Wednesday, June 18, 2025

போற காலத்துலே, பொண்ணு கேக்குதோ ?? ......(2025 இந்தியப்பயணம் பகுதி 34 )

'ஈரேழுலகில் உமக்கு நிகராக யாருமே இல்லை. யாரோடும் ஒப்புக்கும் உவமைக்கும் கூட ஈடாகச் சொல்லமுடியாது.....' என்று  முனிவர்களும் தேவர்களும் போற்றிப் புகழும் ஒப்பிலியப்பன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நம்ம ராயாஸ் க்ராண்டில் இருந்து  ஏழு கிமீ தூரத்துக்கும்  குறைவே.  கும்மோணத்தில் இது ஒரு பேட்டை... திருநாகேஸ்வரம். அங்கே இருக்கு திருவிண்ணகரம் ! பொதுவா யாரும் இப்படிச் சொல்றதில்லை.... உப்பிலியப்பன்னு சொல்லிச்சொல்லி அவரை உப்பில்லாத பத்தியக்காரனாக்கிட்டாங்க சனங்க. ப்ச்.... பாவம்.
கல்யாணம் ஆனநாள் முதல் உப்பில்லாச் சோறு....( உப்புப்போட்டா ரோஷம் வந்துருமேன்னு  மாமனார் செஞ்ச சதியாக்கூட இருக்கலாமுன்னு இப்போ எனக்குத் தோணுது)

கிழவன் வந்து பொண்ணு கேக்கறான்.  'போடா கிழவா..... சின்னப்பொண்ணை உனக்குத்தரமுடியாது'ன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லாம.... என் பொண்ணுக்கு உப்புப்போட்டு சமைக்கத் தெரியாது....ன்னு சாக்குபோக்கு சொன்னால் ? 

வந்த கிழவன் மட்டும் லேசுப்பட்டவனா ? ஆனானப்பட்ட மஹாவிஷ்ணு, மாறு வேடத்தில் !   "அட ! அப்படியா..... பேஷ் பேஷ்....   எனக்கு உப்பே ஆகாது.  உப்பில்லாத சமையல்தான் சாப்பிடணுமுன்னு (தேவலோக )டாக்குட்டர் சொல்லியிருக்கார். கவலையே படாதீங்க. உப்புப்போடத்தெரியாது என்றது  நல்லதாப் போச்சு.(உப்பு வாங்கற செலவு மிச்சம்! )உங்க பொண்ணை கண்கலங்காமப் பார்த்துக்குவேன்."

கிழவனுக்கு இருக்கும் 'தில்'லைப் பாரு !  இதுலே யார் இந்தப் பொண்ணு? உங்க தங்கையான்னு கேள்வி வேற !  இருக்காதா பின்னே ? பொண்ணோட தகப்பனாருக்கு வயசு பதினாறுதான் !  என்றும் பதினாறுன்னு வரம் கிடைச்ச அதிருஷ்டகாரர் மார்க்கண்டேய மகரிஷிதான் அவர்.  அட ராமா..... அவரா இவர் ? அப்பப் பொண்ணோட தாயார் ? 

நோ தாய் ? எல்லாம் கிடைக்கிற பொண்ணுங்கதான். அந்தக் காலத்தில்  பெண்குழந்தைகளை அங்கங்கே விட்டுட்டுப்போறது ஒரு பழக்கம் போல இருக்கு.  தொட்டில் குழந்தை திட்டமெல்லாம் கிடையாது போல !  ரிஷிகளும் முனிவர்களும் தங்களுக்கு குழந்தை அதுவும் பெண் குழந்தை வேணுமுன்னு தவம் செய்வாங்களாம்.  உம் தவத்தை மெச்சினோமுன்னு ஒரு சின்னப்பொண் குழந்தையை அவுங்க போகும் வழியில்  போட்டு வச்சால் ஆச்சு. (என்ன அநியாயம் பார்த்தீங்களா ? )

ஆமாம்.... இந்த மார்கண்டேயருக்கு எதுக்குப் பொண்குழந்தை வேணுமாம் ? 

