Friday, June 29, 2012

ரோமாபுரியில் காணாமல் போகாதே!!!!

ராத்திரி பத்துமணி இருக்கும். பத்து வயசு சித்தார்த் காணாமப் போயிட்டான். அதுவும் பாஷை தெரியாத ரோமாபுரியிலே! நாங்கெல்லாம் நின்னு பார்த்துக்கிட்டு இருக்கும் போதே! இத்தனைக்கும் அவனோட அம்மாவும் தங்கையும்கூட அங்கெ தான் எங்களோட இருக்காங்க.

அதெப்படி?

இன்னிக்குச் சாப்பாட்டுக்கு ஒரு ரெஸ்டாரண்டுலே ஏற்பாடு செஞ்சாச்சு. 35 பேரைச் சுமந்துக்கிட்டுப் போகுது பஸ். எல்லாரும் பலநாடுகளில் இருந்து வந்து இந்த சுற்றுலா பஸ்ஸில் சங்கமிச்சாச்சு. 19 நாள், 7 நாடுன்னு ஒரு கணக்கு. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இதுலே 21 பேர் இந்தியர்கள். எல்லாம் வெவ்வேற மாநில மக்கள். அப்ப, பாக்கி ஆளுங்க? பலநாட்டு வெள்ளைக்காரங்க.

நாலரை மணி போல ஆச்சு, இங்கே இந்த ஊருக்கு வந்து சேர்ந்தப்ப. ஆறுமணிக்குக் கிளம்பிப் போகணுமுன்னு  Bபென்னி,நம்ம டூர் கைடு சொல்லிட்டார். போற போக்குலே ஊரையும் ஒரு வலம்வந்து, ட்ரெவி நீரூற்று(Fontana di Trevi) பார்த்துட்டுச் சாப்பிடப் போனோம். அந்த நீரூற்றுலே எதாவது மனசுலே வேண்டிக்கிட்டு முதுகுவழியாக் காசைச் சுண்டி எறிஞ்சா நினைச்சது நடக்குமாம்.

சாப்பிடப்போன இடத்துலே நம்ம அதிர்ஷடம் பாருங்க, அங்கே ஒரு இந்தியர் (மாணவராம்), பரிமாற வந்தார். எங்களுக்கோ அவரைப் பார்த்ததும் ஒரு ஒட்டுதல். அவருக்கும் வாயெல்லாம் சிரிப்பு. சாப்பாடு நடக்கும்போதே, மூன்று மெக்ஸிகன் பாடகர்கள் எங்க மேஜையைச் சுத்தி நின்னு கிடார் வாசிக்கறதும், பாடறதுமா தூள் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க. ஒருவேளை சாப்பாட்டு ருசியை மறக்கடிக்கவோ? இருக்கும்!

வெளியே வந்தப்பவே ஒம்போதரைக்கு மேலே ஆச்சு. பஸ் வரட்டுமுன்னு கூட்டமா நின்னுக்கிட்டு இருக்கோம். அப்ப அங்கே ரெண்டு மூணு 'குடி'மகன்கள் தள்ளாட்டம் போடறாங்க. சின்னச் சண்டையா நடக்குது. ஒருவர் என்னமோ பினாத்திக்கிட்டே கீழே மயக்கமா விழுந்துட்டார். ஆர்வக்கோளாறிலே நாங்க வேடிக்கை பாக்கறொம். திடீர்னு சித்தார்த்தின் அப்பா ஹிந்தியிலே கூச்சல் போடறார். அவரோட 'பேக் பாக்' யாரோ அறுத்து எடுத்துக்கிட்டு ஓடறாங்கன்னு. அடுத்த நொடி இவர் அவனைத் துரத்திக்கிட்டே ஓடறார். வெய்யல் காலமா இருந்தாலும், இருட்டத்துடங்கி ரொம்ப நேரமாச்சு.

என்ன ஆச்சுன்னு புரியறதுக்குள்ளேயே அப்பா ஓடுன திசையிலே ஓடத் துவங்கின சித்தார்த்தைக் காணொம். இதுக்குள்ளே ரெஸ்டாரண்ட்டுலே பில் செட்டில் செஞ்சுக்கிட்டு இருந்த பென்னி வெளியே வந்தார். திருடன், அப்பா, மகன் எல்லாம் ஒவ்வொருத்தரா ஓடுன விஷயம் கேட்டு திகைச்சுட்டார். சித்தார்த்தின் அம்மாவும் தங்கையும் பயந்து அழத் தொடங்கிட்டாங்க.
எனக்கு வலது பக்கத்தில் சித்தார்தின் தங்கை மேஹா. தொட்டடுத்து சித்தார்த்.


