"இந்த மாலையைக் கழுத்துலே போட்டுண்ட்டுக் கோயிலை ஒம்போது தடவை சுத்தி வாங்கோ."
"எல்லோருமா?"
"இல்லை. நீங்க மட்டும் தான்"
அதானே..... எல்லோரும் சுத்துனா,கூட வந்த எல்லோருக்கும் இன்னொரு கல்யாணம் ஆயிருச்சுன்னா? ஒன்னை வச்சேப் படைக்கமுடியலைன்னு அவனவன் அழறான்:-)
" சுத்திட்டு இங்கே வரணுமா சாமி?"
" மாலையைக் கொண்டுபோய் வீட்டுலே பூஜை ரூமில் மாட்டிவையுங்க. கல்யாணம் ஆனவுடன் திரும்ப இந்த மாலையை இங்கே கொண்டு வாங்க"நித்தியக் கல்யாணப்பெருமாள் சந்நிதியில் நிக்கிறோம். திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் ஆலயம். அந்த 108 இல் இதுவும் ஒன்னு. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கே பெருமாளுக்கு ரெண்டு 'கதைகள்' இருக்கு. சொல்றேன், சொன்னாக் கேட்டுக்கணும். சாமி விஷயம், ஆராயக்கூடாதுன்னாலும் மனசு இருக்கே.....குரங்கு. சொன்ன பேச்சைக் கேக்குதா?
முதல் கதையைப் பார்க்கலாம். பலி என்ற பெயரில் அசுர அரசன் ஒருத்தர் இருந்தார். (மகாபலி புரம்? இந்தப் பக்கம்தான் ஆண்டுருப்பார் போல) ரொம்ப நல்லவர், நல்லாட்சி கொடுத்துருக்கார். அவருடைய நண்பர்களான இன்னும் சில அரக்கர்கள் மாலி, சுமாலி, மால்யவன் என்ற மூவரும் தேவர்களோடு போர் புரிய இவரோட உதவியைக் கேட்டுருக்காங்க. என்ன போர் வேண்டிக்கிடக்கு? வெறும் அக்கப்போர்ன்னு சலிச்சுக்காதீங்க. நண்பர்கள் கூட்டமுன்னு ஒன்னு இருக்கே அவுங்களாலே உதவியும் வரும் உபத்திரவமும் வரும். பாவம் பலிச் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைச்சது ரெண்டாவது.. 'சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டே' ன்னு மலையாளப்பழமொழி ஒன்னு நினைவுக்கு வருது.முதலில் மனசாட்சிப்படி நடந்துக்கணுமுன்னு மாட்டேன்னுதான் சொல்லி இருக்கார். ஆனால் நண்பர்கள் கேட்டாங்களா? பிடுங்கி எடுத்துருக்காங்க போல. இவருக்குக் கெட்டகாலம். துஷ்டனைக்கண்டால் தூர விலகி இருக்கவேணாமோ! ஊஹூம்.....சண்டையில் அரக்கர்கள் ஜெயிச்சாங்கதான். ஆனால் தேவர்களைக் கொன்ற (?? அமிர்தம் உண்ண வகையில்லாத ஏழைத் தேவர்கள்) பாவம் பலியைப் பீடிச்சது. பாவம் போக்கிக்க பலி, தவம் செஞ்சார். மகா விஷ்ணு, போயிட்டுப்போறது போன்னு அவருக்குத் தரிசனம் தந்து விமோசனம் கொடுத்தார். பன்றியுடன் சேர்ந்த கன்று போல் கெட்டவங்களுடன் சேர்ந்துக் கெட்டுப்போயிட்டியேடா பாவி. உனக்கு பன்றிதான் லாயக்கு. அதனால் பன்றியாகவே தோன்றினால் ஆச்சுன்னு வராக ரூபத்தில் காட்சி கொடுத்துருக்கார் போல! அந்த இடம்தான் இது.
இவர் எப்படி நித்தியக் கல்யாணப்பெருமாள் ஆனாராம்?
காலவர்னு ஒரு ரிஷி இருந்துருக்கார். இவரோட தர்மபத்தினி குனி என்ற பெண்.
இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமான கதை இப்படிப்போகுது.
அன்மேரீட் நாட் அலவுடு இன் சொர்க்க(மா)ம். இது தெரியாம குனி என்ற பெயருள்ள ஒரு பொண்ணு, கலியாணம் கட்டுமுன்பே சொர்க்கத்துக்குப் போகணுமுன்னு தவமிருந்தாங்க. 'கேட்'க்கிட்டேயே நாரதர் சொல்லிட்டார் உள்ளே வரக்கூடாதுன்னு. திடீர் மாப்பிள்ளைக்கு எங்கே போகன்னு தேடுனதில்தான் திடீர் மாப்பிள்ளையா இந்த ரிஷி, காலவர் கிடைச்சார்.
