Wednesday, August 16, 2017

அரிசியில் நம்ம பெயரை எழுதாம விட்டுட்டானே ....(இந்திய மண்ணில் பயணம் 44)

மடத்துக்குள்ளே  போனதும் கூண்டுக்கிளியிடம் கொஞ்சம் கொஞ்சல்.  வண்டியில் இருந்த பழங்களை எடுத்துவந்து கொஞ்சம் ஊட்டியாச். பேரு லக்ஷ்மின்னு சொன்னதா நினைவு.
விநியா     அதுக்குள்ளே வந்து,     இன்னும் ஒரு  பத்துப்பதினைஞ்சு  நிமிஷத்தில் சாப்பாடு  தயாராகிரும். உங்களுக்கு இந்த பெஞ்சுலேயே இலை போட்டுடலாமுன்னு சொன்னாங்க.

அதுக்குள்ளே நம்மவர்  கழிப்பறை எங்கேன்னு கேட்டுட்டுப் போனவர் , உடனே திரும்பி வந்து  தலையை ஆட்டினார்.  அப்புறம் மெள்ள என் காதில்.....  செத்துருவேன்னார்....  அட ராமா...

இங்கே அஹோபிலமடத்தில்   யாத்திரைக்காரர்கள் தங்க அறைகளும் இருக்காம். ஆனால்  மடத்துக்குள்ளே என்றபடியால்....   எல்லோருக்கும் அந்த பொதுக் கழிப்பறை தான்.  குளிக்க கிணத்தடி இருக்கு.
இதே போலத்தான் நம்ம ராமானுஜகூடத்திலும்  பக்தர்கள் தங்கி கோவில்களை தரிசனம் பண்ணிக்க அறைகள் இருக்குதான்.  ஆனால் எல்லா இடமும் இந்த கதியில்தான் இருக்கும்.

மணி இப்பதான் பதினொன்னே கால் ஆகுது. பேசாமக் கிளம்பிட்டோமுன்னா   மத்யானம் லக்நோவைச் சுத்திப் பார்த்துக்கலாமேன்னு ஐடியா வந்ததும்,  சாப்பாடு வேணாமுன்னு வினியா கிட்டே சொல்லிட்டுக் கிளம்பலாமுன்னு மடப்பள்ளியை எட்டிப்பார்த்தேன்.  ஒரு பார்வையே போதுமானதாக இருந்துச்சு.
அஞ்சு நிமிசத்துலே இலை போடறேன்னு சொல்லிக்கிட்டே வெளியில் வந்த  வினியாவிடம்,   நம்ம திட்டத்தைச் சொன்னதும் அவுங்க முகத்தில் ஒரு  கவலை வந்து படிஞ்சதோ..... சமையல் ஆயிடுத்துன்னாங்க.  'பரவாயில்லை..... இப்ப பசி இல்லை.   அதை வேற யாருக்காவது  கொடுத்தால் ஆச்சு' ன்னு  கோபால் கொடுத்த  ஒரு நல்ல தொகையை அவுங்க கையில் திணிச்சேன்.    இதோ நம்ம ஷ்யாம் மோஹன் சாப்பிட்டுக்கட்டுமே....
இவ்ளோ தூரத்தில் நம்ம   வகை சமையல் கிடைப்பது அபூர்வம் இல்லையோ?  ஆனால் பெருமாள் அந்த அரிசியில் நம்ம பெயரை எழுதாம விட்டுட்டானே....   பெருமாளின் செக்ரட்டரிக்குக் கவனம் போதாது......
ட்ரைவரையாவது சாப்பிடச் சொல்லலாமான்னு  என்னாண்டை கேட்ட நம்மவருக்கு, 'அவர் பெயரையும் எழுதலை'ன்னேன்.


நாங்க  தமிழில் பேசிக்கிட்டு நின்னதை வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன ஷ்யாம் மோஹனுக்கு  கைடுவேலைக்கான அன்பளிப்பு கொடுத்துட்டு கிளம்பினோம்.   உண்மையில்  கைடு இருந்ததால்   ரெண்டே மணி நேரத்தில்  இத்தனை இடங்களையும் தரிசனம் செய்ய முடிஞ்சது.
நமக்கு இன்னும் ரெண்டு மணி நேரப்பயணம் பாக்கி இருக்கு லக்நோ போய்ச் சேர.
டோல் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். நல்ல பிஸியான ரோடுதான்.  லக்நோவுக்கு  ஒரு பதினைஞ்சு இருவது கிமீ  இருக்கும்போது  Bora Institute of Management Sciences  கண்ணில் பட்டது.   பெரிய வளாகமா  நிறைய வண்டிகள் வேற நிக்குது!  அங்கே நல்ல ரெஸ்ட்டாரண்ட் இருக்கான்னு நம்மவர் கேட்டதுக்கு  ஆமாம்னு சொல்லி  அங்கே போய் வண்டியை நிறுத்தினார்  வினோத்.
இதுமாதிரி பயணங்களில் அதுவும்  வாடகை வண்டிகளில் போகும்போது, ட்ரைவருக்கு  பசிக்கும். நேரத்துக்கு சாப்பாடு  வாங்கித் தரணும் என்பது நம்மவரின் முக்கிய  பாய்ன்ட்.  எப்பவும் அலர்ட்டா இருக்கணுமே  அவர்! நம்ம உயிர் அவர் கைகளிலிருக்கே....

