Wednesday, January 02, 2019

தாய் தகப்பன் வீட்டுக்கு வந்த மகிழ்ச்சி!!!! (பயணத்தொடர், பகுதி 49 )

கொள்ளிடம் பாலம் பார்த்ததும் மனசு துள்ளியது உண்மை!  தோ.... வந்துட்டோம் இன்னும் கொஞ்ச தூரம்தான், இல்லையோ! கோபுரம் தெரியுதா என்ன?   நாலே கால் மணிக்கு  ஹொட்டேல் ஹயக்ரீவாவில் செக்கின் ஆச்சு!  ஏற்கெனவே சிலமுறை வந்து தங்கிய இடம்தான்.  ஃபேன்ஸியா ஒன்னும் இருக்காது. ஜஸ்ட் பேஸிக். சுத்தமாவும் இருக்கு.  முக்கிய தகுதி.....  நம்ம ரங்கனின் காலாண்டை!  அஞ்சாறு நிமிட் நடையில் ராஜகோபுரத்தாண்டை போயிடலாம்.
வரவேற்பில் இருந்தவருக்கு நம்மை ஏற்கெனவே பார்த்த பரிச்சயம் உண்டு என்பதால், ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றார்!  ஒவ்வொரு அறையா ஃபால்ஸ் ஸீலிங் போட்டு சீரமைக்கிறார்களாம்.  இதுவரை ஒரு அறைக்குத்தான்  போட்டுருக்காங்க. அது நமக்கு! ரெண்டாம் மாடி.  லிஃப்ட் இருக்கு :-)

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, கீழே கார்பார்க்கை ஒட்டி இருக்கும் பாலாஜி பவனில் காஃபி குடிச்சுட்டுக் கோவிலுக்குப் போகலாமாம். 'நம்மவர்' உத்திரவு !!!

திருச்சியில் இருக்கும் நம் வாசகநண்பருக்கு, நாம் வந்த சேதியைச் சொன்னோம்.  இவர் நியூஸி வரை வந்து நம்மை சந்தித்தவர்! 

கொஞ்சம் வலை மேய்ஞ்சபின் அஞ்சு மணிக்குக் கிளம்பினோம்.  ரமேஷிடம் அறை எப்படி  இருக்குன்னதுக்கு  வாயெல்லாம் பல் :-) ட்ரைவர்களுக்கு மொட்டை மாடியில் அறை.  கோபுரதரிசனம்தான்!  கேக்கணுமா?  வேற யாரும் இல்லையாம்.  மொத்த இடமும் ரமேஷுக்கே!
ரங்காகோபுரம் போகணுமுன்னா... ஒரு வழிப்பாதைன்னு கொஞ்சம் சுத்திவளைச்சுக்கிட்டுப் போகணும்.  வாசலாண்டை  ஆண்டாளின் 'போலி' இருந்துச்சு!  பார்த்தவுடன் சட்னு தெரிஞ்சுரும். இவள் பட்டைக்காரி !  ட்ரான்ஸ்ஃபார்மர், குப்பைத்தொட்டி . டுவீலர்ஸ் எல்லாம் இருக்கும் கீக்கிடத்தில் நிக்கறாள்.... ஒரு அவசரமுன்னா சட்னு ஓடமுடியாது.... பாவம்.....
ஆண்டாளும் இப்பெல்லாம் அவ்வளவா வெளியில் வர்றதே இல்லையாம். உடம்பு சரி இல்லை. ப்ச்....   காலையில்  திருமஞ்சனத்துக்கு ஒரு குடம் கொண்டு வர்றதோடு சரி. ஆமாம்... இவ்ளோ பெரிய ஆளுக்கு  ஒரு குடம் தண்ணீர் போறுமோ? காலையில் திருப்பள்ளி எழுச்சியின் போது, இவள் கொண்டுவரும் குடம் தண்ணீர் 'தந்த்தசுத்தி'க்குன்னு  வச்சுவான் போல!
ரங்கா கோபுரம் வழியாக உள்ளே போறோம்.  எல்லாம் அப்படிக்கப்படியே..... கொடிமரத்தில் கூடுதல் பூட்டுகள் !

கெமெரா டிக்கெட் கவுன்ட்டரில் யாரும் இல்லை...  அங்கெ நின்னுக்கிட்டு இருந்த கோவில் பணியாளரிடம், டிக்கெட்டுக்கு அப்புறமா வரேன்னுட்டு   உள்ளே போய் பெரிய உருவில் இருக்கும் பெரிய திருவடி வணங்கினோம்.  எப்பவும் போலவே 'முழிச்சு'ப் பார்க்கிறார்!

இன்றைக்கு ச்சும்மா ஒரு சுத்தி சுத்தினால் போதும்னு தோணுச்சு. 'நம்மவர்'தான் பெரிய பெருமாளைப் பார்க்க வேணாமான்னுட்டு நேராக் கம்பித்தடுப்பு வரிசைக்குள்  போய் நின்னார்.  விலைவாசி ஏறலை.... அதே இருநூத்தியம்பது ரூபாய்தான் ஆளுக்கு.


