Friday, April 14, 2017

நம்ம கார்க்கோடகனைக் கண்டுக்கலாமா ? ( நேபாள் பயணப்பதிவு 29 )

ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாதுன்னு ஒரு பழஞ்சொல் இருந்தாலும்...  கொஞ்சூண்டு எட்டிப் பார்க்கணும் இப்போ. அதுக்கான காரணம் ஒன்னுமிருக்கு. ப்ரம்மாவுக்குப் படைக்கும் தொழில் கொடுக்கப்பட்டதும்,  அவர் தன் தொழிலுக்கு உதவியாளர்களா நாலு பேரை முதல்முதலாப் படைச்சார். அவுங்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் என்ற  நால்வர். படைக்கும் தொழிலை அபிவிருத்தி செய்யாமல் இந்த நாலு பேரும் சிவபெருமானைக் குறித்து தவம் செய்யப் போயிட்டாங்க.
வேலை ஒன்னும் நடக்கலையேன்னு,  இன்னும் சிலரைப் படைக்கிறார் ப்ரம்மா.  நாரதரைப் படைச்சார். அவரோ.... நாராயணா நாராயணன்னு  பெருமாளைத் தேடிப்போயிட்டார். அப்புறம் ஏழு ரிஷிகளைப் படைச்சார் ப்ரம்மா. சப்தரிஷிகள்னு இவர்களைச்  சொல்வாங்க. இந்த ஏழு பேரில் இருந்துதான்  உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களும் படைக்கப்பட்டதாக  வேதங்களும், புராணங்களும் சொல்லுது.

ஏழுபேரும் ரொம்ப பிஸியா அவுங்களுக்குத் தரப்பட்ட வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  உலகத்துலே பலவித  உயிர்கள் படைக்கப்பட்டன.  இந்த ஏழு பேரில் மரீஷி என்ற ரிஷிக்கு கஷ்யபர் என்ற மகன் பிறக்கிறான். இந்த கஷ்யபர் வளர்ந்து கல்வி கேள்விகளில்  பண்டிதராகிப் புகழ் பெற்றதும்,  கல்யாணம் செஞ்சு  வைக்கிறாங்க. தட்சப்ரஜாபதியின் பதிமூணு பெண்களைக் கல்யாணம் கட்டறார். (அப்போ எல்லாம் பெண்குழந்தைகளை எக்கச்சக்கமாப் படைச்சுட்டாங்க. இத்தனை பேருக்கும் மாப்பிள்ளைகள்  படைக்கப்படலை போல.  ஒருத்தருக்கே  நிறையப் பொண்களைக் கல்யாணம் முடிச்சு அனுப்பிடறாரு பொண்களைப் பெத்தவர்.  செலவும் மிச்சம் பாருங்க....) 

இந்த  பதிமூணு பெண்களில்  அதிதி என்னும் பெண்ணுக்குப் பிறந்தவர்தான் சூரியன். மற்ற  மனைவிகள் மூலம் பலரகமான  படைப்புகள் பிறக்கறாங்க. தேவர்கள், அசுரர்கள், மருத்துக்கள், அரம்பையர்கள்னு .... வகை வகையா...... இதுலே ஒரு மனைவிக்கு(பெயர் கத்ரு) பிறந்தவங்க நாகங்கள். இன்னொரு மனைவியான சுரதைக்குப் பிறந்தவர்கள் கருடப் பறவைகள்.  (அட!  பங்காளிச்சண்டைதானா  கருடனுக்கும் பாம்புகளுக்கும்!)

(ஒவ்வொரு மனைவிக்கும் பொறந்தவைகளைச் சொல்லிக்கிட்டே போனா.....  இதுவே ஒரு பாரதம் ஆகிரும். நானென்ன ஜெ மோவா? இன்னொரு மகாபாரதம் எழுத? )

கத்ருவின் பிள்ளைகள் நாகர்கள் இருக்காங்களே  அவர்களில் மூத்த பிள்ளைதான் கார்க்கோடகன். இவர் தன் மனைவி நாகராணியுடன் வாழ்ந்துக்கிட்டு இருந்தது, சுத்திவர மலைகள் சூழ்ந்துருந்த  ஒரு பெரிய ப்ரமாண்டமான நீர்ப்பரப்பில். இந்த நீர்ப்பரப்பைத்தான்  தேவலோகத்தில் இருந்து  கடவுள் பார்க்கிறார்.

முந்தாநாள் ஸ்வாயம்பு மஹாசைத்தன்யா கோவிலில் பார்த்த புத்த பிஷூ சொன்ன செவிவழிக்கதை இப்ப இங்கே வரணும். அப்போ படிக்கலைன்னா இப்ப இந்த சுருக். பாருங்க.

மேலோகத்தில் இருந்து கடவுள் கீழே பார்த்தப்ப  ஏரியின் நடுவில் ஒரு அழகான தாமரை மலர்ந்து நின்னதைக் கவனிச்சு, அதே தனக்குரிய இடமுன்னு தீர்மானிச்சு, ஒரு பக்கம் ஏரியை கையால் கீறி தண்ணீரை வடிய விட்டாராம். கீழே பெரிய பள்ளத்தாக்கு  உண்டானது அப்போதானாம்.  தாமரை இருந்தது ஒரு குன்றின் மேலாம். அந்தக் குன்றுதான் இப்போ  நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸ்வாயம்பு கோவில் இருக்குமிடம். தாமரை இருந்த குறிப்பிட்ட இடம்தான் ஸ்தூபா அமைச்ச இடமாம்.  புத்தபிஷூ சொன்ன செவிவழிக் கதையைக் கேட்டுக்கிட்டேன்.

புத்தமதத்தினர் நம்பிக்கைப் படி  ஏரியைக் கையால் கீறி விட்டவர் மஞ்சுஸ்ரீ என்ற போதிசத்துவர்.  புத்தமதத்தில் மஹாயானம் என்ற பிரிவில் இவர்தான் அவலோகிதேஷ்வர். மும்மூர்த்திகள்  இவர்தான்னும் சொல்றாங்க. திபெத்திய  புத்தமதத்தினருக்கும் இவர்தான் முக்கிய கடவுள்.

 நேபாளில்  இருக்கும் புத்தர் கோவில்கள் எல்லாமே திபெத்திய பௌத்தர்களால்தான் உருவானது என்பதை நினைவில் வச்சுக்கணும் நாம். பொதுவாக நேபாள் ஒரு ஹிந்து நாடு. ஹிந்துக்கள் கிட்டத்தட்ட 82 சதம். பௌத்தர்கள் 9 சதம்.  அதிலும் சீனர்கள் திபெத்தை ஆக்ரமித்தபின்,  இங்கே வந்து குடியேறியவர்களே பெரும்பாலோரும்.

 சரி. இப்ப நீர்நிலையைப் பார்க்கலாம். மஞ்சுஸ்ரீ கீறி விட்டதும்  தண்ணீர் எல்லாம் வடிஞ்சு போய் ஒரு பெரிய பள்ளத்தாக்கு உண்டாயிருச்சு.  அந்தத் தண்ணீரில் இருந்த  நாகர்கள் எல்லோரும் இருக்க இடமில்லாமல் தவிக்கிறாங்க. நாகர்களின் அரசன் கார்க்கோடகனுக்கு பயங்கரக் கோபம். குடிமக்கள் தவிப்பதைப் பார்த்து அரசனுக்குக் கோபம் வராமல் இருக்குமா?
அப்ப தேவர்கள் அனைவரும் சேர்ந்து   வைரவைடூரியங்களும் ரத்தினக்கற்களுமா இழைச்சு ஒரு மாளிகையைக் கட்டித் தர்றாங்க.  அந்த மாளிகை இன்னொரு பெரிய தடாகத்துக்குள்ளே, தண்ணீருக்கடியில் இருக்கு!  நாகர்கள் அங்கே இடம் பெயர்ந்துடறாங்க. இனி எல்லாம் சுகம். அப்படித்தானே?

அந்தத் தடாகத்துக்குத்தான் இப்போ நாம் போறோம். ஹா..... ஏற்கெனவே முக்திநாத்தில் எனக்கு  ஸர்ப்பதோஷம்னு சொல்லி என்னைப் பெருமைப் படுத்திட்டாங்கன்னு சொல்லலை? ' ஆடு பாம்பே'ன்னு  ஜோராப் போறேன்.

நம்மவர் ஒரு தயக்கத்தோடுதான் வண்டியில் இருந்து  இறங்கி வர்றார்:-)
தோரணவாசல் கடந்து உள்ளே போறோம். 'கார்கோடக் நாக்ராஜா நாக்ராணி பாசஸ்தான் தௌதஹ ஸமாஜ்'  னு எழுதி இருக்கு!  இந்த ஏரியாவுக்குப் பெயரே  Taudaha Lake  ஏரியா என்றுதான். நேபாளிகளின் நெவாரி மொழியில் இந்த  Taudaha என்ற சொல்லுக்கு  பாம்பு ஏரின்னு  பொருளாம்.  இதைச் சொல்லிப் பார்த்தால் தடாஹான்னு  வருதுல்லே? தடாஹா  ...   அட!  இது நம்ம தடாகம்!
ஒரு காலத்துலே ரொம்பவே பெருசா இருந்த  ஏரி,  காலப்போக்கில் சின்னதா மாறிக்கிட்டே இருக்கு. இப்போ வெறும் நாலு ஹெக்டர்தான். சுமார் 6 ஏக்கர்  வரும். தனி நிர்வாகம் இதைக் கவனிச்சுக்கறாங்க.  கீழே படிகளில் இறங்கிப்போறோம். ஒரு டிக்கெட் கவுண்ட்டர் வச்சுருக்காங்க. உள்நாட்டுப் பயணிகளுக்கு  20 ரூ. நமக்கு  அம்பது .  கவுண்ட்டரில் இருந்த  பெண், ஒரு அழகான பாசிமணி மாலை போட்டுருந்தாங்க. .  நமக்கும் ஒன்னு கிடைக்குமான்னு பார்க்கணும். மூளையில் முடிச்சு :-)
 அவுங்க பெயர்  பாரு.  பார்வதியின் சுருக்கம்தானே இந்தப் பாரு.  நேத்து கப்பரை வாங்குன இடத்திலும் ஒரு பாருவைப் பார்த்தோமே!  பாசிமணி மாலைப் பத்தி விசாரிச்சேன். இங்கே பொதுவாக சுமங்கலிகள்  அணியும் மணிமாலையாம்.

இந்த ஏரியாவில் இலவச வைஃபை இருக்கு!  இதுகூட ஒரு  அட்ராக்‌ஷன்தான் இந்தக் காலத்திலே!  வலசை போகும்   பறவைகள்  ஏராளமா  வந்து தங்குதாம் இந்த ஏரியில்.  பறவைகளைப் பார்த்து ரசிக்கவும், தனிமையை நாடி வரும் இளவயதினரும்,  குடும்பம் குழந்தை குட்டிகளோடு பிக்னிக் வருபவர்களுமா இந்த இடம் கலகலன்னு இருக்குமாம்.  (பாம்பைக் கண்டு  பயப்பட மாட்டாங்க போல! )
தடாகத்துக்குப்போக தனி கேட் வேற!  அதன் வழியாப் போறோம். பொரி பேக்கட்டுகளை அடுக்கி வச்சுக்கிட்டு விக்கறாங்க. நம்ம பவன் சொன்னார்  'இன்னும் உள்ளே போனால் நிறைய விற்பனையாளர்கள் இருக்காங்க. அங்கே வாங்கிக்கலாமு'ன்னார். இங்கே உக்காந்து பொரி சாப்பிட ஆட்கள் வருவாங்களா இருக்குமுன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா.....
மீன்களுக்கு வாங்கிப்போடவாம்! விதவிதமான பொதிகள்!  ஆமா....  பாம்புக்கு வாங்கிப்போட ஏதும் விக்கலையா?

பாம்பா.....    ஏது? எல்லாம் கார்க்கோடனுக்குக் கட்டிக் கொடுத்த நவரத்தின மாளிகையிலே குடி இருக்கப் போயாச்சே!  இந்த வெறுந்தண்ணியில் யாரால் இருக்க முடியும்?
நாமும் மூணு பொதிகளை வாங்கி நாங்க மூணு பேரும்  ஆளுக்கொன்னா எடுத்துக்கிட்டுப்  பொரி போடறோம். நம்மவர் இங்கே எங்கூரில் இருக்கும் ஹேக்ளி பார்க்கில் வாத்துகளுக்கு ப்ரெட் போடறதுமாதிரி  அப்படியே வாரி வாரி போட்டு அஞ்சு விநாடியில்  பொதியைக் காலி பண்ணிட்டார்.
எல்லாம் பெரிய பெரிய மீன்கள். நல்லாப் பழக்கப்பட்டுருக்கு இந்த தீனிக்கு. ஆள் போய் கரையில் நின்னதும்  ஆ ஆ ன்னு வாயைத் திறந்துக்கிட்டுக் கூட்டங்கூட்டமாத் தாவி வருதுங்க!


இந்த மீன் எல்லாம் எப்படி இங்கேன்னு கேட்டதுக்கு 'தானாவே வந்துருச்சு' ன்னு  குளத்துக்கு ஒரு அற்புதமகிமையைக் கூட்டி வச்சுட்டாங்க. ஹாஹா....  புத்த  பிக்ஷுக்கள் கொண்டு வந்து குளத்துலே விட்டுட்டுப் போயிருக்காங்க  என்பதுதான் உண்மை நிலவரம்.


இந்தக் குளத்துக்கு புராண கால சம்பவங்களோடு  சம்பந்தம் இருக்கு என்பதால் புனிதக் குளம் என்று அறிவிச்சுட்டு இதை நிர்வகிக்க ஒரு  சங்கம் ஏற்படுத்தி,  அதுக்குன்னு ஒரு டிக்கெட் போட்டு வசூலிக்கறாங்க.  டிக்கெட் கவுண்ட்டரில் வேலை செய்யும்  ஆட்கள், செடிகொடிகளைக் கவனிச்சு வளர்க்கும் பணியாளர், கூட்டிப்பெருக்கித் துப்புரவு செய்பவர் இப்படி எல்லாருக்கும்  சம்பளம் கொடுக்கணுமில்லையா?
இவ்ளோ பெரிய ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல்  எதுவும் கூடாது. கார்க்கோடக் நாக்ராஜா, நாக்ராணி வசிக்கும்  புனித ஏரி என்பதால்  அதுக்குள்ள மரியாதையைக் கொடுக்கணுமுன்னு  அறிவிப்பு.

இந்தக் கார்க்கோடகன்தானே  நளமகாராஜாவைக் கடிச்சு  அவர் உருவத்தையே மாற்றுனது! அதனால்தானே பாவம்....    அவர் சமையல்காரனாப்போய் வேலை செஞ்சார்.....


'இங்கே ஒரு ரெண்டு கிமீ தூரத்துலே இன்னொரு  சுவாரசியமான  இடம் இருக்காம்.  வாங்க போகலாம்! '

ஓம் நம சிபாயா ..........   (வ வராது!)

தொடரும்..........:-)

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.  Happy Vishu !

நேபாள தேசத்திலும் புத்தாண்டு இதே சமயம்தான்.  அவர்களுக்கும்  புத்தாண்டு  வாழ்த்துகளைச் சொல்வது உங்கள் துளசிதளம் :-)

12 comments:

said...

மறுபடியும் சுவாரஸ்யமான விவரங்கள். இந்த யாருக்கு வாரிசு யார் விவரங்கள் எவ்வளவு நினைவு வைத்துக் கொண்டாலும் எனக்கு குழப்பம்தான்!

said...

நீங்க ஸர்ப்பதோஷத்துக்காக தடாகத்தைப் பார்க்கப் போனீங்களா அல்லது வைரவைடூரிய ரத்னமாளிகையை நினைச்சுப் போனீங்களான்னு சந்தேகம் வந்துருச்சு. மீன்கள்லாம் ரொம்பப் பெருசு.

உங்களிருவருக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

அருமை. நன்றி.

said...

ஸ்வாரஸ்யம்....

தொடர்கிறேன்.

said...

பாம்புராணின்னு நம்மூர்ல ஒரு பிராணி உண்டு. நேபாளத்துல பாம்பு ராணிக்கு ஒரு ஏரியே இருக்கு.

புராணக் கதைகளைச் சேக்குறதுல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டாங்கன்னு நெனைக்கிறேன். சில கதைகள் ரெண்டு மூனு இடங்கள்ள அதே ஆட்களை வெச்சுச் சொல்லப்படுது.

மீனெல்லாம் நல்லா கொழுகொழுன்னு இருக்கு. பொரி சாப்டு பொரியுருண்டை மாதிரி இருக்கும் இந்த மீன்களைப் பிடிச்சு வித்துருவாங்களான்னு தெரியலையே.

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மைதான் எனக்கும் குழப்பங்கள் உண்டு. ஆனால் 'கதை' உருவாக்குனவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை, பார்த்தீங்களா !!!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தடாக வாசலுக்குப் போகும் வரை ஸர்ப்பம் பற்றிய எண்ணம் ஏதும் இல்லை. நம்ம பவன் கொண்டு போன இடங்கள் இவையெல்லாம். என் லிஸ்ட் படி தக்ஷிண்காளியும், இன்னும் ரெண்டு இடங்களும்தான்! ஆனால் எதிர்பாராமல் சுவாரஸியமான இடங்களுக்குப் போயிருந்தோம்! பவனுக்குத்தான் நன்றி சொல்லணும். கூடவே பட்டியல் போட்டுக் கொடுத்த லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷுக்கும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மனம் நிறைந்த நன்றிகள்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

மீனைப் பிடிக்கறது மாதிரி தெரியலை. அதுபாட்டுக்குப் பல்கிப்பெருகிக் கிடக்குது!

ஒரே கதையை பல இடங்களில் வச்சு அதுக்கேத்தமாதிரி சம்பவம் நடந்தாப்லெ சொல்லவும் ஒரு திறமை வேணும்தானே! எங்கே பார்த்தாலும் திபெத்திய பௌத்த கலாச்சாரமும் மஞ்சுஸ்ரீயும் தான்!

said...

"இந்தக் கார்க்கோடகன்தானே நளமகாராஜாவைக் கடிச்சு அவர் உருவத்தையே மாற்றுனது! அதனால்தானே சந்த்ரமதிக்கு புருஷனையே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமப் போயிருச்சு...ப்ச்.... பாவம்...." - நளனோட மனைவி தமயந்தி தானே..!!

said...

வாங்க பார்கவி.

அட! ஆமால்லே!!!! கஷ்டப்பட்ட ராஜான்னு மனசுலே வந்து ஹரிஷ்சந்த்ரனை நினைச்சுக்கிட்டேன்போல! இப்படி ஆள் மாறாட்டம் செஞ்சுட்டேனே.... ப்ச்....

நல்லவேளை.... கவனிச்சுச் சொன்னீங்க.

இதோ மாத்திடறேன்.

ரொம்ப நன்றிங்க.