நாம் கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில்பட்டதுன்னதும் சரின்னு பகல் சாப்பாட்டுக்கு, அங்கே போனோம். அன்னலக்ஷ்மி! அர்ச்சனாஸ் அன்னலக்ஷ்மியாம்! நம்ம ஹயக்ரீவாலே இருந்து ஒரு கிமீ தூரம். கோவிலுக்குப் போகும் வழியில்தான் போகணும். எல்லாம்தான் ஒன்வே ஆக்கி இருக்காங்க இல்லையா..... ஸ்ரீராகவேந்த்ரா மடத்துப்பக்கம் ,திருவாடித் தெரு.

மாடியில் ஹொட்டேல். தங்கும் அறைகள். பார்த்து வச்சுக்கணும்.... அடுத்தமுறை வந்தால் இங்கே தங்குமிடத்தை மாத்திக்கலாமுன்னு தோணுச்சு. கீழே ரெஸ்ட்டாரண்ட் டைனிங் ஹால் நல்ல நீட்டாகவே இருக்கு. மெனு கார்ட் வந்தது. அவரவருக்கு வேண்டியதைச் சொன்னோம். எனக்கு பருப்பும் சாதமும். கூட ரெண்டு அப்பளம். சாப்பாடானதும் அறைக்குப்போய் ஓய்வு. வெய்யில் சக்கைப்போடு போடுது !
ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும் நம்ம உறவுக்கு ஒரு சேதி அனுப்பினேன். ' நாளையும் மறுநாளும் இங்கே இருப்போம். உங்களை சந்திக்க எந்த நேரம் தோதுப்படும்'னு. திங்கள்னு முடிவாச்சு. மகளும் கல்லூரியில் இருந்து திரும்பணுமேன்னு பார்த்து நேரமும் குறிச்சாச்சு.
நாலரைப்போய்ச் சேர்ந்தோம். கோவிடுக்கு முன் வந்ததுதான். ஆச்சே அஞ்சு வருஷம்... அந்த ஏரியா எல்லாம் நிறைய மாற்றங்கள். அட்ரஸ் கண்டுபிடிக்கச் சின்னத் தடுமாற்றம். ஒரு பில்டிங் கார்பார்க்கில் போய் கேட்டப்ப, அடுத்த பகுதின்னாங்க.
பதிவர், நண்பர், தோழி என்பதையெல்லாம் கடந்து ஒரு உறவாக மாறிப் பதிமூணு வருஷங்கள் ஆச்சு ! நலம் விசாரிப்புகள், குடும்பக்கதைகள் இப்படி அவுங்களோடு ஒரு முக்காமணி நேரம் ஓடியே போச்சு. மகளும் நெடுநெடுன்னு வளர்ந்து நிற்பதைப் பார்த்ததும் மனதுக்கு நிறைவு கூடுதல்.
பதிமூணு வருஷத்துக்குமுன் சின்னப்பெண்ணாப் பார்த்ததும் இன்னும் என் கண்முன்னால்.....
அஞ்சரைக்கு அறைக்கு வந்து ஃப்ரெஷப் , ஸ்ரீ ரெங்கவிலாஸ் டீ ஆனதும் உறையூருக்குக் கிளம்பினோம். இங்கைக்கும் அங்கைக்கும் அப்படியொன்னும் அதிகம் தூரமில்லை. எட்டு கிமீ. அந்தக்காலக் கணக்கில் அஞ்சே மைல். அம்மா மண்டபம் ரோடுலேயே வந்து திருச்சிபோகும் திசையில் காவிரிப்பாலம் கடந்து வலக்கைப்பக்கம் திரும்பினால் உறையூர் !
பதினொரு நாள் விழா சமயம். சரியாக நடுவில் வந்துருக்கோம். ஆறாம் நாள் ! இன்றைய சிறப்பு..... பரமபத வாசல் திறப்பு ! வழியில் பயங்கர ட்ராஃபிக் காரணம், அஞ்சு மைலுக்கு அரைமணியாயிருச்சு.
