Monday, January 02, 2017

குண்டு வச்சுருக்கோமுன்னு........ குழப்பம் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 113)

'காலையில் வர்றோம். லஞ்ச் உங்களோடு. சாப்பிட்டு முடிச்சதும்  கிளம்பிப் போயிருவோம். அப்படித்தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கு'ன்னார் பெங்களூர் மைத்துனர்!  இன்றைய ஸ்பெஷலாக ஞாயிறு. கூடவே காதலர் தினமாம். கல்யாணமானால் காதலிக்கக்கூடாதா என்ன?  ஜாலியா அவுட்டிங் கிளம்பி வாங்கன்னோம்.
நாங்கள் சென்னை மச்சினர் வீட்டுக்குப்போய்ச் சேரும்போது, காலையில் வந்திறங்கிய  பெண்களூரு மச்சினர் ப்ரேக்ஃபாஸ்ட்டில் பிஸி. நமக்கு ஏற்கெனவே லோட்டஸில் ஆச்சு  என்பதால்  பிள்ளைகளுடன் பேசிக்கிட்டு இருந்தோம்.  அப்புறம் அண்ணன் தம்பிகள் பேசிக்கட்டுமுன்னு விட்டுட்டு லேடீஸ் எல்லோரும் கிளம்பி  கடை விஸிட்.  வேளச்சேரியில்  தண்டீஸ்வரம் நகர் கடைகள்.  பெரிய கோபுரத்துடன் ஒரு கோவில் இருக்கு அங்கே.  ஒருநாள் போகணும்.....

 அவுங்களுக்கு இஷ்டப்பட்ட புடவை, சுடிதார் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு,  வீட்டுக்கு வந்தால்  பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு  பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு. அவர்கள் விருப்பமென்று சொல்லி விட்டதால்  புஹாரியைத் தெரிவு செஞ்சாங்க.  சாப்பாடு அவரவர் விருப்பம். எனக்குப் புதினா பரோட்டாவும் தயிரும்.

வீட்டுவாசலில் ஸ்போர்ட்ஸ்! 
அஞ்சு மணிக்கு  ரயில் என்பதால் நாலரைக்கு மச்சினர் குடும்பத்தை சென்ட்ரலில் விட்டுட்டுத் திரும்பி வரும் வழியில் எதாவது வாங்கணுமுன்னா சொல்லும்மா. ரூமுக்குப்போய் பைனல் பேக்கிங் செஞ்சுரணும் என்றார் நம்மவர்.  ' ஒன்னும் வேண்டாம். நீங்க கேட்டதால சொல்றேன். நேத்துப் பார்த்த நான்முகம் வாங்கலாமுன்னா  .............. '    சரின்னுட்டார். அதே எக்ஸ்பிரஸ் அவென்யூ. அதே கடை.  நான்முகம் தலையை வாங்கியாச்.


அன்றைக்கு மாலை ராஜ் டிவி செய்தியாளர்  நம்மைச் சந்திக்க வர்றார் என்பதால் வேறெங்கும் போகலை.  சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்துட்டார்! தமிழ்ச் செய்திகள் வாசிக்கிறாராம். தமிழ் ஆர்வம் உள்ளவர் என்பதால் உச்சரிப்பு எல்லாம் ரொம்பச் சரியாக இருக்கும். இது புது உத்யோகம். ஒருநாள் செய்தி வரும் நேரம் பார்க்கணும்.  நியூஸியில்  பார்க்கச் சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை. அப்படியே  கிடைச்சாலும் நேரங்கெட்ட நேரத்தில் முழிச்சுருந்து   பார்த்தால் உண்டு.....  நம்மவர் ஒருநாள் பார்த்துட்டு, ரொம்ப நல்லா வாசிக்கிறார்.  கோட்டும் ஸூட்டுமா  மிடுக்கான உருவம் என்றார்! 
 
