Friday, November 18, 2016

போண்டா இல்லாத பதிவர் சந்திப்பு உண்டோ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 98)

அதே மண்ணச்ச நல்லூர் வழியா  திரும்பிப்போறோம்.  அண்ணனுக்கு செல்லில்   திருவெள்ளறை தரிசனம் ஆச்சுன்னு  தகவல் சொன்னேன்.  அப்ப அண்ணி, 'ஸ்வஸ்திக் டிசைனில் இருக்கும்   மாமியார் மருமகள் குளத்தைப் பார்த்தேதானே?'ன்னாங்க!

ஙே..............

போன 2014 நவம்பர் 2 ஆம் தேதி வாங்குன பல்புதான் மேலே :-)

போனமுறை விட்டுப்போனதை இப்பப் பிடிச்சுடலாம். நாலரை  கிமீ தூரம்தானே....  சலோ திருவெள்ளறை!  சீனிவாசனிடம் சொன்னதுக்கு,  தலையாட்டினார். இப்போ போகுமிடத்துக்கு வேற வழி.

கோவில் கண்ணில் தென்பட்டப்போ மணி பதினொன்னே முக்கால். உச்சி பூஜை முடிஞ்சு பூட்டப்போகும் நேரம். நமக்குப் பார்க்க வேண்டியது கோவிலுக்குக் வெளியே என்பதால் மதிலைச்சுத்திக்கிட்டுப் பின்பக்கமாப் போனோம். முள்மண்டிக்கிடக்கும் வழி.

கிணறு பற்றி சின்னதா ஒரு  குறிப்பு. தொல்லியல்துறை, தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்கு.  கல்வெட்டும் ஒன்னு! தமிழ்நாடுதானே....  அப்ப கொஞ்சம் கவனமாப் பார்த்து எழுதி இருக்கப்டாதோ? கட்டுப்பட்டில் இருக்காமே.....

ஒருவழியா   முள்காட்டைத் தாண்டிப்போனால்  ஒரு மேடையில் புள்ளையாரும் நாகருமா இருந்தாங்க. அப்பப்ப விளக்கு வைக்கிறாங்க போல!


கிணத்தாண்டைப் போய்ப் பார்க்க முடியாதபடி கம்பிவலைத் தடுப்பு வேலி போட்டுவச்சுருக்காங்க.  நல்லதுதான். இல்லைன்னா சனம் விட்டு வைக்குமோ? இந்நேரம் அதைக் குப்பைத்தொட்டி ஆக்கி நிரம்பி வழியாதோ?  :-(
எட்டாம் நூற்றாண்டில்  இருந்த பல்லவமன்னன் தந்திவர்மனின் ஆட்சியில்  ஆலம்பாக்கத்து விசய நல்லூழான் கம்பன் அரையன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாகத் தகவல். இந்தக்கிணற்றை மாற்பிடுகு கிணறு என்று(ம்) சொல்லி  இருக்காங்க.  இந்தப்பெயர் கம்பன் அரையனின் பட்டப்பெயர்களில் ஒன்று என்பதாக ஒரு தகவல்.



ஸ்வஸ்திகாவின் வடிவில் இந்தக் கிணற்றைக் கட்டி இருக்காங்க. வெவ்வேற திசையில் நாலு படிகள் கீழே இறங்கிப் போகுது. தண்ணீர் இருக்கும் நடுப்பகுதியில் நாலும் ஒன்றை ஒன்று பார்த்தா மாதிரிதானே  படித்துறை இருக்கும். எப்படி இந்தக் கிணத்துக்கு மாமியார் மருமகள்  கிணறு என்ற பெயர் வந்திருக்குமுன்னே  எனக்குப் புரியலை. இறங்கிப்போகும் படிகள் மட்டும் தான் நாலு பக்கம் நாலு திசையில்! மாமியார் குளிப்பது மருமகளுக்குத் தெரியாது, மருமகள் குளிப்பது மாமியாருக்குத் தெரியாதுன்னு  சொல்றாங்க.....  கிட்டப்போய் பார்க்க முடிஞ்சுருந்தா  நெசந்தானான்னு  பார்த்துருக்கலாம்........ மாமியாருக்கும் மருமகளுக்கும் மூட்டி விடறது  ஆதிகாலத்துலேயே இருந்துருக்கு !

புலம்பிக்கிட்டே வலையில் தேடுனப்ப, தமிழ்மரபு அறக்கட்டளை சுபாஷினி (Subashini Tremmel)அவர்கள் வலையில் ஏத்தி இருக்கும்  வீடியோ கிடைச்சது.  அன்னாருக்கு நம் நன்றிகள்.   3.37 நிமிசம் ஓடும் இதைப் பார்த்தால்....  நான் நினைச்சது சரியாப்போச்சு.
கூகுளாண்டவர் அருளிய படம்.  பட உதவி  பாராந்தகன். நம் நன்றிகள்.

வேலிப்பகுதிக்குள்ளில் இன்னொரு தகவல் பலகை. இதுவும் தமிழக அரசு வச்சதுதான். மார்ப்பிடுகு பெருங்கிணறு. பக்கத்துலேயே  ஒரு மேடையில் நாலைஞ்சு சாமி சிலைகளும், தரையில் ரெண்டு நந்திகளும்.
தமிழ்நாட்டிலே இதைப்போன்ற ஸ்வஸ்திகா வடிவில் வேற கிணறு இல்லையாம். நமக்கான ஸ்பெஷலா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு :-)

நிலையாமையைப்பற்றி எழுதுன கல்வெட்டு உள்ளே இருக்காம். படத்தைப் பார்த்தா.......  நிலையாமைஅந்த மிருகத்துக்குத்தான் போல :-(
கொஞ்சம் படங்களைக் க்ளிக்கிக்கிட்டுக் கிளம்பி   கோவிலைச் சுத்திக்கிட்டு,   கோவிலுக்குள்  வந்து போகன்னு தசாவதாரங்கள் இருக்கும்  அலங்காரவாசல் வழியா  மெயின்ரோடுக்கு வந்தோம்.   இந்த தசாவதாரங்கள்  மேலே எனக்கொரு கண்ணு இருக்கு. நம்ம வீட்டுக்கு ஒரு செட் வாங்கிக்கணுமுன்னு  ஆசை.  பத்து பொம்மை கனம். கொண்டு போறதுக்குக் கஷ்டமா இருக்குமுன்னு  ஒவ்வொருமுறையும் நம்மவர் எதாவது  சொல்லி வாங்கவிடமாட்டார்.  ( அடுத்துப்போன  பயணத்தில்  கனமில்லாத பத்து பொம்மை வாங்கிட்டேன்:-) அதானே... கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாதுதானே !) 
திருவெள்ளறை விட்டு மண்ணச்சநல்லூர்  கடைவீதி வந்ததும்,  தாகம் தீர்த்துக்க இளநீர் கிடைச்சது.   ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம். 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கே வந்துருக்கு'ன்னு  நேத்து  நம்ம   ரோஷ்ணியம்மா கொடுத்த தகவலின் படி, அதைத் தேடிப்போய்  கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கிட்டேன்.  இன்று மாலை 'போண்டாவுடன்'  பதிவர் சந்திப்பு நம்ம  தோழி  கீதா சாம்பசிவம் வீட்டுலே ஏற்பாடாகி இருக்கே!

இந்த சந்திப்பைப் பற்றியும் கலந்துகொண்ட பதிவுல நண்பர்களின் பதிவுகளின் சுட்டிகளையும் ஏற்கெனவே சில பதிவுகளுக்கு முன் சொல்லிட்டதால் இப்ப விஸ்தரிக்கலை. ஆனாலும் சில படங்களை மட்டும் போட்டுக்கறேன்.




மொட்டைமாடிக்குப்போய் கோபுரதரிசனம், அந்திமாலைப்பொழுது  சூரியன், அரட்டை  அரங்கம் :-)




கீதாம்மா வீட்டில் இருந்து கிளம்பி அறைக்குப் போயிட்டுக் கோவிலுக்குப் போகலாமேன்னு ஹயக்ரீவா போனால்... நெருங்கிய தோழி ஃபோன் செஞ்சு நலம் விசாரிச்சுட்டுக் 'கோவிலுக்கு ரொம்பப்பக்கம் மச்சினர் வீடு இருக்கு. உங்களைப்பத்தி அவுங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். ஒரு எட்டுப்போயிட்டு வாங்க'ன்னு சொன்னதால்  முதலில் அங்கே போனோம்.
பழக்கமான தெருதான். ஆண்டாளின் வீடு அங்கேதானாக்கும்:-) பெரிய சைஸுக்கு ஏத்தமாதிரி பெரிய வீடு அவளோடது :-)

