Thursday, April 25, 2024

வாளிக்குள் போட்டு வச்சுருக்கேன் !

ஒருவழியா வருஷக்கடைசிக்கு வந்துருக்கோம்.  டிசம்பர் மாசம் இங்கே நமக்குக் கோடை காலம் என்றபடியால் தோட்டத்தில் பூக்கள் வஞ்சனையில்லாமல் பூத்து நிக்குது ! 
ஆஹா.... வெய்யில் வந்தாச்சுன்னு  ரொம்பவே ஆடக்கூடாது..... அன்டார்ட்டிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால்  திடீர்னு குளிர்காத்து வந்து கொடுமைப்படுத்திட்டுப்போகும். 




 
பொதுவாவே  கோடையில் 22 டிகிரிவரைதான். அத்தி பூத்ததுபோல் 30, 31 வந்தாப் போதும், தெருவில் நாம் பார்க்கறவங்கெல்லாம் 'இண்டியன் சம்மர்'னு நம்மாண்டை சொல்லிட்டுப் போவாங்க.  இப்படிக்கூட ஒரு பெருமை இருக்கு பாருங்க. 

சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் கோடையில் அதிகம். பலநாடுகளில் டிசம்பர் மாசம் விடுமுறைக்காலமில்லையோ ! 

நமக்கும் கோடைகாலத்தில் வேலைகள் அதிகம்தான். தோட்டவேலையும் வீட்டுவேலைகளும் முதுகை ஒடைச்சுப்போட்டுரும்.  முக்கியமா இட்லிக்கு மாவரைப்பது! இது ஒரு வேலையான்னு  நினைக்கப்டாது.  இங்கே நம்ம வீட்டில் இட்லிக்கு மூணுநாள் வேலை.  நம்பமுடியலை இல்லை ?  முதல்நாள் ராத்ரி அரிசி ஊறப்போடணும். மறுநாள் காலையில் உளுந்து ஊறவைக்கலாம்.  ஒரு பத்துமணிக்குப் பக்கம் அரிசியை க்ரைண்டரில் போடலாம்.  எப்படியும்  மாவாட்டிமுடிக்க பதினொன்னரை ஆகிரும்.  கலந்து வைச்சால்.... மாலை ஏழுமணிக்குப்பக்கம் மாவு பொங்கி வந்தால்  அடிச்சோம் ப்ரைஸ் ! (அல்ப சந்தோஷி )

புழக்கடைக்கு ஓடிப்போய் புதினாவைக் கிள்ளிக் கொண்டுவந்து புதினா சட்னியோடு ஜமாய்ச்சுறமாட்டோமா என்ன ? 
போனா வராதுன்னுன்ற பட்டியலில் வெயில் இருப்பதால் இப்படி  ஒரு மூணு நாலு மாசங்களுக்கு  (அடுத்த எட்டுமாசத்துக்கும் சேர்த்தே)   இட்லி, தோசைன்னு வெளுத்து வாங்கிருவோம். நம்மூரில் பிரச்சனையில்லாமச் செய்யற பல வேலைகளுக்கும் இங்கே மெனெக்கெடணும். வெதர்மேன் என்ன சொல்றாரோன்னு பார்த்துட்டுத்தான் வீட்டு வேலைகளும். இப்ப இதெல்லாம் பழகிப்போச்சுன்னு வையுங்க. 

இங்கே வந்த புதுசுலே.... தயிர் தோய்க்கறதுதான் பெரும்பாடு.  உறைக்குத்திவச்ச பால் அப்படியே இருந்து நாறிப்போய், தூக்கிப்போட்ட நாட்கள்தான் அதிகம்.  நமக்குத் தயிர் இல்லாமல் சாப்பாடில்லை என்பதால் கொடுமையாக இருக்கும்.  தயிர் செஞ்சுக்கும் மெஷீன்ன்னு பலவிதமா வாங்கிப் பார்த்துருக்கேன்.  

 இப்பக் காலம் மாறிப்போச்சு.  இந்தியன் கடைகளிலும் சூப்பர் மார்கெட்டிலும் தயிர் கிடைக்க ஆரம்பிச்சதும், (அதுவும் கோபாலா ! ) மெஷினையெல்லாம் தூக்கிப்போட்டாச்.  வேலை மிச்சம்.

வருஷக்கடைசிநாள் ஞாயிறாக அமைஞ்சுபோச்சு. சண்டே மார்கெட்டை ஒரு சுத்து சுத்திட்டு வரலாமுன்னு போனோம். வழக்கத்தைவிட நல்ல கூட்டம்.  நிறைய தாற்காலிகக் கடைகள் வேற! ஒரு இடத்தில்  எனக்கான ஒன்னு !  விடமுடியலை. 

