Monday, December 19, 2016

ஓங்கி உலகளந்த உத்தமனைத் தேடி..... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

கரும்பு இனிக்குதா?  ஆலைக்குப் போகும் கரும்பு வண்டி......யில்....
போகும் வழியில் எதாவது சாவு எதிரில் வந்தால் சகுனம் ரொம்ப நல்லதாமே! அதுக்காக யாராவது  செத்து எதிரில் வரணுமா?    சொர்க ரதம்  ஆளில்லாம எதிரில்   வந்தாலும்  சகுனம் நல்லதுன்னு  நினைச்சுக்கிட்டா என்ன தப்பு?
காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் கடந்து மூணாவது நிமிட்லே கண்ணில் பட்ட சொர்கரதம்..........  அட...  போகட்டும்.....    திருவெண்ணைநல்லூர் என்ற பெயர்  ரொம்பத் தெரிஞ்சமாதிரி இருக்கே......
எங்கே கேட்டோமுன்னு  கொஞ்சநஞ்சம் இருக்கும் மூளையைக் கசக்கிக்கிட்டே இருந்ததில்....   கொஞ்சம்  மனசுக்குள் வெளிச்சம் வந்துச்சு....  பித்தா பிறை சூடி.... திருவருட்செல்வர்  படத்தில்  சிவாஜி பாடும் ஸீன் ஒன்னு  இருக்கே....  உண்மையைச் சொன்னால்  இது தேவாரப்பாடல். அதென்னவோ சினிமாவில் வந்துட்டால்தான் மனசில் படியுதோ?  எப்பப் பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு....  

இப்படி வேண்டாத நினைவுகளில் இருந்தப்ப.... திருக்கோவிலூர் நேராப் போ. 25 கிமீ என்ற நெடுஞ்சாலை போர்டுலே  இடதுபக்கம் 600 மீட்டரில் திருவெண்ணெய்நல்லூர் இருக்குன்னும் போட்டுருக்கு.   வெறும் அறுநூறுன்னால்  அங்கே  போயிட்டுப் போகலாமேன்னு சொன்னப்ப, 'நாம் திரும்பி இதே பாதையில்தான்  ஹைவேயில் போய்ச் சேர்ந்துக்கணும். அதனால் அங்கே முடிச்சுட்டு இங்கே வரலாமு'ன்னு சொன்னார் நம்மவர்.

ஒவ்வொருமுறையும் இந்தப் பக்கம் விழுப்புரம் வழியாகப் போகும்போதும்   வரும்போதும் தவறவிட்ட கோவில் இது. 108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்னு  என்பதால் கட்டாயம் போகணும்தான். ஆனால் வேளை இப்பதான் வாய்த்தது.  விழுப்புரத்தில் இருந்து உள்ளே ஒரு 37 கிமீ போகணும் என்பதால்.... தள்ளிப்போய்க்கிட்டு இருந்தது.....

மாலையில் கோவில் திறக்கும் நேரம் நாலு மணி என்பதால், அதுக்கேத்தமாதிரி  ஸ்ரீரங்கத்தில் இருந்து மதியம் ஒருமணிக்குக் கிளம்பி வரலாம்னு பக்கவா திட்டம் போட்டுருந்தார் நம்மவர். அதே போல   ரொம்ப தூரத்தில் கோவில் கோபுரம் கண்ணில் பட்டபோது மணி 3.51 !


தமிழ்நாட்டில் இருக்கும் வைஷ்ணவக் கோவில்களின்     உயரமான கோபுர வரிசையில் இதுக்கு மூணாவது இடம்! 192 அடி உசரம்! ( நம்பர் 1 ஸ்ரீரங்கம் 236 அடி.    அடுத்து ரெண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர், 193.5  அடி)
பதினொரு நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே போறோம்.  அடுத்த பிரகாரமே தெருவாட்டம்தான் இருக்கு.   இது தெரியாமல் வழக்கம்போல காருக்குள் காலணிகளைக் கழ்ட்டிப்போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சது  கொஞ்சம் கஷ்டம்தான்.   நீளமண்டபத்தின் ஆரம்பத்துலே  'கட்டி'க் கற்பூரம் திகுதிகுன்னு எரியும் சட்டி வழியில் உக்கார்ந்துருக்கு!



