Monday, December 26, 2016

அன்பெனும் மழையிலே....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 110)

I never like mixing  business with pleasure என்றாலும் கூட,  ஒரு நாள், ஒரே ஒருநாள்  மிக்ஸ் பண்ணிக்கிட்டால் தப்பான்னு  கேட்டால்.....    சரி போயிட்டுப் போகுதுன்னு  விட்டுரும்படி ஆகிருது.  அதுக்காக மூலையில் உக்கார்ந்து பிலாக்கணம் வைக்கணுமா?  நோ நோ....    நமக்கான வேற ஒரு முக்கியமான சமாச்சாரத்தை  இன்று வச்சுக்கிட்டால் ஆச்சு.  இன்று அவரவருக்குத் தனிவழி!
நெருங்கிய தோழி வீட்டில் கெட் டுகெதர்.  'பேசாமக்கிளம்பி வாங்க எல்லோரும். சமையல்  நான் செஞ்சுருவேன்'னு  சொல்லிட்டாங்க. அது  சரி இல்லைன்னு வாதாடி,  எதாவது கொண்டு வரோமுன்னு மற்ற தோழிகள்  அடிச்சுச் சொல்லி  அருமையான ஐட்டங்களைக்  கொண்டு வந்துருந்தாங்க. நமக்கேது அடுப்பு? இருக்கவே இருக்கு சுஸ்வாத்:-)
காலையில் இவரை  தொழிலதிபநண்பர் வந்து கூட்டிட்டுப் போயிட்டார். எனக்கு ஒரு ஓலா டாக்ஸி புக் பண்ணி இருந்தோம்.  சரியான நேரத்துக்கு  வந்துருச்சு வண்டி.  ஓட்டுனர் 'நல்ல முகம்'  காட்டினார்.  போற இடத்துக்கு எனக்கு வழி சரியாத் தெரியாதுன்னு முதலிலேயே சொல்லிட்டேன்.  கடைசியில் ஒரு சிக்னலில் நிக்கும்போது  வலமா இடமான்னு கேட்டதுக்கு, யாருக்குத் தெரியும்? வலமே போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன்.  வலம் திரும்பும்போதுதான் நான் போக வேண்டிய கட்டிடம்   நேரெதிரா இருக்குன்னு கண்டுபிடிச்சேன்:-)  அதுக்குள்ளே ஒரு  இருவது முப்பது மீட்டர் வண்டி ஓடிருச்சு.  அப்புறம்  ரிவர்ஸ் எடுத்தே சரியான கட்டிடத்துக்குள்ளே கொண்டு வந்துட்டார். பிரச்சனை இல்லைன்னு  அவரே சொல்லிட்டு மீட்டருக்கான வாடகையையும் வாங்கிக்கிட்டு, சர்வீஸ் நல்லா இருந்தா ஒரு  மெஸேஜ் அனுப்பறீங்களான்னு கேட்டார்.  அதுக்கென்ன?  பின்னூட்டம் அனுப்ப நமக்குத் தெரியாதா என்ன?  அதே போல் ஆச்சு :-)இப்ப எதுக்கு விஸ்தரிச்சுச் சொல்றேன்னா.....  நேத்து  வந்த முறைப்பாளர் மாதிரி இல்லை என்பதற்கு!  மனிதரில் எத்தனை வகை!!!
தோழிகள் வந்து சேர்ந்து, அரட்டைக் கச்சேரி, அப்பப்ப தீனி, சாப்பாடுன்னு நேரம் ஓடியே போச்சு. மெட்ரோவில்  போயிட்டு வரலாமுன்னு நினைச்சது  நடக்கலை.  ஒரு இளம்தோழியின் குழந்தை  பள்ளியில் இருந்து திரும்பிவரும்  நேரமாச்சுன்னதும் அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பினாங்க. அப்புறம் தொடர்ந்த  அரட்டை அடுத்த  ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுருச்சு. எனக்கும் தோழியே ஒரு  ஓலா கேப் புக் பண்ணிக் கொடுத்தாங்க.

கோபால் வந்து சேரும்போது மணி எட்டு.  ராச்சாப்பாட்டுக்கு வெளியே  போகவேணாமுன்னு  இருந்துச்சு. பகல் சாப்பாடு ரெண்டுவித வடைகளுடன் பாயஸம், இன்னபிற வகைகளுமா அமர்க்களமா இருந்ததுன்னு சொல்லி, படங்களை இவருக்குக் காமிச்சு கொஞ்சம் தீ வளர்த்தேன்:-)

ஏற்கெனவே அறையில் இருக்கும் ஃப்ரிட்ஜில்  தயிர் வாங்கி வச்சுருக்கோம். பழங்களும் பாக்கி இருக்கு. போதாதா என்ன?

மறுநாள் பிறந்ததும் காலில் கொஞ்சம் கஞ்சியைக் கொட்டிக்கிட்டாப்லெ ஒரு வேகம் வந்துருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் சென்னையில்.  அதுக்குள்ளே  சந்திக்க வேண்டியவர்களைச் சந்திச்சே ஆகணும்!
கவிதாயினிக்குச் சேரவேண்டிய புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கணும். அவுங்க ஊரில் இல்லை. அதனால் பக்கத்து ஃப்ளாட் தோழி வீட்டில் கொடுத்தால் ஆச்சு. ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமானவங்கதான்!  அங்கே போனால்....   ஹைய்யோ ஹைய்யோ அச்சச்சோ....   தத்தைக் குட்டி!  கொஞ்சநேரம்  கொஞ்சிட்டுத்தான்  கிளம்பினேன்:-)
ரொம்பநாளாக நண்பர்/வாசகர் வரச்சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கார்.  அடுத்தபயணத்தில்னு சொல்லியே ஆறேழு பயணங்களைத் தள்ளிப் போயிருக்கு. இன்றைக்கு ரெண்டாவது வேலையா அங்கேதான்!

