Friday, June 01, 2018

பாரம்பரியக் கலை அழகை விட்டுக்கொடுக்கலை பாருங்க... சீனதேசம் - 19 (கடைசிப் பகுதி)

அகழி போய், திரும்பும் இடம் தெரிஞ்சது. அதுவரை போய்ப் பார்க்கலாம். கிட்டே போகப்போக.....  புதுக் கல்யாணஜோடிகள், ஃபோட்டோ ஷூட் வந்துருக்காங்க. கல்யாணப்பெண்களுக்கு இங்கே சிகப்பு உடைகள்தான் சம்ப்ரதாயம் போல!





இங்கேயே மூணு புதுப்பொண்ணுங்க !  கேமெராவைக் காமிச்சுட்டு நானும் சில க்ளிக்ஸ்.
அந்த ஓரத்துலே இருந்த சைன்போஸ்ட்டில் ட்யனமென் ஸ்கொயர் 2140 மீட்டர் தூரத்தில் இந்தப் பக்கமுன்னு அம்பு!
சரியான வழியில்தான் வந்துருக்கோம்.  ஆனால் ரெண்டு கிமீ நடக்கணும்....

வாங்க...மெள்ள நடக்கலாம்....

வர்ற வழியில்  என்னவோ பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க ஆர்மி ஆட்களுக்கு... ஒரு பத்துப்பேர் கூட்டம்தான்.....
போறவழி சரிதானான்னு  இன்னும் சம்ஸயம் இருக்கு 'நம்மவருக்கு'.  அங்கே இருந்த போலிஸிடம் ட்யனமன் ஸ்கொயர்? ன்னதும்  அவர் நாம் போகும் வழியையே கை காமிச்சார்!   ரைட்....  போலாம் போலாம்....
ஒரு பார்க்காண்டை வந்தப்ப,  அதுக்குள்ளே போகலாமுன்னார் நம்மவர்.  இப்ப எனக்கு ஒரு சம்ஸயம்....  வழியை விட்டு எங்கெயாவது போயிடப்போறோமேன்னு...
இல்லே.... நீ உள்ளே போய்ப் பார்க்கணுமுன்னு  சொன்ன அதே பார்க்கின்  இந்தப் பக்க வாசல்னு இவர் சொன்னதை நம்பி உள்ளே போனேன்.




இது பெய்ஜிங்கில் இருக்கும் முக்கிய பார்க்குகளில் ஒன்னு!  என்ன அப்படி முக்கியமாம்?  ஸீனியர் சிட்டிஸன்களுக்கான ஸ்பெஷல் பார்க் இந்த Changpuhe Park. அட!

உண்மைதான். அங்கங்கே முடிச்சு முடிச்சாப் பெரியவர்கள் நின்னு பேசிக்கிட்டும், எதோ விளையாட்டுன்னு  ஒரு சின்னப் பந்தைக் கீழே விழாமல் ஒரு காலால் உதைச்சு  மேலே தள்ளுவதுமா இருக்காங்க.  சின்னச் சின்ன   கூடாரம் போல் இருக்கும் அமைப்பில் பலர் உக்கார்ந்து பேசிக்கிட்டும் இருக்காங்க. ஒன்னே ஒன்னுதான் என்னால் தாங்க முடியலை....  சிகெரெட்டு...........   புகைவலி எனக்கு ஆகாது.....  ஆஸ்த்மா.... இருக்கே!



கொஞ்சம் தள்ளியே நடந்துபோனோம்.  இந்தப் பார்க்கும் அழகா அமைதியா இருக்கு. சின்னதா பாலம், மரங்கள் செடிகள்னு....  பாலம் பார்த்ததும்தான் ஏற்கெனவே ஒரு ஃபோட்டோஷூட்  அங்கே  பார்த்த நினைவு. அப்புறம் அந்த பெரிய  மெட்டல் பந்து! நல்லவேளை சரியான பாதையில்தான் வந்துருக்கோம்.  calamus ball னு இதுக்குப் பெயராம்.  வசந்தகாலத்தை வரவேற்கும் அடையாளம். இந்த எவர்ஸில்வர் பந்துக்குப் பின்னால் காங்க்ரீட் ஆர்ட்!
சீனத்துலேயே என்னமோ எழுதி இருக்காங்க. இந்தப்பக்கம் ஏற்கெனவே நாலைஞ்சு முறை நடந்து போயும், ஒருமுறை உள்ளே போய் இந்தப் பந்தை க்ளிக்கியும் இருந்ததால் தெரிஞ்ச இடமுன்னு ஒரு மன சமாதானம்தான். வாசலில் தொட்டடுத்த கட்டடத்துச் சிங்கமும் என் தோழன் என்பதால் திருப்தியோடு சாலையைக் கடந்து  அஞ்சே நிமிட்டில் மாரியாட்ஸ்க்கு  வந்தாச் :-)
பத்து நிமிச ரெஸ்ட். பகல் சாப்பாடு!  ஃப்ரிட்ஜைக் காலி பண்ணி எல்லாத்தையும் எடுத்து வெளியில் வச்சு, புளியோதரையை மட்டும் லேசா சூடு பண்ணிட்டு, மாம்பழம், தயிர், புளியோதரை அண்ட் பருப்புத் தொகையல்!

அட,  தொகையல் வேறயா? எப்படி?  பாக்கி இருந்த பருப்புப்பொடியில் ரெண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலக்கினதும்  சட்னி ரெடி :-)

சாப்பாடானதும் ரைஸ் குக்கரைக் கழுவித் துடைச்சுக் 'குல்லாய்' போட்டு பொட்டிக்குள் வச்சுட்டு,  கழிச்சுக்  கட்டவேண்டிய தீனிகளைக் குப்பைத் தொட்டியில் கடாசிட்டு, அடுக்களையைச் சுத்தம் செஞ்சதும் கொஞ்ச நேரம் ஓய்வு.

மூணுமுறை எல்லா கப்போர்டுகளையும் செக் பண்ணி, எதாவது விட்டுப்போயிருக்கான்னு பார்த்தேன். 'நம்மவர்' ஒருமுறை  ஒரு ஷர்ட்டை ஹேங்கரில் போட்டுட்டு மறந்து போயிட்டார். அடுத்த ஊருக்கு முக்கால்வாசி போனபிறகு ஹொட்டேலில் இருந்து ' சட்டை இருக்கு'ன்னு ஃபோன். சட்டைக்காகத் திரும்ப  அவ்ளோ தூரம் போக முடியுமா? சட்டையே பண்ணாமல் இருக்க வேண்டியதாப் போயிருச்சு. அப்போ முதல்தான் இந்த மூணு செக்கப் :-)

பயணத்துக்கு வசதியா  உடுப்புகளை மாத்திக்கிட்டு  சரியா மூணு மணிக்குப் பொட்டிகளைக் கொண்டுபோய்  வரவேற்பில் சொல்லி க்ளோக் ரூமில் போட்டோம். ஆறரைமணிக்கு  ஏர்ப்போர்ட் போக வண்டிக்கு ஏற்பாடும் பண்ணிட்டு,  இடைப்பட்ட நேரத்தைப் போக்கக் கிளம்பினோம்.  கழுதை கெட்டால் குட்டிச்சுவர்னு  அதே வாங்ஃப்யூஜிங் நடக்கும் தெரு.

இன்னும் சினிமா செட்டுகள் அப்படியே இருக்கு. கூடவே  ஃபொட்டாக்ராஃபி  எக்ஸிபிஷனாம்.   சாயங்காலம் எதோ இசை நிகழ்ச்சிக்கான மேடை போட்டுக்கிட்டு இருக்காங்க.  எதாவது ஒன்னு தினம்தினம் இங்கே நடந்துக்கிட்டே இருக்கு!







அப்புறம்  இந்தாண்டை ஒரு ஷாப்பிங் சென்டர்னு தங்கப்பாத்திரம் பார்த்துட்டு, ஆறுக்கு மாரியாட்ஸ் வந்து சேர்ந்தோம்.
ஆறரை மணிக்கு  வண்டி வந்து நம்மை ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு போகுது. கிளம்புன கொஞ்ச தூரத்திலே  வானவில்லை நடுவுலே கொஞ்சம் காணோமுன்னு சொல்றாப்லெ  அமைப்பு. முழுசா இல்லாம  ரெண்டு பக்கமும் இருந்து கிளம்பி வந்து  ஒன்னு சேராமக் கிடக்கு!  இதுக்கு ரெயின்போ கேட்ன்னு பெயராம்.
ஹாங்காங், பிரிட்டிஷாரிடமிருந்து  கைமாறித் திரும்பவும் சீனாவுக்கே கிடைச்சதைக் கொண்டாடும் விதமாக் கட்டுனதாம். அது ஆச்சே இருபத்தியொரு வருஷம் (1997தானே?)

விமான நிலையத்துக்கு  நம்ம ஹொட்டேலில் இருந்து  முப்பத்திரெண்டு கிமீ தூரம்.  சாயங்கால வேளையில் போக்குவரத்து அதிகம் என்பதால் கிட்டத்தட்ட  ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு.  சரியா ஒரு வாரத்துக்கு முன்னாலேதானே வந்து இறங்கினோம். அதே வழியில் லிஃப்ட்லே ரெண்டாவது தளத்துக்குப்போய்ச் சேர்ந்தோம்.
இது இன்னுமொரு பிரமாண்டம். நம்ம க்வான்டாஸ் கவுன்ட்டரைத் தேடியே ஒரு முக்காக் கிலோமீட்டர் நடக்கவேண்டியதாப் போச்சு. சும்மாச் சொல்லக்கூடாது.... விமான நிலையம் ரொம்பவே அருமையா இருக்கு!
செக்கின் பண்ணிட்டு,    டின்னருக்கு எதாவது  சாப்பிடலாமேன்னு  தேடுனதில் 'தாய்' கண்ணில் பட்டது. ஆனால் எனக்கு அங்கே சாப்பிட வேணாம். பீட்ஸா  ஓக்கேவான்னார் 'நம்மவர்'.

ட்ராகன்களும்,  பெரிய பெரிய கங்காளங்களும் இங்கேயும் இடம் புடிச்சு உக்கார்ந்துருக்கு. சிங்கம்தான் இதுவரை கண்ணில் படலை....

வேறெதாவது சாப்பிட இடம் தேடுனா.... ஒன்னும் சரியா இல்லை. பேசாம  நம்ம டெர்மினலுக்குப் போயிடலாமேன்னு .....
போற வழியில் 'நீரவ் மோடி'யைப் பார்த்தேன். வைரவளையல் சீனாவரை வந்துருக்கு! பிஸினஸ் ஹாங்காங்தான், இல்லையோ?
ரயில் பிடிச்சு மூணு ஸ்டேஷன் தாண்டிப்போய்  இமிக்ரேஷன்  முடிச்சுட்டுத் திரும்பவும்  பீட்ஸா ஹட் தேடித்தேடி, தேடித்தேடி  எங்கியோ ஒரு மூலையில் ஒளிஞ்சுருந்ததைக் கண்டுபிடிச்சோம். ஒரு டிஸ்ஸர்ட் கூட ஆச்சு :-)


அப்புறம் கொஞ்சம் சுத்திப்பார்த்து  வேடிக்கை.  பாரம்பரியக் கட்டடக்கலையில் கலக்கி இருக்காங்க.  சாங்கிக்கு அடுத்தபடியா இது ரொம்பப்பிடிச்சுருந்தது.
(சிங்கப்பூர் ஏர்போர்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழகான இடம்!  இந்த முப்பத்தியேழு வருசமாப் போய்வர்றதாலே ரொம்பவே பழக்கமான இடமும் கூட! )
கொஞ்சமான சுத்தா இன்னிக்குச் சுத்தி இருக்கோம்.  களைப்பில் தூக்கம் வர்றாப்போல இருக்கேன்னு  ஸ்டார்பக்கில் ஒரு காஃபி.
பனிரெண்டு மணிக்கு நமக்கு ஃப்ளைட்.  க்வான்டாஸ் வந்து காத்துக்கிட்டு இருந்தது.  அதே பழைய லொடலொடா ப்ளேன்.  அதே இரைச்சல், அதே பாடாவதி  சாப்பாடுன்னு  சகிச்சுக்கிட்டு இருந்து மறுநாள்  பகல் ரெண்டு மணிக்கு ஸிட்னி.  மூணரை மணி நேர இடைவெளி அடுத்த நியூஸி ஃப்ளைட்டுக்கு.   இனிமேல் ச்சும்மா டிக்கெட் கொடுத்தாலும் இந்த க்வான்டாஸ் கூடவே கூடாதுன்னு (வழக்கம்போல்) முடிவெடுத்தேன்.  போதுண்டா சாமி.....

எட்டுநாள் பார்க்காத  மெயில், ஃபேஸ் புக், வாட்ஸ் அப் சமாச்சாரங்கள் எல்லாம் உக்கார்ந்து பார்த்து முடிச்சேன்.  வனவாசம் முடிஞ்சது:-)

அஞ்சரைக்குள்ள வண்டியில் ஏறி க்றைஸ்ட்சர்ச் வந்து  சேர்ந்தப்ப, நேர வித்தியாசம் காரணம் கிட்டத்தட்ட நடுநிசி.  டாக்ஸி பிடிச்சு வீடு வந்து சேர்ந்து சாமி நமஸ்காரம் பண்ணிட்டுப் படுக்கையில் தலை சாய்ச்சபோது மறுநாள்  ஆரம்பிச்சு  முக்கால் மணி போயிருச்சு.

விடிஞ்சதும்  காஃபி, குளியல் முடிச்சு முதல் வேலையா  சாமிக்குப் பிரஸாதமா  சக்கரைப் பொங்கல் செஞ்சு, நல்லபடியா வந்து சேர்ந்ததுக்கு  நன்றி நவிலல்.  சாயங்காலம் நாலு மணிக்கு ரஜ்ஜுவைக் கேட்டரியில் இருந்து வீட்டுக்குக் கூட்டிவந்தாச்சு.

மத்தபடி வேலைகள் வழக்கம் போல்..... ஆனாலும் ஒரு விசேஷம்......  அப்புறம் அதைப் பற்றிச் சொல்லறேன்.
பொதுவா நம்ம பயணங்களில்  அதிகப்பட்சம் மூணுநாள், சில சமயம் ஒரே ஒருநாள்னு ஒரு ஊரில் தங்கி பார்த்துட்டு ஓடிக்கிட்டே இருப்பதை, இந்த முறை மாத்தி, ஒரே ஊரில் ஒரு வாரமுன்னு தங்குனது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு. திடுதிடுன்னு  ஓடாமக் கொஞ்சம் நின்னு நிதானமா ஊரைச் சுத்தினோம். ஒரே இடத்தில் தங்கல் என்பதால், தினம்தினம் பொட்டி அடுக்கற வேலை இல்லாம, நிம்மதியா இருந்துச்சு.

சீனாவை நான் பார்க்கலை என்ற குறை தீர்ந்தது 'நம்மவருக்கு' !  எனக்கும் பார்த்தவரை  எல்லாமே பிரமாண்டம், முக்கியமா இருபத்தியாறு மீட்டர் பெருமாளைப் பார்த்த திருப்தி!

ஆனால் வனவாசம் போனமாதிரிதான்.....   எதுவுமே பழகிட்டா விடறது கஷ்டம். ஆனாலும் சமாளிக்க முடியும், நம்மால் என்ற  நம்பிக்கை வீண் போகலை.

இதுவரை கூடவே வந்த வாசக நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!


14 comments:

said...

அங்கே எல்லாம் பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என்ற சட்டம் இல்லையா?

அந்த மரம்.... ஆஹா...

விமான நிலையம் கலைநயத்துடன் அழகாய் பிரம்மாண்டமாய் இருக்கிறது

இப்படி ஊர்களுக்குச் சென்று வந்து, இடைவெளி விட்டு ரஜ்ஜுவைப் பார்க்கும்போது அதன் ரீயாக்ஷன் எப்படி இருக்கும்?

"ஆதலினால் பயணம் செய்வீர்!"

ஓகே!

said...

சீனப்பயணம் மகிழ்வோடும் நிறைவோடும் முடிந்ததில் மகிழ்ச்சி. இன்னும் பல பயணங்கள் சென்று இது போல பல கதைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அவசரச் சட்னிகளுக்கு பல செய்முறைகள் இருக்கு. ஊறுகாயின் கொஜ்ஜுவை மட்டும் எடுத்து சிறிது கட்டித்தயிர் கலந்தால் தோசை இட்லிக்கும் கூட தொட்டுக்கொள்ளலாம்.

சாமிக்கு சர்க்கரைப் பொங்கல்தானா? வெண்பொங்கல், புளியோதரை, எலுமிச்சைசாதம், தக்காளிசாதம் எல்லாம் ஆகாதா? இல்ல ரெண்டு இட்லி சாம்பாரோடு வைக்கக்கூடாதா? அவருக்கும் ஒரு மாறுதலா இருக்கும்ல. :)

said...

எல்லாமே பிரம்மாண்டம். நீங்க சொல்லலைனா, ஒரே மணப்பெண்ணை 3-4 போட்டோ எடுத்திருக்கீங்கன்னு நினைத்திருப்பேன்.

சர்க்கரைப் பொங்கலோடு சீனப்பயணத்தை நிறைவு செய்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி.

said...

எவ்வளவு தூரம் நடந்து நடந்து இடங்களைப் பார்க்கணும் என்பதுதான் மலைக்கவைக்கிறது.

கோபால் சார் இன்னும் இளமையாத் தெரியறார்.

said...

Red and yellow are the auspicious and lucky color for Chinese people. So, you see red color every where in their functions, parties and restaurants.

said...

வாங்க ஸ்ரீராம்.

எங்கூரில் இப்படி ஒரு சட்டம் இருக்கு. ஆனால் சீனதேசத்தில் இல்லைன்னு நினைக்கிறேன். எல்லோரும் ரயில் எஞ்சின் மாதிரி குப்குப்ன்னு புகையோ புகை :-(

ரஜ்ஜுவைக் கேட்டரியில் போய்ப் பார்க்கும்போது அதனுடைய பெஸ்ட் பிஹேவியரில் இருக்கும். கேட்டரி ஓனரிடம் ரொம்பவே நல்ல பெயர் வாங்கி இருக்கு! அவுங்க பாடும் புகழ் கேட்டு மயக்கத்தில் இருக்கும். வீட்டுக்கு வர்ற வழியில் கிய்யா மிய்யான்னு முனகிக்கிட்டே வரும்.

வந்து சாமி நமஸ்காரம் செஞ்சு கூண்டைத் திறந்து விட்டவுடன் நேராப் புழக்கடைப்பக்கம் போய், தானில்லாத சமயம் 'எதிரிகள்' வந்துருப்பாங்களோன்னு தோட்டம் முழுசும் நோட்டம் விட்டுட்டுக் கொஞ்ச நேரம் ஆனதும்தான் உள்ளே வரும்.

எதுவும் நடக்காதது போல முகத்தை வச்சுக்கிட்டுச் சாப்பாடு கேக்கும். நானும் அதே போல் முகத்தை வச்சுக்குவேன். பயணமா.... போகவே இல்லையேன்னு.... :-)

said...

