Monday, May 19, 2025

என்னடா ராமா.... இப்படிக் குலதனத்தைத் தூக்கிக்கொடுத்துட்டே ? (2025 இந்தியப்பயணம் பகுதி 22 )

ரங்கவிமான தரிசனம் வேணுமே!   ரங்கவிமானமுன்னு நாம் சொல்லும் ப்ரணவ விமானத்துக்கு  வேற பெயர்களும் உண்டு. பிரணவாக்ருதி விமானம் , வேதச்ருங்கம் இப்படி.....  ஆகாயத்திலிருந்து பார்த்தால் ஓம்  என்னும் ப்ரணவ வடிவம் தெரியுமாம் ! நாம் எப்படி  ஆகாயத்தில் பறந்து போய்ப் பார்ப்பது ?
 தேவர்கள்  மேலுலகில் இருந்து பார்த்திருக்கவேணும்.  விமானத்தின்மேல் இருக்கும் நாலு கலசங்களும்  நாலு வேதங்களைக் குறிக்கிறதாம். அதனால் வேதச்ருங்கம்.  நாலு பக்கங்களிலும் விஷ்ணுவின் அச்சுதன், அநந்தன், கோவிந்தன் & பரவாசுதேவன் என்ற நாலு முக்கிய வடிவங்கள்   இருக்காம். (எல்லாம் எங்கெங்கோ படித்தவைதான். நான் என்ன கண்டேன் ! )   

இந்த விமானம், உண்மையில்  இக்ஷ்வாகு வம்சத்தின் குலதனம்.  சத்யலோகத்தில் இருந்து பெரியதிருவடி கொண்டுவந்தராம் ! வடக்கே அயோத்யாவிலிருந்து தெற்கே ( உண்மையில் ஸ்ரீலங்கா போயிருக்கவேண்டியது )  திருவரங்கத்துக்கு வந்தது எப்படியாம் ? 

வனவாசம்,  ராவணயுத்தம், சீதை மீட்பு எல்லாம் முடிஞ்சு, அயோத்யாவுக்குத் திரும்பினவுடன், நல்ல முஹூத்தம்  பார்த்து ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிச்சதும், உறவுக்கும் நட்புக்குமா அழைப்பு அனுப்பினாங்க.  எல்லோரும் வந்து பட்டாபிஷேகம் அமர்க்களமா நடந்தது.  விருந்தினர் திரும்பிப்போகும்  நேரம், எல்லோருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கறார் ராமர்.  விபீஷணன் வந்து நிக்கறான்.  அவனைப் பார்த்ததும், என்ன தோணுச்சோ.... பூஜையறையில் இருந்த  இக்ஷ்வாகு வம்சத்தின் குலதனமாகிய  ஸ்ரீ ரங்கவிமானத்தைச் சட்னு  தூக்கி அவன் கையில் கொடுத்துடறார் ! (குடும்ப சொத்தை  இப்படித் தூக்கிக்கொடுப்பளோ ? ) 
ஒருத்தருக்கு ஏதாவது கொடுக்கும்போது, நடுவிலே புகுந்து ' கூடாது'ன்னு தடை போடக்கூடாது என்ற நாகரிகம்  தெரியாதவர்களா  சபையில் இருந்த மற்ற தேவர்கள் ? எப்படிடா தடுத்து நிறுத்தறதுன்னு யோசிச்சவர்கள்,  அங்கே இருந்த புள்ளையாரை வேண்டி, அஸைன்மென்டை அவராண்டை ஒப்படைச்சாங்க. 'ஆப்பரேஷன் ரங்கவிமானம்' உருவாச்சு.  இதைப்பற்றி நம்ம துளசிதளத்துலே முந்தி ஒருக்கா எழுதியது இங்கே !  உண்மையில் இப்போ எழுதறதைவிட நல்லாவே வந்துருக்குன்னு எனக்கொரு தோணல் !  

த்ரேதாயுகம்.  ராமாயணம் நடந்த காலக்கட்டம். நம்ம ராமர், காட்டுக்குப்போய் சீதையைத் தொலைச்சுட்டு,  ராவணனோடு யுத்தம்  செஞ்சு அவனை அழிச்சு சீதையை மீட்டார்.  இந்த  சம்பவம் நடக்கும்போது, ராவணனின் தம்பி,  அண்ணனின் தகாத எண்ணம் (அயலான் மனைவி சமாச்சாரம்)  பிடிக்காமல், அண்ணனின் எதிரியோடு கூட்டு சேர்ந்துக்கறார். எல்லோருமாத் திரும்பி அயோத்யாவுக்கு வர்றாங்க.  முடி சூட்டும் விழாவும் நடக்குது.

விழாவுக்கு வந்து சிறப்பித்தவங்களுக்கு  ரிட்டன் கிஃப்டு  கொடுக்கும் சமயம்,  சூரிய குல அரசர்கள் பூஜித்து வந்த ரங்கவிமானத்தை  விபீஷணனுக்கு தாரை வார்த்துட்டார் ராமன். அவனும்  ரொம்பவே மகிழ்ச்சியோடு  அதை இலங்கைக்குக் கொண்டு போறான், போற வழியில் கீழே எங்கேயும் வைக்கக்கூடாது என்ற 'நிபந்தனையோடு'!

அநேகமா,  அவன் கிளம்புனதும், அயோத்யா  அரண்மனையில் சண்டை ஆரம்பிச்சுருக்கும். " நீங்க செஞ்சது நல்லா இருக்கா?  பரிசு கொடுக்கணுமுன்னாபொன்னும் பொருளுமாக் கைநிறையக் கொடுத்தனுப்பாம,  வழிவழியா நம்ம  முன்னோர்கள்  பூஜித்து வந்த  ரங்கவிமானத்தைத் தூக்கிக் கொடுக்கலாமா?  எப்பேர்ப்பட்ட தேவலோகத்து சமாச்சாரம். இனி அம்மான்னா வருமா? அய்யான்னா வருமா? "  பிடுங்கல் தொடங்கி இருக்கும்! (நானா இருந்தால்...... என்று  நினைச்சுப் பார்த்தேன்..ஹிஹி)

"கொடுத்தது கொடுத்ததுதான்.  அதைப்போய் இப்பத் திருப்பிக் கேட்டால் அல்பமா இருக்காதா?  இப்ப என்னை என்னா செய்யச் சொல்றே? " ( கோபால்)

அப்ப ஒன்னு செய்யலாம். என்னமோ பழமொழி சொல்வாங்களே... அதி ஏமிட்டி? ஆ...  சூழ்ச்சி  சேஸ்த்தாம்னு தேவர்களிடம்  சொல்லப்போக பக்காவா 'ஆபரேஷன் ரங்கவிமானம்'  உருவாச்சு.  தேவர்கள் சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகள் இல்லையோ!

'ஆபரேஷன் 'சொல்லுக்கு  நன்றி, அமைதிச்சாரல்!

கூப்பிடு அந்த சூரிய பகவானை. அப்படியே அந்தப் புள்ளையாரையும்! திட்டத்தைத் தெளிவு படுத்துனதும் ஓக்கேன்னு சொல்லிக் கிளம்புனாங்க ரெண்டு பேரும்.

திடீர்னு  இருட்டிக்கிட்டுப் பொழுது போய் சந்தியா நேரமாகுது. கண்ணை உசத்தி சூரியனைப் பார்க்கிறான் விபீஷணன்.  மேற்கே அஸ்தமிக்கும் கோலம் காட்டறான் சூரியன்.  அச்சச்சோ....   மாலை நேரத்து சந்தியாவந்தனம் செய்யணுமே....  கையில் இருக்கும் ரங்கவிமானத்தைக் கீழே வைக்கக்கூடாதுன்னு ஆக்ஞை இருக்கே என்ன செய்யலாமுன்னு சுத்தும் முத்தும் பார்க்க, அங்கே  ஒரு சின்னப்பையன் ஆத்துமணலில் (காவிரி ஆறு)  விளையாடிக்கிட்டு இருக்கான்.

"ஏ பையா, இங்கெ வா. இத்தைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோ. அஞ்சே நிமிட்லே சந்தி செஞ்சுட்டு வாரேன். தப்பித்தவறிக் கீழே வச்சுறாதே"

"அய்ய... நாமாட்டேன். வூட்டுக்குப் போகணும். ஆத்தா வையும்"

"அதெல்லாம் வையாது ....  நான் பார்த்துக்கறேன்.  செத்தப் பிடி. அஞ்சே நிமிட்"

'ஊம்.... மாட்டேன்....'னு பையன் சொல்ல அவங்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி(!)  சம்மதிக்க  வைக்கிறான் விபீஷணன்.

பையன் சொல்றான்  'த பாரு, நான்  மூணு வாட்டி உன்னைக் கூப்புடுவேன். அதுக்குள்ள நீ வரலை...  நான் கீழே வச்சுட்டுப் போயிருவேன்'
"அதெல்லாம் அம்மாந்நேரம்  ஆவாது.   தோ... போனேன் வந்தேன்னு  வந்து வாங்கிக்கறேன்"

விபீஷணன், ஆத்துலே இறங்கி  கைகால் கழுவும்போதே,   சீக்கிரம் வாய்யா, சீக்கிரம் வாய்யான்னு மூணுதபா  மெல்லிசாக் கள்ளக்குரலில் ரகசியமாக் கூப்பிட்ட பையன்,  ரங்கவிமானத்தைக் கீழே வச்சுட்டு ஓடிட்டான்.

அவசர அவசரமா சந்தியா வந்தனம் செஞ்சு முடிச்சு  நாலே நிமிட்டுலே ஓடி வந்து பார்த்தா.......  விமானம் கீழே இருக்கு. சட்னு தூக்கி எடுக்கப் பார்த்தால் அது கல்குண்டாக் கனக்குது. கிளப்ப முடியலை:( அடப்பாவி,  சதிச்சயேன்னு  கண்ணை ஓட்டுனா.... பையன்  அந்தாலெ தூரமா ஓடிக்கிட்டு இருக்கான்.  அவனைத் துரத்திக்கிட்டே  போனால்...   பையன் சின்ன வயசுல்லே....  குடுகுடுன்னு ஓடிப்போய் மலைமேலே தாவி ஏறி  ராக் க்ளைம்பிங் செஞ்சு உச்சிக்குப் போயிட்டான்.

விபீஷணனால் அவ்ளோ சட்னு மலை ஏறிப்போக முடியலை.  அப்ப ஏது இந்தப் படிக்கட்டெல்லாம்?   கஷ்டப்பட்டு  மேலேறிப்போய், பையன் தலையில் நறுக் னு ஒரு குட்டு வச்சுக்  காதைப் பிடிச்சுத் திருகப் போறான்.  கையில் சிக்குச்சு யானைக் காது!  என்னடான்னு பார்த்தால் புள்ளையார்  நிக்கறார்.  அப்பப் பார்த்து சூரியன் பளிச்னு ஆகாசத்துலே  வந்து நிக்கறான். அநேகமா மணி ஒரு ரெண்டு ரெண்டரைதான் இருக்கும்:-)

அட ராமா.... இதெல்லாம்  இவுங்க வேலையா?  கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டலை பாருன்னு  வெறுங்கையா தன் நாட்டுக்குப்போய்ச் சேர்ந்தான்.
விபீஷணன் குட்டியது,  ஒரு தழும்பா புள்ளையார்  மண்டையிலே  இப்பவும் இருக்காம்!

மேலே: நம்ம துளசிதளத்தில் 'அப்போ' எழுதியதே !

இந்தக்கோவிலில் ஏகப்பட்ட மண்டபங்கள் உண்டு. நூத்தியெட் டுன்னுகூட ஒரு கணக்கு இருக்காமே !  எத்தனையோ முறை இங்கே வந்துருந்தாலும் சில மண்டபப் பெயர்க் குழப்பங்கள் எனக்கு இருக்கே..... 