வீட்டுக்குக் கொண்டுவந்து 'ஆராய்ஞ்சு' பார்த்ததில்  சின்னதா ஒரு சேதாரம்.  நோ ஒர்ரீஸ். நம்ம ரிப்பேர்ஷாப் இருக்கே :-)
போரோபுதூர் ரிலீஃப் பேனல்.  ஜாவாத்தீவில் இருக்கும் எட்டாம் நூற்றாண்டு புத்தர் கோவில் சமாச்சாரம்.  பேனலில் நம்ம இந்திரன் !  Dewa Indra
உலகத்துலேயே பெரிய புத்தர் கோவிலாம் ! 2500 சதுரமீட்டர்  பரப்பில் 2672 பேனல்களும் 504 புத்தர் சிலைகளும் இருக்காம் !

காட்டுக்குள்ளே எரிமலை சாம்பல் குவியலுக்குள்  ஒளிஞ்சுருந்த கோவிலை ஒரு ஆயிரம் வருசங்களுக்குப் பிறகுக் கண்டுபுடிச்சுருக்காங்க !

Borobudur was constructed between about 778 and 850 ce, under the Shailendra dynasty. It was buried under volcanic ash from about 1000years  and overgrown with vegetation until discovered by the English lieutenant governor Thomas Stamford Raffles in 1814. 

நம்ம அங்கோர்வாட் போல இன்னும் பிரபலம் அடையலை போல!  எனக்கும் இதைப் பார்த்தபிறகுதான் இப்படி ஒரு சமாச்சாரம் உலகில் இருக்குன்னு தெரியவந்தது !  அவுங்க சொல்லும் அளவின்படிப் பார்த்தால்  ஒவ்வொரு பேனலும் குறைஞ்சது  ஒரு சதுரமீட்டர் அளவு இருக்கணும். சின்னச் சின்னதா செதுக்கி, அப்புறம் இணைச்சுருப்பாங்க போல !  அப்படி இணைச்ச ஒரு பகுதிதான் இதுன்னு தோணுது ! இதுலேயே ரொம்பச் சின்னதா ஆறு பகுதி இருக்கு ,பாருங்க.
நமக்குக் கிடைச்சது எதோ ம்யூஸியத்தில் இருந்ததுபோல இருக்கு. கோவிலைக் கண்டுபிடிச்சபின் 1911 புனரமைப்பு நடந்துருக்கு. அப்புறம் 1983 ஆம் வருஷமும்'. அப்போ சிலபல பலகைகளை ம்யூஸியத்தில் வச்சுருக்கலாம். அதன்பின்  சிதைஞ்ச பலகைகளை யாராவது விற்றிருக்கலாம் என்பது என் யூகம். எப்படியோ.... நம்ம கைக்கு வந்துருக்கு ! 

வலைவீசுனதில் ஏராளமான படங்களும் விவரங்களும் கிடைச்சதை என்னால் நம்பவே முடியலை ! 
அற்புதம் என்ற சொல்லைத்தவிர சொல்றதுக்கு வேறொரு சொல் தெரியலை !
இந்தோநேஷியாவில் அபூர்வ சமாச்சாரங்கள் ஏராளம் இருக்கு !  !  நாம்தான் விவரமில்லாம  பாலி மட்டும் போயிருக்கோம்..... ப்ச்.....


போரோபுதூர்னு எழுதி நம்ம வாளிக்குள் போட்டுருக்கேன் !  நம்மது பாட்டம்லெஸ் பக்கெட், கேட்டோ !!!!!










4 comments:

said...

ரசிக்க வைத்தன படங்கள்.   குறிப்பாக கடைசி படங்கள்.  கோடை காலத்திலேயே 31, 32 தானா?  ம்ஹூம்...   சென்னை பற்றி எரிகிறது!  இன்னும் அக்னி நட்சத்திரமே ஆரம்பிக்கவில்லை.  வருடத்தை கைகாட்டுகிறார்கள்!

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்த 31,32 கூட எப்பவாவது அபூர்வமாத்தான் ! 25 வந்தாலே சனம் மெய் மறந்துரும்:-)

சென்னை........... ப்ச்.... ஜூன் மழைவரை இப்படித்தான் இருக்கும்போல.....

said...

உங்க கோடை வந்தால் இடுப்பு ஒடியுதே . இங்கு வெப்பம் கொல்லுகிறது.

போரோபுதூர் பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன். படத்தை பார்த்தாலே கலைஅழகு திகைக்க வைக்கிறது.

said...

வாங்க மாதேவி,

இடுப்பு ஒடிஞ்சாலும், ஊர் முழுசும் பூக்களால் நிறைஞ்சுருப்பதைப் பார்த்தால் கோடை இன்பமே !

எனக்கும் அந்தப்பேனல் வாங்கும்வரை போராபுதூர் பற்றி ஒன்னுமே தெரியாதுதான் !