Monday, April 28, 2025

குழந்தை இப்போ நம்மோடு..... (2025 இந்தியப்பயணம் பகுதி 13 )

நேத்து செக்கவுட் டைம் விசாரிச்சப்ப.... காலையில்  பத்துமணின்னதும்....  அட ராமான்னு  இருந்தது. நம்ம ஃப்ளைட் பகல் மூணரைக்கு !  ஊரெல்லாம் மூடிவச்சுட்டதால்  நேரங்கடத்த எங்கேயும் போகவும் முடியாது.  அஞ்சரை மணி நேரம் ஏர்ப்போர்ட்டிலா ? 
நம்ம  ஃப்ளைட் விவரம் சொன்னதும்,  பகல்  பனிரெண்டு வரை நேரம் கிடைச்சது.  உண்மையில் இங்கே செக்கவுட் டைம் பகல் பனிரெண்டுதான்.  இப்போ இந்தக் கும்பமேளாக்கூட்டம் அம்முவதால் சட்டுபுட்டுன்னு  இருக்கும் கெஸ்டுகளை வெளியேத்திட்டு புது கெஸ்டுக்களை நிரப்பினால்  லாபம் இல்லையோ !  அப்புறம்  ஹொட்டேல் சார்ஜும்  ஒரு  அம்பது சதமானம் கூடுதல் இந்த சீஸனுக்கு !   ரெஸ்ட்டாரண்டிலோ கேக்கவே வேணாம்.....  மூணுவேளை சாப்பாட்டுக்கும் ஒரே மாதிரி சார்ஜ்தான்.  இப்ப சம்பாரிச்சால்தான் உண்டு.   இல்லைன்னா.... அடுத்து நூத்திநாப்பத்துநாலு வருஷம் கழிச்சுத்தானே இன்னொரு மஹாகும்பமேளா இல்லையோ !!!!

அதி ஏமி பழமொழி செப்தாரு ? எல்லாம் எரியற வீட்டுலே பிடுங்கறது லாபம் , காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்  என்ற  ரெண்டில் ஒன்னுதான்..... இல்லே ? எது சரி வருதோ அதை எடுத்துக்குங்க.

சஞ்சய்க்கு ஃபோன் செஞ்சு பகல் பனிரெண்டுக்கு  கார் வேணுமுன்னு சொல்லிட்டு, காலைக்கடமைகளை முடிச்சுட்டுப் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். மணி ஒன்பதுதான். கொஞ்சம் நிதானமா சாப்பிட்டு முடிச்சு அறைக்கு வந்து  பெட்டிகளைத் திரும்ப அடுக்கி வச்சார் நம்மவர். 




 புதுப்பெட்டியும் , நம்மவரின் கேபின் ஸூட்கேஸும் செக்கின்னில் போகுது.  கையோடு கொண்டுபோகும் கேபின் கேரி பேகில்  நம்ம ராமன்.  
பனிரெண்டுக்குச் செக்கவுட் செஞ்சுட்டு,  பணியாளர்களைக் கண்டுக்கிட்டு (முக்கியமா முன் வாசப்படிகளில் ஏறாம, சின்ன லிஃப்ட்லே  என்னை  மேலே கொண்டுவிட்ட சஞ்சீவ் குமார்)  கிளம்பியாச். 


நம்ம சஞ்சயின் நண்பர் ஆகாஷ் கார் கொண்டு வந்தார். கூடவே சஞ்சயும். 
அயோத்யா ஊருக்கு நேரெதிர்ப்பக்கம்தான்  ஏர்ப்போர்ட் என்பதால்  மேம்பாலம் வழியாக போனதில் இருபத்தியஞ்சே நிமிட்டில்  மகரிஷி வால்மீகி இன்டெர்நேஷனல்  ஏர்ப்போர்ட் வந்துட்டோம்.   இந்த ஏர்ப்போர்ட் கட்ட ஆரம்பிச்சப்ப இதன் பெயர்  ஸ்ரீ ராம் இன்டெர்நேஷனல்  ஏர்ப்போர்ட். அப்புறம்  ராமன் போய் வால்மீகி வந்துட்டார்.  அதுவுஞ்சரிதான்.  வால்மீகி இல்லைன்னா நமக்கு ராமாயணமோ, ராமன் கதையோ  தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்லைதானே ? 