இந்த எதிர்மண்டபத்துக்குள்ளேயே  இன்னும் சில மண்டபங்கள் இருக்குன்றதால் ரேவதி, கிளி, அர்ச்சுன என்ற பெயருள்ளவை எங்கெங்கேன்னு  இன்னும் மனசில் பதியலை.  எதிர்மண்டபமுன்னே சொல்லிக்கறேன் இப்போதைக்கு !
பெரிய காண்டாமணி கைக்கெட்டும் உயரத்தில் இங்கே.  நாக்கை அசைக்கமுடியாதபடி உள்ளே ஒரு கட்டு.  (நமக்கும் இப்படி இருந்தால் வம்பே இல்லை !)
ரங்கவிமான தரிசனம் இங்கே நின்னால் பளிச் !  நம் கண்களுக்குத் தெரிவதில் குழலூதும் கண்ணன் இருக்கார். அச்சுதன் !  முன்னால் இருக்கும் பரவாசுதேவரை,  முந்தி  21 கோபுரதரிசனம் போனபோது பார்த்திருக்கோம். அது ஆச்சு பதிமூணு வருஷம்.   
பின்பக்கத்தில் விஸ்வக்ஷேனர் சந்நிதிக்குப்பக்கம்  வெளியே போகும் வழியாக இருக்கும் படிகளில் ஏறினால் அநந்தன் குடைபிடிக்கச்  சங்குசக்ரத்தோடு நிற்கிறார்!  நாலாவது பக்கம்தான் என்ன கோலமுன்னு தெரியலை. கோவிந்தனாகத்தான் இருக்கவேணும். 
ரங்கவிமானம் கண்டதும்,  கையோடு கூட்டிவந்து அறையில் ஓய்வெடுக்கும் குழந்தைக்கு, 'இதுதாண்டா உங்க குலதனம்' னு மானசீகமா ஒரு சேதி அனுப்பினேன்.  ஒரு காலத்தில் யாஹூ குழுமத்தில்  இந்த குலதனம் பற்றிய சர்ச்சைகள்  ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தது, கேட்டோ !!!!


ரேவதி மண்டபத்துக்குள் நடந்து நடந்து அந்தக்கோடியில் போனால் அது அர்ச்சுனமண்டபம்.  பீவிநாச்சியார் சந்நிதி இங்கே ! முந்தி ஒருக்கில் பக்கத்துலேயே சேரகுலவல்லி சந்நிதி பார்த்த ஞாபகம்.  எல்லாமே  உடம்பை ரெண்டா மடிச்சுக் குனிஞ்சு பார்க்கும் உயரத்தில் அப்போ ! இப்ப இந்தாண்டை ஒன்னுமில்லை. எதோ மரப்பலகை போட்டுவச்சுருக்கு.   தசாவதார ஓவியங்கள் எல்லாம் சமீபத்து சமாச்சாரம் போல ! (இதுலே புத்தர் அவதாரம் எல்லாம் இல்லை கேட்டோ !!!!!   ) 


மண்டபத்துக்குள்ளே கம்பித்தடுப்புகள்  அங்கங்கே வச்சுத் தூண்களின் அழகை ரசிக்கமுடியாமல் செஞ்சு வச்சுருக்கு நிர்வாகம். 
சிலபல க்ளிக்ஸ் முடிச்சுப் படியிறங்கிப்போய் நம்ம விஷ்வக்ஷேனரைக் கும்பிட்டோம்.   பக்கத்துலே இருக்கும் கிணற்றை நானும் எட்டிப்பார்த்தேன்.    
(பங்காரு பாவி ? 
வெளியே போகும் வழிக்குப் படியேறிப்போகணும். அடுத்தபக்கம் படிகள் இறங்கிப்போகணும். இந்தக் காலை வச்சுக்கிட்டு...... ப்ச்.....


அடுத்த மண்டபத்தில் ப்ரஸாத விற்பனை.  கருடமண்டபத்தாண்டை இருந்த கடைகளைக் காணோம் என்பது இப்பதான் நினைவுக்கு வந்தது.  இந்தாண்டை தங்கப்பல்லிகள். 
அடுத்த தரிசனம் நம்ம அன்னமூர்த்திப்பெருமாள் !  நம்ம வெங்கட் நாகராஜ் அவர்களின் தந்தை நினைவுக்கு வந்தார்.  அவர் சொல்லித்தான் இப்படி ஒரு சந்நிதி இருப்பதே நமக்குத் தெரியவந்தது. ஆச்சு பதிமூணு வருஷம். சமீபத்துலே பெருமாள்கிட்டே போயிட்டார். 

வலதுபக்கம் திரும்பிப்போய்  கொடிமரம், பலிபீடம் ஸேவிச்சோம்.  அடுத்து ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி ஆஞ்சநேயர், பவித்ரமண்டபம் , தோன்றமல்லர் நாயுடு தம்பதிகளை வணங்கி வாசப்பக்கம் வந்தால் பேட்டரி கார்கள்  எல்லாம் ஓய்வில்.
வெளியே வந்து ஆஃபீஸ் வரை போய்,  பேட்டரிகார்கள் சர்வீஸ் இருக்கான்னு  கேட்டால், அங்கிருந்த ஊழியர் கொஞ்சம் இந்த பெஞ்சில் உக்காருங்க வரும்னு சொன்னார்.  ஆச்சு காமணி ...... எங்கே  ??????    அந்த ஊழியரிடமே விசாரிக்கலாமுன்னா...  ஆளையே காணோம்.  இனியும் தேவுடு காக்க முடியாதுன்னு பொடி நடையில் இதே சுற்றில் இருக்கும்   நம்ம ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்குப் போய் தரிசனம் ஆச்சு. இது முன்பொருக்கில் வசந்தமண்டபமாக இருந்தது ! 

மணியாகுது. கிளம்பலாமுன்னு நம்மவர் சொல்லிட்டார்.  ரங்கவிலாஸ் கடந்தால்  இன்னும் சில சந்நிதிகள் திறந்திருக்கு.  இதெல்லாம் முந்தி கடைகளால் மறைக்கப்பட்டுருந்த நினைவு!  வீர ஆஞ்சநேயர், விட்டல் க்ருஷ்ணன் தரிசனம் முடிச்சு ரங்கா கோபுரத்து வழியில் வெளியில் வந்துட்டோம்.      
நல்ல கால் வலி.  அறைக்கு வந்ததும், ஆயுர்வேத மருந்து தேய்ச்சுக்கிட்டுக் கொஞ்சம் ஓய்வு. 

பகல் சாப்பாடுன்னு ஒன்னு இருக்குல்லெ ?   பார்க்கலாம்...... வேறெதாவது தேறுமான்னு....      

தொடரும்.......... :-)


9 comments:

said...

அருமை நன்றி

said...

நாம் அடிகடி பார்த்த ர்ங்கநாதர் கோவிலை வித்தியாசமான கோணத்தில் படமெடுத்து, அழகாகவர்ணனை கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

said...

அடிக்கடி தரிசித்த அரங்கன் கோவிலை வித்தியாசமான கோலத்தில் படமெடுத்தும், அழகான வர்ணனை கொடுத்தும் அசத்தி விட்டீர்கள்

said...

படங்கள் யாவும் சுவாரஸ்யம்.  கோபுரத்தை ஏன் விமானம் என்கிறோம்?  ஏரோபிளேனுக்கு விமானம் என்று யார் பெயர் வைத்தார்கள்?  ஏன்?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க பானு !
நலம்தானே ? மிகவும் மகிழ்ச்சியூட்டின பின்னூட்டம் ! நன்றிப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

பொதுவா கோவில்களுக்குள் நுழையும் வாசல்கள் மேல் கட்டியிருப்பவை கோபுரம். கருவறைக்கு மேல் கட்டியிருப்பது விமானம். சில கோவில்களில் கருவறை விமானமே சின்னதா கோபுரவடிவில் இருக்கு!

நம்ம புராணங்களில் மேலுலகத்தில் இருந்து தேவர்கள் பூலோகத்திற்கோ மற்ற லோகங்களுக்கோ (அதான் மொத்தம் ஏழு லோகங்கள் இருக்கே !) பறந்து போகப் பயன்படுத்தியவற்றை விமானம் என்றே குறிப்பிட்டுள்ளனர். புஷ்பகவிமானம் ! ஏரோப்ளேனைத் தமிழ்ப்படுத்தியவர்கள் அது பறந்து வருவதால் விமானம் என்றே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இது எனக்குத் தோணியது. வேறு யாராவது விளக்கினால் நானும் தெரிஞ்சுக்குவேன்.

said...

தரிசனங்கள் ஆகிவிட்டது. நாங்களும் தரீசித்துக்கொண்டோம்.

said...

வாங்க மாதேவி,

உண்மையில் உங்க நாட்டுக்கு வரவேண்டியது, இப்படிப் புள்ளையாரால் இங்கே வந்துருக்கு !