Friday, November 25, 2016

சோகச் செய்தி.... சிவஞானம் ஜி........ is no more :-(

என் அண்ணனும் , வலைப்பதிவரும், நம் வலை உலக நண்பருமான சிஜி என்று நான் அழைக்கும் திரு. சிவஞானம் ஜி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எம் பெருமாளை வேண்டிக்கொள்கின்றேன்.
குடும்பத்தினருக்கு நம் மனமார்ந்த அனுதாபங்கள்.
இந்தப் பயணத்தில் நவம்பர் 3 ஆம் தேதிதான் அண்ணனை சந்தித்து வந்தோம். மன உற்சாகத்துடன் தான் பேசினார். ஆனால் ஆள் பாதியாக இளைச்சுப்போயிருந்தார்.!


இப்படி இருந்தவர்  இப்படி......     ப்ச்.....


Wednesday, November 23, 2016

யானை வாகனம், சாஸ்தாவுக்கு ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 100)

கொள்ளிடம் பாலம் கடந்து  சமயபுரம் போகும் பாதையில் ஒரு டோல் ரோடு வழியாப் போறோம். சமயபுரம் போகும் பக்தர்கள் குழு ஒன்னு மஞ்சள் யூனிஃபா(ர்)மை நேஷனல் ஹைவேயில் காயவச்சுக்கிட்டு இருக்காங்க. சிறுகனூர்  என்ற ஊரில் இருந்து இன்னும் அஞ்சு கிமீ போகணுமாம், திருப்பட்டூருக்கு!
கோவில் மதில் தெரிஞ்சதும் வண்டியை அங்கே திருப்பினார் சீனிவாசன்.

அய்யனார் கோவிலாம். இவ்ளோ பெருசா?  உள்ளே போனால்   மாலையும்  உடலுமா  நம்ம யானை! அந்தாண்டை  திரும்பி நின்னு  பலகணி வழியாப் பார்த்துக்கிட்டு இருக்கு!  ஞான உலா சாஸ்தா மூலஸ்தானம்........ பொதுவா ஐய்யப்பன் கோவிலைத்தான் சாஸ்தா கோவில் சொல்லுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால்....  இவர் மாசாத்தனாராம்!
இந்தப்பெயரை வேறெங்கோ கேட்டுருக்கமேன்னு,  (இருக்கும்)  கொஞ்சம் மூளையைக் கசக்கினால்.....  மாசாத்துவன் என்ற பெயர்  மனசில் வந்தது.  இவர்  கோவலனுடைய தந்தையார் இல்லையோ?  இப்படித்தான் ஒன்னு பார்க்கும்போது இன்னொன்னு  ஞாபகத்துக்கு வருது.....   போகட்டும்....  அவர் சாத்துவன். இவர் சாத்தனார் !
சின்னதா  மூணுநிலை ராஜகோபுரம்! வாசலில் பூஜைப் பொருட்கள் விற்கும் கடை.  தேங்காய் உடைக்கணும்,  விளக்குப் போடணும் இதெல்லாம்தான் இங்கே விசேஷம். செக்குலே ஆட்டுன  தேங்காய் எண்ணெய் இங்கே கிடைக்கும் என்றெல்லாம்  அங்கே உக்கார்ந்திருந்தவர் ( சிவாச்சாரியார் ?) சொன்னார்.  பொதுவாப் பயணங்களில் தேங்காய் உடைக்கறதில்லை.  சாமிப் பிரசாதம் என்ற வகையில்  வண்டிக்குள்ளேயே இருந்து  பலசமயம் மறந்துபோய் கெட்டுப்போயிருது.  ஆனால் செக்குலே  ஆட்டுன தேங்காய் எண்ணெய் என்றதும் பேலியோ நினைவுக்கு வந்தது உண்மை.
அதென்ன கோவில் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை என்ற புதிருக்கு விடை கோவிலுக்குள் கிடைச்சது. அய்யனாருக்கு வேண்டிக்கிட்டு அம்பத்தியொன்னு, நூத்தியொன்னுன்னு  ஏராளமான தேங்காய்களை மக்கள்ஸ் உடைக்கிறாங்களாம்.  அதையெல்லாம்  சேகரிச்சு, சிரட்டையில் இருந்து தேங்காய்ச்சில்லைப் பெயர்த்தெடுத்துப் பாயில் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். நல்லா காய்ஞ்சதும்  செக்குலே ஆட்டி எண்ணெய் எடுக்கறாங்களாம்.  கோவிலுக்கு ஒரு கூடுதல் வருமானம் ஆச்சு!