வாங்க ஜிரா.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்லபடியாப் பயணம் போய் வர்றதே பெருசுன்னு ஆகிக்கிடக்கு இப்பெல்லாம். முந்திமாதிரி உடல்நலம் இல்லையேப்பா..... வயசாகுதுல்லே?

நம்ம சாமிக்குச் சக்கரைப்பொங்கலே அதிகம்! பெரும்பாலும் ஊர் திரும்புனநாள் பழங்கள் மட்டுமேதான்.

இட்லி எல்லாம் காலநிலை அனுசரித்துதான் அரிசியே ஊறப்போடணும் இங்கே!

நம்ம சாமி ஒன்னும் கேக்கறதில்லையாக்கும் :-)

said...

வாங்க நெ.த.

கோபால் ஸாருக்குக் கவலை தராத மனைவி கிடைச்சதால் ஜாலியா இருக்கார்.
இளமையை அவருக்குக் கொடுத்துட்டு முதுமையை நான் ஏத்துக்கிட்டேன் :-)

சீனப்பயணத்தில் வழக்கத்தை விட நடை ரொம்பவே அதிகம்! இன்னும் கால்வலி போகலை...

said...

வாங்க ஜான் கென்னடி.

நீங்க சொன்னது ரொம்பச் சரி. இங்கேயும் சீன விழாக்களில் அதிகம் சிகப்பு உடைதான்!

said...

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.//

யெஸ் அக்கா எனக்கும் பயணம் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். உங்களோடு அமெரிகக க்ரான்ட்கென்யான் வந்ததோடு சரி அப்புறம் பயணம் மிஸ் பண்ணிட்டேன். இப்ப சீனா வேற இருக்கு போல..சரி சரி தனியா சுத்திப்பாத்துடறேன்.

படங்கள் எலலம் ரொம்ப அழகோ அழகு....ஏர்போர்ட் செமையா இருக்கு....பிரமாண்டமாய்....

ரஜ்ஜு செல்லம் ஆஹா...ஸ்ரீராமுக்கு நீங்க கொடுத்துறக்கற பதில் பார்த்து ரஜ்ஜுவை நினைச்சு சிரிச்சுட்டேன். கண்ணழகியும் இப்படித்தான் வீட்டுக்குள்ள வந்ததும் தரவா எல்லா செக்கிங்க் ஸ்கானிங்க் ஏர்போர்ட் செக்கிங்க் எல்லாம் ஒன்னுமே இல்லை...இவங்க அப்படி செக் பண்ணுவாங்க...

ஸோ நீங்க பயணத்தை சர்க்கரை பொங்கலோடு முடிச்சுட்டீங்க....நான் இனிதான் உங்க பயணத்தைப் பார்க்கப் போறேன்...வாசிக்கிறேன்...நிறைய இருக்கு போல

கீதா

said...

வகுப்பிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
தங்களோடு என்னையும் சீனா அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியதற்கு நன்றி.

said...

அருமையான பதிவு. புகைப்படங்களும் அருமை. இந்தப் பதிவை மட்டும் தான் வாசிக்கக் கிடைத்தது. அருமை. சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். நமக்கு இலங்கையைத் தாண்டிப் பயணிக்க இயலவில்லை. வாழ்த்துகள்.

சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்

said...

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பார்க்..வியந்தேன்.

said...

ஓ சீனா பயணம் ஓவர் ரா...

அட நானும் எல்லாம் பார்த்துட்டேன்...


ரொம்ப அருமையான பயணம்..எங்களுக்கு எல்லாம் இது எந்த அளவு வாய்க்கும் ன்னு தெரில..ஆன உங்க பதிவின் வழி நிறைய பார்த்து , படித்து அறிந்துக் கொண்டேன்..

எத்தனை பிரமாண்டங்கள் ..மிக மிக மகிழ்ச்சி...சந்தோசம்...