Friday, June 19, 2009

பேச்சியம்மன் கூப்புட்டாடா .........(2009 பயணம் : பகுதி 33)

குமரி மாவட்டம் முழுசும் விளைச்சல் அமோகமா இருக்கும் போல. விளை என்று முடியும் பெயர்களில் எக்கச்சக்கமான ஊர்கள். எப்படியோ விளைஞ்சாச் சரி.
ஒரு இருவது நிமிஷக் கார் ஓட்டத்தில் குலசேகரம் என்ற ஊருக்குள்ளே வந்துட்டோம். ஒரு நிமிசத்துலே வர்றேன்னு ரமேஷ் இறங்கிப் போனவர்,
திரும்பி வந்து அஞ்சு நிமிசம் வீட்டுக்கு வந்துட்டுப்போங்கன்னு கூப்புட்டார். மாமியார் வூடு. மனைவி அங்கேதான் இருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துலே குழந்தை பிறக்கப்போகுது. சின்ன வீடா இருந்தாலும் கிணறு, தோட்டமுன்னு அம்சமாத்தான் இருந்துச்சு. மூத்த பையனுக்கு அஞ்சாறு வயசாகுது. நம்மூர் வழக்கபடி விருந்தாளிகளுக்கு 'ரைம்ஸ்' சொல்லி, பாடப்புத்தகத்தைக் கொண்டுவந்து காமிச்சுப் படிச்சுக் காட்டினான். ப்ளைட்டன் என்ற பெயர். சொல்லமறந்துட்டேன் இல்லை..... வழிநெடுக இந்துக்கள் கோவில்கள், பாரம்பரியக் கதைகள் எல்லாம் அப்பப்பச் சொல்லிக்கிட்டு வந்த ரமேஷ் பாஸ்கர் கிறிஸ்துவமதத்தைச் சேர்ந்தவர். அய்யாவழி என்ற பிரிவையும்பற்றிச் சொன்னார். அப்போதான் நமக்கு 'அய்யாவழி' என்ற தமிழ்ப் படம் ஒன்னு (மலேசிய நண்பர் அனுப்புனது) வீட்டில் இருக்கும் நினைவு வந்துச்சு. ஊருக்குப் போனதும் கட்டாயம் பார்க்கணும்.

தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த மக்களை ஒதுக்கிவச்சுத் தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்த உயர்சாதியினரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற ஏற்பட்டப் புதுப் பிரிவு மதம் தான் இந்த அய்யாவழி. தலைப்பாகைக் கட்டிக்கிட்டு நெற்றியில் வெண்ணிற திருமண் இட்டுக்குவாங்களாம். இந்தப் பக்கம் ஒரு கோயிலே கட்டி யிருக்காங்க. இன்னொருமுறை இங்கே வரும்போது பார்க்கணுமுன்னு மூளை ஓரத்தில் முடிச்சுப் போட்டுவச்சுக்கிட்டேன்.

ரமேஷின் மனைவிக்கு எங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. முகத்தில் தெரிஞ்சது. பிரசவம் நல்லபடி நடக்குமுன்னு ஆசிகள் வழங்கிட்டு, அவுங்களுக்கு வேலை வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கணுமுன்னும் வாழ்த்திட்டுக் கிளம்புனோம். குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு வெறுங்கையோடு போனமேன்னு நொந்துக்கிட்டுப் ப்ளைட்டன் கையில் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால்.
அங்கிருந்து மறுபடி இருவது நிமிஷ ஓட்டத்தில் நாம் போய்ச் சேர்ந்த இடத்தில் செண்டை மேளத்தோடு யானை மேல் அம்பாரியில் அம்மன் ஊர்வலம் ஆரம்பிக்கத் தயாரா இருக்கு. பயங்கர டைமிங். இதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி ரமேஷுக்கு. ஊரே விழாக் கோலம் பூண்டதுன்னு சொல்வாங்க பாருங்க அதை இந்தப் பயணத்தில்தான் மெய்யாலுமே பார்த்தேன். அந்தப் பகுதிகளில் மாசி மாசம் கோவில்களில் விழாக் காலம். ரோடுக்கு ரெண்டு பக்கமும் தென்னைக் குருத்தோலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும், உண்மைப் பூக்களாலும், பலநிறத்தில் உள்ள மின் விளக்குகளாலும் அலங்கரிச்சு ஜமாய்ச்சு வச்சுருக்காங்க.
பேச்சியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறையினரின் பரிசாக ஒரு அலங்கார வளைவுகூட இருக்கு. பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் அடிவாரம் இந்த இடம். ஒரு பக்கம் அணையிலிருந்து பீறிட்டு வெளிவரும் தண்ணீர் ஓசை காதைப் பிளக்க, மேளதாளச் செண்டை வாத்தியங்களின் இசை இன்னொருபக்கம் முழங்க, கால்வாய்க் கரையில் இதை எதையும் பாராட்டாம சின்ன வயசு யானைக்குட்டி, தலையில் பேச்சிஅம்மனைச் சுமந்துக்கிட்டு (கூடவே ரெண்டு ஆட்களையும்) ஒய்யாரமா அடிமேலடி வச்சு ஆடி நடந்து வரும் அழகே அழகு.