ரைன் நதியில் படகில் போகும்போது எடுத்தது.

பையன் போன திசையையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கோம். அந்தப் பக்கம் கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாம்னு கிளம்புன எங்களை 'கைடு' தடுத்துட்டார். நாங்களும் காணாமப் போனா? ஓடுன பையன் திரும்பி வந்துருவான்னு வேற எங்கேயும் போகாம அதே இடத்துலெயெ நின்னு ஒரு முக்காமணி நேரம் போச்சு.

இனியும் இருந்து பலன் இல்லை. முதல்லெ உங்களையெல்லாம் ஹோட்டலுக்கு அனுப்பிடறேன். நான் போய் விசாரிக்கறேன்'னு சொல்லி கைடு எங்களை எங்க பஸ்லே ஏத்தி விட்டுட்டார். அழறவங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு வர்றோம். திருட்டுப் போன பையிலேதான் பாஸ்போர்ட்டு, டிக்கெட்டு எல்லாம் இருக்காம். இப்ப அதுவேற கவலையாச்சு.

ஒரு இடத்துலே எங்க பஸ்ஸை சிக்னல் கொடுத்துக்கிட்டே ஓவர்டேக் செஞ்சது இதே ட்ராவல் கம்பெனியின் பஸ் ஒண்ணு. அது நின்னவுடனே எங்க பஸ்ஸையும் நிப்பாட்டினாரு எங்க ட்ரைவர் மொரீட்ஷியோ. என்ன ஏதுன்னு விவரம் கேட்கலாமுன்னு கதவைத் திறந்தவுடன், உள்ளெ ஏறி வர்றது யாருங்கறீங்க?

சித்தார்த்! எங்க வண்டிக்குள்ளே ஏகப் பரபரப்பு, கூச்சல், அமளி. நாந்தான் இருக்கேனே நாட்டாமை. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். எப்படி இந்த வண்டியைக் கண்டுபிடிச்சான்?

அவன் ஹிந்தியிலே சொன்னதையெல்லாம் , பாஷை தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த வெள்ளைக்காரங்களுக்கும், மொரீட்ஷியோவுக்கும் இதையெல்லாம் ஆங்கிலத்துலெ மொழி பெயர்த்துச் சொன்னதும் வண்டி பூரா ஒரு குலுங்கு குலுங்குச்சு, எங்க கைதட்டல் ஓசையாலே! லிட்டில் ஹீரோ சித்தார்த். தட்டு கையை!!!

எப்படி வந்தானாம்?

அப்பா போனதிசையிலேயே இவனும் ஓடியிருக்கான். ஒரு சந்துலே திருடனும் அப்பாவும் திரும்புறதைப் பார்த்துட்டு இவனும் அங்கெ திரும்புனப்ப திருட்டுக்கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு ஆள் குறுக்கே இவன்மேலே பாய்ந்திருக்கான். சித்தார்த், (டெல்லியிலே கராத்தே படிக்கச் சேர்ந்திருக்கானாம்) ஒரு உதை விட்டானாம். திருடன் இதை எதிர்பார்க்காததாலே இவனைப் பிடிச்ச பிடியை விட்டதும் இவன் கண்ணுமண்ணு தெரியாம ஏதேதோ சந்துலே புகுந்து ஓடி எப்படியோ ஒரு மெயின் ரோடைப் பிடிச்சுட்டான். நம்ம அதிர்ஷ்டம் அந்தப் பக்கம் நம்ம ட்ராவல் கம்பெனி பஸ் வந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம வண்டின்னு அதை நிறுத்திஇருக்கான். அப்புறம் மொரீட்ஷியோ பேரையும் அந்த வண்டியிலே டூர் வந்த விவரமும் சொல்லி இருக்கான். நல்லகாலம், அந்த ட்ரைவருக்கும் மொரீட்ஷியோவைத் தெரிஞ்சிருக்கு. நண்பனாம். இந்த ட்ராவல் கம்பெனி டூர்லே வர்றவங்க இங்கே வழக்கமாத் தங்கற ஓட்டலுக்கு கொண்டுவந்து விடலாமுன்னு நினைச்சு அங்கே போறவழியிலேதான் எங்க பஸ்ஸைப் பார்த்துட்டு நிறுத்தி இருக்கார் அந்த டிரைவர்.