 எல்லாம் ஒரு பொங்கச்சம்தான் ! தன்னுடைய பொண்ணை மஹாவிஷ்ணுவுக்குக் கட்டிக்கொடுத்து, மாலின் மாமனார் என்ற பட்டம் வேணுமாம்.  தன்னுடைய பக்தியின், தவத்தின் மஹிமைக்கு மாலே வந்து பொண்ணு கேப்பாருன்னு பார்த்தால்...... ஒரு கிழவன் வந்து நிக்கறான்.....  என்ன சொல்லி இவனைத் துரத்தன்னு யோசனையா இருக்கார்.  வீட்டுக்குள்ளே பொண்ணு அழுதகண்ணும் சிந்திய மூக்குமாய்.....  ஐயோ.... அப்பா  என்னை இந்தக் கிழவனுக்குக் கட்டிக்கொடுத்துட்டா என் கதி என்ன ?  (அந்தக் காலத்தில் எல்லாம் பொண்ணோட விருப்பத்தைக் கேக்கறதே இல்லை. வீட்டுலே பெரியவங்க சம்பந்தம் பேசி முடிச்சு, இவர்தான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொன்னால் மறுபேச்சுக்கிடையாது )

பதிலுக்காகக் காத்திருந்த கிழவனுக்கே  நடக்கறதைப் பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கு.  சட்னு சுயரூபத்தைக் காட்டினார்!  தகப்பனுக்கும் மகளுக்கும் வாயெல்லாம் பல். அழுதபிள்ளை சிரிக்குது !  அந்தப்பொண் பெயர் தெரியுமோ ? துளசி  என்னும் பூமாதேவி !

பூமாதேவி இங்கே வந்த சமாச்சாரத்தை ஏற்கெனவே சிலமுறை எழுதியிருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னுரெண்டு வேணுமுன்னா இந்தச் சுட்டியில் பாருங்களேன். 

https://thulasidhalam.blogspot.com/2015/08/73.html

https://thulasidhalam.blogspot.com/2016/08/73.html

"ஏங்க.... எனக்கும் ஒரு இடம் உங்க மார்பில் கொடுக்கக்கூடாதா ?  உங்கள் மார்பில் சாய எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா ? "

ஙே......  "கொடுக்கலாம் கொடுக்கலாம்..... கொடுக்கலாம்தான். ஆனால்  பெரியவளுக்குத் தெரிஞ்சா என் நிலை ? "

"அப்படீன்னா........"

"நீ ஒன்னு செய்..... கீழே பூலோகத்தில் ஒருத்தர் பொண்குழந்தை வேணுமுன்னு தவம் செய்யறார். தவம் முடிஞ்சுக் கண் திறக்கும்போது, சட்னு கண்ணில் படறமாதிரி அங்கே போய் குழந்தையாய் இரு.  மத்ததை நான் பார்த்துக்கறேன். சட்னு ஓடு !"

பொதுவா கும்பகோணம் வந்தால்  ரெட்டைக்கோவில்கள் போல ஒரு ரெண்டு கோவில்களுக்குப் போகாமல் நம் யாத்திரை நிறைவடையாது. அந்த ரெண்டில் இது ஒன்னு !

இங்கே இருக்கும் கோவில் யானை'பூமா'வுக்காகவே வந்துருவேன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ? 

இன்று நாம் இங்கே வரும்போது மணி ஒரு அஞ்சே முக்கால்.  முன்னால் நின்னு காட்சி கொடுக்கும் நம்ம பூமாவைக் காணோம். போகட்டும்.... காலையில் இருந்து வாசலில் நின்னு பக்தர்களை வரவேற்கும்  பணியில் இருந்தவளுக்கு ஓய்வு வேணாமா ?  ட்யூட்டி முடிச்சு 'வீட்டுக்கு'ப் போயிருப்பாளா இருக்கும்.
கோபுரவாசலில் புகுந்து, கொடிமரம் , பெரிய திருவடி சந்நிதி சேவிச்சு, வலப்பக்கம் தெரியும்   வசந்த மண்டபம் கடந்து முன்மண்டபத்தினூடே நடந்து போறோம். இடதுபக்க மண்டபத்தில்  தங்கக்கவசத்தோடு தராசு பக்கத்தில் இருக்கார், வசூல்ராஜா. சொல்ல மறந்துட்டேனே.....  தென் திருப்பதின்னு ஒரு பெயரும் இருக்கு. (இன்னும் சில கோவில்களுக்கும் இதே பெயர் உண்டு !)  ஒரிஜினல் திருப்பதிக்கு வேண்டிக்கிட்டு, ப்ராத்தனை நிறைவேறியபின், அங்கே போக முடியலைன்னா....  வேண்டுன சமாச்சாரத்தை இங்கே செலுத்திக்கலாம். (நல்ல அரேஞ்மென்ட் இல்லை ? ) 
உட்ப்ரகாரம் கடந்து மூலவர் ஸ்ரீநிவாஸரை  நோக்கிப்போறோம். நமக்கு வலப்பக்கத்தில் கருட மண்டபத்தில் பெரிய திருவடி !   
மூலவர் கழுத்தில் துளசி மாலையுடன் தகதகன்னு  ஜொலிக்கிறார்.  முழு ஜொலிப்பும் ,  வலக்கையில் இருந்து !!!!   வைரமோ வைரம் !  