இந்த ஏரியாவில் பிஜேபி ஆதரவு அதிகமோ என்னவோ, ஒரு பெரிய டிஜிட்டல் பேனர் வச்சுருந்தாங்க. பேச்சியம்மனைப் பார்க்க அத்வானியே வந்துட்டார். (அவரால் பேசமுடியாது. டமில் மாலும் நஹி ஹை)



ஊர்வலத்தில் ராமன், கிருஷ்ணன் இப்படி தெய்வீக வேஷஅலங்காரத்தில் சின்னப் பிள்ளைங்க வந்துக்கிட்டு இருந்தாங்க. அட்டகாசமான ஆடை அலங்காரத்தில் மகளிர். கையில் தாலப்பொலியொடுப் பெண்குழந்தைகள் தலையில் சுமந்த புனிதநீர்க் குடங்களோடு சிலர். அட்டகாசம்தான் போங்க.
(கோபால் எடுத்த மூணரை நிமிச வீடியோ க்ளிப்பை வலை ஏத்தி இருக்கேன்)



யானைக்கால் இப்படி இருக்கே..... ஒரு நாலு கொலுசு போட்டுருந்தா எவ்வளோ அழகா இருக்கும்!!

படிக்கட்டுகளில் ஏறி நீர்த்தேக்கத்தைப் பார்க்கப்போனோம். பாதிவழியில் கண்காளிப்பாளரின் விடுதி இருக்கு. மேலே ஏறிப் போய்ப் பாருங்க. ஆனா படம் எடுக்கவேணாமுன்னு சொன்னார். 'சொல்லிட்டீங்கல்லே.... அதெல்லாம் எடுக்கமாட்டோம்.' கொடுத்த வாக்கைக் காப்பாத்தினோம்.
( இது வலையில் சுட்ட படம்)

பிரமாண்டமான இடம்தான். கோதை ஆற்றின் குறுக்கேக் கட்டி இருக்கு. 207 சதுர கிலோமீட்டர் பரப்பு, தண்ணீர் இருக்கும் பகுதி மட்டும். அணைக்கட்டின் நீளம் 425.5 மீட்டர். உயரம் தரைக்குமேலே நிக்கும் பகுதிமட்டும் 120.7 மீட்டர். அஸ்திவாரம் அப்போ எவ்வளவு இருக்கும்? (வடுவூர் குமாரைக் கேக்கணும்.The Dam is a straight gravity type masonry dam. இப்படி ஒரு வரி. இதையும் குமாரே விளக்கிச் சொல்வார் அப்படின்னு நினைக்கிறேன்)

அணைக்கு வயசு இப்போ 103 வருசம்! சமீபத்தில் 2006 -இல் நூற்றாண்டுவிழாக் கொண்டாடி இருக்காங்க. கல்வெட்டு ஒன்னு இருக்கு பார்த்தேன். அமைச்சர் ராதிகாச் செல்வி பெயர் பொரிச்சிருக்கு.

இங்கே பொழுதுபோக்குக்காக உல்லாசப்படகுச் சவாரி செய்யலாமாம். நாங்க போன நேரத்தில் கரையில் ஒதுக்கமா நின்ன நாலு படகுகள் மட்டுமே கண்ணில் பட்டது. படகுச்சவாரியில் யாரும் தடுமாறி விழுந்துறாதீங்க. ஆழம் வெறும் 14.63 மீட்டர்தானாம்!!

நீர்ப்பரப்புக்கு அடுத்தபக்கம் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைவாழ் மக்கள் இந்தப் பக்கம் வந்து கடைகண்ணிக்குப்போய்ச் சாமான்கள் வாங்கிக்க, மருத்துவ வசதியைத் தேடிவர, அங்கத்துப் புள்ளைங்க, இந்தப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் வந்து படிக்க, இங்கே இருக்கும் பலர் அந்தப் பக்கம் எஸ்டேட் வேலைகளுக்குப் போய்வர இப்படி எல்லாத்துக்குமா இப்போப் போக்குவரத்துக்கான படகுகளும் வந்துருக்கு. என்ன ஒன்னுன்னா.... மாலை மூணரைக்கு மேல் போக்குவரத்து இருக்காதாம்.

அணைகட்ட எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது வருசங்கள். கட்டுனவர் எஞ்சிநீயர் மின்சின். ஐரோப்பாக்காரர் (European Engineer Mr. Minchin) அந்தக் காலக்கட்டத்தில் இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானமா, மகாராஜா மூலம் திருநாள் அரசாட்சி செய்த காலம். இது கட்ட ஆன செலவு 26.1 லட்சம் ரூபாய்கள். அதானே இவ்வளோ காசு அந்தக் காலத்துலே ராஜாவாலேதான் கொடுக்கமுடியும்.

திரும்பிப்போகும் வழியில் இன்னும் சில சின்ன அணைகளும் இருக்கு. அதிலொன்னு சிற்றார் அணை. இதுலேயே முதல் அணை, இரண்டாம் அணைன்னு ரெண்டு. அப்புறம் பெருஞ்சணை, பாண்டியன், புத்தன் ன்னு அணைகள். தண்ணீருக்குப் பஞ்சமில்லா தேசம்தான். பார்க்கும்போதே மனசு அப்படியே குளிர்ந்து போகுது. நீர்வளம் இருப்பதால் சுத்தத்துக்கும் குறைவு வர்றதில்லை, பார்த்தீங்களா?
(வழியில் போகும்போதே தெரிஞ்ச சிற்றார் அணை)

நதிக்கரையோரம்தான் (மனித) நாகரீகம் பிறந்தது என்பது சத்தியமான உண்மை

தொடரும்....:-)

Wednesday, June 17, 2009

தண்ணிக்கு மேலே தண்ணி போகுமா? ஹைய்யோ...போகுதே.........(2009 பயணம் : பகுதி 32)

தொட்டில்லே போட்டுத் தாலாட்டுனா எப்படிச் சுகமாத் தூக்கம் வருமோ அதுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம தூக்கம் கண்ணை சுழற்றியடிக்குது. சிலுசிலுன்னு வீசும் காத்துலே வெய்யிலின் சிடுசிடுப்புக்கூட அவ்வளவா மனசுலே நிக்கலை. காரணம்? தரையில் இருந்து நூத்திப்பதினைஞ்சு அடி உயரத்துலே இல்லே நிக்கிறோம்!
தொட்டில்பாலம் போய்ப் பார்க்கலாமுன்னு அரண்மனையில் இருந்து கிளம்புனோம். கண்ணால் பார்க்கும்வரை இது என்ன.... தொட்டியா இல்லை பாலமா இல்லை கால்வாயா? என்ற குழப்பம்தான் இருந்துச்சு.

பசுமைப் பிரதேசங்களின் பசுமைச் சமாச்சாரங்களை ரசிச்சுக்கிட்டே வந்தப்ப, குறுக்கிட்டது ஒரு ஆறு. நீங்க இந்தப் பக்கம் பார்த்துக்கிட்டே அந்தப் பக்கம் வந்துருங்க. நான் அங்கேபோய்க் காரை நிறுத்தறேன்னு சொல்லி எங்களை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டார் ரமேஷ். நான் கால் வச்ச இடத்துலே தொட்டாச் சிணுங்கிச் செடிகள் படர்ந்திருக்கு. 'ஹைய்யோ.... எத்தனை நாளாச்சு இதுகளைப் பார்த்து' ன்னு கொஞ்சம் சிணுங்கவச்சுட்டு ரமேஷ் சொன்ன இந்தப் பக்கம் பார்த்தால்..... யானை!! நம்ம ஆளாச்சேன்னு மிதப்பாக் கண்ணைக் கொஞ்சம் மேயவிட்டா..... ஐயோ சிங்கம். இவ்வளவுதூரம் வந்துட்டோம்...இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? இங்கே பாருங்கடா ராசாங்களான்னு ரெண்டு க்ளிக்கிட்டு அடுத்தாப்போல இருந்த சுழல்படிக்கட்டில் ஏறினோம். நடுவாந்தரத்துலே மூணு இளைஞர்கள் உக்காந்து அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் காதலன். கூடப் படிக்கும் பொண்ணைக் காதலிக்கிறார். கேரளப்பைங்கிளி. ஆஹா.... பாரதியின் பேச்சை அப்படியே கேட்டுட்டீரேன்னு பாராட்டினோம். தெலுங்கு தெலுசான்னு கேட்டால்.....ஊஹூம் ....லேது(-: அரைக்கிணறுதான் அப்ப.
யானையும் சிங்கமும்

கிளாஸ் கட்டான்னதுக்கு இல்லையாம். ஒருமணியோட வகுப்பு முடிஞ்சுருச்சாம். நல்லாப் படிங்க. முதலில் படிப்பை முடிச்சுட்டு நல்லதா ஒரு வேலையைத் தேடிக்கிட்டாக் காதல் கைகூடுமுன்னு சொல்லி வாழ்த்தினோம். கோபால் தன்னுடைய கொசுவத்தியை ஒரு நிமிஷம் கொளுத்திவச்சுட்டாருன்னு நினைக்கிறேன். இல்லே..... பகல் சாப்பாட்டை ஸ்கிப் பண்ண மயக்கமோ என்னவோ....... எங்க ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் கோடி காமிச்சு எப்படி முப்பத்தியஞ்சு வருசத்தை ஜெயிச்சோமுன்னு சொன்னார். எனக்கே ஆச்சரியமாப் போச்சு. கல்லுளிமங்கன்..... இதுவரைக்கும் யார்கிட்டேயும் இப்படி 'லூஸ் டாக்' விட்டதேயில்லை!!!

இடுப்பில் கிண்ணம் கட்டிய ரப்பர் மரம்

உயரே வரும் வழி

சுழல்படி முடிஞ்சு நடைபாதை

நடைபாதை

மீதிப் படிகளைக் கடந்து சுழலின் முடிவுக்குப்போனால் இடப்புறமாக அழகான நடைப் பாதையொன்னு போகுது. லேசான ஏற்றம். அப்பத்தான் கவனிக்கிறேன், இது மலைப்பாதை! மலைச்சு நிக்காம மெதுமெதுவா நடந்தால் வலது பக்கம் முழுசும் இடுப்பில் கிண்ணம் கட்டி நிற்கும் ரப்பர் மரங்கள். நாம் பொதுவா வீட்டில் அலங்காரத்துக்கு வளர்க்கும் ரப்பர் மரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இலைவகையா இருக்கு. இடப்பக்கம் பாலத்துக்கான தூண்கள் அதுக்கு அந்தப் பக்கமாக் கொஞ்சம் தள்ளிச் சரிவில் அங்கங்கே சில வீடுகள். 'தேன் வேணுமா'ன்னு கேட்டாங்க அங்கே இருந்த ஒரு பெண். மலைத்தேனாம். நானும் மலைத்தேன். ரெண்டுபேர் இன்னொரு இடத்தில் துணிதுவைச்சுக்கிட்டு இருக்காங்க. பாதை முடிவில் படிக்கட்டுகள். ஏறுமிடத்துக்கு வந்தப்பப் பால் வாங்க ஒரு பாத்திரத்தைத் தூக்கிக்கிட்டு நிதானமா நடக்குது ஒரு பிஞ்சு. கூடவே அதன் அம்மா.

படி முடியும் இடம்
பால் வாங்கப் போகும் பிஞ்சு

தண்ணி போகுதா?

படியேறி மேலே வந்தால்...... அட! நிறைய சினிமாவில் இதைப் பார்த்துருக்கோமேன்னு ........ பாலத்தின்மீது நிக்கறோம். ஒரு மீட்டர் அகலத்தில் ஒரு பாதை! நமக்கு வலப்பக்கம் ஆறரை அடி அகலத்தில்
ஒரு சிமெண்டுக் கால்வாய். சலசலன்னு முழுசும் ரொம்பிப் போய்க்கிட்டு இருக்கு. நாம் அதுக்கு எதிர்நடை போட்டுக்கிட்டுப் போறோம். நீந்த அனுமதி இருந்தால் எதிர்நீச்சலே போட்டுருக்கலாம்! நல்ல ஆழம்தானாம் . ஏழடி. (அப்ப ஒரு அடி கூடுதல்னு சொல்லிக்கலாம்)
வாய்க்காலா இல்லை கால்வாயா?

துணிதுவைக்கும் பெண்களுக்கும், அங்கே இருக்கும் வீடுகளுக்கும் தண்ணி சப்ளை எப்படின்னு தெரிஞ்சது. அங்கங்கே ரப்பர் ட்யூப் போட்டு ஸைஃபன் முறையில் தண்ணி எடுத்துக்கறாங்க! பாலத்தின் மீது நடந்துக்கிட்டே கண்ணை ஓட்டுனால் சுத்திவரக் காடுகளும் தென்னைகளின் தலைகளும். கீழே நதி. நதியின் குறுக்கே சின்னதாப் பாலம். வாகனங்களும், ஆட்களுமா நடமாட்டம். பரளி ஆறாம். நாம் நடக்கும் பாலத்தின் பாதிதூரத்தில் ஒரு இளஞ்சோடி. கடலையான்னேன்....கல்யாணமாயிருச்சாம்!

கீழே ஆற்றின் ஏரியல் வியூ
கண்ணைச் சுழட்டுனாப் பச்சையோ பச்சை

எதிரே ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் மலையில் இருந்து இந்தப் பக்கம் மலைவரை இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த தண்ணீர்க் கால்வாய் கட்டிவச்சுருக்காங்க. பாலம், அதுலேயே தண்ணீர் தொட்டி. பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்துக்கு கோதையாற்றில் இருந்து தண்ணீர் வந்து சேருது. நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் கால்வாய்த் தண்ணீர் நதிக்கு அடுத்த பக்கம் இருக்கும் மலையைத் தாண்டிவந்து விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுக்குது இந்தத் தொட்டியா இருக்கும் பாலம் வழியாக!
எறும்பூறும் பாலம்????

அங்கங்கே ஆண்டவன் படைச்ச நதித் தண்ணீரை அடுத்த மாகாணத்துக்குத் தராம அணைகட்டிப் பிடிச்சுக்கிட்டு அடாவடி அடிக்கும் ஆட்கள் இதைப் பார்க்கணும். அவுங்கதான், தங்கள் எல்லையை விட்டு வெளிவந்த தண்ணிக்கே கணக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்களே. அதை வச்சு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு......இந்தமாதிரி பாலமோ தொட்டியோ கட்டக்கூட வேணாமே. தானே நதியின் போக்கிலே வரவிட்டால் போதாதா? ஹூம்.....
தொட்டிப் பாலம்

1966 வருசம் கட்டுன தொட்டிப் பாலம் இது. பிரமாண்டமான 28 ராட்சஸத்தூண்கள் கட்டி அது இந்தத் தொட்டியைத் தாங்கிக்கிட்டு இருக்கு. ஆசியாவிலேயே நீண்ட & உசரம் கூடுதலானத் தொட்டி உள்ள பாலமாக இது இருக்காம். மாத்தூர் என்ற ஊருலே கட்டி இருக்காங்க. இந்த ஊர் கன்யாகுமரி & திருவனந்தபுரம் ரெண்டுக்கும் சரிபாதி தூரத்துலே இருக்கு. அறுபது கிலோமீட்டர் எந்தப் பக்கம் போனாலும். நடு நிலமைன்னா இதுதான்:-))))

