Wednesday, June 11, 2025

திருப் பாலைவனநாதர் ஆஃப் பாபநாசம் (2025 இந்தியப்பயணம் பகுதி 31 )

திருக்கருகாவூரில் இருந்து கிளம்பி,நேரா வந்து  அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து அந்தாண்டை போனால்....  அந்த பாபநாசம் ஊர் வந்துருதாம். எல்லாம் ஒரு எட்டுகிமீ தூரம்தான்.  ச்சும்மா ஊரை ஒரு வட்டம் போட்டுட்டுப்போகும் எண்ணம்தான் முதலில்.  நூற்றியெட்டு சிவாலயம்னு ஒரு  போர்டு பார்த்துட்டு   அந்தப்பக்கம் வண்டியைத்திருப்பினால்  ஒரு அஞ்சுநிலை ராஜகோபுரத்துடன் ஒரு கோவில். 
என்ன கோவில்னு பார்த்துட்டே போகலாம்னு இறங்கிட்டோம். அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோவில் !  

தளதளன்னு வயலும்  நெடுநெடுன்னு மரமுமா  குடமுருட்டி  ஆறு ( காவிரியின் கிளை  )நீர்ப்பாசனத்தில் இருக்கும் பாபநாசத்துலே எங்கே இருக்கு பாலைவனம்னு  சட்னு மனசில் தோணுச்சுதான்.   திருப்பாலைத்துறை, பாபநாசம்னு  பார்த்ததும்தான்.... இது  மணல் பூமிப் பாலைவனம் இல்லை....பாலை   வனம் (பாலை  மரங்கள் நிறைந்த வனம் ) புரிஞ்சது.  ஆமாம்.... அந்தப் பஞ்சவன க்ஷேத்ரங்களில் ஏன் இந்த வனம் இல்லை?  ஙே...... 

அந்தப் பாலை மரம் எப்படி இருக்குமுன்னு ஒரு ஆர்வத்தால் கூகுளிச்சேன். சப்போட்டாப் பழம் போல  இனிக்கும் பழங்கள்  உள்ள   ஒரு வகை மரமாம்.  

 கோபுரவாசலில் ரெண்டு பெரியவர்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.  அதிலொருவர்   கோவில் மதிலையொட்டியே இருக்கும் அர்ச்சனைப்பொருட்கள் கடைக்காரரா இருக்கணும். 
வாசல் கடந்து உள்ளே போனால் படிகளின் கடைசியில் மூவர்.  பள்ளிக்கூடம் போகலையா? இன்றைக்கு வெள்ளிக்கிழமைதானே ?  இல்லை ஆன்ட்டி(!) லீவு விட்டுருக்காங்க.  இப்போ என்ன லீவு ? எதுக்கு ?  தெரியலை ஆன்ட்டி (!)
கண்ணெதிரே செம்பும் தங்கமுமா ஜொலிக்கும் கொடிமரம்.  பலிபீடம். அடுத்து நந்தி. அழகான நாலுகால் மண்டபத்தில் உக்கார்ந்துருக்கார். மண்டபத்தின் மேல் நாலு பக்கங்களிலும் நந்திகளே !   ரொம்பவே அழகு!
நமக்கு வலப்பக்கம் ஒரு பெரிய உருளை வடிவில் செங்கலால் கட்டிய அமைப்பு !  கண்கள் விரிய அதைப்பார்த்த நொடியில்,  மூவரில்  ஒருவராக இருந்த சிறுமி, 'ஆன்ட்டி.... இது ரொம்ப பழையகால நெல் குதிர்' னு எனக்குத் தகவல்  சொல்லிக்கிட்டு என் பக்கத்தில் வந்து நிக்கறாள். ஓ அப்படியான்னு கேட்டுக்கிட்டேன்.
மூவாயிரம் கலம் நெல் கொள்ளளவு.  (ஒரு கலத்துக்குப் பெரியபடியில் அளந்தால் 96 ! ) அப்போ கோவிலுக்கு எவ்வளோ நிலம் இருக்குமுன்னு பாருங்க. பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம். கோவில் நிலங்களில் கொள்ளையடிக்காத மக்கள்  இருந்துருப்பாங்க !!! (சிவன் சொத்து குலநாசம் என்ற நம்பிக்கையோடு ! )
இப்ப அந்த நெற்களஞ்சியம் ஒரு வரலாற்றுச் சான்று மட்டுமே......    

கொடிமரத்துக்கந்தாண்டை ப்ளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி எடுத்து ஒரு வண்டியில்  வச்சுக்கிட்டு  இருந்தாங்க சிலர். ஏதோ விழா நடந்துருக்கு போல !  அப்புறம் தெரிஞ்சது மஹாசிவராத்ரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியாம்.  இது பதினோராவது வருஷம் !  கோபுரவாசலையொட்டியே கோவில் மதில்சுவராண்டை மேடை கட்டிவிட்ருக்காங்க.  

 கடந்து  உள்ளே போக ஒரு மூணுநிலைக் கோபுரம்வாசல்.  முன் மண்டபம் அர்த்தமண்டபம் கடந்து கருவறையில்  அருள்மிகு பாலைவனநாதர் ! நமக்கு ஏகாந்த தரிசனம் ! கருவறைக்கு முன் நந்திதேவரும் சின்ன பலிபீடமும், பைரவரும் !  நம்ம காலடி சப்தம் கேட்டும்கூட கண்ணைத் திறக்கலை....
உள்ப்ரகாரம் சுத்திவந்தோம். கோஷ்டத்தில் ஊர்த்துவத்தாண்டவர், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர்,  லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, ப்ரம்மன்னு  எல்லோரும் இருக்காங்க. ப்ரகாரத்தில் மஞ்சள் தண்ணீர் ! அபிஷேகம் நடந்துருக்கு போல ! ஆனால் யாருக்கு ? தெரியலையே....  மஞ்சளால் மூலவருக்கு அபிஷேகம் செஞ்சுருப்பாங்களா ?  குருக்கள் யாரையுமே காணோம்.... 

வாகனமண்டபம் கடந்தால்  அறுபத்துமூவர்  வரிசை. நல்ல பெரிய கோவில்தான் !   பிரகாரம் சுற்றி முன்மண்டபத்துக்குள் வரும்போது அங்கிருக்கும் பிச்சாண்டவர் சந்நிதியைப் பெருக்கிச்  சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு கோவில் ஊழியர். மடப்பள்ளிப் பாத்திரங்களைத் துலக்கி அடிக்கி வச்ச விதம் எனக்குப் பிடிச்சது ! 



நடராஜர் மண்டபம், நவக்ரகம்,  யாகசாலை, நால்வர் சந்நிதின்னு கும்பிட்டுக்கிட்டே மூலவராண்டை வந்திருந்தோம்.  அவரைவிட பெரிய அளவில்  உண்டியல்கள்.!  (கோவில் அறநிலையத்துறையின் பொறுப்பில் இருக்கு )



இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம்.....  புலித்தோல் தரித்தப் பொன்னார்மேனியனுக்கு, அந்தத் தோல் எந்தக் கடையில் கிடைச்சதாம் ?  ஹாஹா....

தாருகா வனத்து முனிவர்கள்,  சிவனை எதிரியாக நினைக்கும்படி ஒரு சம்பவம் நடந்துபோச்சு !  இதுலே ரெண்டு வெர்ஷன்ஸ் இருக்கு ! (எல்லாம் அங்கே இங்கேன்னு வாசிச்சதும் கேள்விப்பட்டவைகளும்தான்!)
சிவன், ப்ரம்மஹத்தி தோஷத்தால் பிக்ஷை வாங்கிக் காலம்தள்ளும் நிலையில் பிக்ஷாண்டவராகி அங்கே இங்கே போன சமயம், தாருகா வனத்துக்குப் போறார். அது ஏகப்பட்ட ரிஷிகள், தங்கள் பத்தினிகளுடன் வசிக்குமிடம். யாகம், தவம், வேதம் ஓதுதல்னு ரொம்ப பிஸியான வாழ்க்கை.    அவுங்க மனைவிகளும்,  ரிஷிமுனிவர்களின் தேவைகளை அனுசரிச்சு  எல்லா உதவிகளையும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  குற்றேவலுக்கு ஆட்கள் வேணும்தானே ? 

( எங்காத்துக்காரர், காலையில் ஒரு மணிநேரம் பூஜையில் இருப்பார். அவருக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் கைக்கெட்டும்படி எடுத்துவச்சு, பூஜை சாமான்களைப் பளிச்ன்னு தேய்ச்சு மினுக்கி, விளக்குகளில் நெய் ஊற்றித் திரிபோட்டுன்னு சகலமும் செஞ்சு வச்சுட்டு, நைவேத்யம் பண்ண  அடுக்களைக்குப் போவேன். பூஜை முடிக்கும் சமயத்துக்குள் நைவேத்யம் செஞ்சு முடிச்சுத் தயாரா இருக்கணும். பூஜை அறையிலிருந்து .... ம்...என்னும் குரல் வந்ததும்  சுடச் சுட நைவேத்யத்தைக் கொண்டுபோய் வைக்கணும். ஒரு நிமிஷம் லேட்டானால் கூட   அவருக்குக் கோபம் வந்துரும்.....  எங்கியோ கேட்டமாதிரி இருக்கா ?  அப்படித்தான் ஒரு காலத்தில்  நடைமுறை இருந்தது.  இப்பவும்கூட சில வீடுகளில் இருக்கலாம் !)


பிக்ஷைக்குப்போன சிவனின் அழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், செஞ்சுக்கிட்டு இருந்த வேலைகளை அப்படியே விட்டுட்டு, சிவன் பின்னாலேயே போயிட்டாங்களாம். !  இங்கே...ம் ம்ன்னா எங்கே ?  கோபம் வராதா என்ன ? 

அடுத்த வெர்ஷன் என்னன்னா.... கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து ரிஷிகளுக்குத் தாங்களே இறைவனைவிட உயர்ந்தவர்கள்னு கர்வம் தோணிப்போச்சு.  அதனால்  எதுக்காக  இறைவனுக்கு சேவை செய்யணும்?  ஒரேடியா அழிச்சுட்டா வேலை மிச்சம் என்ற வெறுப்பில், துஷ்டவேள்வி நடத்தறாங்க. அதிலிருந்து ஒரு பயங்கரமான புலி வந்துச்சு. அதை சிவன்மேல் ஏவிவிட்டாங்க. 

புலி நேரா சிவனாண்டை போய், அவரைக் கொல்லப்போகுது.  சிவன் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும் ?  ஒரே போடாப் புலியைப் போட்டுத்தள்ளிட்டு, அதன் தோலை உரிச்சு இடுப்பில் ஆடையாகக் கட்டிக்கிட்டார் !  (புலித்தோலை அரைக்கசைத்து....... ) 

எப்படியோ சம்பவம் நடந்த இடம் இதுதான்னு தலப்புராணம் சொல்லுதாம் ! 
வெளிப்ரகாரம் வந்துருந்தோம். மூலவருக்கு வலதுபக்கம் அம்பாளுக்குத் தனிக்கோவில்.  ஸ்ரீ தவளவெண்நகையாள் அம்பாள் ! ஹையோ.... என்ன அழகான பெயர், இல்லே ? பொதுவா சிவன்கோவில்களில் அம்பாள் பெயர்கள் ரொம்பவே அருமையாக இருப்பதைக் கவனிச்சுருக்கேன் !  வாசலுக்கெதிரே ஒரு குட்டி மண்டபத்தில் நந்தி.  மழையில் நனைய வேண்டாம் !

பாடல்பெற்ற ஸ்தலம். 
கோவிலில் ஒரு அறிவிப்பு ! உணவு பரிமாற அனுமதி இல்லையாம் !   அப்ப இங்கே அன்னதானம் நடக்காது !     
நல்ல தரிசனம்  கிடைச்ச திருப்தியில் கிளம்பிட்டோம்.  கோபுரவாசலில்  அம்மூவரைக் காணோம் ! 
 

தொடரும்.... :-)     




6 comments:

said...

அப்பாடி...   சமீபத்தில் நான் பார்த்து நீங்கதான் "பதினோராவது" வார்த்தையை சரியாக எழுதி இருக்கீங்க...  எல்லோரும் அதை மிகக்கடுமையான பதினோறாவது என்று எழுதுகிறார்கள்.

தலப்புராணம் என்றால் அஜித் புராணம்!  தல புராணம் என்றால் ஸ்தல புராணம்!!  'ப்' வராது!

என்ன ஒரு அழகாக பெரிய கோவில்...  பார்க்க எவ்வளவு கோவில்கள் இருக்கின்றன...

said...

பாபநாசம் கோவில்கள் படிக்கும்காலத்தில் பிடித்தமான இடம் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன் கிடைக்கவில்லை. இன்று உங்கள் தல தரிசனத்தால் பாலைவனநாதரை தரிசிக்க கிடைத்தது தரிசித்து மகிழ்ந்தேன் நன்றி.
அம்மன் பெயர் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் அழகான பெயர்.
பாலை மரம் நமது நாட்டு வன்னிப்பகுதியில் உள்ளது பெரிய மரமாக வளரும் உறுதியான மரம் என்பதால் இதில் மரச்சாமான்கள் செய்வார்கள்.பாலைப்பழம் ஈச்சம்பழம் அளவில் மஞ்சள் நிறத்தில் மிகுந்த இனிப்பாக இருக்கும் சுவைக்கும்போது பால் இருப்பதால் வாயில் ஒட்டும். வைகாசி ,ஆனி மாதங்கள் பழக்காலம். .

said...

very nice

said...

வாங்க ஸ்ரீராம்,

உங்க தலை சமீபத்து சமாச்சாரம், அதுவும் சினிமாத் தல இல்லையோ.....

எல்லாக்கோவில்களையும் பார்த்து முடிப்பது என்பது ஒரு ஜன்மத்தில் முடியாதே!!!!

said...

வாங்க மாதேவி,
சிவன் கோவில்களில் அம்மன் பெயர்கள் தனி அழகுதான்ப்பா !
நம்ம நட்புகளில் பாலையைப் பார்த்தவர் நீங்கள் மட்டும்தான்னு நினைக்கிறேன் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !