Showing posts with label அனுபவம் | சபர்மதி ஆசிரமம் | ஆமதாபாத். Show all posts
Showing posts with label அனுபவம் | சபர்மதி ஆசிரமம் | ஆமதாபாத். Show all posts

Wednesday, January 20, 2010

சாந்தி நிலவ வேண்டும், ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே..............(குஜராத் பயணத்தொடர் 4)

சபர்மதி நதிக்கரையில், அமைஞ்ச ஆசிரமத் தோட்டத்தில் அமைதியா உட்கார்ந்துருக்கார் காந்திஜி.. இங்கே நுழைஞ்சதும் வெளி உலகத்து ஓசைகள் எல்லாம் ஒடுங்கிப்போச்சு. சதுரவடிவ நாலுபுறமும் திறந்த மண்டபங்களில் சிலதை, ஒன்னோடொன்னு சேர்த்து அடுக்கிவச்சதுபோல் இடமும்வலதுமாகப் போகுது. அங்கங்கே காந்திஜியின் படங்கள், சரித்திர சம்பவங்கள், விளக்கங்கள்ன்னு இருக்கு. எங்கேயும் 'சைலன்ஸ் ப்ளீஸ் ஸைன் இல்லாமலேயே சைலன்ஸ் இயற்கையா அமைஞ்சுருக்கு. நமக்குமே குரலெடுத்துப் பேச ஒரு தயக்கம் வந்துருதுன்னா பாருங்க. அப்பா.....என்ன ஒரு அமைதி. அங்கங்கே சிலர் வாசிப்பும் எழுத்துமா இருந்தாங்க.

ஆற்றங்கரைக்குப் பக்கம் போனோம். தண்ணிக்குப் பக்கத்தில் போக ஒரு படித்துறையும் இருக்கு. குட்டியாச் சின்னதா ஒரு கோவில். உள்ளெ சிவன். சுத்தமாகப் பராமரிக்கும் தோட்டங்கள். மரத்தடியில் வச்சுருக்கும் தானியங்களையும் பழங்களையும் தின்னவரும் அணில், கிளி, புறா, குருவிகள். கிட்டே போனால் ஓடிருமோன்னு தூரக்க நின்னு நாலு க்ளிக்.
1917 இல் கட்டப்பட்டது. சத்யாகிரஹ ஆஸ்ரமம். உள்ளே நுழையும்போதே வரவேற்கும் அசோகமரம் 1963-இல் அப்போதையப் பிரதமர் நேரு நட்டதாம். அங்கிருந்தே ஆற்றங்கரை வரை நீண்டு போகும் இடத்தில்தான் கடவுள் வணக்கத்துக்கு எல்லோரும் கூடுவாங்களாம். நடுநடுவில் மரங்களோடு இதமா இருக்கு. ஒரு தினசரி நிகழ்ச்சியா இருக்கும்போல! ப்ரார்த்தனா பூமி. இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு 'உபாசனா மந்திர்'ன்னு தகவல் பலகை சொல்லுது.

'ஹ்ருதயகுஞ்' என்ற பெயரில் காந்தியும் கஸ்தூர்பாவும் வசித்த வீடு. பெரிய அகலமான முன் வெராந்தா, ஒரு சின்ன ஹாலின் அளவுலே இருக்கு. நமக்கு இடதுபுறம் வெராந்தாவையொட்டிய அறை காந்திஜியின் தனியறை. கண் எதிரே ரெண்டு வாசல்கள். முதல் வாசல் வீட்டுக்குள்ளே போக. அதுக்கு வலப்பக்கம் உள்ளது. சமையல் அறைக்கானது. வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு சமைச்சுக்கிட்டே நோட்டம் விடலாம். அந்த வாசலுக்கு அருகிலே சுவர் ஓரமா ஒரு ராட்டையும், ஒரு சர்க்காவும். இந்தப் பக்கம் கணக்குப்பிள்ளை டெஸ்க். உக்கார்ந்து எழுத ஒரு மெத்தை இருக்கை.

வீட்டுக்குள்ளே போனால் 'ப'வடிவில் வெராந்தா. ஒரு படி இறங்கினால் திறந்த முற்றம். ஹைய்யோ..... இது நான் மனசுலே வச்சுருந்த இடம். முற்றத்தில் நின்னால் மூணுபுறமும் உள்ள வெராந்தா, திண்ணையாகிரும். ஆஹா...... முற்றத்தின் முடிவில் சின்னதா ஃபென்ஸ் உள்ள தோட்டக் கதவு.
இடது பக்கம் ரெண்டு அறைகள். முதல் அறைவாசி கஸ்தூர்பா. அதை அடுத்து உள்ளது விருந்தினருக்கு. வலது பக்கம் ஒரே ஒரு வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சால் சமையலறை. இந்த அறைக்குமட்டும் ரெண்டு வாசல். அதில் ஒன்று தெருவைப் பார்த்து. இந்த அறைக்குள்ளேயே ஒரு சின்ன அறை ஸ்டோர் ரூம். அடுப்புக்கு ஒரு சின்ன மேடை. அங்கே ஒரு ஜன்னல். வேர்க்காம சமைக்க நல்ல ஏற்பாடு. அதே சமயம் கொஞ்சம் வேடிக்கையும் பார்த்துக்கலாம்.. அலமாரிகளில் வீட்டம்மா பயன்படுத்திய சில பண்டபாத்திரங்கள் நம் பார்வைக்கு.