தகவல் பலகை

விளவன்கோடு, கல்குளம் பகுதிகளில் ஒரு காலத்தில் வறண்டநிலப்பகுதியா ஆனப்ப, அங்கே நீர்ப்பாசன வசதி செஞ்சா விவசாயம் கொழிச்சு நாடு நல்லாகுமுன்னு செஞ்ச ஏற்பாடு இது. யார் இதுக்கு முன்கை எடுத்ததுன்னு நினைக்கறீங்க? எல்லாம் அப்ப இருந்த முதல்வர் ஐயாதான். படிக்காத ஆனால் பண்பட்ட, நாட்டுநலனில் ஆழ்ந்த அக்கறையுள்ள மேதை நம் காமராசர்தான். (தனக்குன்னு நாலு காசு சேர்த்துவச்சுக்கத் தெரியாதத் துப்பில்லாத மனுசர். ஐயா.... போயிட்டீரே. விளம்பரம்கூடத் தேடிக்கத் தெரியாத என்ன மனுசரய்யா நீர்?)
அவரோட பதவிக்காலத்துக்குப்பிந்தான் இந்தத் திட்டம் பூர்த்தியடைஞ்சது. 1966ன்னு பார்த்த நினைவு.
சுழல்படிக்கட்டு ஒன்னு கட்டி, அங்கே குழந்தைகள் விளையாட ஒரு பூங்கா அமைச்சது எல்லாம் ஒரு மூணு வருசம் முந்திதான். செலவு பதினோரு லட்சமாம். (ஆட்டையைப் போட்டது எவ்வளவா இருக்குமுன்னு மனசு ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துச்சு)

பாலத்து முடிவுக்கு வந்தப்ப சின்னச்சின்னத் தீனிக் கடைகள். கார் பார்க்கு அங்கேதான் இருக்கு. பள்ளிக்கூடப் பசங்க சுற்றுலாவுக்குன்னு வந்து இறங்குனாங்க. அப்ப அதுதான் பாலத்துக்கு வரும் முகப்பு வழிபோல! நான் இடும்பின்னு ரமேஷுக்கு எப்படித்தான் தெரிஞ்சதோ:-)
சாம்பக்காய்/ பன்னீர்ப்பழமுன்னு சொல்லும் பழங்கள் கூறுபோட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. அயினிப் பழங்களும் இருந்துச்சு. பார்வைக்குப் பலாப்பழத்தின் மினியின் மினி!! நான் ஆசைக்கு ரெண்டே ரெண்டு வாங்கிக்கிட்டேன். முக்கால் காய். மறுநாள் முழுசாப் பழுத்துருமாம்.


அயினிச் சக்க
அயினி வாங்கலியோ அயினி...
டாரோ ( Taro)என்ற பெயரில் பஸிஃபிக் கடல் தீவுகளில் கிடைக்குது


பள்ளிக்கூடப் பசங்கள் சிலர் கையில் இருக்கும் காசுலே, தனக்குன்னு வாங்கிக்காம வீட்டுக்கு வாங்கிக்கிட்டுப் போறோமுன்னுச் சொன்னது வியப்பு. எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்துச்சு. இப்படி இருக்கும் விசாலமான மனசு எப்படி வளரவளரக் குறுகிப்போகுதுன்றது இன்னும் அதிக வியப்பே!

தொடரும்....:-)

பி.கு: மீண்டும் பயணத்தில் இருக்கின்றேன். இணைப்பு சரியில்லை. ஆனாலும் விடுவதாக இல்லை .வகுப்புக்கு வரும் கண்மணிகளுக்கு நன்றி.

Tuesday, June 02, 2009

நோட்டீஸ் போர்டு அறிவிப்பு

தவிர்க்க முடியாத சில காரணங்களால் துளசிதளம் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு முடங்கிக் கிடக்கப் போகின்றது . அநேகமாக இரண்டு வாரங்கள் கழித்து வகுப்புக்கள் வழக்கம்போல் ஆரம்பிக்கும்.

கூடவே வரும் வகுப்புக் கண்மணிகளுக்கு என் மனமார்ந்த நன்றியும், அளவில்லாத அன்பும்.

மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.

என்றும் அன்புடன்,

உங்கள் துளசி டீச்சர்.
கோபாலகிருஷ்ணன் நம்மைவந்தடைந்த 8 வருசங்கள் முன்பு




போனமாதம் ஒரு நாள்


போவதற்குச் சில நாட்கள் முன்


எல்லாம் முதுமைதான் காரணமாம். (-:


இந்த ஜூன் மாசம் PIT போட்டிக்கான தலைப்புக்கு மிகவும் பொருத்தம்!