உடையாளூர் பள்ளிப்படையிலிருந்து திரும்பி வரும் வழிக்காக கூகுள் மேப்பை பார்த்துக்கிட்டே வந்த நம்மவர்.... இங்கே ஒரு பெருமாள் கோவில் இருக்குன்னதும், சட்னு அந்தப் பக்கம் போகச் சொன்னேன் நம்ம விஜியை. கோவில் முகப்பைப் பார்த்தால் ஏற்கனவே பார்த்தோமோன்னு சம்ஸயம். இந்தாண்டை இருந்த போர்டு கண்ணில் பட்டது. ஆஹா.... இது நம்ம நாதன்கோவில் இல்லையோ ? திவ்யதேசக்கோவிலும் கூட....எப்படி மறந்தேன் ?
ஏதோ விசேஷம் நடந்துருக்கு போல..... கோபுரவாசலில் கட்டிவிட்ட வாழைமரமும் காய்ஞ்சுபோய்க்கிடக்கே..... சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், வாராவாரம் வெள்ளிகளிலாமே....


இந்தாண்டை சுந்தரசோழரும் அநிருத்த ப்ரம்மராயரும்.... ஆஹா.... கோவிலைக்கட்டியவர் சோழரே ! சைவம் வைணவம் என்ற பேதம் இல்லாமல் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்களை கட்டி விட்டுருக்கார் இல்லை !!!!!
ராஜகோபுரம்தான். அதிகம் கோபுரச்சிலைகள் இல்லாமல் ஸிம்பிளா நீட்டா இருக்கு. தசாவதாரச்சிலைகள் கோபுரத்தின் (நமக்கு)இடதுபக்கம். அந்த எண்ணிக்கைக்கு மேட்ச் ஆகணுமேன்னு பத்தாழ்வார் சிலைகள் வலப்பக்கம். ரெண்டு பேரை வேணாமுன்னுட்டாங்க. ரங்கனே கதின்னு அரங்கத்திலேயே இருந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரை ஒருவேளை கணக்கில் சேர்த்துக்கலை போல..... ஆனால் அந்த இன்னொருவர் யார் ? யாராக இருக்கணும்......
தசாவதாரத்துலேயாவது பத்தும் பத்து வகை. கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் இந்தப் பத்தில் புடவை கட்டிய ஆழ்வாரையும், தலையில் க்ரீடம் வச்சுருக்கும் ஆழ்வாரையும் தவிர மற்ற எட்டுபேரும் ஏறக்கொறைய ஒரே மாதிரி..... பெயர்கள் தெரிஞ்சுக்கும் அடையாளம் ஒன்னுமே இல்லை..... பெருமாளே.... இப்படிப் புலம்ப வச்சுட்டீரே..... நீரே சொல்லும்..... விடுபட்டவர்கள் யார் யார்......
கோவில் வளாகத்தின் இடதுபுறம் ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் மடம் ! ஸ்வாமிகள் இப்போ இருக்காரான்னு விசாரிக்கணும். இருந்தால்.... போய் வணங்கிவரணும். இந்தக்கோவில் , இந்த மடத்தின் ஆளுகையில்தான் இருக்கிறது.
வாசலில் இருக்கும் பூக்கடையில் கொஞ்சம் துளசி வாங்கியதும். கோபுரவாசல் கடந்து உள்ளே போனோம். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடியின் சந்நிதி சேவிச்சு முன்மண்டபத்தில் நுழைஞ்சாச்சு.
விழா நடந்ததன் அடையாளங்கள் அங்கங்கே !

கரும்பளிங்குக் கல்வெட்டில் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பத்து. இவர் மட்டும் எங்கேயும் பத்துக்குக் குறைஞ்சு பாடினதாக சரித்திரமே இல்லைன்னுதான் சொல்லணும். ஒரு பக்கம் ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளிய கீர்த்தனாவளி.
கருவறை மண்டபத்துக்குள் போனால் அதோ தூரத்தில் ஸ்ரீநிவாஸர், தேவிகளுடன் அமர்ந்த கோலத்தில் ! மேற்குதிசை நோக்கி ! உண்மையில் ஏகாந்த தரிசனம்தான் நமக்கு !!!!
மேலே படங்கள்: வலையில் கிடைத்தன. நன்றி !
மூலவருக்கு முன்னால் உற்சவர் ஜகந்நாதப்பெருமாள். இவர்பெயரில்தான் ஊரும் கோவிலும்..... ஜகத்துக்கே 'நாதன்'
நம்ம சிபிச்சக்ரவர்த்தி இருந்தார் பாருங்க. அவருக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் இவர். சிபிச்சக்ரவர்த்தியின் பெயரைக் கேட்டதும் புறாவும் மனசுக்குள் டான்னு வந்துரும், இல்லே ? சின்னவயசுலே ஆரம்பப்பள்ளியில் படிச்சவைகள் மறந்துபோவதில்லை.