அடுத்த கோபுரவாசல் வழியா கோவிலுக்குள் போறோம்.
பெரிய மேடையுடன் கொடிமரமும்  பலிபீடமும்!   கருவறை நோக்கிப் பாயறேன்....  ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் உள்ளே இருக்கானே!

விக்ரமனும் 20 அடி உயரம். மரச்சிற்பம்!   வலது காலை சரியா இடுப்புவரை உசத்தி நீட்டி நிக்கறார்.  அளந்து பார்த்தால் ஒரு கோணம்தான்,  110 டிகிரி வரும் !  பாதம் மட்டும் உசத்திக் காமிக்க, பிரம்மன்  கங்கையை எடுத்து அபிஷேகம் பண்ணறார். வழக்கமான சங்கு சக்ரம் இடம்மாறி இருக்கு.  வலது கையில் சங்கு!  பூம்...............பூம்..........
'நின்ற, இருந்த, கிடந்த'ன்னு மூணு கோலங்களில்  பொதுவா சேவை சாதிக்கும் பெருமாள் இங்கே நடந்த கோலம் என்றும் சொன்னாங்க.  இப்படிக் கால் தூக்கி எப்படி நடக்க முடியும்?  ராணுவ வீரர்களில் ஒரு பிரிவு  இப்படித்தான் லெஃப்ட் ரைட் போட்டு நடப்பாங்கன்றது நாம் முந்தி அம்ருத்ஸர் பயணத்தில்  வாகா பார்டர் போயிருந்தப்ப, பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நடத்தும் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் பார்த்தமே!  அதைப்போலவா? ஹாஹா.....
இதைப்போல நின்றபடி நடந்த பெருமாள் சிலை ரொம்பவே அபூர்வமுன்னும் ஒரு பேச்சு.  காஞ்சிபுரம் உலகளந்தார் கோவிலில் பார்த்துருக்கோம்.  அங்கே சிலையின் உயரம் 30 அடி!  ஆனால் கற்சிலைதான்.   மரசிலை என்ற கணக்கில் இதுதான்  உலகிலேயே  நடந்த கோலங்களில் பெருசுன்னு ஒரு பெருமையும் லபிச்சுருக்கு!  ஆகக்கூடி ரெண்டு இடங்களில்தான்   தனிப்பட்ட கோவில்கள் என்று சொன்னாலும்....  நம்ம திருநீர்மலையில் நடந்த கோலம் காமிக்கும் சிலை இருக்கே!  அங்கே 'நின்ற கிடந்த  இருந்த நடந்த'ன்னு நாலு வகைகளையும் ஒரே கோவிலில் பார்க்கலாம் என்பது இன்னும் விசேஷம் இல்லையோ!

அது இருக்கட்டும்.... இப்ப எதுக்காக இந்த நடந்த கோலமாம்?   கதைக்குள் போகலாமா?  மஹாபலி ஆட்சி காலத்துக்குப் போகணும் இப்போ!

 ஏற்கெனவே  நம்ம துளசிதளத்தில் சொன்ன கதைதான். அதில் ஒரு மாற்றமும் இதுவரை இல்லை என்பதால்  அங்கே இருந்தே எடுத்துக்கலாம்.
புது வாசகர்களுக்குக் கொஞ்சம் சுலபமா இருந்துட்டுப் போகட்டும் :-)

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்கவழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டுஇருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோடகணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னாஎனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார். ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி (தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்) தண்ணி ஊத்த கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார். ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச்சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! 

அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்தவளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது.திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?

மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜாமகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார். 

( வீடுங்களிலேஎப்பவாவது, சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம கைவேலையா இருக்கறப்ப யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னேகேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்             ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது. ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர்தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு. 

அப்படி அவர் வர்ற  தினம்தான் நாம் ஓணப்பண்டிகை கொண்டாடும் நாள்!   மேலே போட்டுருக்கும் கதை   கிபி 2005 வது வருசம் ஓணப்பண்டிகைக்கு எழுதுன பதிவில் இருந்து  காப்பி அண்ட் பேஸ்ட், கேட்டோ!

அந்த சம்பவம் நடந்த ஸீன்தான் இங்கே கருவறையில்!  ஆமாம்.... எப்பவோ வாமன அவதாரக் கதையை, ' நடந்தது என்ன?'ன்னு  இப்போ காமிக்கவேண்டிய அவசியம் என்ன?

மிருகண்டு மகரிஷிக்கு,  வாமனர் எப்படி விஸ்வரூபம் எடுத்து த்ரிவிக்ரமனா ஆகி  மூவுலகத்தை அளந்தார்னு  பார்க்கணுமாம். அதுக்காகத்  தவம் இருக்கார்  மனைவியோடு!   பலகாலம் இப்படித் தவம் இருந்தபின்  பெருமாள் உலகளந்த கோலத்தில் இப்படி காட்சி கொடுத்துருக்கார். முனிவரின் விருப்பப்படி,  அப்படியே இருந்து நமக்கும் அருள் செய்கிறார்!

வலதுகால் இடுப்புயரத்துக்குமேல்  தூக்கி நீட்டிக்கிட்டு இருக்க, இடதுகால் ஒரு தலையை அழுத்திக்கிட்டு நிக்குது.  யாரோட தலை?  மஹாபலியின் தலைதான்...  பூமிக்கு அடியில் இருக்கும் பாதாளலோகத்துக்கு  அனுப்பிக்கிட்டு இருக்கார். பக்கத்துலே ஒரு உருவம் கைகூப்பி நிற்குதேன்னு பார்த்தால் மஹாபலியின் மகன்  நமுசி !  பெரியபிராட்டி, அசுரகுரு சுக்ராச்சாரியார், மிருகண்டுமுனிவரும், அவர் மனைவியும், மற்றும் முதலாழ்வார்கள் என்னும் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் என்னும் மூவர்னு கருவறைக்குள்ளே ஒரே கூட்டம்!

இந்த முதலாழ்வார் மூவரும்  இங்கே இதே ஊரில்தான் கடைசி காலத்தில் ஒன்னாகவே வாழ்ந்து, பரமபதத்துக்குப் போயிருக்காங்க. இவுங்க மூணுபேரும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில், அடுத்தடுத்த கிழமைகளில் பிறந்துருக்காங்க. திருவோணம், அவிட்டம், சதயம். செவ்வாய் புதன் வியாழன் இப்படி. ஒரே வருஷமா இல்லை வெவ்வேற வருஷமான்னு தெரியலை. ஆனா வெவ்வேற ஊரில் பிறந்துருக்கணும். ஏன்னா இங்கே திருக்கோவிலூரில்தான் முதல்முதலா சந்திச்சாங்களாம் இந்த மூணு பேரும்!

பெரிய மழை நாளில் பொய்கை ஆழ்வார், இந்தப்பக்கம் பயணம் செஞ்சு வந்தவர் தங்க இடம் கேட்டு மிருகண்டு மஹரிஷியின் ஆஸ்ரமத்துக்குப் போயிருக்கார். இந்தக் கால ஆஸ்ரமங்களா என்ன....  அரண்மனை மாதிரி இருக்க?   இத்துனூண்டு இடைக்கழியில் இடம் கிடைச்சது. ஜஸ்ட் ஒருத்தர் கால்நீட்டிப் படுக்கலாம். ராத்திரி என்பதால் இருட்டு  வேற!

 கொஞ்சநேரத்துலே இன்னொருத்தர் வர்றார்.வந்தவர் பூதத்தாழ்வார்.   அவருக்கும் தங்க இடம் வேணுமாம். வேற இடம் ஏது? இங்கேயே ரெண்டுபேருமா உக்கார்ந்துகலாமுன்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க. அப்ப வர்றார் பேயாழ்வார்.  மூணு பேர் உக்கார இடம் போதாது. அப்படியே நின்னுக்கலாம்னு நெருக்கியடிச்சு நிக்கறாங்க.  யாரு என்னன்னு பேசிக்கிட்டு இருந்துருக்கலாம்.... அப்பப் பார்த்து  இன்னொரு ஆள்  அதே இடத்துக்குள்ளே நுழைஞ்சு நெருக்கறமாதிரி மூணுபேருக்குமே தோணுச்சு.
 கும்மிருட்டில் யார் ஓசைப்படாம உள்ளே நுழைஞ்சான்னு  தெரியலையே....ன்னு யோசிக்கும்போதே  பேரொளியோடு பளிச்னு பெருமாள் காட்சி கொடுக்கறார்!  பிரமிச்சுப்போன மூவரும்  அப்பவே பெருமாளைப் போற்றிப் பாடறாங்க!  ஆளாளுக்கு  நூறு என்ற கணக்கு!

