Saturday, January 22, 2022

வெயில் இருக்கும்வரைதான் எல்லாமே !

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் எங்களுக்கு அரை வருஷம்தான்.  குளிர் காலம் முடிஞ்சு செப்டம்பர் மாசம் பொறந்ததும்,  வசந்த காலம் னு செடிகள் முக்கியமா ஏர்லி ச்சீயர்ஸ் என்னும் செடிகளும், டாஃபோடில் செடிகளும் ஆகஸ்ட் மாசக் கடைசி வாரத்துலேயே பூக்கத் தொடங்கிரும். ஆனாலும் குளிர் விட்டுருக்காது.  அதுக்காக ஆறுமாசம் முடங்கிக்கிடந்ததைத் தொடர முடியுமோ ? 
ஒரு அரை வருசம் போனதும் உயிர்த்தெழுதல் நடக்கும்.  கல்யாண சீசன் ஆரம்பம். பொது விழாக்கள், மற்ற கொண்டாட்டங்கள் எல்லாம்  மார்ச் பதினைஞ்சு வரைதான்.  அதுலேயும் கல்யாணம் சீஸன் னு சொல்றது  வருஷத்துக்கு 26 சனிக்கிழமைகள் மட்டும்தான்.  ஞாயிற்றுக்கிழமைகளில் கல்யாணம் கார்த்தி, பொதுவிழா இப்படி எதுவும் எப்பவுமே இருக்காது. நான் சொல்றது சம்ப்ரதாயமுறைப்படி சர்ச்லே நடக்கும் கல்யாணங்கள். பதிவுத் திருமணமுன்னா  அது வருஷத்தில் எப்ப வேணுமுன்னாலும் நடக்கும். இது இல்லாம சிவில் முறைப்படிக் கல்யாணம் னு  வச்சுக்கிட்டாங்கன்னா....  அதுவும்  பொண்ணும் மாப்பிள்ளையும்  தங்களுக்கிஷ்டமான  சமயத்தில்  சுருக்கமாவோ  பெருசாவோ  நடத்திப்பாங்க. இது அவுங்க கல்யாணத்துக்காக சேர்த்து வைக்கும் காசைப் பொறுத்தது .  இங்கே  சமூகத்தில் இருக்கும் சிலருக்குக் கல்யாணம் நடத்திவைக்கும் marriage celebrant  என்ற லைசன்ஸ்  அரசு கொடுத்துருக்கு. இவுங்கதான்  இப்படியான கல்யாணங்களை நடத்தி வைப்பாங்க.  ஆனால் எல்லாக் கல்யாணங்களையும்  அன்றைக்கே பதிவும்  செய்யணும். கல்யாண விழாவில் இது நடந்துரும்.

எங்க கோடை காலம்  டிசம்பர் ஒன்னு முதல் ஃபிப்ரவரி கடைசிநாள் வரை. மார்ச்சில் ஆட்டம் சீஸன் தொடங்கி  பதினைஞ்சு நாள் ஆனதும்  எங்க ஆட்டம்பாட்டம் எல்லாம் அடங்கிரும். அடுத்த ஆறு மாசத்துக்குக் 'குந்துனியா குரங்கே... உன் சந்தடி எல்லாம் அடங்க' ன்னு கிடக்கணும். கிடப்போம். நம்ம ஹிந்துப்பண்டிகைகளில்  முக்கியமானதாக இருக்கும்  மஹாசிவராத்ரி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, ஆஞ்சியின் பொறந்தநாள் எல்லாம் சந்தடி அடங்கி ஒடுங்கி இருக்கும் சமயத்தில்தானே வருது.  புள்ளையார்கூட பலசமயம்  செப்டம்பர் முதல் வாரத்துலே  பொறந்துடறார் இல்லெ !




இதுக்கிடையில் நியூஸிலாந்து தமிழ்ப்புத்தக மன்றம் ஆரம்பம் ஆச்சு. சித்திரை வருசப்பொறப்பு சமயம்தான்.  செல்வகணபதி ( Coordinator of Tamil Quora) சத்தியமூர்த்தி, கண்ணன், மெய்யப்பன் போன்றவர்களின்  முயற்சியில் நூறு தமிழ்ப்புத்தகங்கங்களை  சென்னையில் இருந்து வரவழைச்சு ஒரு நூலகம் தொடங்கினாங்க. வரவரப் புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிக்கும் பழக்கமே அருகி வருதே :-( உள்ளூர் மத்திய நூலகத்தில்  சின்ன விழாவா இதை நடத்துனாங்க. குறிப்பா நம்ம பிள்ளைகளுக்குத் தமிழில் பேசச் சொல்லித்தரணும் என்பதுதான் முக்கியம். கூடவே எழுத்தும்.  நிகழ்ச்சியில் நம்ம ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்டார் ! அதான்  ஸூம் வசதி இருக்கெ! எல்லாம் ஜாம்ஜாம்னு நடந்தது.

எங்கூர் நிலநடுக்கத்துக்குப் பிறகு, மீண்டும் நகர நிர்மாணம் ஆரம்பிச்சப்ப , கட்டிடம் கட்டும் சம்பந்தமுள்ள  நிறுவனங்கள் மூலமாக நிறைய இந்தியர்கள்  வந்துருக்காங்க. அதில் தமிழர்களும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில். சிங்கப்பூர் கட்டடக்கம்பெனிகளில்  வேலை செய்தவர்கள்.  நாங்களும் வாசிக்கணுமுன்னு நினைச்சிருந்த சில புத்தகங்களைக் கண்டதுமமாளுக்கு ரெண்டுன்னு இரவல் வாங்கி வந்தோம்.  ஒரு மாசம் வச்சுக்கலாமாம். அடுத்த நிகழ்வில் நாம் வாசிச்ச புத்தகங்களைப்பற்றி விமரிசனம் செய்து பேசலாமாம்!  நல்ல ஆரம்பமுன்னு வையுங்க.  ஆனால் இந்தக் கொரோனா வைபவத்தால்  நினைச்சது நினைச்சபடி நடக்கலை என்பது சோகம். 


நண்பர் சத்யா அவர்கள்,  வீட்டில்  புத்தகங்களை வைத்து, நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏத்துக்கிட்டார்.  வீடுகளில் போய் புத்தகங்களை வாங்கி வர்றதும் கொண்டுபோய்க் கொடுக்கறதும் சிரமம் என்றதால், நம்ம மத்திய நூலகத்தில்  இடம் கேட்டுருக்கோம்.  பொது இடம் என்றால் கொஞ்சம் நல்லது இல்லையோ !
கடந்த நாலு  வருஷமா சநாதன தர்ம ப்ரதிநிதி சபான்னு  ஒரு ஆன்மிக சங்கம் ஆரம்பிச்சதால், நாங்க நம்ம ஹிந்து மத  சம்பந்தமான பூஜை, புனஸ்காரம், பண்டிகை, நோம்புன்னு  எல்லாத்தையும்  குளுரோ, வெயிலோன்னு கணக்குப் பார்க்காம நடத்திக்கிட்டு வர்றோம். இந்த சங்கம்  ஃபிஜி இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாமும் ஒரு ஆறு வருஷம் ஃபிஜியில் இருந்துருக்கோமே !  மகள் அங்கெதானே பிறந்தாள். அதனால்  அங்கேயும்   நாம் மெம்பர்கள்தான். வாரத்தில் செவ்வாய்தோறும் மாலையில் ராமாயணம் வாசிப்பு உண்டு.  இப்ப நமக்குன்னு ஒரு சங்கம் வந்துட்டதால்  பிறந்தநாள், திருமணநாள்  கொண்ட்டாட்டங்களையும்  இங்கேயே  செவ்வாய்க்கிழமைகளில் நடத்திக்கறோம்.  தவிர  சில கல்யாணங்களும் வார இறுதிகளில் நடப்பதுண்டு.  

