மொட்டைமாடியில் ஒரு பெரிய ஹால் ! முழுசும் ஏஸி வேற. கதவைத்திறந்து வெளியே வந்தால் ராஜகோபுர தரிசனம் ! தனியொருவனாக ராஜாங்கம் இப்போது ! காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் வேறெங்கியாவது போகலாமுன்னு நாம் தயாராகிட்டு, விஜியை வரச் சொன்னால், மலர்ந்த முகத்தோடு புள்ளி ஆஜர். நல்லாத் தூங்கினீங்களான்னு கேட்டேன். வேறயாருமே வரலைம்மா.... நான் மட்டும்தான்னார். நேத்து இங்கே வந்தவுடன் மேலே சொன்ன வசதிகளை ஏற்கெனவே சொல்லித்தான் வச்சுருந்தேன். ச்சும்மாச் சொல்லக்கூடாது ட்ரைவர்ஸ் ரூம்தான் இந்த ஹொட்டேலிலேயே த பெஸ்ட் !
வண்டியை எடுக்கப்போனவரிடம், இங்கே பக்கத்துலே ஒரு இடம் இருக்கு , நடந்தே போகலாமுன்னு போனோம். மூணாவது பில்டிங்தான். ஸ்ரீ ரெங்காஸ் பவன். இடியாப்பம் தேங்காய்ப்பால் இருக்காம் ! ஆஹா.... அது எனக்கு. அவுங்க ரெண்டுபேருக்கும் அவுங்க இஷ்டப்படி. அருமையான டீ வேற ! (கொஞ்சநாளா என் காஃபியைத் தியாகம் செஞ்சுருக்கேன்)
நிறையப்பேர் வந்து பார்ஸல் வாங்கிட்டுப்போறாங்க. வீடுகளில் சமைக்க முடியாதவங்களுக்கு ரெகுலரா இங்கிருந்து டிஃபன், சாப்பாடு எல்லாம் வேளாவேளைக்குப் போகுதாம் ! அட!! ஆஹா.....
காலை எட்டேமுக்காலுக்கெல்லாம் கோவிலுக்குக் கிளம்பிட்டோம். ரெங்கா கோபுரத்தாண்டை இறங்கினதும், நல்ல சகுனம் கிடைச்சது ! நம்மவள் இல்லை. வேற ஒருவரோடது. அதனால் என்ன ..... தரிசனம் கிடைச்சதே போதும் !



நம்மவளுக்குப் புதுவீடு கட்டி அங்கே வச்சுருக்காங்க, நம்ம உள் ஆண்டாள் சந்நிதிக்கந்தாண்டை. போய்ப் பார்க்கலாமுன்னா.... அங்கே போகும் வழியில் தடுப்பு. உள் ஆண்டாள் சந்நிதிகூட இன்னும் திறக்கலை. ரெங்கவிலாஸ் மண்டபத்தில் கெமெரா டிக்கெட், கோபுரத்ரிசன டிக்கெட் எல்லாம் விற்க முந்தி ஒரு சின்ன ஸ்டால் இருக்கும். அதைத்தேடினால்..... காணோம். அங்கே இருந்த ஒருவரிடம், கேமெரா டிக்கெட் எங்கே வாங்கணுமுன்னு கேட்டால்.... தேவை இல்லையாம். ஹா.....



கடந்து அடுத்த சுற்றுக்குப் போனோம். அகளங்கன் வீதி. ஆஞ்சுவை நமஸ்கரிக்கப்போனால்..... சந்நிதி திறந்துருக்கு! ஆனால் ஆஞ்சுவை முழுசுமாப் பார்க்கவிடாமல்,அந்தச் சின்ன வாசலை அடைச்சுக்கிட்டுப் பட்டர் உக்கார்ந்திருந்தார். ஹூம்....
எதிர்த்தாப்புலே இருக்கும் கார்த்திகை கோபுர வாசலுக்குள் போய் கருடமண்டபத்தில் பெரிய திருவடியை ஸேவிக்கவேணும். பெயருக்கேத்தாற்போல் மிகப்பெரிய திருவடிதான் இவர் ! இருபத்தியஞ்சடி உயரம் ! 'ஒன் டூ த்ரீ.....இதோ பறக்கப்போறேன் 'என்ற மாதிரி அமர்ந்த பாவம் ! மரத்தால் ஆனவர் ! இவருக்கு வஸ்த்திரம் சாத்தணுமுன்னா.... முப்பது மீட்டர் நீளத்துணி (வேஷ்டி) வேணுமாம்!


ஏகப்பட்டத் தூண்கள் நிறைஞ்சுருக்கும் இந்த மண்டபத்தில்தான் ஒருபக்கம் கருடமண்டபம் இருக்கு! மண்டபம் கடந்துபோய் எதிரே இருக்கும் ஆர்யபடாள் வாசலுக்கு வலதுபக்கம்தான் பெரிய பெருமாள் தரிசனத்துக்குப் போகும் சனம் வரிசைக்குத் தடுப்பு போட்டு வச்சுருப்பாங்க. ரெண்டு வரிசைன்னு நினைக்கிறேன். இன்றைக்குப் பார்த்தால் அந்த வரிசைகள் நிறைஞ்சு வழிஞ்சு வெளியே வந்துருக்கு..... வரிசையின் வாலெங்கேன்னு பார்த்தால் இந்த மண்டபத்துக்குள்ளே......
ஆர்யபடாள் வாசலுக்கு இங்கிருந்து போகமுடியாதபடி அங்கங்கே தடுப்புகளாப் போட்டு வச்சுருக்காங்க. அங்கே போனால்தான் சிறப்புதரிசன வழியாகவாவது, பெரியவரை தரிசிக்கலாம். என்னசெய்யறதுன்னு தெரியாமல் கம்பித்தடுப்புக்கு இந்தப்பக்கம் நின்னுக்கிட்டு இருந்தோம். அங்கிருந்த காவலர்கிட்டே..... உள்ளே போக வேற வழி இருக்கான்னு கேட்டதும்.... என்ன நினைச்சாரோ, கம்பித்தடுப்பைக் கொஞ்சம் விலக்கி அந்தப்பக்கம் போகச் சொன்னார்.



கொடிமரத்துக்கந்தாண்டை வழக்கமா ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்குமிடத்தில் கொஞ்சம்பேர் வரிசையில். நாமும் போய் நின்னோம். முந்தி இருந்ததுபோல், இருநூற்றியம்பது, முன்னூறு, ஐநூறு இப்படி ஒன்னும் இப்ப இல்லையாம். ஆளுக்கு நூறு மட்டுமாம். அட! விலைவாசி ஏறிக்கிடக்கும் காலத்தில் ரங்கதரிசனம் மலிவாக் கிடைக்குதே! ரெங்கா ரெங்கா......
பக்கவாட்டில் இன்னொரு கம்பித்தடுப்பு. அதுக்குள்ளே மக்களை அனுமதிக்கும் காவலர், நாம் நுழைஞ்சதும் இடப்பக்கம் கைகாட்டி அங்கே போய் உக்கார்ந்துக்கச் சொன்னார். என்னோட நொண்டிநடையைக் கவனிச்சுருப்பார் போல ! அந்தப்பக்கம் கடைசியில் ஒரு சந்நிதி. மூடியிருந்தது. அந்தப் படிக்கட்டில் உக்கார்ந்தோம். நமக்கு முன்னால் வந்தவங்க, இன்னொரு தடுப்புக்குள் போய் மரப்படிகளில் ஏறிப்போறாங்க.
ஒரு காமணி காத்திருந்த பின், சந்நிதிப்பக்கமா இருந்த கம்பிக்கதவைத் திறந்து நம்மை உள்ளே போகச் சொன்னாங்க. ஒரு பத்தடி நடந்தபின் படிக்கட்டுகளில் ஏறிப்போகணும். காயத்ரி மண்டபத்தில் நிக்கறோம் !!!! அந்தப்பக்கம் வரும் நீண்டவரிசை பக்தர்கள் நெருக்கித் தள்ளத்தான் செய்யறாங்க. அதுலே என் முன்னே நின்ன ஒரு அம்மாள், சட்னு என்பக்கம் திரும்பி, இன்னைக்குக் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்கவாசல் திறப்புன்னாங்க !
அட ராமா...... இன்றைக்கு ஏகாதசியா என்ன !!!!!
பொதுவாப் பயணத்தில் இருக்கும்போது நாள் மட்டுமே கவனத்தில் இருக்கும். நக்ஷத்திரமோ திதியோ பார்த்துக்கணும்னு கூட மனசில் தோணாது.
'நல்ல சேதி சொல்லியனுப்பியதுக்கு நன்றிடா..... என் ரங்கா'ன்னு மெல்லச் சொன்னேன்.
வரிசை நகர்ந்து இதோ குலசேகரன்படியாண்டை போயாச்சு. எப்படியோ பெரியபெருமாள் தரிசனமும் ஆச்சு !
இன்றைக்குப் பெரிய பெருமாளை தரிசிப்போம்னு நான் முதலில் எதிர்பார்க்கவே இல்லை..... . என் கவனம் எல்லாம் தாயார் சந்நிதிக்குப் போகணும் என்பதுதான்.....
மேலே படம். நம்ம வீட்டில் ரங்கன் ! நெருங்கிய தோழியின் அன்புப்பரிசு !
தீர்த்தம் வாங்கியதும் படிகளில் இறங்கி எதிர்மண்டபத்துக்குப் போனேன்.
தொடரும்.......... :-)
8 comments:
நல்ல தரிசனம் ஆச்சா?
வாசிச்சுட்டு இருக்கேன் சில பதிவுகளில் கருத்து போடா ம போய்விடுகிறேன்.
ரெங்கவிலாஸ் நல்லாருக்கோ? இலை எல்லாம் போட்டு...
படங்களும் குறிப்புகளும் நல்லாருக்கு
கீதா
சில வருடங்களாகவே (திமுக வந்ததற்குப் பிறகு) 50, 250 ரூ என்று இருந்த இரண்டு டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு 100 ரூ ஆக்கிட்டாங்க.
வாங்க ஸ்ரீராம்,
நல்ல தரிசனம்னு எப்பவுமே சொல்லிக்க முடியாது. தரிசனம் ஆச்சு! அவ்ளோதான். அங்கிருந்து நகரவைக்கப்பட்டபின் அடடா.... காலாண்டை அதைப் பார்க்கலையே, கையாண்டை, இதைப்பார்க்கலையேன்னுதான் ................. போகட்டும், 'அவன்' நம்மைப் பார்த்திருப்பான்தானே !
வாங்க கீதா,
ஸ்ரீ ரெங்கவிலாஸ் இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு !
வாங்க நெல்லைத்தமிழன்,
தகவலுக்கு நன்றி. ரங்கம் போயே ஆச்சு அஞ்சு வருஷம் .
இறைதரிசனம் காண்பது என்பது பெரிய கோவில்களில் சிரமம்தான்.
வாங்க மாதேவி,
சின்னக்கோவில்களில் இருக்கும் எளிமை, பெரிய கோவில்களில் இருக்கறதில்லையேப்பா....
Post a Comment