எதிர்பாராதது நடந்தே போச்சு!  ஒரு காமணியில்  பெரியவரை தரிசனம் பண்ணி வெளியே வந்துருந்தோம்.  கூட்டமே இல்லைன்னாலும், எங்கே அஞ்சு நிமிட் நிக்க விடறாங்க?  இந்த முறையும் யாகபேரரை ஸேவிக்க மறந்துட்டேன்.  எங்கே..... ?  அவன் முன்னால் நின்னதும்.... எதுவுமே  தோணாம, கண்ணுலே காவிரி பாயுதே.....  பெருமாளே....  எம்பெருமாளே.....

வெளியே வந்ததும்தான் வழக்கம்போல் அடடா.... அது பார்க்கலையே, இது பார்க்கலையேன்னு  விசாரங்கள். அன்னமூர்த்திப்பெருமாளை மறக்கலாமோ? ஓடிப்போய்  அவர்முன்னால் நின்னேன்.    ஊர்உலகத்துக்கே சோறு போடறவர், தேமேன்னு  உக்கார்ந்துருக்கார்.



களஞ்சியம் இருக்கும் திருச்சுற்றுக்குள் சுத்தும்போது இன்ப அதிர்ச்சி !   அஞ்சு  தானியக் களஞ்சியங்களையும் பழுது பார்த்துப் பளிச்ன்னு  வச்சுருக்காங்க!!!   ஒவ்வொன்னும் அஞ்சாயிரம் கலம் நெல் கொள்ளும் சூப்பர் மெகா சைஸ்  குதிர்கள் ! நம்ம ஸ்ரீராமானுஜர் காலத்தில்  கட்டுனவை.
மேலே படம்,  முன்பொருக்கில்!   நம்ம படம்தான்

அரசர்கள் கோவிலைக் கட்டி, அதன் செலவுகளுக்கு ஏகப்பட்ட நிலங்களை மான்யமா  எழுதி வச்சாங்க. அதையெல்லாம்  அ.வியாதிகளும், அவர்களைச் சேர்ந்தவர்களும் அநியாயத்துக்குக் களவாடாமல் விட்டுருந்தா, கோவில்கள் எல்லாமே கொழிக்கும்தான். தெய்வம் அன்புருவானதுன்னு சொல்லிச் சொல்லி ஏத்திவச்சுட்டோம். அதுவும் ஆமான்னுட்டு கொடியவர்களைத் தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு!  நின்று கொல்லாமல் அன்றே கொன்னுருந்தால் ஒரு பயல் கோவில் சொத்துலே கை வைப்பானா?  ப்ச்.... என்னவோ போங்க....


தான்யலஷ்மியைத் தரிசனம் செஞ்சோம்.

ஓவியங்களின் பராமரிப்பு பாருங்க.....   :-(






தன்வந்திரி சந்நிதி, சொர்கவாசல், கம்பர் மண்டபம், உக்ரநரசிம்ஹர்னு தரிசனம் செஞ்சுக்கிட்டே.... அம்மா அம்மான்னு தாயார் சந்நிதிக்கு வந்தாச்சு.  எப்போதும் போல் காட்சிக்கு எளிமையா இருக்காள்.  ரெண்டு மூலவரைக் காண்பிச்சு, 'நம்மவருக்கு' விளக்கியாச்சு! உள்பிரகாரம் சுத்தும் ஆச்சு.






அக்கடான்னு தாயார் சந்நிதி வாசல் மண்டபத்தில் உக்கார்ந்தோம். அருமையான காற்று!  மனசு லேசா இருக்கு!






  பேசாம  ஸ்ரீரங்கத்துலேயே தங்கிடலாமான்னு  வழக்கம்போல்  ஆசை வந்தது நிஜம்.  நடக்கற காரியமா?  நாலுநாள் தங்கிப் பார்த்தால் போதும், போ!  வழக்கம் போல் முளையிலேயே கிள்ளி எறிஞ்சேன். ஆசை அறுமின், ஆசை அறுமின்....
அப்பதான் தோழி வீட்டுக்குப் போகலாமான்னு  'நம்மவர்' கேட்டார்!

தொடரும்...........  :-)


18 comments:

said...

ரங்கா !! ரங்கா !! "தாய் தகப்பன் வீட்டுக்கு வந்த மகிழ்ச்சி!!!!

said...

படங்களைப் பார்த்து ரசிக்கவே ரெண்டு கண் போறவில்லை. அருமை. பூனையார் ரசிக்க வைக்கிறார். கோவில் சொத்து கொள்ளை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மை. நெற்களஞ்சியங்கள் பழுதுபார்க்கப்பட்டு கம்பீரமாக, அழகாக நிற்கின்றன.

said...

ஆஹா அரங்க மாநகரம் வந்தாச்சு.....

தொடர்கிறேன்.

said...

வாசிக்கிற மாதிரியே இல்லை..கூடவே பேசிக்கொண்டே நடக்கும் இயல்பான எழுத்து நடை!

said...

மீண்டும் ஒரு முறை திருவரங்க தரிசனம் தங்கள் வழியாக ....


said...

சொந்த அலுவல் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர இயலா நிலை. வழக்கம்போல அருமையான தரிசனம் கண்டேன், அழகான புகைப்படங்களுடன்.

said...

"பேசாம ஸ்ரீரங்கத்துலேயே தங்கிடலாமான்னு வழக்கம்போல் ஆசை வந்தது நிஜம்." எனக்கு ஸ்ரீரங்கத்திலேயே வீடு வாங்கி தங்கி விட ஆசை. ஆனா கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் வீடு விற்பதும் வாங்குவதும் சட்டப்படி இப்போ சாத்தியம் இல்லையாமே?!

said...

கோவிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி, சட்டைமுனி சித்தர் ஜீவசமாதி இரண்டும் இருக்கிறது என்று கேள்வி. எங்கே என்றுதான் தெரியவில்லை.

said...

கோவிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி, சட்டைமுனி சித்தர் ஜீவசமாதி இரண்டும் இருக்கிறது என்று கேள்வி. எங்கே என்றுதான் தெரியவில்லை.

said...

கூட்டமே இல்லாத நாளிலும் நடக்கும் “ஜருகண்டி ஜருகண்டி” அநியாயம் தான். இதை பழனியில் ஒரு முறை அனுபவித்தேன். வேறு வழியே இல்லாமல் ஐந்து முறை வெளியே போய் மறுபடி உள்ளே வந்தேன்.

அரங்கத்திலேயே தங்கிவிட டீச்சருக்கு ஆசை. அரங்கன் இருக்கும் அரங்கம் உங்கள் அந்தரங்கம் தானே டீச்சர். அந்த வகையில் நீங்கள் இருக்கும் இடம் தான் அரங்கம்.

said...

வாங்க நன்மனம்.

உண்மைதான். நிம்மதியாக் கோவிலுக்குள் சுத்தி வரலாம். எந்த சந்நிதிக்கும் போகாமலேயே மனநிம்மதி கிடைச்சுருது!

said...

வாங்க ஸ்ரீராம்.

களஞ்சியங்களுக்கு நெல் வந்து சேரணுமுன்னு பெருமாளையே வேண்டிக்கணும்!

ஏகப்பட்ட பூனைகள் இங்கே! காலையில் சிலர் பூனைகளுக்கு பெடிக்ரீ பிஸ்கெட்ஸும், பாலும் வைக்கறதைப் பார்த்திருக்கேன். அதுகளும் வழக்கமான இடங்களில் காத்து நிக்குதே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்!

உங்க ஊரின் அருமையை என்னன்னு சொல்ல !!!!

said...

வாங்க உமா.

2004 இல் ஆரம்பிச்ச 'நடை'யை நிறுத்தவே இல்லை :-) இதுதான் எனக்கானதுன்னு தெரிஞ்சு போச்சு !!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

எத்தனை முறையானாலும் சலிப்பே தட்டறதில்லையேப்பா!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வலைப்பூவின் வசதி போல வேறொன்னும் வராது. எப்போ நேரம் கிடைக்குமோ அப்போ பார்க்கலாம்!

said...

வாங்க கலை.

வீடு வாடகைக்குக் கிடைக்குதுங்க. கோவிலைச் சுத்தியுள்ள வீதியில் கிடைச்சால் பரம சுகம்!

நாம் பெரிய பெருமாளை, சந்தனுமண்டபத்தில் ஏறிப்போய் பார்த்துட்டு அதே வழியில் திரும்பறோமே.... அதுக்கு நேரெதிராக இருக்கும் மண்டபமே கிளிமண்டபம். அதுக்குள்ளே போனால் அர்ஜுன மண்டபமும் இருக்கு. இந்த மண்டபங்களில் நுழைஞ்சால் நம்ம வலதுகைப்பக்கம் கடைசியில் துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி இவர்களின் சந்நிதி உண்டு.

மத்தபடி நீங்க சொல்லும் சட்டைமுனி சித்தரைக் கேள்விப்பட்டதே இல்லை. விசாரிக்கலாம், அடுத்த முறை!

said...

வாங்க ஜிரா.

ஜருகண்டி, நகருங்க சொல்லிப் பழக்கமாயிருச்சு. அதான் ஆள் இல்லைன்னாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க :-)

அஹம் பிரம்மாஸ்மின்னுதான்.... இப்பெல்லாம்.... ஆனாலும் தமிழ்நாட்டுக்கோவில்கள் சுத்தும் ஆசையை விடமுடியலையே.....