இந்தியச் சாலைகளில் வண்டி ஓட்டுவது இப்பவும் நமக்கு சாலஞ்ச்தான்.  எல்லாரும் அவரவர் இஷ்டத்துக்கு  ஓவர் டேக் பண்ணிக்கிட்டும், சரியான சிக்னல்கொடுக்காம  குறுக்கே பாயறுதுமா இருப்பதைப் பார்க்கும்போதே நமக்கு வயித்துலே புளியைக் கரைச்சுரும். இங்கே நியூஸியில் கூடப் பாருங்க.... எப்பவாவது  ராங் சைடில் இருந்து  ஒரு வண்டி நம்மை முந்திக் கடக்கும்போது, ட்ரைவர் இண்டியனான்னு  பார்க்கும் வழக்கம் என்னிடம் இருக்கு.  99%  சரியா இருக்கும். அப்ப பாக்கி 1%?  அது சீன ட்ரைவரா இருப்பார்.



விழா நடக்கும் இடம் போல அலங்காரம். கிட்ஸ் கார்னிவல் !   ரெஸ்ட்டாரண்ட் உள்ளே போய் டைனிங் ஹால் பார்த்தால் ஓக்கே.  ரெஸ்ட்ரூம் ஆல்ஸோ ஓக்கே!   எப்பவும் ரெஸ்ட்ரூம் சுத்தத்தை வச்சு  சமையலறை சுத்தத்தைக் கணிக்கலாம்.
நான் ஒரு புதினா பரோட்டா சொன்னேன்.   கோபாலும், வினோதும் வேறென்னமோ வாங்கினாங்க. அதுலே  இருந்த பருப்பில் கொஞ்சம் எனக்கு.  கூடவே லஸ்ஸியும் கிடைச்சது.  இதுவே எனக்கு யதேஷ்டம்.



ரொம்பக் கூட்டம் இல்லைன்னாலும் குடும்பம் குடும்பமா பயணிகள் வந்து சாப்பிட்டுப் போய்க்கிட்டு  இருந்தாங்க. கொஞ்சம் மேல்தட்டு மக்கள்னு அவுங்க பிள்ளைகளைப் பார்த்தப்பப் புரிஞ்சது.   உடைகளை  வச்சுச் சொல்லலை.  நடந்துக்கிட்ட விதம் அப்படி......   கெட்டுக் குட்டிச்சுவர்னு சொல்வோம் பாருங்க..... அந்த விதம்....  :-(  பொது இடங்களில் எப்படி நடந்துக்கணும் என்பது  முக்கிய விஷயம். ஆனால் நம்மாட்கள் இங்கேதான் தங்கள் பவிஷைக் காமிப்பாங்க.  ப்ச்...

அங்கே இருந்த ஊஞ்சலை உடைச்சுப் போடாத குறை.....  இன்னொரு குழு வந்து உடைக்குமுன் நமக்கும்  ஒரு  க்ளிக்  ஆச்சு.  ஆனால் அந்த ஊஞ்சல் அழகுதான்.  இப்படி ஒன்னு கிடைச்சால்  வாங்கிப்போக ஆசை.
பக்கத்துலே இருக்கும் இன்ஸ்டிட்யூட்  மாணவர்கள்  நிறையப்பேர் வந்து சேர்ந்தாங்க. லஞ்ச் டைம்.


நாங்க வெளியே கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுட்டு லக்நோ ஹொட்டேலுக்கு  வந்துட்டோம்.  இன்றைக்கு முழுக்க வண்டி நமக்கு என்றதால்....    கொஞ்சம் ஓய்வுக்குப் பிறகு ஊர் சுத்தப் போகலாமா?

தொடரும்.............  :-)



13 comments:

said...

/ஆனால் பெருமாள் அந்த அரிசியில் நம்ம பெயரை எழுதாம விட்டுட்டானே....//

// 'அவர் பெயரையும் எழுதலை'ன்னேன்.//


// ட்ரைவருக்கு பசிக்கும். நேரத்துக்கு சாப்பாடு வாங்கித் தரணும் என்பது நம்மவரின் முக்கிய பாய்ன்ட்.//

//கெட்டுக் குட்டிச்சுவர்னு சொல்வோம் பாருங்க..... அந்த விதம்....//


ரசித்த வரிகள்...

said...

ஊஞ்சல் ஆகா!அழகிய படம்.

said...

// ட்ரைவரையாவது சாப்பிடச் சொல்லலாமான்னு என்னாண்டை கேட்ட நம்மவருக்கு, 'அவர் பெயரையும் எழுதலை'ன்னேன்.//

எனக்கென்னவோ சாப்பாடு டிசைட் பண்ணுவது மகாலக்ஷ்மி தாயாரோன்னு ஒரு சம்சயம்.

// பொதுக் கழிப்பறை // எதுவும் 'பொது' ன்னு இருந்துட்டா நாஸ்தி தான்.

நன்றி தொடர்கிறேன்.

said...

இந்த வண்டி ஓட்டுவது பற்றி.. சிங்கையில் இருந்து வந்து பல வருடங்கள் ஆனாலும் சராசரியாக ஒரு நாளைக்கு 20 பேரையாவது திட்டுகிறேன் அதுவும் முக்கால் மணி நேர பிரயாணத்துக்கு.
சமீபத்தில் சென்று வந்த கொச்சினிலும் இப்படித்தான் இருக்கு!

said...

நைமிசாரண்யத்தில் தரிசனம் முடிந்தது கண்டு மகிழ்ச்சி. ரொம்ப நாகரீகமாக 'அரிசியில் எங்கள் பெயர் எழுதவில்லை' என்று சொல்லியிருந்தீர்கள்.

said...

பீச்சுக்கு போனா இருபது ரூபாயில் பேர் எழுதி கொடுப்பாங்கம்மா

said...

வாங்க ஸ்ரீராம்.

வரிகளை ரசித்ததை நானும் ரசித்தேன் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

மெனு டிஸைட் பண்ணறது தாயார். ரேஷன் கடைக்குப் போறது பெருமாள் ! :-)


பொது இடத்தைச் சுத்தமா வச்சுக்க ஏன் நம்ம சனத்துக்கு இவ்ளோ கஷ்டம்? :-( அவரவர் பயன்படுத்திய பின்னே சுத்தமா வச்சுட்டு வரக்கூடாதா?

said...

வாங்க மாதேவி.

அழகுதான். ஆனால் நம்ம வடுவூரார் சொன்னது போல ஸ்ட்ராங்கா இருக்காதுதான், இல்லே?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நைமிசாரண்யம் நல்லபடி தரிசனம் ஆனது எனக்கும் மகிழ்ச்சியே!

அரிசி, பெயர்... போகட்டும்..... நமக்கு வேணாமுன்னு பெருமாள் தீர்மானிச்சுட்டார். இங்கே நம்மூர் இஸ்கான் கோவிலில் நடுநிசி பூஜைக்குப்போய் கண்ணன் பிறந்ததைக் கொண்டாடிட்டு, துளி பிரஸாதம் வாங்காமல் வீட்டுக்கு வந்துட்டோம். ராத்திரி ஒரு மணிக்குதான் விருந்தே ஆரம்பம். அந்த நேரத்துக்கு சாப்பிட முடியுமா? பக்தர்கள் எல்லாம் தினம் முழுக்க உபவாசம் இருந்துட்டு குழந்தை பிறந்த பின்னே சாப்பிடப்போறது நியாயம். ராச்சாப்பாடை முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போன நாமும் கூடவே சாப்பிட ரெண்டு வயிறா இருக்கு?

துளி இனிப்பாவது வாங்கிக்கலாமுன்னா.... பெரிய க்யூ. அதன் வாலில் ஒட்டினா... மூணு மணி ஆகலாம். அப்ப இனிப்பிலும் கூட நம்ம பெயர் எழுதலை தானே? :-)

said...

வாங்க ராஜி.

பீச்சிலா? அய்ய.... அது பழைய அரி :-)

said...

வாங்க குமார்.

எதிலும் ஒழுங்கே இல்லாமல் இருப்பதுதான் சுதந்திரம் னு சனம் புரிஞ்சு வச்சுருக்கு :-(

said...

இந்திய ஓட்டுனர்கள் - இவர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நிறையவே சொல்ல வேண்டியிருக்கும்! :(

பொதுக் கழிப்பறை - நிறைய மாற்றங்கள் தேவை. மாற்றம் எங்கிருந்து ஆரம்பித்து வைப்பது என்பதில் இன்னமும் குழப்பம்! மக்களிடமும் மாற்றம் தேவை. சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே கிடையாது! சுத்தம் செய்ய வேண்டியது அடுத்தவர் கடமை என அசிங்கம் செய்வது மட்டுமே நமது உரிமை என்ற எண்ணம் இங்கே அனைவருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி இப்போதும் கோபத்தினை உண்டாக்குகிறது!

தொடர்கிறேன்.