அந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு சிரமமும் இல்லை.  மாடி ஏறிப்போய்க் கதவைத் தட்டும்போதே....  'இப்பதான் நீங்க வர்றதா போன் பண்ணினாள் உங்க ஃப்ரெண்ட் ' என்றபடி  சிரிச்சமுகமா ஒரு வரவேற்பு.
80+ இல் இருக்கார் பெரிய மச்சினர். தம்பதிகள் இருவரும் பெருமாளுக்குப் பக்கத்துலே இருக்கணும் என்ற ஒரே எண்ணத்துடன், வேலையில் இருந்து ஓய்வு கிடைச்சதும் இங்கே வந்துட்டாங்க.

நாலாயிரத் திவ்யப்ரபந்தம் பாடல்களுக்கு  விளக்கம் எழுதிக்கிட்டு இருக்கார். இதுவரை எத்தனை ஆயிரம் முடிச்சாரோ தெரியலை.....  எல்லாம் நோட்டுப்புத்தகத்தில் கையால் எழுதி வச்சவை. அதைப் பற்றிக் கேட்டப்ப, சட்னு நோட்புக்கைத் திறந்து ஒரு பாடலுக்கு விளக்கம் சொன்னபோது அசந்து போயிட்டேன்.
நல்ல பொக்கிஷம். வீணாகப் போயிடக்கூடாது. தோழியிடம் சொல்லி இருக்கேன்.... இவற்றையெல்லாம் சேகரிச்சு கணினியில் பாதுகாத்து வச்சு, சீக்கிரம் புத்தகமாப் போட்டால் புண்ணியம்னு.

நம்மவர் சட்னு  அவர் பேசறதை சின்ன வீடியோ க்ளிப்பாகப் பதிவு செஞ்சார். இங்கே போடலாமேன்னு பார்த்தால் பக்கவாட்டில் ஓடுது படம்:-(  ப்ச்....
சீரங்கத்தில் எனக்கு     இன்னும்   ஒரு குடும்பம் கிடைச்ச மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பும்போதே எட்டரை மணி. கண்ணெதிரே ஜொலிக்கும்  வெள்ளைக் கோபுரம் வாவான்னு கூப்டது. ஒரு நிமிட் உள்ளே போய் பரமபதநாதரை மட்டும் தரிசனம் செஞ்சுக்கலாமேன்னு பாய்ஞ்சு ஓடினேன்.  அதுக்குள்ளே மூடி இருந்தாங்க....  உள்ளே கண்ணாடி முன் மின்னும் ஆண்டாளின்  அழகைப் பார்க்கமுடியலையேன்னு  சின்ன சோகத்தோடு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
பாலாஜிபவனில் விதவிதமான மெனு! அதில் எங்களுக்கான இட்லி ரெண்டு, நாலு வகை சட்னி சாம்பாரோடு :-)

தொடரும்.........:-)


15 comments:

said...

very fast! :P

said...

நந்திவர்மன் ஓகே, அதென்ன தந்திவர்மன்? அந்தக் காலத்தில் தந்தி என்று இதைக் குறித்துப் பெயர் வைத்திருப்பார்கள்!

கிணறு சுவாரஸ்யம். ஆனால் தண்ணீரைத்தான் காணோம்!

காணொளி பார்த்தும் மாமியார்-மருமகள் மர்மம் விளங்கவில்லை!

அடடே.. கீதாக்காவும் மாமாவும்!

said...

அடா, அடா, போண்டாவுடன் பதிவு சந்திப்பு என்றால் நானும் தலையைக் காட்டி இருப்போனே. படஙகள் அருமை, கிணற்றை இப்பத்தான் பார்கின்றேன். நன்றி.

said...

அருமை. நன்றி டீச்சர்.

said...

மாமியார் மருமகள் சமாச்சாரம் எனக்கே புரிஞ்சிருச்சு. பெண்களுக்குப் புரியலைன்னா அதிசயமா இருக்கே.

இன்னைக்குக் கிணத்துல தண்ணி இல்லாதப்போ கிணத்தோட அடிப்பாகம் வரைக்கும் போக முடியுது. அப்படிப் போனாதான் மாமியாரும் மருமகளும் ஒருத்தரையொருத்தர் பாக்க முடியும்.

ஆனா கிணத்துல தண்ணி இருந்தா? அது படி வரைக்கும் வந்துறாதா? பாதி வழியிலேயே தண்ணி எடுத்துட்டோ குளிச்சிட்டோ போனால் அடுத்த துறைல யார் இருக்காங்கன்னு தெரியாதே. அதுதான் மாமியாரும் மருமகளும் மூஞ்சி பாக்காத கிணறு. :)

அருமையான பதிவர் சந்திப்பு. அந்த டிபன் தட்டுல சிவப்பா சதுரமா ஒன்னு இருக்கே. அது என்னது?

said...

பதிவு அருமை. அந்த திவ்யப்பிரபந்தத்துக்க உரை எழுதிக்கொண்டிருக்கும் ஆர்வலரை லிங்க் செய்ய இயலுமா? டிசம்பரில் அரங்கம் செல்லும்போது பார்க்க நினைக்கிறேன்.

அந்தத் தட்டைப் பார்த்தவுடன் சிவப்புத்தாள் சுற்றிய சோன்பப்டி நீங்கள் வாங்கியது, தேங்காய் பர்பி கோபு சார், போண்டா கீதாமேடம் வீட்டுக் கீழ் உள்ள கடை, கேசரி (கீதா மாமி பண்ணுனது) எல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனால் இது ரொம்பகாலம் முந்தியே! டைரி மாதிரி எழுதுவதால் தாமதம்.

said...

ரசித்துப் படித்தேன் படித்து ரசித்தேன்

said...

உங்கள் எழுத்தே ரசனைதான். கூடவே மலரும் நினைவுகளில் போண்டா. ருசித்துப் படித்தேன்.

said...

திருவெள்ளறை பார்க்கவேண்டிய இடமாகும். நண்பர்களின் சந்திப்பு மற்றும் உரையாடல் என்ற நிலையில் அனைவரையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

said...

ஸ்வஸ்திகா கிணறின் கல்வெட்டில் உங்கள் இருவரின் புகைப்படத்தையும் பதிவு செய்துவிட்டீர்கள்.

said...

அருமை....
படங்களில் அனைவரையும் பார்த்து ரசித்தோம்...

said...

நேற்று இரவு இன்று காலை வரை விட்டுப் போன பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். எளிய மனிதர்கள், பல இடங்கள், பல தகவல்கள் எல்லாமே அப்படியே கொடுத்துக்கிட்டு வர்றீங்க. நிச்சயம் இந்த வலைபதிவுகள் என்பது இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்? என்பது பற்றி பல முறை யோசித்துக் கொண்டே இருக்கின்றேன். சில வாரங்களுக்கு வலைபதிவுகளில்பல மாற்றங்கள் செய்துள்ளார்கள். இன்னமும் மாற்றுவார்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவைப்படும் இடத்திற்காக பணம் கட்டி தொடர்ந்து செயலாக்கில் இருக்குறீங்க என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த படங்களை சேமிப்பதும், இந்த எழுத்துக்களை ஆதாரங்களை அடுத்த சில தலைமுறைக்காவது கடத்த வேண்டுமே? இப்போது நான் ஊருக்குச் சென்று வந்தாலும் புதிய இடத்திற்கு சென்று வருவது போல உள்ளது. 25 வருடங்களில் முக்கால் வாசி மாறி விட்டது. புதிய மனிதர்கள் என்று நானே அங்கே அந்நியப்பட்டது போல உள்ளது.

said...

அக்கா, அருமையான பயணக்கட்டுரைகள் பலமுறை திருவெள்ளறை மற்றும் திருபஞசலியை கடந்து சென்றாலும் அந்தகோவில்களைப்பற்றி அறிந்து கொள்ளப்படாத பலவிசயத்தை தெளிய வைத்தமைக்கு மிக்க நன்றி.


அவை அனைத்தையும் மறக்காமல் புத்தகமாக வெளியிட்டு இந்த தமிழுக்கு உதவி செய்வீர்கள் என நம்பும்

அன்புடன்
சிவபார்கவி
(துரை.தியாகராஜ்) திருச்சி.

said...

போண்டாவுடன் பதிவர் சந்திப்பு அன்று மிகவும் இனிமையாய் அமைந்தது. திருவெள்ளறைக்கு சென்ற போது நாங்கள் இந்த குளத்தை பார்க்கலை..

said...

பதிவர் சந்திப்பு ,பதிவர்கள் பலரின்படங்களையும் கண்டு கொண்டதில்மகிழ்சி.