்தோம்.
வைஅணைவர்கள் மற்றவர்களை ஏற்க்லாம். மற்றவர்கள் வைணவர்களை ஏற்கிறார்களா என்பதும் ஒரு விஷயம்:)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சாமிக்கும் சாமியாகிட்டவங்களுக்கும் தீட்டு என்னங்க தீட்டு?

சாவு தீட்டுன்னா, சாமியே கோவிலுக்குள்ளே அடக்கம் பண்ணச் சொல்லி இருப்பாரா? நிதின்னு சொன்னாரே!!!!

பெரியவரின் உபதேசங்களைக் காத்துலே விட்டுட்டு சம்ப்ரதாயங்களைக் கெட்டியாப் பிடிச்சுக்கிடறாங்க:(

பூத உடல் பாதுகாப்பு....அன்பின் மிகுதியால் செய்யும்செயல்களே இவை. ஆனால் தானாக அங்கே தோன்றியதுன்னு அளந்து விடுவதெல்லாம் ஃபோர்மச்:-)

மனைவிக்கு வாய்ப்பூட்டு போட வேண்டிக்குவாங்களா!!!! பேஷ் பேஷ்.

ரெண்டு லக்ஷம் பூட்டுகளா!!! அம்மாடியோவ்!!!
ஏராளமான வேண்டுதல்கள் பூட்டாகி இருக்கு! பூட்டு வியாபாரம் கொழிச்சால் சரி! ஆமாம்.... இதன் சாவிகள் எல்லாம் என்னவாகி இருக்கும்???

எக்கச்சக்கமான புதுத் தகவல்களை சொல்லும் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கொரு விருந்து. நம் பதிவுலக நண்பர்கள் வாசகர்களுக்கும்தான்.

சிறப்பான தகவல்கள். ஸ்பெஷல் நன்றீஸ் உங்களுக்கு.

said...

வாங்க வல்லி.

அவுங்க ஏற்கலைன்னா அது அவுங்க பிரச்சனை இல்லையோ? அதுக்கு வைணவர்கள் வருத்தப்படணுமா என்ன?

கடவுளுக்கேதப்பா இந்தப் பிரிவினைகள் எல்லாம்!

பெருமாள் எல்லோரையும் காப்பாற்றுவான். நமக்கு இந்த நம்பிக்கை போதும்,இல்லையா?

said...

இராமானுஜரின் உடல் பள்ளிபடுத்தப்பட்ட பின் சில நாட்கள் கழித்து ஒரு நாளில் உள்ளேயிருந்து தான் உகந்த திருமேனியாக வந்ததாக தான் இங்கு சொல்லப்படுகிறது...உண்மை நிலவரம் தெரியவில்லை.

பூட்டு சமாச்சாரத்தை பார்த்து ரொம்ப நாளா மண்டைக்குள் குடைச்சல்! ஸ்ரீரங்கத்துக்காரரான நம்ம ரிஷபன் சார்கிட்டயும் கேட்டுட்டேன். தெரியவில்லை. புதுசா வந்த சமாச்சாரம் என்கிறார். யாரோ உண்டாக்கியது....:)

ஒரு கைடு வெளிநாட்டவர்களுக்கு ஏதோ அளந்து கொண்டிருந்தார். ஓடிப் போய் கேட்பதற்குள் கூட்டம் கலைந்து விட்டது....:( எப்படியாவது கண்டுபிடித்து சொல்கிறேன்...:))

இங்கு வந்ததிலிருந்தே கோயிலை பற்றி தகவல்களையும், கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது! வாசிக்க வேண்டும்...

said...

முழுக்க வாசித்து வந்து என் கருத்தை சொல்றேன் ராமாஞ்சூ அழகோ அழகுன்னு மட்டும் இப்பசொல்லிட்டு!

said...

ஸ்ரீ ராமானுஜர் மிகவும் விரிவான பல புதிய தகவல்களை அறிந்து கொண்டோம்.

said...

ராமானுஜ காவியம் படித்திருக்கிறேன். உங்களின் சுட்ட பதிவு நிறைய தகவல்கள் தந்துள்ளது. அருமையான பதிவு.

குறிப்பு: கம்பர் பற்றிய என் (மசாலா கலந்த பதிவுகள்) வெளியிட முன் அனுமதி, பின் அனுமதி ஏதும் தேவையில்லை. www.andamantamilnenjan.wordpress.com

அப்புறம் இந்த தி க மேட்டர் சூப்பர் தான்.

said...

டீச்சர் பூட்டு சமாச்சாரத்தை பற்றி சமீபத்தில் கிடைத்த தகவல்.....

ஆவிகளை அடக்கவும், பங்காளி சண்டையில் வாய்ப்பூட்டு போடுவதற்காகவும் இங்கு வந்து பூட்டு போட்டு போவதாக அப்படி செய்தவர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவற்றையெல்லாம் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது...

said...

டீச்சர்,
இப்ப தான் இந்த இடுகையை கவனித்தேன், உடனே வாசித்தேன். அருமையா விளக்கமா எழுதியிருக்கீங்க, தகவல்களை அள்ளி வழங்கியிருக்கீங்க, நன்றி :)

2 தினங்கள் முன் நான் ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். அப்படியே, கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம் கோயில்களுக்கும் சென்று அருமையான பெருமாள் தரிசனம்.

பயணம் குறித்து எழுதலாம் என்று உத்தேசம் உள்ளது, பார்க்கலாம்....

said...

Sri Ramanuja year of birth is 1017 not 1071.Koilozhugu ,Encyclopedia on SRIRANGAM is available on www.SriVaishnavaSri.com even now .Limited copies only as 1000 copies spread over 10 years is nearing low stock.Adiyen Vasu for Sri Vaishnava Sri

said...

வாங்க வாசுதேவன்.

கூடுதல் விவரங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.