அவருக்கு வலப்பக்கம் துளசி !  அப்பா வச்ச பெயர் அதுதான். மனைவியும் மாமனாரும் வலதும் இடதுமாய் உக்கார்ந்திருக்க,  மாப்பிள்ளை பவ்யமா நடுவில் நிக்கறார்.  'எப்பவும்  உம்மகளை விட்டுப் பிரியமாட்டேன்'  என்று மாமனாருக்குக் கொடுத்த வாக்கின்படி  நகர்வலம் போகும்போதும் மனைவியைக் கூடவே கூட்டிண்டு போறார் !  
மூலவரை வணங்கி வெளியில் வந்தால்   கண் எதிரில் தங்கத்தேருக்கு அலங்காரம் நடக்குது !  ஆஹா...... புறப்பாடு !   இருந்து ஸேவிச்சுட்டுத்தான் போகணும்.! 

உற்சவருக்குப் பெயர் பொன்னப்பன்.  என்னப்பனுக்குப் பொருத்தமான பெயர் !  பொன்னே  மணியே முத்தேன்னு செல்லம் கொஞ்சறாப்போலவே   நம்(ம)ஆழ்வார்,   திருவாய்மொழி பாசுரம் பாடி வச்சுருக்காரே! 

 என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

 உற்சவரும் தாயாருமாய் தேரில் ! ஆஹா ஆஹா.....
எல்லாம் சரியாகும்வரை நமக்கு வேடிக்கையைத்தவிர வேறென்ன வேலை ? 
உபயதாரர்கள் வந்து தேரை இழுக்கத் தயாரானார்கள்.  கொஞ்சம் பேர்தான்.   ஒரு பக்கமா நின்னுக்கிட்டு இருந்த என்னிடம் வந்து  அந்தப் பக்கம் பார்னு சொல்லிட்டுப்போனார் நம்மவர்.  எந்தப்பக்கம்னு   கேக்கலாமுன்னா அதுவரை கூடவே நின்னவரைக்காணோம்.  தேடிக்கிட்டே பிரகாரத்தை நோட்டம் விட்டால்  வாத்யகாரர்கள் காத்திருக்க......    பூமா அதோ முன்னால் நடந்து போறாள்!  நம்மவர் ?  தேர் இழுக்கும் மக்களோடு  மக்களாய் ! 
அடடா..... இப்ப நான் பொன்னப்பனைப் பார்ப்பேனா, பூமாவைப் பார்ப்பேனா இல்லை நம்மவரைப் பார்ப்பேனா ?  ஜெயித்தது பூமான்னு தனியாச் சொல்லணுமா ? 

சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ். நேத்துதான் ஃபேஸ்புக்கில் போட்டு வச்சு, இங்கே லிங்க் கொடுத்துருக்கேன். யூட்யூபை விட இப்படிச் செய்வது எனக்கு சுலபமா இருக்கு என்பதே காரணம். 

https://www.facebook.com/share/v/16U7sJXVSA/

https://www.facebook.com/share/v/1G6Ky46tQE/





ஒரே ஒரு சுற்றுதான். ஆச்சு  ! நான் கொஞ்சநேரம் பூமாவாண்டை இருந்துட்டு வந்தேன்.  
தாயும் தந்தையும் ரதம்விட்டு இறங்கிப்போனாட்டு...... வெறிச்ன்னு நின்னுக்கிட்டு இருந்தது தங்கரதம்.

சும்மாச் சொல்லக்கூடாது..... உட்ப்ரகாரம் முழுக்க அட்டகாசமான  சித்திரங்கள். அருமையோ அருமை ! 