 நண்பருக்குப் பகல் 1 மணி  ஷிஃப்ட் என்பதால் காலை நேரம் ஓக்கே!
தகவல் தெரிவிச்சதும்.....  எப்படி வழி,  எங்கே வண்டியை நிறுத்தணும்,  அவர் இருக்கும் தெருவின் அகலம் உட்பட சகலமும்.  கூடவே ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி அங்கே நமக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.  இது  போதாதுன்னு  நம்ம சீனிவாசனிடமும் வழியெல்லாம் விஸ்தரிச்சும் ஆச்சு.
எல்லாம் சொன்னது சொன்னபடியெ!   அனந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்!
ஹைய்யோ.....  என்ன ஒரு அன்பான வரவேற்பு! அவர் மடலில் சொன்னதைப்போல குடும்பமே ஆர்வமாக் காத்துக்கிட்டு இருக்கு!!   அனந்துவின் அம்மா....
சொந்தப் பொண்ணை வரவேற்பதுபோல்  காட்டிய  புன்முறுவலை ஆயுசுக்கும் மறக்க முடியாது! எல்லாத்தையும்விட அடுத்தமுறை வரும்போது நாலைஞ்சுநாள் கூடவே தங்கி, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்குப் போய்வரலாமுன்னு சொன்னது ரொம்பவே பிடிச்சுருந்தது! உடன்பிறந்தான் வீடு கிடைச்சுருச்சு!


மகன் விவேக் படிப்பில் கெட்டி!  பெண் சின்னவள். பள்ளிக்கூடம் போயிருந்தாள்.  மகன் இப்போ ஸி ஏ படிப்புக்குச் சேர்ந்துருக்கார்!
அன்றைக்குத் தை வெள்ளிக்கிழமை!  அதுவும்  தை மாசக் கடைசி வெள்ளி என்பதால் விசேஷ பூஜை எல்லாம் ஸ்பெஷல் நைவேத்தியங்களோடு நடந்து, நமக்கு இனிப்போ இனிப்புதான்:-) கூடவே மஞ்சள்குங்குமம் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கோடு வச்சுக்கொடுக்கும் சம்ப்ரதாயத்தின்படி  ஜாக்கெட் பீஸ்.

நம்முடைய பூனா எபிஸோடில் நமக்கு வாய்த்த நண்பர் குருசாமியை நினைவுபடுத்தும் நண்பரும் குடும்பமும்.....  இந்த அன்பை எழுத்தில் சொல்ல முடியாது.... உணரத்தான் முடியும்!
பக்கத்துத் தெருவில் நிறுத்தியிருந்த வண்டிவரை கொண்டுவிட்ட  தம்பித் தம்பதிகளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பி தங்கக்கூட்டில் இருக்கும் தகப்பனைப் பார்க்கப் போனோம்!

தொடரும்..........  :-)


Friday, December 23, 2016

கணக்கு எல்லாம் சரியா எழுதி வச்சுட்டுத்தான் அப்பல்லோ போயிருக்கார்......... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 109)

ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறோமுன்னு நாமே நினைச்சு, நாமே போட்டு வைக்கும் கணக்கு சிலசமயம் தப்பாப் போயிருதுல்லே! இந்தக் கோவில் பயணத்தில் இருந்து  ஃபிப்ரவரி 9 ஆம் தேதிக்கு சென்னை திரும்புவதாகத்தான் நம்ம திட்டம்.  அதேபோலத்தான் திரும்பினோம். ஆனால்..... இது எப்படி பேக்ஃபயர் ஆச்சுன்னா....
ஒரு சில நகைகள் செய்ய நம்ம சீனிவாச ஆசாரியிடம் (தி நகர் மங்கேஷ் தெரு. இவரைப்பற்றி ஏற்கெனவே பலமுறை எழுதி இருக்கேன் ) சொல்லி ஆர்டர், டிஸைன் எல்லாம் கொடுத்துட்டு,  தெற்கத்திப் பயணம் முடிஞ்சு வந்ததும் வாங்கிக்கலாம்னு பக்கா ப்ளான்.  என்ன ஒன்னுன்னால்....  சொன்னால் சொன்ன தேதிக்கு வேலையை முடிக்காம நாளைக்கு வாங்க, மறுநாளைக்கு வாங்கன்னு இழுத்தடிக்கும் தொழிலாளிகள் பட்டியலில் தையல்காரரும், நகை செய்யும் ஆசாரிமாரும் ஏற்கெனவே நம் முன்னோர்களால் சேர்க்கப்பட்டுருப்பதால்....  அதையே நானும்  ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். 'மூத்தோர் சொல் கேட்காதவள்' என்ற அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க :-)

ஓ... அதனாலே.....

ஒருநாள் முன்னாலே வர்றதாச் சொல்லலாமேன்னு  8 ஆம் தேதி வந்துருவோம். வந்தவுடன் நேராக் கடைக்கு வந்து நகையை வாங்கிப்போமுன்னு சொல்லி வச்சேன்.  இன்றைக்குத் தேதி 10. காலையில் ஒரு ஒன்பது மணிக்கு  செல்லில் ஃபோன் செஞ்சு   கடை திறந்தாச்சான்னு கேட்டால்......  பதில் வருது ஆஸ்பத்திரியில் இருந்து!  அதே அப்பல்லோதான் !!!!
நம்ம சீனிவாச ஆசாரிக்கு ஆஞ்சியோ  நடந்துருக்கு மொதநாள்.   ஆர்கனைஸ்டு ஸர்ஜரிதான். நாம் எட்டாம்தேதி வர்றோமுன்னு சொல்லி இருந்ததால்.... இவர் ஒன்பதுக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாராம்.

