Showing posts with label Koratty Muthy கொரட்டி முத்தி பள்ளி. Show all posts
Showing posts with label Koratty Muthy கொரட்டி முத்தி பள்ளி. Show all posts

Tuesday, April 21, 2015

தங்கப்பழத்தைத் திங்கவா முடியும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 42)


அதிசயம் காமிச்ச அற்புத மாதா கொரட்டி முத்தி  விஷயம் கொஞ்சம் விவரம் கேக்கலாமுன்னு  ஓஃபீஸ் கட்டிடத்துக்குள் போனால்.... அங்கே ரெண்டு மூணு  பதின்மவயதினர்,   ஒரு 200 மில்லி  கொள்ளளவு இருக்கும் சின்ன பாட்டிகளில்  தண்ணீர் ரொப்பி அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு விசாரிச்சால் தீர்த்தமாம். அடுத்த விநாடி நடந்ததுதான், இதுவும்  ஒரு இந்துக்கோவில் என்ற எண்ணத்தை நிரூபிக்கும் சமாச்சாரமாகிருச்சு.  இன்னொரு பையன் அங்கிருந்த குழாயில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடிச்சுக்கொண்டு வந்து  தீர்த்தம் ஃபில்லிங்  ஏரியாவுலே வச்சதும், அதுலேஇருந்து சின்ன டம்பளராலே மொண்டு பாட்டில்களை நிரப்ப ஆராம்பிச்சாங்க. காலியான பாத்திரத்தை  எடுத்துக்கிட்டு திரும்ப குழாயாண்டை போனார் பையன். அப்ப, நான்   என்னன்னு கேட்டதுக்கு சரியாத்தான்  பதில் சொல்லியிருக்காங்க. தீர்த்தம்!!!!

'அச்சனைக் காணேணும்' என்று சொன்னப்ப.... 'அச்சன்  அடுத்துள்ளஒரு ஸ்தலத்திலேய்க்குப் போயிட்டுண்டு.  வைகிட்டு மடங்கும்' என்றதால் சரின்னு தலையாட்டிட்டு வந்துட்டேன்.

ஹிந்துக்கோவில்களில் நடக்கும் எல்லா விசேஷங்களும் இங்கேயும் நடக்குது. கோவில் திருவிழாவுக்குக் கொடி ஏற்றுதல், குழந்தைகளுக்கு முதல்முதலில் சோறு கொடுக்கும் அன்னப்ராஸனம்,  விஜயதசமிக்கு வித்யாரம்பம்  இப்படி அவர்களுக்குள்ள  சடங்குகள் படி.






ஆகக்கூடி  மனுஷ்யர் எல்லாம் ஒன்னுபோலவே! மதச்சடங்குகள் மட்டுமே  அந்தந்த மதங்களின் விதி அனுசரிச்சு.  இந்த ஏற்பாடு நல்லாத்தானே இருக்கு! பின்னே  எதுக்காக சண்டை போட்டுக்கறோம்?:(

இந்தப் பள்ளியில் பூவன்பழக்குலை நேர்ச்சையாகக்  கொண்டுபோய் கொடுக்கறது  ஒரு சிறப்பு வழிபாடு. இதுக்கு ஒரு 'புராணக் கதை'யும் உண்டு.  ரொம்ப காலங்களுக்கு முந்தி கொரட்டியிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கும் மேலூர்  என்ற  கிராமத்திலிருந்து பக்தர் ஒருவர், தன் தோட்டத்தில் விளைஞ்ச பூவன்பழக்குலை ஒன்னைத் தூக்கிக்கிட்டு  கொரட்டிமுத்திக்குச் சமர்ப்பிக்க நடந்து வந்துக்கிட்டு இருந்தார். முரிங்கூரைக் கடந்துவரும் சமயம், அங்கே  தன் வேலையாட்களுடன் ஒரு தோட்டத்திலிருந்த நிலச்சுவான்தார் ஒருவர்,  பழக்குலையைக் கண்டதும் அதுலே ரெண்டு பழம்கொடுத்துட்டுப்போன்னு இவரிடம் கேட்க, பக்தர்சொல்றார்,' இல்லைங்க. இது பள்ளிக்குக் கொண்டு போகும் நேர்ச்சை.'