ஃபிஜி இந்தியர்கள் சம்பந்தமுள்ள எந்த விழாவையும் நாங்க  இங்கே சங்கத்தின் ஹாலில்தான் நடத்திக்கறோம்.  வெள்ளையர்கள், இந்தியாவில்  இருந்து ஆட்களை ஃபிஜி கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யப் பிடிச்சுக்கிட்டு வந்த  சமாச்சாரம் உங்களுக்குத் தெரியும்தானே ?  நம்ம பாரதியார் கூட 'கரும்புத்தோட்டத்திலே'  என்ற பாட்டை எழுதி இருந்தார் இல்லையா ?  சம்பவம் நடந்து  இப்போ 142 வருஷமாச்சு. Remembering The Girmitiyas என்ற நிகழ்வும் நம்ம ஹாலில்தான்  நடந்தது. நியூஸியின் முக்கிய நகரங்களான  ஆக்லாந்து, வெலிங்டன், க்றைஸ்ட்சர்ச் என்னும்  மூன்று இடங்களில்  நிகழ்வு வச்சுருந்தாங்க. 





















ஃபிஜி ஹைகமிஷனரும் உள்ளூர் மேயருமா நிகழ்ச்சிக்கு வந்துருந்தாங்க. மேயரம்மா வரலை.  டெபுடி மேயர் வந்துருந்தார். 1879 ஆம்  ஆண்டு   மே மாசம் 14 ஆம் தேதி ஆணும் பொண்ணுமா  522 இந்தியர்கள் வந்திறங்கிய கப்பலின் படங்கள், அந்த சமயத்தில் அவுங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் இப்படி ஒரு படத்தொகுப்பைக் காட்சிக்கு வச்சுருந்தாங்க.  முன்னோர்களை வணங்கி  மதிப்பதில்  நமக்குப் பெருமைதான் இல்லையா ? 

கெட்டதில் நல்லதுன்னா.... அப்போ அவுங்க வரலைன்னா.... இப்போ இவுங்க இல்லை !

இதைத்தவிர Fiji Apna Pariwar  என்ற பெயரில்  இங்குள்ள  சீனியர் மக்களை உபசரிக்கும்  நிகழ்ச்சியும்  ரெண்டு வருஷங்களுக்கு முன்னே ஆரம்பிச்சு நடந்துவருது.   நாமும் சீனியர் ஆயாச்சு, கேட்டோ !  இளையோர்கள் சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம்னு விருந்து வச்சு நம்மை உபசரிக்கிறாங்க.  இந்த முறை உள்ளூர் சிட்டிக்கவுன்ஸிலர்  சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கிட்டாங்க.  இவுங்க நம்ம தோழிதான் !


மூணு வருஷமா, இங்கே புள்ளையார் கோவில் சத்சங்கம் ஒன்னும் நடந்துவருது. எல்லா மாசத்திலும் ரெண்டாவது சனிக்கிழமை, பக்தர்கள் கூடி பூஜையும் பஜனையுமா ஒரு மூணுமணி நேரம் நடக்கும்.  இங்கேயும் பொங்கல், தைப்பூசம், புள்ளையார் சதுர்த்தி, நவராத்ரி, தீபாவளி  முக்கிய விழா நாட்களில்  வெலிங்டன் நகரில் இருந்து  பண்டிட் வந்து  நடத்தி வைப்பார். இன்னும் கோவில் கட்டும் எண்ணம் நிறைவேறலை.  சிலவருஷங்களா  ரியல் எஸ்டேட் மார்கெட் தீ புடிச்சுக்கிடக்கு. ரொம்ப சாதாரணமா இருக்கும் வீடுகளே கூட  ரெண்டு மடங்கு விலை கூடி இருக்குன்னா பாருங்க.  கோவில் கட்டணுமுன்னா  இடமும் கொஞ்சம் பெருசா வேணுமில்லையா?  எப்போ நிதி சேர்த்து எப்போ கட்டப் போறோமோன்னு...   இருக்கோம். ஊருக்குள்ளே இடம் வாங்கிக் கட்டறதெல்லாம்  இனிக் கனவுலேதான் நடக்கும் போல....
இப்படி இருக்கும்போது,  புதுசா மாரியம்மன் கோவில் ஒன்னும் வந்தாச்சு. இதுவும் ஃபிஜி இந்தியர்கள்  வகைதான். ஆனால் தென் இந்தியர்கள்  சங்க அமைப்பு. நம்ம ஊர் எல்லையைத் தாண்டிப் போகணும். எல்லாம் ஒரு 23 கிமீ தூரம்தான். ஃபிஜி இந்திய நண்பர், தன் பண்ணையில் இடம் கொடுத்துருக்கார். தாற்காலிகம்தான்.  ஆனால்  கோவிலுக்கான தனிப்பட்ட இடம் சீக்கிரம் வந்துரும்.  பொதுக்காரியங்களில் 'ஃபிஜி இந்தியர்களின் ஒற்றுமை'  போற்றத்தக்கது. 


இவ்வளவு அமர்க்களம் ஒருபக்கமும் கொரோனாவின் வெறியாட்டம் இன்னொரு பக்கமுமாத்தான் இருக்கு.  நியூஸியில்  அவ்வளவாக  ஆட்டம்போட வகை வைக்காம, அரசு அதை அடக்கி வச்சுருந்தது.  நல்ல வேளையாக எங்கூரில் கொரோனா இல்லை.  தடா போட்டு வச்சுருக்கோம்.  ஆனாலும்  ஆக்லாந்து நகரில் லாக் டௌன் நடக்கும்போது, நாங்களும்  அவுங்க மனக்கஷ்டத்தைப் பகிர்ந்துக்கும் முறையில்  எங்கூரிலும் அடங்கி ஒடுங்கித்தான் கிடந்தோம்.  வேற வேற லெவல் என்றாலும்  கஷ்டம் கஷ்டம்தான் இல்லையோ ?  ஆனால் எந்த விழா நடந்தாலும் அப்போது அரசு சொல்லும்   விதிகளுக்கு உட்பட்டுத்தான்  நடத்தினோம். சிலபல பூஜைகள்  ஆன்லைனிலும் கூட!  

மனசை தேத்திக்க ஒருநாள்  காலை 6 முதல் மாலை 6 வரை12 மணி நேரம்  இடைவிடாமல் ஹனுமான் சாலீஸா பாராயணம் கூட நடத்தினோம். நம்ம ஹாலில்தான்....ஆஞ்சி சந்நிதி இருக்கே! 

கொரோனா சமயமா இருப்பதால் தினமும் பகல் ஒரு மணிக்கு  நாட்டுநிலவரம் டிவியில் சொல்வாங்க.  இன்னைக்கு எத்தனை கேஸ்னு தெரிஞ்சபிறகுதான் பகல் சாப்பாடே! இப்பவும் இதேதான்.  எல்லாம் வெளிநாடுகளில் பயணம் போய்த் திரும்பி வரும் மக்கள் கூட்டி வர்றதுதான்.  வந்தவுடன் க்வாரன்டைனில் தங்க வச்சாலும்  எப்படியோ  கொஞ்சம் பரவித்தான் போகுது.  ஆனால் இதுவரை கட்டுப்பாட்டில் இருப்பது கொஞ்சம் நிம்மதிதான்.
 
திங்கட்கிழமைதோறும் மாலை நாலு மணிக்கு  ப்ரதமர் வந்து  நாட்டுமக்களுக்கு நிலமையை விவரிச்சு, எந்த மாதிரி முன்னேற்பாடு  செய்யப்போறாங்கன்னு சொல்வார்.  என்ன ஒன்னு.... இன்னும் நமக்குப் பயணம் போக அனுமதி இல்லை.....  


ஆங்........... சொல்ல விட்டுப்போச்சே.... மே மாசம் அன்னையர் தினம்  வேற வருதே!  வந்தது.  மகளும் மருமகனுமா வந்து  பரிசு கொடுத்துட்டுப் போனாங்க. கிடைச்ச பரிசை, இன்னும் கொஞ்சம் அழகாக்கினேன் :-)









14 comments:

said...

மிகவும் சுவாரஸ்யமான விவரங்கள்...

said...

புத்தக வாசிப்பு பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பது தமிழ் சமய விழாக்கள் என நல்ல செயல்கள் வாழ்க உங்கள் பணி.

said...

அருமை நன்றி

said...

துளசிக்கா செம ஜாலி உங்க ஊர். என்ன கொண்டாட்டங்கள். பொழுது ஓடிடும் போல!! நல்ல விஷயம் மக்களோடு மக்களாக இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாரும் சேர்ந்து செய்வது எல்லாம்....செம சுவாரசியம்

மாரியம்மன் கோயில் புதுசு பத்தி சொன்னது நினைவிருக்கே இதே படத்தோடு சொன்னது நினைவிருக்கு

புத்தகவாசிப்பு அதுவும் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தல் எல்லாம் அருமையான விஷயம்.

//வெள்ளையர்கள், இந்தியாவில் இருந்து ஆட்களை ஃபிஜி கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யப் பிடிச்சுக்கிட்டு வந்த சமாச்சாரம் உங்களுக்குத் தெரியும்தானே ? //

ஓ அந்த வரலாறும் தெரியும். நீங்களும் உங்கள் அனுபவங்களை சொல்லியிருக்கீங்க அதுவும் நினைவிருக்கு.

கீதா

said...

ஓடாமல் இரண்டு வருடம் போனாலும் எப்படியோ சமாளித்து விட்டீர்கள். முன்கருதல்களை தொடரவும். 
இந்த வாரம் ரஜ்ஜுவை எந்தப் படத்திலும் காணவில்லை. 

said...

சுவாரசியம்

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி ! சரித்திரம் உண்மையில் சுவாரஸ்யம்தான். ஆனால் நமக்கு உண்மையான சரித்திரம் கூறப்படவில்லை.... பக்கசார்பு எடுத்துதான் அந்தக் காலத்தில் எழுதி வச்சுருக்காங்க. ப்ச்...

said...

வாங்க மாதேவி.

1995 லே நம்ம தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சப்பவே தமிழ் வகுப்புகள் தொடங்கிட்டோம். இன்னும் நடக்குது என்பதே சிறப்பு. இப்போ முப்பது பிள்ளைகள் இருக்காங்க.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜயகுமார்,

இனியும் கூட ஒரு வருஷம் ஆகலாம், பயண அனுமதி கிடைக்க. கிளம்பிப்போவது பிரச்சனை இல்லை. திரும்பி வருவது கஷ்டம். இங்கே க்வாரன்டைனுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகி இருக்கு. ஐநூறு இடங்களுக்கு அஞ்சாயிரம்பேர் அனுமதி கேக்கறாங்க. அங்கே இடம் கிடைச்சால்தான் பயணத்துக்கு டிக்கெட்டே வாங்க முடியும்.

ரஜ்ஜு......... தூங்கிட்டானோ ?

said...

வாங்க கீதா.

ரசிப்புக்கு மனம் நிறைந்த நன்றி. இந்த அக்காவின் கரும்புத்தோட்டத்திலே.... இதோ...

http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_06.html

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

வருகைக்கு நன்றி !

said...

தகவல்கள் அனைத்தையும் ரசித்தேன். மாரியம்மன் கோவில் தகவல் முன்னர் ஒரு பதிவிலும் வந்ததோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அது ட்ரெய்லர். இதுதான் மெய்ன்ஃபீச்சர்😂