ஒரு சமயம் இந்திரனும், அக்னி தேவனும் சந்திச்சுப் பேசிக்கிட்டு இருக்காங்க. உலகில் அதிகமான இரக்ககுணம் கொண்டவர் சிபி என்னும் சோழமன்னர்னு எல்லோரும் பேசுவது மெய்யான்னு பார்க்கலாமேன்னு ரெண்டு பேரும் கிளம்பி மாறுவேடத்தில் பூலோகத்துக்கு வர்றாங்க. இந்திரன் ஒரு பருந்து & அக்னி ஒரு புறா.
பருந்து புறாவைக் கொல்லப் பார்க்கும்போது, பதறிப் பறந்த புறா, கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்த சோழன் சிபியின் மடியில் வந்து விழுந்துருது. அடப்பாவமேன்னு அதைத் தடவிக் கொடுக்கும் போது பருந்து வந்து அது நான் குறி வச்ச புறா. எனக்குக் கொடுத்துருங்க. என் லஞ்ச் அதுதான் என்கிறது. புறாவோ பயந்து நடுங்கி வெடவெடக்குது.
வேற சாப்பாடு உனக்குத் தரேன். இந்தப் புறாவை விட்டுருன்னு பருந்திடம் கெஞ்ச, முடியவே முடியாது. எனக்குப் புறா இறைச்சிதான் வேணுமுன்னு அடம்பிடிக்கிறது பருந்து. (பேலியோ டயட் !) ஓக்கே... உனக்கு இறைச்சிதான் வேணுமுன்னா என் உடம்புச்சதையை இந்தப் புறாவின் எடைக்கு எடை கொடுத்தால், புறாவை விட்டுருவையான்னா... சரின்னு சம்மதிக்கிறது.
பணியாளர்களிடம் கத்தியும் தராசும் கொண்டு வரச்சொன்ன மன்னன், புறாவை தராசின் ஒரு தட்டில் உக்காரவச்சுட்டு, தன் தொடைச்சதையை அறுத்து மறு தட்டில் வச்சான். புறா இருக்கும் தட்டு கீழே ரொம்பத் தாழ்ந்து இருக்கு. அது சமன்நிலைக்கு வரணுமுன்னு கொஞ்சம்கொஞ்சமா தன் தசைகளை அறுத்து வைக்க வைக்கப் புறாத் தட்டு மேலே ஏறும் வழியைக் காணோம்!
மன்னனுக்கோ உடம்புலே இருந்த தசைகள் எல்லாம் போய் ரத்தவிளாறியாக் கிடக்கு. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச மன்னன், சட்னு தராசுத் தட்டிலே ஏறி உக்கார்ந்துட்டான். இப்ப ரெண்டு தட்டுகளும் சமநிலையில்!
'என்னையே ஆக்கித் தின்னுக்கோ'ன்னு பருந்திடம் சொல்ல, அடுத்த நொடி, இந்திரனும், அக்னியும் சுயரூபத்தில் மாறி, மன்னரை பழையபடி முழு உடலா ஆக்கி, அவன் இரக்க குணத்தைப் பாராட்டி ஆசி வழங்கினாங்க.
நம்ம ஸ்ரீநிவாஸர் சந்நிதிக்கு முன்னால்தான் சம்பவம் நடந்துருக்கு. பெருமாள் அப்போ கிழக்குத்திசை நோக்கி இருந்துருக்கார். தராசில் புறா இருந்த தட்டு கிழக்காவும், சிபி தன் தசைகளை அரிஞ்சு வச்சுக்கிட்டு இருந்த தட்டு மேற்காவும் இருந்துருக்கு. என்ன நடக்கப்போகுதோன்னு பார்க்க நம்ம மூலவர் ஸ்ரீநிவாஸர் மேற்கே திரும்பி அமர்ந்தார் என்று கதை !
கருவறையில் நந்தி இருக்கார். அதுவும் கருவறைச் சுவரில் மனித ரூபத்தில் புடைப்புச் சிற்பமாக ! எப்படி இங்கே ?
கயிலையில் சிவபெருமானுக்கு முன்னால் எல்லா முனிவர்களும் வந்து சேர்ந்து சத்சங்கத்தில், ப்ரம்ஹவிசாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அப்போ வியாஸர், ' வேதத்துக்கு மிஞ்சின எதுவுமே இல்லை. கடவுளர்களில் அச்சுதனை மிக்க தெய்வமும் இல்லை'ன்னு கையை உயர்த்திச் சொன்னதும், 'ஆமாம். அதுவே சரி'ன்னு சிவன் ஆமோதிக்கும்போது, 'என் தலைவர் இருக்கும் இடத்துக்கு வந்து எப்படி விஷ்ணுதான் முதல்வர்'னு சொல்லப் போச்சுன்னு நந்திக்கு மகா கோபம் வந்துருச்சு. தூக்கின கை அப்படியே நிக்கட்டுமுன்னு சாபம் விட்டுட்டுத் தங்கப்பிரம்பால் வியாஸருக்கு ஒன்னு வச்சார்.
சிவனுக்கு இப்போக் கோபம் வந்து நந்தியை சபையை விட்டு வெளியே போ. இனிமேப்பட்டு இங்கே வரவே வேணாமுன்னு சபை நீக்கம் செஞ்சார். சபை நீக்கம் செஞ்சதும், கேண்டீன்லே போய் சாப்பிட இது என்ன பார்லிமென்ட்டா ? ஐயோ... அபச்சாரம் பண்ணிட்டேன்னு அழுத நந்தியிடம், நீ செண்பகாரண்யம்போய் மகாவிஷ்ணுவை தியானம் செஞ்சு அவர் மன்னிச்சால் திரும்ப வரலாமுன்னு சொன்னதும் நந்திதேவர் கிளம்பி இங்கே வந்து தவம் செய்தார். அப்போ இங்கே செண்பகமரங்கள் நிறைஞ்ச காடாகத்தான் இருந்துச்சாம்.
சரி. இப்போ இன்னொரு வெர்ஷனைப் பார்க்கலாம்.
நந்தி தேவர் ஏதோ வேலையாகப் பெருமாளைப் பார்க்க ஸ்ரீவைகுண்டம் போனவர், வாசலில் காவலுக்கு இருக்கும் ஜெய விஜயர்களிடம் உள்ளே போக அனுமதி கேட்கணுமா இல்லையா? பின்னே எதுக்குக் கேட் கீப்பர் வச்சுருப்பது? அட்லீஸ்ட், நான் வரலாமான்னு எஜமானிடம் கேட்டுச் சொல்லும் என்றிருந்துருக்கப்டாதோ? சட்னு மூடி இருக்கும் கதவைத் திறந்து 'ரைட் ராயலா ' உள்ளே போக முற்பட்டதும், காவலாளிகளுக்குக் கோபம் வந்துருச்சு. இவுங்களுக்கும் தெய்வாம்சம் இருப்பதால் தெய்வசக்தியும் இருக்கு. அனுமதி கேட்காமல் உள்ளே போக நினைத்த நந்திக்கு சாபம் கொடுத்தாங்க. என்னன்னு? உன் உடல் எப்போதும் அளவுக்கதிகமான உஷ்ணத்தில் தகிக்கட்டும். (105டிகிரி ஜுரமா? )
இப்படி ஆகிப்போச்சேன்னு கயிலைக்கு ஓடுனவர், தன் எஜமானிடம் நடந்ததைச் சொன்னதும், 'நீ செஞ்சது தப்புத்தாம்ப்பா. போய் செண்பகாரண்யத்தில் மஹாவிஷ்ணுவைத் தியானத்தில் இருத்தி தவம் செய்து கொண்டு இரு. அவர் மனம் இரங்கி உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்'னு அனுப்பி வச்சுருக்கார். அதே மாதிரிதான் ஆச்சு.
கதைதான் வெவ்வேறே தவிர நந்தி வந்து தவம் இருந்த சம்பவம் உண்மை என்றாற்போல் கருவறை சுவத்துலே , நம்ம நந்தி சார் பெருமாளை வணங்கும் புடைப்புச் சிற்பமுண்டு. மனுஷ்ய ரூபத்தில் இருக்கார்.
(போனமுறை, பட்டர் ஸ்வாமிகள் காமிச்சு ஒன் லைன் கதை சொன்னார். நாந்தான் கொஞ்சம் துல்ஸீ'ஸ் மசாலா தூவி டெவலப் பண்ணினேன். இப்பதான் சந்நிதியில் அவரைக் காணோமே....)
ஆழ்வார்கள் பதினொரு பேரின் சந்நிதியை அடுத்து நம்ம ராமானுஜரும் , ஆளவந்தாரும் இருக்கும் சந்நிதி. ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருநக்ஷத்திரங்கள் பட்டியல் ஒரு இடத்தில். தொட்டடுத்து பல்லவ அரசர் நந்திவர்மனும், தேவிகளும் சிலா ரூபத்தில். அவருடைய தேவியர் ஒருவர் கம்போடிய இளவரசி ராணி காம்போஜவல்லி !
அப்போ.... சோழர் காலத்துக்குப்பின் பல்லவர் ஆட்சியில் கோவிலை விஸ்தரிச்சுருக்கலாம்னு தோணுது. குழந்தைவரம் வேண்டி வந்தார்னு கோவில் குறிப்பு !
நம்ம ஆஞ்சு ஒரு தனி சந்நிதியில் !
தாயார் சந்நிதிக்குப் போனோம். ஸ்ரீ செண்பகவல்லித்தாயார். கம்பிக்கதவினூடே தரிசனம்!
நம்ம ஆண்டாளம்மா தனிச் சந்நிதியில். (மனசுக்குள் தூமணிமாடம் ஆச்சு)
சின்னப்பசங்கதான் கோவிலில் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. மத்தபடி கூட்டம் இல்லை. கோவிலும் சின்னக்கோவில்தான்.
திரும்பிப் போகும்போது, பாதி வழியில் தான், மடத்தாண்டை போகலையேன்னு நினைப்பு வந்தது. இந்த முறை நமக்கில்லை..... ப்ச்....
சரி நேரா ராயாஸ் போயிடலாமுன்னுப் போனவங்களை, இங்கே வந்துட்டுப்போன்னு யாரோ கூப்டமாதிரி இருந்தது.............
தொடரும்......... :-)

0 comments:
Post a Comment