Friday, June 06, 2025

51

இந்த ஜூன் மாசம் அஞ்சாம்தேதி  எங்களுக்கு ஐம்பத்தோராவது திருமணநாள்.  இந்தமுறை வியாழக்கிழமையில் வந்துருக்கு !  புதன்களில் எங்களுக்கு யோகா வகுப்பு இருப்பதால், ஒரு நாளைக்கு முன் நம்ம யோகா குழுவினரோடு   ரொம்பச் சின்னஅளவில் கொண்டாடிக்கணும். ஐம்பதாவது வருடம் நிறைவுநாள் கொண்டாட்டமாக  வச்சுக்கலாம்தானே !
உள்ளூர்  ரெஸ்ட்டாரண்டில் கொஞ்சம் இனிப்பும், இந்தியன் சூப்பர்மார்கெட்டில் கொஞ்சம் காரமும் வாங்கினால் ஆச்சு. யோகா செஷன் முடிஞ்சதும் கொண்டாடினோம்.  குழுவின் இன்னொரு  அங்கமும் ரெண்டு நாளைக்கு முன்னே வந்த  அவுங்க ஐம்பத்திமூணாவது திருமணநாளைக் கொண்டாடும் விதமா, பர்ஃபி, சமோஸா,   வெந்தியக்கீரை, கடலைமாவு இன்னும் சில மசாலாப்பொருட்கள் சேர்த்து செய்யும்  முத்தியா (Muthiya ) என்னும்  குஜராத்தி சமாச்சாரம்  செஞ்சு கொண்டுவந்துருந்தாங்க.  நம்ம யோகா குழுவில் அடிக்கடி இப்படித் தனிப்பட்ட கொண்டாட்டங்களை  Food Yoga வாக நடத்திக்குவோம் ! 


மறுநாள் ஜூன் 5, நமக்குப் பொழுதுவிடிஞ்ச நேரம் சரியில்லை.  மகளிடமிருந்து சேதி. "காலை எழுந்துட்டீங்கன்னா எனக்குச் சொல்லுங்க."  சொன்னோம்.  "உடம்பு ரொம்ப முடியலை. நல்ல ஜூரம் & கடுமையான இருமல்.  ஆஸ்பத்ரிக்குக் கூட்டிப்போங்க." 

அடராமா...... இவ்ளோ காலையில் நம்ம டாக்டர் க்ளினிக் திறந்துருக்காதே.  பப்ளிக் ஹாஸ்பிடல் போனால்.... மணிக்கணக்காக காத்திருக்கத்தான் வேணும்.  இங்கே ஆஃப்டர் அவர் சர்ஜரின்னு ஒன்னு இருக்குமே.... அங்கே போகலாம்னு கிளம்பினோம்.  அதையுமே வேற இடத்துக்கு மாத்தியிருக்காங்க.  இந்த ஊருக்கு வந்த புதுசுலே  இந்த ஆஃப்டர் அவரில்தான் நம்ம வீக்கெண்டுகள்  கழிஞ்சுருக்கு.  சரியா வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு மேல்தான் மகளுக்கு (அப்போ நாலரை வயசு)  உடம்பு சரியில்லாமல் போகும். ஓடு ஆஸ்பத்ரிக்குன்னு போய்  அங்கே தேவுடுகாப்போம்.  இங்கே குடும்ப மருத்துவர் க்ளினிக்குன்னு  பேட்டைக்கு நாலு இருப்பது எல்லாம்  திங்கள் முதல் வெள்ளி  வரைதான் . தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை அஞ்சு வரை. அஞ்சுக்குமேல் எதுவானாலும் ஆஃப்டர் அவர்தான். மகளுக்கு வயசு பத்தானதும்  அங்கே போறது  குறைஞ்சே போச்சு. 

இப்ப எங்கே இருக்குன்னு தேடினால் மத்ராஸ் தெருவிலாம். பெயரும் மாறியிருக்கு. இருபத்தினாலு மணி  நேர ஸர்ஜரி !   அவசரக்கேஸ் மட்டுமில்லாமல்  ரெகுலர் ஆஸ்பத்ரியாகவே நடத்தறாங்க.  இதை நடத்தறது தனி நிறுவனம் ! 
அங்கே போய் பெயரைப் பதிஞ்சுட்டு உக்கார்ந்திருந்தோம்.  கிட்டத்தட்ட ஒரு முப்பதுபேர் காத்திருக்கும் பகுதியில்.  துணைக்கு வந்தவர்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். இப்ப நாமே ஒரு நோயாளியின் துணைக்கு ரெண்டுபேர் வந்துருக்கோமே!
மகள் வீட்டுலே குழந்தை இன்னும் தூக்கத்தில். மருமகன் பார்த்துக்கறார்.  அவருக்கும்  வேலைக்குப் போகவேண்டிய நேரம்.  என்ன செய்யறதுன்னு புரியாத நிலையில்  வேலைக்கு அரைநாள் விடுப்பு சொல்லிட்டு நமக்காகக் காத்திருக்கார்.

மகளை முதலில் பரிசோதிச்ச மருத்துவர்,  கொஞ்சநேரம் காத்திருக்கச் சொல்லிட்டு,  வேறொரு மருத்துவருக்கு பரிந்துரை செஞ்சுருக்காங்க.  கொஞ்ச நேரத்தில் மகளை சிகிச்சைக்காகக் கூட்டிப்போனாங்க. நாங்க ரெண்டுபேரும்  வெளியே காத்திருக்கோம்.   வீட்டுக்குப்போய் வரலாமா, இல்லே இங்கேயே காத்திருக்கலாமான்னு யோசனை......  எப்படிப் பார்த்தாலும் போகவரன்னு நாப்பது நிமிட் ஆகும்.  காலையில் இருந்து வெறும் வயித்தோடு இருக்கோம்.  ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வரலாமுன்னு சொல்றார்.  அதுக்கும் ஒரு இருபது  நிமிட்.  மொத்தமா ஒரு மணி நேரம் ஆகிரும். 

உள்ளே போன மகளுக்கு என்ன சிகிச்சைன்னு தெரியலை. மருந்து கொடுத்தோ, ஊசி போட்டோ அனுப்பினாங்கன்னா.... நாங்க திரும்பிப்போகும்வரை தனியாக் காத்திருக்கவேணும்..... என்னடா... பெருமாளே  இப்படிப் பண்ணறையே........

மகளிடமிருந்து  சேதி வந்தது.  வாட்ஸப் இருப்பது எவ்ளோ நல்லது பாருங்க.  பரிசோதனை (எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட்) எல்லாம் ஆச்சு. நிமோனியான்னு சொல்லிட்டாங்க.  உடலில் நீர் சக்தி போதிய அளவில் இல்லைன்னு  ட்ரிப்ஸும் கூடவே மருந்தும் ஏத்தப்போறாங்க.  குறைஞ்சபட்சம்  மூணு மணி நேரம் ஆகும். 

சரி. நாங்க வீட்டுக்குப் போறோம்.  சிகிச்சை முடிஞ்சதும் சேதி அனுப்பு, நாங்க வந்து கூப்பிட்டிப்போறோம் னு பதில் அனுப்பிட்டுக் கிளம்பி வந்தோம். 

பேரக்குழந்தைக்கு ப்ரீ ஸ்கூல் தினம் இன்றைக்கு. திங்களும் வியாழனும் போய் வர்றான்.  அவனுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லைதான். இங்கே குளிர்காலம் ஆரம்பிச்சுருக்கு. பருவமாற்றம்  வரும்போது  ஜூரம், இருமல்னு எல்லோரையும்  கொஞ்சம் படுத்தும் சீஸன். எங்க ரெண்டுபேருக்குமே உடம்பு சரியில்லாம இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. இத்தனைக்கும் ஃப்ளூ ஊசிவேற வருஷாவருஷம் போட்டுக்கறோம்.

குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்குத் தயார் செஞ்சுக்கிட்டு இருந்த மருமகன்,  'கொஞ்சம் உடம்பு படுத்துதுபோல..... பையன் சோர்வாக இருக்கான்'னு சேதி அனுப்பினார்.   அவனை பள்ளிக்கு இன்றைக்கு அனுப்ப வேணாம். இங்கே நம்ம வீட்டில் கொண்டு வந்து விட்டுருங்கன்னோம். அப்படியே ஆச்சு.  மருமகணும் வேலைக்குக் கிளம்பிப்போயிட்டார்.