வாசலில் அறிவிப்பு ! திருமொழி திருவாய்மொழித் திருநாள் ! புதுசா இருக்கோ ? ஹேய்..... அதொக்க இல்லையாக்கும்..... நமக்கு ரொம்பப் பரிச்சயப்பட்ட வகையில் சொன்னால் இது நம்ம பகல்பத்து ராப்பத்து விழாதான் ! பப்பத்தை அஞ்சஞ்சா ஆக்கியும் வச்சுருக்கு, கேட்டோ !
ஏனாம்..... இப்படி ?
இங்கே எப்பவும் அம்மாவின் ஆட்சிதான் ! பூரா சொத்துபத்தும் அம்மாவின் பெயரில்தான் ! எல்லோருக்கும் ஒரு வழின்னா..... அம்மாவுக்குத் தனிவழி !
"அந்த வீட்டுலே நடக்கறது ஒன்னுவிடாம இந்த வீட்டுலேயும் நடந்தாகணும். இங்கே நான் வச்சதுதான் சட்டம்....... "
வீட்டு மாப்பிள்ளையா வந்தவர் வாயைத் திறந்து மென்னு முழுங்கி .........
"அப்படியேவா?"
"ஆமாம்....."
ஐயோ.... ஊரு உலகம் என்னா சொல்லும்... (மைண்ட் வாய்ஸ்)
"ஏம்மா என்னதான் இது உன் வீடுன்னாலும் பெரிய வீட்டுலே நடப்பதைப்போல இங்கேயும் நடத்த முடியுமா? கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்......."
"ம்ம்ம் சரி. போனாப்போட்டும் . அதுலே பாதிக்குப் பாதியாவது இங்கே நடந்தாகணும். ஆமா..."
அதானே.... நம்ம கமலவல்லி நியாயஸ்த்தி இல்லையோ!!!
"ஆகட்டும்... அப்படியே பண்ணினால் ஆச்சு. கோச்சுக்காதே, என் கமலவல்லி...."
பெரிய வீட்டில் பகல்பத்து, ராப்பத்துன்னு ஜேஜேன்னு இருக்கும்போது.... இங்கே பகல் அஞ்சு ரா அஞ்சுன்னு ஆச்சு. ஆனால் ஒன்னு... அங்கே நடக்கும் சமயம் இங்கேயுமுன்னு கூட்டத்தில் 'கோவிந்தா' போட மாட்டேன். என் வழி தனி வழி :-)
வைகுண்ட ஏகாதசிக்குப் பெரிய கோவிலில் விழா! மார்கழிக்கு அங்கேன்னா மாசிக்கு இங்கே! அதே ஏகாதசிக்கு...
அங்கே சொர்கவாசல் திறந்து பெருமாள் வருவார்! வரட்டுமே..... இங்கே?
சொர்கவாசல் திறந்து கமலவல்லித்தாயார் அதன் வழியா வெளியே வர்றாங்க! அடடா.... கூடவே பெருமாளும் வரப்டாதோ? ஊஹூம்.... பெருமாளின் உற்சவர்கூட இங்கே கிடையாதாக்கும்! திருமஞ்சனம் மொதக்கொண்டு அங்கே பெரிய பெருமாளுக்கு நடக்கும் எல்லா விசேஷமும் இங்கே தாயாருக்குத்தான் என்பது இன்னுமொரு விசேஷம்!
அங்கெல்லாம் வருசம் ஒருநாள் சொர்கவாசல் திறப்புன்னா... இங்கே ஏகாதசிக்குத் திறந்ததோடு அடுத்த நாலுநாளைக்கும் சொர்கமே சொர்கம்தான்! இந்த முறை அஞ்சு நாட்கள் !!!!!!
ரங்கத்து சேர்த்திசேவைக்கு ஜஸ்ட் ஒருநாள் முந்தி, இங்கத்து சேர்த்திசேவை நடந்துரும். உடனே கிளம்பி லொங்கு லொங்குன்னு ஓடி நடுராத்ரி வருமுன் போய்ச் சேர நம்ம நம்பெருமாள் துடிப்பார். அப்படியும் மட்டையடி விழாமல் இருக்காது.... கேட்டோ !
மாசி மாசம் விழான்னு ஏற்பாடுகள் இருந்தாலும் சில சமயம் தை மாசமே கொண்டாடுவதும் உண்டு. இன்னொரு சமாச்சாரம், இந்தக்கோவிலும் திவ்யதேச லிஸ்ட்டில் இருக்கு ! நம்பர் ஒன் ஸ்ரீரங்கம் & நம்பர் 2 உறையூர் !
இப்படித்தான் ஒரு சமயம், சரியாச் சொன்னால் ஒன்பது வருஷங்களுக்கு முன் நாச்சியார் தரிசனத்துக்கு வந்துருக்கோம். இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டாள் ! பரமபத வாசல் திறப்பு !!!! ஏகாதசியன்னிக்கு சொர்கவாசலில் நுழைஞ்சு வரமாட்டோமான்னு வாழ்நாள் பூரா இருந்த ஏக்கம் அன்றைக்குத் தீர்ந்த நாள். சொர்கமே என் கையில் என்ற நினைப்போடு உள்ளே வெளியேன்னு சரெலமுறை போய்வந்தேன் ! அப்போதைய நிகழ்வு நம் பதிவில் இதோ !
( ஃபிப்ரவரி மாத விழாவைப்பற்றி டிசம்பரில் எழுதியிருக்கேன்னா பாருங்க.... எவ்ளோ சோம்பேறின்னு !)
https://thulasidhalam.blogspot.com/2016/12/104.html
இந்த விழாநடக்கும் பதினொரு நாட்களிலும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு டான்னு கருவறையில் இருந்து புறப்பாடு ! அதுவும் தங்கக்குடையுடன் !!!!! நாம் கொஞ்சம் லேட்டா வந்துருந்ததால் புறப்பாடு தரிசிக்க முடியலை. ஆனால் தங்கக்குடையோடு திருவாய்மொழி மண்டபத்துலே உக்கார்ந்திருந்ததை எட்டிப்பார்த்து க்ளிக்கினோம்.
எதிரில் ஆழ்வார்கள் மூவர் ! நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் & திருப்பாணாழ்வார் ! இவர்களில் திருப்பாணாழ்வாருக்கே முன்னுரிமைன்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் உள்ளூரில் /உறையூரில் பிறந்தவரில்லையோ ! ஆமாம்..... பனிரெண்டு ஆழ்வார்களில் இம்மூவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்னு தெரியலையே..... தெரிஞ்சவுங்க சொன்னால் கேட்டுப்பேன்.
மண்டபத்துக்குப் போயாச்சே.... நாம் போய் மூலவரை தரிசிக்கலாமுன்னு அந்தாண்டை போனால்...... பெரிய வரிசை! வாலில் போய்ச் சேர்ந்தோம். ஒரு காமணியில் தரிசனம் ஆச்சு.
பெருமாள் அழகியமணவாளர்... பெயருக்கேத்தபடி அழகர். முத்தங்கி அலங்காரம் ! மனைவி கம்பீரமா பத்மாசனத்தில் அமர்ந்தநிலையிலும் , கணவர் பவ்யமாப் பக்கத்தில் நின்றபடியும்(! ) சரியாசனம் எல்லாம் கிடையாத் !
தரிசனம் ஆனதும் சொர்கவாசல் நோக்கிப்போனோம். அலங்காரம் அருமை ! போனமுறை ரொம்ப ஸிம்பிளா இருந்தது..... இப்போ அலங்கார நிபுணர் புதுசா யாரோ..... வந்துருக்கலாம். கண்ணில் பளிச் என்னன்னா..... நடுவில் முளைச்சு நிக்கும் 'ஸ்ரீவாரி உண்டியல் ' வசூல்ராஜா இங்கேயுமா ?