உள்வெராந்தா மூலையில் தானியங்களைக் குத்தும் உரல் குழி. தரையோடு தரையாக. சிம்பிள் லிவிங். அங்கே இருந்து வாழ்ந்து பார்த்தேன் மனக்கண்ணால். ஓடுகள் வழியாக மழைத்தண்ணீர் சரசரவென்று இறங்கி முற்றம் நனைக்கும் மழைக்காலம். லேசான குளிருக்கு இதமா, சூடான வறுத்த (காந்திஜிக்குப் பிடிச்ச) வேர்க்கடலையுடன் வெராந்தா மூலையில் ஒடுங்கி உக்கார்ந்து மழையை ரசிக்கிறேன். ஹைய்யோ!!!!

ஆசிரமவாசியாக ஒரு தன்னார்வலர் அங்கே இருந்தாங்க. பெயர் லதா. விருந்தினர் புத்தகத்தில் எழுதுவீர்களான்னு கேட்டாங்க. (பதிவு எழுதி நாளாச்சு பாருங்க) அந்த கணக்குப்பிள்ளை மேசை, உக்கார்ந்து எழுத ரொம்பவே வசதியா இருக்கு. சரசரன்னு அரைப்பக்கத்துக்கு எழுதிட்டொம்லெ:-) அங்கே இருந்த சர்க்காவில் நூற்கலாமான்னு கேட்டதுக்கு தாராளமான்னு பதில் வந்துச்சு.
இதையெல்லாம் பார்த்தே கனகாலமாச்சு. வருமோ வராதோன்னு ஒரு உதறலோடுதான் ஆரம்பிச்சேன். என்ன மாயம் பாருங்கள். அழகா மெலீசா நூல் சரசரன்னு பஞ்சில் இருந்து பிரியுது. என்னவோ தினமும் செய்யும் காரியம்போல நூற்றுக்கிட்டே போறேன். கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்! இதுக்குள்ளே பார்வையாளர்கள் கூட்டம் ஒன்னு வந்துருச்சு. அவுங்களுக்கும் இந்த நூல் விஷயம் ஆச்சரியமா இருக்காம். அதுலே ஒருத்தர் ஜப்பான்காரர். வெறும் பஞ்சில் இருந்து நூல் எப்படி வருதுன்னு நூறு கேள்வி. நம்மால் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதா? (ஆங்கிலம் அவுங்களுக்கு மட்டும்)

இது ரொம்பவே லாங் ப்ராஸஸ். முதலில் செடியில் இருந்து பருத்தியைப் பிரிச்செடுத்து நல்லா காயவைக்கணும். அதுலே ஒட்டி இருக்கும் தூசு தும்பையெல்லாம் சுத்தப்படுத்தினபிறகு, பருத்திக் கொட்டையைப் பிரிச்செடுக்கும் சின்ன கை மெஷீன் ஒன்னு இருக்கு, அதுக்கு ஜின்னிங் மெஷீன்னு பெயர்.(இன்றைய இளைஞர்கள், பாஸ்தா மேக்கரை நினைவுபடுத்திக்கலாம்) வலதுபக்கம் இருக்கும் பிடியைச் சுத்திக்கிட்டே அதுலே பூரிக்கட்டை மாதிரி இருக்கும் ரெண்டு சின்ன மர உருளைக்கு நடுவில் பருத்தியைச் செலுத்தணும். கொட்டையெல்லாம் பிரிஞ்சு இந்தப் பக்கம் விழுந்திரும்.

இப்ப, அந்தப் பஞ்சை ஒரு வில்லால் அடிக்கணும். தலையெல்லாம் பஞ்சுபஞ்சா ஆகிரும். தலையை ஒரு துணியால் மூடிக்கணும். காந்திக்குல்லாய் இருந்தாலும் போட்டுக்கலாம்:-) வில்? ஒரு சின்ன மூங்கில் பட்டையை எடுத்து அதன் ரெண்டு ஓரத்தையும் முறுக்கின கயிறால் இணைச்சுட்டால் ஆச்சு. பஞ்சைத் தொட்டாப்புலே மேலே இந்த வில்லின் நாண் படுமாறு வச்சு நாணை இழுத்து விட்டால் அது பஞ்சின்மேல் பட்டு, தெறிச்சு பஞ்சு, பஞ்சுபஞ்சா ஆகிரும். நல்லா அடிக்கணும்.