புஷ்கரணிக்குப் பெயர் பகலிராப்பொய்கை ! மற்ற தீர்த்தங்களைப்போல் பகல் மட்டுமே என்றில்லாமல் ராத்ரியிலும் கூட தீர்த்தமாடலாம் என்பதே இதன் சிறப்பு.  கரையாண்டை ப்ரஸாத ஸ்டால் போல ஒன்னு ! இல்லே , தகவல் மையமா ?  இருக்கட்டும் !
ஆழ்வார்களால் மங்களசாஸனம் செய்யப்பட்ட நூத்தியெட்டு திவ்யதேசத்தில் இந்தக் கோவிலும் உண்டு. 

எதிர்பாராதவகையில் புறப்பாடு தரிசனம் கிடைச்சது, மனசுக்குள் ஒரு சொல்லமுடியாத மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது உண்மை.

வாங்க..... ரெட்டைக்கோவில்னு சொன்னேனே அங்கே போகலாம்.

( நிறையப்படங்கள் எடுத்துட்டேன் போல..... இப்பப் பார்த்தால் ஒரு நூற்றியிருபதுக்குப் பக்கம். ஃபேஸ்புக் ஆல்பமாப் போட்டுவைக்கவா ? ) 

தொடரும்...... :-)

Monday, June 16, 2025

பழைய நினைப்பில்......(2025 இந்தியப்பயணம் பகுதி 33 )

நான் இடத்தின் பெயரைச் சொன்னதும் நம்மவரின் முகத்தில் ஒரு ஒளி ! ஹா...  ஆனந்தமா இருக்கு எனக்கு !  நம்ம நூத்தியெட்டுலே சிவலிங்கத்தில் இருந்து ஒரு பதிநாலரைக் கிமீதான்.  அதே தஞ்சை-குடந்தை மெயின் ரோடுலே.....    தாராசுரம் வரை போய் அங்கிருந்து இடதுபக்கம் போகுது சாலை. தாராசுரம் மதில்சுவர் கண்ணில்பட்டதும் மனசு அடிச்சுக்கிட்டது உண்மை. ஆனால் நடக்க முடியாது. அதுவும் இந்த நட்டநடு மத்யானத்தில் தீமிதிக்கும் உத்தேசம் இல்லவே இல்லை..... இது சுவாமிமலைக்குள்ள வழி. ஆனால் அவ்ளோதூரம் போகவேணாம். அதுக்கு முன்னாலேயே திம்மக்குடி, பாபுராஜபுரம் வந்துருது !
வாசலில்  பெரிய போர்டெல்லாம் இல்லை.  கொடிகள் ஒட்டிப்படர்ந்திருக்கும் கேட் வாசலின் பக்கம் இன்டிகொ என்ற சின்ன போர்டு.  இதுவா இதுவான்னு முதலில் சம்ஸயம் வந்தது உண்மை. நாம் கும்பகோணம் நவகிரஹக்கோவில்களுக்கு வந்தப்ப, இங்கேதான்  நாலுநாள் தங்கினோம்.  அப்போ இதன் பெயர் ஆனந்தம். அதுக்கும் முன்னால் ஸ்டெர்லிங் ரிஸார்ட்ஸ் என்ற பெயர். பிஸினஸ் கை மாறும்போது, பெயர் மாற்றம் சகஜம்தான் இல்லையோ ! 
சந்தேகத்தோடெயே உள்ளே போறோம். கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு உள்ளே நடந்தால் ஒரு  ரெட்டைப்புள்ளையார் நம்மை வரவேற்கிறார் !  சிதறு தேங்காய் உடைக்க முன்னால் ஒரு தொட்டி ! புதுசா இருக்குல்லே ?  நாம் வந்தது 2009 ஃபிப்ரவரி மாசம். ஆச்சே பதினாறு வருஷம்.... மாறாதா என்ன ?  ரெட்டைப்புள்ளையாருக்கு விளக்கம் வேற இருக்கு !  இதுவரை நான் தெரிஞ்சுகாத சமாச்சாரம்.  நின்னு வாசிச்சால்,  நாம் சுதை என்பதை சோதைன்னு  போட்டு வச்சுருக்காங்க. ப்ச்... போகட்டும்.....  வர்றவங்க  முக்கால்வாசி வெளிநாட்டு மக்கள்தான்.   அவுங்களுக்குப் புரிஞ்சாச் சரி. 
மரத்தாண்டை சில  குயவர்கள், சட்டிபானை வனைஞ்சுக்கிட்டு இருக்காங்க.  
எதுத்தாப்லெ ஒரு பெரிய கட்டடம்.  மாடிவேற இருக்கு. சட்னு பார்த்தால் ஏதோ விக்டோரியன் பில்டிங் !!! இல்லே அரண்மனையா ? உச்சியிலே யானைகள் இருக்கே!  கஜல‌க்ஷ்மியா நடுவிலே ? 
கொஞ்சதூரத்துலே..... அருணன் ஓட்டும் ஏழு குதிரைகள் இழுக்கும்  ரதத்தில் சூரியன் !  நியூஸி வாழ்க்கையில் எனக்கு வாழ்வாதாரமா இருக்கறவன். 