இப்ப எப்படி இருக்கார்னு விசாரிச்சதுக்கு, பரவாயில்லை.  இன்னும்  ரெண்டு மூணு நாள் அங்கே வச்சுருந்து பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு சொன்ன பாபு,  ஒரு ரெண்டு மணிக்குக் கடையாண்டை வந்துருங்க. நான் வந்து  கணக்கு செட்டில் பண்றேன்னார்.  சரி. அப்படியே ஆகட்டும்.....

இன்றைக்கு நமக்கு வண்டி  இல்லை. நம்ம சீனிவாசனுக்கு லீவ் கொடுத்துருந்தோம்.  பத்துப்பனிரெண்டு நாளா அவரும்தானே வீட்டை விட்டுட்டு நம்மோடு சுத்திக்கிட்டு இருந்தார்.

இன்றைக்கு ஒரு நாள் ஆட்டோ வச்சுக்கிட்டால் ஆச்சுன்னு  கிளம்பினோம். கலெக்‌ஷன் டே!  டெய்லர் கடைக்குப்போய்  தைச்ச துணிகள் வாங்கறது,  நம்மவர்  கேரளா  ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ்லே போய் முடிவெட்டிக்கிறதுன்னு  சம்ப்ரதாயங்கள் இருக்கே!  ஆனால் மொதல்லே கோவிலுக்குப் போகணும். ஜிஎன் ரோடிலே இருக்கும் ஜெயின் கோவில்தான். தொட்டடுத்தாப்லே நம்ம பேங்க் இருக்கு என்பதால்  போகும்போதும் வரும்போதும்  காரில் இருந்தே ஒரு கும்பிடு.  சென்னைப் பயணத்தில் ஒரு முறையாவது  இங்கே   போய் வரணும் என்பதும் ஒரு சம்ப்ரதாயம்:-)
கோவிலில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு!  பெரிய வெள்ளை யானைகள் வரவேற்க, உள்ளே போய்  சாந்திநாதரைக் கும்பிட்டுக்கிட்டு, அப்படியே பத்மாவதி தாயாரையும் வலம் வந்தோம். எந்த ஆரவாரமும் இல்லாம அமைதியா உக்கார்ந்து தியானம் செய்ய இதைவிட அருமையான இடம் இருக்கான்னு  தெரியலை !
செய்ய வேண்டிய சடங்குகளை ஒவ்வொன்னாச் செஞ்சுக்கிட்டே பாண்டிபஸார் க்ளிக்ஸ் :-)  பாத்திரக்கடையில் அம்மி, நல்லாத்தான் இருக்கு.





நடந்துக்கிட்டே குமார் கடை வாசலுக்குப் போயிருந்தோம். எப்பக்கா வந்தீங்கன்னு ஆரவாரமான வரவேற்பு :-)  கடையை விரிவுபடுத்தி  இப்போ சொந்த வியாபாரம்!  நல்லா இருக்கட்டும்!   மகளுக்கு  சில அலங்கார நகைகள். ( எல்லாம் போதும். இந்த ஊருக்கு இதுவே அதிகம்! மேலும் இங்கத்துக் காலநிலைக்குக் கருக்கறதில்லை!)சும்மா சொல்லக்கூடாது....  சில நகைகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு!  முக்காலே மூணுவீசம் நார்த் இண்டியன் ஸ்டைல்ஸ் !!!  டீ குடிச்சுட்டுத்தான் போகணும்னு கண்டிப்பாச் சொல்லிட்டதால் ஒரு டீயும் ஆச்சு. குட்டியூண்டு கப்பில் டீ விளம்பல் கூட நல்லாத்தான் இருக்கு!

 அங்கிருந்தே   துணிகள் தைச்சாச்சான்னு  செல் விசாரிப்பு.
"இன்னும் ஒரு மணி நேரத்துலே   வாங்க மேடம். இப்போதான் அயர்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க"

ஹாஹா.... நான் சொல்லலே....  ரெண்டு நாளைக்கு முன்னாலே ரெடியாகி இருக்கவேண்டியதுன்னு...........

அறைக்கு வந்துட்டோம். ச்சும்மாச்சும்மா என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு? :-) அதானே.... இன்னும் கொஞ்சம் நேரம் கடைவீதியில் இருந்தால் என்னத்தையெல்லாம் வாங்கிருவாளோன்னு ஒரு பயம் மனுசருக்கு   உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யுது  :-)

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்கேயும் போக வேணாம்.  அடுத்தாப்லே இருக்கும் சுஸ்வாதில் ஒரு எலுமிச்சம்பழ சேவையும்,  பழமுதிர்ச்சோலையில் பழங்களும், தயிரும்  வாங்கினால் ஆச்சு.

ரெண்டு மணி போல ஒரு ஆட்டோ பிடிச்சு முதலில் தையல் கடை கலெக்‌ஷன் முடிச்சுட்டு, அடுத்து  நகைக்கடைன்னு போனால்..... கடை மூடிக்கிடக்கு. நல்லவேளையா செல்ஃபோன்னு ஒரு சமாச்சாரம் கையிலே இருக்கே. ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டாராம். வந்துக்கிட்டே இருக்கேன்னார் பாபு.
அதுக்குள்ளே அந்தக் கடையில் வேலைசெய்பவர் ஒருவர் (எல்லாம் சொந்தக் காரர்கள்தான்)வந்து, எதுத்த கடையில் இருந்து ரெண்டு ப்ளாஸ்டிக் ஸ்டூல் கொண்டுவந்து கடைக்கு எதுத்தாப்லே நிழல் இருக்கும் இடத்தில்  போட்டு உபசரிச்சார்.

