Friday, March 22, 2019

ஒளி கிடைத்த கண்ணினாய்....... !!!!!(பயணத்தொடர், பகுதி 82 )

திருமீயச்சூர் லலிதா மேகநாதனைச் சந்திக்கவே இல்லையே.... அடுத்தாப்லெ ஒரு அஞ்சரை கிமீ தூரம் தானாமே......  ஹைய்யோ..... இன்றைக்கு அவுங்களைப் பார்த்தே ஆகணுமுன்னு  கலைவாணி கோவிலில் இருந்து ஒரு காமணியில் திருமீயச்சூர்  கோவில் வாசலுக்கு வந்துட்டோம்.
அஞ்சு நிலை ராஜகோபுரம் !  கோபுரவாசலை நோக்கி நடக்கும்போதே  அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடையில்  கொலுசு சமாச்சாரம் விளம்பரம் பார்த்தேன். அம்பாளே கொலுசு வேணுமுன்னு கேட்டு வாங்கிப் போட்டுக்கிட்டாள் என்றதுதான் சிறப்பு!
இதுகூட இப்போ சமீபத்துலே  பத்தொன்பது வருசத்துக்கு முந்தி நடந்த சம்பவம்தானாம்!   திருமீயச்சூர் லலிதாம்பிகை, தன்னுடைய பக்தை ஒருவரின் கனவில் வந்து தங்கக்கொலுசு கேட்டதாகவும்,  இதைப்பற்றிக் கோவில் குருக்களிடம் விசாரிச்சப்ப,  சிலையில் காலில் கொலுசு போடும் வகையில் அமைப்பு  இல்லையேன்னு சொல்லி இருக்கார்.  பக்தை மீண்டும் வற்புறுத்திக் கேட்டப்ப, அம்பாள் காலைக் கவனிச்சுப் பார்க்கும்போது   சின்ன துளை ஒன்னு  காலுக்கும்  சிலை இருக்கும் பீடத்துக்கும் இடையில் இருந்துருக்கு. காலங்காலமா அபிஷேகம் பண்ண பொருட்கள் அந்தத் துளையை அடைச்சு மூடி இருந்ததால் யாரும் கவனிக்கலை. 
அந்தத் துளையைச் சுத்தம் செஞ்சதும் அதன்வழியா கொலுசு மாட்ட முடிஞ்சுருக்கு.  அதிலிருந்து  கொலுசு 'வாங்கி' மாட்டுறது ஒரு வழிபாடாக ஆகிருக்கு!  தங்கக்கொலுசு எல்லோருக்கும் கட்டுப்படி ஆகுமா? அதான்  அதை வெள்ளின்னு குறைச்சு நம்ம மேல்  கருணை காமிச்சுருக்காள் லலிதாம்பிகை! இல்லேன்னா 'நம்மவர்' நிலையை  எண்ணிப் பாருங்க ! 
இந்த கொலுசு சமாச்சாரம்  கொஞ்சநாளைக்கு முன்னே கேள்விப்பட்ட நினைவு.  இங்கே தகவல் பார்த்ததும், நாமும் ஒரு கொலுசு வாங்கி 'அம்பாளுக்கு'ப் போடலாமுன்னு தோணுச்சு. ஜிஆர்டி கடை கொலுசுகள் கிடைக்குமுன்னு போர்டு பார்த்ததும் வாங்கறது வாங்கறோம். கொஞ்சம் நல்லதாவே வாங்கினால் ஆச்சுன்னு அங்கே போனோம். 

இது கடைக்காரர் வீடுதான். ஜிஆர்டியில் இருந்து வாங்கி விற்கிறாராம். கொலுசுப்பெட்டியைக் கொண்டு வந்து காமிச்சார். சட்னு என் பார்வை போனது.... திருகாணி இருக்கும் கொலுசுகள்!  ஹைய்யோ.... எவ்ளோ நாள் ஆச்சு  பார்த்து. இப்பெல்லாம் ( ஒரு நாப்பதம்பது வருசங்களா) 'எஸ் ஹூக்' வச்சவைகள்தானே  கிடைக்குது.   சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில்  (மதுரை மாவட்டம் ) திருகாணி வச்ச கொலுசுகள்தான் போட்டுருக்கேன்.  சில சமயம்  அது திருகாணி தானே திருகிக் கழண்டு போய் ஒத்தைக் கொலுசைக் காணாமல் போக்கிட்டு வீட்டுலே  மொத்து வாங்கி இருக்கேன்.  கொசுவத்தி சட்னு ஏத்திக்கிச்சு மனசுக்குள்.