 கொஞ்ச நேரம் பழங்கதைகளில்  முழுகினோம்.   டிவிக்காரர் எப்படி நமக்குப் பரிச்சயமானார்?   ஹைய்யோ.....   இவர்  நம்ம பதிவுலக நண்பர்தான். நாங்கெல்லாம் ஜிரான்னு  சொல்லும்  நம்ம ராகவன் கோபாலசாமி!   மாணிக்க மாதுளை முத்துகள் என்ற வலைப்பக்கத்துக்கு உரிமையாளர்!
டீச்சரைப் பார்க்க  வரும்போது வெறுங்கையா வரலாமோ?   தானே எழுதுன   நாலுவரி நோட்டு  கொண்டுவந்துருந்தார்.  நூத்துக்கு நூறுன்னு மார்க் போட்டேன்னு தனியாச் சொல்லணுமா?  :-)
பள்ளிக்கூடத்துக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டு வர்ற மாதிரி,     கூடவே   பேக்கரி ஐட்டம் வாங்கி வந்துருந்தார். டீச்சர் வேலை நல்லாதான் இருக்கு:-)

ராச்சாப்பாடுக்கு  ரொட்டியும் பாலும் இன்றைக்கு!
பேக்கிங் எல்லாம் முடிச்சுட்டுத்தான் தூங்கினோம்.  ஆச்சு   நாளைக்கு  இந்தியாவுக்கு டாடா சொல்ல வேண்டியநாள்.
காலையில் வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்ட். இந்தப் பயணத்தின் கட்டக் கடைசி. முதலில்  பாண்டிபஸாரில்  நம்ம அனுமனுக்காக  ஒரு மாலை வாங்கிக்கிட்டுப்போய்      அடையார் அனந்தபதுமநாபனை தரிசனம் செஞ்சுக்கிட்டு, போயிட்டு வரேன் பைபைன்னு  சொல்லியாச்.
கோவில் கோலாகலமா இருக்கு. ப்ரம்மோத்ஸவம் ஆரம்பிச்சு இன்றைக்கு நாலாவது நாள்.  புள்ளையார் கல்வச்ச கவசத்தில் ஜொலிக்கிறார். பெருமாளோ....   கேக்கவெ வேணாம். தகதக தகதக.....  உற்சவர் காலையும் மாலையும் வீதிவலம் போவதால் நாளுக்கு ரெண்டு அலங்காரத்தில்  மின்னறார்.


ஒரு தோழியின் பெற்றோர்  அந்த ஏரியாவில் இருக்காங்க. அங்கேயும் போய் ஒரு பத்து நிமிசம் நலம் விசாரிப்பு.  மயிலை சரவணபவனில் பகல் சாப்பாடு.  அறைக்குத் திரும்பியதும், பெரிய வண்டி கொண்டு வரேன்னு  சொல்லி, சீனிவாசன் போனார்.

அவர் திரும்பியதும்,  மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு,  லோட்டஸ் பில்லை செட்டில் செஞ்சுச்சுட்டு, அண்ணன் வீட்டுக்குப் போயிட்டோம்.  விட்டுப்போன பாக்கிப் பேச்சுடன்  காஃபி டிஃபன் ஆச்சு.


 ஒன்பது மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்.  வீட்டில் இருந்து கிளம்புமுன் ராச்சாப்பாட்டுக்கு ஆப்பம்! துளசிக்கான ஸ்பெஷல்.  அண்ணி மனம் நோகக்கூடாதேன்னு நல்லா வெளுத்துக் கட்டிட்டு ஏர்ப்போர்ட் வந்து செக்கின் ஆச்சு.  ஏர் இண்டியா லவுஞ்சுக்கு  போனோம். அது ஒரு மூலையில் கிடக்கு.


அங்கே ஒன்னும்  சரி இல்லைன்னு கிளம்பி வர்றோம்.  பயணிகளுக்கு எதோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதில் என் மாமனார் பெயர் அடிபடுது.  உங்க அப்பா பெயர் ரொம்ப பிரபலமோன்னு  இவரைக் கிண்டல் செஞ்சுக்கிட்டே  போர்டிங் கேட் வந்தால்....    போர்டிங் பாஸைப் பார்த்ததும்  இவரை கப் னு புடிச்சுக்கிட்டாங்க.  அவ்ளோ நேரம்  அனௌன்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தது  நம்மவருக்காகத்தான்! அட ராமா......

'நீ  விமானத்துக்குள்ளே  போயிரும்மா. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்'னு  சொல்லிட்டு, ரெண்டு செக்யூரிட்டிகளோடு  இவர் போயிட்டார்.  எதாவது  பிரச்சனைன்னா......  உள்ளே போயிட்டால் என்னால் திரும்பிவர முடியாமப்போச்சுன்னா என்ன செய்யறதுன்னு நான் அங்கேயே இருந்தேன்.
அன்றைக்கு அந்த விமானத்துக்குள்ளே போன  மொத்தப் பயணிகளையும் பார்த்துட்டேன். என்னக் கடந்துதான் ஒவ்வொருத்தராப் போய்க்கிட்டு இருந்தாங்க.  நம்மவரைக் காணோம்.  ரொம்ப நேரத்துக்குப்பிறகு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தார்.  காத்துக்கிட்டு இருந்த விமானப் பணியாளர்கள் எங்களைச் சட்னு  உள்ளே இழுத்துக்கிட்டாங்க.  அடுத்த அஞ்சாவது நிமிட் விமானம் கிளம்பத் தயாராகிருச்சு.

எல்லாம் நான்முகம் பண்ண கலாட்டாதான் :-) இவர் நல்ல பபுள் ராப்பரில் சுத்தி செக்கின் பெட்டிக்குள் வச்சுருந்தார்.  விமானத்தில் பொட்டிகளை ஏற்றுமுன், ஸ்கேன் செஞ்சப்ப,  மெடல் குண்டு  இருக்குன்னு தெரிஞ்சுருக்கு. அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான்.... இப்படி.  மேல்தளத்துலே பெட்டிகளை செக்கின் செஞ்சு உள்ளெ அனுப்பும்போதே ஸ்கேன் செய்யும் வசதி இல்லையாம்.  விமானத்துக்குள் ஏத்துமுன் ஸ்கேன் செய்யறாங்களாம்.   பாதுகாப்பு சரியா இருக்குன்ற திருப்தி நமக்கு இப்போ :-)
பொட்டியைத் திறந்து, நான்முகத்தைக் காமிச்சதும்  எல்லோரும் சிரிச்சாங்களாமே:-)

'கீழே இறங்கி அங்கே திரும்பி, இங்கே திரும்பி, மாடிப்படிகளில் ஏறின்னு ரொம்பதூரம், அந்த  செக்யூரிட்டி ஸ்டாஃப் கூட  நடக்கவேண்டியதாப் போச்சு. எனக்குதான் கஷ்டமா இருந்ததே தவிர  அவுங்க  ரொம்ப வேகமா நடக்கறாங்க'ன்னு  சொன்னார்.  ஆஸ்பத்ரி போல  இது ஒரு தனி உலகம்,  இல்லை!  வேலை செய்யும் மக்கள் நடையோ நடைன்னு  உள்ளேயே பத்து கிமீ நடந்துருவாங்க போல!

பலபலன்னு பொழுது விடியும் நேரம் சிங்கையில் வந்து இறங்கியாச்சு.


தொடரும்.............  :-)

Friday, December 30, 2016

பொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)

"உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்"  இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே!  உள்ளூர்க்கணக்குக்கு அக்கவுண்ட் இல்லை.  காசாக் கண்ணுலே காட்டினால் நல்லது. ம்ம்ம்ம்ம்....   நாளைக்கு உங்க அறைக்கு அனுப்பிடறேன்னார் பப்ளிஷர்.


வெளிவந்த, வரப்போகும் புத்தகங்கள் பற்றிக் கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் புத்தகங்கள் வாங்குவது, கொஞ்சம் க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.  அறைக்குத் திரும்பினோம்.
ரங்கனை எப்படிக் கொண்டு போவது.........   ஒரு கஷ்டமும் இல்லை. பேசாம நான் கேபின் பேகில் வச்சுக்கறேன். சேஷன் மட்டும் சரியா அடங்கமாட்டான். எட்டிப் பார்த்தால்  பயமா இருக்குமோ?
சரி. இந்த வேலையை இன்றைக்கே முடிச்சாகணும். கிளம்புன்னு  தோழி வீட்டுக்குப் போனோம். அங்கேதான்  பாக்கிங் பிரச்சனையே இல்லை.  ஒரு இடம் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. ஊறுகாய் எல்லாம் அட்டகாசமா பேக் பண்ணிக் கொடுத்துடறாங்களாம்!  ஹங்...........  அப்படியா?  ஆனா  இவன்.....  ஊறாத காய் இல்லையோ :-)

முதல் கேள்வி 'சாப்டாச்சா' ?   சாப்பாடுன்னு உக்காரலை. ஆனால்  விஸிட்டுகளால் பசி அவ்வளவா இல்லைன்னு தள்ளிப்போட்டுருக்கு.
இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடமும், சம்புடமும் இந்த வீட்டில் மாறித்தான் போயிருக்கு!  இப்ப இந்தமாதிரி!!!  சூப்பர் :-)

கூடவே காஃபி. முடிச்சுக்கிட்டு  கையோடு கொண்டுபோயிருந்த  கேபின்பேகில் ரங்கனை  வச்சால்....   பாம்பு எட்டித்தான் பார்க்குது :-)

கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேக்கிங் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். நீள அகலத்துக்குத் தகுந்த அட்டைப்பொட்டி கிடைக்கலை. பெட்டி மட்டும் கிடைச்சுட்டால்....  நீட்டாப் பேக் பண்ணிடலாமாம்.  ஹாஹாஹாஹா...

பெட்டி வாங்கிக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் எங்கே கிடைக்கும்? ஆர்.கே. மட் ரோடில் ஒரு இடத்தில் கிடைக்குமாம். சரி கிளம்பு.   போற வழியில் அடையாறில் ஒரு ஸ்டேஷனரிக் கடை கண்ணில் பட்டதும் விசாரிச்சோம். பபிள் ராப் வச்சுருக்காங்களாம்.  அஞ்சு மீட்டர் கொடுங்க.



ராமகிருஷ்ணாமடம் சாலை.  போய்க்கிட்டே இருக்கோம். அடையாளம் வோடஃபோன் கடையாம்:-)  அதுக்குப்பக்கம் நின்னு  கண்ணால் மேய்ஞ்சப்ப,  ஒரு இடம் ஆப்ட்டது. மாடிக்குக்  கூட்டிப்போனாங்க. பெரிய சாமான்களின் ஒரிஜினல் பேக்குகளாக வந்த அட்டைப்பொட்டிகளின் அடுக்குகள்.  நீள அகலம் பார்த்து ஒரு வாஷிங் மெஷீன் அட்டைப்பொட்டி வாங்கிக்கிட்டு மறுபடியும் பேக்கிங் கடைக்குப்போனோம்.  பபுள்ராப்பைச் சுத்தோ சுத்துன்னு சுத்திப் பாம்பையும் பெருமாளையும் பொதிஞ்சு  பொட்டிக்குள் வச்சாச்சு. காலி இடம் நிறைய இருக்கு. அதுலே  துணிகளை அடைச்சுடலாமுன்னு திட்டம்.

மறுநாள் பொழுது விடியும்போதே ரெண்டுபேருக்கும் ஒரே எண்ணம்.  கோவிலுக்குப்போய் வந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்!  சீனிவாசனைக் கொஞ்சம் லேட்டாத்தான் வரச் சொல்லி இருக்கு. உள்ளூர் என்பதால் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் கார் எடுத்துருக்கோம். பனிரெண்டு மணி நேரமும் கார் ஓட்ட வேணாம். ஆனால் வாசலில் வண்டி ரெடியா இருந்தால்.... சட்னு எங்கியாவது போய் வர வசதியாத்தான் இருக்கு. இன்றைய நேரம் பத்து மணி.  அண்ணன் வீட்டுக்குப் போறோம். சமையல் செய்ய வேணாமுன்னு சொல்லி வச்சுட்டேன்:-)

காலை ஏழே காலுக்கு ரெடியாகி  வெங்கடநாராயணா ரோடுக்கு  ஆட்டோ. நாப்பது, அம்பது என்ற கணக்கில்  எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.  கெஸ்ட்ஹவுஸ் வாசலில் ஏறினால்  அதுக்கு தண்டனையாக கூட ஒரு பத்து கொடுக்கணுமுன்னு எழுதப்படாத ஒரு விதி ! பாண்டிபஸார், வெங்கடநாராயணா ரோடு,  சென்னை ஸில்க் போதீஸ் ஏரியா, பனகல் பார்க்னு  திநகர் உள்வட்டத்துக்கு  இதுதான் ரேட்டு. மீட்டர் போட்டா ஒரு இருவதுதான் வரும். ஆனா...............

ஆட்டோவை விட்டு இறங்கும்போதே.... யம்மா.... எப்பம்மா வந்தீங்கன்னு  ஒரு உற்சாகமான குரல்.  தலையைத் திருப்பிப் பார்த்தால்.... அட! நம்ம சாமுண்டி!
பார்த்தே சில வருசங்களாச்சு.  கோவிலில் துளசியைக் கடாசிக் கொண்டிருந்த காலத்தில்  முடிவு செஞ்சதுதான்.... பெரும் ஆளைப் பார்க்க வெறுங்கையால்தான் போகணுமுன்னு!  அப்புறம் கோவிலே போர்டு எழுதிப்போட்டு வச்சுருச்சு.... 'துளசியைக்  கொண்டுவர வேணாம்'........  சுத்தம்...........
அதனால் கோவில் வாசலில் இருக்கும் பூக்கடைகளை ஏறெடுத்துப் பார்ப்பதும் பொதுவாக இல்லை.  இப்பதான் கவனிக்கிறேன்.....  திருப்பதி தேவஸ்தான கோவிலின் ரெண்டு கேட்டுக்கும் நடுவில் இருந்த கடைகளை   கோவிலின் வலதுபக்கமா ஒதுக்கிட்டாங்கன்னு!
சாமுண்டி , முன்னைக்கு இப்போ  இன்னும் கம்பீரமா இருக்காங்க. வியாபாரம் நல்லா இருக்காம். பசங்க வளர்ந்துட்டாங்க. பள்ளிக்கூடம் போறாங்கன்னு ஒரு பெருமிதம்!  நல்லா இருக்கணும். முரளி, (சாமுண்டியின் கணவர்) அப்போ பார்த்த அதே மாதிரி. வயசாகுதுல்லே எல்லோருக்கும்.  கொஞ்சம் மெலிஞ்சாப்லெ.....
"சாமிக்குப் பூ  அஞ்சு மொழம் தரவா?"
 
"  வேணாம்.  சாமிக்கு ஒன்னும் வேணாம். எனக்குதான் வேணும். வர்றப்ப வாங்கிக்கறேன்"
தரிசனம் முடிக்குமுன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பெருமாள் தன்னைத்தான் முதலில் கவனிச்சு அருள் செய்ய வேணுமுன்னு கூட்டமில்லாத அந்த நிமிசத்தில்கூட முன்னே நிற்கும் மக்களை இடிச்சுத் தள்ளி  தன் உடம்பை நெருக்கி முன்னால் கொண்டு போகும் சனத்தைப் பார்க்கும்போது....  பெருமாளுக்குக் கிட்டப் பார்வையோன்னு சம்ஸயம்  :-)
தரிசனம் முடிச்சு, சாமுண்டியிடம்  ரெண்டு முழம் மல்லிகை வாங்கினேன். ஒரு முழம்போல் வரும் ரோஜாச் சரத்தைக் கிள்ளி கூடவே  அன்பளிப்பாய்க் கொடுத்த நல்ல மனசு!

அறைக்கு வந்துட்டுக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும்  கொஞ்சநேரம் வலை மேய்ச்சல். போகும்போதும் வரும்போதும் பெருமாள் பொட்டி கண்ணுலே படுது.  செக்கின் பண்ணப்போகும் பெட்டி பூதாகாரமா இருக்கே!  அதுலே துணிகளை அடைச்சால்....  கனம் தாங்குமோ....   பொட்டியைச் சின்னது பண்ணால் ஆச்சு.  கைவசம் இருந்த  கத்தியும், பேக்கிங் டேப்பும் கைகொடுத்துச்சு:-)

 அண்ணன் வீட்டுக்குப்போய் அரட்டை ஆரம்பிச்சது.  காஃபி ஒன்னு ஆச்சு!  கிளம்பி எக்ஸ்ப்ரெஸ் மாலுக்கு வந்தோம்.   போன பயணங்களில் பார்த்த  ஆன்ட்டிக் கடை  காணாமப் போயிருந்துச்சு. தேடும்போது  கண்ணில்பட்ட    ஒரு  கலைப்பொருட்கள் கடையில்    கோபால் ஒரு ராதாக்ருஷ்ணா வாங்கினார்.  நான் ஆசைப்பட்ட நான்முகத்துக்குத் தடா போட்டார் :-( கனம் கூடுதலாம்..........


 க்ரீம்செண்டருக்குப்போய் பகல் சாப்பாடு. ப்ரியாணி ஸ்பெஷலாம்.  பனீர் டிக்கா,  பாப்டிசாட், ஃப்ரைய்ட்  ஐஸ்க்ரீம்.....  கூடவே ச்சனா பட்டூரா!


கிளம்பி அறைக்கு வந்து மிச்சம் மீதி இருந்த அரட்டையைத் தொடரும்போது,  வரவேற்பில் இருந்து ஒரு கவர். ஆஹா......    வந்தே வந்துருச்சு சந்தியாவில் இருந்து :-)
ட்ராஃபிக் ஆரம்பிக்குமுன்  வீட்டுக்குக் கிளம்பிப்போனால் நல்லதுன்னு அண்ணன் சொன்னார். அப்படியே ஆகட்டும்.

 தொடரும்..........  :-)




Wednesday, December 28, 2016

உள்ளே இளைஞன், வெளியே கிழவன் !!!! எல்லாம் வேஷம்................ :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 111)

கோல்டன்நெஸ்டைத் தேடி தெருவின் ரெண்டு பக்கமும் கண்ணை நட்டுக்கிட்டுப்போயிருக்கோம்..... கண்ணுலே அகப்படலை....  ஆனால் தெருமுழுக்க இவர் புகழ் பரவி இருப்பது கடைசி விநாடியில் தெருமுடியும் இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் தெரிஞ்சது....  பெயரைச் சொன்னவுடன்,  'அடடா.... தெரு ஆரம்பத்துலேயே   ரைட் எடுத்துருக்கணும்'    என்றதோடு விடாமல்....  'போங்க. மாடியில் உக்கார்ந்துருப்பார்'னும் சொன்னார்,  கடைக்கு எதோ வாங்க வந்த நபர்:-)

அதே மாதிரிப்போறோம். வாசலில் புள்ளையார்!  மாடியில்  தகப்பனார்!
வயசாச்சுன்னு சொல்றதெல்லாம் ச்சும்மா.....  ஒரு பாவ்லா!  இளைஞருக்குரிய.... இன்னும் சொல்லப்போனால் சின்னப் பையனுக்குரிய ஒரு லாகவத்தோடு சட்னு  நாற்காலியில்  உக்கார்ந்து காலை  மடிச்சுச் சம்மணம் போட்டுக்கறதைப் பார்த்து, இந்த மூட்டு வலிக்காரிக்கு மூச்சு நிக்காதது, உங்க பாக்கியம்!
சினிமாவிலும் நாடகத்திலும் வேஷம் போட்டுப்போட்டு.... இப்படிக் கிழவர் வேஷம் பழக்கமாகிருச்சு போல!!
ஒன் புக் ஒன்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பவர் இப்ப டு புக் ஒன்டரா ஆகி இருக்கார். புள்ளிகள், கோடுகள், கோலங்கள்! நானும்  புத்தகத்தை வாங்கி வச்சுருந்து, அதைத் தூக்கிக்கிட்டுப் போயிருந்தேன்.... கையெழுத்து வாங்கிக்க:-)புத்தகம் வாங்குன கையோடு ஃபோன் செஞ்சு 'வரட்டா'ன்னு கேட்டதுக்கு,  'நான் இப்போ பெண்களூரில் இருக்கேன்.  அடுத்த வாரம் சென்னைக்கு வந்துருவேன். ஆனால்.... என்னப் பார்க்காம நீ ஊருக்குப் போயிடக்கூடாது'ன்னு ஒரு மிரட்டல் வேற :-)

