Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Monday, September 29, 2008

ஆரம்பிச்சுட்டாங்கையா....ஆரம்பிச்சுட்டாங்க.

நியூஸியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் இதுதான். பகல்நேர சேமிப்பு. என்னத்தை சேமிச்சு........ எங்கேன்னு சேர்த்துவச்சு......


ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிச்சுக்கிட்டே வந்து இப்ப வருசத்துக்கு 27 வாரம் (பாதி வருசத்துக்கும் மேலே) சேமிப்பாம்.
கடிகாரத்தையெல்லாம் ஒரு மணி நேரம் முன்னோக்கி வச்சுரணும். இப்ப உண்மையில் ஏழு மணியா?.... அப்ப இனிமேல் எட்டு.

யோவ்...... கடிகாரத்தை திருப்பிட்டா எல்லாம் அப்படியே மந்திரம் போட்டாப்புலே மாறிருமா? காலையில் காப்பித்தண்ணிக்குப் பரவாயில்லே... குடிச்சுவச்சுருவோம். மத்தபடி காலை உணவு வழக்கத்தைவிட ஒரு மணி முன்னாலே திங்கணுமுன்னா....... அதுக்கு வயிறு ரெடியா இருக்கவேணாமா? தொலையட்டும், ரெண்டு ஸ்லைஸ்க்குப் பதிலா ஒரு ரொட்டித் துண்டு. பகல் சாப்பாட்டுலேதான் இருக்கு........... 11 மணிக்குப் ஃபுல்கட்டு கட்ட முடியுமா?


பெரியவங்களை விடுங்க. நமக்கு ஏதோ (???)புரியுது (!!!) அளவைப் பாதியாக் குரை(!!வள்வள்ன்னு)ச்சுக்கிட்டுத் தின்னோமுன்னு பெயர் பண்ணிறலாம். புள்ளைங்க? இதுகளை நல்ல நாளிலேயே காலையில் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறது கஷ்டம். இப்ப ஒரு மணி நேரம் முன்னாலே எழுப்புனா எப்படி? தூக்கச்சடவோடுத் தூங்கிக்கிட்டே ரொட்டியை முழுங்கிட்டுப் பள்ளீக்கூடம் போய் அங்கேயும் 'க்ரம்பி'யா உக்காந்து பாடம் படிச்சுட்டு 12 மணிக்கு (பழைய 11 மணிக்கே) பகலுணவுன்னா எப்படி?


மூணுமணிக்கு விடும் பள்ளிக்கூடம் வீட்டு வீட்டுக்கு வரும்போது உண்மை மணி ரெண்டு. இங்கே மாலை ஏழரைமணிக்குப் புள்ளைங்க படுக்கை போடும் நேரம். அப்போ உண்மையில் ஆறரை. தூக்கம் என்ன ஸ்விட்ச் போட்டவுடன் வரும் சமாச்சாரமா?

அரசாங்கம் பண்ணும் அக்கிரமஅட்டகாசத்தில் மனுசனின் உடம்புக் கடிகாரம்( பாடி க்ளாக்) தறிகெட்டு ஓடுது. இப்படி அப்படின்னு மாத்தி மாத்திவச்சா அதுக்குத் தகுந்தபடி ஆட அதுக்கு என்ன பைத்தியமா? கொஞ்சம் கொஞ்சமாப் பழகிக்கும் உடம்புக்கு இன்னொரு அதிர்ச்சி இந்த சேமிப்பு முடிஞ்சதும் வரும். அப்ப ஒருமணிநேரம் தாமதமா எல்லாம்.....
விக்கிரமாதித்தன் இங்கெல்லாம் வந்து கடாறு நாடாறு ஆறாறுன்னு சொல்லிக் கொடுத்திருப்பானோ?.... என்னதான் சொல்லுங்க வெள்ளைக்குக் கொஞ்சம் புத்திமட்டுதான்........ என்ன ஏதுன்னு தீர ஆராயாமல் 'இட்ஸ் க்ரேட்'ன்னு ஆரம்பிச்சுருவாங்க.

சட்டம் போட்டு மாத்திவச்ச புண்ணியவான்கள், கடைசிநாள் பார்லிமெண்ட் கூட்டம் முடிச்சு லீவு விட்டுக்கிட்டாங்க. கடைசிநாளுன்னு பாராளுமன்றத்தில் செஞ்ச கூக்குரல்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துப்பசங்கள் கெட்டதுபோங்க. இனி நவம்பர் எட்டுக்கு வரும் தேர்தல் முடிஞ்சுதான் எல்லாம். அதுவரை அவிழ்த்துவிட்ட.......கள்.

இவுங்க எப்படித்தான் எனர்ஜியை சேமிப்பாங்கன்னு புரியலையே...... விவசாயிகளுக்கும், பண்ணை ஆட்களுக்கும் நல்லது(??) செய்றோமுன்னுதான் இதை ஆரம்பிச்சாங்களாம். இப்பப் பண்ணை ஆட்களே இருட்டுலே போய்ப் பால் கறக்க முடியலை. கொஞ்சம் தாமதமானாலும் பால் வண்டிகள் வந்து காத்துக்கிட்டு இருக்கு. அது வரும்போது கறந்தபால் ரெடியா இருக்கணுமுன்னுதான் ஒப்பந்தம். பேஜாரா இருக்குன்னு சொல்றாங்க.


பாவம் மாடுகள்! அதுகளையும் தூங்கவிடாம வழக்கத்துக்கு ஒரு மணிநேரமுன்னமே பாலைக் கொடு பாலைக்கொடுன்னு பிடுங்குனா அதுகள்தான் என்ன செய்யும்? அதோட பாடி க்ளாக்கையும் முறுக்குனா எப்படி?


வழக்கமா ஆறுமணிக்கு எழுந்திருக்கும் குடும்பங்களில் இப்ப அஞ்சு மணிக்கே எழவேண்டி இருக்கு. இருட்டுலே தடவித்தடவி வீட்டுவேலை செய்ய முடியுமா? விளக்கைப் போட்டுக்கத்தானே வேணும். இன்னும் குளிர்விடாமத் துரத்துவதால் ஹீட்டர்களையும் ஓடவிடணும். எல்லாருக்கும் ஆன் பண்ணத்தான் தெரியும். ஆஃப் பண்ணத் தோணாது..... பத்துமணி ஆகும்போது பார்த்தால் குளியலறை ஹீட்டர்கள் ஜெகஜ்ஜோதியா ....... இந்த அழகுலே 'அந்த சேமிப்பு' எங்கே இருக்கு?


மாலை ஆறுமணி செய்தியை அஞ்சுமணிக்கேப் பார்த்து, பெரியவங்களுக்கானப் பத்துமணிப் படுக்கைக்கு ஒம்பது மணிக்கே போய்...... ஐயோ......இப்படிப் புலம்பவச்சுட்டாங்களே வருசாவருசம்..........

வடகோளத்தில் டே லைட் சேவிங் இப்ப அநேகமா முடிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தப் பகுதியில் இருக்கும் பதிவுலக அன்பர்கள் இதன் பலாபலன்களைக் கொஞ்சம் சொல்லுங்கப்பா. உண்மையில் இதனால் ஏதாவது பயன் உண்டா? குளிர்காலம் முடிஞ்சதும் இயற்கையாவே காலையில் கொஞ்சம் சீக்கிரம் விழிப்பு வருவது உண்டுதான். அப்பச் சீக்கிரம் எழுந்துக்கும் மக்கள் அந்த நேரத்தை உடற்பயிற்க்கோ, நடைப்பயிற்சி, தோட்டவேலை இப்படி எதுக்காவதுத் தாமாய்ப் பயன்படுத்திக்குவோம்தானே...... ஒன்னுமே செய்யலைன்னாலும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்கோ, வெளியிலோ, பள்ளிக்கூடத்துக்கோக் கிளம்பலாம். யாரையும் அவுங்கவுங்க விருப்பத்துக்குச் செயல்படவிடாம அரசாங்கம் செய்யும் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு (என்னைத்தவிர) யாருக்கும் தோணலையே.....

இப்போதைக்குப் புலம்பலை ஒதுக்கிவச்சுட்டுக் கொலு வேலையைப் பார்க்கப்போறேன். ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது! எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.