இதுக்குள்ளே கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்ததில் கொலுசு வாங்கிப்போடுவது ஆரம்பிச்சு ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷமாச்சுன்னார். நாம் அர்ப்பணிக்கும் கொலுசுகள் ரொம்ப நேரம் அம்மனின் கால்களில் இருப்பதில்லையாம். அடுத்தடுத்து மக்கள் கொண்டுவரும்போது முதலில்  போட்டதைக் கழட்டிட்டுத்தான்  அடுத்ததைப் போட வேண்டி இருக்கு.   இப்படிக் கோவில்களில் சேரும் கொலுசுகளையெல்லாம்  வித்துடறாங்களாம். (ரீ ஸைக்கிள்?)

நமக்கு என்ன சைஸ் வேணுமுன்னு கேட்டதும், 'நம்மவர்' முந்திக்கிட்டு  என்னோட கால் அளவுக்கு வேணுமுன்னுட்டார்.  திகைச்சு நின்ன  என்னிடம்,  'அம்பாளின் கொலுசுக்குண்டான தொகையை கோவிலுக்குக் கொடுத்துடலாம். இப்போ வாங்கறது உனக்கு' ன்னார்.  இந்தத் திருகாணி  டிசைன்தானே தேடிக்கிட்டு இருந்தேன்னதும் எப்பவோ மதுரை தங்கமயிலில் தேடுனது இவருக்கு இன்னும் ஞாபகம் இருக்கு பாரேன்ன்னு ஆச்சரியம்தான் :-)

இப்ப அளவு பார்க்கணுமே.... கடைக்காரர் ஒரு சின்ன நூலை என்னிடம் கொடுத்து காலளவை பார்க்கச் சொன்னார்.  கொலுசாகவே போட்டு அளவெடுக்க வேணாம். இதெல்லாம் கோவிலுக்குப் போறதுன்னார். ரொம்பச் சரி.  நம்ம காலைத் தொட்டது சாமிக்கா?  நோ நோ.....   (ஆனால் ஒரு முறை திருப்பதி உண்டியலில்  என் கால்களில் இருந்த கொலுசுகளைக் கழட்டிப் போட்டது தனிக் கதை. அதை அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்)

நூலில் அளந்து அதே நீளத்துக்கு ஒரு கொலுசு செட்  எனக்காச்சு! எல்லாம் அம்பாளின் அனுக்ரஹம்.....

(அம்பாள் ஒரு காலை மடிச்சு  இன்னொரு காலைமட்டும் தொங்கவிட்டு உக்கார்ந்துருக்காள். அழ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ன்ன்ன்ன்ன் அந்தக் காலில் மட்டும்தான் கொலுசு போட  முடியும். அப்புறம் எதுக்கு  ஒரு செட் கொலுசு வாங்கிக் கோவிலுக்குக் கொடுக்கறோம்? ஒத்தை கொலுசு சமர்ப்பித்தால் போதாதா?  )

அம்மாவுக்கு ஒத்தாசையா ரஜ்ஜு வந்து கொஞ்சம் எழுதிட்டுப் போனான் :-)

வியாபாரத்தை முடிச்சுட்டு, அஞ்சுநிலை ராஜகோபுர வாசல் வழியா கோவிலுக்குள் போறோம். கண்ணெதிரே இன்னொரு மூணு நிலை கோபுரம்.  இதுக்கு முன்னால்  பலிபீடம், கொடிமரம்,  நந்தி சந்நிதி ஒன்னு  அந்தக்  கோபுரவாசலைப் பார்த்தபடி!

நமக்கு வலப்பக்கம்  ஏழெட்டுப் படிகளோடு உயரத்தில் நம்ம லலிதாம்பிகை சந்நிதி!   நல்ல தரிசனம். அம்பாள் காலில் கொலுசு இருக்கான்னு  பார்த்தேன். போட்டுருக்காள் ! நம்ம கொலுசு சமாச்சாரத்தை அம்பாளிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.
பண்டாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ய லலிதாம்பிகையா இங்கே  அவதாரம் செஞ்சவள், வந்த காரியம் முடிஞ்சதும், தன் கோபம், ஆவேசம் எல்லாம் அடங்க இங்கேயே இருந்துடறாள், நமக்கெல்லாம் அருள் செய்யறதுக்காக!  சும்மாச் சொல்லக்கூடாது.... என்ன ஒரு கம்பீரமா உக்கார்ந்துருக்காள், பாருங்க !
இந்த அம்பாள்  தன்னிலிருந்து வெளியான  வசிநீ என்ற வாக் சக்திகளைக் கொண்டே பாட வைச்சதுதான் அம்பிகையின் ஆயிரத்தெட்டு நாமங்கள் கொண்ட  ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்! இதுக்கு பாஷ்யம் எழுத  நம்ம ஆதிசங்கர் ஆசைப்பட்டுருக்கார். அது நடக்கலை. ஒவ்வொரு சமயமும் இவருக்கு ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம்தான்  கிடைச்சுருக்கு. இதுதான்  கடவுளின் விருப்பமுன்னு  ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமத்துக்குப் பாஷ்யம் எழுதிட்டார்.  அதுக்கப்புறம்  பல நூற்றாண்டுகள் கழிச்சுத்தான்
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் (பதினேழாம் நூற்றாண்டு ) பாஷ்யம் எழுதினார்.
இனி கோவிலின் மூலவரை தரிசிக்க மூணுநிலைக் கோபுர வாசல் வழியாக உள்ளே போறோம். த்வாரபாலகர்கள் அருமை!   மேகநாதர் அமைதியாக தரிசனம் கொடுத்தார்.
கோவில் உள்ளும் புறமும் சுத்தமோ சுத்தம் !  எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சுட்டாருன்னுதான் சொல்லணும்:-)
வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கு இந்தக் கோவில் !  வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சன்னதிகள்  பரம்பரை அறங்காவலர்.
மூலவர் இருக்கும் கருவறை விமானம் கஜ பிருஷ்ட விமானம். வேறெங்கேயும் கேள்விப்படவுமில்லை, பார்த்ததும் இல்லை!   யானை அப்படியே உக்கார்ந்துருக்கும்போது அதன் பின்னம்பக்கம் எப்படி இருக்குமோ அதே போலத்தான் இருக்கு!  வாவ்!

இந்தக் கோவிலுக்குள்ளே ரெண்டு கோவில்கள் இருக்கு ! அம்பாள் சந்நிதியைச் சேர்த்தால் மூணு கோவில்கள்னும் சொல்லலாம். மேகநாதர் திருக்கோவில் தவிர  ரெண்டாவதுக்கு  திருமீயச்சூர் இளங்கோவில்னு பெயர். இந்த ரெண்டு கோவில்களுமே பாடல் பெற்ற தலங்கள் ! (அந்த இருநூத்தி எழுபத்திநாலு லிஸ்ட்!)
ரெண்டு கோவிலுக்குமா சேர்த்து  அங்கே இங்கேன்னு கணக்கில்லாத எண்ணிக்கைகளில் சிவலிங்கங்கள் !  இவைகளில்  முக்காலும், தேவர்கள் வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டவைகளாம்!

கஷ்யப முனிவருக்கு கத்ரு, விநிதைன்னு ரெண்டு மனைவிகள்.  இந்த ரெண்டுபேரும்  குழந்தை வேண்டி சிவனை  வணங்குனாங்க.  சிவன் ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு முட்டையைக் கொடுத்துருக்கார். ஒரு வருஷம் வச்சுக் காப்பத்தணும்.  இதிலிருந்து உங்களுக்கு சத்புத்ரன் பிறப்பான் என்ற ஆசிகளோடு !

ரெண்டு பேரும் அவரவர் முட்டையைக் கவனமாகப் பாதுகாத்து வர்றாங்க. ஒரு சுபயோக சுபதினத்தில்   விநிதையின் முட்டையிலிருந்து ஒரு பறவை பிறந்தது. புள்ளையைக் காணோமே இப்படிப் பறவை முட்டையைக் கொடுத்து நம்மை ஏமாத்திட்டீரேன்னு  அழுதுகிட்டே சிவனிடம் போய் முறையிட்டதும், இதைச் சாதாரணப் பறவைன்னு நினைக்காதே.... மஹாவிஷ்ணுவுக்கு வாகனமா இருந்து  ரொம்பப் புகழோடும், சக்தியோடும் விளங்கப்போறான் உன் பிள்ளைன்னு சமாதானப்படுத்தி அனுப்பறார் சிவன்.

பக்கத்து வீட்டுலே குழந்தை பொறந்துருச்சு. நம்ம வீட்டுலே இதுவரை ஒரு அனக்கமும் இல்லையேன்னு  யோசிச்ச கத்ரு,  தன்னுடைய முட்டையை எடுத்து  உடைச்சுப் பார்த்தாள் !  முழுசும் வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை அதுக்குள்ளே இருக்கான்.  உடம்பின் மேல்பாகம்  முழுவளர்ச்சி, கீழ்பாகம்..... ஒன்னும் சொல்றதுக்கில்லை.....

ஓடு.... சிவனாண்டைபோய் முறையிடலாமுன்னு போறாள் கத்ரு. 'அவசரப்பட்டு இப்படி முட்டையை உடைச்சுட்டேயே.... உள்ளே மனுஷக்குழந்தை  வச்சுருந்தேனே. இப்படிக் காரியத்தைக் கெடுத்துட்டியே....  போனாப் போகட்டும். அழுது புலம்பாதே.....   இவன் வளர்ந்து பெரியவனானதும், இவனுக்கொரு நல்ல இடத்தில் வேலைக்கு ஏற்பாடு பண்ணறேன். உலகத்தைச் சுத்தி வருவான் பாரு'ன்னார். குழந்தைக்கு அருணன் என்ற நாமகரணமும் ஆச்சு.

அதேபோல் சூரியனின் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் தேரோட்டி வேலையும் வாங்கிக் கொடுத்துட்டார். தேவலோகத்துலே மாற்றுத்திறனாளிக்கும்  மதிப்பு உண்டுன்னு தெரியுது இல்லே! தேரில் என்ன ஒரு சௌகரியமுன்னா..... ப்ரேக் போடக் கடிவாளங்களைக் கையால் இழுத்தால் போதும்.  காரில் ப்ரேக் போடக் கால் வேண்டி இருக்கே! 

அருணன், தன்னுடைய வேலையைக் கவனமாச் செஞ்சுக்கிட்டு இருக்கான்.  இவன் சிவபக்தன் வேற !  சிவனருளால் பிறந்தவன் இல்லையோ?  ஒரு சமயம், கைலாசத்துக்குப்போய்  சிவனை தரிசனம் பண்ணிக்கணுமுன்னு ஆசை வந்துருக்கு.  முதலில் எஜமானரிடம் சொல்லி லீவு வாங்கிக்கணும். சூரியனாண்டை போய்,  பயணம் ஒன்னு போகணும்.  கொஞ்சநாள் லீவு வேணுமுன்னு கேட்க, எங்கே என்னன்னு விசாரிச்ச சூரியன்,  'என்னது கயிலாயம் போகணுமா? காலே இல்லாத நீ எப்படி மேருமலை மீது ஏறப்போறே?' ன்னு கிண்டல் பண்ணினான்.
அருணனுக்கு துக்கமாப் போயிருச்சு. ஒன்னும் சொல்லாமத் திரும்பிப்போய் சிவனை தியானம் செஞ்சான். 

அடப்பாவமேன்னு சிவன், தரிசனம் கொடுத்துட்டு, நடந்ததை விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டார். 'கூப்பிடு அந்த சூரியனை'ன்னதும்  சூரியன் வந்தான்.  இப்படி  ஒரு மாற்றுத்திறனாளியை அவமதிச்சுப்பேசுன  உன்னைச் சும்மா விடக்கூடாது. இனி உனக்கு ஒளியே இல்லாமல் போகட்டும்னு சபிச்சுடறார்.  சூரியனும் இருட்டாகிட்டான்.

மன்னிப்பு மன்னிப்புன்னு அவன் கதறனதும்,  பூலோகத்துலே ஒரு இடம் சொல்றேன். அங்கெ போய் எங்களை (அர்த்தநாரீ இல்லையோ!)   மேகமண்டலத்தில் யானை மேலே உக்கார்த்திவச்சு, தினமும் கும்பிட்டுவா.  அப்புறம் ஒருநாள்  உனக்கு  என்ன செய்யலாமுன்னு யோசிச்சுச் சொல்றேன்னுட்டார், மேகநாதர் !

இங்கே வந்து அதே போல் வழிபட்டுக் காத்திருக்கான். (கஜ பிருஷ்ட விமானம்.... வந்தது இப்படித்தான் போல ! )

சூரியன் இல்லாமல் போனதும் தேவலோகத்திலும் கொஞ்சம் கஷ்டம்தான் ஆகிப்போச்சு.  தேவர்களும் இங்கே வந்து சிவனை வணங்கி 'எதாவது செய்யுங்க'ன்னு விண்ணப்பிக்கறாங்க.  அவுங்கெல்லாம் வந்து சிவனை லிங்க ரூபியாப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்தான் அந்த லிங்கங்கள்  அந்த தேவர்கள் பெயரிலேயே இங்கே இருப்பதைப் பார்த்தோம்.  குபேர லிங்கம், வாயு லிங்கம், தேயுலிங்கம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம்னு  எக்கச் சக்கம். ( இருபத்தியஞ்சுன்னு சொல்றாங்க. தேவர்கள் எண்ணிக்கை முப்பத்து முக்கோடின்னு தெரியுமோ?)

இதுக்கிடையில் ஒரு ஏழு மாசம்   கடந்து போயிருச்சு. இன்னும் தனக்கு  ஒளி கிடைக்கலையேன்னு  வருந்தின  சூரியன், ' ஹே மிஹரா'ன்னு அலறலா  சத்தம் போட்டு சிவனைக் கூப்பிடறான். (சிவனுக்கு மிஹரா என்று ஒரு பெயரும் இருக்கு ! ) அப்பதான் சிவனும் பார்வதியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. இந்த அலறல் கேட்டதும் பார்வதிக்குக் கோபம் வந்துருது.  கொஞ்சம் கூட மட்டுமரியாதை இல்லாமல் வூட்டுக்காரர் பெயர் வேற சொல்லிக் கூப்பிட்டா கோபம் வருமா இல்லையா? 

கோபத்தோடு சாபம் கொடுக்க வாயைத் திறந்ததும், சட்னு  மனைவியின் தாடையைப் பிடிச்சு, 'சாந்தமாகுடா செல்லம். ஏற்கெனவே ஏழுமாசமா இருண்டு கிடக்கான்.  அவனுக்கு இன்னும் சாபம் கொடுத்தா அவ்ளோதான்.... அழிஞ்சே போயிருவான். கொஞ்சம் பொறுமையோடு நினைச்சுப்பார்'னு கெஞ்சினார். இதெப்படி எனக்குத் தெரியுமுன்னு கேக்கறீங்களா?

அதுதான் க்ஷேத்ரப்புராணீஸ்வரர் சிலையாவே  நின்னு  'நடந்தது என்ன?'ன்னு காமிக்கிறாரே!
ச்சும்மாச் சொல்லக்கூடாது.... என்ன ஒரு அழகான  சிலைகள் பாருங்க!   இந்தச் சிலையைக்கூட ஒரு பக்கமிருந்து பார்த்தால்  பார்வதி  கோபமா இருக்கற மாதிரியே  தெரிகிறாள். இந்தாண்டை நின்னு பார்த்தால் சாந்தமான முகம்!  இந்த பாவனைகளை எப்படித்தான் சிற்பத்தில் கொண்டுவந்தாங்களோ!    அமேஸிங்....

அப்புறம்  இங்கே சூரியனுக்கு ஒளி மீண்டும் கிடைச்சதால் இந்த ஊருக்கு மீயச்சூர்னு பெயர்க் காரணம் சொல்றாங்க. திரு அடைமொழி சேர்ந்து திருமீயச்சூர் ஆச்சு.
கோஷ்டத்தில்  மஹா விஷ்ணு, ப்ரம்மா, லிங்கோத்பவர், சந்திரசேகரர், சதுர்முக சண்டிகேஸ்வரர்னு  அமர்க்களம் போங்க !
மகிஷனின் தலைமேல் நிற்கும் விஷ்ணுதுர்கை எட்டுக் கைகளுடன் அருள் பாலிக்கிறாள் !  ஒரு கையில் மரக்கிளையில் உக்கார்ந்துருக்கும் கிளி!

மஹாலக்ஷ்மிக்குத் தனியா ஒரு சந்நிதி.  அப்புறம் அந்த இளங்கோவில்னு இருக்கு பாருங்க அங்கத்து மூலவர்  சகலபுவனேஸ்வரர், அம்பாள் பெயர் மின்னும் மேகலையாள்!