வளாகத்தின் நுழைவு வாயிலில்  எந்த  இடமுன்னு சொல்லும் பெயர்ப்பலகையில்  தமிழும்  இருக்கு !  பொதுவாகப் பரவலா முக்கிய இடங்களில் தமிழிலும்  எழுதி வச்சுருக்காங்கதான் !  




வாசலில் ரெண்டு மூணு க்ளிக்ஸ்.  சட்னு எனக்கு உதவியா  ஒரு  ஆர்மி, எங்களைக்  க்ளிக்கிக் கொடுத்தார்.  சஞ்சயும் ஆகாஷும் காலில் விழுந்து ஆசிகள் வாங்கினாங்க.  இது வட இந்தியப் பழக்கம்.  பெரியவங்க காலைத் தொட்டுக் கும்பிடுவது.

உள்ளே போக ஏகப்பட்டக் கூட்டம்.  வரப்போக எல்லாம் ஒரே ஒரு ப்ரமாண்டமான ஹால்தான்.  ரெண்டாகத் தடுத்துவிட்டுருக்காங்க. அதனால் வரும்போது நாம் பார்த்த ராமாயணக்காட்சிகளின் ஓவியம் இந்தப்பக்கமும் தொடர்ந்து  வருது. 


பெட்டிகளை ஸ்கேனரில் வச்சு எடுத்ததோடு சரி.  கவுன்ட்டரில் கொண்டு கொடுக்கும்போது  அப்படியே வாங்கி வைக்கிறாங்க.  எடை ஒன்னும் பார்க்கலை. அந்தக் கூட்டத்தில் அதுக்கெல்லாம் நேரமில்லை.  பொட்டியைக் கொடுத்துட்டுச் சட்னு இடத்தைக்காலி பண்ணு. 
நமக்கு இன்னும் ரெண்டே முக்கால் மணி நேரம் இருக்கு, வேடிக்கை பார்க்க.  இப்பவே உள்ளே போய் என்ன செய்யறது? கிடைச்ச இடத்தில் உக்கார்ந்து கொஞ்சம் நேரம் போக்கிட்டு, செக்யூரிட்டி செக்கப் போனோம். 

பேக் மெய்ன் க்யா ஹை.....  ராம் கா மூர்த்தி ஹை ! பையைத் தொட்டுக் கும்பிட்டது ஆர்மி. 
உள்ளே கடைகளில்  சின்ன ராமர் கிடைப்பாரான்னு தேடினால்.... எங்கே ?   எல்லாம் பித்தளை விக்ரஹங்கள்..... நாம் தேடும் ராமன் இல்லவே இல்லை.  தீனி வியாபாரம்தான் சுறுசுறுப்பா நடக்குது.  

ரேர்ப்ளானட்.காமின்  எலெக்ட்ரானிக் போர்டில் விதவிதமான , அழகழகான ராமன்கள் வந்து போறாங்க !

ரெண்டரை மணிக்கு  ஹைதராபாத் ப்ளேன் வந்தது. அதுலேதான் நாம் திருப்பிப்போகணும்.  சட்னு பார்த்தால்  ஏர்ப்போர்ட் முழுக்க இன்டிகோவுக்கு மட்டுமே நேர்ந்து விட்டுருக்காங்க போல !  வேற எந்த ஏர்லைனுமே கண்ணில் படலை.  இவ்ளோ இன்டிகோ ஃப்ளைட்ஸ் இருக்கும்போது, சென்னைக்கு டைரக்ட் ஃப்ளைட் இல்லாமல் போச்சேன்னு ஆதங்கமா இருந்தது.  கேட்டால்  போதுமான பயணிகள் இல்லைன்னு சேவையை  ரத்து பண்ணிட்டாங்களாம். 
ஒருவழியா மூணு   நாப்பதுக்கு போர்டிங். நாலு இருபதுக்கு  வண்டி கிளம்புச்சு.  முக்காமணி லேட். போகட்டும்  அங்கே போயும் தேவுடு காக்கணும்தானே ?   ஃப்ளைட் டைம் 125 நிமிட்.

