முன் கதைச் சுருக்கம்(!)
இந்த சனி வர்றதுக்கு நாலைஞ்சு வாரம் முன்னே இருந்தே ஏற்பாடுகள் ஆரம்பிச்சது. 'இது ஒரு ஆன்மீகக்கூட்டம். இங்கே இருக்கும் அனைத்து இந்தியர்களையும் ஒன்று சேர்க்க நினைக்கிறோம், நீங்க கொஞ்சம் உதவணுமு'ன்னு கேட்டுக்கிட்டாங்க. பொதுவா என்கிட்டே ஒரு பழக்கம். என்ன ஏதுன்னு துருவித்துருவிக் கேக்க மாட்டேன்.என்ன உதவின்னு மட்டும் கேட்டுட்டு எங்களால் ஆகக்கூடியதுன்னா செஞ்சு கொடுத்துடறது. முடியலைன்னா முடியலைன்னு சொல்லிடுவோம். பார்க்கலாம், யோசிச்சுச் சொல்றேன் இது எல்லாம் கிடையாது இப்படி உதவி கேட்கும் தருணங்களில்.
உதவி கேட்டவரை எனக்குத் தெரியுமான்னு எனக்குத்தெரியலை. 'தெரிஞ்சவர்தான். முந்தி ரெண்டுமூணு முறை பார்த்திருக்கோம். நீ மறந்திருப்பே'(!)ன்னு கோபால் சொன்னார். கொசுவத்திக்கே மறதியான்னு இருந்தேன். தமிழ்ச்சங்கம், இன்னும் கேரளா அசோஸியேஷனுக்கு எல்லாம் சொல்லியாச்சு.
இவுங்க நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் இருந்தா நல்லதுன்னு இவுங்களுக்கு எண்ணம். அரங்கம் எங்கே வச்சுக்கலாமுன்னு சில ஐடியாவும் கொடுத்தோம். பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஹாலுன்னா சரியா இருக்கும். மூணு மணி நேர நிகழ்ச்சிகளுக்கு ஒரு அறுபது டாலர் செலவு.
மூணுவாரம் இருக்கும்போது நிகழ்ச்சிக்கான ஹாலை ஏற்பாடு செஞ்சுட்டோமுன்னு தொலைபேசியில் சொன்னார். இங்கே இருக்கும் பெரிய ஹைஸ்கூலில் இருக்கும் அட்டகாசமான ஹால். Aurora centre. 700 பேர் உக்காரலாம். பக்கா தியேட்டர். இங்கத்து ஸ்கூல் ஆஃப் ம்யூசிக்கின் கட்டிடம். வாடகை எக்கச்சக்கம். 450 டாலர்கள்.

எங்க இவர்தான் 'அநியாய வாடகை'ன்னு புலம்பிக்கிட்டு இருந்தார். 'சரி, சும்மா இருங்க. நமக்குத்தான் செலவு செய்ய மனசு வராது.... அல்பம்.
கூந்தல் இருக்கறவ(ன்) அள்ளி முடிஞ்சிக்கிறா(ன்). நம்ம கேரளா பாய்ஸ் நடனத்துக்கும் பொருத்தமான மேடை'ன்னு இருந்தேன். ஆனாலும் அனாவசிய செலவாச்சேன்னுக்கிட்டே இருந்தார். அதுக்கப்புறம் அழைப்பிதழ் கொஞ்சம் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க, நமக்குத் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்கச் சொல்லி.. நம்ம வீட்டுக்குப் பொதுவா வந்துபோறவுங்க அதிகம். எல்லாருக்கும் கொடுத்தாப் போச்சு.

ராஜ்குமார் என்பவர் வேதம், உபநிஷத் & பைபிள் பத்தியெல்லாம் பேசப் போறாராம். எல்லாம் முடிஞ்சதும் இண்டியன் ரெஃப்ரஷ்மெண்ட் உண்டாம். மாலை 7 முதல் 8.30வரை நடக்குது. நாங்களும் பார்க்கறவங்க கிட்டேயெல்லாம் சொல்லிவச்சோம்.
ஏழடிக்க அஞ்சு நிமிஷம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தோம். அஞ்சாறுபேர் வெளியிலும் நாலைஞ்சுபேர் அரங்கிலும் இருந்தாங்க. ஆனா பெயர் போட்ட பேட்ஜ்களோடு, நிகழ்ச்சிக்கு வந்தவங்களை வரவேற்கவும், உள்ளெ அரங்கம் வரைக் கூட்டிக்கிட்டுப்போய் உக்கார வைக்கவும் ஏழெட்டுப்பேர்! அந்தத் தெரிஞ்சவரைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துருச்சு. இன்னும் நமக்குத் தெரிஞ்ச சிலர் அங்கே இங்கே ஓடியலைஞ்சு ஏற்பாடுகளைக் கவனிக்கிறாங்க.

மேடையில் இந்தியக்கொடி. நாங்களும் அரங்கில் நடுநாயகமா உக்கார்ந்தாச்சு. ஆரம்ப ஐட்டமா தெரிஞ்சவரின் மகன் கிடார் வாசிச்சுக்கிட்டே 'மேரா பாப்'னு இங்கிலீஷ் பாட்டு மாதிரி ட்யூன்லே இந்திப்பாட்டு ஒண்ணு பாடினார்.
ஓஓஓஓ...இது எதோ சர்ச் க்ரூப் மீட்டிங் போல இருக்கே........... அடுத்து ஒரு பரதநாட்டியம். இங்கே நடனம் சொல்லிக் கொடுக்கும் தோழிதான் ஆடினார். அடுத்து கேரளா பாய்ஸ் நடனம். DHOOM MACHALE பாட்டுக்கு.
உள்ளூர் பேண்ட் ஒண்ணு வந்து ரெண்டு பாட்டுப் பாடுனாங்க. எங்கே கோரஸ் பாடும்போது மக்கள்ஸ் கூடவே சேர்ந்து பாட முடியாதோன்னு பெரிய திரையில் பாட்டின் வரிகள் வந்துக்கிட்டு இருந்துச்சு.

ராஜ்குமார் மேடைக்கு வந்தார். சென்னையைச் சேர்ந்தவராம். அந்தணர் குடும்பப் பின்னணியில் வாழ்க்கை. எஞ்சிநீயரிங் முடிச்சுட்டு ஸீமென்ஸ்லே வேலைக்குச் சேர்ந்தாராம். அப்புறம் ஜெர்மனி, சைபீரியான்னு சில இடங்களில் வேலை செஞ்சுருக்கார். இனி அவர் பேசியதில் சில.

கிறிஸ்து பிறக்குமுன் BC1650லே (??) வேதங்கள் உருவாச்சு. மனிதன் கடவுளை அடையும் முயற்சியில் இடைவிடாது முயன்றுகொண்டிருந்தான். அங்கே மேலோகத்தில் கடவுள் பரமாத்மா. இங்கே பூலோகத்தில் மனுசன் ஜீவாத்மா. இந்த ரெண்டு ஆத்மாக்களுக்கும் இடையில் தொடர்பே இல்லை. ஆனால் இந்த ஜீவாத்மா எப்படியாவது பரமாத்மாவோட சேரணுமுன்னு என்னென்னவோ முயன்று பார்க்கிறது. இப்போதுதான் ரெண்டுக்கும் கனெக்ஷன் குடுக்க குரு அங்கே தேவையா இருக்கார். கு என்றால் வெளிச்சம். ரு என்றால் இருள்.
வெளிச்சம் வந்தால் இருள் போயிரும். அந்த வெளிச்சம் எங்கே என்றதுதான் என் தேடலா இருந்தது.
வீட்டில், இந்துக் குடும்பத்தில் நான் தினசரி பூஜை, கோவிலுக்குப்போறதுன்னு இருந்தப்பவும் அந்த வெளிச்சம், அதாவது குரு எங்கேன்னு தேடிக்கிட்டே இருந்தேன்.
எனக்கு 1980லே மே மாசம் 25 ஆம் தேதி ராத்திரி 9.30 மணிக்கு என் தேடலுக்குக் கடவுள் விடை சொன்னார். இந்த விடை எங்கே இருந்துச்சுன்னா பைபிளில். அதுலே (எதோ மேத்யூ ,அத்தியாயம் எண், வசனம் எண் எல்லாம் சொன்னார்)
பைபிளில் ஏசு உலகத்திற்கு நான் ஒளியா இருக்கேன்னு சொல்றார். எனக்கு அப்போ 28 வயசு. இப்ப 56 வயசு. என் வாழ்க்கையில் பாதிநாள் யேசுவைத் தெரிஞ்சுக்காமலே இருந்துட்டேன். அடுத்த பாதியில் ஏசுவை முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்.
மனுசங்க ஏன் சாகறாங்க தெரியுமா? பாவம் செய்யறதால். அப்பப் பாவமே செய்யாத ஏசு ஏன் இறந்தார்ன்னு கேட்டால் நமக்காகத்தான் இறந்தார். .....ஆனா அவர் திரும்ப உயிரோடு எழுந்துட்டார்!
உங்களில் யாருக்காவது ஏசுவைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தால் இங்கே நிற்கும் வாலண்டியர்கள் கிட்டே சொல்லி உங்க பெயரைப் பதிஞ்சுக்குங்க.
அந்த மே மாசம் 25லே இவருக்கு விடை எந்த மாதிரி கிடைச்சதுன்னு தெரிஞ்சுக்கணும். அப்ப என்ன நடந்துச்சுன்னு கேட்டுக்கணும். இவர் பேச்சை முடிக்கட்டும். எப்படி என்ற கேள்விக்கு எனக்கு விடை சொல்லுங்கன்னு கேக்கணுமுன்னு மண்டைக்குள் எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு.
அப்புறம் அவர் சொல்லிக்கிட்டு இருந்த எதுவும் என் மனசில் பதியலை. பிறப்புன்னாவே இறப்பும் தொடர்ந்து வந்துருது இல்லையா? பச்சைப்பிஞ்சுங்க எல்லாம் சாகுது. அதுங்களுக்குப் பாவம் செய்யறதுக்குக்கூட இந்த ஆயுள், சான்ஸே கொடுக்கலை. செடிகொடி மரம்கூடச் செத்துப்போகுது. இருந்த இடத்தில் இருந்தே அது என்ன பாவம் செஞ்சிருக்கும்?
பேச்சு முடிஞ்சு ஒரு ஜெபம் செஞ்சார். அவர் சொல்லச் சொல்ல அதை மக்கள்ஸ் திருப்பிச் சொல்லணுமாம். என் பின்னால் இருந்து ரொம்பச் சத்தமா ஒரு குரல் திருப்பிச் சொன்னதைக் கேட்டேன்.
மீட்டிங் முடிஞ்சது. பின்னாலிருந்து கேட்ட குரலுக்கு உரியவர், துளசி, என்னைத் தெரியுதா?ன்னு கேட்டார். தெரியலைன்னு சொன்னேன். அதுக்குள்ளே கோபால் அவர் பெயரைச் சொல்லி, அவர் மீசையை எடுத்துட்டார் அதான் உனக்கு அடையாளம் தெரியலைன்னார். எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. 'எம்ஜிஆர் படங்களில், கதை நாயகன் வில்லனின் கோட்டைக்குள் வரும்போது ஒரு மச்சம் வச்சுக்கிட்டா, அந்த வில்லனுக்கே (நம்மைத்தவிர) அடையாளம் தெரியாமப் போயிடறது உண்மைதான்போல?'
பார்த்து அஞ்சாறு வருசமாகிப்போச்சு. உங்க மனைவி எப்படி இருக்காங்கன்னு கேட்டேன். ஒருமுறை வரலக்ஷ்மி நோம்புக்குக் கூப்புட்டாங்க. அவுங்க சொன்ன நாளில் போகமுடியாமல் ஒரு அசௌகரியம். அப்ப, 'நீங்க வீக் எண்ட்லே வந்தாலும் சரி. உங்களுக்காகக் கலசத்தை எடுக்காம அப்படியே வச்சுருப்பேன். கட்டாயம் வந்தே ஆகணுமு'ன்னு சொன்னாங்கன்னு போய் வந்தேன். அது அவுங்களுக்கு இங்கே இதய அறுவை சிகிச்சை நடந்து, உடல்நலம் தேறி இருந்த சமயம். இனிமேல் விமானப்பயணம் செய்யவே கூடாதுன்னு மருத்துவர்களின் கண்டிப்பாச் சொல்லிட்டாங்க. இனி என் வாழ்நாள் பூரா இங்கே இதே ஊர்லேதான்னு சொல்லி வருத்தப்பட்டாங்க.
பூஜை முடிஞ்சு ரெண்டுமூணு மாசத்தில் அவுங்களுக்கு ஸ்ட்ரோக் வந்து நடக்கமுடியாமல் பேசமுடியாமல் இன்னும் அதிகக் கஷ்டம். ரெக்கவரி ரொம்ப மெதுவா ஆரம்பிச்சது. அவுங்களை விஸிட் செய்யலாமுன்னா, எப்பப் போன் செஞ்சாலும் யாரும் எடுக்கலை. ஒரு தடவை நம்பர் டிஸ்கனெக்ட்டட்னு டெலிகாம் சொல்லுச்சு. வேற இடத்துக்குப்போயிட்டாங்க போலன்னு அதுக்கப்புறம் தொடர்பில் இல்லை.
இப்ப மனைவிக்குக் கொஞ்சம் பரவாயில்லையாம். கொஞ்சம் நடக்கறாங்களாம்.
அதே வீட்டுலேயா இருக்கீங்கன்னதுக்கு, இல்லே வேற வீடு சர்ச் கொடுத்துருக்கு. அங்கே இருந்து அந்தச் சர்ச்சைக் கவனிச்சுக்கறேன். அப்ப செஞ்சுக்கிட்டு இருந்த வேலை? விட்டுட்டாராம். இப்ப கிறிஸ்டியனா மதம் மாறிட்டாராம்.
ம்,ம்,னு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டேன். அவர்கூடவே பின்வரிசையில் இருந்த இன்னொருவரும் 'தெரிஞ்சவர் (இவரை நினைவு இருக்கு) என்றதால் குசலம் விசாரித்தேன். அவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. அவர் மனைவிக்கு மனநிலை சரியில்லை. அவுங்களும் மதம் மாறிட்டாங்களாம். இந்த ஆன்மீகக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சவர், மற்றும் இவுங்க ரெண்டு பேர்னு எல்லாமே ஆந்திரா மாநில மக்கள். யார் யாருக்கு எங்கே மன ஆறுதல் கிடைக்குதோ அங்கே போறதுலே என்ன தப்பு? இல்லீங்களா?
ஆன்மீகச் சொற்பொழிவாளரைக் கண்டுக்கப்போனேன்.
"வணக்கம். நீங்க தமிழ் பேசுவீங்கதானே?"
"வணக்கம்மா. தமிழ்க்காரந்தானே? பின்னே பேசாம இருப்ப்பேனா?"
"உங்க சொற்பொழிவில் நாலைஞ்சுமுறை மே மாதம் ஒம்போதரை மணியைக் குறிப்பிட்டீங்களே. அப்ப என்னதான் நடந்துச்சு?
'என்னுடைய தேடலுக்கு விடை கிடைச்சதும்மா."
அதான் எப்படிக் கிடைச்சது? யாராவது வந்து சொன்னாங்களா? இல்லே உள்மனசு சொல்லுச்சா? அந்த நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?
பைபிள் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஏற்கெனவே ஒரு வருசமாப் படிச்சுக்கிட்டுத்தான் இருந்துருக்கேன். ஆனாலும் அன்னிக்கு அப்ப அந்த விடையை, 'நானே வெளிச்சம்' என்று சொன்னதை உணர்ந்தேன்.
தமிழ்ச் சினிமாவில் வர்றதுபோல 'ஜல்'ன்னு ஒரு சத்தமோ, இல்லை 'பளீர்'னு ஒரு மின்னலோ வந்து அதுலே ஜீஸஸ் முகம் தோன்றியதுன்னு சொல்லிருந்தாருன்னா சத்தம் போட்டுச் சிரிச்சிரிப்பேன்.
உணர்வுன்னு சொல்லிட்டார். சிலசமயம் கோவிலிலோ வேற மனசுக்கு இதமான காட்சிகளைப் பார்க்கும் சமயத்திலோ உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்து கையில் உள்ள பூனைரோமம் எல்லாம் சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் விநாடியில் ஒரு பங்கு நேரம் கிடைக்கும் உணர்வு போலவோ?
"இப்ப நீங்க சொன்னதைப் பத்தி எழுதப்போறேன்"
நீங்க எழுத்தாளரா?
அப்படித்தான்னு(ம்) வச்சுக்கலாம்:-)
என் தங்கைகூட கதையெல்லாம் எழுதுவாங்க. பேர் உஷா ரகுநாதன்.
(கேள்விப்பட்டிருக்கோமா? கல்கியில் எழுதறாங்களோ? எதுக்கும் நம்ம ஜெயந்திகிட்டே கேக்கணும்).
அப்படீங்களா? உங்க மதமாற்றத்தினாலே குடும்பத்துக்கு மனக்கஷ்டம் இல்லையா?
நான் சர்ச்சுக்கெல்லாம் அவ்வளவாப் போறதில்லை. இன்னும் சொன்னா நிறைய சர்ச்சுகளின் நடவடிக்கையெல்லாம் சரியே இல்லை. இன்னும்கூட நான் வெஜிடேரியந்தான். தயிர்சாதம் இல்லேன்னா முடியாது(சிரிப்பு) என்னுடைய எண்ணமெல்லாம் ஜீசஸைப் பற்றிப் படிக்கிறது. அவரைப்பத்தி எல்லாருக்கும் சொல்றது. அதான் மேடையில் சொன்னதும். ஜீசஸைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கறவங்க தங்கள் பெயரை அங்கங்கே இருக்கும் வாலண்டியர்கள் யார்கிட்டேயாவது கொடுத்துட்டுப் போங்க. அவுங்க உங்களைத் தொடர்பு கொள்வாங்க. என் கார்டு இந்தாங்க. உங்களுக்கு எதாவது விளக்கம் வேணுமுன்னா ஒரு இமெயில் அனுப்புங்களேன்.
இன்னும் சிலர் அவரிடம் பேச ஆர்வமா நின்னுக்கிட்டு இருந்ததாலே நான் விடைபெற்றுக்கிட்டேன். கோபாலைத் தேடிக்கிட்டு உள்ளே ஹாலுக்குப் போனா,
அங்கேதான் மொத்தக்கூட்டமும் இருக்கு. அங்கங்கே மேசைகளில் கேக், சிப்ஸ்ன்னு ச்சின்னத்தட்டுகளில் விளம்பி வச்சுருக்காங்க. எல்லாரும் எடுத்துக்கிட்ட பிறகும் ஒரு நூத்தம்பது தட்டுகள் காத்துருக்கு. ஏன் இப்படிப் பரிமாறி வச்சுருக்காங்க? ஆனாலும் எனக்கு ஏத்தமாதிரி ஒண்ணும் இல்லையே........
நாலு மேசையில் மொத்தமா வச்சிருந்தா அவுங்கவுங்க எடுத்துக்கிட்டு இருக்கலாமே? இன்னொரு தோழி என்னைக் கவனிச்சுட்டு, வெஜிடபுள் சமோசா கொண்டுவந்து கொடுத்தாங்க. அதை முழுங்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.
ராஜ்குமார் கொடுத்த கார்டில் 'Logos Ministries' னு இருந்துச்சு. அதுலே போட்டிருந்த தளத்தில் போய்ப் பார்த்தேன். Thomas & Yvonne Mcclean என்றவர்கள் ஆரம்பிச்சுவச்சுருக்காங்க. சர்ச்சுகளை (வெவ்வேறு பிரிவுகளில் இருந்தாலும் ஒருங்கிணைப்பு செய்து மக்களுக்கு மத்தியில் ஜீசஸ் பற்றிய செய்திகளைப் பரப்புவாங்களாம். முக்கியமா இன்றைய இளைஞர்களுக்கு காஸ்பல் பற்றிய சேதிகளைச் சொல்லிக் கொடுப்பது. இதுவரை 150 பள்ளிக்கூடங்களில் போய் இளைஞர்களுக்கு ஜீசஸைப் பத்திச் சொல்லி இருக்காங்க. இந்த வேலைக்காகவே இவுங்களைக் 'கடவுள்' தேர்ந்தெடுத்துக்கிறார்.
ம்ம்ம்ம்ம்ம்
கடவுள் என்பது மனசுலே தோன்றும் ஒரு உணர்வு. ( குளிரில் உடம்பு சிலிர்க்குதே அது இல்லை) அதை அனுபவிச்சங்களுக்கு விளக்கமா நடந்ததைச் சொல்லத்தெரியாது. 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' ஒரு சொல் இருக்குல்லையா?
சமீபத்தில் ( ரெண்டு வாரம் முன்பு:-))) ) அப்பாவின் சதாபிஷேகத்துப் போய் வந்த தோழியின் வீட்டுக்கு விசாரிப்புக்கான விஸிட் மறுநாள். இவுங்க இன்னொரு சாமியாரின் பக்தர்கள். நெருங்கிய உறவினர் குடும்பத்தில் நடந்த சம்பவங்களால் எனக்கு இந்த சாமியாரிடம் மனசுக்குள் ஒரு வெறுப்பு. இதை அந்தத் தோழிக்கும் சொல்லியிருக்கேன். இவுங்களும் ஒரு பத்துப்பன்னெண்டு வருசமாத்தான் இந்தச் சாமியாரின் பக்தர்களா ஆனவங்க.
தோழி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு. சில்கூர் பாலாஜி அமெரிக்கா போக விசா வாங்கித் தர்றாராம். விசா வேணுமுன்னா சில்கூர் பாலாஜி கோயிலுக்குப்போனாப் போதுமாம். அமெரிக்கன் எம்பஸியை அங்கேயா வச்சுருக்காங்க?சதாபிஷேகம் முடிஞ்சு, இன்னொரு நெருங்கிய குடும்ப நண்பரைப் பார்க்க ஹைதராபாத் போயிருந்தாங்களாம். அங்கே சில்கூர் பாலாஜி கோயிலுக்கு போக நேர்ந்துச்சாம். கூட்டமான கூட்டமாம். 108 சுத்து சுத்திப் பிரார்த்தனை செஞ்சுக்கணுமாம். எல்லாம் சிஸ்டமேடிக்கா கையில் ஒரு அட்டை வச்சுக்கிட்டு இருக்காங்களாம். பாஸ்போர்ட்டா? ஊஹூம்.... கோயிலில் கொடுக்கும் அட்டை. ஒவ்வொரு சுத்து முடிஞ்சதும் அதுலே முத்திரை குத்தித் தராங்களாம். சுத்தும்போதே கோவிந்தா, வெங்கடரமணா , நாராயணா ன்னு அவுங்கவுங்க விரும்பும் பேரில் சத்தமாச் சொல்லிக்கிட்டே மக்கள்ஸ் சுத்தறாங்க. ஒரே சத்தம். நண்பர் சொன்னார், பிரார்த்தனை பலிச்சதும் இன்னும் ஒரு 108 சுத்தணுமாம். (அமெரிக்கன் எம்பஸியைச் சுத்தவிடமாட்டாங்களோ?)
விசா கிடைச்சதும் பறந்துருவாங்களே..அப்புறம் எங்கே சுத்தறது? ஷிகாகோ இல்லை, பிட்ஸ்பர்க் கோயிலைத்தான் சுத்தணும். இல்லை? வலையில் இருக்கான்னு விசா பாலாஜின்னு தேடுனதும் கிடைச்சுருச்சு. வீடியோ க்ளிப் கூட இருக்கு. தோழி சொன்னது நிஜம்தான்..........
ஊருக்குப்போய் வந்தவங்க எதாவது சினிமாப்படங்கள் வாங்கிவரும் வழமையும், அதை ஒருவருக்கொருவர் இரவல் வாங்குறதுமான பழக்கத்தில் அங்கே இருந்து கிளம்பும்போது பூவெல்லாம் கேட்டுப்பார், சேது, தாரே ஜமீன்பர் கிடைச்சது. கூடவே இன்னொரு விசிடியும். ஜக்கி வாசுதேவ். கிராம புத்துணர்வு இயக்கம் பற்றியதாம். கூடவே .....
'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு புத்தகம். ஆஹா....நமக்கென்ன ஆசைக்கா பஞ்சம்? கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்ததும் கண்ணில் பட்டது,'கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?
வீட்டில் ஒரு முகம், வெளியில் ஒரு முகம்,
இன்னும் நண்பர்களுக்கு, எதிரிகளுக்கு என்று எத்தனை முகங்களை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்? இதையும்விட அரசியல் வாதிகளுக்கு இன்னும் ஏராளமான முகங்கள் இல்லையா?
சுவாரசியமாகவும், அதேசமயம் உண்மையை எடுத்து முகத்தில் அறைவது போலவும் இருக்கேன்னு அந்தப் புத்த்கத்தையும் இரவல் வாங்கிவந்தேன்.
இவர்களுடைய தளத்தில் நுழைந்து பார்த்தாலும் இங்கே(யும்) வந்து தங்குவதற்கான காட்டேஜ், தியானம், யோகா என்று பலவும், இவர்கள் நடத்தும் கல்வி & மருத்துவக்கூடங்கள்னும் இருக்கு. தளத்தில் உள்ளப் படங்களைப் பார்க்கும்போது 'காட்சிக்கு எளியவர்' என்ற எண்ணம் வருது. ஆனால்........கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீரவிசாரிப்பது மெய் என்று இருக்கே. இது மட்டுமல்லாமல் நானோ ஒரு இடும்பி. சாஸ்திரம், சம்பிரதாயம், நியமம் இதுக்கெல்லாம் 'சட்'ன்னு சம்மதிக்க மாட்டேன். காலையில் நாலுமணிக்கு எழுந்து பூசை செய்யணுமுன்னு சொன்னால் நம்மாலே அதெல்லாம் முடியாது. நாமென்ன மிலிட்டரியிலா இருக்கோம்?
மனுஷனை மனுஷனா மதிக்கணும். எல்லா 'உயிரிடத்தும்' அன்பு காமிக்கணும். கஷ்டத்தில் இருக்கும் ஜீவனுக்கு முடிஞ்சவரை உதவிகள் செய்யணும். ஒண்ணும் பெருசாச் செய்யமுடியலைன்னாலும் அடுத்தவன் மனசை நோகடிக்காமலாவது இருக்கணும். குறைஞ்சபட்சம் கஷ்டம் கொடுக்காமலாவது இருக்கலாம். இதுதான் இப்போதைக்குக் கடவுள்'னு ஒரு நினைப்பு.
சும்மா இருப்பதே சுகம்னு இருக்கலாமான்னு இருக்கேன். தேடல் முடியலை.
மெய்ப்பொருள் காண்பதறிவு!!!!!
இவ்வளவு சிந்திச்சவ சொ.செ.சூ ( நன்றி: வரவனையான்) வச்சுக்கிட்டதை அடுத்தவாரம் ஒரு நாள் சொல்றேன்:-))))