Showing posts with label Thrissur. Show all posts
Showing posts with label Thrissur. Show all posts

Monday, May 04, 2015

பாப்பானின் ஏமாத்து வேலையைப் பார்த்தீங்களா? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 46)

ஏர்லின்க்  காஸில் (ஆலுவா) ஹொட்டேலிலிருந்து திரிஸூர் (திரிச்சூர்)  53 கிலோமீட்டர் தூரம்.  கன்யாகுமரி ஹைவேயில்  முரிங்கூர் சாலக்குடி வழியாத்தான் போறோம். சாலக்குடி டவுனுக்குள் போகணுமுன்னால்.... ஹைவேயில் இருந்து கீழிறங்கிப்போகணும். இத்தனை வருசத்துலே இங்கும் எல்லாம் மாறித்தானே கிடக்கும்.  எதுக்குப்போய்ப் பார்த்து  பழைய இடங்களைத்தேடி வீணாச் சுத்தணுமுன்னு தோணுச்சு எங்க ரெண்டு பேருக்குமே!  சாலக்குடி மேம்பாலத்தில் கடக்கும்போதே புதுசாக்கட்டிக்கிட்டு இருக்கும் சர்ச் கண்ணில் பட்டது.  அய்க்கோட்டே....

ஒரு மணி நேரப்பயணத்துலே  திரிஸூர் வந்து சேர்ந்துட்டோம். ஊருக்கு நடுவிலே பூரப்பரம்பு. திரிஸூர் பூரம் திருவிழா நடக்கும் மைதானம்.  இதுக்குள்ளேதான் பாரமேகாவு பகவதி க்ஷேத்ரமும், வடக்குநாதன் அம்பலமும் இருக்கு. சிவனும் பகவதியும் ஒரே இடத்தில் தனித்தனியா இருக்காங்க. நான் இதுவரை இந்தக்கோவில்களுக்குள்ளே போனதே இல்லை. இப்பவும் அப்படியேதானாச்சு.

மேலே படம்: ஊருக்குள் நுழையும் தெருவிலே  ஒரு வீட்டு வாசலில் அழகான மேரிமாதா, ஏசுநாதர் சிலைகள் விக்கறாங்க போல. வீட்டுப்பூஜை அறையில் வைக்கணும்தானே!
அதிகாலை 3 மணிக்கே கோவில்கள் திறந்துருவாங்க. காலை பூஜைகள் எல்லாம் முடிஞ்சு  10.30 நடை அடைப்பு.  மீண்டும் மாலை  5 முதல் 8.30 வரை. நாமோ பதினொன்னேகாலுக்கு வந்துருக்கோம். கோவில் மைதானத்துக்கு எதிரில் வடைக் கடை.  சுவாரசியப்படலை அது இருக்கும் அழகைப் பார்த்தால்.

 ஊருக்குள் எல்லாம்முக்கிய இந்தப் பரம்பைச் சுத்தித்தான் சாலையே!  ஒருவழிப்பாதை வேற!  கார் பார்க்கிங் என்ற நாமதேயமே இல்லை. ரெண்டு முறை பரம்பை வலம் வந்தும் பயனில்லை. காரில் இருந்து கோவில்களுக்குக் கும்பிடு போட்டுட்டு, பரம்பில் இருக்கும் யானைகளை பார்த்தே ஆகணுமுன்னு  நாங்க இறங்கிக்கிட்டோம்.  சீனிவாசன் இன்னும் பத்து சுத்து சுத்திப் புண்ணியம் சேர்த்துக்கட்டும்!

ஊருக்குள் ஜனம் மேயுது!  அதில் பாதி இந்தப் பரம்பிலும். யானைகள் சில அங்கங்கே.  விவரம் விசாரிக்கலாமுன்னா பாப்பானைக் காணோம். ஆனால் பாப்பான் இருப்பதை யானைகள் உணரணும் என்று, அங்குசத்தை நிலத்தில் குத்தி யானைக்காதின் பின்புறத்தின் அடியில் முனை இருக்கும்படி வச்சுட்டு எங்கியோ போயிருக்காங்க.  என்ன ஏமாத்து வேலை பாருங்களேன்!








யானையால் சட்னு திரும்ப முடியாது. பக்கத்துலே பாப்பானிருக்காரான்னு பார்க்க  லேசாத் தலையைத் திருப்பினால் அங்குசம் குத்தும். அதுக்குப் பயந்து  அங்கே அங்குசத்தைப் பிடிச்சுக்கிட்டு பாப்பான் நிக்கறாருன்னு நினைச்சுக்கிட்டு நேர்பார்வையா  தலையைத் துளியும் ஆட்டாமல் நிக்குது பசங்க. தன் பலம் என்னன்னுகூட  அதுகளை உணரவிடாமல் பண்ணி வச்சுருக்கு மனுஷ்யனின் கெட்ட எண்ணம்.

பரம்பின் வெளிப்புறத்தில் சுற்றிலும் கடைகளோ கடைகள்.  சீனிவாசனை செல்லில் கூப்பிட்டு அவர் வந்ததும்  இன்னொரு சுத்து சுத்தினப்பதான்  இங்கே இவ்ளோதூரம் வந்து  ஒன்னும் வாங்காமல் போகலாமான்னு எனக்குத் தோணுச்சு.  பழைய நாட்களில்  இங்கே ஒரு தெருமுழுசும் தங்க நகை வியாபாரம். அதுவும் ஒரே ஒரு கடை தெருவின் ஆரம்பத்தில் இருந்து அந்தத் தெருவின் முடிவுவரை நீளமாப் போகும். செம்மன்னூர் ஜுவல்லர்ஸ். அப்போ இது மட்டும்தான். அப்போ இங்கே ஒரு  செயின் வாங்கினோம். கேரளத்தை விட்டு, பூனாவிற்கு  இடம் மாறிப்போகும்போது, போகுமிடத்தில் கையிலே காசு இல்லைன்னா எப்படின்னு அந்தச் செயினை  அதே கடையில் வித்துட்டும் போனோம். 

நகை ராசி இல்லை:-) இந்த முறை துணிகள் வாங்கிக்கலாமுன்னு  பார்த்தால்...கல்யாண் சில்க்ஸ் கண்ணில் பட்டது. அங்கெ இறங்கிக்கிட்டு,  சீனிவாசனை இன்னும் சில ரவுண்டு பரம்பைச் சுத்தச்சொல்லிட்டு கடைக்குள் புகுந்தோம். மூணு மாடிகள். பெண்களுக்கு  முதல் மாடி.  இளம்பெண்களா  அமர்க்களமா இருக்காங்க விற்பனை உதவியாளர்கள்.


முண்டு ஸ்டைல்கள் இப்போ மாறிப்போயிருக்கு. வெறும் கசவு (சரிகை) முண்டுகள் மட்டுமில்லாம விதவிதமான டிஸைன்களை நீளமாபார்டர் போல் வெட்டித் தைத்த வகைகள். அதுக்கேத்த ப்ளவுஸ் துணிகளுடன். மகளுக்கும் எனக்கும்  ரெண்டு செட் வாங்கினதோடு, என் மலேசிய தோழிக்கு  ஒரு கேரளா ஸாரியும். அவுங்க  அம்மா கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்தவங்க என்பதால் கேரள கனெக்‌ஷன் இருக்கு:-)

மணி  இப்போ 12.10.  சீனிவாசனை செல்லில் கூப்பிட்டதும்  வந்தார்.  நேரா குருவாயூர் போயிடலாம்.  திரிஸூரில் இருந்து  ஒரு  28 கிமீதான் .  முக்காமணி நேரம் போதும்.பகல் சாப்பாட்டையும்  அங்கே முடிச்சுக்கலாம். மேலும் அங்கேதான் ராத்தங்கல்.  வலையில் பார்த்து ஒரு ஹொட்டேலை நேத்தே பதிவு செஞ்சுருக்கு என்று திட்டத்தைச் சொல்லி அதன்படி ஆச்சு.
Kanoos Residency க்குள் நுழையும்போதே வாசலில் வாழைமரங்கள் கட்டிய அலங்காரத்தோடு வரவேற்பு. ஹொட்டேலில் இருக்கும் ஹாலில் ரெண்டு கல்யாணங்கள் நடக்குது!   கல்யாண சாப்பாடு கிடைச்சால் கொள்ளாம்:-)



ஹொட்டேல் வரவேற்பு ஹால் சூப்பர்! அழகழகான சுவர்ச் சித்திரங்களும், ஹாலின் நடுவில் குருவாயூரப்பன் சிலையுமா அட்டகாசம்.  பெரிய யானையின் மேல் அம்பாரியில் ராஜா ஊர்வலம் போறார். குட்டியானையின் மேல்  ராஜாவுக்கு வேண்டப்படவர்  இருக்கார்! எனக்கு ரொம்பப் பிடிச்சே போச்சு.ஹொட்டெல் கெஸ்ட்களுக்குப் பார்க்கிங்  அடித்தளத்துலேயே இருக்கு.
செக்கின் பண்ணிக்கிட்டு கீழே உள்ள ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். சீனிவாசனையும் அங்கே வரச் சொல்லியாச்சு. ஆர்ய த்ராவிட  பாரம்பரிய இந்திய உணவு!  எனக்கு ஒரு ஃப்ரைடு ரைஸ்,  கோபாலுக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல்ஸ்.


கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிறகு  ஏற்கெனவே நாம் போட்ட திட்டத்தின்படி  இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் இருக்கும் திவ்யதேசக் கோவிலுக்குப் போய் வந்துடலாமுன்னு கிளம்பினோம்.  கோவில்  மாலை அஞ்சு மணிக்குத் திறந்து ஏழரைக்கே நடை சாத்திடறாங்க. காலையில் அஞ்சு முதல் பதினொன்னு.

சரியா நாலரைக்கு கடைத்தெருவில் இருந்து  இடது பக்கம்  திரும்பும் தெருவின் கடைசியில்  இருக்கும்  கோவிலுக்குப் போயாச்சு. இன்னும் அரை மணி இருக்கே!  வரும்வழியில் பார்த்த கடைத்தெருவில் சாயா ஒன்னு குடிக்கலாம். இங்கேயாவது நாயர் கடை டீ கிடைக்குமான்னு பார்க்கலாமுன்னு  பொடிநடையில் கடைத்தெருவுக்கு வந்தோம்.


டீக்கடையா ஒன்னும் கண்ணில் படலை.    கடைகளில் எல்லாம் பொரிகளை சின்னதும் பெருசுமான பொதிகளாய் விற்பனைக்கு வச்சுருக்காங்க. எதுக்கு இவ்ளோன்னு புரியலை.  அதுக்குள்ளே பொட்டிக்கடை போல இருந்த ஒன்னில் டீ எங்கே கிடைக்குமுன்னு கேட்டதுக்கு நானே போட்டுத் தரவான்னு கேட்டவர்  ஒரு எலக்ட்ரிக் கெட்டிலில் சாயாப்பொடி, பஞ்சஸாரா(சீனி) பால், வெள்ளம்  எல்லாம் சேர்த்து  ப்ளக் ஸ்விட்சைப் போட்டார்.   நோ பவர்!  கரண்டு போயி:(   அசட்டு சிரிப்போடு  'அந்தப் பக்கம் நாலாவது  ஒரு ஹொட்டல் உண்டு'ன்னார்.


அங்கே போய் மூணு டீயோடு முடிச்சுக்கிட்டுத் திரும்பக் கோவிலுக்கு வந்தோம். கோவில் இருக்கும் தெருவுக்குள்  நுழையுமிடத்தில் ரெண்டு பக்கமும்  கார் போகும் அளவுக்கு இடம் விட்டு ஒரு நினைவு மண்டபம்,  காந்திக்கு!  கிறிஸ்த்தியானிகள் அங்கங்கே  குரிசடி  வைக்கும் டிஸைனில்!   ஒரு ஓரமா வைக்காம தெருவின் முனையில் நடுவில் ஒரு நந்திபோல இருக்கு!   இதைத் திறந்து வைத்தவர் உத்தரப்ரதேசத்தின் முன்னாள் முதல்வர்  சுசேதா க்ருப்லானி. (ஆசார்ய க்ரிப்லானியின்  மனைவி)  இங்கெ சுஜாதான்னு எழுதி வச்சுருக்காங்க. போகட்டும்.....  1949இல் திறந்துவச்சபோது  தப்பா எழுதுனதுக்கு  2014 இல் நாம் என்னசெய்வது?

இது திருநாவாய என்னும் ஊர்.  நவ யோகிகள் தவம் செஞ்சு  விஷ்ணுவின் சிலையை ப்ரதிஷ்டை செஞ்சதாக ஐதீகம்.  முதல்முறை மஹாவிஷ்ணுவின் சிலையை உள்ளே ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்துன பிறகு  அப்போ இருந்த சாஸ்த்திரவிதிகள் படி சந்நிதியை  மூடி வச்சுட்டு ஏழாம்  நாள் திறந்தப்ப உள்ளே சாமியைக் காணோம்.  என்ன இது இப்படியாச்சேன்னு திரும்ப ஒரு சிலையை வச்சாங்களாம். மறுபடி ஏழாம் நாள் சிலை மிஸ்ஸிங். இப்படியஏட்டு முறை ஆகி இருக்கு.  ஒன்பதாம் முறை சிலையை பிரதிஷ்டை செஞ்ச மூணாம் நாளில் சந்நிதியைத் திறந்து பார்த்தால்  முழங்கால் வரை பூமிக்குள் புதைஞ்சுருக்கு! சிலை பூமிக்குள்  கொஞ்சம் கொஞ்சமாப் போகுதுன்னு தெரிஞ்சது.  உடனே பெருமாளை வேண்ட அப்படியே நின்னுட்டாராம்.  இப்பவும்  பூமியில்  முழங்காலளவு புதைஞ்ச நிலையில்தான் இருக்கார் முகுந்தன்!  திரு நாவாய முகுந்தன். நவ யோகிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  திரு நாவாய  ஸ்ரீ திருநவாமுகுந்த க்ஷேத்ரம்!

  ஸ்ரீ க்ருஷ்ணரும், பஞ்ச பாண்டவர்களும் இங்கே வந்து  முன்னோர்களுக்கு பிண்டம் அளித்து கர்மங்கள் செஞ்ச இடம் என்பதால் இங்கே பித்ரு கர்மா செய்வது விசேஷம்.  ஆடி அமாவாசை நாட்களில் கூட்டம்நெரியும். காசியில் கொடுப்பதைப்போல் யாத்திரைக்காரர்கள்  வருசம் முழுசும்  பிண்டம் கொடுக்கன்னே வந்துக்கிட்டு இருக்காங்க.  கோவில் நிர்வாகமும்  பித்ரு காரியங்கள் செய்ய வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செஞ்சு தர்றதில் முன்னணியில் நிக்குது!

பக்தர்கள் தங்க சத்திரம் கட்டி விட்டுருக்காங்க ஒரு ஹாலில் படுத்துத் தூங்கிட்டுக்  காலையில் எழுந்து குளிச்சு முழுகி கர்மம் செஞ்சுட்டுப்போகணும். வெறும் பாயும் தலையணையும் மதி என்றால்  பத்தே ரூபாய்தான் தங்கும் வாடகை!  ரூ பத்தில் இருந்து   900 ரூ வரையில் பலவிதங்களில் எழுதிப்போட்டு வச்சுருக்காங்க. அவரவர் வசதிகளுக்கு ஏற்றபடி இருந்துக்கலாம்.



கர்மம்செஞ்சு வைக்க தேவஸ்தானம்  அங்கீகாரம் செஞ்சுள்ள பண்டிட்டுகள் 14 பேர்.  அவர்கள் பெயரும் பட்டியல் போட்டு வச்சுருக்காங்க.  இதற்கான ஏற்பாடுகளுக்கு  தனி கவுண்ட்டர்  வச்சு செலவு விவரங்கள் எல்லாம் பக்காவா எழுதி வச்சுருக்காங்க.  கோவிலுக்கு  வருமானம் ரொம்ப(வே) கிடைக்குது போல!

சரி.  வாங்க அஞ்சு மணி ஆச்சு.  கோவிலுக்குள் போகலாம்!

தொடரும்..........:-)

PIN குறிப்பு :  பாப்பான் = பாகன்  யானைப் பாகன்.  வேறெதுவோன்னு நீங்களே   நினைச்சுக்கிட்டால் கம்பெனி பொறுப்பல்ல:-)