ஹைதராபாதில்  இறங்கினதும் வீல்சேர் பயணி என்பதால் எங்களையெல்லாம் வாரி பக்கியில் போட்டு, செக்யூரிட்டியில் கொண்டு விட்டதும்,  ஹேண்ட் லக்கேஜ் ஸ்கேனிங் செஞ்சதும்  உள்ளே  நம்ம கேட் நோக்கிப்போனோம்.  ஹைதராபாத் ஏர்ப்போர்ட் அட்டகாசமா இருக்குன்னாலும்...... இந்த செக்யூரிட்டி ஏரியாவில்  வசதி போதாது.  ஸ்கேனிங் மெஷீன் ரொம்ப தூரத்திலும், நாம் லக்கேஜை  வைக்கிற மேடை இந்தாண்டைக் கோடியிலும் இருக்கு.  மார்பிள் ஸ்லாப் போட்டு வச்சுருக்காங்க.  அங்கே பெட்டிகள் நகர நகர நாம் இங்கே நின்னு நம்ம பெட்டிகளை நகர்த்தி நகர்த்தி வைக்கணும்.  இதுக்கிடையில் ஒரு ஸ்லாப் மார்பிளைக் காணோம்.  பெட்டியைத் தூக்கிப்போய் அடுத்த ஸ்லாபில்  வைக்கணும்.இவ்ளோ பெருசா ஏர்போர்ட் கட்டுனவங்க இதைக் கவனிச்சுருக்கலாம்.  ஆட்டோமேடிக் ரோலர் கன்வேயர்ஸ் போட்டுருந்தால்  அந்தக் கோடியில் இருந்து  லக்கேஜ் தானே நகர்ந்து போகும்தானே.... என்னமோ போங்க......

சென்னை ஃப்ளைட்  போர்டிங் டைம் 18.40 ன்னு போர்டிங் பாஸ் சொல்லுது.  ஃப்ளைட் கிளம்புவது 19.25.  ஆனால் இப்பவே  போர்டிங் டைம்  ஆயாச்சு.  ஜனத்திரள்  கேட்டாண்டை அம்முது !  கேட் திறந்தபாட்டைக் காணோம். எப்படியும்  வண்டி கிளம்ப அரைமணி நேரமாவது   இருக்கும்தான். எதாவது சாப்பிட வாங்கிக்கலாமுன்னா நம்ம கேட்டாண்டை அதே பீட்ஸாக் கடை !   உள்ளே போய் ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைக்குச் சொல்லிட்டு, நான் கேட்டாண்டை இருக்கும் கூட்டத்தின் வாலில் போய் நின்னேன்.  நம்மவர், கடையில் ஒரு கண்ணும் வாலில் ஒரு கண்ணுமா நின்னு,  ஒரு சின்ன கப்பில் ஃப்ரை வாங்கி வந்தார். 

ரொம்ப நேரம் கழிச்சுக் கேட்டுக்குப்போகும் லிஃப்ட் கதவு திறக்குது.  பக்கத்துலே படிகளும் எஸ்கலேட்டரும் . தடுப்பை எடுத்ததும்  சனம் திபுதிபுன்னு இறங்கி ஓடறாங்க. நாம் காத்திருந்து கீழ்தளத்துக்குப் போறோம்.  அங்கே இன்னும் ஒரு வாசல் திறக்கலை.  நம்ம ஃப்ளைட்டுக்கான  பைலட்ஸ் & ஏர்ஹோஸ்டஸ் னு தனிக்கூட்டம் 'தாழ்திறவாய் மணிக்கதவே'ன்னு அதே வாசலாண்டை நிக்குது.  

எனக்கொரு  வழி சொல்லுங்கோ சொல்லுங்கோ ......ன்னா எல்லாருக்கும் அதேதான் வழி,  கிட்டியா... ...... பாழாய்ப்போன சினிமா....  

எட்டரைக்குச் சென்னை வரவேண்டிய ஃப்ளைட், நிதானமா  ஒன்பது ஏழுக்கு வந்து சேர்ந்தது.  வழியில் ஆளுக்குக் கொஞ்சம் ஃபிங்கர் சிப்ஸ் தின்னு, தண்ணீர் குடிச்சோம்.  ஒரே ஒரு முந்திரி டப்பா மாத்திரம் நம்மவனுக்குப் பிடிக்குமேன்னு வாங்கிவச்சோம். ச்சும்மாச் சொல்லக்கூடாது சென்னை  ஏர்ப்போர்ட் அரைவல் பகுதி நல்லாவே இருக்கு. சிலபல சிற்பங்கள், கூடவே நம்ம யானைகள் !




செக்கின் பெட்டிகளுக்காகக் காத்துநின்னு வெளியே வந்தப்ப மணி ஒன்பதரை. நம்ம விஜி  வந்து காத்திருந்தார்.  போறவழியில் சாப்பிட்டே ஆகணுமுன்னு நேரா நம்ம கீதா கஃபே. மணி பத்தேகால்.  இனி நோ இட்லீஸ்.  ஆளுக்கொரு தோசை !
லோட்டஸ் வந்து சேரும்போது மணி பதினொன்னு பத்து !  நம்ம அறைக்குப் போனதும்  முதல்வேலையா ராமனைத் தூக்கி அலமாரியில் வச்சேன். 
வடக்கில் இருந்து தெற்கே வந்துருக்கான்,  ரெண்டாவது முறையாக !!!!!!

நம்ம அயோத்யா பயணம் இப்படி முடிஞ்சது.  தவறான நேரத்தில் போய் மாட்டிக்கிட்டோம்.  ஒன்னும் சரியாப் பார்க்கலை. ஒரே ஒரு ஆறுதல்..... குழந்தை நம்மோடு வந்துருக்கான் !

தொடரும்........... :-)

4 comments:

said...

//அதி ஏமி பழமொழி செப்தாரு ? //


ராஸ்கோராப்பா ராஸ்க்கோ தீஸ்கோராப்பா தீஸ்கோ 

================
// எனக்கொரு  வழி சொல்லுங்கோ சொல்லுங்கோ ......ன்னா எல்லாருக்கும் அதேதான் வழி,  கிட்டியா... ...... பாழாய்ப்போன சினிமா....   //

எல்லார்க்கும் வாசல்தான் வழி!  (மைக்கேல் மதனகாமராஜன்.  நான் சினிமா விஷயத்துல  ரொம்ப கெட்டியாக்கும்)

----------------------------------------------------

ராமன் நேராக பார்ப்பது போல இல்லாமல் மேல்நோக்கு பார்வையாக இருப்பது போல இல்லை?!

said...

வாங்க ஸ்ரீராம்,
அடடா.... வாசலை எப்படி மறந்தேன் ??? 'வழி காட்டியதற்கு நன்றி. எதுக்கும் பதிவில் திருத்தாமல் விடறேன். அப்பதான் உங்க கெட்டி விளக்கம் மற்றவர்களுக்குப் புரியும் !

ராமன் மேலே ஸ்ரீ வைகுண்டத்தைப் பார்க்கிறானோ என்னவோ.... நியூஸி வந்ததும் அவனுக்குக் கண் சிகிச்சை பண்ணியாச் :-)

said...

ராமரும் தெற்குக்கு வந்து நியூசிக்கு பயணப்பட்டு விட்டார்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜய ராம்.

said...

வாங்க மாதேவி,
நன்றிப்பா !