முதலாம் எலிஸபெத் மகாராணியாரை யாருக்காவது நினைவிருக்குதுங்களா? என்ன........ இல்லையா? போனாப்போகட்டும். இப்ப இருக்கும் மகாராணியார் ரெண்டாம் எலிஸபெத் அவர்கள் என்றதால் முதலாவதா ஒருத்தர் இருந்துதானே ஆகணும். அவுங்க காலத்துலே அதாவது அவுங்க மரணமடைந்தபிறகு நடந்த கதை இது. ராணியம்மா 1603 வது வருசம் மறைஞ்சாங்க. அரசுக்கு வந்தவர் (முதலாம்)ஜேம்ஸ். ராணியம்மாவுக்குக் கத்தோலிக்கப் பிரிவு மக்கள் மேலே அவ்வளவா பாசம் இல்லை. ஆனா இப்ப வந்துருக்கும் ராசா ஒருவேளை நம்ம மேல் பாசமா இருப்பாருன்னு கத்தோலிக்க மதத்தினர் சிலர் நினைச்சாங்க. ராசாவோட அம்மா கத்தோலிக்கராச்சே. ஆனால்..... நினைப்புப் பொய்யாப் போச்சு.
ஒரு சின்னக் குழுவினர் சரியாச் சொன்னா 13 பேர் சேர்ந்து இதை எதிர்க்கணுமுன்னு திட்டம் போட்டாங்க. ( அய்யோ.... 13 என்றது வெள்ளைக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத எண் இல்லையோ?)
குழுவுக்குத் 'தலை'யா இருந்தார் ராபர்ட் கேட்ஸ்பி.
பார்லிமெண்ட் கட்டிடத்தை வெடி வச்சுத் தகர்த்து நம்ம எதிர்ப்பைக் காமிக்கணுமுன்னு திட்டம். அய்யய்யோ.....இளவரசர்கள், பிரபுக்கள் எல்லாம் செத்துட்டா? போகட்டுமே.....
வெடி வைக்க வெடி மருந்து வேணுமுல்லே? கொஞ்சம் கொஞ்சமா 36 பேரல் கன் பவுடரைச் சேகரிச்சாங்க. சேர்த்ததைக் காப்பாத்தி வச்ச இடம் பிரபுக்கள் சபைக் கட்டிடத்தின் சுரங்க அறை. சபை கூடி இருக்கும் நேரம் கட்டிடம் வெடிச்சால் பொதுமக்களில் பலரும் இறக்க நேரிடுமேன்னு சிலர் கவலைப்பட்டாங்க. இன்னும் சிலர், எல்லாருமேவா ராசாவை ஆதரிக்கிறாங்க? கத்தோலிக்கப் பிரிவின் நண்பர்களா இருக்கற சிலரும் மேலே போயிருவாங்களேன்னு கலங்குனாங்க. ரெண்டு பேர் இருந்தாக்கூட அவரவர் எண்ணம் தனின்னும்போது 13ம் ஒரே கருத்தா இருக்குமோ? குழுவில் ஒருத்தர் தனக்கு வேண்டப்பட்ட ஒரு பிரபுவுக்கு, நவம்பர் அஞ்சாம் தேதிக்கு மட்டும் பார்லிமெண்ட் பக்கம் தலை வச்சும் படுக்காதீங்கன்னு கடுதாசி அனுப்புனாருன்னு ஒரு வதந்தி. கடுதாசி அங்கே இங்கேன்னு கை மாறிக் கடைசியாக் கிடைச்சது ராசா கையில்.