விசுவாசம் என்ற மணிபாரதியின் குறும்படம் ஒன்றைத் தேடி எடுத்து நமக்காகப் போட்டுட்டு, அடுக்களைக்குப் போனார்.  அடுத்த பத்து நிமிசத்தில் சுடச்சுட அருமையான காஃபியுடன்,  கேஸரியும், மொறுமொறுன்னு வடாமும்!  சமையலில் மன்னனாக்கும்!  உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப்போறேன் :-)
அந்தக் குறும்படத்தில் கூட இவர் சமையல்காரர்தான்!  எஜமான விசுவாசம்  சொல்லி மாளாது....  உடலைச் சாய்ச்சுக் காலைத்தாங்கி மகனோடு  கிராமத்துப் பாதையில் நடந்துபோகும்போது ஐயோன்னு இருந்துச்சு எனக்கு..........

இந்தக் குறும்படம், போட்டியில் முதலிடம் வந்து பதினைஞ்சாயிரம் ரூபாய் ரொக்கப்  பரிசைத் தட்டிக்கிட்டுப் போயிருக்கு என்பது  கூடுதல் தகவல்! அந்தக் குறுந்தகட்டைத் தேடி எடுக்க சட்னு தரையில் காலை மடிச்சுப்போட்டு அதே ஆஸனத்தில் (பத்மாஸனமோ?  இல்லை.....  இது ஸ்வஸ்திக் ஆஸனம் !!!)உக்காருவதைப் பாருங்க!   அதே மாதிரிதான் தரையில் இருந்து எழுந்துருக்கறதும்..... !!!

 நாந்தான் பக்கவாட்டில் உருண்டு புரண்டு,  ராமனை எல்லாம் துணைக்குக் கூப்பிட்டபடி எழுந்துருப்பேன் :-)

இன்றைக்கு இவ்ளோ மழையில் நனைஞ்சும்  எனக்கு ஒரு தோஷமும் பிடிக்கலை!  என்ன தவம், எந்த ஜென்மத்துலே செஞ்சேனோ.............
மாடிப்படிகள் இறங்கி ஏறக் கொஞ்சம் கஷ்டமோன்னு எனக்கொரு தோணல்.... ஹேய்.... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும்......... கேட்டோ!  
 நான்  ஆசைப் பட்டுக்  கேட்டதும் சட்னு ஊஞ்சலில் தாவி உக்கார்ந்து ஒரு போஸ்.....  அச்சனு கொள்ளாம்!  இதொக்க ஜூஜுபி...... யா :-)
எனக்கு  ஒரு அன்பளிப்பும் கிடைச்சது.......  ஈராக்.....
எல்லாம் அன்பே அன்புன்னு இருக்கும்போது........

கொஞ்சம் ஓரவஞ்சனை காட்டுனதுதான் எனக்குப் பிடிக்கலை. மகள் நான் குத்துக்கல்லு போல முன்னாடி நிக்கிறேன்..... மருமகனிடம் அப்படிப் பாசம் இழையோடிக்கிட்டு இருக்கு!!  இத்தைப் பார்றா..............

பேச உக்கார்ந்தோம்............. போச்சு....   நேரம் ஓடியே போச்சு!

சுவாரஸியமான சம்பவங்களின் சுரங்கம் ! பேச்சு வாக்கில் பல சமாச்சாரங்கள் வந்து விழுந்துக்கிட்டே இருக்கே!  பலதும் ஆஃப் த ரெக்கார்ட் என்பதால் நான் மனப்பெட்டகத்தில் போட்டுப் பூட்டி வச்சேன்.


மனசில்லா மனசோடு அங்கிருந்து கிளம்பி, வர்ற வழியில் ............. இன்னொரு இன்ப அதிர்ச்சி !!!!

தொடரும்............... :-)