புள்ளையார்கள் அங்கங்கே!  சுப்ரமணியருக்கும் ஒரு சந்நிதி உண்டு.  பிரகார மண்டபத்தில் ஒரு ஓரத்தில் காவடிகளை அடுக்கி வச்சுருந்தாங்க.

நம்ம ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கும் அமுதகலச கருடர் பதிவில்   பெரிய திருவடியைப் பற்றி ஒரு கதை எழுதி இருந்தேன்.  இப்ப என்னடான்னா.....    அந்தக் கதையை அப்படியே (எப்படியெப்படியோ!) மாத்தி இங்கெ ஒரு கதை வந்துருக்கு!  ரெண்டு வெவ்வெறு கதாசிரியர்கள் ஒரே சம்பவத்தை  அவரவருக்குத் தோணும்படி எழுதி இருக்காங்க போல!!!
காலை  ஆறு முதல் பனிரெண்டரை, மாலை நாலரை முதல் எட்டரை வரை கோவில் திறந்துருக்கும். ஆனால் நீங்க பகல் நேரத்தில் போனால்தான்  கோபுரம், விமானங்கள், கோஷ்டத்தில் இருக்கும் சிலைகள் இப்படி எல்லாத்தையும்  பார்க்க முடியும். ரொம்பப் பெரிய கோவிலாகவும் இருக்கு பாருங்க.
இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம் நம்ம அருணனின் 'கதை'யில் இருக்கு!  கயிலைக்குப் போகும் போது தன்னை ஒரு அழகிய பெண்ணாக உருவம் மாத்திக்கிட்டுப் போனானாம்.  தரிசனம் முடிச்சுட்டு வரும்போது இவளைப் பார்த்த இந்திரன், இந்த  அழகால் மயங்கிட்டான். அதன் பலன்?  வாலி பிறந்துருக்கான்!

தன் எஜமானன் சூரியனிடம் இப்படி பெண்ணாக உருவம் எடுத்துப் போனேன்னு (அதைமட்டும்) சொன்னதும், எங்கே காட்டு எப்படி இருந்தேன்னு பார்க்கலாமுன்னு கேட்கத் திரும்பவும் அதே பெண்வேஷம் கட்டிக் காமிச்சான். காமிச்சானா........... அழகியைப் பார்த்த  சூரியனுக்கு அவளை விடமுடியலை. பலன்? சுக்ரீவன் பொறந்துட்டான்!

அப்ப....  ராமாயண காலத்துக்கு(ம்)முந்தி மேகநாதனும், லலிதாம்பிகையும் இங்கே கோவில் கொண்டாச்சு !

நம்ம சனைச்சரண், யமதருமன்,  கருடர், அருணன்,  வாலி, சுக்ரீவன்  இப்படி அறுவரின் அவதார ஸ்தலமாம் இந்த திருமீயச்சூர்! !

சொல்லமுடியாத மகிழ்ச்சியோடு  கிளம்பி  வரும் வழியில்  ராஜகோபுர வாசலாண்டை ஒரு பெண்மணி  மஞ்சள் குங்குமம், தாலிச்சரடு, வெற்றிலைபாக்குன்னு எனக்குக் கொடுத்தாங்க. அந்த அம்பாளே கொடுத்துருக்கான்னு நினைச்சு  வாங்கிக்கிட்டேன். என்ன பிரார்த்தனையோ? நல்லா இருக்கட்டும்.

PINகுறிப்பு: பதிவு கொஞ்சம் (!) நீண்டுபோனதால் படங்களைக் குறைச்சுக்கிட்டேன். ஆனால் அந்த அற்புதமானவைகளை அப்படி லேசில் விட்டுட முடியாது. தனி ஆல்பமாப் போட்டு விரைவில்  சுட்டியை இங்கே போட எண்ணம்.

தொடரும்.......... :-)


17 comments:

said...

ரிப்பனில் கண்ணாடி வளையல்கள் கோர்த்து அம்பாளுக்குப் போட விற்பார்களே, அதைப் படம் எடுத்தீர்களா? வேறு கோயில்களில் நான் பார்த்ததில்லை

said...

டீச்சர் - இங்க இன்னும் ஒரு விசேஷம் உச்சிக்கால பிரசாதம் - பிரண்டை சாதம்!
நெய்யும் பருப்பும் மணக்க மணக்க இருக்கும்...

வேறு எங்குமே பிரண்டை கோவில் படையலில் பார்த்த நினைவு இல்லைங்க...

பிகு: எங்க ஏரியால ஸ்ரார்த்த படையலில் பிரண்டை கட்டாயம் இருக்கும்!

said...

திருமீயச்சூர் படங்கள், தகவல்கள் என அனைத்தும் சிறப்பு.

சிற்பங்கள் - வாவ்... மற்ற படங்களையும் காண ஆவல்.

said...

திருமீயச்சூர் பல முறை சென்றுள்ளேன். கோஷ்டத்தில் உள்ள சேத்திரபுராணேஸ்வரர் சிலையை ஒவ்வொரு முறை செல்லும்போதும் பொறுமையாக நின்று ரசித்து வருகிறேன். நம் இறைவனின், இறைவியின் அழகுக்கு ஈடு என்று எதனையும் கூறமுடியாது.

said...

க்ஷேத்ரப்புராணீஸ்வரர் மிக அழகு .பார்த்துகொண்டே இருக்கலாம் போல

லலிதாம்பிகையும் அழகோ அழகு .நேரம் இல்லாத காரணத்தால் நாங்களும் பார்க்க விட்ட கோவில் அடுத்த முறை போகும் போது கண்டிப்பா போகணும்.தவலுக்கும் நன்றி அம்மா.

said...

திருமீயச்சூர் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இதுவரை வாய்க்கவில்லை. லலிதாம்பாள் படமும், ஷேத்ராபுராணீஸ்வரரும் அற்புதம்.

said...

திருமீயச்சூர் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இதுவரை வாய்க்கவில்லை. லலிதாம்பாள் படமும், ஷேத்ராபுராணீஸ்வரரும் அற்புதம்.

said...

//மூலவர் இருக்கும் கருவறை விமானம் கஜ பிருஷ்ட விமானம். வேறெங்கேயும் கேள்விப்படவுமில்லை, பார்த்ததும் இல்லை!//
தொண்டை மண்டல கோவில்களில் பெரும்பாலும் கஜ பிரஷ்ட விமானமாகத்தான் இருக்கும். உதாரணமாக சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள கோவூரில் கூட கஜப்பிரஷ்ட விமானம்தான், இது புதன் ஷேத்திரமும் கூட.

said...

கருவறை விமானம் கஜ பிருஷ்ட விமானம்....நல்ல தகவல் மா...

கோவிலும் ...வரலாறும் மிக சிறப்பு அறிந்துக் கொண்டேன்

said...

வாங்க பிரகாசம்,


ரிப்பன் வளையல் மாலை பார்க்கலையே.... கொலுசு தகவல் பார்த்துட்டு நேரா அங்கே போயிட்டோம்.... ஆஹா..... சான்ஸ் மிஸ்டு.... :-(

said...

வாங்க ரமேஷ்,

பிரண்டை சாத நைவேத்யம் சொன்னாங்கதான். எனக்குதான் எழுத விட்டுப்போச்சு. உச்சிகாலம் வரை காத்திருக்கணுமேன்னு கிளம்பிட்டோம்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அருமையான சிற்பங்கள்தான்! ஃபேஸ்புக் ஆல்பம் ஒன்னு போட்டுருக்கேன்.

நேரம் இருக்கும்போது பாருங்கள் !

https://www.facebook.com/gopal.tulsi/media_set?set=a.10214370439357385&type=3

said...

ஃபேஸ்புக் ஆல்பம் ஒன்னு போட்டுருக்கேன்.

நேரம் இருக்கும்போது பாருங்கள் !

https://www.facebook.com/gopal.tulsi/media_set?set=a.10214370439357385&type=3

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்குமே இன்னொருமுறை போக ஆசையாத்தான் இருக்கு!

பார்க்கலாம்..... லலிதா கூப்பிடுவாளான்னு!!!

said...

வாங்க செந்தில்பிரசாத்.

அடுத்தமுறை தவற விடாதீங்க! விரைவில் லபிக்கட்டும்!

said...

வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்,


திருமீயச்சூர் பயணம் விரைவில் கிடைக்கட்டும்!

சென்னை குன்றத்தூர், கோவூர் எல்லாம் போனதே இல்லை. அடுத்தமுறையாவது கிடைக்குமா என்று பார்க்கணும்.
தகவலுக்கு நன்றி !

said...

வாங்க அனுராதா பிரேம்,

தொடர் வருகைக்கு நன்றி !