 இந்த  முன்னூறு பாடல்களுடன் ஆரம்பிச்சதுதான் நாலாயிரப் பிரபந்தமுன்னு இப்ப நம்ம கொண்டாடுற திவ்யப் பிரபந்தங்கள்.  மொதமொதல்லே பாடின இடமுன்னு  திருக்கோவிலூருக்கு இன்னும்  ஒரு பெருமை கிடைச்சது!
இடைக்கழியை தேஹளின்னும் சொல்வாங்களாம். அதனால் இங்கே  காட்சி கொடுத்த பெருமாளுக்கு  தேஹளீசப் பெருமாள் என்ற பெயரும்  அமைஞ்சு போச்சு.   இங்கத்து உற்சவமூர்த்திக்கு  இந்தப் பெயர்தான்!  உற்சவத்தாயார் புஷ்பவல்லி!  முதலாழ்வார்களான இந்த மூவரும் கடைசி காலம்வரை இங்கேயே இருந்துட்டாங்க. அதான் கருவறையிலும் நிக்கறாங்களே!
தீபாராதனையில் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். கூடவே குழுமி இருக்கும் மற்றவர்களையும் பட்டர்ஸ்வாமிகள் விளக்கினார்.

 முகம் பச்சை வண்ணத்தில் இருக்கு. சட்னு பார்க்கும்போது கதகளி அலங்காரம் போல இருந்தது.  அப்புறம் விசாரித்ததில்  பெருமாள் சிலை, மரச்சிலையாம். தாரு மரம்.  இதைத்தான் தேவதாரு மரம்னு சொல்றோமோ!  முந்தியெல்லாம் கலர் இல்லாமல் இருந்துருக்கார்.
இப்ப சில வருசங்களாத்தான்  கேரளாவில் இருந்து பச்சிலை மூலிகைகள் கொண்டுவந்து  பூசி வச்சுருக்காங்களாம்.  ஓ.... கேரளாவா? அப்ப நான் கதகளி  மேக்கப்ன்னு நினைச்சது  உண்மை :-)
அஞ்சு ஏக்கரில் இருக்கும் கோவில் இது. தாயார் சந்நிதிக்குப்போய் ஸேவித்தோம். பூங்கோவல் நாச்சியார்!  பிரகாரம் சுற்றி வந்தோம். லக்ஷ்மிநாராயணர், சேத்ரபாலனா நிற்கும் ஸ்ரீவேணுகோபாலன், அப்புறம் பெருமாள் கோவில்களில் வழக்கமா இருக்கும் மற்ற சந்நிதிகள்னு போய்க் கும்பிட்டாச்சு. ஆனால் ஆண்டாள் சந்நிதியைப் பார்த்த ஞாபகம் இப்போ இல்லையே.......  ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரைப் பாடியவளாச்சே  நம்ம ஆண்டாள்!

ஆமாம். ஆனால் அது  இவரைப்பற்றி இல்லையாமே!  காஞ்சிபுரத்து உலகளந்தானையாமே!  நெசமாவா?  இப்பதான் ஞாபகத்துக்கு வருது , காஞ்சியில் இடக்காலை தூக்கி நிற்கிறார்.  இடுப்பில் இருக்கும் வஸ்த்திரம்  மடிப்பு மடிப்பா   என்ன அழகா இருந்தது தெரியுமோ?  மொதல்முறை பார்க்கும்போது எண்ணெய்க்காப்பு முடிஞ்சு  மூலவரின் திரையைத் திறந்தநாளா அமைஞ்சு போயிருந்தது.   மினுமினுன்னு என்ன ஒரு  ஜொலிப்பு! இப்ப நினைச்சாலும் அது மனக்கண்ணில் வந்து நிக்குதே!  அதுக்கப்புறம்  போன பயணங்களில் அந்த ஜொலிப்போடு பார்க்கவே இல்லை :-(