சித்தார்த்தைப் பார்த்ததும் அவனோட அம்மாவுக்கும், தங்கைக்கும் சிரிப்பும் அழுகையுமா வர்றது. அப்பாவைத்தான் காணோம்.

இரவு, ஓட்டலுக்குப் போனதும் அவுங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டுக் கவலையோட தூங்கப்போனோம். மனசே சரியில்லை. பொழுது விடிஞ்சதும் அவுங்க அறைக்கு ஓடுனோம். காலையிலே அஞ்சுமணிக்கு அப்பா வந்துட்டாராம். அப்பாடா........... 


என்ன ஆச்சு? 


ஓடிக்கிட்டு இருக்கும் அப்பாவைப் போலீஸ் பிடிச்சுக்கிச்சு. பாஸ்போர்ட் கையில் இல்லாததாலே ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டாங்க. அங்கே இவரை விசாரிச்சப்ப இவர் எல்லாம் சொல்லி இருக்கார். ஹோட்டல் பேரைக் கேட்டப்ப இவருக்குத் தெரியலை. சந்தேகக்கேஸ்னு தீர்மானிச்சுட்டாங்களாம். திருடனைப் பிடிக்காம திருட்டுக் கொடுத்தவரைப் பிடிச்சு வச்சிருக்காங்க. இதுலே பாஷைத் தகராறு வேற. 


இதுக்குள்ளே நம்ம டூர் கைடு பென்னி, போலீஸ் தலைமையகத்துக்குப் போன் செய்து குற்றம் நடந்ததையும், துரத்திக்கிட்டு ஓடுன டூரிஸ்ட்டையும் பத்திச் சொல்லி இருக்கார். அங்கே இருந்து எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் செய்தி போய் இருக்கு. அப்பா இருக்கற ஸ்டேஷன் விவரம் தெரியவந்துச்சு. இதுக்கே மணி நாலு ஆயிருச்சாம். ஹோட்டல் பேரைக் கேட்டுக்கிட்டு, அவுங்களே அனுப்பி வைக்கறென்னு சொல்லிட்டாங்களாம். பென்னி இங்கே ஹோட்டலுக்கு வந்து சித்தார்த் குடும்பத்துக்கு செய்தி சொல்லிட்டுத் தூங்கப் போனாராம்.


அப்பா'வைக் கூட்டிக்கிட்டு ஒரு போலீஸ்காரர் டாக்ஸியிலே வந்துருக்கார். இங்கே வந்து சேர்ந்ததும் டாக்ஸிச் சார்ஜ் போகவரக் கொடுக்கணுமுன்னு அதையும் வாங்கிக்கிட்டே போனாராம். இப்ப பாஸ்போர்ட்டுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டப்ப, அம்மா சொல்றாங்க'பாஸ்போர்ட் இன்னும் மத்ததெல்லாம் என் பெட்டியிலேயே இருக்கு. பதற்றத்துலே அந்தப் பையிலே இருக்கறதா நினைச்சுக்கிட்டோம்'னு. 


அப்பாடா................. 


திருட்டுப்போனப் பையிலே கேமெராவும், கொஞ்சம் காசும்தான் இருந்ததாம். போனாப் போகட்டும். ஆனா பாருங்க, எவ்வளவு ஆபத்து! அப்பாவுக்கு வேற ஏதும் நடந்திருக்கலாம்தானே? திருடன் கையிலெ ஆயுதம் இருந்திருந்தா? சித்தார்த் வழி தெரியாம ஓடுனப்ப ட்ராவல் பஸ்ஸை பார்க்காம இருந்திருந்தா? 


அர்த்தராத்திரியிலே, பாஷை தெரியாத புது ஊருலே ஒரு ச்சின்னப்பையன் காணாமப் போய்க் கிடைச்சது அதிசயம்தான்!


எல்லாவிவரமும் கேட்டப்பத்தான் 'நம்மளில் எத்தனை பேருக்கு நம்மோட ஹோட்டல் பேரும், விலாசமும் தெரிஞ்சிருக்கு?'ன்னு ஒரு சந்தேகம். அநேகமா எல்லோருமெ இந்தக் கவலை இல்லாம இதுவரை இருந்துருக்கோம், கூட்டமா பஸ்லெ போறது,வர்றதுன்னு! 


அதுலே இருந்து புதுசாக் கத்துக்கிட்டது, எந்த ஊருக்குப் போனாலும் ஹொட்டலுக்குப் போனதும் அங்கே இருந்து விவரம் அடங்கின கார்டை எடுத்துக் கைப்பையிலே வச்சுக்கணும். 


திருடனைத் துரத்திக்கிட்டு ஓடவேக்கூடாது. 


எல்லாத்தையும் விட ரொம்பவே முக்கியம், 'காணாமப் போகக்கூடாது'


நாங்க உலகை இடம் வந்தபோது நடந்த சம்பவங்களில் இது(வும்) ஒன்னு.




ஆமாம்............ இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்? ரோம் என்றவுடன் கொலோஸியம் நினைவுக்கு வந்துருச்சுல்லே!

19 comments:

said...

திடுக்கிடும் அனுபவம் தான்.

எந்த ஊருக்குப் போனாலும், இருக்குமிடத்தைப் பற்றி விவரங்கள் சேகரிச்சு வைச்சுக்கிறது ரொம்ப நல்லது...

said...

நல்ல அனுபவம், இது போல முன்னர் லேனா தமிழ்வாணன் ,நிறைய பயணக்கட்டுரை எழுதுவார், பார்த்த இடத்தை மட்டும் இல்லாமல் எப்படி நடந்துக்கணும்னு விவரதோட, உங்க கட்டுரையும் அப்படி இருக்கு.

இங்கே டிரெயின் மூலம் கூப்டு போற டூர் , அப்புறம் பஸ், போகும் போதே விசிடிங் கார்ட் போன் நெ, எல்லாருக்கும் கொடுத்துடுறாங்க,டிக்கெட் எல்லாம் அவங்களே வச்சிப்பாங்க.

அது போல பயணிகள் பாஸ்போர்ட் எல்லாம் கைடு வாங்கி வச்சிக்கிட்டு, கடைசியில் திரும்ப தரலாமே.காணாமல் போயிடும்னு டென்ஷன் இருக்காது.

said...

ரொமபவே சுவாரஸ்யமான அனுபவமா இருக்கு இப்ப படிக்கறப்ப. அப்ப திகில் வினாடிகளாத்தான் கழிந்திருக்கும் இல்லை... அயல்நாட்ல எங்க தங்கினாலும் ஹோட்டல் விசிட்டிங்கார்டை வாங்கி வெச்சுக்கணும்னு தெரிஞ்சுககிட்டேன். (என் லைஃப்ல பயன்படுமான்னுதான் தெரில டீச்சர்). அருமையான பகிர்விற்கு நன்றி.

said...

//எல்லாத்தையும் விட ரொம்பவே முக்கியம், 'காணாமப் போகக்கூடாது'//

அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம், டூரைப் பத்தியே நினைக்கக் கூடாது.

said...

வெளிநாடு போகிறவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை மூன்று.

1. பாஸ்போர்ட்
2.பிளேன் டிக்கட்
3. பணம்.

இதில் எது காணாமல் போனாலும் மிகுந்த சிரமங்கள் அனுபவிக்க நேரிடும்.

எல்லாவற்றையும் ஒரு சுருக்குப் பையில் போட்டு ஒரு வார் கட்டி கழுத்தில் போட்டு பையை வெளியில் தெரியாமல் டிரஸ்ஸுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கென்றே பைகள் விற்கிறார்கள்,

said...

புத்திசாலிப்பையன்தான் தொலைந்து மீண்டுள்ளான்.

உங்கள் கைடு திறமையானவர்தான். தனது கடமையை நன்கு செய்துள்ளார்.

said...

கலக்கிட்டேள் போங்கோ!!!!

said...

சாப்பாடு நடக்கும்போதே, மூன்று மெக்ஸிகன் பாடகர்கள் எங்க மேஜையைச் சுத்தி நின்னு கிடார் வாசிக்கறதும், பாடறதுமா தூள் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க. ஒருவேளை சாப்பாட்டு ருசியை மறக்கடிக்கவோ? இருக்கும்!

ஆமாம் ..சாப்பாட்டை கவனித்தால் வம்பு !

said...

