Friday, May 30, 2025

இன்னும் வேளை வரலை போல !!!(2025 இந்தியப்பயணம் பகுதி 27 )

சங்கத்தில் தங்கல் ஒரே ஒருநாள்தான். கிளம்பறதுக்கு முன்னால் வேறெங்காவது கோவில்களுக்குப் போகணுமான்னு கேட்ட நம்மவரிடம், ராஜராஜனின் மணிமண்டபம் மட்டும் பார்த்துட்டுக் கிளம்பிடலாமுன்னு சொன்னேன்.  
காலை ப்ரேக்ஃபாஸ்ட் நமக்குத் தில்லானாவில்.  விஜியைக் கூப்பிட்டு வெளியே சாப்பிடச் சொல்லவேண்டியதாப் போச்சு.  ராத்ரி நல்லாத் தூங்கினாரான்னு கேட்டதுக்கு, 'நல்ல வசதியான அறைம்மா'ன்னார். அமைச்சர் வருகையால்  எல்லாமே நிறைஞ்சுபோச்சுன்னார். 
அம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டமாம் இந்த சங்கம் ஹொட்டேல்களுக்கு ! சங்குசக்ரா நிறுவனம் இதை நடத்துது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, செட்டிநாடுன்னு  கிளைகள் இருக்காம். வெளிநாட்டு மக்கள், வெளிமாநில மக்கள் எல்லோரும் பொதுவா இங்கேதான் தங்கறாங்களாம்.  மேனேஜருடன் கொஞ்சநேரம் பேசியதில் விவரங்கள் கிடைச்சது.  

பஃபேதான் என்றாலும் நிறைய சமாச்சாரம்  எனக்கு வேண்டாததுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ! தில்லானாவில் உள் அலங்காரம் கொஞ்சம் மாத்தியிருக்காங்க.  பொதுவா ஹொட்டேலிலும் உள் அலங்கார மாற்றங்கள் செஞ்சுருக்காங்க.  அங்கங்கே  ரொம்பவே அழகழகான தஞ்சாவூர் பெயின்டிங்க்ஸ்!
பயணம் போகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில்  ஸ்ரீரங்கம் வந்தால், திருச்சி சங்கத்தில்தான் தங்குவோம்.   அதிகாலையில் கிளம்பி ஸ்ரீரங்கம் வரமுடியலைன்னு மூஞ்சைத்தூக்கி வச்சுப்பேன்.  அதுக்குப்பிறகுதான் ஸ்ரீரங்கம் ஹயக்ரீவா தங்கல் ஆரம்பிச்சது. ரொம்பவே பேஸிக் என்றாலும் கோவிலாண்டை இருக்கே !!!
ராஜராஜனின் மணிமண்டபத்தில் ஏராளமான ஓவியங்கள்  இருக்குன்றதால்..... எனக்குக் கொஞ்சம் அதிகமா நேரம் ஒதுக்கித்தரணுமுன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டுக் கிளம்பி அங்கே போனால்..... போனால்...... சுத்தம். கேட் அடைச்சுருக்கு.   உள்ளே ஆள் நடமாட்டமே இல்லை.  பராமரிப்புக்காக மூடி வச்சுருக்காங்கன்னு அப்புறம் தெரிய வந்தது.... (அதான் வலை இருக்கே ! ) நமக்கு இன்னும் வேளை வரலை போல ! ப்ச்.....    
அறைக்கு வந்து செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம். நேரா நம்ம கும்பகோணம் ராயாஸ் க்ராண்ட்தான்.  நாப்பது கீமீ தூரம்.  முக்கால் மணியில் போய்ச் சேர்ந்தோம். இந்த முறை குளம் வியூ இருக்கும் கார்னர் ஸ்யூட் கிடைச்சது.  எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹொட்டேல் இது.  நல்ல விசாலமான அறைகள்.  படு சுத்தமா மின்னும் தரைகள், காரிடோர்,  அலங்காரப்பொருட்களா பளபளன்னு மின்னும் பித்தளை/ வெங்கல சாமி சமாச்சாரங்கள். நந்தி ஒன்னு அட்டகாசம் கேட்டோ ! 

ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கினால்...வாவ்..... கரையாண்டை ஒரு சாவு சமாச்சாரம். குளிப்பாட்ட தண்ணீர் கொண்டுபோகும் சடங்கு.....  வத்தலகுண்டு வாழ்க்கையில் பார்த்துருக்கேன். நீர்மாலைன்னு சொல்வாங்க. போன ஜீவனுக்கு முக்தி கிடைக்கணுமுன்னு ஒரு நிமிட் ப்ரார்த்தனை.

இங்கேயே இருக்கும் ரைஸ் n ஸ்பைஸ் ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு.  எனக்கு ஒரு ஸ்ப்ரிங் ரோல் சொன்னேன்.... ப்ச்.....  
கொஞ்ச நேர ஓய்வுக்குப்பிறகு  கோவில் விஸிட் கிளம்பினோம்.  முதலில் நம்ம சக்ரபாணி & விஜயவல்லி ! கோவிலில் மாசிமாச உற்சவங்கள் ஆரம்பிக்கும் சமயம்.  ஏற்பாடுகள் தடபுடலா நடக்குது.  மாதங்களில் நான் மார்கழின்னு தப்பாச் சொல்லிட்டானோ பெருமாள்னு தோணுது.  மாசிமாதத்தில்தான்  முக்கால்வாசி பெருமாள் கோவில்களில் ப்ரம்மோத்ஸவமும்,  மற்ற கோவில்களில்  மாசிமகப் பெருவிழா, தேர்த்திருவிழான்னும் நடக்குது.  அது நம்ம பக்க வசந்த காலம் என்றபடியால்.....  சித்திரை வெயிலுக்கு முன் கூடியிருந்து கொண்டாடிக்கலாம்  என்ற வகையோ என்னவோ !
 திருக்கோவில்,  'கேட்டதும்  கிடைக்கும்' என்ற  வகையானபடியால் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சுதான்.  இங்கே  மூலவர் தரிசனத்துக்குப் போக ரெண்டு வாசல்கள், உத்திராயணம் & தக்ஷிணாயணம் ! ஆடி மாசப்பிறப்பு , தை மாசப்பிறப்பு நாட்களில்  ஒரு வாசல் மூடி அடுத்தவாசல் திறக்கும் விழா உண்டு.  ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற  பழமொழி இந்த நிகழ்ச்சியினால்தான் ஏற்பட்டுருக்கும், இல்லே ? 
கருவறை ரொம்ப உயரத்தில் இருப்பதால் ஒரு இருபது இருபத்தியஞ்சு படிகள் ஏறத்தான் வேணும்.  கேசவா நாராயணான்னு மெல்ல ஏறிப்போனேன்.  தாயார்  விஜயவல்லியின் சந்நிதிக்கும்  படிகள் ஏறத்தான் வேணும்.  இப்பப் புதுசா கால்வலி மக்களுக்காக ஒரு சரிவுப்பாதை போட்டுருக்கு கோவில் நிர்வாகம்.  யானை இழுக்கும் ரதம் வடிவில் இந்த சந்நிதி இருக்கும்.  பட்டர் வருகைக்காகக் கொஞ்சம் காத்திருந்தோம்.    
கோவில் உள்ளே பராமரிப்பு போதாதுன்னு தோணுச்சு.  ......ப்ச்......
மற்ற சந்நிதிகளிலும்  போய் ஸேவிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.

கூடவே வாங்க...... இன்றையக் கோவில் உலா இன்னும்  இருக்கு !

தொடரும்.......... :-)

6 comments:

said...

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பின்னால ராமர் கோவில் இருக்கே, இந்த முறையும் உங்களுககு தரிசிக்க நேரம் வரல.

said...

தஞ்சாவூர் சீக்கிரம் ஒரு விசிட் அடிக்கவேண்டும்.  சக்ரபாணி கோவில் எல்லாம் கடந்த தீபாவளியை ஒட்டி தரிசித்து வந்தேன்.  ரைஸ் அண்ட் ஸ்பைஸிலும் சாப்பிட்டேன்!

அந்த குளத்துக்கு இடதுபக்கம் ஒரு கோவில் இருக்கிறது.,  அதைப் பார்க்க முடியவில்லை.  நான் சென்ற நேரம் அடைத்து விட்டார்கள்!

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்த இடதுபக்கக்கோவில் நம்ம காசி விஸ்வநாதர் கோவில்தான் ! கீழே சுட்டி..... முன்பொருக்கில் போனதே

https://thulasidhalam.blogspot.com/2017/11/77.html

said...

வாங்க விஸ்வநாத்,

ராமர் இன்னும் மனம் வைக்கலை...... ப்ச்.....

said...

பார்க்கும் இடம் எங்கும் கோவில்கள் நிறைந்திருக்கும் கும்பகோணம் நேரடியாக தரிசிக்க எமக்கு வாய்ப்புகிடைக்கவில்லை.

உங்கள் பகிர்வில் தரிசிக்கிறோம்.

said...

வாங்க மாதேவி,

அடுத்தமுறை இந்தியப்பயணத்தில் உங்களுக்குக் கும்பகோணம் வாய்ப்பு உண்டு ! ஏராளமான கோவில்கள். ஒரு நாலே கிமீ தூரத்தில் சிற்பக்கலைச்சிகரம் தாராசுரம் கூட இருக்கு !