அடுத்தவன் கொண்டுபோறதைக் கேட்க அவமானமா இருக்காதோ? அல்பம்:(

இப்படி அவர் மறுத்ததும்,  சுத்தி நின்னுக்கிட்டு இருந்த வேலையாட்கள் முன்னால் தனக்கு மானக்கேடு ஆகிருச்சு நினைச்ச முதலாளி,  பழக்குலையில் இருந்து தானே ரெண்டு பழம் பறிச்செடுத்து தின்றார். பக்தருக்கோ,  பணக்காரர் அதிகாரத்தின் முன்னால் என்ன செய்வதுன்னு தெரியாம கண்ணீரோடு அந்த இடத்தைக் கடந்து போறார். அவர் போனதும்  முதலாளிக்கு வயித்துவலிஆரம்பிச்சது.

எத்தனையோ மருத்துவர்களிடம் போய் சிகிச்சை செய்தும் வயித்து வலி குணமாகலை. அப்பதான்   பள்ளிக்குக் கொண்டுபோன பழத்தை எடுத்துத் தின்னதன் பலன் இதுன்னு அவருக்குத் தோணுது. உடனே  முத்தியிடம் தன்னை   மன்னிக்கச்சொல்லி பிரார்த்தனை செஞ்சு,  தன்னிடம் இருக்கும் நிலங்களில் பாதியை பள்ளிக்கு எழுதிக் கொடுக்கறார். வயித்துவலி போயேபோச்!

அதுக்குப்பிறகு  பள்ளியில் ப்ரசாதமா பூவன்பழம் கொடுப்பது  ஆரம்பிச்சு இருக்கலாம்.  பூவன்குலை நேர்ச்சை வந்துருச்சு.  யாரோ ஒரு பக்தர் தங்கக்குலை செஞ்சு கோவிலுக்கு  சமர்ப்பிச்சு இருக்கார்!  இந்த பூவன்பழத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் நல்லா காயவச்சு பொடி பண்ணி வச்சுக்கிட்டு  வயித்துவலி யாருக்காவது வரும்போது ஒரு சிட்டிகை வாயில் போட்டுக்கும்  அருமருந்தா ஆகி இருக்கு! நம்புனாதான் தெய்வம்!

அதிசயம் என்று சொல்லும் இன்னும் சில சமாச்சாரங்களும்  இருக்கு கேட்டோ!   நான் ஆரம்பத்தில் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலைன்னு சொன்னேன்  பாருங்க..... ஆக்ச்சுவலா அந்த ஆலை இன்று இருக்குமிடத்தில்  ஒரு  படை வீரர்களுக்கான  விமானதளம் ஒன்னு Military Air Base கட்டணும் என்பது ஆரம்பகால  ஏற்பாடாம். ஒவ்வொருமுறை வேலை ஆரம்பிக்கும்போதும் எதாவது தடை ஏற்பட்டு வேலை நின்னு போயிருமாம். ஒரு வயசான பெண்மணி, கையில் குழந்தையோடு  அங்கே வந்து நின்னு, கட்டிடம் கட்டாதீங்கன்னு  கண்ணீர் விட்டு அழுவாங்களாம். பலமுறை இப்படி ஆனதைப் பார்த்த ஒப்பந்தக்காரர், கொரட்டி முத்திதான் கையில் பிள்ளை யேசுவோடு வர்றாங்கன்னு நினைச்சு, வெள்ளியில் கடப்பாரை, மண்வெட்டின்னு கட்டடம் கட்டும் கருவிகளைச் செஞ்சு  கொட்டுமுழக்கோடு பெரிய  ஊர்வலமாக் கொண்டுபோய்  பள்ளியில் சமர்ப்பிக்கிறார். அப்படியும் அவர் முயற்சி நிறைவேறலை.