அப்புறம் பட்டை போடன்னு ஒரு கருவி இருக்கு. கருவின்னா சின்னதா ஒரு பலகையும், சொப் ஸ்டிக் போல ஒரு குச்சியும்தான். கூடவே கட்டிடவேலை செய்யும் கொத்தனார்கள் சமன்படுத்த வச்சுருப்பதைப்போல் ஒரு சின்னப் பலகை கைப்பிடியோடு இருக்கும் கொஞ்சம் பஞ்சை எடுத்து பலகையில் பரவினார்போல வச்சு, அந்தக் குச்சியை பஞ்சில் வச்சு இடதுகையால் ஒருமுனையைப் பிடிச்சுக்கிட்டு, கைப்பிடி உள்ள பலகையால் அதன்மீது உருட்டணும் நாலைஞ்சு வாட்டி உருட்டுனால் சின்ன குழல்போல வரும். குச்சியை உருவி எடுத்துறலாம். இதுக்குப் பெயர்தான் பட்டை (இது தமிழ்மணம் பட்டை அல்ல)

குழல்குழலாச் செஞ்சு ஒரு அட்டைப்பெட்டியிலோ அலங்காரமான நகைப்பெட்டியிலோகூட அடுக்கி வச்சுக்கலாம். பஞ்சு ப்ராஸஸிங் இதோடு முடியுது.

சர்க்காவில் ஸ்பிண்டிலை இணைச்சு, பட்டையில் இருந்து ஒரு முனையில் லேசாகக் கையால் இழுத்தால் வரும் நூலை ஸ்பிண்டிலில் சுத்திட்டு வலது கையால் சர்க்காவின் சக்கரத்தைச் சுத்திக்கிட்டே இடது கையால் பஞ்சை லேசாக கட்டைவிரலால் அழுத்திக்கிட்டே இழுத்துக்கொண்டு போனால் நூல் வந்துரும். (இவ்வளவு முடியாதுன்னா ஏற்கெனவே நூத்த நூலில் இருந்து ஒரு முழம் ஸ்பிண்டிலில் சுத்திக்கிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்) நமது இடதுகையை மேலே சுலபமாத் தூக்கும் அளவுக்கு நூலை இழுத்ததும், கையை அப்படியே வச்சுக்கிட்டு மூணு விநாடி, பஞ்சை இழுக்காமல் சர்க்காவை சுத்தணும். இது, நூல் கொஞ்சம் முறுக்கேறுவதற்கு.
அடுத்து ஸ்பிண்டிலை லேசா உள்டாவா சுத்தவைக்கணும். சர்க்காவின் பிடியை (அப்ரதட்ஷணமா) லேசா இடது பக்கம் கொண்டுவந்தாலே ஸ்பிண்டில் முனையில் இருந்து நூல் பிரியும். இப்போ இடக்கையை மடக்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து ஸ்பிண்டிலின் தலைப்பக்கத்துக்கு நேரா வச்சு சர்க்காவின் பிடியை வலப்பக்கம் மெதுவாச் சுத்துனால் நாம் நூத்த நூல் ஸ்பிண்டிலில் சேகரம் ஆகும். அரைமுழம் நூல் பாக்கி இருக்கும் வரை பார்த்துக்குங்க. இப்ப முதலில் சொன்னதுபோல வலதுகையால் ராட்டினத்தைச் சுத்திக்கிட்டே இடதுகையால் பஞ்சை இழுத்துக்கிட்டே போங்க.

சுற்றுலாவந்த மக்களுக்கு அருமையான டெமோ கிடைச்சதாம். ஏன் உங்களுக்கும்தானே? படிக்கும்போதுதான் இவ்வளோ வேலை இருப்பதுபோல் தோணுதே தவிர நூற்கும்போது ஒருவகை தியானம் மாதிரி பரபரன்னு இழுத்தலும் சுற்றலும் நடக்குது. ஒரு சர்க்கா (சின்ன ப்ரீஃப் கேஸ் மாதிரி) கிடைக்குது. ஒன்னு வாங்கிவந்துருக்கலாமோ! அடடா...விட்டுட்டேனே. போகட்டும், இங்கே காதி கிராம உத்யோகில் கிடைக்குதான்னு பார்க்கலாம். ரெடிமேட் பட்டைகளும்கூட கிடைக்கலாம். ' லோகமந்த்தா ஸ்பீட் காதா? .அன்னி ரெடிமேட்'

இத்தனையும் பார்த்து மெய் மறந்த கோபால் பயணிகளுக்கு எடுத்த வகுப்பை க்ளிக்காமக் கோட்டை விட்டுட்டார். நம்ம விளக்கத்தைக்கேட்டு லதா அப்படியே ஆடிப்போயிட்டாங்க போல! ரொம்ப மெலிசா நூற்கிறேன்னு பாராட்டுனாங்க. கித்து ஃபைன் ச்சே:-))))

வினோபாஜியும் அவர் மனைவியும் தங்குன ஒற்றை அறை வீடு ஒன்னு அங்கே இருக்கு. பூனாவில் இந்த சைஸ் வீடு ஒன்னில் நாங்க இருந்துருக்கோம். கொசுவத்தி ஏற்றுதுப்பா இங்கே பலவிஷயங்கள்.

படங்களைத் தனியாக ஆல்பத்தில் போட்டுருக்கேன் பாருங்க.

என்னவோ சொல்லத் தெரியாத மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
என் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியுதுன்னு கோபால் சொன்னார். நானும் நம்பிட்டேன்:-))))



பயணம் தொடரும்..............:-)))))