காபி பார்னு எங்கே ? உள்ளே ஒரு ஜட்கா !
திண்ணை வச்ச வீடு பார்த்ததும் போய் உக்கார்ந்தோம். எனக்குத் திண்ணை வீடுகள் ரொம்பவே பிடிச்ச சமாச்சாரம். நியூஸியில் வீடு கட்டும்போது.....  ஆசைதான். காலநிலைக்குச் சரிப்படாது...ப்ச்.... இந்த ஆசைக்காக  சிலமுறை நம்ம ஈஸிஆரில் இருக்கும் தக்ஷின்சித்ரா போய் வந்துருக்கேன்.  என்ன ஒன்னு..... அங்கே அந்த வீடுகளில் வசிக்க முடியாது.... காட்சிக்கு மட்டுமே.....

முந்தி இங்கே வந்து தங்கினோமுன்னு சொன்னேனில்லையா..... அப்பக்கூட திண்ணை இருக்குமுன்னு தெரியாது.  நமக்கான அறைக்குக் கூட்டிப்போகும்போதுதான்  நம்ம வீடு திண்ணைவீடுன்னு தெரிஞ்சதும்.....  வாயெல்லாம் பல் ! செல் ரொம்ப புழக்கத்தில் இல்லாத காலம் அது. இப்ப மாதிரி கையில் உலகம் கிடையாது. 

இப்ப எங்கே இந்த வகை வீடுகள் எல்லாம் ?  ரொம்பச் சின்ன கிராமங்களில் இருக்கோ என்னவோ ?  
ரெஸ்டாரண்டைத் தேடிப்போனால்  ரெண்டுபக்கமும் குதிரைகள் வரிசைகட்டி நிக்கும் பாதை. அட ....  இது புதுசு ! அந்தாண்டை என் யானை !  இது எங்கே இங்கேன்னு  தோணுச்சு. மொத்தத்தில் புதுசுகளை எண்ணாமல், பழசை மட்டும் எண்ணினால் ரெண்டு கை விரல்களே போதும் போல !  ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருந்த  பெரிய மொம்மைகள்  பழசே. ஆனால் அதன் பக்கத்தில்  எதிரும்புதிருமா மூணு பெண்களும் ஆண்களும்.  

இந்த    இண்டிகோ   INDeco   India's Eco  friendly global tourism  award  வாங்கியிருக்கு.  பதினேழாம் நூற்றாண்டைச்  சேர்ந்த மூணு  பாழடைஞ்ச கிராமங்களில் இருந்த வீடுகளைப் பிரிச்செடுத்துவந்து அதே ஸ்டைலில் பழமை மாறாமல் புது வசதிகளோடு அமைச்சுருக்காங்க. முதலில் பார்த்த அந்த விக்டோரியன் பில்டிங் கூட அந்தக் காலக்கட்டத்து சமாச்சாரம்தான். 

ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.  அவ்வளவா மாற்றம் இல்லை.  முதலில் ரோஸ்மில்க் கொண்டுவந்து கொடுத்தாங்க.  எனக்கு ரொம்ப சாப்பிட வேணாம். கொஞ்சம் லைட் மீல் வேணும்.  பயணத்தில் தயிர் சாப்பிட பயம்.    நம்மவருக்கும் கோபாலுக்கும் தாலி மீல்ஸ் சொல்லிட்டு  , எனக்கு  எலுமிச்சை சாதம் இருக்கான்னதுக்கு,  அந்த தாலிமீல்ஸ்லேயே இருக்கு.  நீங்க பேசாம அதிலேயே ஷேர் பண்ணிருங்க. முழு தாலி உங்களால் சாப்பிடமுடியாதுன்னுட்டு 'கேஸ்' க்ளோஸ் பண்ணிட்டாங்க.
சூப், தயிர்வடைன்னு ஆரம்பிச்சுத் தாலி வந்தது.  அதோ என் எலுமிச்சை சாதம் ! இதுவே எனக்குப் போதும் !

இந்த ரெஸ்ட்டாரண்ட்டும், தொட்டடுத்து இருந்த  கான்ஃபரன்ஸ் ஹாலும் முந்தி இருந்த பழைய கட்டடங்கள்தான். பொன்னியின் செல்வனில் நந்தினி வந்த மூடுபல்லக்கின் திரையை மாற்றிட்டாங்க. முந்திக் காலியா இருந்த பல்லக்கில் இப்போ ஒருத்தி. ஆனால் நம்ம நந்தினி இல்லை. 

ராமாயணத்தூண் ( டெர்ரகோட்டா )இருந்த இடத்தைச் சுத்தி பெரிய முற்றத்தோடு வீடுகள்.  பாம்புப்படுக்கையோடும் தேவிகளோடும்   தூணாண்டை வந்து படுத்துருக்கார் மஹாவிஷ்ணு. நாபிக்கமலத்தில் ப்ரம்மா வேற !
 சுடுமண் சிற்பங்களும்,   சுவர்ச்சித்திரங்களுமா இடமே அடையாளம் தெரியலை. 

                                             
ஊர்மையத்துக்கு வந்துருந்தோம்.  தகப்பனுக்கு உபதேசிக்கும் சிலை (மட்டும்) பழசே !  அரங்கமும் புதுசுதான்.  கலைநிகழ்ச்சிகள்  நடக்கும்போது அருமையாக இருக்கும்தான். ஆனால் கும்மோணக்கொசுக்களுக்கு யார் பதில் சொல்வது ? 
 சிறையில் போட்டதும் நிம்மதி கிடைச்சது.  நேதாஜி இருந்த செல் ! 
பதினெட்டாம்படி கருப்பன் இருக்கார். இந்தக் காலை வச்சுக்கிட்டு எப்படி ஏறிப்போறது.... ப்ச்....
ம்யூஸியத்துக்குத் தனிக்கட்டடம் வந்துருக்கு.  நல்ல பெருசு.  பழைய ம்யூஸியம் இருந்த இடம் எங்கேன்னு தேடிப்போனோம். ஆப்ட்டது !
உள்ளே வெறுமை.  சுவரில் சிவன் மட்டும் சடைகுழலோடு சிவனேன்னு இருக்கார். சிம்மாசனத்தில் அமர்ந்து க்ளிக்ஸ் ஆச்சு. 

கொஞ்சதூரம் சுத்திப்பார்க்கலாமுன்னா மழைத்தூறல் ஆரம்பிச்சது.  பார்த்தது போதுமுன்னு கிளம்பினோம்.  நேரா நம்ம ராயாஸ்தான். ஏழு கிமீ தூரத்துக்கும் குறைவு.  காமணியில் வந்து சேர்ந்தோம்.

என்ன ஒன்னு..... முந்தி பார்த்தப்ப  ரொம்பவே விஸ்தாரமான கிராமமா இருந்த இடம், இப்போ இடைவெளியில்லாமல் நெருக்கியடிச்ச  நகரங்கள் போல ஆகிப்போயிருக்குன்னு தோணுது.   ஆனாலும் திண்ணை வச்ச வீடுகள் கண்களை நிறைச்சது உண்மைதான் !

 அங்கே எடுத்த படங்களை நேத்துதான்  ஃபேஸ்புக்கில் ஆல்பமாப் போட்டு வச்சேன்.   ரெண்டு மூணு க்ளிக்ஸ்கூட இருக்கும்,  சில படங்களுக்கு.   எடிட் பண்ணலை. மன்னிச்சூ......

ஆல்பத்தின் சுட்டி கீழே !

https://www.facebook.com/media/set/?vanity=gopal.tulsi&set=a.10230377596646313 

கீழே சுட்டி : முந்தி போய் தங்கினப்ப இப்படி இருந்துச்சு.  விருப்பம் இருந்தால் எட்டிப்பாருங்க. நம்ம வீடுதான் ! 

https://thulasidhalam.blogspot.com/2009/03/2.html

 தொடரும்.......... :-)