Monday, June 23, 2025

செங்கமலமும் (ராஜ ) கோபாலனும்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 36 )

சரியா ஒரு மணி நேரப் பயணம்.  தூரமும் ஒரு முப்பத்தியெட்டு கிமீதான்.  காலையில் கடமைகளை முடிச்சு, இட்லிகளை உள்ளே தள்ளிட்டு   ராயாஸ் வளாகத்துப் புள்ளையாருக்கு   கும்பிடு போட்டதும் ஒன்பதுக்குக் கிளம்பியாச்சு. 
 பத்துமணிக்குக் கோவில்வாசலில் போய் இறங்கியும் ஆச்சு.  பச்சைப்போர்வையில் ராஜகோபுரம்.  பதினொரு நிலை !  கடந்து உள்ளே போறோம். கண்பார்வை   கோவில் முன்மண்டபத்து வலதுபக்கம்தான்  முதலில் போனது.  இடம் காலி என்றதும் 'திக்'னு ஆச்சு.

அதுக்குள்ளே வளாகத்தின்  வலதுபக்கம் பார் என்று (ராஜ)கோபால் சொன்னாரோ............. ஆஹா.... தனிமண்டபம் !   நேராப்போய் முன்னால் நின்னேன். குளிச்சு முடிச்சுப் பளிச்னு இருக்காள்.  இங்கே நல்ல மழை பேய்ஞ்சுருக்கு போல.... வளாகத்தில் அங்கங்கே சின்னச் சின்ன மைக்ரோ குளங்கள்.
செங்கமலம் குளிக்க ஒரு நீச்சல்குளம் (! ) கட்டிவிட்டதா ஒரு செய்தி.... எங்கேன்னு தேடினால்..... பக்கத்துலேயே,  ஒரு பக்கமா இருக்கு. சரியான பெயர் கொடுத்துருக்காங்க.  நீச்சல் தொட்டி !  நீந்தெல்லாம் முடியாது.  தண்ணீரில் இறங்கி நிற்கலாம்.  ஒரு நாலெட்டு வைக்கலாம்.
செங்கமலத்துக்குப் பக்கமா ஒரு நாற்காலியில் உக்கார்ந்திருந்தவரிடம், 'ராஜாண்ணே வரலையா'ன்னு விசாரிப்பு.  வீட்டுலே இருக்காராம். தான் ராஜாண்ணனின் மகன்தான்னு அறிமுகப்படுத்திக்கிட்டார்.  ராஜாண்ணேன்னு எல்லோரும் சொல்றதால் நாமும். மத்தபடி அவர்பெயர் ராஜகோபால்தான்.  கொஞ்சநேரம்  பழைய சந்திப்பு பற்றிப் பேசிக்கிட்டு இருந்தோம்.  முன்மண்டபத்தில் இங்கே வந்து ரெண்டு வருஷம் ஆச்சாம். இடம் கொஞ்சம் தாராளமா இருக்கு இங்கே!


இந்த மண்டபம் முன்னே இங்கே இருந்ததான்னு ஞாபகம் வரலை. 'நம்ம வீட்டுக்குள்ளேயே' போய்ப் பார்த்துத் தெளிந்தேன்.  இருந்துருக்கு !  அந்தப் பதிவுகளில் படங்களும் ரொம்பவே நல்லா இருக்கு ! 

விருப்பம் இருந்தால்  கீழே சுட்டிகளில்  பார்க்கலாம். 

https://thulasidhalam.blogspot.com/2013/03/b.html

https://thulasidhalam.blogspot.com/2016/09/83.html

சில க்ளிக்ஸ் ஆச்சு.  விஜியை வந்து  பக்கத்தில் நிக்கச் சொன்னேன். 

செங்கமலத்துக்கு ஒன்னும் வாங்கிப் போகலை.  கண்டதும் ஆகாதுன்றது வேற இருக்கே! ஆரோக்யத்துக்குக் கேடு வராதவைகளை வாங்கித்தரச் சொல்லிக் கொஞ்சம் ஒரு தொகையையும்  ராஜாண்ணன் மகனிடம்  கொடுத்துட்டு, மூலவர் தரிசனத்துக்குக் கோவிலுள் போனோம். 

நல்லா நெடுநெடுன்னு போகும் மண்டபங்களைக் கடந்து போகவேணும். இருபத்திமூணு ஏக்கர் நிலத்தில் கட்டியிருக்கும் கோவில்.  நடையான நடை நடக்கணும். 




மூலவர் சந்நிதிக்குப் போனோம்.  வாசுதேவர்.... பனிரெண்டடி உயரம். ச்சும்மாத் தரையில் பாதங்கள் பதிய நிக்கறார்.  தேவியர் இருபக்கங்களிலும்.  தீபாராதனை காண்பிக்கும்போது பாத தரிசனம் ஆச்சு.  
அவருக்குமுன்னால்..... ஒரு பெஞ்சு போன்ற அமைப்பில் உற்சவர் ராஜகோபாலன், ருக்மிணி & சத்யபாமாவுடன்.   ஒய்யாரமா இடுப்பை வளைச்சு நிற்கிறார். 

