Showing posts with label புத்தளம். Show all posts
Showing posts with label புத்தளம். Show all posts

Thursday, May 21, 2009

கடலோரக் க(வி)தைகள்.........(2009 பயணம் : பகுதி 27)

படம் எடுக்கணுமுன்னா சொல்லுங்கம்மா. வண்டியை நிறுத்தறேன்னு சொல்லியிருக்கார். ஆனா.... கண் கவனிச்சு, வாய் நிறுத்துங்கன்னு சொல்றதுக்குள்ளே ஒரு நூறுமீட்டராவது போயிருப்போம் என்பதுதான் உண்மை. குறுகிய சின்ன ரோடு. ஆனாலும் அதிலும் வேகமாவே ஓட்டிக்கிட்டுப்போறார் ரமேஷ். 'சரேல்'ன்னு கார் ஒரு கோயிலைக் கடந்துபோச்சு. கொல்லங்கோடு பகவதியாம். ஆஹா....விடறதில்லை......நிறுத்தச் சொல்லி இறங்கினேன். மகாதேவர் க்ஷேத்ரம், பக்கத்துலே பகவதி. விழா நடக்கும்போது அடுத்துள்ள பரம்பு முழுசும் கூட்டம் நிறைஞ்சு வழியுமாம். பத்து லட்சம் மக்கள் கூடுனா பின்னே வேற எப்படி இருக்கும்?


கோயில் திறக்க இன்னும் ஒன்னரை மணி நேரம் ஆகுமாம். நமக்கேது நேரம்? வளாகத்தில் நின்னு நாலு படம் எடுத்துக்கிட்டேன். கோவிலின் முன்வாசக்கதவுகளில் ஒன்னு மட்டும் திறந்து இருந்துச்சு. அதனூடே ஒரு பார்வை. நந்தி உக்கார்ந்துருக்கார். அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சு:-)))) வர்ட்டா மஹாதேவா.... வர்ட்டா பகவதி!

ரமேஷிடம் பேச்சோடு பேச்சா... சூரிய அஸ்தமனத்தை நேத்துப் பார்க்க முடியலை. போறவழியில் சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டதுதான் ......
அதைப்பத்துனக் கவலையை விடுங்க. போறவழியெல்லாம் கடற்கரைகள்தான் பாத்துறலாமுன்னு ஊக்கம் கொடுத்தார். கொளச்சல் பீச்சுக்குப் போனோம். கடலில் pier கட்டிவிட்டுருக்கு. அந்த முனையில் நின்னு கதையடிச்சுக்கிட்டுக் கிடந்தாங்க சில இளவட்டங்க. சின்னத் துறைமுகம். அதுக்கேத்தமாதிரிச் சின்னக் கப்பல்களா அங்கங்கே நின்னுருந்துச்சு.


கொளச்சல்
Pier....peer.....Beer

முன்சிறை ஊராட்சி 'எல்கை' ஆரம்பமுன்னு ஒரு போர்டு பார்த்தேன்.
தேங்காபட்டினம் வழியா வந்துக்கிட்டு இருக்கோம். கொளச்சல் கடந்தப்ப இந்தப் பெயரை எங்கோ கேட்ட நினைவு. அடுத்த நிமிஷம் பூச்சிக்காடு, வெள்ளியாவிளை தாண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்துட்டோம். கோயில் என்னவோச் சின்னதுதான். ஆனால் கீர்த்தி ரொம்பப் பெருசுபோல! கொடிமரம் தாண்டுனதும் இருக்கும் ஹாலின் கடைசியில் கண்ணுருட்டிப் பார்க்கும் பகவதி. வாசல் கேட்டில் இருந்து பார்த்தாலும் சாமியைச் சேவிச்சுக்கலாம். பெரிய உருவம்தான். நம்ம பக்கங்களில் மாரியம்மன் கோவில் அநேகமா எல்லா ஊரிலும் இருப்பதுபோலத்தான் கேரளாப் பகுதிகளில் பகவதி கோயில்கள். எல்லாம் சக்தி வழிபாடுகள்தானே?


