Monday, June 16, 2025

பழைய நினைப்பில்......(2025 இந்தியப்பயணம் பகுதி 33 )

நான் இடத்தின் பெயரைச் சொன்னதும் நம்மவரின் முகத்தில் ஒரு ஒளி ! ஹா...  ஆனந்தமா இருக்கு எனக்கு !  நம்ம நூத்தியெட்டுலே சிவலிங்கத்தில் இருந்து ஒரு பதிநாலரைக் கிமீதான்.  அதே தஞ்சை-குடந்தை மெயின் ரோடுலே.....    தாராசுரம் வரை போய் அங்கிருந்து இடதுபக்கம் போகுது சாலை. தாராசுரம் மதில்சுவர் கண்ணில்பட்டதும் மனசு அடிச்சுக்கிட்டது உண்மை. ஆனால் நடக்க முடியாது. அதுவும் இந்த நட்டநடு மத்யானத்தில் தீமிதிக்கும் உத்தேசம் இல்லவே இல்லை..... இது சுவாமிமலைக்குள்ள வழி. ஆனால் அவ்ளோதூரம் போகவேணாம். அதுக்கு முன்னாலேயே திம்மக்குடி, பாபுராஜபுரம் வந்துருது !
வாசலில்  பெரிய போர்டெல்லாம் இல்லை.  கொடிகள் ஒட்டிப்படர்ந்திருக்கும் கேட் வாசலின் பக்கம் இன்டிகொ என்ற சின்ன போர்டு.  இதுவா இதுவான்னு முதலில் சம்ஸயம் வந்தது உண்மை. நாம் கும்பகோணம் நவகிரஹக்கோவில்களுக்கு வந்தப்ப, இங்கேதான்  நாலுநாள் தங்கினோம்.  அப்போ இதன் பெயர் ஆனந்தம். அதுக்கும் முன்னால் ஸ்டெர்லிங் ரிஸார்ட்ஸ் என்ற பெயர். பிஸினஸ் கை மாறும்போது, பெயர் மாற்றம் சகஜம்தான் இல்லையோ ! 
சந்தேகத்தோடெயே உள்ளே போறோம். கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு உள்ளே நடந்தால் ஒரு  ரெட்டைப்புள்ளையார் நம்மை வரவேற்கிறார் !  சிதறு தேங்காய் உடைக்க முன்னால் ஒரு தொட்டி ! புதுசா இருக்குல்லே ?  நாம் வந்தது 2009 ஃபிப்ரவரி மாசம். ஆச்சே பதினாறு வருஷம்.... மாறாதா என்ன ?  ரெட்டைப்புள்ளையாருக்கு விளக்கம் வேற இருக்கு !  இதுவரை நான் தெரிஞ்சுகாத சமாச்சாரம்.  நின்னு வாசிச்சால்,  நாம் சுதை என்பதை சோதைன்னு  போட்டு வச்சுருக்காங்க. ப்ச்... போகட்டும்.....  வர்றவங்க  முக்கால்வாசி வெளிநாட்டு மக்கள்தான்.   அவுங்களுக்குப் புரிஞ்சாச் சரி. 
மரத்தாண்டை சில  குயவர்கள், சட்டிபானை வனைஞ்சுக்கிட்டு இருக்காங்க.  
எதுத்தாப்லெ ஒரு பெரிய கட்டடம்.  மாடிவேற இருக்கு. சட்னு பார்த்தால் ஏதோ விக்டோரியன் பில்டிங் !!! இல்லே அரண்மனையா ? உச்சியிலே யானைகள் இருக்கே!  கஜல‌க்ஷ்மியா நடுவிலே ? 
கொஞ்சதூரத்துலே..... அருணன் ஓட்டும் ஏழு குதிரைகள் இழுக்கும்  ரதத்தில் சூரியன் !  நியூஸி வாழ்க்கையில் எனக்கு வாழ்வாதாரமா இருக்கறவன். 

காபி பார்னு எங்கே ? உள்ளே ஒரு ஜட்கா !
திண்ணை வச்ச வீடு பார்த்ததும் போய் உக்கார்ந்தோம். எனக்குத் திண்ணை வீடுகள் ரொம்பவே பிடிச்ச சமாச்சாரம். நியூஸியில் வீடு கட்டும்போது.....  ஆசைதான். காலநிலைக்குச் சரிப்படாது...ப்ச்.... இந்த ஆசைக்காக  சிலமுறை நம்ம ஈஸிஆரில் இருக்கும் தக்ஷின்சித்ரா போய் வந்துருக்கேன்.  என்ன ஒன்னு..... அங்கே அந்த வீடுகளில் வசிக்க முடியாது.... காட்சிக்கு மட்டுமே.....

முந்தி இங்கே வந்து தங்கினோமுன்னு சொன்னேனில்லையா..... அப்பக்கூட திண்ணை இருக்குமுன்னு தெரியாது.  நமக்கான அறைக்குக் கூட்டிப்போகும்போதுதான்  நம்ம வீடு திண்ணைவீடுன்னு தெரிஞ்சதும்.....  வாயெல்லாம் பல் ! செல் ரொம்ப புழக்கத்தில் இல்லாத காலம் அது. இப்ப மாதிரி கையில் உலகம் கிடையாது. 

இப்ப எங்கே இந்த வகை வீடுகள் எல்லாம் ?  ரொம்பச் சின்ன கிராமங்களில் இருக்கோ என்னவோ ?  
ரெஸ்டாரண்டைத் தேடிப்போனால்  ரெண்டுபக்கமும் குதிரைகள் வரிசைகட்டி நிக்கும் பாதை. அட ....  இது புதுசு ! அந்தாண்டை என் யானை !  இது எங்கே இங்கேன்னு  தோணுச்சு. மொத்தத்தில் புதுசுகளை எண்ணாமல், பழசை மட்டும் எண்ணினால் ரெண்டு கை விரல்களே போதும் போல !  ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருந்த  பெரிய மொம்மைகள்  பழசே. ஆனால் அதன் பக்கத்தில்  எதிரும்புதிருமா மூணு பெண்களும் ஆண்களும்.  

இந்த    இண்டிகோ   INDeco   India's Eco  friendly global tourism  award  வாங்கியிருக்கு.  பதினேழாம் நூற்றாண்டைச்  சேர்ந்த மூணு  பாழடைஞ்ச கிராமங்களில் இருந்த வீடுகளைப் பிரிச்செடுத்துவந்து அதே ஸ்டைலில் பழமை மாறாமல் புது வசதிகளோடு அமைச்சுருக்காங்க. முதலில் பார்த்த அந்த விக்டோரியன் பில்டிங் கூட அந்தக் காலக்கட்டத்து சமாச்சாரம்தான். 

ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.  அவ்வளவா மாற்றம் இல்லை.  முதலில் ரோஸ்மில்க் கொண்டுவந்து கொடுத்தாங்க.  எனக்கு ரொம்ப சாப்பிட வேணாம். கொஞ்சம் லைட் மீல் வேணும்.  பயணத்தில் தயிர் சாப்பிட பயம்.    நம்மவருக்கும் கோபாலுக்கும் தாலி மீல்ஸ் சொல்லிட்டு  , எனக்கு  எலுமிச்சை சாதம் இருக்கான்னதுக்கு,  அந்த தாலிமீல்ஸ்லேயே இருக்கு.  நீங்க பேசாம அதிலேயே ஷேர் பண்ணிருங்க. முழு தாலி உங்களால் சாப்பிடமுடியாதுன்னுட்டு 'கேஸ்' க்ளோஸ் பண்ணிட்டாங்க.
சூப், தயிர்வடைன்னு ஆரம்பிச்சுத் தாலி வந்தது.  அதோ என் எலுமிச்சை சாதம் ! இதுவே எனக்குப் போதும் !

இந்த ரெஸ்ட்டாரண்ட்டும், தொட்டடுத்து இருந்த  கான்ஃபரன்ஸ் ஹாலும் முந்தி இருந்த பழைய கட்டடங்கள்தான். பொன்னியின் செல்வனில் நந்தினி வந்த மூடுபல்லக்கின் திரையை மாற்றிட்டாங்க. முந்திக் காலியா இருந்த பல்லக்கில் இப்போ ஒருத்தி. ஆனால் நம்ம நந்தினி இல்லை. 

ராமாயணத்தூண் ( டெர்ரகோட்டா )இருந்த இடத்தைச் சுத்தி பெரிய முற்றத்தோடு வீடுகள்.  பாம்புப்படுக்கையோடும் தேவிகளோடும்   தூணாண்டை வந்து படுத்துருக்கார் மஹாவிஷ்ணு. நாபிக்கமலத்தில் ப்ரம்மா வேற !
 சுடுமண் சிற்பங்களும்,   சுவர்ச்சித்திரங்களுமா இடமே அடையாளம் தெரியலை. 

                                             
ஊர்மையத்துக்கு வந்துருந்தோம்.  தகப்பனுக்கு உபதேசிக்கும் சிலை (மட்டும்) பழசே !  அரங்கமும் புதுசுதான்.  கலைநிகழ்ச்சிகள்  நடக்கும்போது அருமையாக இருக்கும்தான். ஆனால் கும்மோணக்கொசுக்களுக்கு யார் பதில் சொல்வது ? 
 சிறையில் போட்டதும் நிம்மதி கிடைச்சது.  நேதாஜி இருந்த செல் ! 
பதினெட்டாம்படி கருப்பன் இருக்கார். இந்தக் காலை வச்சுக்கிட்டு எப்படி ஏறிப்போறது.... ப்ச்....
ம்யூஸியத்துக்குத் தனிக்கட்டடம் வந்துருக்கு.  நல்ல பெருசு.  பழைய ம்யூஸியம் இருந்த இடம் எங்கேன்னு தேடிப்போனோம். ஆப்ட்டது !
உள்ளே வெறுமை.  சுவரில் சிவன் மட்டும் சடைகுழலோடு சிவனேன்னு இருக்கார். சிம்மாசனத்தில் அமர்ந்து க்ளிக்ஸ் ஆச்சு. 

கொஞ்சதூரம் சுத்திப்பார்க்கலாமுன்னா மழைத்தூறல் ஆரம்பிச்சது.  பார்த்தது போதுமுன்னு கிளம்பினோம்.  நேரா நம்ம ராயாஸ்தான். ஏழு கிமீ தூரத்துக்கும் குறைவு.  காமணியில் வந்து சேர்ந்தோம்.

என்ன ஒன்னு..... முந்தி பார்த்தப்ப  ரொம்பவே விஸ்தாரமான கிராமமா இருந்த இடம், இப்போ இடைவெளியில்லாமல் நெருக்கியடிச்ச  நகரங்கள் போல ஆகிப்போயிருக்குன்னு தோணுது.   ஆனாலும் திண்ணை வச்ச வீடுகள் கண்களை நிறைச்சது உண்மைதான் !

 அங்கே எடுத்த படங்களை நேத்துதான்  ஃபேஸ்புக்கில் ஆல்பமாப் போட்டு வச்சேன்.   ரெண்டு மூணு க்ளிக்ஸ்கூட இருக்கும்,  சில படங்களுக்கு.   எடிட் பண்ணலை. மன்னிச்சூ......

ஆல்பத்தின் சுட்டி கீழே !

https://www.facebook.com/media/set/?vanity=gopal.tulsi&set=a.10230377596646313 

கீழே சுட்டி : முந்தி போய் தங்கினப்ப இப்படி இருந்துச்சு.  விருப்பம் இருந்தால் எட்டிப்பாருங்க. நம்ம வீடுதான் ! 

https://thulasidhalam.blogspot.com/2009/03/2.html

 தொடரும்.......... :-)

8 comments:

said...

அருமை நன்றி

said...

அந்த இடத்தில் தாலி மீல்ஸ் எவ்வளவு? 500க்குள்ளா?

said...

காலங்கள் செல்ல மாற்றங்கள் வருவது சகஜம். பழமையை பேணி மாற்றங்களை கொண்டுவந்திருப்பது நன்று.

பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

said...

வாங்க விஸ்வநாத்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,
இன்னும் கொஞ்சம் கூடுதலே ! 780 ஒரு தாலி.

said...

வாங்க மாதேவி,

முதல்முறை போனபோதே ரொம்பவும் பிடிச்ச இடம்தான். பழமையை மகளுக்குக் காண்பிக்க ஆசை இருந்தாலும்..... கொசுவுக்குப் பயப்படத்தான் வேணும்.

said...

என் கண்ணில் இந்த இடம் பட்டதில்லையே!   சுவாரஸ்யமா இருக்கும் போல்... அடுத்த முறை பார்க்க வேண்டும்! 

என்ன ஒரு தாலி மீல்ஸ் 780 ரூபாயா?  அம்மாடி.

said...

வாங்க ஸ்ரீராம்,

பார்த்து அனுபவிக்க அருமையான இடம்தான். நம் சின்னவயது நினைவுகளைப் புதுப்பிச்சுரும் !

தாலி மீல்ஸ்..... இப்படி அதிக விலைன்னா..... என்னுடைய ஒரு டெக்னிக் படி அதை டாலரில் மாத்திக்குவேன். தொகை சின்னதாப்போயிரும்.