 "ரொம்பப்பழைய கோயில், மூவாயிரம்   வருசம் இருக்கும்,  அந்தக் காலத்துலே மண்சுவர் வச்சுக் கட்டுன கோயில்தான் அப்புறம் சோழமன்னர் இதை  இப்ப இருக்கும் நிலையில் கட்டுனார்!"  காலை ஆகாரம் சாப்பிட்டுக்கிட்டு இருந்தவர்  சொன்னார்.
கடையில் தலவரலாறு புத்தகம் இருந்ததைக் கவனிச்ச நம்மவர் உடனே வாங்கினார்.  எனக்கு மேட்டர் தேத்தித்தரும் ஆர்வம்தான் :-)  ராம்ஜி என்பவர் எழுதியது.

அய்யனாருக்கு ரெண்டு தேவிகள். பூரணை, புஷ்கலை என்று பெயர்கள்.  சந்நிதிக்குள்ளே போனோம்.  நல்ல அழகான கம்பீரமான சிலைதான்!  நிறைய ருத்ராட்ச  மாலைகளை  கழுத்து, கை, தோள், மார்புன்னு  போட்டுருக்கார்! ஒரு கையில் ஓலைச்சுவடி ஒன்னு. இன்னொரு கையில்  என்னன்னு தெரியலை. பூச்சரம் சாத்தி இருந்தது.
வெளியே பிரகாரத்தில் வலம் வந்தோம். நிறைய தூண்களோடு  ஒரு கல்மண்டபம். இதுக்கும் உள்ளே அய்யனார் கையில் இருக்கும் ஓலைச்சுவடிக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு! உள்ளே நுழைஞ்சவுடன் யானைக்கு முன்னால் ஞான உலா சாஸ்தான்னு பார்த்தோமே...  அதுக்கான விளக்கமும் இதுலே இருக்கு!

நம்ம சுந்தரமூர்த்தி நாயனார் (அந்த நாலுபேரில் ஒருவர்!) இருக்காரே  அவரும், சேரமான் நாயனாரும் நண்பர்கள். சேரமான் நாயனார் திருக்கைலாய  ஞானஉலான்னு ஒரு புத்தகம் எழுதி இருக்கார்.  அதைப் படிச்சுப் பார்த்த  சுந்தரர் ,  ' ஹைய்யோ! எவ்ளோ நல்லா எழுதி இருக்கீர்! இதை நம்ம சிவனின் கையால் வெளியிடணும். வாங்க கைலாசத்துக்குப் போகலாம்'ன்னு  கிளம்பச் சொல்றார்.

நம்ம சுந்தரருக்கு, சிவன் பெஸ்ட் ஃப்ரண்ட் என்பதால் (இவருக்காகக் காதல் தூது போனவர் சிவன்!)  'வரட்டுமா? வரப்போறோம்' என்ற தகவல் கூட அனுப்பாமல்,  சேரமான் நாயனாருடன் கைலாயம் போய்ச் சேர்ந்தார். சிவபெருமானை வணங்கி, வந்த விஷயத்தைச் சொல்றார்.

'என்னம்மா.... இதை இங்கேயே அரங்கேற்றம் செஞ்சுடலாமா'ன்னு  தேவியைக் கேக்கறார் சிவன். ( அங்கேயும்'  மனைவியைக் கேக்காமல் தானே தலையாட்டிக்கூடாது'ன்னு  மக்களுக்கு  இப்படித் தன் செய்கையால்  ஒரு முன்மாதிரியாக இருக்கார் பாருங்க! )   'இங்கே எதுக்குங்க. புண்ணிய பூமியாம் திருப்பிடவூரில்  ( ஆதி காலத்தில் இந்தப் பெயர்தான் திருப்பட்டூருக்கு!) அரங்கேற்றலாமு'ன்னு  மனைவி சொல்றாங்க.
'அப்படியே செஞ்சால் ஆச்சு'ன்றவர், தன்னுடைய சார்பில் யாரை அனுப்பி அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்கச் சொல்லலாமுன்னு  பார்க்கிறார். பொருத்தமானவரைத் தேடும்போது சிவகணங்களுக்குள்  ஒருவர் கண்ணில் பட்டார்.  இவரை விடப் பொருத்தமானவர் வேறு யார்னு அவரிடம் ஓலைச்சுவடியைக் கொடுத்து, 'பூவுலகில் திருப்பிடவூர் சென்று  இந்த திருக்கைலாய ஞான உலாவை வெளியிட்டுவிட்டு, அங்கேயே தங்கி  என் பக்தர்களுக்கு அருள்வாயாக'ன்னு உத்திரவும் போட்டார்.  யானை மேல் ஏறி  திருப்பிடவூர் வந்து சேர்ந்தார்,   சாஸ்தா!
அந்த அரங்கேற்றம் நடந்தது இந்தக் கல்மண்டபத்தில் தானாம்!  இதையொட்டியே பிரகாரத்தின் ஒரு பக்கம் சப்தமாதாக்கள் இருக்காங்க.

அரசரும், படை வீரர்களும் சாத்தனார்  கோவிலுக்கு வந்து அவருக்குப் படையல்  போட்டு, தங்களுடைய ஆயுதங்களை இவர் காலடியில் வச்சு வணங்கிட்டுத்தான் போருக்குக் கிளம்புவாங்க. அப்பதான் போரில் வெற்றி நிச்சயம் என்றெல்லாம் சங்க காலத்துக் கல்வெட்டுகளும் பாடல்களும் சொல்லுதாம்!

கோவில் வளாகம் சுத்தமாகவே இருக்கு.  சுத்தி வரும்போது  அழகான பூக்களுடன் ஒரு மரம். என்ன மரமாக இருக்கும்?  கேட்க விட்டுப்போச்சு :-(



உண்மையில் இந்தக் கோவில் இருக்கும் விவரமே நமக்குத் தெரியாது. ப்ரம்மாவுக்குக் கோவில் இருக்குன்னுதான் அதுவும் நம்ம வெங்கட் நாகராஜ் அவர்கள் பரிந்துரையின்படி  இங்கே வந்திருக்கோம்.    யானையைக் காட்டி, வாவான்னு கூப்பிட்டு நமக்கு அருள் செஞ்சுருக்கார் அய்யனார்!  அதுவும் காலை  6 மணிக்குத் திறக்கும் கோவில்  காலை 10 மணிக்கே மூடிருவாங்களாம். இது தெரியாமல் நாம் பத்து மணிக்குத்தான்  கோவிலுக்குள்ளே நுழையறோம். கோவில் மூடும் நேரம்னு விரட்டி அடிக்காமல் தரிசனம் செஞ்சு வச்ச அர்ச்சகருக்கும், அருள் செய்த அய்யனாருக்கும் மனம் உருக நன்றி சொல்லத்தான் வேணும்.

தேடிவந்த கோவிலைத் தேடி விசாரிச்சதில்  அங்கே ரொம்பப் பக்கத்துலேயே இருக்குன்ற தகவல் கிடைச்சது. அதுவுமில்லாமல்  இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு முக்கியமான கோவிலும் இருக்குன்னு சொன்னாங்க. மொத்தம் நாலு  கோவில்கள்!

தொடரும்.......  :-)


Monday, November 21, 2016

அட! பரவாயில்லையே!!!! கோவில் பூனைகளுக்கு ரங்கனோடு இருக்கக் கொடுப்பினை !! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 99)

தசாவதாரக்கோவில் ஒன்னு இருக்காம். இதையும் முந்தாநாள் சந்திப்பில் நம்ம வெங்கட் நாகராஜ்தான் சொன்னார்.  அடடான்னு   யானைக்குப் போட்டுருக்கும் கண் பட்டியைக் கழட்டிவச்சேன்:-)   அரங்கத்தில் இருக்கும் வரை காலையில் உலா கண்டிப்பாப் போகணும் என்ற முடிவோடு இருப்பதால்....   கோவிலுக்குப் போகணும் என்றாலும், அங்கெ போயிட்டால்.....  அப்படியே ரெங்கன் இழுத்து உக்காரவச்சுடறானே....  நேரம் போவதே தெரியமாட்டேங்குதே.... அதனால்  தசாவதாரக்கோவிலுக்குப் போயிட்டு அங்கிருந்து பெரியகோவிலுக்குப் போகலாமேன்னு கிளம்பினோம். அதிகாலை ஏழுமணிக்கு ஹயக்ரீவா வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க சாந்தா.