  சின்னக்குழந்தைக்குப் போட்டுவிடும் சலங்கைக் கொலுசு, காலில் தண்டை, இடுப்பில் சலங்கைச் சங்கிலி ( ஒட்டியாணம் ) கையில் வளை,  கழுத்து  நிறைய நகை,  மாடுகளுக்காக  உயரத்தில் இருக்கும் மரக்கொப்பை இழுத்து  கிளைகளை ஒடிக்கக் கையில் ஒரு செண்டு,  இடுப்பில் சாவிக்கொத்து......    ஆஹா..... சரியான  மாடு மேய்க்கும் கண்ணன்என்னும் மன்னன்.  
கொஞ்சம் பூக்குவியலுக்குள்ளில்  அஞ்சுதலை நாகத்தொட்டிலில் இருக்கும் குழந்தை சந்தான கிருஷ்ணன்.  கையில் கிடைச்சால் அவ்ளோதான்.....  நினைவு தப்பிரும் என்பதால் கவனமாக ஓரக்கண்ணால் பார்த்தேன். ' இரு உன்னை'  என்றாப்போல, நம்ம பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த (நம்ம வயசுதான் இருக்கும்) தம்பதியின் கைகளுக்குள் வந்தான்.  குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை பண்ணியிருந்தாங்களாம். பேரனோ பேத்தியோ பொறந்தாச்சு!  பட்டர் விசேஷமாப் பூஜை பண்ணார்.  கண்கொட்டாமல் பார்க்கும் வாய்ப்பு அமைஞ்சது.  விஜிக்கு இது முதல் விஸிட் என்பதால்  ஆர்வமா எங்களோடு  வந்து தரிசனம் செஞ்சது எனக்கும் மனத்திருப்தியா இருந்தது.  நம்ம பையன் போலத்தானே ! 

பெருமாளுக்கு நான் நல்லவள்னு தோணுச்சோ என்னமோ... திடுதிடுன்னு ஒரு பெரிய மழை..... (நல்லார் ஒருவர் உளரேல்....... ) 
தாயார் செங்கமலவல்லிக்குத் தனிச்சந்திதின்னு பெயர். ஆனால் தனிக்கோவில் போல ஒரே தடபுடல் !  அங்கே முன்மண்டபத்தில் ஒரு உசரமான துளசிமாடம். ஆனால் துளசியைக் காணோம்.  அங்கே வந்த கோவில்  பணியாளரிடம், ஏன் ஒரு துளசிச்செடியை நட்டுவைக்கலைன்னு கேட்டேன். ஒரு ஆத்தாமைதான்...... எனக்கொரு இடம் தரப்டாதா ?

இது துளசி மாடம் இல்லைன்னுதான் சொல்றாங்க. நாலைஞ்சுமுறை நட்டுவச்சுப் பார்த்தும் செடி வளராமல் பட்டுப்போயிருச்சு. அடராமா..... ஏன் ?

யாராண்டை கேக்கமுடியும் ?  ஏன்.... நம்ம மன்னார்குடி மைனர் இல்லையா என்ன ?  அங்கே இருந்தே  படத்தோடு ஒரு சேதியைத் தட்டிவிட்டேன்.
"இது துளஸி மாடம் இல்லையோ ? "

"இல்லை. மாத்வா வழிபாடா இருந்துருக்கலாம்னு பேச்சு இருக்கு டீச்சர் "



தாயார்  சந்நிதியில் உட்ப்ரகாரம் வலம் வந்தோம்.  வரிசையா  மாடங்களில் வண்ண வண்ண ஓவியங்கள். அழகோ அழகு ! தரிசனம் முடிஞ்சு வெளியில் வர்றோம். முற்றத்தில் ஒரே வெள்ளக்காடு !  இந்த மாதிரி சார்ங்கம் உதைத்த சரமழையைப் பார்த்தே ரொம்ப வருஷங்களாச்சு. பேசாம உக்கார்ந்து ரசிக்கலாம்.....



https://www.facebook.com/share/v/1628z82fJS/

மழை கொஞ்சம் நின்னதும் கிளம்பி வெளியில் வந்தோம். செங்கமலம், அவள்பாட்டுக்கு ஆடிக்கிட்டே நிக்கிறாள். இங்கிருந்தே  'பைபை செல்லம்' சொல்லி ராஜ கோபுரவாசல் வழியா வெளிமுற்றத்துக்கு வந்தோம். நாம் கடைசியா வந்து  ஒன்பது வருஷங்கள் ஆச்சு.  வெளிவளாகம் எல்லாம் மாறித்தான் இருக்கு. புதுசா ஒரு கல்யாணமண்டபம் வந்தாச். 
தமிழக முதல்வர் பொறந்தநாள் விழான்னு விருந்து போடறாங்களாம். சிறப்பு வழிபாடும் உண்டாம் !  ஓஹோ.... 
கிளம்பி ஹரித்ராநதியை தரிசனம் செஞ்சுட்டு  (ரெண்டு க்ளிக்ஸும் ஆச்சு) ஊரைவிட்டாச்சு.  திரும்ப ஒருமணி நேரப்பயணம் இருக்கே !

 
வர்ற வழியில் புதுக்கோவில் ஒன்னு வர்ற அடையாளம். மங்கலமாருதி தேவஸ்தானமாம் ! 



பட்டீசரம் வழிதான். ஆனால்  மணி பனிரெண்டரை. கோவில் மூடும் நேரம். ப்ச்....
நேரா ராயாஸ்.  காமணி ஓய்வுக்குப்பின்  நம்ம ரைஸ் & ஸ்பைஸில் பகல் சாப்பாடு ! 
 சாப்பாடானதும் ரெஸ்ட் டைம்.   வேறெங்கே போகணும்னு கேட்டார், நம்மவர்.  மனசுலே ரொம்ப நாளா இருந்த ஆசையைச் சொன்னேன்.

தொடரும்......... :-)   

0 comments: