Friday, June 20, 2025

வீட்டோடு மாப்பிள்ளையான திருநறையூர் நம்பி ......... (2025 இந்தியப்பயணம் பகுதி 35 )

திருவிண்ணகரில் இருந்து புறப்பட்ட காமணியில் திருநறையூர்  வந்துட்டோம். ஒரு ஆறு கிமீ தூரத்துக்கும் குறைவுதான். நாச்சியார் கோவில்னு சொன்னால் சட்னு புரிஞ்சுரும், இல்லே !சீனுவுக்கு வேடிக்கை பார்ப்பது ரொம்பவே பிடிக்குது !  அதுவும் நின்ன இடத்தில் இருந்தே தெருவில் போற வர்ற மக்களையும் வண்டிகளையும் இன்னபிற ஜீவன்களையும் வேடிக்கை பார்க்கும்போது நேரம் போறதே தெரியாதுல்லே ?
கோபுரவாசல் கடந்து உள்ளே நுழைஞ்சதுமே  ஆளுயர உண்டியலும், பலிபீடமும், கொடிமரமும், பெரிய திருவடியின் சந்நிதியுமா.....  ப்ரம்மாண்டமான முன்மண்டபத்தில் பக்கத்துக்கெட்டா பதினாறு கருப்புத்தூண்கள்.  கருப்புப்பளிங்கோன்னு ஒரு மாயத்தோற்றம் தரும்வகை, பளபளப்பு !  இந்த இடத்துக்கு 'நின்னில முற்றம்' என்று ஒரு பெயர் இருக்கு !
பெரிய திருவடியின் சின்னச் சந்நிதிக்குப் புதுசாக்  கவசம் போட்டு இருக்காங்க.  நல்ல பளபளப்புடன் ஜ்வலிப்பாக இருக்க வேண்டியது.  ஆனால்......
அதோ,  உயரத்தில் இருக்கும் கருவறையில் பெருமாள் , ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் நிக்கறார்.  ஒவ்வொரு மண்டபமாக் கடந்து போகும்போது சில படிகள் அங்கங்கேன்னு இருப்பதால்  கால்வலியை அவ்ளோ கணக்கில் கொள்ளாமல் மெதுவா ஏறிப்போக முடிஞ்சது. குறுக்கும் நெடுக்குமா இல்லாம அங்கிருந்து இங்கே , இங்கிருந்து அங்கேன்னு நடுவில் எந்தத்தடங்கலும் இல்லாமல் நேராப் பார்க்கும்  டிஸைன் !

 
ஒரு இடத்தில் மட்டும் பெரிய எண்ணிக்கையில் ஒரு பதினொருபடிகளை ஏறத்தான் வேணும். அர்த்தமண்டபத்தில் நமக்கு வலப்பக்கம் பெரிய திருவடிக்குத் தனிச்சந்நிதி! பெரிய உருவம்தான் ! கல்கருடர்னு சொன்னால் சட்னு புரிஞ்சுரும்!  நகைநட்டெல்லாம்  நெளியும் சப்ஜக்ட்டு.  ஒன்பது பாம்பாபரணங்கள்!  கர்ணாபரணம் கூடன்னா பாருங்க.  வெள்ளிக்கவசம் மின்னறது !
பட்டர் ஸ்வாமிகள் தீபாரத்தி காமிச்சு, நமக்குக் கண்ணில் ஒத்திக்கக் காமிச்சார். தீர்த்தமும் கிடைச்சது !

https://www.facebook.com/watch/?v=1209145147238392

(மேலே :  தீபாரத்தி. ஒரு நண்பரின் பதிவு ) 

அடுத்த அஞ்சாறுபடி ஏறி மூலவர் தரிசனத்துக்குப் போறோம்.  நமக்கு இதுதான் கடைசி ஏற்றம். அப்பாடா...... நமக்குமேலே அவன்.... இன்னும்  ஒரு அஞ்சு படி ஏறி உள்ளே நிக்கறான் ! 

கருவறையில்  நல்ல கூட்டம்.  எல்லாம் கல்யாணத்துக்கு வந்துட்டுத் திரும்பிப்போகாம இங்கேயே இடம்பிடிச்சு நின்னால்.... இப்படித்தான் !  நல்லவேளை..... அந்த முப்பத்துமுக்கோடியும் கூட இங்கேயே  தங்கியிருந்தால்...... அம்பேல்......

யாருக்குக் கல்யாணம் ? எல்லாம் நம்ம ச்சீனுவுக்குத்தான்.    அட! கதை உண்டோ ? உண்டு. வாங்க கதைக்குள் போகலாம். 

மேதாவி முனிவர் தனக்குப் பெண்குழந்தை வேணுமுன்னு மஹாலக்ஷ்மியை வேண்டி, தவம் செய்யறார்.  தாயாருக்கு ரொம்ப இளகிய மனசாச்சே !   சரின்னு சொல்லிட்டாங்க.   

ஸ்ரீவைகுண்டத்தில் பாம்புப் படுக்கையில் கிடக்கும் (எப்பப் பார்த்தாலும் படுக்கை. இடுப்பு  வலியா என்ன ? )கணவரிடம்,  'இதோ பாருங்க......   பொழுதன்னிக்கும் உங்களுக்குக் கால் அமுக்கிவிட்டே என் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சநாளைக்கு பூதேவி மட்டும் அந்த ஸேவையைச்  செய்யட்டும். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்.  அப்புறமா கொஞ்சநாள் கழிச்சு நீங்க  என்னக்கூப்பிட வாங்க'. 

( மைண்ட் வாய்ஸ்: பூதேவி,  நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்த அதே ஏரியாவுக்குத்தான் நானும் போறேன்.  இவர் கேட்டாப் போட்டுக்கொடுத்துறாதே..... சரியா ? )

பெண்குழந்தைகள் எப்பவும் பிறப்பதில்லை. கிடைப்பதுதான் வழக்கம் என்பதால் அதையொட்டி ஒரு வஞ்சுளமரத்தடியில் குழந்தைப்பொண் கிடைக்கிறது மேதாவி முனிவருக்கு !  பெயர் வைக்க ஒரு கஷ்டமும் இல்லை...... வஞ்சுள மரத்தடியில் கிடைத்தவள் வஞ்சுளா ! வல்லின்னு கூடச் சேர்த்துக்கலாம். வஞ்சுளவல்லி.  அதென்ன வஞ்சுளமரம்னு கேக்கமாட்டீங்கதானே ?  நம்ம மகிழ மரம்தான் அது ! 

குழந்தை வளர்ந்து இளம்பெண்ணானாள். தகப்பனுக்கு வீட்டு வேலைகள், தவம், பூஜை, இப்படி நியமம் நிஷ்டைகள் எல்லாத்திலும்  உதவியாக இருக்காள். உப்புப்போட்டு சமைக்கக்கூடக் கத்துண்டாள் !  தகப்பனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி !   காலம் அப்படியே போயிருமா என்ன ? 

இங்கே படுக்கையில்  கிடப்பவருக்கு (அறிதுயிலாம் ! ) மனைவி போய் ரொம்ப காலமாச்சேன்னு தோணுது.  ஹாலிடே டெஸ்டிநேஷன்  எதுன்னு சொல்லாமக் கிளம்பிப்போயிருக்காள்.  நான் ஒருத்தன் போய் எங்கேன்னு தேடறது ?  ஒரு நாலுபேர் கூட வந்தால் நல்லா இருக்குமே......   வேற யாரையும்  கேக்க வேணாம். நமக்குத் தெரியாத வித்தைகளா ?  குடும்பத்தை க்ளோன் பண்ணிக்கலாம்.  சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன்,  வாசுதேவன், புருஷோத்தமன் இப்படி  தன் பிள்ளை, பேரன்னு தன் குடும்ப அங்கத்தினர்கள் பெயரிலேயே   ரூபம் எடுத்தாச்சு.   லீடர் என்னவோ வாசுதேவன்தான்.

ஆளுக்கொரு திசையில் போய்  லக்ஷ்மியைக் கண்டுபிடியுங்கன்னதும்  எல்லோரும் போறாங்க.  எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருந்த பெரிய திருவடி கருடர்,' எனக்குத்தான் பறக்கத்தெரியுமே.... நானும் போய்த் தேடறேன்'னு பறந்து போனார்.   வஞ்சுளாதேவி என்னும் மஹாலக்ஷ்மியைக் கடைசியில் கண்டுபிடிச்சவர் கருடர்தான்.   சமாச்சாரத்தை வாசுதேவராண்டை சொன்னதும்,  நாலு திக்கும் போன நால்வரையும் திரும்பி வரச் சொல்றார்.  

இப்ப அந்த அஞ்சு பேரும்  மேதாவி முனிவர் வீட்டாண்டை போறாங்க.  வாசலில்  நடமாட்டம்னு எட்டிப்பார்த்த அப்பாவி  முனிவர், அதிதி உபச்சாரம் செய்ய வீட்டுக்குள்ளே  வரச் சொன்னார்.  

அம்மா.... வஞ்சுளா .... ஒரு அஞ்சு இலை போடும்மா !  நல்ல ருசியா 'உப்புப்போட்டு' சமைச்ச,  விருந்து சாப்பாடு ஆச்சு.

சாப்பிட்டு முடிச்சவங்களுக்குக் கைகழுவத் தண்ணீர் ஊத்தச் சொல்லி மகளிடம் சொல்றார்.  நான் அப்பாவின்னு நினைச்சது இப்பத்தான். தடிதடியா வாலிபப் பசங்க  வந்துருக்காங்க.   அதுவும் முன்பின் தெரியாதவங்க. வயசுக்கு வந்த பொண்ணை இப்படியா அவுங்க முன்னால்  கொண்டு நிறுத்தறது?

நாலு பேரும்  ஓசைப்படாமத்  தலை குனிஞ்சு சாப்பிட்டோமா,  குனிந்த தலை நிமிராமல்  கை கழுவுனோமான்னு  போனப்ப , அஞ்சாவதா வந்தவன்  (வந்தவர்)  பொண்ணைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டான். உண்ட வீட்டுக்குச் செஞ்ச துரோகமில்லையோ?  பயந்துபோன பொண்ணு 'குய்யோ முறையோ'ன்னு கத்த, வந்து பார்த்த மகரிஷிக்கு கோவம் பொங்கிக்கிட்டு வந்துச்சு. சபிக்கப்போகும் தருணம் அந்த 'அஞ்சாத அஞ்சாமத்து ஆள்' (டீம் லீடர் வாசுதேவன் ) 'உங்க பொண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கோ'ன்னு கெஞ்சினாராம். இவன் யாரடா போக்கிரின்னு நினைக்கும்போது தன்னுடைய 'சுயரூபத்தை' வெளிப்படுத்தி இருக்கார் மஹாவிஷ்ணு.


ஆஹா.... ... விஷ்ணுவே மாப்பிள்ளையா வந்தாக் கசக்குமா? ஆனாலும் இப்ப இந்த நிமிட்  மாமனார் கை ஓங்கி இருக்கு. 'பொண்ணைத் தா' ன்னு கெஞ்சிக் கேட்பவரிடம் சில கண்டிஷன்களைப் போட்டுக்கணும். இந்த நொடியைத் தவறவிட்டா.....அப்புறம் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமா?

"என் பொண்ணுக்குத்தான் எல்லாத்துலேயும் முதலிடம் கொடுக்கணும். அவள்தான் இங்கே அதிகாரம் செய்யறவளா இருக்கணும். நீ வீட்டு மாப்பிள்ளையாக் கிட. இன்னும் சுருக்கமாச் சொன்னால் அவள் பேச்சைக்கேட்டு நீ ஆடணும்"

பொண்ணு கிடைச்சாப்போதுமுன்னு  எல்லாத்துக்கும்  தலையை ஆட்டிட்டார் வாசுதேவன். அப்புறம்? (ஹென் பெக்டு ஹஸ்பெண்ட்ன்னு உள்ளூர்காரர் பேர் வச்சது  ரொம்பச் சரி !) 

அம்மாதான் இங்கே எல்லாம். இடுப்பிலே சாவிக்கொத்து கூட இருக்கு. கெஞ்சும் முகபாவத்தோடு கை நீட்டும் பெருமாளும், அவரைவிட ஒரு எட்டு முன்னால் நிற்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருமா இருக்காங்க கருவறையில். பெருமாளின் முகம், பாவனை அட்டகாசம்.  கூடவே வந்த மற்ற பாய்ஸ் என்ன ஆனாங்க?   அந்த நாலுபேரும்தான்  கருவறை பின்பக்கம் சுவரையொட்டி நின்னுக்கிட்டு இருக்காங்க.
மேலே படம்:  வலையில் இருந்து. நன்றி !

கருவறையில்  நல்ல பளிச் என்ற வெளிச்சம் , இடத்தையும் மனசையும் நிறைச்சது உண்மை. இதே பெயரில் இன்னொரு ஊரில் 'இருட்டில் ஒளிஞ்சு நிற்பவனை', வேணான்னாலும் மனம்   நினைக்க வச்சுருது. ஒப்பு நோக்காமல் இருக்க முடியலையே..... 
மனைவி சொல்லே மந்திரம் என்றநிலை என்பதால்  பக்தர்களுக்கு அருளும் பொறுப்பை எல்லாம்  பவர் ஆஃப் அட்டர்னின்னு பெரிய திருவடிக்குக் கொடுத்துட்டார். அவரும் பொறுப்பை ஏத்துக்கிட்டு விஷக்கடி முதல் சகல வேண்டுதல்களுக்கும்  இல்லை என்னாமல்  வரங்களை வாரி வாரிக்கொடுப்பதால்  அவருக்குத்தான் பக்தர்கூட்டம் அதிகம்! உலகில் இல்லாத அதிசயமா இவரே மூலவர், இவரே உற்சவர்னு இருக்கார் நம்ம கல்கருடர் !

இது நூற்றியெட்டு திவ்யதேசக் கோவிலும் கூட ! திருமங்கை ஆழ்வார் நூற்றிப்பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  என்ன இப்படி ஏகப்பட்ட பாசுர மழை ?  எல்லாம் நன்றியுணர்ச்சியில் பாடியவையே.....  ஸ்ரீநிவாஸனே ஆச்சார்யரா இருந்து  நீலனுக்கு (பூர்வாஸ்ரமப்பெயர்)  முத்ராதானம் செஞ்சதே காரணம். 

அட !  அப்படியா ?  அதுக்கும் ஒரு கதை இருக்கணுமே..... இருக்கே....

நீலன்  பழைய வாழ்க்கையில்  ஒரு குறுநிலமன்னராக இருந்தார்.    இவருடைய பூர்வாஸ்ரமத்துலே  குமுதவல்லி என்றொரு பெண்ணை விரும்பறார்.  அவளிடம் போய் 'உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வந்துருக்கேன்'னு சொன்னதும், பெருமாள் பக்தையான அவள் சொல்றாள், 'நீர் முத்ராதானம் பெறவில்லை. உம்மை மணம் முடிக்க இயலாது'

தோள்களில் சங்கு சக்கரம் முத்திரை இல்லாதவர் வைணவர் கிடையாதுன்னு அப்போ ஒரு எண்ணம்.  இதை யார் வேணாவந்து வச்சுடமுடியாது.  ஆச்சாரியன், தன் சிஷ்யரின் நியம நிஷ்டைகளைப் பார்த்து,  அவருக்குத் திருப்தியானால்தான்  பழுக்கக் காய்ச்சிய  சங்கு சக்கரச் சின்னங்களை தோளில் பதிப்பார்கள்.

நீலன், பெருமாளிடம் வந்து வணங்கி,  தன்னை ஒரு வைணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டறார். மனம் இரங்கிய மஹாவிஷ்ணு, தானே ஆச்சாரியனாக வந்து முத்ராதானம் செஞ்சு வைக்கிறார்.  சம்பவம் நடந்தது இங்கே இதே கோவிலில்தான் !!!!

 பெருமாளிடம் அழுது அரற்றி முத்திரை வாங்குனதும் திரும்பப் போறார் குமுதவல்லி வீட்டுக்கு.  இப்போ இன்னொருவிதமான நிபந்தனை விதிக்கிறாளாம் அவள்.

"தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்குத் திருவமுது படைத்து,  அவர்கள் அனைவரும் உண்டு முடித்தபின் மீதியான எச்சிலை உண்டு, அவர்தம் பாதம்பட்ட தீர்த்தத்தை பருக வேணும். இப்படி ஓராண்டு காலம் செய்துமுடித்த பின்  திரும்பி வந்தால் மணம் புரிவேன்"

ஃபோர் மச்சா இல்லை?

ஆனால்  நீலன் , குமுதவல்லி சொன்னபடி செஞ்சுக்கிட்டே வந்துருக்கார்.  என்னதான் குறுநில மன்னரா இருந்தாலும்  தினம் ஆயிரத்தெட்டு நபர்களுக்கு அமுது படைக்க முடிஞ்சுருக்குமா ? . செல்வம் எல்லாம் கரைஞ்சு போயிருது. ஆனால் ஒரு வருசம் இன்னும் முடியலை.  அதுக்காக வழிப்பறி செய்து  செல்வம் சேர்த்து,  அதில்  அமுது படைக்கும் செயலை விடாமல் செஞ்சு, கடைசியில்  குமுதவல்லியையே  கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்! காதல் படுத்தும்பாடு !!!! 

நீலன் என்ற திருமங்கை ஆழ்வார் மட்டும்தான்,  இந்த நூற்றியெட்டு வைணவ திவ்யதேசக் கோவில்களில் எண்பத்தியாறு கோவில்களில் பெருமாளை தரிசித்து, மங்களாசாஸனம்  செய்துருக்கார்னு ஒரு கணக்கு இருக்கு ! 


வெளிப்ரகாரம் சுற்றலாமுன்னா.....  பக்கவாட்டில் வெளிச்சம் இருந்ததே தவிர பின்பக்கத்துலே இருட்டு.  வேணாமுன்னு இருந்துட்டேன்.  பக்கவாட்டில் ஒரு தாற்காலிக மேடையில்  ஒரு ஏழெட்டுப்பேர் உக்கார்ந்து,  கோவில் ப்ரஸாதங்களான குங்குமம், மஞ்சள், கூடவே ஏதோ ஒரு பத்திரிகை  வச்சு  கவர்களில் போட்டுக்கிட்டு இருந்தாங்க. கோவில் உற்சவம் வருதாம்.  உபயதாரர்களுக்கும், கோவிலுக்குப் பணம் அனுப்பறவங்களுக்கும் தபாலில் அனுப்பணுமாம்.  எல்லோரும் வாலண்டியர்கள் தானாம். 
பெருமாள் ஸேவை ! நல்லா இருக்கட்டும். 

எட்டுமணிக்கெல்லாம் ராயாஸ் வந்துட்டோம். இன்றைக்கு ரொம்பவே நடந்தாச்சு. காலுக்கு சிஸ்ருஷை செய்யணும்.  ஒரு எட்டே முக்கால் ஆனதும் சாப்பிடப்போக சோம்பலா இருந்தது.  விஜியை செல்லில் கூப்பிட்டு,   அவருக்கு விருப்பமான இடத்தில் போய் சாப்புடுங்கன்னுட்டு, ரூம் சர்வீஸில்  நமக்கு  ஆளுக்கொரு கல்தோசையும் ரெண்டு மஸாலா பாலும்   சொன்னோம். இங்கே ராயாஸில் எனக்குப் பிடிச்சது, ஏனோ தானோன்னு இல்லாமல்  ரூம் சர்வீஸில்  டிஃபன், சாப்பாடு கொண்டுவரும் விதம் ! 






சரி.  நாளைக்கு ஒரு ஃபேவரிட் கோவிலுக்குப் போகலாம்.  காலையில்  ஒன்பது  மணிக்குத் தயாரா இருங்க.

குட்நைட்.

தொடரும்....... :-)








Wednesday, June 18, 2025

போற காலத்துலே, பொண்ணு கேக்குதோ ?? ......(2025 இந்தியப்பயணம் பகுதி 34 )

'ஈரேழுலகில் உமக்கு நிகராக யாருமே இல்லை. யாரோடும் ஒப்புக்கும் உவமைக்கும் கூட ஈடாகச் சொல்லமுடியாது.....' என்று  முனிவர்களும் தேவர்களும் போற்றிப் புகழும் ஒப்பிலியப்பன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நம்ம ராயாஸ் க்ராண்டில் இருந்து  ஏழு கிமீ தூரத்துக்கும்  குறைவே.  கும்மோணத்தில் இது ஒரு பேட்டை... திருநாகேஸ்வரம். அங்கே இருக்கு திருவிண்ணகரம் ! பொதுவா யாரும் இப்படிச் சொல்றதில்லை.... உப்பிலியப்பன்னு சொல்லிச்சொல்லி அவரை உப்பில்லாத பத்தியக்காரனாக்கிட்டாங்க சனங்க. ப்ச்.... பாவம்.
கல்யாணம் ஆனநாள் முதல் உப்பில்லாச் சோறு....( உப்புப்போட்டா ரோஷம் வந்துருமேன்னு  மாமனார் செஞ்ச சதியாக்கூட இருக்கலாமுன்னு இப்போ எனக்குத் தோணுது)

கிழவன் வந்து பொண்ணு கேக்கறான்.  'போடா கிழவா..... சின்னப்பொண்ணை உனக்குத்தரமுடியாது'ன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லாம.... என் பொண்ணுக்கு உப்புப்போட்டு சமைக்கத் தெரியாது....ன்னு சாக்குபோக்கு சொன்னால் ? 

வந்த கிழவன் மட்டும் லேசுப்பட்டவனா ? ஆனானப்பட்ட மஹாவிஷ்ணு, மாறு வேடத்தில் !   "அட ! அப்படியா..... பேஷ் பேஷ்....   எனக்கு உப்பே ஆகாது.  உப்பில்லாத சமையல்தான் சாப்பிடணுமுன்னு (தேவலோக )டாக்குட்டர் சொல்லியிருக்கார். கவலையே படாதீங்க. உப்புப்போடத்தெரியாது என்றது  நல்லதாப் போச்சு.(உப்பு வாங்கற செலவு மிச்சம்! )உங்க பொண்ணை கண்கலங்காமப் பார்த்துக்குவேன்."

கிழவனுக்கு இருக்கும் 'தில்'லைப் பாரு !  இதுலே யார் இந்தப் பொண்ணு? உங்க தங்கையான்னு கேள்வி வேற !  இருக்காதா பின்னே ? பொண்ணோட தகப்பனாருக்கு வயசு பதினாறுதான் !  என்றும் பதினாறுன்னு வரம் கிடைச்ச அதிருஷ்டகாரர் மார்க்கண்டேய மகரிஷிதான் அவர்.  அட ராமா..... அவரா இவர் ? அப்பப் பொண்ணோட தாயார் ? 

நோ தாய் ? எல்லாம் கிடைக்கிற பொண்ணுங்கதான். அந்தக் காலத்தில்  பெண்குழந்தைகளை அங்கங்கே விட்டுட்டுப்போறது ஒரு பழக்கம் போல இருக்கு.  தொட்டில் குழந்தை திட்டமெல்லாம் கிடையாது போல !  ரிஷிகளும் முனிவர்களும் தங்களுக்கு குழந்தை அதுவும் பெண் குழந்தை வேணுமுன்னு தவம் செய்வாங்களாம்.  உம் தவத்தை மெச்சினோமுன்னு ஒரு சின்னப்பொண் குழந்தையை அவுங்க போகும் வழியில்  போட்டு வச்சால் ஆச்சு. (என்ன அநியாயம் பார்த்தீங்களா ? )

ஆமாம்.... இந்த மார்கண்டேயருக்கு எதுக்குப் பொண்குழந்தை வேணுமாம் ? 

 எல்லாம் ஒரு பொங்கச்சம்தான் ! தன்னுடைய பொண்ணை மஹாவிஷ்ணுவுக்குக் கட்டிக்கொடுத்து, மாலின் மாமனார் என்ற பட்டம் வேணுமாம்.  தன்னுடைய பக்தியின், தவத்தின் மஹிமைக்கு மாலே வந்து பொண்ணு கேப்பாருன்னு பார்த்தால்...... ஒரு கிழவன் வந்து நிக்கறான்.....  என்ன சொல்லி இவனைத் துரத்தன்னு யோசனையா இருக்கார்.  வீட்டுக்குள்ளே பொண்ணு அழுதகண்ணும் சிந்திய மூக்குமாய்.....  ஐயோ.... அப்பா  என்னை இந்தக் கிழவனுக்குக் கட்டிக்கொடுத்துட்டா என் கதி என்ன ?  (அந்தக் காலத்தில் எல்லாம் பொண்ணோட விருப்பத்தைக் கேக்கறதே இல்லை. வீட்டுலே பெரியவங்க சம்பந்தம் பேசி முடிச்சு, இவர்தான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொன்னால் மறுபேச்சுக்கிடையாது )

பதிலுக்காகக் காத்திருந்த கிழவனுக்கே  நடக்கறதைப் பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கு.  சட்னு சுயரூபத்தைக் காட்டினார்!  தகப்பனுக்கும் மகளுக்கும் வாயெல்லாம் பல். அழுதபிள்ளை சிரிக்குது !  அந்தப்பொண் பெயர் தெரியுமோ ? துளசி  என்னும் பூமாதேவி !

பூமாதேவி இங்கே வந்த சமாச்சாரத்தை ஏற்கெனவே சிலமுறை எழுதியிருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னுரெண்டு வேணுமுன்னா இந்தச் சுட்டியில் பாருங்களேன். 

https://thulasidhalam.blogspot.com/2015/08/73.html

https://thulasidhalam.blogspot.com/2016/08/73.html

"ஏங்க.... எனக்கும் ஒரு இடம் உங்க மார்பில் கொடுக்கக்கூடாதா ?  உங்கள் மார்பில் சாய எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா ? "

ஙே......  "கொடுக்கலாம் கொடுக்கலாம்..... கொடுக்கலாம்தான். ஆனால்  பெரியவளுக்குத் தெரிஞ்சா என் நிலை ? "

"அப்படீன்னா........"

"நீ ஒன்னு செய்..... கீழே பூலோகத்தில் ஒருத்தர் பொண்குழந்தை வேணுமுன்னு தவம் செய்யறார். தவம் முடிஞ்சுக் கண் திறக்கும்போது, சட்னு கண்ணில் படறமாதிரி அங்கே போய் குழந்தையாய் இரு.  மத்ததை நான் பார்த்துக்கறேன். சட்னு ஓடு !"

பொதுவா கும்பகோணம் வந்தால்  ரெட்டைக்கோவில்கள் போல ஒரு ரெண்டு கோவில்களுக்குப் போகாமல் நம் யாத்திரை நிறைவடையாது. அந்த ரெண்டில் இது ஒன்னு !

இங்கே இருக்கும் கோவில் யானை'பூமா'வுக்காகவே வந்துருவேன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ? 

இன்று நாம் இங்கே வரும்போது மணி ஒரு அஞ்சே முக்கால்.  முன்னால் நின்னு காட்சி கொடுக்கும் நம்ம பூமாவைக் காணோம். போகட்டும்.... காலையில் இருந்து வாசலில் நின்னு பக்தர்களை வரவேற்கும்  பணியில் இருந்தவளுக்கு ஓய்வு வேணாமா ?  ட்யூட்டி முடிச்சு 'வீட்டுக்கு'ப் போயிருப்பாளா இருக்கும்.
கோபுரவாசலில் புகுந்து, கொடிமரம் , பெரிய திருவடி சந்நிதி சேவிச்சு, வலப்பக்கம் தெரியும்   வசந்த மண்டபம் கடந்து முன்மண்டபத்தினூடே நடந்து போறோம். இடதுபக்க மண்டபத்தில்  தங்கக்கவசத்தோடு தராசு பக்கத்தில் இருக்கார், வசூல்ராஜா. சொல்ல மறந்துட்டேனே.....  தென் திருப்பதின்னு ஒரு பெயரும் இருக்கு. (இன்னும் சில கோவில்களுக்கும் இதே பெயர் உண்டு !)  ஒரிஜினல் திருப்பதிக்கு வேண்டிக்கிட்டு, ப்ராத்தனை நிறைவேறியபின், அங்கே போக முடியலைன்னா....  வேண்டுன சமாச்சாரத்தை இங்கே செலுத்திக்கலாம். (நல்ல அரேஞ்மென்ட் இல்லை ? ) 
உட்ப்ரகாரம் கடந்து மூலவர் ஸ்ரீநிவாஸரை  நோக்கிப்போறோம். நமக்கு வலப்பக்கத்தில் கருட மண்டபத்தில் பெரிய திருவடி !   
மூலவர் கழுத்தில் துளசி மாலையுடன் தகதகன்னு  ஜொலிக்கிறார்.  முழு ஜொலிப்பும் ,  வலக்கையில் இருந்து !!!!   வைரமோ வைரம் !  

அவருக்கு வலப்பக்கம் துளசி !  அப்பா வச்ச பெயர் அதுதான். மனைவியும் மாமனாரும் வலதும் இடதுமாய் உக்கார்ந்திருக்க,  மாப்பிள்ளை பவ்யமா நடுவில் நிக்கறார்.  'எப்பவும்  உம்மகளை விட்டுப் பிரியமாட்டேன்'  என்று மாமனாருக்குக் கொடுத்த வாக்கின்படி  நகர்வலம் போகும்போதும் மனைவியைக் கூடவே கூட்டிண்டு போறார் !  
மூலவரை வணங்கி வெளியில் வந்தால்   கண் எதிரில் தங்கத்தேருக்கு அலங்காரம் நடக்குது !  ஆஹா...... புறப்பாடு !   இருந்து ஸேவிச்சுட்டுத்தான் போகணும்.! 

உற்சவருக்குப் பெயர் பொன்னப்பன்.  என்னப்பனுக்குப் பொருத்தமான பெயர் !  பொன்னே  மணியே முத்தேன்னு செல்லம் கொஞ்சறாப்போலவே   நம்(ம)ஆழ்வார்,   திருவாய்மொழி பாசுரம் பாடி வச்சுருக்காரே! 

 என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

 உற்சவரும் தாயாருமாய் தேரில் ! ஆஹா ஆஹா.....
எல்லாம் சரியாகும்வரை நமக்கு வேடிக்கையைத்தவிர வேறென்ன வேலை ? 
உபயதாரர்கள் வந்து தேரை இழுக்கத் தயாரானார்கள்.  கொஞ்சம் பேர்தான்.   ஒரு பக்கமா நின்னுக்கிட்டு இருந்த என்னிடம் வந்து  அந்தப் பக்கம் பார்னு சொல்லிட்டுப்போனார் நம்மவர்.  எந்தப்பக்கம்னு   கேக்கலாமுன்னா அதுவரை கூடவே நின்னவரைக்காணோம்.  தேடிக்கிட்டே பிரகாரத்தை நோட்டம் விட்டால்  வாத்யகாரர்கள் காத்திருக்க......    பூமா அதோ முன்னால் நடந்து போறாள்!  நம்மவர் ?  தேர் இழுக்கும் மக்களோடு  மக்களாய் ! 
அடடா..... இப்ப நான் பொன்னப்பனைப் பார்ப்பேனா, பூமாவைப் பார்ப்பேனா இல்லை நம்மவரைப் பார்ப்பேனா ?  ஜெயித்தது பூமான்னு தனியாச் சொல்லணுமா ? 

சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ். நேத்துதான் ஃபேஸ்புக்கில் போட்டு வச்சு, இங்கே லிங்க் கொடுத்துருக்கேன். யூட்யூபை விட இப்படிச் செய்வது எனக்கு சுலபமா இருக்கு என்பதே காரணம். 

https://www.facebook.com/share/v/16U7sJXVSA/

https://www.facebook.com/share/v/1G6Ky46tQE/





ஒரே ஒரு சுற்றுதான். ஆச்சு  ! நான் கொஞ்சநேரம் பூமாவாண்டை இருந்துட்டு வந்தேன்.  
தாயும் தந்தையும் ரதம்விட்டு இறங்கிப்போனாட்டு...... வெறிச்ன்னு நின்னுக்கிட்டு இருந்தது தங்கரதம்.

சும்மாச் சொல்லக்கூடாது..... உட்ப்ரகாரம் முழுக்க அட்டகாசமான  சித்திரங்கள். அருமையோ அருமை ! 

புஷ்கரணிக்குப் பெயர் பகலிராப்பொய்கை ! மற்ற தீர்த்தங்களைப்போல் பகல் மட்டுமே என்றில்லாமல் ராத்ரியிலும் கூட தீர்த்தமாடலாம் என்பதே இதன் சிறப்பு.  கரையாண்டை ப்ரஸாத ஸ்டால் போல ஒன்னு ! இல்லே , தகவல் மையமா ?  இருக்கட்டும் !
ஆழ்வார்களால் மங்களசாஸனம் செய்யப்பட்ட நூத்தியெட்டு திவ்யதேசத்தில் இந்தக் கோவிலும் உண்டு. 

எதிர்பாராதவகையில் புறப்பாடு தரிசனம் கிடைச்சது, மனசுக்குள் ஒரு சொல்லமுடியாத மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது உண்மை.

வாங்க..... ரெட்டைக்கோவில்னு சொன்னேனே அங்கே போகலாம்.

( நிறையப்படங்கள் எடுத்துட்டேன் போல..... இப்பப் பார்த்தால் ஒரு நூற்றியிருபதுக்குப் பக்கம். ஃபேஸ்புக் ஆல்பமாப் போட்டுவைக்கவா ? ) 

தொடரும்...... :-)