Showing posts with label Europe Tours. Show all posts
Showing posts with label Europe Tours. Show all posts

Friday, September 19, 2008

" என்னைத் தாலாட்ட வருவானா?"

தூக்கம் வராதவங்கதான் தூக்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரிவிடுதியிலே என் அறைத்தோழி சொல்வாள் " தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு
சொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும் ?

இப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின் அருமை தெரியுது.
ஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா 'மொரிட்ஷியோ'வைத்தான் சொல்லணும்.

1999-லே, நாங்க, குடும்பத்துடன் ( குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம்
என் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.
'காஸ்மொஸ்' என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள் வைத்திருக்கின்றனர்.
ஆனால், நம்முடைய 'ஐவேஜ்'க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.

முதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண 'பஸ்'ஸில் 'டோவர்' வரை வந்து,
அங்கிருந்து ஒரு கப்பல்/·பெர்ரி மூலம் ·ப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே
மொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும்
பல ஊர்களில்இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.

ஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும்
முடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான 'சொகுஸ¤ பஸ்' எங்களுக்காக காத்திருந்தது.
லண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே
ஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு.நாங்கெல்லாம் வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டே
'பெல்ஜியம்' நாட்டில், 'ப்ரஸல்ஸ்' வந்து சேர்ந்தோம். இந்த ஒரு நாட்டில்தான்,'ஹைவே'
முழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.

மறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரும் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்
தினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,'ப்ரேக்·பாஸ்ட்,
சில இடங்களில் டின்னெர்' என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம்
கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை
வச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா 'பஸ்' தான்.

'டைனிங் ரூம்' போய்ப் பார்த்தால், அமர்க்களமான 'ப்ரேக்·பாஸ்ட், எங்களுடைய '·பேவரிட்'டான
'க்ரசாண்ட்' கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ...'க்ரசாண்ட்' இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில்
அது 'ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..'க்ரசாண்ட்'ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ் ஆன கதைதான்.

இந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்
ஒரே மாதிரியான காலை உணவு. ஹூம்....ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள்
பூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே
நியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க!
திரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு 'சூப்பர் மார்கெட்'லே 'க்ரசாண்ட்' இருந்த பக்கம் திரும்பிக்கூடப்
பார்க்கலே!

பாத்தீங்களா ? சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ போய்கிட்டு இருக்கேன்.அது போகட்டும்.
தினமும்' பஸ்' லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும்,(எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட
எல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு
போட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு
நினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க? ரெண்டாவது நிமிஷமே
காலி.முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க! நம்ம பஸ் ட்ரைவர் தான் ' மொரிட்ஷியோ'.
அலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.




நம்ம கோபால் & மொரீட்ஷியோ



எல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளைமாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய
இடம் வருதுன்னு வச்சிகுங்க,உடனே 'மைக்'லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.' வேக்கி,
வேக்கி, வேக்கி'ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத்திறப்போம். அவரு,
நாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும். எல்லோரும் ஒரு உற்சாகத்தோட
கீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம் ? 'போயே போச்', 'போயிந்தி', 'இட்ஸ் கான்'




டூர் கைடு பென்னி.

திரும்பி பஸ்ஸ¤க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே
கதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு
நினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய 'டன்னல்'வரும். அது மொத்தம் எத்தனைன்னு
சொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணக்¢கிட்டே வந்தேன்.
இருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு...... யாருக்கு வேணும் அந்தப் பரிசு ? அப்புறம் 'முழிச்சிக்கிட்ட
பிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா...நல்லவேளை தூங்கிட்டோம்.

கடைசி நாள், எங்களையெல்லாம் 'யூரோ டன்னல்' கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத்
தாலாட்ட 'மொரிட்ஷியோ' இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.

அப்பனே, 'மொரிட்ஷியோ' இப்ப எங்க ஐயா இருக்கே? தூக்கம் வராம பொரளறேனே! வந்து தாலாட்டக்
கூடாதா?


நன்றி : மரத்தடி 2004