நீங்கள் இருக்கும் படம் மிக மிக அற்புதமாக வந்துருக்கு. எனக்கு தெரிந்து இப்போது தான் உங்க தலைப்பை சூடான இடுகை வரிசையில் பார்க்கின்றேன்.

said...

பிள்ளை திரும்பப் பத்திரமா வந்தது நிம்மதி.. தற்காப்புக்கலை கத்துக்கிட்டது இங்கேயாவது பிரயோசனப்பட்டதே..

க்ரஸாண்ட் தின்னே வெறுத்துப்போனது இந்தப்பயணத்துலதானே :-)))))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

டூர் க்ரூப்புலே போனா டூர்கைடு எல்லாத்தையும் பார்த்துக்குவார் என்ற அலட்சியம்தான்.

இதே தனியா நாம் போனால்...... ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்ட கையோடு மனசில் ஹொட்டேல் விவரத்தையும் எழுதிருவொம்லெ;-)

said...

வாங்க வவ்வால்.

பாஸ்போர்ட்டை மட்டும் யார் கையிலேயும் கொடுக்கவேப் படாது. அது டூர் கைடானாலும் சரி. அவரும் மனுஷர்தானே..... தவறிப்போச்சுன்னா?

டூர் கிளம்புமுன் பாஸ்போர்ட் முதல் ரெண்டு பக்கத்தை ஃபோட்டோகாபி எடுத்துப் பொட்டியில் தனியா வச்சுக்கணும்.

இப்பெல்லாம் எலெக்ட்ரானிக் லாக்கர்ஸ் ரூம்களிலே இருக்கே அதில் ஒரிஜனலை வச்சுட்டு பாஸ்போர்ட் ஃபோட்டொ காப்பியைக் கைப்பையில் வச்சுக்கலாம்.

அறையைக் காலி செய்யும்போது மறக்காம லாக்கரைத் திறந்து எல்லாத்தையும் எடுத்துக்கணும்:-)

said...

வாங்க கணேஷ்.

உங்க லைஃப்லே கட்டாயம் பயன்படத்தான் போகுது. காலம் கனியணும் அம்புட்டுதான்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

கழுத்தில் மாட்டி ஒளிச்சு வைக்கும் பை இப்போ எல்லா இடத்திலும் கிடைக்குது. இது ஒரு நல்ல உபாயம்தான்.

நகைகளைக் கொண்டு போக நானே ஒரு பை தயாரிச்சு வச்சுருக்கேன். நல்ல க்ரேப் பட்டுத் துணி என்பதால் Bபல்கியா இருக்காது.

நல்ல பெரிய சேஃப்டி பின்கள் பயன்படுத்தலாம்.

அதெப்படி டூர் போகாமல் இருக்க முடியும்? நாம் என்ன மரமா? ஒரே இடத்தில் நிக்க!

அப்புறம் பதிவெல்லாம் எப்படி எழுதறதாம்:-)))))

said...

வாங்க மாதேவி.

உண்மையான அதிர்ஷ்டம்தான் பையன் திரும்பக் கிடைச்சது.

அதென்னமோ அந்தப் பயணம் முழுசும் எங்களுக்கு பயங்கர பொழுது போக்கு அம்சம் இவுங்க குடும்பமா இருந்துச்சு:-))))))

ஒரு நாள் முழு கதையையும் எழுதணும்:-)

said...

வாங்க அன்புடன் அருணா.

தெளிஞ்சுருக்குமே இந்நேரம்:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒவ்வொரு ரெஸ்ட்டாரண்டுக்கும் போகுமுன் அதைப்பற்றி டூர் கைடு தரும் விளக்கம் கேட்டு ஆ ன்னு பிரமிப்பு.

கடைசியில் பார்த்தால்....... ஐயோ எப்போ சோத்தைக் கண்ணுலே பார்ப்போமுன்னு ஆகிப்போச்சு:-)))

said...

வாங்க ஜோதிஜி.

என்னது.... சூடானதில் வந்துச்சா?

இந்த சூடான இடுகை சமாச்சாரத்தை நான் கவனிக்கறதே இல்லை:(

எழுதுவதோடு கடமை முடிஞ்சுருதுன்னு இருந்துடுவேன்.

அந்தப்படம் கோபால் எடுத்தது:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்..

போனஸ் மார்க் பத்து உங்களுக்கு:-))))