ஹ.....ங்....  சொல்ல வந்ததை விட்டுப்புட்டேன் பாருங்க.....  உண்மையா நடந்த எபிஸோடில்  தூக்கின கால்    வலதா இடதா?
யோசிச்சுக்கிட்டே நின்னால்....   இருட்டிரும்.....   வாங்க   வழியில் போகணுமுன்னு நினைச்ச  டிவி நல்லூர் போகலாம் :-)

 தொடரும்...........  :-)



Friday, December 16, 2016

ஒரு கோபுர தரிசனம் ஒரு கோடி புண்ணியம். அப்ப 21 கோபுரதரிசனத்துக்கு எத்தனை கோடியோ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 107)

தளதளன்னு கீரைக்கட்டு!   வாங்கிட்டு போம்மான்னு  கீரைக்காரம்மா  சொன்னாலும்....  ஹயக்ரீவாவில் சமைக்க விடுவாங்களான்னு  தெரியாதே....  கண்ணால் தின்னுட்டுக் கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனேன்.


ஒவ்வொரு கோபுரவாசலைக் கடக்கும்போதும் உள்ளே இருக்கும் சிற்பவேலைகளை நின்னு ரசிக்க முடியாத நிலை. எதோ சாதாரண வாசலைப்போல தாண்டி வரணும்:-(  நிக்க முடியாதபடி ரெண்டு பக்கமும்  தரையில் சாக்கை விரிச்சு எதோ ஒரு வியாபாரம் .........  இதுலே டு வீலர்களின் போக்குவரத்து வேற.  போதாததுக்கு வண்டிகளை அங்கேயே நிறுத்தி வச்சுக்கறாங்க.    :-(



 முதல்வேலை முதலில்னு நேராப்போய் கேமெரா டிக்கெட்  ஒன்னு.  தினமும் இப்படித்தான்.  பசி அடங்கலையாமே அதுக்கு :-) மேலே போய் கோபுர தரிசனம் பார்த்தாச்சான்னு கேட்டாங்க கவுண்டரில் இருந்தவங்க. தினமும்  கெமெரா டிக்கெட் மூலம்,  அவுங்களோடு ஒரு பழக்கம் உண்டாகி இருந்துச்சு. போனமுறை பார்த்ததுதான். இந்த முறை  வேணுமான்னு யோசிக்குமுன் நம்மவர் ரெண்டு டிக்கெட் வாங்கிட்டார். மேலே போனோம்!
கோபுரதரிசனம் கோடி புண்ணியமாம். ஒரு கோபுரத்துக்கே  கோடின்னா....  இங்கே  ரங்க விமானத்தையும் சேர்த்து  இருபத்தியொரு கோடி  நமக்கெல்லாம் கிடைச்சுருச்சு:-)
எப்படி ஒரு வரிசையில்  கூட்டல்  குறி போலக் கட்டி இருக்காங்க பாருங்க.  அதிலும் ரங்கவிமானம் நடுநாயகமா  இருக்கு!!


போனமுறை  நகர்ந்தும், உடைஞ்சும் போயிருந்த  டைல்ஸ் எல்லாம் மாற்றி  ரிப்பேர் வேலை நடந்துருக்கு!  போன வருச கும்பாபிஷேகத்துக்கு வேலையை முடிச்சுட்டாங்களாம். சேதி சொன்னது ராணி! மேல்தளத்தைக் கூட்டிப்பெருக்கி சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ராணியம்மாள். எனக்கும் அறுபத்தியோரு க்ளிக்ஸ் ஆச்சு :-)


அங்கங்கே போட்டு வச்சுருக்கும் ஒயர்களையும், கேபிள்களையும்  ஒரு ஒழுங்குமுறையில் வச்சுப் 'பிடிப்பிச்சு இருந்தால்  கொள்ளாம்' என்று எனக்கொரு தோணல்.   தளத்தில்  இன்னும் மேலேறிப் பார்க்கும் படிகள் அஞ்சாறு என்றாலுமே  ஒரு   கைப்பிடி வச்சுருக்கலாம். சின்னப்பிள்ளைகள் பாதுகாப்பு முக்கியமில்லையோ!  காத்துதான் அப்படித் தள்ளுதே!


 மேலே இருந்து  உள் ஆண்டாள்  சந்நிதி, ரெங்கவிலாஸ் மண்டப முற்றம் எல்லாம் பார்க்கும்போது  வித்யாசமா ஒரு தோற்றம். இந்தாண்டை புதுசா ஒரு  கட்டடம் முளைச்சுருக்கு. என்னன்னு போய்ப் பார்க்கணும்....


கீழே  போய்ப் பார்த்தால் இது புது சாப்பாட்டுக்கூடம்!  இப்பதான்  ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னால்(15-9-2015) 'அம்மா' திறந்து வச்சுருக்காங்க 'அண்ணா'வின் பிறந்த தினத்துலே!!!!



நல்ல வசதியான பெரிய கூடம். பந்தி ஆரம்பிக்குமுன் காத்திருக்க ஒரு இடம், சாப்பிடும் கூடமுன்னு ரெண்டு பகுதிகளா  நல்லாவே இருக்கு!  பகல் பத்து  மணியில் இருந்து  பந்தி ஆரம்பிக்குமாம். ஒரே சமயத்தில் 250 பேர் சாப்பிடலாம், இன்னொரு 250 பேர் அடுத்த பந்திக்குக் காத்திருக்கும் வசதின்னு அருமையாக் கட்டி இருக்காங்க. காத்திருப்போருக்குப் பொழுது போகணுமேன்னு  டிவி வச்சுருக்காங்க அந்த வெயிட்டிங் ஹாலில்!  சாமி சமாச்சாரமான படங்கள் கோவில் விஷயங்கள் இப்படி அதுலே ஓடும். எதானா என்ன.... நம்ம மக்களுக்கு டிவின்னு ஒன்னு இருந்தால் போதாதா  என்ன?  நானும் பல இடங்களில் பார்த்துருக்கேன்.... ஆள் இருக்கோ இல்லையோ   டிவி மட்டும்  ஓடிக்கிட்டே இருக்கும் !  சில வீடுகளிலும் இப்படித்தான்....  :-(

இந்தப் புதுக் கட்டடம் கட்ட 1.6 கோடி செலவாம்.  பழைய அன்னதானக்கூடத்தை வேற எதாவது அலுவலுக்கு மாத்தப்போறதாப் பேச்சு.  பழைய அன்னதானக்கூடம்  கோவிலின்  கிழக்குப் பகுதியில், வெள்ளைக்கோபுரம் இருக்கே அந்தப் பக்கம்தான் இருந்துச்சு. அவ்வளவா வெளிச்சம் போதாத இடம்தான்.  அப்போ 2012 இல்  எடுத்த படம் ஒன்னு கீழே இருக்கு பாருங்க!

அடுத்து  இந்தப்பக்கம் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதிக்குப்போய்  தூமணி மாடத்து பாடி (மனசுக்குள்ளில்தான்!)ஆண்டாளை ஸேவிச்சுக்கிட்டு  அடுத்தாப்லே இருக்கும் கலைப்பொக்கிஷங்களையும் க்ளிக்கி முடிச்சேன்:-)உடைஞ்சு போன (உடைக்கப்பட்ட) சிலைகளை சீர்படுத்தறோமுன்னு  சிமெண்டைப்பூசி வச்சுருக்காங்க.  இதுக்கு அப்படியே விட்டுருந்தால் கூட நலம்.......  ப்ச்....
வேணுகோபாலனின் சந்நிதி இதுக்குள்ளே! உள்ளே போய்  கும்பிட்டோம். சீரங்கத்துக்கோவிலுக்குள்ளே கலைநயம் அதிகமா உள்ள சிற்பங்கள் இருக்குமிடம் இந்த வேணுகோபாலன் சந்நிதியும், சேஷராயர் மண்டபமும்தான்!  எத்தனை முறை பார்த்தாலும் புதுமை! நம்ம கெமெராவுக்கோ  ஆசை அடங்கறதில்லை...........
குழலூதும் வேணுகோபாலன் சங்கு சக்ரங்களுடன்!
அடுத்த பக்க வழியா வெளியேறினதும் சக்கரத்தாழ்வார் சந்நிதியாண்டை  வந்துட்டோம்.

கோபுரதரிசனங்களையும்,  வேணுகோபாலன் சந்நிதியையும் தனித்தனி ஆல்பமா ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுட்டு  இங்கே லிங்க் கொடுக்கப்போறேன்.  ஹம்மா..... என்ன  அழகு.... என்ன  அழகு!  கொடுத்தாச்!  எல்லாம் அப்படிக்கப்படியே....  அன் எடிட்டட் !!!

கோபுரதரிசனம்....  நம் பார்வையில் :-)


வேணுகோபாலன் சந்நிதி  !!!

 அங்கிருந்து நேரா நடந்தால் ஆர்யபடாள் வாசல்.  விடுவிடுன்னு நேராப்போய்க் கொடிமரத்தாண்டை ஆரம்பிக்கும் வரிசையில் போய் நின்னுட்டார்  நம்மவர்.  எதுக்குன்னதுக்கு,  மத்யானம் கிளம்பிடப்போறோம். இன்னொருக்காப் பெருமாளைப் பார்த்துடலாமாம். இது இருநூத்தியம்பது ரூ வரிசைன்னால்....  'போயிட்டுப்போறது போ...... ஏன் இப்படிக்  கஞ்சத்தனமா  இருக்கே?'ன்னு எதிர் கேள்வி.

ஒருமணி நேரம் வரிசையில் நின்னு பெருமாளை  கால் நிமிசம் கண்டு  வெளியே வந்தோம். போயிட்டு வரேன்டான்னு  சொல்ல மறக்கலை.  இன்னும் ஒரு சுத்துன்னு  மேலப்பட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார்கள் சந்நிதி, தன்வந்த்ரி, பரமபத வாசல், சந்திரப்புஷ்கரணி, வாசுதேவப்பெருமாள், உக்ரநரசிம்மர், கம்பர் மண்டபமுன்னு  இப்படியும் அப்படியுமா இலக்கு இல்லாமல் போனேன். பேய்க்கு வாழ்க்கைப்பட்ட    நம்மவர் ஒன்னும் சொல்லலை....  கூடவே வந்தார் :-)
தாயார் சந்நிதியில் கட்டணமில்லா தரிசனத்துலே ' நம்ம  அம்மா 'வைக் கும்பிட்டோம். ஹஸ்பெண்ட் பண்ணும் அடாவடியைக் கேக்கமாட்டாளாமே!
அஞ்சுகுழி மூணுவாசலில் இன்னொரு ட்ரை :-)

இன்றே இப்படம் கடைசின்ற நினைப்பு வந்ததும் சும்மானாச்சுக்கும் இன்னொருக்கா இன்னொருக்கான்னு  திறந்துருந்த சந்நிதிகளுக்குள்ளில்  போய் வந்தேன்.  இவர் அங்கங்கே  உக்கார்ந்து  செல்லை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துட்டு நான் திரும்பினதும் என்னோடு கிளம்பிருவார்.

அரங்கனின் பிரசாதவகைகளைப் படிச்சுட்டு அப்படியே ரெங்கவிலாஸ் மண்டபத்தின் கடைசியில் இருக்கும் பிரஸாத ஸ்டாலுக்கு  வந்துருந்தோம். மணி பனிரெண்டேகால் ஆச்சு. இங்கேயே எதாவது பிரசாதம் வாங்கி லஞ்ச் முடிச்சுக்கலாமான்னு  கேட்டவருக்கு  ஓக்கே சொல்லிட்டு, என்ன இருக்குன்னு ஆராய்ந்ததில்  தோசை, மிளகுவடைன்னு இருந்தாலுமே எனக்கொன்னும் சரி வரலை.

ஹயக்ரீவா திரும்பி, பாலாஜி பவனில்  அதே தயிர் சாதம்.  ஆச்சு. ஒரு மணிக்குக் கிளம்பறோம். பைபை ஸ்ரீரங்கம்தான்.

 மூணு மணி நேரப் பயணத்தில் இன்னொரு திவ்யதேசம் போக ரெடியா இருங்க:-)

தொடரும்...........  :-)