36 பீப்பாயைக் காவல்காத்துக்கிட்டு இருந்தார் கைடோ ஃபாக்ஸ் (Guido Fawkes)என்றவர்.Guy என்ற இவர் பெயரைச் செல்லமா கைடோ(Guido)ன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்தாங்களாம் இவரோட 'நண்பர்கள்'. பொழுது விடிஞ்சும் விடியாமலும் இருந்த பொழுதில் சுரங்க அறையிலே பீப்பாய்களோடு சேர்த்து இவரைப் பிடிச்சாங்க. இன்னொரு வதந்தி என்னன்னா.... இந்த கன் பவுடர் எல்லாம் நாள்ப்பட்டது. தீவச்சு இருந்தாலும் வெடிச்சிருக்காது. உண்மையான 'உண்மை' என்னன்னு இதுவரை யாரும் எழுதி வைக்கலை(-:
ஆனால்...சம்பவம் மட்டும் மனசில் முக்கியமா ராசாங்க அதிகாரிகள் மனசில் பதிஞ்சு போச்சு. இன்றளவும் ஆட்சியில் இருக்கும் அரசரோ, அரசியோ பார்லிமெண்ட்க்கு ( அதுவும் வருசத்துக்கு ஒரு முறைதானாமே) விஜயம் செய்யும்போது, முன்னதாகவே சுரங்க அறைகள், இன்னும் சுற்றுப்புறமெல்லாம் ஆபத்து இருக்கான்னு ஆராய்ஞ்சுறணும் என்றது ஒரு விதியா ஆகிப்போய் இருக்கு.
இந்த கைடோ என்றவர் , ஸ்பானிஷ் படையில் வேலை செஞ்சவர். வெடிமருந்து வேலைகளில் கெட்டி. அதனால்தான் இந்தப் பொறுப்பு இவருக்குக் கிடைச்சது. இவர் பிடிபட்டப்போது, தீக்குச்சி, கடிகாரம், பத்தவைச்சு எரிக்கும் மரத்துண்டு எல்லாம் இவரோட பாக்கெட்லே இருந்துச்சாம்.
ராசா நல்ல தூக்கத்துலே இருக்கும்போது கை(டோ) ஃபாக்ஸைப் பிடிச்சுக்கிட்டுப் போய், ராசாவின் படுக்கை அறைக்கு வெளியே நிறுத்திவச்சுட்டு, இவனை என்ன செய்யலாமுன்னு ராசாவைக் கேட்டதுக்கு, 'சிறையில் அடைச்சு லேசாச் சித்திரவதை(????) செஞ்சு இன்னும் யார்யார் கூட்டுன்னு விசாரிங்கோ'ன்னு சொல்லிட்டாராம்.கை, வாயைத் திறக்கலை. யாரையும் காமிச்சுக்கொடுக்க விருப்பம் இல்லை.
லேசான சித்திரவதையின் கொடூரம் கூடிக்கிட்டே போயிருக்கு. இதுக்குள்ளே சதித்திட்டம் தீட்டுன (இந்த பாக்கி 12 பேரை) ஆட்களை வளைச்சுப் பிடிக்கப் பார்த்தாங்க. சண்டையில் சிலர் செத்துட்டாங்க. கடைசியில் எட்டுப்பேர் ஆப்ட்டாங்க. தூக்கில் தொங்கவிட்டு உசுரு போனதும் இழுத்துக்கிட்டுப்போய் நாலு துண்டா நறுக்கிப்போடணுமுன்னு தீர்ப்பு. அந்தக் காலத்துலே மனுசத் துண்டுகளை ஊர் ஊராக் கொண்டுபோய் மக்கள் பார்வைக்கு வைப்பாங்களாம்.
'மனசுலே பயம் வருதா? ....... இது......' எச்சரிக்கை மணி!
ஜனவரி 31, 1606 வருசம் ( பிடிபட்ட 88வது நாள்) தண்டனையை நிறைவேத்துனாங்க. பொதுமக்களுக்கு விவரம் தெரியணும், சதித்திட்டம் தீட்டும் ஆட்களுக்குப் பயம் வரணுமுன்னு பிடிபட்ட நாள் நவம்பர் 5 ஆம் தேதியை பட்டாஸ் கொளுத்தி பான்ஃபயர் நைட்டாக் கொண்டாடுனாங்களாம். வெடிவைக்கப் பார்த்த பாவி 'கை'யோட கொடும்பாவியைக் கொளுத்தும் விழாவா ஆரம்பிச்சு, பிரிட்டிஷ் மக்கள் எங்கெங்கே புலம் பெயர்ந்து போனாங்களோ அங்கெல்லாமும் இது ஒரு பண்டிகையா ஆகிக்கிடக்கு. இங்கிலாந்து மக்கள், அவுங்க போன இடமெல்லாம் அவுங்க விழாவைக் கொண்டுபோனது சரிதானே? இப்ப நாம் தீபாவளியை உலகம் பூராவும் கொண்டு போகலையா?
தீபாவளின்னதும் நினைவுக்கு வருது. 'மேற்படி சம்பவம்' நடந்ததும் ஒரு ஐப்பசி மாசம் என்றபடியால் ஏறக்குறைய நம்ம பண்டிகை சமயம்தான் இது வருது. இந்த சாக்குலே, பட்டாஸ் நமக்கும் கிடைக்க ஒரு வழி பொறந்துருக்கு. இல்லேன்னா இந்த நாடுகளில் பட்டாஸ் விற்பனை எல்லாம் கிடையாது. நாங்க இங்கே நியூஸி வந்த புதுசுலே நவம்பர் 5க்கு ரெண்டு வாரத்துக்கு முன்னே பட்டாஸ் விற்பனை இருக்கும். ராக்கெட்ன்னு வானத்துலே விடறதெல்லாமும்கூட இருந்துச்சு. சின்னப் பசங்க வாங்கிவச்சுக்கிட்டுச் சும்மா இருக்குமா? சின்னச்சின்னதா விபத்துகள். இந்த அழகுலே 18 வயசுக்குட்பட்டவர்களுக்கு பட்டாஸ் விற்பனை செய்யக்கூடாது. (ஆனால் பதினைஞ்சரை வயசுலே கார் ஓட்ட ட்ரைவிங் லைஸன்ஸ் எடுக்கலாம்)
கழுதை தேஞ்சுக் கட்டெறும்பா ஆனது போல ரெண்டு வாரம் சுருங்கித் தேய்ஞ்சு இந்த வருசம் நாலே நாள்தான் விற்பனை. அதுவும் ஆபத்தில்லாம வெடிக்கும்(????) கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, கொஞ்சமா மேலே போய் அங்கே இருந்து பூச்சொரியும் சின்ன பயர் பால்ஸ் இப்படிச் சில. பட்டாஸ் பெட்டிகளில் இருக்கும் பெயர்களைப் பார்த்தால் அரண்டு போயிருவீங்க. என்னமோ ஏதோன்னு:-) இதையுமே அஞ்சாம்தேதி மாலை 6 மணிக்கு அப்புறம் விக்கக்கூடாது. வெள்ளைக்கார நரகாசூரன் வருசாவருசம் ஒரே தேதியில் வருவதைப்போல நம்மூர் நரகாசூரன் வர்றதில்லையே. அதுக்காக நம்ம பண்டிகையை விடமுடியுதா? கொஞ்சம் வாங்கி ஸ்டாக் வச்சுக்குவோம். நரகாசூரன் வரும்போது நாம் ரெடி:-))) தோட்டத்துலே போய் கொஞ்சமாக் கொளுத்திக்குவோம்.இப்பக்கூடப் பாருங்க அக்டோபர் 27க்கு கம்பிமத்தாப்பு கொளுத்துங்கன்னா..... இவர் போய் பூச்சட்டின்னு நினைச்சுக் கொளுத்துனது 'டப் டுப்' ன்னு சத்தம் போட்டுருச்சு. பக்கத்துவீட்டு' ஜோனத்தன்' உடனே வேலிக்குமேல் ஏறி எட்டிப் பார்க்கறான். சின்னப் பையந்தானே? ஆசை இருக்காதா? அவனையும் கொஞ்சம் சேர்த்துக்கிட்டோம் ஆட்டத்துலே:-)
'உனக்கு ஏது பட்டாஸ்? அடுத்தவாரம்தானே கடையில் விற்பனைக்கு வருது....."
" போன வருச பாக்கி"
"ஆமாமாம். சில ஸ்பெஷல் தினங்களுக்காக சேவ் செஞ்சு வச்சுக்கலாம். சிலர் இப்படிச் செய்யறாங்க, பர்த்டேக்குன்னு. உங்களுக்கு இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?"
" ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ்"
பெரியமனுசன் மாதிரிப் பேச்சு:-)))))
எதையோ சொல்லவந்து எங்கியோ போயிட்டேன்.......
என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்..... கை ஃபாக்ஸ் டே.......இதுக்கு ....
ஒவ்வொரு நகரிலும் இருக்கும் கவுன்ஸில்கள், நம்ம காசை வச்சு( அதான் வீட்டுவரியைக் கறக்கறாங்களே, அதுலே ஒரு பகுதியை) ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளேன்னு அதுக்குன்னு ஒரு ஆளைவச்சு வெடிக்க வைப்பாங்க. நதிக்கரை ஓரமா இருந்தா நல்லதுன்னு நீர்நிலைகள் அருகில் விழா நடக்கும்.
இப்ப ஒரு பத்து வருசமா எங்க ஊரில் கடலில் pier கட்டுனபிறகு, விழா அங்கேதான் நடக்குது. மாலை 7 மணிபோல இசைக் குழு( கிறைஸ்ட்சர்ச் சிம்போனி ஆர்கெஸ்ட்ரா) பாடத்தொடங்கும். சரியா 9 மணிக்கு வாணவேடிக்கை. பத்தவைக்கன்னே நிபுணர் வெளிநாட்டில் ( ஆஸ்தராலியா) இருந்து வருவார். பத்தே பத்து நிமிசத்துலே நம்ம காசு ரெண்டு லட்சம் டாலரைக் கரியாக்கிருவாங்க. ஆனாக் கண் கொள்ளாக் காட்சியா இருக்கும்.
ஆகாயத்துலே போறதை அம்மா அள்ளிக்கோ..... ஐயா அள்ளிக்கோ தான். இசை நிகழ்ச்சி உக்கார்ந்து கேட்கும் பொறுமை இல்லை. அதுவுமில்லாம வரும்போது ட்ராஃபிக்லே மாட்டிக்குவோம். இசை நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பா ரேடியோவில் வருவதைக் கேட்டுக்கிட்டே காரில் உக்கார்ந்துக்கலாம். நமக்குத்தான் நோகாம நோம்பு கும்பிடணுமே. 9 அடிக்க ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி (கண்டுபிடிச்சு வச்சுருக்கும்) ஒரு மேடான இடத்துக்குப் போய்ச் சேருவோம். கடற்கரையில் இருந்து ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அட்டகாசமாத் தெரியும் வாணவேடிக்கையைப் பார்க்க வேண்டியது. கடைசியா (ஃபினாலி) பட்டாஸ் அடைமழையா அஞ்சு நிமிசம் விடாமப் படபடன்னு பாய்ஞ்சு வர்ணம் உமிழ்ந்துகிட்டு ஜெகஜோதி காட்டும் நிகழ்வு முடிஞ்ச கையோடு வண்டியைக் கிளப்பிறணும். அஞ்சு நிமிசம் பால்மாறுனா......போச்சு. நம்மைப்போல நினைப்பு எத்தனைபேருக்கு இருக்கும்?
அடிச்சுப்பிடிச்சு ரோடைப் பிடிச்சா 12 நிமிசத்துலே வீடு.
இந்தப் படம் இப்போதான் அங்கே போனப்ப எடுத்தது. கெமெராலே ஃபயர்வொர்க்ஸ் செட்டிங் எல்லாம் பக்காவாப் பண்ணி எடுத்த லட்சணம்(-:
இன்னிக்குத்தான் வெள்ளைக்கார நரகாசூரன் கை ஃபாக்ஸ் தினம். எங்கூர் பெருசுங்க, உள்ளூர் தினசரியில் இளவட்டங்களுக்கு இன்றைய சரித்திரம் தெரியலையேன்னு புலம்பல் விட்டுருந்தாங்க. அவுங்களுக்குத் தெரியலைன்னாப் போகுது....உங்களுக்கு? சரித்திரத்தை நம்ம சரித்திர வகுப்புக்கு கொணாந்துட்டேன். உங்களுக்கும் சொல்லிக்கொடுத்தது போல ஆச்சு. இல்லீங்களா?
Showing posts with label guy fawkes day. Show all posts
Showing posts with label guy fawkes day. Show all posts
Tuesday, November 04, 2008
சரித்திரத்தில் 'நரகாசூரன்'
Posted by
துளசி கோபால்
at
11/04/2008 08:02:00 PM
40
comments
Labels: guy fawkes day, அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