காலை பத்துமணிக்குக் கோவிலுக்குப்போய் வரணும் என்ற  என் திட்டத்தில்  மாற்றம். பதினொரு மணிக்கு,  ஒருத்தர்  நமக்கு ஒரு வேலை செஞ்சு கொடுக்க வருவார். நம்ம வீட்டு  மேற்கூரையில் பக்கத்துவீட்டு மரத்தின் இலைகள் முழுக்க உதிர்ந்து,  மழைத்தண்ணீர் இறங்கும் வழியை அடைச்சுருது.  வருஷா வருஷம்  இது ஒரு பெரிய சல்யம். நம்ம காசைச் செலவு  செஞ்சு ஆள் வச்சுச் சுத்தப்படுத்தறோம்.  இதுக்கே நிறையக் காசு அழவேண்டியிருக்கு !  இருவது வருஷமா அழுதது போதும். வேறேதாவது உபாயம் இருக்கான்னு பார்த்துச் சொல்லத்தான் ஒருத்தர் வர்றார்.  இன்றைக்கு  வரப்போறதா, ரெண்டு நாளைக்குமுன்னே நம்மவர் வந்து சொன்னப்பவே.... நான் கொஞ்சம் மூஞ்சத்தூக்கி வச்சுக்கிட்டேன்.  மறுநாளைக்கு வரச் சொல்லியிருக்கக்கூடாதான்னா..... இப்பெல்லாம் ட்ரேட் ஆட்களைப்பிடிக்கறதே கஷ்டம். அவரா வர்றேன்னதும் சரின்னுட்டேன்ன்னு பதில். ப்ச்.... புதுப்பொடவை ஒன்னு கட்டிக்கலாமுன்னு நினைச்சது நடக்காது.....
அந்த நபர், வந்து பார்த்துட்டு,  ஒன்னும் செய்ய முடியாது.  வேற வழி கிடைச்சால் தெரிவிக்கறதாச் சொல்லிட்டுப்போனார். 
கோவில், வெளியில் சாப்பாடு என்ற ஒன்றும் நடக்கப்போறதில்லை.  குறைஞ்சபட்சம் வெளியில் லஞ்சுக்காவது போகலாமுன்னா..... குழந்தையை எப்படிக் கூட்டிப்போவது ? நம்ம  வண்டிகளில் பேபி ஸீட் இல்லை. இங்கே  இது இல்லாமக் குழந்தையை எங்கேயும் கொண்டுபோக முடியாது.  போலிஸ் பிடிச்சுக்கும். பயங்கர அபராதம் & தண்டனை வேற !

நம்ம வீட்டுப்பெருமாளுக்கும்  பழம் வச்சதோடு சரி.  இப்பக்  குழந்தைக்குத் தனியாகவும், நமக்குத் தனியாகவும்  லஞ்சு செஞ்சுக்கணும். கொஞ்சம்  அரிசியும் பருப்புமாக் கலந்து சமைச்சால் அதுலே இருந்து எதாவது செஞ்சுக்கலாம். 

குக்கர் ஆனதும், ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் அரிசிபருப்பைத் தனியாக எடுத்து வச்சேன். வறுத்துப்பொடிபண்ணித் தயாரா வச்சுருக்கும் மிளகுத்தூள், சீரகத்தூளில் இருந்து  ஒரு சிட்டிகை எடுத்துக் கலந்து துளி உப்பும்  சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துட்டால் குழந்தை சாப்பாடு ரெடி.  காரம் இல்லாத வகை.
அப்புறம்  மீதி இருக்கும் அரிசிபருப்பில்  30, 70 விகிதத்தில்  ரெண்டு வகை செய்யலாம்.  அந்த முப்பது.... சக்கரைப்பொங்கல்.  அந்த எழுபது வெண்பொங்கல்.  பெருமாளுக்கு நைவேத்யமாவும் ஆச்சு.  

முதலில் சக்கரைப்பொங்கல் செஞ்சு முடிச்சதும் சாமிக்கு வைக்கலாமுன்னு சொன்னதும்..... அவன் ஓடிப்போய் சாமி அறையைத் திறந்து, 'பாப்பா ஷாமி பாப்பா ஷாமி'ன்னு கையைக் காமிச்சதும்,  நம்ம பாப்பா ஷாமி  அயோத்யா பாலராமனுக்கே ஆச்சு.  வெண்பொங்கல் செஞ்சதும் ஷாமி ஷாமின்னு பெரிய பெருமாளுக்குக் கை காமிக்கிறான்.   நைவேத்யம் சமர்ப்பியாமி !
எப்படியோ லஞ்சு முடிஞ்சது.  குழந்தையும் மருந்து எடுத்துக்கறதால் ஒரு அஞ்சு மில்லி  அந்த ஆன்ட்டிபயோடிக் ஸிரப்பைக் கொடுத்தோம். தினம் விளையாடும் அளவு சுரத்தா இல்லை.  சோர்வாகத்தான் இருக்கான்.  அவனுடைய  எல்லா வண்டிகளும் ஓய்வில் ! 

இதுக்கிடையில் மகளுக்கு எப்படி இருக்கோன்னு  ஒரு கவலை. பகல் ஒரு மணிக்கு , சிகிச்சை முடிஞ்சதா, வரலாமான்னு மகளுக்கு சேதி அனுப்பினால்.......  அப்பதான்  முடியுதாம்.  கணவர் வந்து கூட்டிப்போவாராம்.  மகள்,  வீட்டுக்குப் போயாச்சுன்னதும் அப்பாடான்னு இருந்தது உண்மை. 

சாயங்காலம் ஆறுமணிக்கு, மருமகன் வந்து குழந்தையைக் கூட்டிப்போனதும், நாங்கள் கிளம்பி நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு ஏழு மணி ஆரத்திக்குப் போய் வந்தோம்.  போன ஆகஸ்டு மாசத்தில் இருந்தே.....  காலைநேரக்கோவில் விஸிட்தான். சாயங்காலம் ஆரத்திக்குப்போனால் அரை மணிக்கூறாவது நிக்கவேண்டி இருக்கும். நமக்கிருக்கும் கால்வலியில் முடியாதுன்றதால்தான்  காலை தரிசனத்துக்குப்போய் வர்றது.

ரொம்ப நாளைக்குப்பின் ஆரத்தி தரிசனமும் சடாரி கிடைச்சதும்  மனசுக்குத் திருப்திதான்.

இந்த வருஷ மணநாள்  வழக்கத்தில் இல்லாதபடி இப்படியாகப் போச்சு. 



கோவிலில் பார்த்த குழந்தை பக்தன் மனநிறைவைத் தந்தது உண்மை !

சுவாரஸியமான  பதிவு இல்லைதான். ஆனாலும் துளசிதளத்தில் இருக்கணும் என்பதால்  போட்டு வைக்கிறேன்.

8 comments:

said...

51வது திருமண நாளுக்கு வாழ்த்துகள் (அரசியல்வாதின்னா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்னு சொல்லியிருக்கலாம்).

ஏதோ காரணம் வைத்து பேரன் உங்ககூட இருந்திருக்கானே.

ஆமாம்.. பக்கத்துவீட்டு மரத்தினால் ஏற்படும் சல்லியத்தைப் படம் பிடித்துப் போடலியே.

said...

எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு ஆறுதல் அடையலாம். இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

said...

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

மகளுக்கு. உடல் நலம் இல்லாத இக்கட்டான நேரத்திலும் பிரசாதம் செய்து வைத்து பெருமாளை வணங்கி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டீர்களே அதுவே பெரிய விஷயம்.

அத்துடன் மாலை ஆர்த்தியும் கிடைத்திருக்கிறதே. இதுவே மகிழ்ச்சிதான்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வாழ்த்துகளுக்கு நன்றி. பேரனுக்குத் தாத்தாவை ரொம்பவே பிடிக்கும்.
வீட்டுக்கூரை.... படம் எடுக்கவே இல்லை. உங்க பின்னூட்டம் பார்த்துட்டுத்தான் ரெண்டு படங்களை க்ளிக்கிப் பதிவில் சேர்த்துருக்கேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,
வாழ்த்துகளுக்கு நன்றி. உண்மைதான். நாமொன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கன்னு....... அவன் கணக்கு யாருக்குத் தெரியும் ?

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. ப்ரஸாதம் டூ இன் ஒன் ! அந்த வெண்பொங்கலே பகலுக்கான உணவு.

ஆரத்தி பார்த்தது உண்மையில் மகிழ்ச்சிதான்ப்பா !

said...

Arumai. Namaskaram.

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !