Monday, August 15, 2016

ஒப்பிலியப்பன் கோவில் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 73)

கிழவன் வந்து பொண்ணு கேட்டால், முடியாதுன்னு தைரியமாச் சொல்லாம, எம் பொண்ணுக்கு உப்புப் போட்டுச் சமைக்கத் தெரியாதுன்னு ..... இதெல்லாம் ஒரு  சாக்குப் போக்கா.........
மார்கண்டேய மகரிஷிக்குக்  குழந்தை வேணும் என்று தோணுச்சு. பெருமாளை மனதில் இருத்தித் தவம் செய்யறார்.  அதே சமயம்  ஸ்ரீவைகுண்டத்தில் பூமா தேவிக்கு  ஒரு ஆசை. பெருமாளின் மார்பில் மஹாலக்ஷ்மிக்கு இடம்  கிடைச்சது போல் தனக்கும் ஒரு இடம் வேணுமுன்னு....

("அதான் மனசில் நீ இருக்கும்போது....  மார்புலே வேற இடம் வேணுமாக்கும்?"

"வேணும்... அப்பத்தான் நான் இருப்பதும் பளிச்ன்னு வெளியே தெரியும், இல்லையா!" )


அமிர்தம் எடுக்கத் திருப்பாற்கடலைக்  கடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப  பதினாறு செல்வங்கள்  ஒவ்வொன்னா வெளியில்  வந்துச்சுன்னு  புராணம் சொல்லுது பாருங்க,  அப்போ  லக்ஷ்மி வெளியில் வரும்போது கூடவே வந்தவள் துளசி. ஒவ்வொரு செல்வமும் வரவர, இது எனக்கு  இது உனக்குன்னு  அங்கேயே பாய்ஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க தேவர்கள்.  லக்ஷ்மி வந்தவுடன், மஹாவிஷ்ணு எடுத்து மார்பில்  வச்சுக்கிட்டார். கூடவே வந்த துளசி பார்க்கிறாள்.... தனக்கு எங்கே இடமுன்னு!

"ஆல்ரெடி  இடம் போயிருச்சுங்க  துளசி.  நீங்க என்ன பண்றீங்க....   பூலோகத்துலே ஒரு  முனிவர்  பெண்குழந்தை வேணுமுன்னு  தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அவர் வீட்டுலே போய் பிறந்து வளர்ந்து வாங்க. நான்  சமயம் பார்த்து ( லக்ஸ்க்குத் தெரியாம)  அங்கே வந்து  உங்களைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்துடறேன்.  அஃபீஸியல்  மனைவி ஆயிட்டால்  இடம் தன்னாலே கிடைச்சுரும்.  போங்க... சொன்னதைச் செய்யுங்க."

"என்ன இப்படிச் சொல்லி விரட்டப் பாக்குறீங்க?  முனிவர் தனிக்கட்டையா இருக்கார்.  கைக்குழந்தையை எப்படி வளர்க்கப்போறார்? கஷ்டமாச்சே.... "

"நோ ஒர்ரீஸ். ஒரு ரெண்டு வயசுக்குழந்தை அளவு இருந்தால்  பாட்டில், நாப்பி இப்படிப் ப்ரச்சனைகள் இல்லை. ஓக்கேவா?"

"ஓக்கே!  ஆனால் எதுக்குப் பொண் குழந்தை வேணுமாம்? பேசாம  மகன் வேணுமுன்னு கேட்டால்  அவனுக்கு இவர் கற்றதையெல்லாம் சொல்லிக் கொடுத்துத் தன்  வாரிசுன்னு பெருமைப்பட்டுக்கலாமே!"

"அது ஒன்னுமில்லை. பொண் குழந்தையா இருந்தால்  அதை எனக்குக் கட்டிக்கொடுத்து, மஹாவிஷ்ணுவின் மாமனார் என்ற பெருமையைத் தட்டிக்கலாமுன்னுதான். நான் வரதக்ஷிணை எல்லாம் கேக்கமாட்டேன்னு எப்படியோ தெரிஞ்சு வச்சுக்கிட்டுத்தான் இப்படியெல்லாம் தவம் செய்யறார் போல!  சீக்கிரம் கிளம்பிப் போம்மா.... அவர்  தவத்தை முடிச்சுக் கண் திறக்கும்போது ஆஜராகிடணும், சரியா?"

கண்ணைத் திறக்குறார். அவரைச் சுத்தி அடர்த்தியா வளர்ந்திருக்கு  துளசிவனம். அதுலே ஒரு அழகான பொண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும்:-) 'பாப்பா, நீயார்? உன் பேர் என்ன? உங்க அம்மா அப்பா எங்கே'ன்னா சொல்லத் தெரியலை. தாடியும் மீசையுமா இருக்கும் முனிவரைப் பார்த்துப் பயமே இல்லாமச் சிரிக்குது குட்டிப் பொண்ணு.  துளசி வனத்தில் கிடைச்ச குழந்தைக்குத் துளசின்னு பெயர் வச்சு அவரே வளர்த்துக்கிட்டு வர்றார்.
இளங்கன்னிப் பருவத்தில்  இருக்கும்போது ஆசிரமத்துக்கு  குடுகுடு கிழவர் ஒருத்தர் வர்றார். அதிதியை வரவேற்று, உபசாரம் செஞ்சு என்ன வேணுமுன்னு (வாட் கேன் ஐ டு ஃபார் யூ?) கேட்ட  மார்கண்டேய முனிவரிடம் (இவர் என்றும் 16 வரம்  வாங்கினபடியால் சின்னப்பையனாத்தான் இருக்கார் பார்க்க, என்பதை நாம் மறந்துறக்கூடாது!) பொண்ணு உங்க தங்கையான்னு  கேட்க, 'இல்லைபா.  என் மகள்'னு சொன்னதும்,  ' அட! அப்ப உங்க  மகளை எனக்குக் கண்ணாலம் கட்டிக் குடுங்கன்னார்'.

முனிவருக்குக் கோபத்துலே உடம்பெல்லாம்  ஆவேசம் வந்தாப்லெ ஆடுது. நடந்ததைப் பார்த்துக்கிட்டு அங்கிருந்த துளசி,  வேகமாத் தன் அறைக்கு ஓடிப்போய்  கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழறாள். 'கிழவருக்கு என்னா தில்லு? 'போறகாலத்துலே'  வந்து பொண்ணு  கேக்கறதைப்பாரு......'

இவ்ளோ வயசான நீர் ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்க நினைப்பது பொருந்துமான்னு  முனிவர் கேட்கும் சமயம், 'ஏன் பொருந்தாது'ன்னு  கேட்ட கிழவர், தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டறார். ஹா... மஹாவிஷ்ணுவா!!!   அட! அவனா நீயி?

மனசுக்குள்ளே மகிழ்ந்த முனிவர்,  உடனே சரின்னுட்டா எப்படி? கொஞ்சம் பிகு பண்ணிக்கலாமுன்னு, ' குழந்தைப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாதே.... குழம்பு கறிகளில்  உப்பு எவ்ளோ போடணுமுன்னு கூடத் தெரியாது. நீர் பேசாம வேற பொண்ணைப் பாரும்' என்றதும், 'சமைக்கலைன்னா என்ன, உப்புப் போடலைன்னா என்ன? நான் உப்பில்லாமல் சாப்பிடத்தயார் ' என்று சொல்றார்.  'என் பொண்ணுக்குத் தனியா இருக்க பயம்' என்று ஆரம்பிக்கறார் முனிவர்.  'நான் கூடவே வச்சுக்கிட்டு எங்கே போனாலும் கூடவே கூட்டிக்கிட்டுப் போறேன்' னு சொல்லித் 'துளசி என்ற பூமாதேவியை இப்ப நான்  கல்யாணம் கட்டிக்கவா'ன்னார்.

முனிவர் உள்ளே போய் துளசியைச் சமாதானப்படுத்தி 'வந்தவர் வெறும் ஆசாமி இல்லை. சாமியாக்கும்'  என்று சொன்னதும் நம்பாத துளசி வெளியே வந்து பார்க்க,  கன கம்பீரமா ஜொலிக்கும் மஹாவிஷ்ணு!  அழுதபுள்ளை சிரிச்சது.  கல்யாணமும் ஆச்சு.  இது நடந்தது ஒரு  ஐப்பசி மாசம் திருவோண நட்சத்திரம் என்பதால் கோவிலில் கல்யாண உற்சவம்  வருசாவருசம் அதே நாளில்  ஜாம் ஜாமென நடக்குது. கோலாகலம். பெருமாள்  பவனியில் இங்கே தாயாரும் கூடவே போறாங்க!

இவரையும் ஸ்ரீநிவாஸன், வெங்கிடாசலபதின்னே  சொல்றாங்க. திருப்பதியில் இருப்பதுபோலவே நின்ற கோலம். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப் பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. பணக்காரர். வைரமா ஜொலிக்கிறார்!  திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு அங்கே போகமுடியாத நிலைன்னா, தென்திருப்பதின்னு இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!


ஸ்ரீநிவாசருக்குக் கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம்.   கழுத்திலும் மார்பிலுமா இடம் கொடுத்துட்டார். இப்ப திருப்தியா துளசி?  அந்த மாலை மஹாலக்ஷ்மிக்கும் சேர்த்துதான் என்பதைச் சொல்லலை போல!

பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்னு  மூவரும் 47 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க. அதிலும்  நம்மாழ்வார், இவரை  எவருக்கும் ஈடு இணை இல்லாதவர். ஒப்பு நோக்கிப் பார்க்க முடியாத  ஒப்பிலியப்பன் என்றே பாடி இருக்கார்.  108 திவ்ய தேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு.

ஆனால் இவரை உப்பியப்பன்னு சொல்லி  அதுக்கு ஒரு கதையும் பண்ணி, அதை நிரூபிக்கறதுக்காக இங்கே உப்பில்லா நைவேத்தியங்கள்னு ஆரம்பிச்சு  ஜோரா அதே போல நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.

திருவிண்ணகரம் என்ற புராணப்பெயர் இருந்தாலும் உப்பிலியப்பன் கோவில்னு சொன்னால்தான் சட்னு புரியுது நமக்கு.  கோவில் காலை 6 முதல் பகல்1 மணி வரையும், மாலை 4 முதல் 9 வரையிலும் திறந்து இருக்கு.

1.  பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல்  வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்-வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண்ணகர்

2.  விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

மேலே இருக்கும் இரண்டு பாசுரங்களும் பேயாழ்வார் அருளியது.

கூட்டமும் அதிகம். எல்லா நாளும் இப்படித்தானாம்! திருப்பதின்னு பெயர் வச்சுட்டாலே கூட்டம் சேர்ந்துருது இல்லே!

இங்கே பெருமாள்  பஞ்சகோலம் காண்பிக்கிறார். அதெப்படி பணக்காரக்கோவிலில் பஞ்ச.....ன்னு  நினைக்கவேணாம்.  ஐந்துவித கோலங்கள்! திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், என்னப்பன், முத்தப்பன், மணியப்பன்!  முத்தே மணியேன்னு செல்லம் கொஞ்சுறாப்லெ இருக்குல்லே!  இருக்கட்டும். நாமும் கொஞ்சினால் ஆச்சு:-)

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

சொல்லமறந்துட்டேனே..... இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் என்னன்னு தெரியுமா? வேற யார்? சாக்ஷாத் 'துளசி'தான்:-)

நம்ம ரெகுலர் வாசகர்களுக்கு........   எங்கியோ வாசிச்ச நினைவு வந்திருக்குமே!   அதே அதே கதை என்பதால்  ஈயடிச்சு, ஒட்டியாச். போன வருசம் இதேமாசம் ஆகஸ்ட்லே எழுதுனதுதான்:-)


என்ன ஒன்னு......  நம்ம   பூமா   நிக்குமிடம் வெறிச்.........   மார்கழி வேணாமுன்னு ஒதுக்கினதைப்போல  தை யையும்  ஒதுக்கிடணும் இனி.  கேம்ப் போயிருக்காங்க இவுங்கெல்லாம்.  இதுவரை ஒரு கோவிலில் கூட தரிசனம் ஆகலை.....  ஹூம்....   போன பயணத்துப் படத்தை இங்கே போட்டுக்கறேனே...   ப்ளீஸ்....

ப்ரசாத ஸ்டாலின் தலையில் திருவிடைமருதூர் கோவிலுக்கு வாங்கன்னு சின்னதா ஒரு 'ஆட்' போட்டுருக்காங்க!  போகணும், ஒரு முறை!
சனம் வரிசையாப்போகப் போட்டு வச்ச கம்பித்தடுப்பை ஒட்டி இருக்கும் சுவர்களில்  திருப்பாவை பாசுரமும் சித்திரமுமா இருக்கு!  சும்மா நிக்கும்போது பார்த்துப் பாடிக்கிட்டே போகலாம்.

 மூலவரைப்போய் சேவிச்சுக்கிட்டோம்.  நின்ற கோலத்தில் நிக்கறார். எப்பவும்   பெருமாளுக்கு இடப்புறம் இருக்கும் பூதேவி, இங்கே வலப்புறத்தில்! கல்யாணம் செய்த இடம் இல்லையா!   அதே கோலத்தில்தான் இப்பவும்!  மாமனார் இடப்பக்கம் உக்கார்ந்துருக்கார்!

இங்கே தாயாருக்குன்னு தனியா சந்நிதி கிடையாது.
மூலவருக்கு இங்கே ஆறு பெயர்கள்! ஸ்ரீ வேங்கடாசலபதி,  திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன்,  ஸ்ரீநிவாஸன்......

பூதேவிக்கு...? பூமிதேவி, பூமி நாச்சியார், தரணிதேவி,  வஸுந்தரை !

பிரகாரம் வலம்வரும்போது, ஸ்ரீதேசிகன் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி,  அனுமன் சந்நிதி, ஸ்ரீராமன்சந்நிதின்னு கும்பிட்டோம்.

பெருமாள் படமொன்னும்  தலபுராணம் ஒன்னும் வாங்கினார் நம்மவர். 108 பக்கங்களில் தமிழிலும், இங்கிலீஷிலுமா ஆழ்வார்கள் பாடல்களுடன் அருமையா இருக்கு!   விலை வெறும் இருபதே ரூ தான்!

கோவில் திருக்குளம் பகலிராப்பொய்கை நல்லா சுத்தமா இருக்கு!    மற்ற கோவில்களைப்போல் இல்லாமல் இரவு பகல் இப்படி எந்த நேரமும்  குளிக்கலாம் இங்கே மட்டும்.

 அஞ்சடுக்கு ராஜகோபுரம்! அழகாக இருக்கு!   கோபுரவாசலுக்கு எதிரே வலப்பக்கம் கோவில் சார்ந்த கல்யாண மண்டபம். நல்ல வசதியாம்!  அன்றைக்குக்கூட அங்கே ஒரு கல்யாணம் இருக்கு. தாலி கட்டுன கையோட சாமி தரிசனம் செஞ்சுக்கலாம்.


தாலின்னதும்தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது....  நம்ம ஒப்பிலி இருக்காரே....  அவர் பூமாதேவியான துளசிக்குத் தாலி கட்டுனார்தான். ஆனால் எங்கே? கழுத்திலா ?  ஊஹும்......... கௌதுகம் என்னும் மங்கலநாணை, பூமாதேவியின் கையில் கட்டி இருக்கார்! அப்புறம்?  அந்தக் கரம் பற்றி,  மும்முறை அக்னியை வலம்வந்து தேவியோடு நின்னு எல்லோருக்கும்  தம்பதிசமேதரரா காட்சி கொடுத்துருக்கார்!

உம் பொண்ணைக் கட்டிக்கொடும்னு கேட்டதும்,  தகப்பன் போய் பெண்ணிடம் சம்மதம் கேட்டதும் அடுத்த நொடி கல்யாணமுன்னு நினைக்கப்டாது கேட்டோ!

தகப்பன் கேக்கறார், 'பெருமாளே நான் தனிக்கட்டை. எனக்குப் பொண் மட்டும்தான் இருக்கு. நீரும் இப்போத் தனியா வந்துருக்கீர்.  போய் முப்பத்து முக்கோடி தேவர்களையும் கூட்டி வந்து அவர்கள் உதவியுடன் இந்தக் கல்யாணம் நடக்கவேணும்' என்றதும், நோ ஒர்ரீஸ் அதெல்லாம் நான் ஏற்பாடு செஞ்சுடறேன், இது  (மாப்)பிள்ளை வீட்டுக் கல்யாணம். வரும் ஐப்பசி மாசம் திருவோண நக்ஷத்திரதினம் கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொல்லிட்டுக் கிளம்பினார்.

ஈ மெயில் இல்லாத காலம் இல்லையோ? அதால் பறவை மெயிலில் கல்யாணப் பத்திரிகை அனுப்பறார்.  பெரியதிருவடியான கருடர் கல்யாண ஓலையை ப்ரம்மன்,     இந்திரன், வருணன், அக்னி   இப்படி   ஒருத்தர் விடாமப் பறந்துபறந்து  கொண்டுபோய்க் கொடுத்து  எல்லோரையும்  அழைக்கிறார்.

 மொத்த தேவலோகமும் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தாங்க.
கல்யாணப்பொண்ணுக்கு அலங்காரம் செஞ்சது, இந்திராணி, சரஸ்வதின்னு தேவலோக மாதர்கள்! அவரவர் விருப்பத்தின்படி  நகையும் நட்டுமாப் பூட்டி அட்டகாசமா அலங்கரிச்சுட்டாங்க. (மஹாலக்ஷ்மி வந்துருந்தாளான்னு  புத்தகத்தில் குறிப்பொன்னும் இல்லையேன்னு எனக்கு தாங்கல்.....)

இப்பவும் ஐப்பசி திருவோணத்தன்னிக்கு  இங்கேவந்தால்  கோலாகலமான கல்யாண உற்சவம்தான்! பார்க்கக்கொடுத்து வச்சவர்கள் பாக்யசாலிகள்!

எத்தனை முறை வந்து போயிருக்கோம். ஆனாலும்.....   திரும்பத்திரும்ப வர வச்சுடறான்:-)  ஆனால்....  எல்லாம்சாதாரண நாட்களில்தான் கேட்டோ!

ரொம்பநேரம் போக்காமல்,  வெளிச்சம் இருக்கும்போதே அடுத்த கோவிலுக்குப் போகலாமா?


தொடரும்..........:-)




17 comments:

said...

சிறு வயதில் அப்பா-அம்மாவுடன் இக்கோவிலுக்குப் போனது கொஞ்சமாக நினைவில். அதன் பிறகு போகவில்லை. ஒரு முறை சென்று வர வேண்டும்.....

தொடர்கிறேன்.

said...

உப்பில்லாப் பண்டம் குப்பையிலேன்னு பழமொழி. இங்க உப்பில்லாப் பண்டம் good பையிலே.

இறைவனுடைய பெயர் ஒப்பிலியப்பன். உப்பிலியப்பன்னு பேச்சு வழக்குல மாறி.. உப்பில்லாத கதை உள்ள வந்ததாகப் படிச்சிருக்கேன்.

லபதி சுவாமின்னு போட்டோ போட்டிருக்கே. அது என்ன சாமி?

இதுவரை போகாத கோயில். போக வேண்டும்.

திருவிடைமருதூர் போனீங்களா?

said...

நன்றி. தொடர்கிறேன்.

said...

என் வீட்டுல உள்ளவங்களுக்கு குலதெய்வம். பல முறை சென்றிருக்கிறோம். காப்பி பேஸ்ட் பண்ணினாலும் திருப்பியும் படிப்போம். 'லபதி சுவாமி' - வெங்கடாசலபதிதான். இங்கு சிரவண விரதம் அப்புறம் சிரவண தீபம் முக்கியமானது. சிரவணதீபத்தன்னைக்கு தீபம் ஏற்றிவருபவர், சில சமயம் பக்தர்களின் குறைக்கு வழி சொல்லுவார். அது பெருமாளின் வாக்கிலிருந்து வருவதாக பக்தர்கள் எண்ணுவர்.

said...

பக்கத்திலயே சனி பகவானுக்கு சாந்தி பண்ணுகிற கோவில் ஒன்று இருந்ததாக ஞாபகம். திருநாகேஸ்வரம் என்று நினைக்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு ரெண்டுநாள் கும்பகோணத்துலே தங்கறாப்லெ போயிட்டு வாங்க. ஏகப்பட்ட கோவில்கள். உங்க கேமெராவுக்குத்தீனி போட தாராசுரம் வேற இருக்கு!

நானும் ஒரு வாரம் தங்கணுமுன்னு ஒரு ப்ளான் வச்சுருக்கேன். நல்ல ஹொட்டேல் இருக்கு என்பது ஒரு கூடுதல் மகிழ்ச்சி :-)

said...

வாங்க ஜிரா.

ஹாஹா.... எலக்ட்ரானிக் போர்டுலே எழுத்து ஓடிக்கிட்டு இருக்கு. அதான் சலபதியிலே ச ஓடிப்போயிருச்சு க்ளிக்கும்போது :-)

எல்லாத்துக்கும் கதை பண்ணிட்டு வுட்ருவோமா? அதை நிரூபிக்கவும் மாட்டோமா என்ன :-)

உப்பிலி.......

திருவிடைமருதூர் இன்னும் போகலை. போகணும்.

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வது 'மகிழ்ச்சி'!

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

ஒரே கோவில் ஒரே கதை! எத்தனை முறை போனாலும் மாறவா போகுது? நம்மில்நாமே சுட்டுப்போட்டால் தப்பில்லை என்ற கணக்குதான்:-)

சிரவணதீபம்.... ஓ புதுத்தகவல். !!!!! நன்றீஸ்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

திருநாகேஸ்வரம்.... ராகு பகவான் கோவில். நவகிரக யாத்திரை என்றால் அங்கே கட்டாயம் போகணும். நாங்க ஒரு 7 வருசத்துக்கு முந்தி போயிருக்கோம்.

ரெண்டுகோவிலுக்கும் இடைவெளி 750 மீட்டர்தான்!

said...

நானும் இந்தக் கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் எல்லாம் ஆகி வெளி வர மதியம் 12 ஆகிட்டது. சனிக்கிழமை விரதம் காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்ததால், சரின்னு மடப்பள்ளியில் தத்தியோணம்,பொங்கல்,முறுக்கு மற்றும் வடை வாங்கி குளக்கரையில சாப்பிட உக்காந்தால் எதுலையும் உப்பு இல்லை. வந்த கடுப்புல யோவ் உங்கத்துக்காரிக்கு சமைக்கத் தெரியலைன்னா, நீங்க உப்பு இல்லாம சாப்பிடுவது நியாயம், அதுக்காக நானுமா?. என்று கேட்டுவிட்டேன். அங்க குங்குமம் கொடுப்பாங்களே, அரக்கு கலர்ல ஒரிஜினல் கெமிக்கல் இல்லாம நல்லா இருக்கும்.

said...

நாங்க இரு வருசத்துக்கு முன்னே போனது...ரொம்ப அருமையா இருந்தது...

பிரகாரத்தில் உள்ள படங்களும் ரொம்ப அழகு...இன்று பார்த்தது போல் நினைவில்..

said...

//பெருமாள் படமொன்னும் தலபுராணம் ஒன்னும் வாங்கினார் நம்மவர்.//

படிச்சுப்பாருங்கள். திருமழிசையாழ்வாரின் ஒப்பிலியப்பன் கோயில் கதை இருக்கும். உணர்ச்சிகரமான கதை.

said...

வாங்க பால சுந்தர விநாயகம்.

ஏழெட்டுமுறை புத்தகத்தைப் பக்கம்பக்கமாப் பார்த்தும் திருமழிசை ஆழ்வார் கதை இல்லையே......

பேயாழ்வார், பொய்கை ஆழ்வார்,நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் என நான்கு ஆழ்வார்கள்தான் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்கன்னு 'புத்தகம்' சொல்லுதே!

அது என்ன கதைன்னு சுருக்கமா நீங்களே சொன்னால், தெரிஞ்சுக்குவோம். நன்றி.

said...

திருவிடைமருதூர் கோவிலுக்கு வாங்கன்னு சின்னதா ஒரு 'ஆட்' போட்டுருக்காங்க! போகணும்,/ திருவிடைமருதூரில் மஹாலிங்கஸ்வாமி அல்லவா. 108 திருப்பதிகளுள் வராதே?

said...

உப்பிலியப்பன் கோவில் தகவல்களை தெரிந்து கொண்டேன்..

said...

இந்த கதையின் மூலம் , ஞானிகள் சொல்லவரும் கருத்து என்ன ஐயா? உப்பில்லாமல் உணவு சாப்பிட சொல்றாங்கலா? அல்லது பூமியில் விளையும் எந்த உணவு பொருளிலும் உப்பு இல்லையே அதை குறிக்கிறதா? வேறு என்ன சொல்ல வராங்க.