'ஈரேழுலகில் உமக்கு நிகராக யாருமே இல்லை. யாரோடும் ஒப்புக்கும் உவமைக்கும் கூட ஈடாகச் சொல்லமுடியாது.....' என்று முனிவர்களும் தேவர்களும் போற்றிப் புகழும் ஒப்பிலியப்பன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நம்ம ராயாஸ் க்ராண்டில் இருந்து ஏழு கிமீ தூரத்துக்கும் குறைவே. கும்மோணத்தில் இது ஒரு பேட்டை... திருநாகேஸ்வரம். அங்கே இருக்கு திருவிண்ணகரம் ! பொதுவா யாரும் இப்படிச் சொல்றதில்லை.... உப்பிலியப்பன்னு சொல்லிச்சொல்லி அவரை உப்பில்லாத பத்தியக்காரனாக்கிட்டாங்க சனங்க. ப்ச்.... பாவம்.
கல்யாணம் ஆனநாள் முதல் உப்பில்லாச் சோறு....( உப்புப்போட்டா ரோஷம் வந்துருமேன்னு மாமனார் செஞ்ச சதியாக்கூட இருக்கலாமுன்னு இப்போ எனக்குத் தோணுது)
கிழவன் வந்து பொண்ணு கேக்கறான். 'போடா கிழவா..... சின்னப்பொண்ணை உனக்குத்தரமுடியாது'ன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லாம.... என் பொண்ணுக்கு உப்புப்போட்டு சமைக்கத் தெரியாது....ன்னு சாக்குபோக்கு சொன்னால் ?
வந்த கிழவன் மட்டும் லேசுப்பட்டவனா ? ஆனானப்பட்ட மஹாவிஷ்ணு, மாறு வேடத்தில் ! "அட ! அப்படியா..... பேஷ் பேஷ்.... எனக்கு உப்பே ஆகாது. உப்பில்லாத சமையல்தான் சாப்பிடணுமுன்னு (தேவலோக )டாக்குட்டர் சொல்லியிருக்கார். கவலையே படாதீங்க. உப்புப்போடத்தெரியாது என்றது நல்லதாப் போச்சு.(உப்பு வாங்கற செலவு மிச்சம்! )உங்க பொண்ணை கண்கலங்காமப் பார்த்துக்குவேன்."
கிழவனுக்கு இருக்கும் 'தில்'லைப் பாரு ! இதுலே யார் இந்தப் பொண்ணு? உங்க தங்கையான்னு கேள்வி வேற ! இருக்காதா பின்னே ? பொண்ணோட தகப்பனாருக்கு வயசு பதினாறுதான் ! என்றும் பதினாறுன்னு வரம் கிடைச்ச அதிருஷ்டகாரர் மார்க்கண்டேய மகரிஷிதான் அவர். அட ராமா..... அவரா இவர் ? அப்பப் பொண்ணோட தாயார் ?
நோ தாய் ? எல்லாம் கிடைக்கிற பொண்ணுங்கதான். அந்தக் காலத்தில் பெண்குழந்தைகளை அங்கங்கே விட்டுட்டுப்போறது ஒரு பழக்கம் போல இருக்கு. தொட்டில் குழந்தை திட்டமெல்லாம் கிடையாது போல ! ரிஷிகளும் முனிவர்களும் தங்களுக்கு குழந்தை அதுவும் பெண் குழந்தை வேணுமுன்னு தவம் செய்வாங்களாம். உம் தவத்தை மெச்சினோமுன்னு ஒரு சின்னப்பொண் குழந்தையை அவுங்க போகும் வழியில் போட்டு வச்சால் ஆச்சு. (என்ன அநியாயம் பார்த்தீங்களா ? )
ஆமாம்.... இந்த மார்கண்டேயருக்கு எதுக்குப் பொண்குழந்தை வேணுமாம் ?
எல்லாம் ஒரு பொங்கச்சம்தான் ! தன்னுடைய பொண்ணை மஹாவிஷ்ணுவுக்குக் கட்டிக்கொடுத்து, மாலின் மாமனார் என்ற பட்டம் வேணுமாம். தன்னுடைய பக்தியின், தவத்தின் மஹிமைக்கு மாலே வந்து பொண்ணு கேப்பாருன்னு பார்த்தால்...... ஒரு கிழவன் வந்து நிக்கறான்..... என்ன சொல்லி இவனைத் துரத்தன்னு யோசனையா இருக்கார். வீட்டுக்குள்ளே பொண்ணு அழுதகண்ணும் சிந்திய மூக்குமாய்..... ஐயோ.... அப்பா என்னை இந்தக் கிழவனுக்குக் கட்டிக்கொடுத்துட்டா என் கதி என்ன ? (அந்தக் காலத்தில் எல்லாம் பொண்ணோட விருப்பத்தைக் கேக்கறதே இல்லை. வீட்டுலே பெரியவங்க சம்பந்தம் பேசி முடிச்சு, இவர்தான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொன்னால் மறுபேச்சுக்கிடையாது )
பதிலுக்காகக் காத்திருந்த கிழவனுக்கே நடக்கறதைப் பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கு. சட்னு சுயரூபத்தைக் காட்டினார்! தகப்பனுக்கும் மகளுக்கும் வாயெல்லாம் பல். அழுதபிள்ளை சிரிக்குது ! அந்தப்பொண் பெயர் தெரியுமோ ? துளசி என்னும் பூமாதேவி !
பூமாதேவி இங்கே வந்த சமாச்சாரத்தை ஏற்கெனவே சிலமுறை எழுதியிருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னுரெண்டு வேணுமுன்னா இந்தச் சுட்டியில் பாருங்களேன்.
https://thulasidhalam.blogspot.com/2015/08/73.html
https://thulasidhalam.blogspot.com/2016/08/73.html
"ஏங்க.... எனக்கும் ஒரு இடம் உங்க மார்பில் கொடுக்கக்கூடாதா ? உங்கள் மார்பில் சாய எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா ? "
ஙே...... "கொடுக்கலாம் கொடுக்கலாம்..... கொடுக்கலாம்தான். ஆனால் பெரியவளுக்குத் தெரிஞ்சா என் நிலை ? "
"அப்படீன்னா........"
"நீ ஒன்னு செய்..... கீழே பூலோகத்தில் ஒருத்தர் பொண்குழந்தை வேணுமுன்னு தவம் செய்யறார். தவம் முடிஞ்சுக் கண் திறக்கும்போது, சட்னு கண்ணில் படறமாதிரி அங்கே போய் குழந்தையாய் இரு. மத்ததை நான் பார்த்துக்கறேன். சட்னு ஓடு !"
பொதுவா கும்பகோணம் வந்தால் ரெட்டைக்கோவில்கள் போல ஒரு ரெண்டு கோவில்களுக்குப் போகாமல் நம் யாத்திரை நிறைவடையாது. அந்த ரெண்டில் இது ஒன்னு !
இங்கே இருக்கும் கோவில் யானை'பூமா'வுக்காகவே வந்துருவேன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ?
இன்று நாம் இங்கே வரும்போது மணி ஒரு அஞ்சே முக்கால். முன்னால் நின்னு காட்சி கொடுக்கும் நம்ம பூமாவைக் காணோம். போகட்டும்.... காலையில் இருந்து வாசலில் நின்னு பக்தர்களை வரவேற்கும் பணியில் இருந்தவளுக்கு ஓய்வு வேணாமா ? ட்யூட்டி முடிச்சு 'வீட்டுக்கு'ப் போயிருப்பாளா இருக்கும்.
கோபுரவாசலில் புகுந்து, கொடிமரம் , பெரிய திருவடி சந்நிதி சேவிச்சு, வலப்பக்கம் தெரியும் வசந்த மண்டபம் கடந்து முன்மண்டபத்தினூடே நடந்து போறோம். இடதுபக்க மண்டபத்தில் தங்கக்கவசத்தோடு தராசு பக்கத்தில் இருக்கார், வசூல்ராஜா. சொல்ல மறந்துட்டேனே..... தென் திருப்பதின்னு ஒரு பெயரும் இருக்கு. (இன்னும் சில கோவில்களுக்கும் இதே பெயர் உண்டு !) ஒரிஜினல் திருப்பதிக்கு வேண்டிக்கிட்டு, ப்ராத்தனை நிறைவேறியபின், அங்கே போக முடியலைன்னா.... வேண்டுன சமாச்சாரத்தை இங்கே செலுத்திக்கலாம். (நல்ல அரேஞ்மென்ட் இல்லை ? )
உட்ப்ரகாரம் கடந்து மூலவர் ஸ்ரீநிவாஸரை நோக்கிப்போறோம். நமக்கு வலப்பக்கத்தில் கருட மண்டபத்தில் பெரிய திருவடி !
மூலவர் கழுத்தில் துளசி மாலையுடன் தகதகன்னு ஜொலிக்கிறார். முழு ஜொலிப்பும் , வலக்கையில் இருந்து !!!! வைரமோ வைரம் !
அவருக்கு வலப்பக்கம் துளசி ! அப்பா வச்ச பெயர் அதுதான். மனைவியும் மாமனாரும் வலதும் இடதுமாய் உக்கார்ந்திருக்க, மாப்பிள்ளை பவ்யமா நடுவில் நிக்கறார். 'எப்பவும் உம்மகளை விட்டுப் பிரியமாட்டேன்' என்று மாமனாருக்குக் கொடுத்த வாக்கின்படி நகர்வலம் போகும்போதும் மனைவியைக் கூடவே கூட்டிண்டு போறார் !
மூலவரை வணங்கி வெளியில் வந்தால் கண் எதிரில் தங்கத்தேருக்கு அலங்காரம் நடக்குது ! ஆஹா...... புறப்பாடு ! இருந்து ஸேவிச்சுட்டுத்தான் போகணும்.!
உற்சவருக்குப் பெயர் பொன்னப்பன். என்னப்பனுக்குப் பொருத்தமான பெயர் ! பொன்னே மணியே முத்தேன்னு செல்லம் கொஞ்சறாப்போலவே நம்(ம)ஆழ்வார், திருவாய்மொழி பாசுரம் பாடி வச்சுருக்காரே!
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.
உற்சவரும் தாயாருமாய் தேரில் ! ஆஹா ஆஹா.....
எல்லாம் சரியாகும்வரை நமக்கு வேடிக்கையைத்தவிர வேறென்ன வேலை ?
உபயதாரர்கள் வந்து தேரை இழுக்கத் தயாரானார்கள். கொஞ்சம் பேர்தான். ஒரு பக்கமா நின்னுக்கிட்டு இருந்த என்னிடம் வந்து அந்தப் பக்கம் பார்னு சொல்லிட்டுப்போனார் நம்மவர். எந்தப்பக்கம்னு கேக்கலாமுன்னா அதுவரை கூடவே நின்னவரைக்காணோம். தேடிக்கிட்டே பிரகாரத்தை நோட்டம் விட்டால் வாத்யகாரர்கள் காத்திருக்க...... பூமா அதோ முன்னால் நடந்து போறாள்! நம்மவர் ? தேர் இழுக்கும் மக்களோடு மக்களாய் !
அடடா..... இப்ப நான் பொன்னப்பனைப் பார்ப்பேனா, பூமாவைப் பார்ப்பேனா இல்லை நம்மவரைப் பார்ப்பேனா ? ஜெயித்தது பூமான்னு தனியாச் சொல்லணுமா ?
சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ். நேத்துதான் ஃபேஸ்புக்கில் போட்டு வச்சு, இங்கே லிங்க் கொடுத்துருக்கேன். யூட்யூபை விட இப்படிச் செய்வது எனக்கு சுலபமா இருக்கு என்பதே காரணம்.
https://www.facebook.com/share/v/16U7sJXVSA/
https://www.facebook.com/share/v/1G6Ky46tQE/

ஒரே ஒரு சுற்றுதான். ஆச்சு ! நான் கொஞ்சநேரம் பூமாவாண்டை இருந்துட்டு வந்தேன்.
தாயும் தந்தையும் ரதம்விட்டு இறங்கிப்போனாட்டு...... வெறிச்ன்னு நின்னுக்கிட்டு இருந்தது தங்கரதம்.
சும்மாச் சொல்லக்கூடாது..... உட்ப்ரகாரம் முழுக்க அட்டகாசமான சித்திரங்கள். அருமையோ அருமை !
புஷ்கரணிக்குப் பெயர் பகலிராப்பொய்கை ! மற்ற தீர்த்தங்களைப்போல் பகல் மட்டுமே என்றில்லாமல் ராத்ரியிலும் கூட தீர்த்தமாடலாம் என்பதே இதன் சிறப்பு. கரையாண்டை ப்ரஸாத ஸ்டால் போல ஒன்னு ! இல்லே , தகவல் மையமா ? இருக்கட்டும் !
ஆழ்வார்களால் மங்களசாஸனம் செய்யப்பட்ட நூத்தியெட்டு திவ்யதேசத்தில் இந்தக் கோவிலும் உண்டு.
எதிர்பாராதவகையில் புறப்பாடு தரிசனம் கிடைச்சது, மனசுக்குள் ஒரு சொல்லமுடியாத மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது உண்மை.
வாங்க..... ரெட்டைக்கோவில்னு சொன்னேனே அங்கே போகலாம்.
( நிறையப்படங்கள் எடுத்துட்டேன் போல..... இப்பப் பார்த்தால் ஒரு நூற்றியிருபதுக்குப் பக்கம். ஃபேஸ்புக் ஆல்பமாப் போட்டுவைக்கவா ? )
தொடரும்...... :-)

1 comments:
இந்தக் கோயில் பிராகாரத்தை (வெளி) சுற்றி வந்தால் இன்னும் இரண்டு சன்னிதிகள் உண்டு. இந்த இரண்டும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை.
Post a Comment