ஒரு  இருபது நிமிட் போல காத்திருப்பு. நம்ம சீனிவாச ஆசாரி மகள், கடைச்சாவியோடு வந்து சேர்ந்தாங்க. அதே சமயம் பாபுவும் வந்து சேர்ந்தார். கடை திறந்து எல்லோருமா  அங்கே போனோம்.

ஆர்டர் செஞ்சவைகளை நல்லபடியாச் செஞ்சு வச்சு, அதுக்கான கணக்கெல்லாம்  கச்சிதமா எழுதி வச்சுட்டுத்தான் ஆசாரி, அப்பல்லோ போயிருந்தார்.  எல்லாம் சரிபார்த்தபின் நாம்தான் பாக்கி வச்சுருக்கோம். அதைத் தங்கமாகவோ இல்லை காசாகவோ திருப்பித் தரலாம்.  காசுன்னா இவ்ளோ, தங்கமுன்னா இவ்ளோன்னும் எழுதிவச்சுட்டுப் போயிருக்கார். கணக்கு சரியா இருந்தாக் குழப்பமே வராதில்லையா!

அப்பதான்  சட்னு நம்மவர்  நான் எதிர்பாராத காரியம் ஒன்னு செஞ்சார். நான் திகைச்சுப் போயிட்டேன். 'தங்கமாத் தரோம்'னுட்டுக் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டைக்  கழட்டி பாபு கிட்டே கொடுத்துட்டார். வேணாம் வேணாமுன்னு  நான் சொன்னதைக் கேக்கவே இல்லை. ப்ச்...   ஆம்புளைங்க 100 கிராம் தங்கத்துக்கு மேலே போடக்கூடாதுன்ற சட்டம் வரப்போகுதுன்னு இவருக்கு  எப்படித்தான் தெரிஞ்சதோ?

அதை எடை போட்டு, அவுங்களுக்குச் சேரவேண்டிய தங்கத்தை வெட்டி எடுத்துக்கிட்டு மீதியை  நம்மகிட்டே கொடுத்துட்டாங்க. சரி. இருக்கட்டும் அடுத்தமுறை  அதைக்கொண்டு எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம்:-)
நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் என்பதால் ஒரு பதக்கம் செய்யச் சொல்லி இருந்தேன்.  நல்லாவே செஞ்சுருக்காங்கன்னு தோணுது :-)


இப்பெல்லாம் அநேகமா எல்லோருமே  நகைக்கடையில்  ரெடிமேடா செஞ்சு வச்சுருக்கும் நகைகளை வாங்கிக்கறோம்.  இப்படியே போனால் இந்தக் கலை  என்ன ஆகுமோன்னு எனக்கு உள்ளுக்குள் ஒரு கவலை.

  'அப்படியெல்லாம் ஆகாது. கையால மட்டுமே செய்யப்பட வேண்டிய நகைகள் இருக்கே. முக்கியமா திருமாங்கல்யம்'னு நெருங்கிய தோழி சொன்னாங்க!   ஆனாலும்  அதுவுமே  ரெடிமேடாக் கிடைக்குதே..........  அவரவர் சடங்கு முறைகள் அனுசரிச்சு....... இல்லையோ! 

இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு வந்துட்டு, கொஞ்சநேரம் ஓய்வு. பாக்கிங் கொஞ்சம் செஞ்சோம். அஞ்சு மணி ஆனதும் மச்சினர் வீட்டுக்குப் போகணும். கீழே  நம்ம லோடஸில் டாக்ஸி ஏற்பாடு செய்யறோமுன்னு NTL க்கு  சொல்லிட்டாங்க. ரெகுலரா அந்த சர்வீஸ்தான் பயன்படுத்தறாங்களாம். சொன்ன நேரத்துக்கு வராமல் அரைமணி நேரம் லேட்டா வந்து சேர்ந்தது வண்டி. இடம் தெரியாம சுத்துனாராம் ட்ரைவர். இதுவா ரெகுலர்  சர்வீஸ்?
அதுலே வேளச்சேரிக்குப் போறோம். ட்ரைவர் கொஞ்சம்  முறைச்சுக்கிட்டு ஓட்டுனார். பணிவு காட்டவேண்டியதில்லை. ஆனா... பயணிகளிடம்  முறைப்பு என்ன வேண்டிக்கிடக்கு? நம்ம சீனிவாசன் இல்லாதது  கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.  அட்ரெஸ் சொல்லி, கூடவே  லெஃப்ட், ரைட்டு வழியும் சொல்லிக்கிட்டே வந்தார் நம்மவர். கடைசிவரை முறைப்பு மாறவே இல்லை....  :-(

மச்சினர் குடும்பத்துடன்  பேசிச்சிரிச்சு அங்கேயே  ராச்சாப்பாட்டையும் (தோசை) முடிச்சுக்கிட்டு, அவுங்க பரிந்துரையின் பேரில் ஓலா டாக்ஸியில் அறைக்கு வந்தோம். சர்வீஸ் ஓக்கே! மறுநாளைக்கும் சீனிவாசனுக்கு லீவு கொடுத்தாச்.  ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் வேலை .............  காரணம்.
நாளைக்கும் டாக்ஸி எடுத்தால் ஆச்சு!

தொடரும்........  :-)

Wednesday, December 21, 2016

உன்னைத் தாலி கட்ட விடமாட்டேன்....(இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

திருக்கோவிலூரில் இருந்து கிளம்பி போனவழியிலேயே  இருபத்தியஞ்சு கிமீ தூரம் போய்  திருவெண்ணெய்நல்லூர் 600 மீட்டர் என்ற போர்டு பார்த்ததும் ரைட் எடுத்து, ஊருக்குள் போனோம்.  வர்றவழியில்  மினிப் பாலைவனம் மாதிரி மணல் இருக்கும் பகுதியில் கொஞ்சூண்டு தண்ணீர் சின்ன வாய்க்காலாட்டம் தெரிஞ்சது. இந்தப் பாலைவனம்தான்  பெண்ணை ஆறாம்!  தென்பெண்ணை !

காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ்கண்டதோர் வைகை பொருநை நதி....  மேவிய ஆறு பல ஓடுன காலம் எல்லாம் போச்சு. வறண்டு போய்க்கிடக்கும் ஆற்றைப் பார்த்தால் நமக்குத்தான் கண்ணில் கங்கை....
அஞ்சு நிலை இருக்கும் ராஜகோபுரம் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள் போறோம். வெளிப்பிரகாரம் ஹோன்னு கிடக்கு. மொத்தக் கோவிலும் பத்து ஏக்கர் நிலத்தில் கட்டி இருக்காங்க. நமக்கு வலது பக்கம் நிறையத் தூண்களோடு   ஒரு பெரிய மண்டபம். ஓரத்தில் கம்பித்தடுப்பு போட்டு சின்ன கேட். முகப்பில் சின்ன மாடம். அதுலே நடுவாந்தரமா மூணு பேர் உக்கார்ந்திருக்க பக்கத்துக்கொன்னா ரெண்டு பேர் நிக்கறாங்க. ஒருத்தர் கிழவர் இன்னொருத்தர் குமரர்!  ரெண்டுபக்கமும் ஊர்சனம் கொஞ்சம் பேர்!


அது ஒன்னுமில்லை.... பஞ்சாயத்து நடக்குது.  வாதியும் பிரதிவாதியுமா முன்னால் நிக்கறாங்க.  கிழவனார்  முகத்தில் தாடியும் கையில் தடியும், கழுத்து நிறைய ருத்ராட்சமாலையுமா நிக்க,  குமரன் மாலையும் கழுத்துமா நிக்கறார்.  கல்யாணமணவறையில் இருந்து எழுப்பிக் கூட்டிட்டு வந்தால்.....  மாலையைக் கழட்ட ஏது நேரம்?
இவர் பேர் நம்பியாரூரன். செல்லமா ஆரூரன்னு கூப்புடுவாங்க. பொடியன் பார்க்க ரொம்ப அழகாவும்,  புத்திசாலியாவும் இருந்ததால்,  அந்த ஊர் ராஜா பார்த்துட்டு, அரண்மனைக்குக் கூட்டிப்போய்  எல்லாக் கலைகளையும் கத்துக்கொடுக்க ஏற்பாடு செஞ்சுருக்கார்.  ராஜா வூட்டுப்பிள்ளை மாதிரி இருந்த  ஆரூரனுக்குக் கல்யாண வயசு வந்துச்சு. பெத்த தகப்பன் ஒரு பொண்ணு பார்த்து, கல்யாண ஏற்பாடு செஞ்சு  அன்றைக்குத்தான் கல்யாணம்.   சாஸ்த்திரப்படி மாப்பிள்ளை செய்ய வேண்டிய பூஜைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது  அந்த ருத்ராட்சமாலைக் கிழவனார் விடுவிடுன்னு கல்யாண மண்டபத்துக்குள் வந்தார். கையில் ஒரு ஓலை!
புதுசா வந்தவர் கிட்டே என்ன ஏதுன்னு விசாரிச்சால்.....  இந்தக் கல்யாணப்பையனுக்கும் எனக்கும் ஒரு வழக்கு இருக்கு.  அதைத் தீர்த்தபிறகுதான்  தாலி கட்ட விடுவேன்னு  சொல்ல,  'ஐயோ... இந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது. முன்னேபின்னே பார்த்ததே இல்லைன்னு மாப்பிள்ளை அலற .... அங்கேயே ஒரு  குழப்பம். நல்லவேளை... கல்யாணப்பொண்ணு இன்னும் மணவறைக்கு வரலை.
சட்டுப்புட்டுன்னு  விசாரிச்சுட்டுக் கிழவரை வெளியே அனுப்பலாமுன்னு பார்த்தால் எங்கே?  'என்ன வழக்குன்னு சொல்லும்'னு கேக்க,  'நீ எனக்கு அடிமை.  எஜமானரின் அனுமதி இல்லாம அடிமைகள் கல்யாணம் காட்சி சொத்து சுகம்னு ஒன்னையும் அனுபவிக்க முடியாது.  வந்து எனக்கு சேவகம் செய்.  கல்யாணமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்'னு  சொல்றார் கிழவர்.

"வயசான கிழவருன்னு மரியாதை கொடுத்தா... இப்படி அடிமை கிடிமைன்னு  ஒளறுனா எப்படி? பைத்தியமா உமக்கு?  என்ன அத்தாட்சி இருக்கு?"

'இருக்கே!  உன் முப்பாட்டன் எழுதிக்கொடுத்த அடிமைசாஸனம். தானும் தன் பரம்பரையும் என் அடிமைகள் னு எழுதி இருக்கு பாரு' ன்னு ஓலைக் கையை நீட்டுனதும், சட்னு அதைப் பிடுங்கி அங்கே ஹோமம் செய்ய வளர்த்துக்கிட்டு  இருந்த தீயில் போட்டுட்டார் மாப்பிள்ளை.

"இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?"

"யோவ் மாப்பிள்ளை....  நான் என்ன அவ்வளவுக்கு அறிவில்லாதவனா என்ன?  இப்படிநடக்குமுன்னு தெரிஞ்சுதான் ஒரிஜினல் ஓலையைக்  கொண்டு வராம அதோட ஜெராக்ஸ் காபியைக் கொண்டுவந்தேன்!  இப்ப என்ன செய்யப்போறே? இப்ப என்ன செய்யப்போறே?"

'எனக்கு நியாயம் கிடைக்காமத் தாலி கட்ட விடமாட்டேன்'னு  அங்கே தர்ணா செய்ய ஆரம்பிச்ச கிழவர்கிட்டே, 'பஞ்சாயத்துலே தீர்த்துக்கலாம். அதுக்கு ஒரிஜினல் ஓலை வேணுமே' ன்னதுக்கு, ' அதை வீட்டுலே வச்சுருக்கேன். வாங்க எங்க ஊருக்கு' ன்னு மாப்பிள்ளை கழுத்துலே துண்டைப்  போட்டு  இழுத்துக்கிட்டுப் போறார்.   லபோ திபோன்னு ஊர்சனம் பின்னாலேயே ஓடுது.
எனக்கு அந்தக் கல்யாணப்பொண்ணை நினைச்சால்தான் ஐயோன்னு இருக்கு. தாலி கட்டும் நேரம் கல்யாணம் நின்னு போச்சுன்னா..... எப்படி இருக்கும்? ப்ச்.... பாவம்....

திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அங்கே இருக்கும் மண்டபத்துலே பஞ்சாயத்தார்கள் வந்து உக்கார்ந்ததும் விசாரணை ஆரம்பிக்குது. ஒரிஜினல் டாக்குமென்ட் எங்கேன்னு கேட்டதும் இதோ கொண்டு வரேன்னு  கிழவர் கோவிலுக்குள் போறார். சனம் பின்னாலேயே போகுது.
கருவறைவரை போனவர், அங்கே வாசலில் செருப்பைக் கழட்டிட்டு உள்ளே நுழையறார். அம்புட்டுதான்........  காணாமப் போயிட்டார்! ஐயோ இதென்ன மாயமுன்னு  எல்லோரும் திகைச்சுப்போய் நிக்கும்போது   மேலே விமானத்தில் ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியுமா காட்சி கொடுக்கறாங்க.  கிழவனா வந்து, தன்னுடைய கல்யாணத்தை தடை செஞ்சது  சிவன்னு தெரிஞ்சுபோய் அதிர்ச்சியில் நிற்கும் ஆரூரனைப்  பார்த்து, 'நீ அழகாக இருக்கிறாய். எனக்கு பயமாக இல்லை'ன்னு சொல்லாம, 'சுந்தரரே.... என்னைப் பற்றிப் பாடும்' என்றாராம்!

(அப்ப இருந்துதான் நம்பியாரூரனுக்கு சுந்தரர் என்ற பெயர் அமைஞ்சது!)

நான் என்னன்னு பாடுவேன்னு  சுந்தரர் தயங்க, அதான் என்னை பைத்தியமுன்னு சொல்லிட்டயே!  பித்தனாட்டமா இருக்கேன்? 'பித்தா' ன்னே ஆரம்பிச்சுப் பாடுன்னதும்.......

'பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்அருள்துறையுள் 
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே'   
என்று முதல் பாட்டை எடுத்துவிட்டார்!


வைத்தாய் பெண்ணைத் தென்பால் என்ற வரிக்கு............  பெண்ணை ஏன்  தெற்குப் பக்கம் வைக்கணும்னு மக்குப்போல நினைச்சுருக்கேன். அதான் ஏற்கெனவே  உமையவளுக்கு  இடப்பக்கம் கொடுத்தாச்சே....

அப்புறம்தான் இந்தப் பயணத்தில் புரிஞ்சது... அந்தப் பெண்ணை.... இந்தப் பெண்ணை ஆறுன்னு!  ஆத்துக்குத் தென்பக்கம் இருக்கு திருவெண்ணை நல்லூர்! 
அசுரனோடு  போர் செஞ்சு அவனை வதம் செஞ்சதும், சக்தியின் முகம் கோபத்தால் விகாரமாகி இருந்துச்சாம். அப்போ.... திரும்ப சாந்த  குணமும் முகமும் கிடைக்கணுமுன்னு  வெண்ணையாலேயே கோட்டை ஒன்னு கட்டி அதுக்குள்ளே இருந்து தவம் செஞ்சு அருள் உருவைத் திரும்ப அடைஞ்ச இடமாம் இது. அதுதான் வெண்ணெய்நல்லூருக்கான பெயர்க் காரணம்!
இதுக்கு இன்னொரு வெர்ஷனும் இருக்கு! பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகாலவிஷத்தை சிவன் விழுங்கிட்டது நினைவிருக்கோ? அப்ப அந்த நஞ்சு ரொம்பவும் படுத்தாமல் இருக்க பசுவெண்ணையால் கோட்டை கட்டி, அதில் பஞ்சாக்னி வளர்த்து  தவம் செஞ்சாங்களாம் பார்வதி!  அந்த இடம் இதுதான். அதான் இந்தப்பெயர்ன்னு............  கோவில்களில் கதைக்கா பஞ்சம்?

இப்படி  நடக்கவிருந்தக் கல்யாணத்தை நிறுத்தி  சுந்தரரை ஆட்கொண்ட சிவன், அப்புறம் எப்படி  சுந்தரரின் காதலுக்காகத் தூது போனார்?  வேணுமா எனக்கு இந்த மண்டைக் குடைச்சல்? எல்லாத்துக்கும் கதை ஒன்னு இருக்கே!  வாங்க ஃப்ளாஷ்பேக் இதோ:-)

இந்த ஆரூரன் என்னும் சுந்தரர்,  கையிலாயத்துலே சிவனுக்கு அணுக்கத் தொண்டனா இருந்தவர். அப்ப இவர் பெயர் ஆலாலசுந்தரர்.  தினமும்  நந்தவனத்தில் போய் பூக்களைப் பறித்துவந்து  சிவபூஜைக்கு எல்லாம் ரெடியாக்க வேண்டியது இவருடைய ட்யூட்டி.
ஒருநாள் நந்தவனத்துக்குப் பூப்பறிக்கப் போறார். அன்றைக்குன்னு பார்த்து அங்கே பார்வதியின் சேடிகள் ரெண்டுபேர் (கமலினி,  அநிந்திதை என்ற பெயர்)அதே நந்தவனத்துக்கு  வர்றாங்க. தினமும் வெவ்வேற  நேரத்துலே வந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு அன்றைக்கு டைமிங் தவறிப்போயிருச்சு போல !

ரெண்டு சைடுலேயும் கண்டதும் காதல் ஆகி இருக்கு! காதல் வந்தவுடன் முகத்தில் ஜொலிப்பு வந்துருக்குமோ  என்னவோ....   சிவன் கண்டுபிடிச்சுட்டார்!  பூலோகத்தில் போய் பிறந்து காதல் நிறைவேறட்டுமுன்னு நேரா பாரதநாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வச்சுட்டார். திருநாவலூரில் பிறந்து நம்பியாரூரன் என்ற பெயர் கிடைச்சது அப்பதான்! குறிப்பிட்ட காலத்துக்குப் பின் திரும்பவும் கைலாயத்துக்குக் கூப்பிட்டுக்கற மாதிரி  ஒரு அக்ரீமெண்ட் போட்டாச்சு.


அவருக்குக் கல்யாணம் பண்ணும் சமயத்தில் நடந்த கலாட்டாதான்  மேலே நீங்க வாசிச்ச வழக்காடுமன்ற சம்பவங்கள். அதுக்குப்பின்?


திருவாரூரில்  இருக்கும் பரவையார் என்ற பெண்ணைப் பார்த்ததும் சுந்தரருக்குக் காதல் வந்துருச்சு. ஆசையில் ஓடிப்போய்  நண்பர் மொதக்கொண்டு தன்னுடைய எல்லாமுமாக இருக்கும் சிவபெருமானிடம் போய்ச் சொல்லி அவர் உதவியால் அந்தப் பரவையைக் கல்யாணம் முடிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கும் சமயம் இன்னொரு ஊரில் இன்னொரு பொண்ணைப் பார்த்ததும் இன்னொருமுறை காதல் வந்துருச்சு.

 அந்தப்பொண் பெயர் சங்கிலியார்.  அந்தக் கல்யாணமும்  நடந்தது.  விவரம் முதல் மனையாளுக்குத் தெரிஞ்சதும்..... அந்தம்மா மனம் நொந்துட்டாங்க. அவுங்களை சமாதானப்படுத்த  மீண்டும் நண்பரின் உதவி கேட்க, சிவனும் தூது போய் சமாதானம் செஞ்சு வைக்கிறார்.

மொதல்மொதலில் நிச்சயமான கல்யாணத்தை நடக்கவிடாமல் தடுத்தவர் இப்படி  வேற ரெண்டு கல்யாணத்துக்கு எப்படித் துணை போயிருக்கார் பாருங்க!  ஏன்னா  இந்த பரவையும் சங்கிலியும்தான் கைலாயத்தில் பார்வதியின் சேடிகளா இருந்த  கமலினியும், அநிந்தையுமாம்!  எல்லாம் முன் ஜென்ம வாசனை.....


இவ்வளவும் நடந்து ரெண்டு மனைவியருடன் வாழ்ந்து இறைவனைப் பாடி ஊர் ஊராப் போய்க்கிட்டு இருந்த சுந்தரமூர்த்தி நாயனார்,  தன்னுடைய  பதினெட்டாவது  வயசுலேயே.... இறைவனால் திரும்பக் கைலாயத்துக்கே போயிட்டார். வெள்ளையானையை அனுப்பி,  கூட்டிட்டு  வரச்சொல்லிட்டாராம்!  எல்லாம் சிவனின் திருவிளையாடல்! He was just  18  !!!     :-(  

 
இன்னும்  இவர் ரொம்பநாள் பூலோகத்தில் இருந்தால்....   காதல்தூது போயே தன்னுடைய கால்கள் தேய்ஞ்சுருமுன்னு நினைச்சுக்கிட்டாரோ நண்பர் சிவன்? சட்னு கூப்புட்டுக்கிட்டார், பாருங்களேன்!  மனைவியரும் கர்ம வினை முடிஞ்சு  பார்வதி தேவிகிட்டேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம்!
சுந்தரர், இறைவனை நினைச்சு முப்பத்தியொன்னாயிரம் பாடல்கள் பாடி இருக்காராம். அதுலே செல் அரிச்சது போக மீதிதான் நமக்குக் கிடைச்சுருக்கு.  இது ஒரு தனிக்கதை. அப்பாலிக்காப் பார்க்கலாம்.

இப்பவும் எனக்கு அந்த  மொதப்பொண்ணை நினைச்சால் மனவருத்தம்தான். அவுங்க,  தன் கல்யாணம் நின்னுபோன பிறகும் கூட இவரையே நினைச்சு வேற யாரையும் கட்டாம துறவிபோல வாழ்ந்து..........  போயே போயிட்டாங்க. ப்ச்.... 

கோவிலுக்குள்ளே நுழைஞ்சவ, மண்டபத்துக்கிட்டேயே நின்னு  கதை சொல்லப்போய் ரொம்பவே நீண்டு போயிருச்சு. .............  வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.

பலிபீடம், கொடிமரம் சேவிக்கறோம். தொட்டடுத்தாப்லே புள்ளையார்! (பெருமாள் கோவிலில் இங்கே பெரிய திருவடி இருப்பார் பாருங்க அதே போல!) கலிதீர்த்த கணபதி இவர்.
கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவர் லிங்க வடிவில்! அருட்துறைன்னு  இந்த ஊருக்கு ஒரு பெயர் இருந்துருக்கு. அந்தப்படி  அருள் செய்யும் ஈஸ்வரர்! கிருபை புரிகின்றவர்!

மங்களாம்பிகை என்ற பெயரில் அம்மன் தனிச்சந்நிதியில் தனிக் கோபுரவாசலுடன்! சங்கநிதி, பதுமநிதி, ஸ்ரீசக்கரம் அம்மனுக்கருகில்! நந்தி வாகனத்துக்கு பதில் சிம்மவாஹனம் சந்நிதிக்கு முன்னால் இருக்கு!


பெரிய மண்டபங்களும், பிள்ளையார் முருகன் சந்நிதிகளுடனும்  பெரிய கோவிலாத்தான்  இருக்கு. பத்து ஏக்கர் விஸ்தீரணம் ஆச்சே! சுந்தரருக்கும்  ஒரு தனிச்சந்நிதி. கையில் ஒரு ஓலையை பிடிச்சபடி இருக்கார்:-)
இந்தத் தனிச்சந்நிதிப் பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார் என்று கேள்வி. கோவிலில் பொள்ளாப்பிள்ளையார்னு எழுதி வச்சுருக்காங்க.  சுயம்புவோ? உளியினால் பொள்ளாத.....  
பொல்லாப்பிள்ளையாருக்குத் தனிக்  கதை இருக்கு. பொல்லாத குறும்பு குணம் கொண்டவருக்கான செல்லப்பெயர். அர்ச்சகர், தனக்கு உடம்பு சரி இல்லைன்னு  நைவேத்யத்துடன் தன் மகனை புள்ளையார் பூஜை முடிச்சுவர அனுப்பறார். சின்னக்குழந்தை, சாமி உண்மையாவே சாப்பிடுமுன்னு நினைச்சு  நைவேத்யத்தை சாமிகிட்டே வச்சுட்டு, தின்னு தின்னுன்னு வற்புறுத்துனதும்  குழந்தைமனம் நோகக்கூடாதேன்னு  புள்ளையார் சாப்பிட்டார். பொல்லாத பிள்ளையார்:-)

வெறும் பாத்திரத்தோடு வீட்டுக்குப்போன குழந்தைப்பையன், புள்ளையார் சாப்பிட்டுட்டார்னு சொல்ல .........  ஊரெல்லாம்  புரளியாயிருச்சு. 

(கொஞ்ச வருசத்துக்குமுன்னே புள்ளையார் பால்குடிச்ச கலாட்டாவை நினைச்சுக்குங்க)

சமாச்சாரம் கேள்விப்பட்ட, உள்ளுர் அரசர்  புள்ளையார் சாப்பிடறதுக்காக  விதவிதமான பலகாரங்கள் செஞ்சு  பத்து காத தூரத்துக்கு  வரிசை வச்சுட்டார்!  குழந்தைப்பையனை, பொய்காரன் ஆக்க விரும்பாத புள்ளையார், அத்தனை சாப்பாட்டு வகைகளையும் நிமிஷத்துலே கபளீகரம் செஞ்சுட்டார்னு  ஒரு கதை!  பொல்லாத பிள்ளையார்  :-)
கோஷ்டத்தில் விஷ்ணு, பிட்சாண்டவர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, துர்கைன்னு  சிவன் கோவில்களின் வழக்கம்போல்  இருக்கு. சண்டிகேஸ்வரர் சந்நிதி அருமை!  வாகனமண்டபங்களில்  வரிசையா வாகனங்களை நிறுத்தி  பாதுகாப்பா வச்சுருக்காங்க.
கோவில் படு சுத்தம்!  உள்பிரகாரத்தில் துளிக் குப்பை இல்லாமல் பார்க்கவே அருமை!
கோவிலின் தலவிருட்சம் மூங்கில். அதனால்  மூலவருக்கு வேணுபுரீஸ்வரர் என்ற பெயரும் இருக்கு!

நம்ம அருணகிரி நாதருக்கு, மயில்வாகனத்தில் முருகன் தரிசனம் கொடுத்தது இங்கேதானாம்!  திருப்புகழில் இந்த சம்பவம் பற்றிப் பாடி இருக்காராம்.

இங்கே இருக்கும் நந்தீஸ்வரர் அதிக சக்தி உள்ளவர் என்பதால் பிரதோஷம் ரொம்பவே விசேஷமாம்!

இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம் என்ற ஆசை இருந்தாலும்....  ரொம்ப இருட்டுமுன்   விழுப்புரம் போய் சென்னை ஹைவே பிடிச்சுடணும் என்பதால் கிளம்பிட்டோம்.

ராத்திரி ஒன்பதே காலுக்கு லோட்டஸ் வந்து சேர்ந்தாச். ரூம் சர்வீஸில் ஒரு தோசையுடன்  இந்த நாள் முடிஞ்சது!

தொடரும்..........  :-)

படங்களை இங்கே தனி ஆல்பத்தில் பார்க்கலாம் :-)