ஏர் பேஸ் வர்றது நின்னு போச்சு. அந்த இடத்தில்தான்  ஜமுனா கோர்ட்ஸ் ஆலை வந்து சுமார் மூவாயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கக் காரணமா இருந்துச்சு. இந்த ஆலை அப்புறம்  மதுரா கோட்ஸ் கம்பெனிக்குக் கைமாறிட்டாலும்,உள்ளூர் மக்கள் ஜமுனான்னுதான் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

ஆயிரம் தொழிலாளர்கள்தான் அங்கே வேலை செஞ்சாங்கன்றது  ஒரு தகவல். மனுஷ குணாதிசயப்படி   மூணாம் வாய்ப்பாடு எளிதாக எல்லோருக்கும் வந்துருக்கு:-)


அங்கேயும்  எண்பதுகளில் தொழிலை நடக்கவிடாம அரசியல் புகுந்து  கொடி பிடிச்சுக்  குழப்ப ஆரம்பிச்சதுன்னு   ஒரு சமயம் ஹிந்து பத்திரிகையில் வாசிச்ச  நினைவு.

ஒரிஜினல் கோவில் ஆறு நூற்றாண்டுகளுக்கு  முன்பே  இருந்துருக்குன்னு  ஆவணங்கள் சொல்லுதாம். 14 ஆம் நூற்றாண்டு.  15 ஆகஸ்ட்  1381 கட்ட ஆரம்பிச்சு  செப்டம்பர்  8 , 1382லே முடிச்சுருக்காங்க.!

அப்ப அந்தக் காலக்கட்டத்தில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் இந்தப்பகுதிகளில்  ஆண்டுக்கிட்டு இருந்துருக்காங்க.  அதுலே அடுத்துள்ள இரு நாட்டு அரசர்களுக்குள்  சண்டை வந்துருது. கொரட்டி கைமல்,கொடஸேரி  கர்தா என்ற பெயருடையவர்கள். இவர்கள் வம்சாவழியினர் இப்பவும் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்காங்க என்பதால் சம்பவத்துக்கு நம்பகத்தன்மை கொஞ்சம் கூடுதல்! சண்டையில் ரெண்டு பக்கத்து வீரர்கள் பலரும் செத்துடறாங்க.  கொரட்டி கைமலின் வலக்கை போல் இருந்த தளபதி  கவலக்காடன் கொச்சு வரீதும் இறந்துட்டார்.

அப்பல்லாம் இந்தப் பகுதிகளில்  இருந்த ஒரே சர்ச் அம்பழக்காடு பள்ளிதானாம். இதைக் கட்டுனது  மூணாம் நூற்றாண்டாம்.  செயிண்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்த காலத்தில் கட்டுனதாக சிலர்சொல்றாங்க. எல்லாம் கேள்வி ஞானம்தான்.  ஆதாரமெல்லாம் கிடையாது.  அங்கே கொண்டு போய்  மதச்சடங்குகள் செஞ்சு ராணுவ மரியாதையோடு  தன் படைத்தலைவனை புதைக்கணுமுன்னு  கொரட்டி கைமல்  ஏற்பாடுகள் செஞ்சு , சவப்பெட்டியை   ஊர்வலமா எடுத்துக்கிட்டு அம்பழக்காடு கொண்டு போறாங்க.

'எங்க எல்லோருக்கும் பொதுவான பள்ளி  இது. இங்கே புதைக்க விடமாட்டோமு'ன்னு  கொடஸேரி கர்தா தகராறு செஞ்சதால்  சவப்பெட்டியை எடுத்துக்கிட்டுத் திரும்பி வர்றாங்க. கொரட்டிப்பகுதிக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு அஞ்சு நிமிச ஓய்வுக்குச் சவப்பெட்டியை கீழே வச்சுட்டு, மீண்டும் தூக்கும்போது பெட்டி,  எடுக்க வரலையாம்!

சரி, கொச்சு வரீதுக்கு இங்கே இருக்க விருப்பமுன்னு அங்கேயே   புதைச்சுட்டாங்க. தம்புராட்டி(அரசி) இங்கே  ஒரு நினைவுச்சின்னம் இருக்கணுமுன்னு  நினைச்சு  20 அடிஉயர கற்சிலுவையைச் செய்ஞ்சு  (க்ரானைட் கல்லாம்)  கொச்சு வரீதைப் புதைத்த இடத்தில் நட்டு வச்சுருக்காங்க.  அதைத்தான் கோவிலின்  'பின்பக்க முன்வாசலில்' பார்த்தோம். கொஞ்சநாள் கழிச்சு தம்புராட்டி,  இங்கே  சின்னதா  ஒரு பள்ளியையும்  கட்டுனாங்களாம்.



காலப்போக்கில் கிறிஸ்துவ மத சம்ப்ரதாயங்கள் ஏகத்துக்கும் மாறிவந்துருக்கு. மலபார் கரையோரம் இருக்கும்  செயிண்ட் தாமஸ்  குழுவைச் சேர்ந்த பழைய கிறிஸ்த்தியானிகளையும் உதயம்பேரூர்  கவுன்ஸில் என்ற  Diampher Synod  ஒன்னு சேர்த்து சிலபல மாற்றங்களைச் செஞ்சுருக்காங்க. அதன்பின் போர்த்துகீஸியர்கள் வரவால்  பள்ளிகள் கட்டும் விதத்திலும் சில மாற்றங்கள் வந்துருக்கு. gothic style அனுசரிச்சு உசரமான சுவர்களும் ரொம்பவே உசரத்தில் இருக்கும் மேற்கூரைகளுமான சர்ச் கட்டிடங்கள்.

1790 இல் திப்புசுல்த்தான் படையெடுப்பு. திருவாங்கூர் கொச்சின் பகுதிகள் தாக்கப்பட்டு  திப்புவின்  படைகள் பள்ளிக்குத் தீ வச்சுட்டாங்க. கூரையும் அப்போ இருந்த ஆல்ட்டரும்  தீயால் அழிஞ்சு போச்சு. நல்லவேளையா சுவர்களுக்கு ஒன்னும் ஆகலை. அதையே வச்சுத்தான்  மேற்கூரையும்  கருவறை மேடையும் திரும்பக் கட்டினாங்க.

நாங்க அங்கே இருந்த காலக்கட்டத்தில் (1976 - 1977) அந்தப்பள்ளி இப்படித்தான் இருந்துச்சு.  நம்மகிட்டே அப்போ ஏது கெமெரா என்னும் ஆடம்பரம்!  ஸோ இது சுட்ட படம்:(
அப்போ.....


இப்போ....

1985லே இந்தப்பள்ளியின்  ஆல்ட்டரை மட்டும் தனியா எடுத்து வச்சுட்டு,   முழுசுமா இடிச்சுட்டு  நவநாகரீக ஸ்டைலில் கட்டி இருக்காங்க.  ரெண்டே வருசம், 8 செப்டம்பரில்  கிறிஸ்தியானி ஸ்டைலில் கும்பாபிஷேகம் நடந்துருச்சு. அதே ஆல்ட்டரில் இன்னும்கொஞ்சம் அலங்காரங்கள், அப்போஸ்தலர்களின் சொரூபங்கள் எல்லாம்  சேர்த்துருக்காங்க. நடுவில் யேசுவின் தாய் கன்னிமரியாள், அவருக்குக் கீழே யேசு. இவருக்கு  ஒரு பக்கம்  தாய் கொரட்டி முத்தி, இன்னொரு பக்கம் தந்தை ஜோஸஃப்  குழந்தையை ஏந்தியபடி  நிக்கறாங்க.

ஓபெரா நாடகம் பார்க்கும் தியேட்டர்களில் இருக்கும் பால்கனி போல  ஒன்னு!  அங்கே யேசுவின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்திரங்களாக!

மதராஸ்- கொச்சி  ரயில்பாதைகள் போட்ட பிறகு  ஒருநாள்  கொரட்டி வந்த  ரயில் அங்கிருந்து கிளம்பாம ஏதோ எஞ்சின் தகராறு ஆகிப்போச்சாம். ரயிலில் இருந்த மக்கள்ஸ் வண்டியை விட்டுக் கீழே இறங்கி நின்னப்ப கொட்டுமுழக்கு சப்தம் கேட்டு என்னன்னு போய்ப் பார்த்திருக்காங்க. பள்ளியில் பெருநாள் ஆகோஷம்(சர்ச்சில் திருவிழாக் கொண்டாட்டம்) நடக்குது.  மக்கள்ஸ் அதுலே கலந்துக்கிட்டு  சாமி கும்பிட்டுவிட்டு திரும்ப ரயிலாண்டை வந்ததும்  எஞ்சின் தன் ஸ்ட்ரைக்கை முடிச்சுக்கிட்டு சட்னு கிளம்புச்சாம். கேரளம் என்றாலே  வேலை நிறுத்தம்தான் போல:-))))

இப்படி  இங்கேயும் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!!!!!

மாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  ஆமென்!

நன்றி நவிலல்: படங்கள் தந்துதவிய  கொரட்டி மாதாவுக்கு என்  மனம் நிறைந்த நன்றிகள். 

Monday, April 20, 2015

கொரட்டி முத்தி என்னும் கன்னிமேரி மாதா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 41)

  கருகுட்டியில் இருந்து  அடுத்த   ஊர் நோக்கிப் போகிறோம். கொரட்டி முத்தி   என்னும்  மாதாவின் க்ஷேத்ரம் உள்ள ஊர் இது.  ஊருக்குப்பெயரே கொரட்டிதான். நாங்க  இந்த ஊரிலும் ஒரு வருசம் இருந்துருக்கோம்!  எப்படிடா இவ எல்லா ஊர்லேயும்  இருந்தான்னு வியப்பா இருக்கா?  இங்கே வந்ததுக்குக் காரணம் ஒரு மூணரை கிமீ தூரத்தைக் குறைக்கவே!

இதுக்கு முன்னால் இருந்த முரிங்கூரில்  (!)  இருந்து கோபாலின் ஃபேக்டரிக்கு 10 கிமீ தூரம். அப்போ இதுக்குப் பயண நேரம்  அரை மணியா இருந்துச்சு.  பஸ்ஸில் போறதுதான். ட்ரெய்னிகிட்டே சொந்த வண்டிக்கெல்லாம் காசு ஏது?  அதுவும் அங்கிருந்து போகும் பஸ் எப்பவும் மூச்சுவிட இடமில்லாம அடைச்சுக்கிட்டு இருக்கும். காரணம் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலை.  இது மதுரா கோட்ஸ் நடத்தும் மில்தான். மில் தொழிலாளிகள் அனைவரும் கொரட்டியில் இறங்கிருவாங்க. அதுக்குப்பிறகு பஸ் கொஞ்சம் காலியா இருக்கும்.

கொரட்டியில்  வீடு  கிடைக்குமுன்னு தெரிஞ்சதும்  முரிங்கூரில் இருந்து  வீடு மாத்திக்கிட்டு வந்துட்டோம். போல் (Paul)மாஸ்ட்டர் வீடுன்னு  இதுக்கு ஒரு பெயர்.  ட்யூப்லெக்ஸ் மாடல். ஒரு வீட்டிலே  மதுரா கோட்ஸ் ஆலையில் வேலை செய்யும்  சகோதரர்கள்  குடும்பம். ஒரு ஜோடி மில்லில். இன்னொரு ஜோடியில்  அண்ணன்  போல்ஸன் டிஸ்டிலரியிலும், அண்ணி  காலடியில் ஒரு பள்ளிக்கூடத்தில்  டீச்சராகவும் இருந்தாங்க.

இந்த வீட்டு வாசல் இருக்கும் தெருவின்  இடப்பக்கம் ஒரு அஞ்சு நிமிட் நடையில் ஒரு சர்ச் இருக்கு. வலப்பக்கம்  ரெண்டு நிமிட் நடந்தா மெயின் ரோடும் அதுலே இருக்கும் பஸ் ஸ்டாப்பும் . நமக்கு  நல்ல வசதி!
கோபாலின் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருவர், அங்கே  வீடு காலி இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். வாடகை என்னவோ  அப்போ கொடுத்துக்கிட்டு இருந்ததைவிட பத்து ரூ அதிகம்தான். ஆனால் வேலைக்குப் போக வர  கொஞ்சம் எளிது. பத்து நிமிச நேரமும்  கூடவே நாப்பது  காசும்  (போகவர) மிச்சப்படுத்தலாம்:-)

ஞாயித்துக்கிழமைகளில்  கொஞ்சம் லேட்டா எழுந்து கையில் காப்பியோடு வாசத்திண்ணையில் உக்கார்ந்தால்  மின்னலடிக்கும் வெள்ளை உடுப்போடு பள்ளிக்கு (சர்ச்சுக்கு)  சாரிசாரியாப் போகும்  அம்மச்சிகளைப் பார்க்கலாம்.
ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க.

ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்' 'பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்க மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'Bபோல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னு சிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.

நாங்க இங்கே எங்க கேரளா சங்கத்தில்  இதையெல்லாம் சொந்தமா தயாரிச்சு (!) ஒருநிகழ்ச்சிகூட  2005 கிறிஸ்மஸ்  விழாவுக்கு நடத்தி இருக்கோம்.   

மேக்க  மோதிரம் எப்படி இருக்குமுன்னு போட்டுப் பார்த்தேன்:-)


இவ்ளோ சொல்றேனே தவிர அப்பெல்லாம்  இந்தச் சர்ச் வரை  வாக்கிங் போறதோடு சரி. ஒருநாளும் உள்ளே போய்பார்க்கத் தோணலை:(
போல்  மாஸ்ட்டர் வீட்டை விற்கப் போட்டதும்,  அடுத்த வீட்டு மக்கள் அவுங்க இருந்த வீட்டையே வாங்கிக்கிட்டாங்க. நாங்க ? வீடு வாங்கும் நிலையிலா இருந்தோம்?  வேற ஒருத்தருக்கு  விற்க முடிவு செஞ்சதும் வீடு தேடவேண்டியதாப்போச்சு. அப்பவும்  நம்ம கோபாலின்  கேபிள் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருத்தர்தான்  உதவிக்கு வந்தார்.  இந்த வீட்டுக்குப் பின்பக்கமிருக்கும் தெருவில் அவருடைய  அக்கா வீடு வாடகைக்கு தயாரா இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். இந்த வீட்டில் இருந்து பார்த்தாவே தெரியும் வீடுதான். ரெண்டு தெருவுக்கும் இடையில் ஒரு அகழி (!) இருந்துச்சு.
உடனே அங்கே போயிட்டோம். நல்ல ஜாலியான  குட்டி மக்கள்ஸ் உள்ள வீடு அது.  அன்னம்மா ச்சேச்சிதான் வீட்டு உடமஸ்த்தர். கணவன் மனைவி  கோர்ட்ஸில்தான் வேலை. மூணு பிள்ளைகள். ஜோஷி,ஜோஜோ மின்னி. இதுலே ஜோஜோ பள்ளிக்கூட வயசு ஆகாததால் என் சங்காதியாக எப்போதும் என்னுடன்.  சுருக்கத்தில் அவன் ஒரு ரஜ்ஜூ:-)

அவர்களையெல்லாம் பார்க்கப்போகும்  மகிழ்ச்சியை கோபாலுடன் பகிர்ந்துகிட்டே அந்த 6.5  கிமீ பயணித்தோம். இப்ப இந்த சாலை  ஹைவே ஆனதால் கொரட்டிக்குப் போகும்  எக்ஸிட் இருக்கான்னு கவனிச்சுப் பார்த்ததில் வழி  தெரிஞ்சது. அதுவே ஒரு மேம்பாலத்துலே போறமாதிரி இருக்கேன்னு பார்த்தால் வண்டிபோய் நின்னது ஒரு பெரிய தேவாலயத்துக்கு முன்னே!

சட்னு பார்த்தால் ' பள்ளிவாசல்' போல் தெரிஞ்சது. ஆனால் சிலுவை கண்ணில் பட்டதே!   இந்தப்பக்கம் பளபளன்னு உசரமா ஒரு கொடிமரம். அதன் உச்சியிலும் ஒரு சிலுவை!  இங்கே கொரட்டி முத்தி பள்ளின்னு  விசாரிக்கறதுக்குள்ளே  கைகூப்பி நிற்கும் மாதா கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்துட்டேன்.

கோவில் பரிசரம்(சுற்றுப்புறம்)எல்லாம் கொம்ப்ளீட்டாச் சேஞ்சாகிக்கிடக்கு! ஏகப்பட்ட கடைகள். பார்த்தால் திருவிழாக் கடைகளைபோல் தெரியுது. சட்ன்னு நினைவுக்கு வந்தது இது அக்டோபர் மாசமில்லையோன்னு. 'அக்டோபர்  8 கழிஞ்சுவருன்ன  ஞாயறாழ்ச்ச'ன்னு   38 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தகவல் பலகை நினைவுக்கு வந்துச்சு. காலப்போக்கில்  ஞாயிறு மட்டும் நடந்த திருவிழா இப்போ அக்டோபர் 8 முதல் 26 வரை இந்தவருசம் நடந்துருக்கு.  அடடா.... ரெண்டுமூணு  நாளைக்கு  முன்பே  வராமப் போயிட்டோமேன்னு  இருந்தது உண்மை.

கொரட்டி முத்தின்னு சொல்லும் இந்த மாதாவை  கொரட்டித் தம்புராட்டின்னும் சொல்வாங்க. கிறிஸ்துவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான ஹிந்துக்களும்  பள்ளிக்கு வந்து போவது உண்டு. அதுவும் திருவிழாக் காலத்துலே  வேண்டுதல்கள் செலுத்த வருவாங்க. இப்ப இதுக்குப் பேரு செயிண்ட் மேரீஸ் ஃபோரேன் சர்ச்!  (St Mary's Forane Church, Koratty) வேளங்கண்ணி மாதா,  ஃப்ரான்ஸ்லே இருக்கும்  லூர்து மாதாவைப்போல்  நம்ம கொரட்டி முத்தி மாதாவும்  சிலபலருக்குக் காட்சி கொடுத்துருக்காங்கன்னு  சொல்றாங்க.  ஹிந்துமதத்திலும் சில சாமிகள் சிலருக்கு ப்ரத்யக்ஷம் என்று  கேள்விப்பட்டுருக்கேன். அந்த சிலரில் நான் இல்லையாக்கும், கேட்டோ!

கோவிலுக்குள்ளே போனோம். நடந்து முடிஞ்ச  திருவிழாவின் அலங்காரங்கள் இன்னும் அப்படியே இருக்கு!  ஆல்ட்டரின் அலங்காரங்கள் ப்ரமாதம்!   பழையபள்ளியில் இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  மாதாவின் சிலையே அப்போ முக்கியமா இருந்துருக்கணும்.


பக்கவாட்டில் இருந்த கதவின் வழியாக உள்ளே நுழைஞ்சால்.......எவ்ளோ பெரிய ப்ரமாண்டமான ஹால்!  பளபளன்னு படுசுத்தமான பளிங்குத்தரை! கோவிலின் கருவறை பீடம் நமக்கு வலதுபக்கம். இதுக்கு நேரா ரொம்ப தூரத்தில் கோவிலுக்கான வாசல். எப்படி..... வாசல்பக்கம் நாம்  பார்த்த கட்டிடத்தின் சுவருக்கு நேர்ப்பின்னம்பக்கம்தான்  கருவறை பீடமா இருக்கு!  ஆனால் கொடிமரம்  சாமிக்கு முன்புறமா  இல்லை!
ஆல்ட்டருக்கு  நேரா இருக்கும் வாசலை நோக்கிப்போனால் அங்கே ஒரு  கல்லில் வடிச்ச சிலுவை!

அந்த வாசலில் இருந்து நுழையும் பக்தர்கள் , குறிப்பாகப் பெண்கள், முழங்காலிட்டபடி முட்டியால் நடந்தே ஆல்ட்டர் வரை வர்றாங்க.  படம் எடுக்கலாமான்னு தயக்கம் ஒருபக்கம் இருந்தாலும்  அங்கே சுவரோரமாப் போட்டுருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்த ரெண்டு கன்யாஸ்த்ரீகளிடம் போய்ப் படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.

உடலை வருத்திக்கிட்டு சாமி கும்பிடுவதில் இவர்களும் இந்துக்கள் போலவே!  அங்கப்ரதக்ஷணம், அடிப்பிரதக்ஷணம், அலகு குத்திக்கறது, நெருப்பில் நடக்கறது, பரிக்ரமான்னு கோவிலை வலம் வரும்போது பாதையெல்லாம் கீழே விழுந்து கும்பிட்டு, எழுந்து கும்பிட்டுன்னு  பல கிலோமீட்டர்கள் போவதுன்னு எத்தனை  எத்தனை வகை இருக்கு  ஹிந்துக்களுக்கு!

ஆல்ட்டரின் ஒரு குத்துவிளக்கு  நடுவே இருக்கும் பாதை முடிவில்!  உச்சியில் இருக்கும் சிலுவையை மறந்துட்டால்.... அப்படியே நம் வீடுகளில் இருக்கும் விளக்கு வகைதான்!

கற்சிலுவை இருக்கும் வாசலுக்கு திரும்பவும் வந்து  பார்த்தேன். கண்முன்னே நேரே தெரியும் மண்சாலை... ஒருவேளை  இதுதான்  நாம்  இருந்த போல்  மாஸ்ட்டர் வீட்டுக்குப் போகுதோ !

கோவில் வளாகத்தில் இன்னொரு அழகான கட்டிடத்தில் துலாபாரம் என்று எழுதி வச்சுருக்காங்க.  அடுத்த பக்கம் அலங்கார வாசலுடன்  ரோஸரி வில்லேஜ் இருக்கு.  இப்ப இந்தப்பள்ளி விரிவடைஞ்சு இருப்பதோடு,  ஒரு பில்க்ரிம் செண்ட்டராகவும் மாறி இருக்கு. வில்லேஜ் வாசல் முகப்பில்  பெரிய கருப்புக் கல்லின் மேல் இருந்து  பிதாவை நோக்கி  ஜெபம் செய்யும் யேசுவும்,  யூமுறைப்படி இருக்கும்   ஏழுகிளை விளக்கும் புடைப்புச் சிற்பமா வச்சுருக்காங்க.

உள்ளே மகதலேனா மேரி, சிலுவையில் இருந்து இறக்கிய யேசுவின் உடலை  தன் மடியில் கிடத்தி வச்சுருக்கும் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற சிற்பம் Pieta வின்  நகலை வச்சுருக்காங்க.

மேலே இருப்பது அசல்!

ஒரிஜினல் சிற்பத்தை  வாடிக்கன் சிட்டி போனபோது செயின்ட் பீட்டர்ஸ் பாஸிலிகாவில் பார்த்துருக்கேன். அது ஆச்சு 16 வருசம். ப.மு.காலம்!

தமிழ்நாட்டு மக்களும்  இங்கே தீர்த்தயாத்திரைக்கு  வர்றாங்க போல!

தொடரும்............:-)

பள்ளி = சர்ச்

PINகுறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி நாளை!