மண்டைக்காடு கோவில்
இந்த பகவதிகளில் முக்கியமானவர்களா மட்டும் ஏழோ இல்லை ஒன்பது பேரோ இருக்காங்களாம். எல்லாம் பராசக்தியின் வெவ்வேறு அம்சங்கள். கொடுங்கல்லூர், கொல்லங்கோடு, மண்டைக்காடு, ஆற்றுக்கால், சோட்டானிக்கரை, செங்கண்ணூர் இப்படி. கிடைச்ச பகவதிகளை நாமும் விடக்கூடாதுல்லே? நாமும் சென்னையைச் சுத்தியே மாங்காடு, திருவேற்காடுன்னு வச்சுருக்கோமுல்லே. சக்திபீடங்கள்ன்னு ஒரு 51 இருக்கே!!
கோயில்திருவிழா வருதாம். அதுக்காகக் கோவிலைச் சுத்தி எக்கச்சக்கமான பொரிகடலை & தீனிக்கடைகள். இதெல்லாம் இருந்தாத்தானே திருவிழாக் களைகட்டும்!! கோவில் வளாகத்தில் முன்பகுதியைத் தவிர மற்ற மூணு பாகங்களில் செங்கல் வச்சு அடுப்பாக்கி, அதைப் பொங்கல் வைக்குமிடமா ஆக்கி வச்சுருக்காங்க. நூத்துக்கணக்கான அடுப்புகள். தினமும் மக்கள்ஸ் வந்துப் பொங்கிப் படைக்கிறாங்க போல. நாங்க போனப்பவும் நாலைஞ்சு அடுப்புகள் தீமூட்டிக் கிடந்துச்சு. பானைகளில் பொங்கல் கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. கோயில் குழாயில் ஒரு சின்னப் பையன் அம்மாவுக்கு உதவியாப் பொங்கப்பானைக்குத் தண்ணீர் பிடிச்சுக் கொண்டுவந்து தந்தான். எல்லாம் சரி. ஆனால் சமையல் முடிச்சதும் இடத்தைச் சுத்தம் பண்ணக்கூடாதோ? பேப்பர்களும் குப்பையுமா நல்லாவே இல்லை(-:

கோயிலைச் சுத்திவந்தப்ப வெடிவழிபாடுன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்காந்துருந்தார். விசாரிச்சப்ப.... பத்துரூபாய் கொடுத்தால் ஒரு வெடி வெடிப்பாங்களாம். ஆடு வெட்டறோம், பொங்கல் வைக்கிறோமுன்னு பிரார்த்தனை செஞ்சுக்கறதுபோல 'சாமி, உனக்கு வேட்டு வைக்கிறோமு'ன்னு நேர்ச்சை வைக்கிறதா? சிலர் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு பணம் கட்டி வெடி வழிபாடு செய்யவாங்களாம். பேசாம் ஒரு பத்து கொடுத்து நானும் வந்தேன்னு 'ஆஜர்' வெடி வெடிக்கலாமான்னு ஒரு எண்ணம் வந்ததென்னமோ உண்மை:-)
மரக் கை, கால், ஆள் ரூபம், மண்டைப்புற்று கிடைக்குமுன்னு ஒரு அறிவிப்புப் பலகை கண்ணுலே பட்டது. ஒவ்வொருத்தருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை, அதுக்கேற்றமாதிரி நேர்ச்சைகள் பலவிதம்.

முட்டம் பாறைகளில் அலை



அடுத்துப்போன இடத்தின் அழகை அப்படியே பாரதிராஜா கொண்டாந்து ஊருலகத்துக்குக் காட்டிட்டாரே! தெருவெல்லாம் கருவாட்டு மணம்வருதான்னு கவனிச்சேன். பதிவர் சிறில் அலெக்ஸ், அவர் பங்குக்குத் தன் புத்தகத்தில் சொல்லி வச்சதெல்லாம் நினைவுக்கு வருது. முட்டம் கடற்கரை. லேசான வெளிறிய சிகப்புக் கலந்த மணல். கடற்சிப்பிகள் (மஸ்ஸல்ஸ்) ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கும் பாறைகள். பெரிய பெரிய அலைகளா வந்து பாறையில் அடிச்சுத் திரும்பும் ஓயாத சப்தம். சின்னதா ஒரு கலங்கரை விளக்கம். பெரும்பாறைகளுக்கிடையில் கட்டப்பட்ட வீடுகள். இந்தப் பக்கம் பாறைகளுக்கிடையில் போய் பத்திரமா நின்னுக் கடலைப் பார்க்கும் வகையில் பாதுகாப்புக் கம்பிகள்ன்னு அம்சமாத்தான் இருக்கு. குளிக்கும் மக்களுக்காக உடைகள் மாற்றும் அறைகள்கூட கட்டிவச்சுருக்காங்க. புதுக்கருக்கழியாம நிக்குது. இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கலை போல. எந்த மந்திரிக்காகக் காத்துக் கிடக்கோ? நம்மைப்போல நாலைஞ்சுபேர் வந்துருந்தாங்க. என்ன இருந்தாலும் சினிமாப்புகழ் பெற்ற இடம் இல்லையா? ஊருக்குள்ளே போகாமல் கிளம்பினோம். அழகான சர்ச் ஒன்னு கண்ணில் பட்டது. சூரியன் அஸ்தமிக்க இன்னும் நேரமாகும்போல இருக்குன்னு அடுத்த பீச்சுக்குப் போனோம். சூரியன் மேற்கேயும் நாங்கள் கிழக்கேயுமாப் பயணிச்சாலும் இன்னிக்கு அவனை விடுவதில்லைன்னு ஒரு துரத்தல்.

'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நாந்தான் ஐயா.....' சத்தமாப் பாடலாமான்னு ஒரு வேகம் வந்துச்சு. அதான் பேண்டு வாத்தியத்தில் வாசிச்சுக்கிட்டு ஒரு கல்யாண ஊர்வலம் கண்முன்னே போகுதே. அட! இந்தப் பாட்டுதான் வாசிக்கிறாங்க.... உனக்கு எப்படித் தெரியுமுன்னு கோபாலுக்கு வியப்பு. ஆஹா..... இதுமட்டுமா.... 'எனக்கு என்னெல்லாம் தெரியுமுன்னு உங்களுக்குத் தெரியவே தெரியாது'ன்னு கொஞ்சம் அலட்டிக்கிட்டேன்.

கறுப்பு பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு வெள்ளை மல்லிகை மாலையில் கம்பீரமா இருக்கார் மாப்பிள்ளை. கோலாகலமான ஊர்வலம். கடற்கரையில் இருக்கும் சிலுவைக் கம்பத்தைச் சுத்திக்கிட்டுப் போறாங்க. பெரிய டிஜிட்டல் பேனரில் மணமக்களுக்கு வாழ்த்துக்களை அறிவிக்கும் குடும்பம். கல்யாணம் இராஜாக்கமங்கலம்துறை, புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடந்ததாம். இந்த ஊருக்குப்பேர் பெரியகாடு. அழகான கடற்கரை. எதுத்தாப்புலே அந்தோனியார் தேவாலயம். அதுக்கு வலது பக்கம் கலையரங்கமுன்னு ஒரு மேடை. ஓப்பன் ஏர் தியேட்டர். மக்கள்ஸ் எல்லாரும் ஜாலியா கடற்கரை மணலில் சாய்ஞ்சு படுத்து நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். இடது பக்கம் சாவடி போல் இன்னொன்னு. சண்டே ஸ்கூல் நடத்துமிடமாவும் இருக்கலாம். இதோ உன் தாய் ன்னு எழுதிவச்சுருக்கு. தேவாலயத்தினுள்ளில் பார்வையை ஓடவிட்டேன். தூரத்தில் லேசான நீலவண்ணத்தில் குழந்தை ஏசுவைக் கையிலேந்தி நிற்கும் அந்தோனியார் உருவம். சென்னையில் இருந்த காலத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் பாரீஸ்கார்னர் அருகில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குப் போனது நினைவுக்கு வந்தது.

அரங்கத்தில் அஞ்சாறுபேர் அமர்ந்து அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. எவ்வளவு அழகான இடத்தில் வசிக்கிறோம் என்ற ப்ரக்ஞை இருக்குமான்னு தெரியலை. எவ்வளவு அமைதியான இடம். இந்தப் பயணத்தில் இப்படிக் கடலையொட்டியக் கிராமங்களைப் பார்க்கும்தோறும், 'ரிட்டயர் ஆனதும் பேசாம இங்கே வந்து வீடு ஒன்னு கட்டிக்கிட்டு இருந்துறலாமா'ன்னு மனசு சொல்லும். இப்பவும் சொல்லுச்சு. நிறையவாட்டிச் சொல்லுச்சுன்னு வையுங்க:-)))))

கல்யாண சீதனமாக் கட்டில், மெத்தை, பீரோ இன்னபிற சாமான்கள் கொடுக்கும் வழக்கம் இன்னும் நீடிக்குது போல இருக்கு. ஒரு லாரியில் சாமான்கள் போய்க்கிட்டு இருக்கு. இங்கேயும் சூரியனைத் துரத்துவதுதான் இங்கேயும் நடந்துச்சு. நம்மைப் பார்த்து நடுங்கி மேகத்துக்குள் போய் ஒளிஞ்சுக்கிட்டான்...சரியான பயந்தாங்குளி. சலோ அடுத்த பீச்.


புத்தளம் பேரூராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. கடலுக்கு முகப்பு வாசல் அலங்காரம். கடற்குதிரைகள், சங்கு, சிப்பி இப்படிக் கடல்வாழ் இனங்களா அலங்கரிச்ச தோரணவாயில். கடற்கரைக்கு இறங்க அகலமான படிக்கட்டுகள். ரெண்டு பக்கமும் சிங்கங்கள். இடதுபக்கம் சுழல்படிக்கட்டுகளுடன் ஒரு வியூ மாடி. அட்டகாசமா இருக்கு. ஆனால் சூரியன் வெளியே வரவே இல்லை. விளக்கும் வச்சாச்சு.

கன்யாகுமரி வந்தப்ப நல்ல இருட்டு. விவேகானந்தர் நினைவு மண்டபம் அழகான ஜொலிப்பில் மனசுக்கு ஆறுதல் சொன்னது. நாளைக் காலை எட்டுமணிக்கு ரமேஷுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தோம்.

வரவர ஆல்பங்களின் எண்ணிக்கைக் கூடிக்கிட்டே போகுது. நண்பர்களின் வசதிக்காகத் தனித்தனியாப் போட்டுருக்கேன். அந்தந்த ஊர்க்காரர்கள் அவுங்கவுங்க ஊரைப் பார்த்துக்கிடுங்க:-)))

கொல்லங்கோடு

கொளச்சல்

மண்டைக் காடு

முட்டம்

பெரியகாடு

புத்தளம்

தொடரும்.......:-)