ஒரு ஏழெட்டுமுறை சொர்கவாசலுக்குள் போய் வந்தேன். மத்த சனமும் என்னவோ வீட்டுவாசலுக்குள் போறமாதிரி சாவகாசமாப் போறதைப்பார்த்து எனக்கு வியப்புதான். உள்ளூர் சனமா இருக்கணும் !
பரமபதவாசலுக்குள் நுழைஞ்சு அந்தாண்டை போனால் வெளிப்ரகாரம். அங்கே ஒருத்தர் ரங்க நாச்சியார் (அதுவும் இங்கே வந்து !) படத்தைப் பக்தர்களுக்கு விநியோகம் செஞ்சுக்கிட்டு இருந்தார். நாமும் பக்தர்கள் இல்லையோ ! இன்னொருவர் தாலிக்கயிறு, மஞ்சள் குங்குமம் விநியோகம்.
அங்கிருந்து இன்னொரு வாசல்வழியாப் பூலோகம் வந்துட்டோம். மூவரைச் சுற்றி மக்கள் கூட்டம். எதிரில் அரையர் வந்து உட்கார்ந்தார். நாச்சியாருக்கு உபசாரம் நடந்துக்கிட்டே இருக்கு.
நம்மவர் கூட்டத்துக்குள் புகுந்து போனவர் 'எல்லாம் முடிய ராத்ரி பத்து ஆகுமாம்!' என்ற சேதியோடு வந்தார். மணி என்னவோ இப்ப ஏழேகால்தான். நாச்சியாரை மட்டும் கெமெரா மூலம் கிட்டே வரவழைச்சுப் போயிட்டு வர்றேன்னு சொல்லிக்கிட்டுக் கிளம்பினோம்.
ஹயக்ரீவா வந்தாச்சு. இப்பவே டின்னர் வேணுமா என்ன ? ஊஹூம்..... கண்ணெதிரில் கோலிசோடா. விஜியிடம் குடிச்சுப் பார்க்கலாமான்னு கேட்டுட்டு ஆளுக்கு ஒன்னு !
சோடாவை விடுங்க..... அந்த பாட்டில்மேல்தான் என் கண்ணு. நியூஸியில் ஒரு மார்கெட்டில் ஒருக்காப் பார்த்தேன். கொஞ்சம் சின்னது. பழைய சமாச்சாரம். வாங்கிக்கலை. அப்ப இதுவோ ? ப்ச்.... ஆசையை விட்டொழிச்சேன். வேணாம்......
எட்டேமுக்கால் ஆனதும் ஸ்ரீரெங்கவிலாஸில் டின்னர். எனக்கு ரெண்டு இட்லி. சட்னி வேணாமுன்னதும் சக்கரை வந்தது !
தொடரும்........... :-)
4 comments:
படங்கள் சுவாரஸ்யம். தாயை விட உயரமாக மகள். அப்பாவும் அதி உயரமாச்சே!
வாங்க ஸ்ரீராம்,
இப்பத்து ஜெனரேஷன் சொல்லவே வேணாம். அதிலும் அப்பா அம்மா இருவருமே நல்ல உயரம் ! கேக்கணுமா ? தோளுக்கு மிஞ்சிய தோழி !!!!
குடும்ப உறவுகள் பதிவுலக உறவுகள் சந்திப்பு மகிழ்வாக இருந்தது.
சொர்க்கவாசல் திறப்புடன் தாயார் தரிசனம் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். நாமும் வணங்கினோம்.
வாங்க மாதேவி,
இது நமக்கான சொர்கவாசல்ப்பா ! தாயாரின் கருணைக்கு ஏது எல்லை ?
Post a Comment