காரில்  போறவங்களுக்குன்னே ஏகப்பட்ட ஒருவழிப் பாதைகளை ஏற்பாடு பண்ணி வச்சுருக்கு ஸ்ரீரங்கம். கோவிலுக்கே   மேலூர் ரோடில் போய் மேற்கு கோபுரவாசல் வழியாகப்போய் சுத்தோ சுத்துன்னு சுத்தித்தான்  ரங்கா கோபுரத்தாண்டை போய் இறங்கவேண்டி இருக்கு. அதே மேலூர் ரோடில் இன்னும் கொஞ்சதூரம் போனால்  தசாவதார சந்நிதிக்கு வலது பக்கம் திரும்பலாம்.  வழி இந்தப்பக்கம்னு போர்டு இருக்கு.

ஏழு  அஞ்சுக்கு   அங்கே போய்ச் சேர்ந்தோம். தெரு முடியும் இடத்தில் கோவில் மண்டபம் போல ஒன்னு. கம்பிக்கதவுகளுடன் மூடி இருக்கு.  அதுக்கு  வலதுபக்கம்  சட்னு பார்த்தால் வீடு போலவே இருக்கும்  தசாவதார சந்நிதி.   வாசக்கதவைப் பார்த்தால்தான் கோவிலாட்டம் தெரியுது.
தனிக்கோவில்தான். ஆனால் சந்நிதின்னு பெயர்!  அஹோபிலமடத்தின் பொறுப்பில் இருக்கும் கோவில்.
ஏழரைக்குத்தான் நடை திறப்பாங்களாம். அரைமணி நேரம் தேவுடு காக்க வேணாமேன்னு ரெங்கனைத் தேடிப்போயிட்டோம். கோவிலுக்குள் கலகலன்னு கூட்டம். வழக்கமான சுத்துதான் நமக்கு. சக்ரத்தாழ்வார் சந்நிதிப்பக்கம் போனால் பூனையார்  என்னமோ சாப்புடறார். என்னவா இருக்குமுன்னு கவனிச்சால்....  கேட் பிஸ்கெட்ஸ் !!!   அட!





அப்புறம் சுத்தலில்  கண்ணில் பட்ட  பூனைகள் எல்லோருமே அங்கங்கே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. சில இடங்களில் கிண்ணங்களில் பால்வேற!  பரவாயில்லையே...    அப்புறம்தான் கண்ணில் பட்டார் கையில் கூடையோடு ஒருவர்.  கூடையில் இருந்து ப்ளாஸ்டிக் ஜாரைத் திறந்து  பிஸ்கெட்ஸ் வச்சுக்கிட்டு இருந்தார். பெடிக்ரீயாம்!!!

பூனைகளுக்கும் தெரிஞ்சுருக்கு எந்த ஏரியாவில் சாப்பாடு வைக்கும் இடம் எதுன்னு!  இவருக்கும் தெரிஞ்சுருக்கு பூனைகள் எங்கெங்கே  காத்திருக்குன்னு!  எல்லாம் ஒரு அண்டர் ஸ்டேண்டிங்கதான் :-)

தினம் ஒரு வேளை சாப்பாடு போடறாங்களாம், கோவில் வகையில். நம்ம ராமானுஜர்  கோவில் ஒழுகு என்று கோவில் இயங்க வேண்டிய நடைமுறையில் ஒருவேளை எழுதி வச்சுருக்காரோ என்னவோ!
ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்குள் போனோம். முன்மண்டபத்தில் அட்டகாசமான ஓவியங்கள். முதலில் போய் குரு வணக்கம் செஞ்சுட்டு, கருவறையை  வலம் வந்தபின் மண்டபத்துச் சித்திரங்களைக் க்ளிக்கினேன். மேல்வரிசையில் சுதைச்சிற்பங்களும், கீழே சுவரில் ஓவியங்களுமா  இருக்கு.


வலத்துக்குப் பதிலா  இன்றைக்கு  'இடம்' போய்க்கிட்டு இருக்கோம்.
சேஷராயர் மண்டபம் என்னைப்பிடிச்சு இழுத்தது. விடமுடியுதா என்ன? க்ளிக் க்ளிக்.
நேரெதிரே ஆயிரங்கால் மண்டபம்.  இந்த ரெண்டு மண்டபங்களுக்கும் இடையில் இருக்கும் மணல்வெளி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நிலாக்காலத்தில்  அங்கே உக்கார்ந்தால்  ஆத்தங்கரை, பீச் எஃபெக்ட் இருக்குமுல்லெ!   ஹூம்....அதுக்கெல்லாம் ஏது வாய்ப்பு? :-(
ஆயிரக்கால் மண்டபம் வழக்கம்போல் பூட்டிக்கிடக்கு.  ஆயிரம்கால்னு சொல்றோமெ தவிர உள்ளே ஆயிரம் கால் இல்லையாக்கும்! 953 கால்கள்தான்.  பாக்கி 47 தூண்களைப் பனைமரத்தை வச்சு ஆயிரம் ஆக்குவது கைசிக ஏகாதசி சமயத்தில்தான். மண்டபத்தின் ஓரமாகவே போய் யானையை இன்னொருக்காப் பார்த்தேன். தும்பிக்கையால் 'அவனை' அணைச்சுப் பிடிச்சிருக்கு!
தாயார் சந்நிதிக்குப் போகலாமுன்னு  அந்தப்பக்கம் போகும் வழியில் தன்வந்திரி சந்நிதிக்குள் போய் ஒரு கும்பிடு. அப்படியே தீர்த்தக்கரை வாசுதேவப்பெருமாள் சந்நிதிக்குப்போனால்...  அங்கே சில பெண்கள் தேங்காய் துருவுதல், கறிகாய் நறுக்குதல் போன்ற வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கோவில் மடைப்பள்ளிக்கு உபகாரமாம். எல்லாம் தன்னார்வலர்கள்!  சேவை செய்யும் எண்ணமும் ஆர்வமும் இருந்தால்  கோவிலில் வேலையா இல்லை? நல்லா இருக்கணுமுன்னு  மனசார வாழ்த்தினேன்!

அப்பதான் நினைவுக்கு வந்தது....நேத்து ராத்ரி    கண்ணாடி ஆண்டாள் பார்க்க வந்துட்டு ஏமாந்து போனது.  முதலில் அங்கே போகலாம்....  சந்திரப்புஷ்கரணி வழியா வந்து கோதண்டராமரை தரிசனம் பண்ணிக்கிட்டுப் பரவாசுதேவர் சந்நிதிக்குள் போனால்.... இடதுபக்கம் கண்ணாடிக்கு முன்னால்  மடிசாரும், நீண்ட பின்னலும்,  ஜடைவில்லையுமா, அலங்காரத்தோடு நிற்கும் ஆண்டாளைக் காணோம் :-(  உலோகச்சிலை  மட்டும்தான்  இருக்கு !  விசாரிச்சால்....   வேற ஏற்பாடு நடக்குதாம். அதுவரை கண்ணாடி அலங்காரமெல்லாம் கிடையாதுன்னு பதில்.  பரவாசுதேவர் மட்டும் தேவிகளோடு  வைகுண்டவாசனா உக்கார்ந்துருக்கார்.
சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதிக்குப் போகும் வழியில் இன்னொரு மணல்வெளி இருக்கு.  அங்கே  மணல்வெளி சீனிவாசப்பெருமாள் சந்நிதி,  ஸ்ரீபோஜராமர் சந்நிதி, ஸ்ரீவேணுகோபாலன் சந்நிதி, சமய நூலகம் எல்லாம் இருக்குன்னாலும்   பெரும்பாலும் மூடித்தான் இருக்கும். எந்த சந்நிதி திறந்துருக்கோ அங்கே போய் ஸேவிச்சுக்கணும்.
நம்ம பார்த்தஸாரதி சந்நிதிகூடத் திறந்துருந்தது. தேர்த்தட்டின் மேலே நிற்கும் அர்ஜுனனுக்கு,   திரும்பி உக்கார்ந்து உபதேசிக்கிறார் தேரோட்டி. அந்த பீடத்தை மூடி இருக்கும் திரையை உயர்த்திக் காமிச்சார் பட்டர்.  கீழே   தேர்ச் சக்கரங்கள் இருக்கு!!!!

 காலை வெறும் வயத்தோடே  நடையா இங்கேயும் அங்கேயும் போனதுலே லேசா ஒரு பசி.  இப்ப பிரஸாத ஸ்டாலுக்குப் பக்கம் வந்துருந்தோம். ஒருவேளை  வாசனை... பசியைத் தூண்டி இருக்கலாம்.  ஒரு சக்கரைப் பொங்கல் மட்டும் வாங்கி, நம்மாழ்வார் சந்நிதிக்குப் பக்கம் உக்கார்ந்து  ஷேர் பண்ணிக்கிட்டோம்.

சரி  கிளம்பலாம்னு  ரங்கா கோபுரம் வழியாக வெளியே வர்றோம், கீரை மூட்டை மாதிரி துளசி மூட்டை!
தசாவதார சந்நிதி (கோவில்)  போகணும் இப்போ. போனோம்.  கோவில் திறந்து இருக்கு.  உள்ளே  பத்து மூலவர்களுடன் லக்ஷ்மிநாராயணப்பெருமாள்  உற்சவராக இருக்கார் !


நம்ம திருமங்கை ஆழ்வார் இருக்காரே....  அவர் ரங்கனுக்காக    கோவில் வேலைகளை எல்லாம்  இழுத்துப் போட்டுக்கிட்டு ஏகப்பட்ட சேவை செஞ்சுக்கிட்டு இருந்தார்.  கோவில் வேலைகளுக்கும், தினம் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து வைப்பதற்கும் தேவையான காசு சம்பாதிக்கக் கொள்ளை அடிக்கவும் தயங்காதவர் இவர், இல்லையோ!

இவருடைய பக்தியை மெச்சி , தனக்கு சேவை செய்தவருக்கு ஸேவை சாதிச்சுருக்கார் பெருமாள். அதுவுமெப்படி? தசாவதாரம் உருவங்களைக் காமிச்சுருக்கார். இங்கே இதே இடத்தில் கொள்ளிடக்கரையில்!  அந்தக் காலத்தில் இவ்ளோ வீடுகளும் இத்தனை தெருக்களுமாவா இருந்துருக்கும்?  ஆற்றுக்குப் பக்கத்தில்  ஜிலோன்னு வெற்றிடமாத் தானே இருந்துருக்கணும்!
மஹாவிஷ்ணுவின் ஏகப்பட்ட அவதாரங்களில்  இந்த தசாவதாரம்னு பத்து அவதாரங்கள்தான்  முன்னிலையில் இருக்கு!  இங்கே  அதற்கான கோவிலும்  ஆச்சு. ரொம்பப்  பழமையான கோவில்னுதான் சொல்றாங்க. நம்ம திருமங்கை ஆழ்வாருக்கும் தனியா ஒரு சந்நிதி உண்டு.
அஹோபில மடத்து  ஜீயர் 41 ஆம் பட்டம்  ஸ்ரீவண் சடகோப ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹ யதீந்த்ர மஹாதேசிகன், 44 வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக  யதீந்த்ர மஹாதேசிகன் ஆகியோரின் பிருந்தாவனம் தனிச்சந்நிதியாக  இங்கே இருக்கு!

கல்கி தவிர (இன்னும் அவதாரம் எடுக்கலை பாருங்க!) மற்ற ஒன்பது அவதாரங்களும் ஒன்பது கிரகங்களுக்கு அதிபதியா இருந்து  கிரகதோஷம் போக்குவதாக பட்டர் ஸ்வாமிகள் சொன்னார். ராமன் -  சூரியன், க்ருஷ்ணன் - சந்திரன் இப்படி. சனி  யாருன்னு மட்டும் கேட்டுக்கிட்டேன்.... கூர்மமாம்!  ஆமை போல மெல்லவே வரட்டும். ஆனால்.... முயல் போல  சீக்கிரம் போகப்டாதோ? ஏழரை வருசம்  எடுத்துக்கிட்டா எப்படி?
41 ஆம் பட்டம் ஜீயர் காலத்தில் சம்ரோக்‌ஷணம் நடந்துருக்குன்னு கல்வெட்டு சொல்லுது.  6- 9.1940 !  ஆச்சே 76 வருசம். ....   இன்னொரு கல்வெட்டில் ரெண்டு லக்ஷம் ரூபாய்கள் செலவில் புனருத்தாரணம் செஞ்சதாப் போட்டுருக்கு. வாசக்கதவு அப்பதான் புதுப்பிச்சு இருப்பாங்க போல.
நாங்கள் உள்ளே போய்  வணங்கிட்டுக் கிளம்பினோம்.  நேரா ஹயக்ரீவா பாலாஜி பவன்தான்.  மினி டிஃபன் ரெடியாம்.  எனக்கு அதே ஆகட்டும்! சாம்பார் பக்கெட் சூப்பர்!  நம்ம வீட்டு சுண்டல் வாளியை விடப் பெருசு :-)
 ஒரு  அரைமணி நேரம் ரெஸ்ட் என்ற பெயரில் வலை வீசி, மெயில் பார்த்துட்டு, மகளுக்கு  மெயில் அனுப்பிட்டுக் கிளம்பணும்!

தொடரும்........  :-)