Monday, May 05, 2025

நேரத்தை நாம் எப்படித் திருப்பிக்கொடுப்பது ? (2025 இந்தியப்பயணம் பகுதி 16 )


இன்றைக்குக் கேஸரி. தினமும் எதாவது இனிப்பு வகைகள் உண்டு. ஆனாலும் குலோப்ஜாமூன்,  ரஸ்குல்லா, கேஸரி, ஸேமியா பாயஸம் அடிக்கடியும், அடப்ரதமன், சக்கரைப்பொங்கல் என்பவை அபூர்வமாகவும் இருக்கும்.  நான் ஒரு இனிப்புப் பிசாசு என்றாலும் கூட.....  காலை நேரத்தில்.... 
பகல் ரெண்டரை வரை.... சிகிச்சை. விஸ்தரிக்கப்போவதில்லை. எல்லாம் நேத்து நடந்தாப்லெதான்.  காலையில் அங்கே போக, லோட்டஸ் வாசலில் ஒரு ஆட்டோ எடுத்தோம்.  ரொம்பப் பக்கம் என்றாலும்   நொண்டிக்காலை வச்சு  விந்தி விந்தி நடக்க இயலாது இல்லையோ !  ஆட்டோக்காரர் , தன்னுடைய செல்ஃபோன் நம்பரைக்கொடுத்து, திரும்ப வரும்போது  கூப்பிட்டால்  நான் வந்து அழைத்துப் போவேன்னார், வேறெங்கேயும் சவாரி போகலைன்னால்.  நல்லது.  இப்படி அவசரத்துக்கு ஒருவர் உதவி தேவைதான்.   
என்னை மருத்துவமனையில் இறக்கி விட்டதும்,   அதே ஆட்டோவில் போய் நம்மவனுக்குத் தைக்கக்கொடுத்துருந்த   ஷர்ட்ஸ்களை,புதுசாக் கிடைச்ச டெய்லரிடம் போய் வாங்கி வந்ததாக நம்மவர் சொன்னார். ரொம்ப நல்லாவே தைச்சுருந்தார். கொஞ்சம் துணி பாக்கி இருந்ததுன்னு  ஷர்ட்க்கு மேட்ச்சா ஒரு அரை ட்ரௌஸரும் கூட !  இந்த டெய்லர் விலாசம் கூட நம்ம  குடும்பம் கார்த்திக்கின்  உபயம்தான். பெயர்தான் பீமாராவ்.  ஆனால் நேர் எதிர்ப்பதமான உடல் ! அஞ்சு பேர் இவருக்கு உதவியாளர்களா இருக்காங்க.  நாம் வழக்கமாப் போகும் முஸ்தாஃபா , லேடீஸ்  டெய்லர். முப்பத்தியொரு வருஷமா நமக்குத் தைச்சுக்கொடுக்கறார். 


பதினொன்னரைக்குப் பக்கம் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தவர்,  பழமுதிர்நிலையத்தில் கொஞ்சம் பழங்களும், வாசலில் பூவிற்கும் அம்மணியிடம் கொஞ்சம் பூவும் வாங்கிவந்தது எனக்குப்பிடிச்சுருந்தது.  குழந்தைக்குப் பூ மாற்றணும். எல்லாம் இங்கிருக்கும்வரைதான் இல்லே ? 
பகல் சாப்பாடு ரொம்ப லேட்டாகுதேன்னு, விஜியை சாப்பிட்டு வரச் சொல்லிட்டு,  நாங்க  இயற்கை உணவு  எடுத்துக்கிட்டோம். ஹாஹா.....  பழங்கள், வெள்ளரிக்காய். தயிர் ! 
மூணு மணிக்கு விஜி வந்ததும் பாண்டிபஸார் விஸிட்.  நேத்து மகளுக்கு வாங்கின உடைகளுக்கு மேட்ச்சான வளையல் முதலியவை.  சாயங்காலம் நம்ம கீதாவில் சுடச் சுட பஜ்ஜி. (நம்மவருக்கு ரொம்பவே பிடிச்ச சமாச்சாரம்.  சென்னையில் இருக்கும்போது அனுபவிச்சால்தான் உண்டு ! ) ரொம்பப் பழங்காலமாகவே இருக்கவேணாம். புதிய தலைமுறைக்குப் பிடிச்சதையும் கொடுக்கணுமேன்னு  கீதாவிலேயே ஒரு பக்கம்  சாட் ஐட்டம்ஸ், டீ எல்லாம்  விற்கறாங்க. சிடிக்கவுன்ஸில் நடைபாதையை விஸ்தரிச்சு  ஒன்னுரெண்டு  இருக்கைகள் போட்டு வச்சுருப்பதில் ஒன்னு கீதாவுக்கு முன்னால் ! ரொம்ப வசதியாப் போச்சு !  எனக்குமே அங்கே உக்கார்ந்து வேடிக்கை பார்க்கப்பிடிக்குதே ! 

நேரம் கிடைக்கும்போது நட்புகளையும் உறவுகளையும் போய் பார்த்து வருவதும்  முக்கியம் என்பதால் ஒரு ஆறரைக்குக் கிளம்பி சாலிக்ராமம் போனோம்.  நம்ம பூனா சொந்தம் மாமிமாமா இப்ப இந்த உலகில் இல்லைன்னாலும்  அவுங்க குடும்பம் முழுசும் நம்மை ஸ்வீகரிச்சுருக்கே ! நாப்பத்திரெண்டு வருஷ பந்தம் ! அந்த ஏரியாவில்தான் தம்பியும் இருக்கார்.  நம்ம விஜியின் வீடுகூட அதே பகுதியில்தான் என்பதால்  வாசலில் தேவுடு காக்காமல் வீட்டுக்குப் போகச் சொன்னோம். தேவையான போது கூப்பிட்டால் ஆச்சு. அதான் செல் இருக்கே! 
பேச்சு பிஸியில் நேரம் போனதே தெரியலை. ஒன்பதே காலுக்கு லோட்டஸ் திரும்பினோம். 

மறுநாளும் பகல் ரெண்டரைவரை என் நேரம்.   சிகிச்சை முடிஞ்சது.  ஒருநாள் நம்ம வீட்டு சாப்பாட்டுக்கு  விஜியும்  வரணுமுன்னு தோணியதால், அன்று  பகல் சாப்பாடு நம்மோடுன்னு விஜிக்குச் சொல்லியாச்.  இப்போதைக்கு லோட்டஸ்தான் நம்ம வீடு இல்லையோ !
நாலு மணி போல 'நம்ம குடும்பம் கார்த்திக்' உதவிக்கு வந்தார்.  நண்பர், சகபதிவர் என்பதையெல்லாம் விட இவரை மகனாக நாங்கள் மனதில் ஸ்வீகரிச்சு இருக்கோம். மகளுக்கு அனுப்ப வேண்டியவைகளை எடுத்துக்கிட்டு எல்லோருமாக் கிளம்பி கூரியர் கம்பெனிக்குப் போனோம். இந்தக் கம்பெனியும்  கார்த்திக் கண்டுபிடிச்சதுதான். ஏற்கெனவே நமக்கு சிலபல பார்ஸல்களை இதன் மூலம் அனுப்பி இருக்கார். நல்ல நம்பகமான இடம்தான். 
வளசரவாக்கம் ஏரியா.  ராகுல் என்பவர் நாம் கொண்டுபோனவைகளை  ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்தார்.  கிட்டத்தட்டப் பத்துகிலோ எடை வந்தது. அட்டைப்பெட்டி எல்லாம் கூட நாம் கொண்டுபோகத் தேவை இல்லை. 


பதிவில் விலாசம் படம் சேர்த்திருக்கேன், தேவைப்படும் நண்பர்களுக்காக !  அனுப்பிய பத்தாம் நாள் பார்ஸல் வந்து சேர்ந்த விவரம் மகளின் செய்தியில்  பார்த்ததும்  நிம்மதியாச்சு.  நமக்கும்  கொஞ்சம் அனுப்பணும்தான்.  நாட்டைவிட்டுக்கிளம்புமுன் அனுப்பவேணும். 
திரும்பி வரும் வழியில்  நம்ம டீக்கடையில்  நாலு டீ.  அப்படியே  மௌண்ட்ரோட்  ரமீ மால் போய்  நம்மவருக்கு டெக்கத்லான் வாக்கிங் ஷூஸ் வாங்கியாச்.  கார்த்திக் தினமும் குறைஞ்சபட்சம் அஞ்சு கிமீ நடக்கிறார். இந்தவகை காலணிகள்  நடப்பதற்கு வசதியாக இருக்கிறதென்று பலபதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்தான்.   இதை மனசில் வச்சுப் போன பயணத்தில்   இதே கடைக்குப்போய்  இதே ஷூஸ்  போட்டுப்பார்த்தும்கூட நம்மவர், கடைசி நிமிட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வாங்கினால் தினமும் நடக்கச் சொல்வேன் என்ற பயமாக இருக்கணும்.  இந்த முறை கட்டாயம் வாங்க வச்சாச்சு.   
வயசாகிக்கிட்டு இருக்கும்போதாவது தினமும் கொஞ்சம் நடைப்பயிற்சி வேணும்தானே ?  அவரையும் முழுசாக் குற்றம் சொல்ல முடியாது..... நியூஸியில் நம்ம ஊரின் காலநிலை...ப்ச்.....  குளிரில் வெளியே போகவே தோணாது. அதில் ஏகப்பட்ட குளிர்கால உடுப்புகளுடன்  நடக்கப்போவதும் கஷ்டம்தான்.  இன்னொன்னு...... தனியாகத்தான் நடக்கப்போகணும்.  முன்புபோல் என்னால் கூட நடக்க முடியாது. கால் சரியில்லையே....
கார்த்திக் போன்ற ஒரு பரோபகாரியை நான்  என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை.  எதையும்  எதிர்பாராமல் ஒடோடி வந்து  உதவும் நல்ல குணத்தை என்னன்னு சொல்றது.....    இப்படி ஒரு  அன்பான மனம் இருப்பவரை நமக்குக் காட்டியது கூட எம்பெருமாளின் அருளின்றி வேறெது ?   பெருமாளின் ஆசிகளோடு அவரும் குடும்பமும் நல்லா இருக்கணுமுன்னு  மனம் நிறைஞ்சு வாழ்த்துகிறோம்! நமக்காக செலவளித்த நேரத்தை  எப்படித் திருப்பிக்கொடுப்பது ?       
தொடரும்........... :-)

4 comments:

said...

கீதா கபே வாசலிலும், அருகிலேயே இருக்கும் A2B வாசலிலுமாய் மாறி மாறி ஒருவர் நிற்பார்.  பசிக்கிறது என்பார்.  எதையாவது வாங்கித்தராகி சொல்வார்.  தோளில் ஒரு ஜோல்னாப்பை தொங்கும்.  மதியம் முதல் இரவு ஒன்பது மணி வரை அவருக்கு அங்கேதான் டியூட்டி.  கிடைப்பதை எல்லாம் ஜோல்னாப்பையில் போட்டுக்கொள்வார்.  அப்புறம் என்ன ஆகுமோ, அப்புறம் பார்த்தாலும் ஜோல்னாப்பை காலியாகவே இருக்கும்!

said...

வாங்க ஸ்ரீராம்,

உண்மை. நமக்கும் இப்படி ஒரு சம்பவம் ஆச்சு. ஒரு பதிவில் சொல்றேன்.

said...

"ஓடோடி வந்து உதவும் " கார்த்திக் அவரின் நல் மனம் போல சிறப்பாக நலமாக வாழ நாமும் வாழ்த்துகிறோம்.

said...

வாங்க மாதேவி,

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிப்பா ! கார்த்திக் நல்லா இருக்கணும் !