பதின்மவயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்த காலத்தில் இருந்தே இந்தப் பழையாறை என்னும் சொல்மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. எப்ப தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் வந்தாலும் போய்வர ஆசை இருந்தது என்றாலும்..... எல்லாமே மண்மூடிப்போச்சுன்னு சொல்றதைக்கேட்டுட்டு, எங்கேன்னு போய்த் தேடன்னு இருந்துருக்கேன். ஒரு சமயம், கூகுள் மேப்பில் ஏதோ ஒரு இடம் தேடும்போது, யதேச்சையா பழையாறைன்னு பார்த்ததுமுதல், போன ஆசை மறுபடியும் துளிர்விட்டது.
எங்கே போகணுமுன்னு நம்மவர் கேட்டதும் பழையாறைன்னு சொன்னேன். 'அது எங்கே இருக்கு' என்றவரிடம் கூகுளில் பாருங்கன்னுட்டு ஸ்பெல்லிங் சொல்லியாச். பக்கத்துலேதான். ஒரு ஆறு கிமீ தூரம்தான் இருக்குன்னதும், நாலரைக்குக் கிளம்பிட்டோம்.
இப்பெல்லாம் இந்த காஃபியை விட்டொழிச்சுட்டு, டீக்கு மாறிட்டதால்..... வழியிலே எங்கியாவது டீக்கடையில் குடிக்கும் வழக்கம் ஏற்பட்டுருக்கு. அதுவும் பழைய காலம் போல பாய்லர் இருக்கும் டீக்கடையைப் பலவருஷங்களாத்தேடிக்கிட்டுதான் இருக்கேன். கேரளாப் பயணத்தில் கூடத் தேடியாச்சு. எல்லாரும் எலெக்ட்ரிக் கெட்டிலுக்கு மாறிட்டாங்க. பாய்லர் டீ ஆசை இதுவரை நிறைவேறலை...... போகட்டும்.
சங்கர் டீ & காபி (சங்கர் ஹோட்டல்) கண்ணில் பட்டது. வழக்கம்போல் நம்மவரும் விஜியும் இறங்கிப்போனார்கள். மூணு டீ. ஒரு டீயை விஜி கொண்டுவந்து வண்டியில் இருக்கும் எனக்குக் கொடுத்துருவார். ஆச்சு. டீ எங்கே குடிச்சாலும் சுவை என்னமோ ஏறக்கொறைய ஒரே மாதிரிதான்.
குகுளார் உதவியுடன் கீழப்பழையாறை என்ற இடத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். முற்றுப் பெறாத மொட்டை கோபுரம் ! செடிகொடிகள் மண்டிக்கிடக்கு. பார்த்தவுடன் இதுவான்னு ஒரு சம்ஸயம் வந்ததுதான். எதுவானாலும் போய்ப் பார்க்கலாமுன்னு இறங்கி வாசலுக்குப் போனோம்.
கோபுரவாசல் கடந்து உள்ளே போனால்..... விசாலமான வளாகம். கண்ணெதிரே உயரமான பலிபீடமும், சின்ன நாலுகால் மண்டபத்தில் நந்திதேவரும். அவருக்கெதெதிரே உயரமான மதில்சுவரின் நடுவில் ஒரு மூணுநிலை கோபுரம். நல்லா பெயிண்ட் அடிச்சுக் கலர்ஃபுல்லா இருக்கு. முன்வாசல் மொட்டைக்கோபுரத்துக்கும் இந்த கோபுரத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான் வித்தியாசம் ! .
நமக்கு வலப்புறம் தனிக்கோவிலாக ஒன்னு ! எங்கேயோ இப்படி ஒரு அமைப்பைப் பார்த்த நினைவு.
அம்மன் அருள்மிகு சோமகமலாம்பிகை சந்நிதி ! பெரிய முன்மண்டபம், அடுத்து கொஞ்சம் உள்ளே தள்ளி கருவறை ! பச்சைப்புடவையில் நிற்கிறாள். அக்கம்பக்கம் யாரையும் காணோம். அம்மனையும் வேறெங்கேயோ பார்த்ததுபோல் மனசில் தோணுச்சு. ம்ம்ம்ம்......
நந்திதேவரை வணங்கி உள்பிரகாரம் போறோம். செங்கல் பாவின தரை. இதுவும் பெரிய வளாகமாக இருக்கு. நேரெதிரா..... ஒரு மண்டபம். நம்மவர் வழக்கம்போல் விடுவிடுன்னு முன்னால் நடந்து போறார். நான் எப்பவும் சுத்திமுத்திக் கண்ணையோட்டியபடிதான் நடப்பேன். அதனால் கொஞ்சம் பின்தங்கிப் போறதே வழக்கம். இப்ப இந்தக் காலை வச்சுக்கிட்டு ? நிதானம் பிரதானம்தான்.
பக்கவாட்டில் இருந்த படிகளில் ஏறிப்போகணும். ரொம்ப அதிகமில்லை. ஒரு ஒன்பது படிகள்தான். ஆனால் இடைவெளி கொஞ்சம் அதிகமோன்னு தோணுது. படிகளுக்கு இடப்பக்கம் பார்த்தால்.......... ஆஹா..... புரிஞ்சுபோச்சு...... இதே மாதிரி அமைப்பு நம்ம தாராசுரம் கோவிலில்தான் !!!!
அப்ப இந்த அம்பாளும் அங்கே இருப்பதைப் போலவே.................
ஒரே காலக்கட்டமோ ? விவரம் தேடணும். அப்புறம் தேடியதும் இந்தக்கோவில் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவிலை விடப் பழசுன்னு தெரிஞ்சது. இந்தக் கோவிலுக்கும் அந்தக் கோவிலுக்கும் இடையில் தூரம் மூணு கிமீ கூட இல்லை !!!!! எல்லாமே சோழர்களின் திருப்பணிகள்! கோவில் கோவிலாக் கட்டிவிட்டுருக்காங்க...இல்லே !!! 

முதலில் உள்ளே போய் அருள்மிகு சோமநாத ஸ்வாமியை தரிசனம் செஞ்சோம். ஆளரவமில்லாமல் அமைதியா உக்கார்ந்துருக்கார். பக்கத்துலேயே அம்பாளை( சந்நிதியை)வச்சுருக்கலாமில்லையா ? இப்படி இன்னொரு பிரகாரத்தில் வச்சுட்டு, இங்கே அம்போன்னு உக்கார்ந்திருக்கணுமா ? (கொஞ்சம் கோவிச்சுண்டேன்...)
முன்மண்டபத்துக்குப் படியேறி வரும் இடத்தில் கொஞ்சம் வரலாறு கிடைச்சது. கீழப்பழையாறை என்றதும் மேலப்பழையாறைன்னு ஒன்னு இருக்கணுமேன்னு நினைச்சேன். இல்லை போல.... பழையாறைன்னு ஒரு சிற்றூர் இருக்காம். தேடணும்.....
இந்தக் கோவிலைப் பழையாறை வடதளின்னு குறிப்பிடறாங்க. தளின்னா கோவில். வடக்குன்னு ஒரு திசை மட்டுமில்லாமல் மற்ற திசைகளிலும் கோவில்கள் இருந்துருக்கு !மேற்றளி, கீழ்த்தளி (பழையாறை) & தென்தளி.
அப்பர் இப்படிப் பாடியிருக்கார்......
"தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினானடியே நினைந்துய்ம்மினே"
பாடல் பெற்ற தலம் என்பது சிறப்பு.
கோவிலின் சிறப்புன்னு இன்னொரு தகவலும் போட்டு வச்சுருக்காங்க.
சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம். மங்கையர்க்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் அவதரித்த தலம. அப்பர் பாடல் பெற்றது.
தேடலில் இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரமும் கிடைச்சது !
மணிமுடிச் சோழன். இவன் பழையாறைத் தலைநகராகக் கொண்டவன் இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும். (திரு. கே.எம். வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக்குறிப்பு - பெரிய புரணாம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் . இவர் கல்யாணம் கட்டியது கூன்பாண்டியன் என்னும் பாண்டியமன்னரை. சைவமதத்தின் மீது அளவிலா பற்றும் பக்தியும் கொண்ட இவர் அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவர். இவரைப்பற்றி ஒரு குறிப்பும் கோவிலில் வச்சுருக்காங்க. சரியாப் பார்த்து எழுதிவைக்கப்டாதோ ? அனலும் புனலும், அணல், புணலாகிக்கிடக்கு.... ப்ச்.....
தல வரலாறு : சோமநாத சுவாமி திருக்கோவில் அப்பர்,திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழாரால் பாடல் பெற்ற தலம். பிற்காலச் சோழர்களின் இரண்டாவது தலைநகரம் ஆகும். இங்கு முதலாம் ராசராசனின் தந்தை யான சுந்தரசோழன் இருந்து ஆட்சி புரிந்தான் என்று பழம் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் முன்னும், பின்னும் வந்த அரசர்கள் நந்திபுரம் என்றும், 9,10-ம் நூற்றாண்டில் பழையாறை நந்திபுரம் எனவும், 11-ல் முடி கொண்ட சோழபுரம் என்றும், 12-ம் நூற்றாண்டில் ராசராச புரம் என்றும் பெயர் மாற்றம் பெற்று விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.
நாயன்மார்களில் ஒருவரான அமர் நீதி நாயனார், சைவப் பணி புரிந்த தலம் கீழப்பழையாறை ஆகும். அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோவில் சிதிலமடைந்ததால் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த 6.6.1962-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், சரியான பராமரிப்பு இல்லாமல் மீண்டும் சிதிலமடைந்தது. மீண்டும் குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நடைபெற்றன.
அப்பொழுது இத்தலத்தில் இருந்து 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஐம்பொன்னாலான இரண்டரை அடி உயரமுள்ள சுந்தரர் சிலை, ரெண்டடி உயரமுள்ள திருஞானசம்பந்தர் சிலை, இரண்டரை அடி உயரமுள்ள ஆடிப்பூர அம்மன் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள அரியநாச்சியார் என்னும் சந்திரசேகர அம்மன் சிலை ஆகிய நான்கு சிலைகள் உள்ளன.
ஆஹா.... இந்தச் சிலைகள் எல்லாம் இப்போ எங்கே ?
மஹாமண்டபத்தின் படிகளுக்குப் பக்கத்தில் இருந்த தகவல் கண்டதும், உடையாளூர் போகணும் என்று புறப்பட்டாச். கூகுளார் இருந்தாலும் போறவழியில் இருந்த நபரிடம் இடத்தை உறுதி செஞ்சுக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம். ஒரு மூணரை கிமீ தூரம்தான். ஆறே மினிட்தான் ஆச்சு.
சோழமன்னர் ராஜராஜனின் பள்ளிப்படை.
ஏற்கெனவே சிலபல வருஷங்களுக்குமுன் ரொம்ப ஹீனமா இருக்கும் படங்களைப் பார்த்த நினைவில் மனசு திக் திக்னு அடிச்சுக்கிட்டே இருந்தது உண்மை. ரொம்பச் சின்ன இடத்தில் சின்னதா ஒரு குட்டி மண்டப அமைப்பு.
சிவராத்ரியை முன்னிட்டோ என்னவோ.... ருத்ராக்ஷங்களால் கூரை முதல், தூண்கள், சுத்துச்சுவர் இப்படி எல்லாத்தையும் மூடியிருக்காங்க.
உள்ளே ஒரு அஞ்சுதலை நாகம் குடைபிடிக்க சிவலிங்கம்! பார்த்ததும் கண்ணுலே மளுக்னு கண்ணீர் வந்துருச்சு. என்னமாதிரி ஒரு அரசர்!! அவருக்கு இப்படியா ? ஒன்னுத்துக்கும் உதவாத அரசியல் வியாதிகளுக்கு என்ன ஆர்பாட்டமான நினைவிடங்கள். 'உமக்கு இப்படியா... இப்படியா'ன்னு மண்டைக்குடைச்சல்..... ப்ச்.....
பக்கத்தில் இருந்த மரத்தில் ஒரு தகவல்.
மன்னாதிமன்னனாக இருந்தவனுக்கு இப்போ காவல் ரெண்டு செல்லங்கள்தான். நல்லது.... மனுசங்களைப்போல் இல்லாமல் , நன்றி மறக்காத உயிர்கள் ! பூஜாரி ஐயாவைக் காணோம். அப்பப்ப வந்து போறாரோ என்னவோ ? பள்ளிப்படையை இன்னும் கொஞ்சம் சுத்தமா வச்சுருக்கலாம்..... ப்ச்....

கொஞ்சம் துக்கத்தோடுதான் அங்கிருந்து கிளம்பினேன்.....
வரும் வழியில்..... கொஞ்சதூரத்தில்.............
தொடரும்........ :-)

0 comments:
Post a Comment