இவுங்களுக்கு 360 குழந்தைகள் பிறந்தாங்க. அத்தனையும் பொண்ணு. காலவருக்குத் தெரியலை அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு. இவர்தான் ஏற்கெனவே ஆண்டியாச்சே. பிந்தாஸா இருந்துட்டார். பொண்ணுங்களைக் கல்யாணம் கட்டி அனுப்பலாமுன்னா.......வசதி இல்லை. கடவுள் கொடுத்தார். ஆகையால் கடவுளே பொறுப்பெடுத்துக்கிடணுமுன்னு வேண்டிக்கிட்டாங்க. நம்ம மகாவிஷ்ணுவுக்கு யாரும் அழுது வேண்டுனாப் பிடிக்காது. மனசு அப்பfடியே இளகிரும்.
வாலிபனா வேஷம்(!) போட்டுக்கிட்டு காலவர் வீட்டுக்கு வந்தார். மூத்தமகளைக் கட்டிக்கிறேன்னு சொல்லி, உடனடியாக் கல்யாணமும் பண்ணிக்கிட்டார். கட்டுன கையோடக் கோயிலுக்குப் போனாங்க பொண்ணும் மாப்பிள்ளையும். அம்புட்டுதான்......மந்திரமோ மாயமோன்னு ரெண்டுபேரும் மறைஞ்சுட்டாங்க.
மறுநாள் ரெண்டாவது பொண்ணையும் கட்டறேன்னு போயிருக்கார். இப்பவும் நேத்துக் கதைபோலவே நடந்துருக்கு. மூணாம் நாள் மூணாவது பொண்ணு. இப்படியே 360 பொண்ணுங்களையும் அசராமக் கட்டிக்கிட்டார். எவ்வளோ கிடைத்தாலும் தாங்குவேன்னு....அம்புட்டு நல்லவர். அந்த அப்பா காலவரைப் பாருங்க. என்னடா....பொண்ணைக் காணோமேன்னு ஒரு பயம் வேணாம். பெத்ததுகளைக் கரையேத்துனாப் போதுமுன்னு இப்படியாப் பண்ணறது? ஊர் சனங்களை என்னான்னு சொல்றது? 'யோவ். எங்க பேட்டைப் பொண்ணு எங்கேய்யா?'ன்னு ஆரம்பத்துலேயே ஆட்டி வச்சுருக்கவேணாமா? தினம் கல்யாண விருந்துலே மொக்கிக்கிட்டு இருந்துருப்பாங்களோ...
மொத்தக் கூட்டத்தையும் ஏறக்கட்டுனதும்தான் பொண்ணுங்களைக் காணோமேன்னு கோயில் கருவறையில் போய்த் தேடுனார் காலவர். எல்லாப் பெண்களும் லக்ஷ்மி ரூபத்தில் ஜொலிக்க, அனைவரையும் ஒன்னாச் சேர்த்து ஒரே லக்ஷ்மியா ஆக்கித் தன் இடது மடியில் வச்சுக்கிட்டாராம் ஸ்ரீ விஷ்ணு. லக்ஷ்மியாகிய 'திரு' வுக்கு இடம் கொடுத்ததால் திருவிடந்தைன்னு பெயர் வந்த காரணம் சொல்லப்படுகிறது.
கதையின் இன்னொரு வர்ஷன் என்னன்னா.........
முதல் பொண்ணுக்குப் பைசா செலவில்லாம மாப்பிள்ளை வீடு தேடிவந்ததும் காலவருக்கு ரொம்ப சந்தோஷம்.இன்னும் 359 இருக்கே. இவுங்களுக்கெல்லாம் இப்படி அதிர்ஷ்டம் கிடைக்குமா? யாராலே மெனெக்கெட்டு அலைஞ்சு மாப்பிள்ளை தேட முடியுது? பேசாம இந்த மாப்பிள்ளைக்கே எல்லாரையும் கட்டிக்கொடுத்துடலாமுன்னு மாப்பிள்ளைகிட்டே மன்றாடி இருக்கார். ஒன்னு வாங்கினால் மீதி இருக்கும் எல்லாமே இலவசம்.
விஷ்ணு பார்த்தார். ஒரே நாளில் முன்னூத்து அறுவதுமுறைத் தாலி கட்டுனா , கை என்னத்துக்கு ஆகும்? எனக்கு ஆட்சேபனையே இல்லை. ஆனால்.... ஒரு நாளைக்கு ஒரு கல்யாணமுன்னு வச்சுக்கலாம். புதுமாப்பிள்ளையாவே தினமும் இருந்தா என்னக் குறைஞ்சுடப்போகுது?
காம்ப்ரமைஸ் ஆச்சு. எல்லாம் முடிஞ்சபின் எல்லாரையும் சேர்த்து ஒரு அம்சமா ஆக்கிட்டார். அதானே 360 புடவை, அதுக்கு ஏத்த ஆக்ஸெஸரீஸ் வாங்கிக் கட்டுப்படி ஆகுமோ!!!
அப்பெல்லாம் வருசத்துக்கு 360 நாள்தான் போல. தெரிஞ்சுருந்தா இன்னும் அஞ்சு சேர்த்துப் பெத்துப்போட்டிருக்கலாம். இந்தக் காலவர் & குனி செட்.
தலபுராணங்களைத் தெரிஞ்சுக்கிட்டால் இப்படித்தான் சமயத்தில் தலை சுத்தறதுபோல் இருக்கும். இதையெல்லாம் ரொம்பக் கண்டுக்கக்கூடாது. கல்யாணமாகலையேன்னு ஏங்கும் பலருக்கு, இந்தக் கோவில் ஒருவித ஆசுவாசமும் ஆறுதலும் தருது என்பது மட்டும் சத்தியமான உண்மை.
பெருமாளுக்குக் கல்யாணம் ஆனதுபோல நமக்கும் ஒரு நாள் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கும்வரைக்கும் கலியாணத்துக்கு நிக்கும் இளைஞர் இளைஞிகள் பிரார்த்தனைக்கு வந்துக்கிட்டுத்தான் இருப்பாங்க. நாங்க அங்கே இருந்தக் கொஞ்ச நேரத்துலேயே மூணு பொண்களும், ரெண்டு பையர்களுமாக் கைகளில் மாலையுடன் வந்து, பட்டர் கடவுள் காலடியில் வச்சுப் பூஜிச்சுத் திரும்பக் கொடுத்த மாலையைக் கழுத்தில் அணிஞ்சுக் கோயிலைச் சுத்திவந்தாங்க. அதிலே ரெண்டு பொண்கள் ஒன்பது சுற்றில் எந்தச் சுற்றிலோ சிநேகமாகிப் பேசிக்கிட்டேச் சுத்தறதையும் கவனிச்சேன்.அதேபோல கலியாணம் முடிச்ச ஜோடிகள் ரெண்டு செட் மாலையும் கழுத்துமாச் சுவாமி தரிசனத்துக்கும் வந்ததையும் பார்த்தேன்.
நம்புனாத்தான் சாமி. நம்பிக்கைதான் வாழ்க்கை.
நம்ம மீனா கூட இங்கே கோயில் சுத்துனதாக் கேள்வி. இப்பப் பாருங்க இந்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது.கோயில் ரொம்பப் பழசுதான். ஒரு ஆயிரத்தைஞ்ஞூறு வருசங்கள் ஆகி இருக்கலாம். உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. வெளியே ஒரு மண்டபத்தூண்களில் தசாவதாரமும் செதுக்கி வச்சுருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு. இங்கிருந்து ஒரு 18 கிலோமீட்டர் போனா மகாபலிபுரம் வந்துரும்.
இங்கே எப்பப் போனேன்? அதான் தக்ஷிண சித்ரா விலிருந்து கிளம்பிப் பகல் சாப்பாட்டுக்கு அறுசுவை அரசுக்குப் போனோம். கிட்டத்தட்ட மூணுமணியாயிருச்சு. டிஃபனும் ரெடியாகலை. ரெண்டுங்கெட்டான் வேளையாப் போச்சு. இருக்கறதைக் கொடுங்கன்னு வாங்கினதுதான். சிலாகிக்கரமாதிரி ஒன்னும் இல்லை. ஆனாலும் நம்ம பசி ருசியும் அறியுதே:-)
சாப்பாடு ஆனதும்தான் இவ்வளவு தூரம் வந்தோமே கோயிலுக்கும் போயிட்டுப்போகலாமுன்னு அண்ணன் சொன்னார். நாங்க போகவும் கோயில் திறக்கவும் சரியா இருந்துச்சு. திரை போட்டு உள்ளே பூஜை நடந்துக்கிட்டு இருக்கும்போது, காத்திருக்கும் பொறுமை இல்லாத இளைஞர் ஒருத்தர் கற்பூர வில்லைகளைப் படிக்கருகில் தானாய் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார். சமீபகாலமாய்க் கோவில்களில் கற்பூரத்துக்குத் தடைன்னு நான் கேள்விப்பட்டுருந்தேன்.
நந்தி வாங்கிக்கலாம்எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். கேள்விப்பட்டது மெய்யா இல்லை பொய்யா?
தொடரும்.......:-)
Showing posts with label திருவிடந்தை. Show all posts
Showing posts with label திருவிடந்தை. Show all posts
Wednesday, July 01, 2009
தினம் ஒரு புதுப்பொண்ணைக் கட்டுனாக் கசக்குதா??.........(2009 பயணம் : பகுதி 38)
Posted by
துளசி கோபால்
at
7/01/2009 01:40:00 AM
41
comments
Labels: அனுபவம், திருவிடந்தை, நித்திய கல்யாணப்பெருமாள்
Subscribe to:
Posts (Atom)
