Friday, May 10, 2024

காயத்ரியும் காவடியும் !!!!

எப்பவுமே ஜனவரி மாசம் கொஞ்சம் பிஸியாத்தான் இருக்கு !  ஏறக்கொறைய பாதி மாசம் விடுமுறைக்காலம். இது வேலை செய்யும் மக்களுக்கு. பள்ளிக்கூடங்கள் எல்லாம் வருஷாந்திரக் கோடை விடுமுறையில் ஃபிப்ரவரி முதல் வாரம் வரை.  அதுகூடப்பாருங்க..... ஆரம்பப்பள்ளிகள்தான் சீக்கிரம் திறக்கறாங்க.  உயர்நிலைப்பள்ளிகளுக்கு இன்னும் ரெண்டு வாரம் கூடுதல் லீவு.  யுனிவர்ஸிட்டிக்கோ.... கேக்கவே வேணாம்.....  ஃபிப்ரவரி  கடைசியில்தான். மேலே போகப்போக லீவுநாட்கள் அதிகம் ! 
நமக்குத்தான் பொங்கல் முடிஞ்ச கையோடு கொஞ்சம் ஓய்வு. அதுக்காக ஆன்மிக நிகழ்ச்சிகள்  நடக்காமயா இருக்கு ? 

வருஷாந்திர 'காயத்ரி யாகம்'   ஜனவரி ரெண்டாம் வாரம் நடக்கவேண்டியது , ஆர்ய சமாஜம் தலைவர்கள் ஊரில் இல்லததால் ரெண்டுவாரம் தள்ளிப்போயிருக்கு.  அதே நாள் தைப்பூசம் விழா வேற நம்ம புள்ளையார் கோவிலில்.  இங்கேயும் வழக்கமா விழாவை நடத்திக்கொடுக்கும்  நம்ம வெலிங்டன் பண்டிட், சுகமில்லாத காரணத்தால்   வேற ஏற்பாட்டில் இருந்தவங்க , ரொம்ப லேட்டாத்தான் விழாவை அறிவிச்சாங்க.  தைப்பூச தினம் வேலைநாளாக இருந்ததால் காலையில் வேல் வச்சு அபிஷேகம் செஞ்சுட்டு, மாலையில் பூஜை மட்டும். தொடர்ந்துவந்த ஞாயிறில்தான் பாற்குடம் காவடி ஊர்வலம் எல்லாம் . 


ஏறக்கொறைய ஒரே நேரத்தில் ரெண்டுமே அமைஞ்சுருக்கு. நாங்க  எப்பவும்போல காயத்ரி யாகத்துக்குப் போயிட்டோம். நம்ம சநாதன் ஹாலில்தான் நடக்குது.  ஒன்னு சொல்லணும், இந்த ஆர்யசமாஜ  நிகழ்ச்சிகள் எல்லாம் சொன்னால் சொன்ன நேரத்துக்கு 'டான்'னு தொடங்கிருவாங்க.  யாருக்காகவும் காத்து நிக்கறதில்லை. தாமதமா வர்றவங்க, வந்து சேர்ந்துக்குவாங்க.  ஹவன்களில் எல்லோரும் பங்கெடுக்கலாம். முதலில் சின்னக்குழுவாக ஆரம்பிச்சுட்டு, போகப்போக முதல் குழுவுக்குப்பின் அடுத்த குழுன்னு அக்னிகுண்டத்தைச் சுத்தி உக்கார்ந்து  ஹவிஸ் சமர்ப்பிக்கணும். எல்லோரும் பங்கெடுத்தபின் யாகம் முடியும் நேரத்தில், ஆரம்பத்தில் இருந்த முதற்குழு வந்து முடிச்சு வைக்கணும்.  






நம்மைப்போல் முழங்கால் பிரச்சனை மக்கள் கொஞ்சம் உசரமான ஆசனத்தில் உக்கார்ந்துக்கலாம். ஏதொரு தடையும் இல்லை. அன்றைக்கு முதல் குழுவில் நாம் இருந்தோம். ப்ரஸாதம் ஸ்வீகரிச்சுட்டுக் கிளம்பும்போதே மணி ஒன்னரை.
நேராப்போனது புள்ளையார் கோவிலுக்குத்தான் !  அங்கே தைப்பூச பூஜைகள், ஊர்வலம்  கலைநிகழ்ச்சிகள் எல்லாம் முடிஞ்சு, மனைவிகளுடன் ஹாயாக நிக்கறார்  பெருமாளின் மருமான் !   மஹாப்ரஸாதம் விளம்பும் நேரம். நம்மவர், சட்னு போய் அவருக்கு ரொம்பப்பிடிச்ச கைங்கரியத்தில் கலந்துக்கிட்டார். 
கோவிலில் நல்ல கூட்டம்தான்.  ஞாயிறா அமைஞ்சதும் ஒரு காரணம் ! ஆக்லாந்துநகர் திருமுருகன் கோவிலில்  இருந்து வேறொரு பண்டிட்,  பூஜைகளை நடத்திக்கொடுக்க வந்துருக்கார்.  சத்சங்கமா நடந்துக்கிட்டு இருந்த காலத்தில் ஒரு முறை வந்துருக்காராம். நம்மையும் சந்தித்து இருக்காராம்.  எனக்குத்தான் சரியா நினைவில்லை.  (ஒருநாள் சத்சங்க காலத்துப் படங்களை எடுத்துப்பார்க்கணும். ஏது நேரம்.............. ப்ச்  )









ஜனவரி முடிஞ்சு ஃபிப்ரவரி வந்தாலே பகீர்னு இருக்கும் எனக்கு. 'ஐயோ....  இந்த மாசத்தோடு கோடை முடியுதே'ன்னுதான்..... வெயில் இருக்கும்போதே  தோட்டவேலைகளைக் கொஞ்சமாவது முடிக்கணும். முக்கியமா, புதுத்தொட்டிகளில் செடிகளை மாத்தி வைப்பது !  ஒரே ஒரு ஆறுதல்..... பொறந்தநாள் வரும் மாசம் என்பதே !

என்ன பரிசு வேணுமுன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் 'நம்மவர்'.  ஒரு கடையில் பார்த்த  போதாஸ், நல்லா இருக்குன்னு அதை வாங்கித்தரச் சொன்னேன். பாவம். 'எதுக்காக  ஒன்னும் வேணாமுன்னு சொல்லி மனசை நோகடிப்பது' (!!!!) சொல்லுங்க :-)நம்மூர்லேதான்  இதுக்குப்பெயர் மணி ப்ளான்ட்.  இங்கே  டெவில்ஸ் ஐவி  வகையில் மார்பிள் க்வீன்.
மகளும் மருமகனுமா ஒரு செடி வாங்கிவந்து பரிசாகக் கொடுத்தாங்க.  ஸக்கூலண்ட் வகை. ஏற்கெனவே இருக்கான்னு கேட்டதுக்கு இல்லைன்னேன். நம்மிடம் இல்லாததைத் தேடிப்பார்த்து வாங்குவதே ரொம்பக் கஷ்டமாப் போச்சாம் ! கூடவே ஒரு யானையும் :-)

விழாக்கள்னு தனியா இல்லையே தவிர சனிக்கிழமைகளில் ஹரே க்ருஷ்ணா, புதன்களில் நம்ம புள்ளையார்,  மற்ற நாட்களில் அன்பு விநாயகர்,  சநாதன் ஆஞ்சின்னு தரிசனங்கள்  லபிச்சுக்கிட்டுத்தான் இருக்கு ! இப்பெல்லாம் நம்ம ஹரேக்ருஷ்ணாவில் மாலை ஆரத்தி முடிஞ்சதும், கோவில் துளசியை, உள்ளே கொண்டுபோய் வைக்கும் சேவை எனக்கு அடிக்கடி வாய்க்குது, எனக்கு ஒரே குஷி ! 


ரொம்ப வெயில் இருக்கும் நாளானால், பீச் வரை போய் வர்றது வழக்கம.  பீச்சுக்குச் சமீபத்தில் ஃபிஜித்தோழி ஒருவர், ஐஸ்க்ரீம் வியாபாரம் நடத்தறார்.  விடமுடியுமா சொல்லுங்க !




4 comments:

said...

காயத்ரி யாகம்? கேள்விப்பட்டதில்லை. படங்கள் அருமை.

said...

தைமாச விழாக்கள் முருகன் வழிபாடு காவடி,பால்குடம் , என அழகிய படங்கள்.

பிறந்தநாள் பரிசுகள் அருமையாக இருக்கிறது.

பீச்சும் ஐஸ்கிறீமும் கண்ணுக்கும் குளிர்சியாக இருக்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்,

இது ஆர்யசமாஜத்தின் வகையில் நடக்குது ! இடைவிடாமல் காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டே நடக்கும் அகண்டயாகம் !

said...

வாங்க மாதேவி,

ஒவ்வொன்னையும் பார்த்து ரசித்தமைக்கு நன்றிப்பா !