Monday, October 15, 2018

கேதாரீஷ்வரா......... !!!!(பயணத்தொடர், பகுதி 22)


உம்முடைய சிறப்பு என்ன?  நரஸிம்ஹன்.

உமக்கு....  ?  மகிஷாசுரமர்த்தினி!

நீரோ....? மஹாவிஷ்ணு

நான் பிள்ளையார்... ஸ்பெஷலிஸ்ட்டுங்க!
எனக்கு பூவராஹன்தாங்க.....
இப்படித்தான் சிற்பிகளைக் கேட்டு அந்தந்தக் கோவில் வேலைகளுக்கு அனுப்பி இருப்பாங்க போல!  அதானே.... எது நல்லா வருதோ அதைச் செஞ்சால் அழகு !
ஹொய்சாலேஸ்வரர் கோவிலில் இருந்து கிளம்பும்போதே மணி  ரெண்டு, அஞ்சு.  பகல் சாப்பாட்டு நேரம்..... இங்கே பக்கத்துலேயே இருக்கும் மயூராஷாந்தலா ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். இதுவும்  கர்நாடகா மாநில சுற்றுலாக் கழகம் நடத்தும் ஹொட்டேல்தான்!   நம்ம பேலூர் மயூராவெலாபுரி போலவே இருக்கு.
நமக்குச் சப்பாத்தியும் பருப்பும் சுடச்சுடச் செஞ்சு கொடுத்தாங்க. சாப்பாடு ஆனதும் இன்னும் பக்கத்துலே இருக்கும் சில கோவில்களுக்குப் போகணும்.  இங்கே ரெஸ்ட்ரூம் தேடிப்போன சமயம்,  ஆஃபீஸ் ரூமைக் கடந்து போக வேண்டி இருந்துச்சு.  அப்போ அங்கே இருந்த ஆஃபீஸர், நம்மை  முகம்மலர வரவேற்று 'வசதிகள் எல்லாம் சரியா இருக்கா?  என்னென்ன கோவில்கள் பார்த்தீங்க இங்கே ஹளேபீடுவில்'னு  விசாரிச்சவர், 'பொதுவா ஹளேபீடு வர்றவங்க, ஹொய்சாலேஸ்வரா மட்டும் பார்த்துட்டுப் போயிடறாங்க'ன்னு சொல்லிட்டு,     இன்னும் சில கோவில்களுக்குக் கட்டாயம் போய்ப் பாருங்கன்னு பரிந்துரைச்சார். இவர் பெயர்தான் மறந்துபோச்சு. ஆஸாத் என்ற நினைவு. அவர் கொடுத்த  கார்ட்,   கைமறதியா எங்கியோ வச்சதைத் தேடணும். அதெல்லாமே நாம் போகலாமுன்னு ப்ளான் செஞ்சு வச்சவைதான்!

கார்ட் கிடைச்சுருச்சு. அவர் பெயர் அஸ்லம் ஷரீஃப். Aslam Sharief

மெயின் ரோடுலே ஒரு நானூறு மீட்டர் போய், இடதுபக்கம் திரும்பி உள்ளே போகணும். போனோம். அப்பதான் தோணுச்சு எப்படி சிற்பிகளுக்கான அஸைன்மென்ட் இருந்துருக்குமுன்னு .....  இந்தப்  பதிவின் ஆரம்பத்தை இன்னொருக்காப் பாருங்க:-)
கம்பி வேலியைகடந்து போனால் ஒரு இடத்தில் உள்ளே போகும்  நுழைவுவாசல்.  உள்ளே.........   சின்னதா முற்றமும் அஞ்சுபடிகள் ஏறிப்போகும் மேடையும் அதிலொரு கோவிலுமா?
நடன அரங்குபோல .... திரைச்சீலையில் வரைஞ்ச சித்திரங்கள் போல.....   அடடா..... அடடா.....  வாசல் இது இல்லை....முழுசா கற்சுவர்!
அதே நக்ஷத்திர மேடை!  ஆனால் சின்னது.... படிகளின் ஆரம்பத்துலேயே பெருமாளும் தாயாருமா !  கொஞ்சம் சிதைஞ்ச நிலையில்... இன்னொரு பக்கம் சிவன்?
இந்த நக்ஷத்திர மேடைக்கு  'ஜகதி' என்றொரு பெயர் இருக்கு!

ஒருத்தர் நின்னு சிற்பங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தார். அவ்ளோதான் . இப்போ நாங்க ரெண்டு பேர்!  த்ரீ இஸ் க்ரௌட் :-)

வெளிப்புறச் சுவர்களில் எட்டுவரிசையில்  யானையில் ஆரம்பிச்சுக் குதிரைவீரர்கள்,  பூவேலை, யாளி, அன்னம் இன்னபிற.....




அதுக்கு மேலே கடவுளர்கள்!  கொஞ்சம் பெரிய சைஸ்தான்!  அழகான ரிஷபத்தின் மேல் சிவபார்வதி ! விஷ்ணு, பிரம்மா, சிவன், சிவன்.... அப்புறம் கைலாயமலையைத் தலையில் தூக்கி வச்சுருக்கும் ராவணன்!
அடுத்த பகுதியில் பத்துவரிசையும் பலகணிகளுமாய்......
அதுக்குப்பின் இன்னொரு சுவரும் அதில் ஒரு  கதவுமாய்!  பூட்டி  இருக்கும் அந்த கம்பி போட்ட கதவில்  நம்ம கண்ணையும் கெமெராக் கண்ணையும் அனுப்பினேன்.



உயரம் அதிகமில்லாத  அர்த்த மண்டபம். அதே கடைஞ்செடுத்த தூண்கள்.... அந்தாண்டை கருவறையில் கேதாரீஸ்வரர்! சின்ன லிங்கமே!  கேதாரம் போக முடியாதவர்கள், இவரைத் தரிசித்தால் போதுமாம்! (ஹப்பா.... நமக்குப் பலன் கிடைச்சுருச்சு! )

கிபி 1219 இல் கட்டுன கோவில். இரண்டாம் வீரவல்லாளரும் அவர் மனைவி ராணி அபிநவ கேதலா தேவியும் கட்டுவித்தது!  பேலூர் கோவிலுக்கும் முந்தியதாம்.  கட்டிமுடிக்க சுமார் எம்பது வருஷங்கள் ஆச்சுன்னு..... ராணியம்மா....  சைவம் போல !
இந்த ஹொய்சாலா பேரரசு கட்டின கோவில்கள் எல்லாமே மாக்கல் பயன்படுத்துனதுதான். அதான் மாவுலே செய்யறதுமாதிரி லகுவா வளைஞ்சு கொடுத்துருக்கு!  தும்கூர் பகுதிகளில் இருந்து கொண்டுவந்த மாக்கற்களாம். (அப்ப தும்கூரில் 'இருந்த' மாக்கல் மலையே காணாமப்போயிருக்கும், இல்லே!)

தொல்லியல் துறையின் பாதுகாப்பில் கோவில் இருக்கு.  புல்வெளியை எல்லாம்  சீராக வச்சுருக்காங்களே தவிரக், கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் ஒன்னும் நடக்கறதில்லை. அதான்  சனம் வந்துபோகலை.... மறக்கலாச்சு.....
ராமாயண, மஹாபாரதக் காட்சிகள் எல்லாம் அருமை!  கலந்துகட்டி இருக்கும் சிற்ப வரிசைகளில்  கவனமாப் பார்த்துக்கிட்டே போகணும்!  சின்னச் சின்ன அளவு என்பதால் மிஸ் பண்ண ச்சான்ஸ் இருக்கு!
ராமர் பாலம் கட்டுறதைப் பாருங்க !
பீஷ்மர் அம்புப் படுக்கையில் !
ராவணன்...
  மாயமான்.....
ஆத்மலிங்கம்!









   இந்தக் கொம்பூதறவன் யாராக இருக்கும்?

நொடிக்கு நூறு அம்பு விடும் அர்ஜுனன்!
   அடிபட்டு கிடக்கான்...இன்று போய் நாளை வாராய்.....
  லக்ஷ்மணன் மயக்கம். ஆஞ்சி சஞ்சீவி மலையைத் தூக்கிண்டு வர்றார்!
சண்டைமுடிஞ்சு சீதையை மீட்டு வர்றாங்க!
அபிமன்யூ இறந்த சேதி கேட்டு க்ரிஷ்ணனும் அர்ஜுனனும்  ஆத்துலே தலைமுழுகுதல்....

தில்லிசுல்தானின் படைகள், மாலிக் காஃபூர் தலைமையில் வந்து அழிச்சுட்டுப்போன கோவில்களில் இதுவும் ஒன்னு!  அற்புத அழகு ஜொலிக்கும் சிலைகளில் கையும் காலும்  காணாமப் போயிருப்பதைப் பார்த்தால் மனம் கசந்துபோவது உண்மை....

ரொம்பவே பழுதுபட்ட  சிற்பங்களுக்குப் பதிலா வெறும் கற்பலகைகளை வச்சுவுட்டுருக்காங்க.  மேலும்  இளகி விழாமல் இருக்கணுமேன்னு....
ஹூம்..............

தொடரும் .... :-)

8 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

//கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் ஒன்னும் நடக்கறதில்லை. அதான் சனம் வந்துபோகலை.... மறக்கலாச்சு.....//

டீச்சர் நான் அப்படி நினைக்கலை. ஜனங்களுக்கு எதனுடைய அருமையும் தெரியாது (பெரும்பாலானவர்களுக்கு). அதனால், இதனை கோவிலைப் போல் பராமரித்திருந்தால், பாதி சிற்பங்கள் பழுதாயிருக்கும், இல்லைனா பிரசாதம், குங்குமம் எண்ணெய் இவைகளை அப்பியிருக்கும்.

நான் சமீபத்தில் கிருஷ்ணாபுரம் (நெல்லை) கோவில் சென்றேன். அங்கு பல அருமையான சிற்பங்களுக்கு விரல் மூக்கு ஒடிந்து இருக்கிறது. பாதி வில்லையே ஒடித்துவிட்டனர். பெண் மூக்கில் மூக்குத்தி அணியும்படி சிறிய ஓட்டை கல்லிலேயே செய்திருக்கிறார்கள் என்பதால், அதில் குச்சியைச் செருகி (வேறு எதைச் செருகினார்கள் என்று தெரியலை) அந்தப் பகுதியையே ஓட்டையாக்கிவைத்திருக்கிறார்கள். இந்த வேலை காரணமாக இப்போது அந்தச் சிற்பங்களைச் சுற்றியே கண்ணாடிக் கதவு போடப்போகிறார்களாம். அப்போ இன்னும் சுத்தம்... ஒரு சிற்பத்தையும் ரசிக்க முடியாது.

said...

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலைன்னு சொல்ற மாதிரி கல்லைப் போல சிலைன்னும் சொல்லலாம். எடுத்துக்குற கல்லுக்கு ஏத்த மாதிரிதான் செதுக்க முடியும். எல்லாக் கல்லுலயும் எல்லாச் சிற்பமும் பண்ண முடியாது. இவங்களுக்குக் கிடைச்ச மாக்கல்லை எவ்வளவு அழகா “மா”கல்லா மாத்தியிருக்காங்க.

said...

Tourism Officer கொடுத்த கார்ட் கிடைச்சுருச்சு. அவர் பெயர் அஸ்லம் ஷரீஃப். Aslam Sharief

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நம்ம ஜனங்கள்..... நீங்க சொன்னது ரொம்பச் சரி. வேற்று மதத்தவர், ஆங்காரமா உடைச்சுத் தள்ளுனாங்கன்னா, நம்ம சனம் அறியாமையில் அதையே செஞ்சுக்கிட்டு இருக்கு :-(

கோவைப்பயணத்தில் (அது 1976) பேரூர் போனப்ப, சிற்பங்களைச் சுத்தி கம்பித்தடுப்பு போட்டு வச்சுருந்தாங்க. அதுவும் வலை அடிச்சு.... ஒரு சிற்பத்தின் அழகைக்கூட முழுமையா ரசிக்க முடியலை. :-(

இன்னும் கிருஷ்ணாபுரம் போகலை. அங்கேதானே ரதியும் மன்மதனும் ரொம்பவே அழகான சிலைகளா இருக்காங்க?

said...

வாங்க ஜிரா.

அவுங்க சிற்பம் செஞ்சா, நாம் மாக்கல் சட்டிகள் செஞ்சு சமைக்கப் பயன்படுத்தறோம்....

பெயருக்கேத்தாப்போல அவ்வளவு நெளிவுசுழிவுக்கெல்லாம் ஈடு கொடுக்குதுல்லே அந்த 'மா' க்கல்! செதுக்கும்போது குழைவா இருப்பது, அப்புறம் நாள்பட பயங்கரக் கடினமா ஆகிருமாமே!

said...

பிரமாதம் ...


அற்புதம்..

வாவ்..


வேற வார்த்தைகளே மனதில் வரல...என்ன ஒரு இடம்