Wednesday, March 12, 2008

எ(த்)தைத் தின்னால் பித்தம் தெளியும்?

அடாது பெய்த மழையிலும் விடாமப்போய்ச் சேர்ந்த இடம், இசைப்பள்ளியில் இருக்கும் சாப்பல். அன்னை அமிர்தானந்தாமயியின் சீடர் ராமகிருஷ்ணானந்தா (ஜி)வந்து நாலு நல்ல வார்த்தை சொல்லப்போறாராம். அதென்னவோ இப்படி சாமியார்கள் எல்லாம் ஆனந்தத்தைப் பேருலே சேர்த்தே வச்சுக்கறாங்க........

சந்தைப்படுத்துதல் என்ற ஒரு சொல் நினைவுக்கு வந்துச்சு. நுழைஞ்சதும் கண்ணுலே படுறமாதிரி மேசை ரெண்டைப் போட்டு புத்தகங்களின் வரிசை. ஒரு வெள்ளைக்காரப்பாட்டி புத்தகங்களை அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க இடதுபக்கம் வரிசைக்கு ஆறுன்னு நாற்காலிகள், மூணு இந்தப் பக்கம் மூணு அந்தப்பக்கம்னு நடுவிலே நடைபாதை வச்சு.
ஒரு முக்காலடி உயரத்துலே மேடை கடைசியில். அதுலே படம் காமிக்க இடது பக்கம் ஒரு வெள்ளித்திரை. வலது பக்கம் மேசை, நாற்காலி, மைக் இத்யாதிகள். முன்புறமா கொஞ்சம் இசைக்கருவிகள். வலதுபக்கம் அம்மாவின் படம், ஊதுவத்தி, விளக்கு, பூமாலைன்னு.அம்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் சிலர்(ஒருத்தர்தாங்க) வெள்ளை சால்வாரில் குத்துவிளக்கை ஒழுங்கு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. காலடிக்குத் தனி க்ளோஸ் அப்!!

மாலை 7 முதல் 8.30வரைன்னு (மின்)அழைப்பிதழில் இருந்துச்சு. ஜிக்கருக்குச் சாப்பாடு வீட்டுக்கு வந்தபிறகு கொடுக்கலாமுன்னு இருந்தோம். இந்திய நேரப்படி மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. திரையில் அம்மாவின் அயல்நாட்டு & உள்நாட்டு விஜ(ஷ)யங்கள் ஓட ஆரம்பிச்சது. எல்லாம் ஒரு அரைமணிபோல இருக்கும்.
சிஷ்யர் வருகை. குத்துவிளக்கேற்றிட்டுப் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். அம்மாவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாச் சொல்லிட்டு, கோயில் கோயிலாப் போய்க் கும்புடறது ஆன்மீகம் இல்லை. நம்மை நாமே அறிஞ்சுக்கறதுதான் உண்மையான ஆன்மீகமுன்னு சொன்னார். மேடைப் பேச்சின் வழமையைக் காப்பாத்தும்விதமா ஒரு கதையும் சொன்னார். அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான்.

ஒரு பையன்கிட்டே ஒருத்தர் கேக்கறார், இப்ப உன் காது ரெண்டையும் வெட்டிட்டா என்ன ஆகுமுன்னு. அதுக்கு அந்தப் பையன் சொல்றான், என்னாலே படிக்க முடியாதுன்னு. கேட்டவருக்கு ஒரே குழப்பம். நீ என்ன காதாலேயா படிக்கிறே? அதான் கண்ணு இருக்குல்லேன்னு. அதுக்குப் பையன் சொன்னானாம், காது இல்லேன்னா என் மூக்குக்கண்ணாடியை எப்படி மாட்டிக்குவேன்னு!
எதுக்கும் எதுக்கும் சம்பந்தம் பாருங்க...மனசில் அன்பு இருக்கணும். அதுதான் சாமின்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்.

அம்மா, ஆஸ்தராலியா வராங்களாம். எங்களுக்குப் பக்கத்து நாடுன்றபடியாலே, நாங்க அம்மாவைப் பார்க்கறதுக்கு அங்கே போகலாமாம். இந்த நல்ல விஷயத்தைச் சொல்லத்தான் இவர் இப்ப இங்கே வந்தாராம். போச்சுரா......
என்னதான் பக்கத்து நாடானாலும், போகவர, அங்கே தங்கன்னு ஒரு ஆளுக்கு ரெண்டாயிரம் டாலர் பழுத்துரும். இதுக்கு அம்மா ஒரு ஆளு இங்கே வந்துட்டுப் போகலாமுல்லே? சரி இருக்கட்டும். அவுங்கவுங்க வசதி எப்படியோ அப்படி.....

இதுக்கு நடுவுலே என் பக்கத்து இருக்கையிலே ஒருத்தர், உக்கார்ந்துக்கிட்டே நல்ல தூக்கம். எழுப்பி விட்டேன். ஹ்ம்....குறட்டை விட்டுட்டேனான்னு கேக்கறார்:-))))

சாமியார் பேச்சை முடிச்சுக்கிட்டு, இப்பக் கொஞ்சம் பஜனைகள் பாடிட்டு, கொஞ்சநேரம் தியானம் செஞ்சுட்டு,அம்மா படத்துக்கு ஆரத்தி எடுத்துட்டா இன்னிக்கு மீட்டிங் ஆச்சு.அதுக்கப்புறம் கேக், காஃபின்னு சிற்றுண்டிகள் ஏற்பாடு இருக்குன்னு சொன்னார்.

எட்டேமுக்காலுக்குப் பஜனைகள் ஆரம்பிச்சது. வழக்கமான சாமிப் பாட்டுகள்தான். எல்லாருக்கும் ஒரு ப்ரிண்டவுட் கொடுத்தாங்க. அதுலே ஒரு இருபது பாட்டுகள் இருந்துச்சு. ஒரு பத்துப்பாட்டு(!) மட்டும் ஒண்ணு, ரெண்டுன்னு அடையாளம் வச்சுருந்தாங்க. சாமி பெயர் வரும் இடத்தில் மட்டும் அமிர்தானந்தான்னு கூடக்கூடச் சேர்த்துக்கிட்டுப் பாடுனாங்க.

மணி ஒம்போதாகப்போகுது. கிளம்பிறலாமுன்னா..... இவர் நடுவுலே எப்படிப் போகன்னு கேக்கறார். அதான் நடைபாதை இருக்கே..... எனெக்கென்ன பயமுன்னா தியானம் செய்யறப்ப ...அப்படியே தூங்கிக் கீழே விழுந்துட்டாருன்னா?

குழந்தைக்குவேற சாப்பாட்டு நேரம். இங்கே போற போக்கைப் பார்த்தா ஒரு பத்தரை மணி ஆகும் போல. விடு ஜூட்.....

ஞாயிறு நல்லபடியா முடிஞ்சது. சனிக்கிழமை இன்னொரு ஆன்மீகக்கூட்டம் இருக்கு. அதுக்கும் போயிட்டுப் பதிவை எழுதலாமுன்னு இருந்தேன். அதுக்குள்ளெ சிவராத்திரி பூஜைக்கு இன்னொரு அழைப்பு.

ஃபிஜி இந்தியர்களின் சத் சங்கம் நடத்தும் பூஜை. இதே நாளில் இன்னும் நாலு இடத்தில் பூஜை வச்சுருக்காங்க. (ஒற்றுமை வெல்க)

ரொம்ப எளிமையான வகையில் வழக்கம்போல், கணேஷ் வந்தனா, வந்திருந்த ஒவ்வொருவரும் எடுக்கும் ஆரத்தி, அப்படியே ஒரு தம்ப்ளரில் தண்ணீர், இன்னொரு தம்ப்ளரில் பால்னு வச்சு, ஒவ்வொருவரும் ஒரு ஸ்பூன் இதுவும் அதுவுமா எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம். இது நடக்கும்போது 'ஓம் நமசிவாய'ன்னு 108 முறை சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆச்சு, சாந்தி செஞ்சுட்டு, கொண்டுவந்திருந்த பிரசாதங்கள் விநியோகம். அன்னிக்கு வேலைநாளா இருந்தும் ஒரு அறுபது பேருக்குக்கிட்ட வந்திருந்தாங்க.எப்படிக் கணக்குப் போட்டேன்னு கேக்காதீங்க...... ஒரு 23 வகைப் பிரசாதம் கிடைச்சது:-)

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அந்த(?) வெள்ளைக்காரப்பாட்டி இருந்தாங்க. அண்டைஅயல்வாசிகளைத் தெரிஞ்சு வச்சுக்கணுமுன்னு போன வாரம் செஞ்சிருந்தத் தீர்மானத்தின்படி ( புதுவருசத்தில்தான் தீர்மானம் எடுக்கணுமா என்ன?) பாட்டியைக் குசலம் விசாரிச்சேன்.' ஹரே க்ருஷ்ணா கோயிலில் உங்களைப் பார்த்திருக்கேனே'ன்னு ஆரம்பிச்சு வச்சேன்.

ஆமாமாம். இப்பெல்லாம் அங்கே ரொம்பப் போகறதில்லையாம். இந்துவா மாறிட்டாங்களாம். நாப்பது வருசத்துக்கு முந்தி முதல்முறையா இந்தியா போனாங்களாம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ரெண்டரை மாசம் தங்குனாங்களாம். ராமேஸ்வரம் போனப்ப, அங்கே உள்ளூர்க்காரர் ஒருத்தர் பின்வாசல் வழியாக் கோயிலுக்குள் கொண்டுபோயிட்டாராம். கர்ப்பக்கிரகத்துக்கு முன்னாலே போனப்ப, அங்கிருந்த குருக்கள் இன்னும் சிலர், எப்படி வரப்போச்சுன்னும், வெளியே காவலாளி எப்படி 'அன்னியரை' உள்ளே விட்டார்ன்னும் கொஞ்சம் ரகளையாப் போச்சுதாம். உடனே மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வெளியே வந்துட்டேன்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் ஸ்ரீரங்கம் போனப்ப, உள்ளே வரக்கூடாதுன்னு வாசலில் தடுத்தப்ப, இந்தம்மாவுக்கு ரொம்ப துக்கமாக் கண்ணில் கண்ணீர் கட்டிருச்சாம். ஒரு பட்டர் உள்ளே வர அனுமதி இல்லைன்னு பொறுமையாச் சொல்லி, உள்ளே இருந்து பிரசாதங்கள் கொண்டுவந்து கொடுத்தாராம். மதுரை, திருவண்ணாமலைன்னு போயிட்டு அங்கே இருந்து வடக்கே பயணம். ஹரித்துவார், வாரணாசி ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். அதுதான் 'சமரசம் உலாவும் இடம்' சரிதானே?


எனக்கு இன்னும் கங்கையைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. ஏக்கத்தோட பாட்டி சொன்னதையெல்லாம் கேட்டேன். நாம்கூட சர்ச்சுகளுக்குப் போறோம். நம்மை யாரும் உள்ளே வராதேன்னு சொன்னால் எப்படி இருக்கும்? வாட்டிகன்லே கூட உள்ளே போய்ப் பார்க்க முடிஞ்சதே!

இந்த நாற்பது வருசக் காலக்கட்டத்தில் நாலுமுறை இந்தியா போயிட்டு வந்துருக்காங்க. அடுத்தமுறை 'அம்மா'வைப் பார்க்க கேரளா போக ஆசையாம்.

வயசு ஒரு 68 இருக்கும். இன்னும் தேடல் முடியலை........... பாட்டியோட பேர் என்னன்னு கேட்டதுக்கு வந்த பதில் 'சுப்ரியா' !!!

சனிக்கிழமை நடக்கப்போகும் ஆன்மீகக்கூட்டத்தைப் பத்திச் சொல்லி, வாங்கன்னு அழைப்பு கொடுத்துட்டு வந்தோம்.

சனிக்கிழமையும் வந்தது.......

மீதி அடுத்த பகுதியில் தொடரும்........

அஞ்சா(தீர்)தே......., அடுத்தபகுதிதான் கடைசி:-)))))



44 comments:

  1. நானும் ஒரு 'டெஸ்ட்'வச்சுப் பார்க்கட்டுமா?

    ReplyDelete
  2. எத்தை தின்னால் பித்தம் தெளியும்??

    இந்த தலைப்புக்கே காசு.......:):)

    இதனால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரின்னு பேசாம இருந்துருவேன் நான்......ரொம்ப இன்வால்வ் ஆகிக்கரதும் இல்ல.:) க்ரிடிஸைஸும் பண்ணரது இல்ல...:):) அப்படித்தான் ச்வாமி நித்த்யாநந்தான்னு ஒருத்தரோட லெக்செருக்கு போயிட்டு ரொம்ப டிஸப்பொயிண்ட் ஆயிட்டேன். சரி அவருக்கு அன்னிக்கு சரியான டாபிக் கிடைக்கல நம்மளுக்கும் அன்னிக்கு அத ரிசீவ் பண்ணர மனநிலைல இல்லன்னு நினைச்சுகிட்டு பாதிலயே எழுந்து வந்துட்டேன்.....:):)

    ReplyDelete
  3. ஜெய் மாதா அமிர்தானந்தமயி(ஜி)!!! பித்தம் தெளிஞ்சுதான்னு அடுத்த பதிவுலே தெரியுமா????...:-)

    ReplyDelete
  4. தலைப்பும், நிகழ்வின் விவரிப்பும் அருமை!
    அடுத்த பதிவுக்கு தலைப்பு - பித்தம் தெளிய மருந்தொண்ணு இருக்கு... அப்படித்தானே?
    ;-)

    ReplyDelete
  5. ஆனந்த “சுப்ரியா” வாக எப்ப மாறப்போறாங்க?? :-))))

    ReplyDelete
  6. துளசியம்மா,

    சாமி(யார்?)கள் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆத்திகத்திலிருந்து சன்யாசம் வாங்கிடுங்க
    :)

    பின்நவீனத்துவம் புரியுதா ?
    :-)

    ReplyDelete
  7. வாங்க ராதா.

    ஆன்மீகக் கூட்டங்களுக்கு அழைப்பு வந்தால் கூடியவரை போயிட்டு வர்றதுதான் வழக்கம்.

    கடவுளைப்பற்றிய தேடல்கள் வாழ்வின் கடைசிவரை இருக்கும்தானே?

    எல்லாம் 'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.....'

    ReplyDelete
  8. வாங்க ச்சின்னப்பையன்.

    இப்போதைக்குப் பித்தம் தெளியுமுன்னு தோணலை:-)))

    ReplyDelete
  9. வாங்க ஜீவா.

    மொதல்லே பித்தத்தின் 'வகை'களைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் மருந்து தின்னணுமாம்:-)))

    ReplyDelete
  10. வாங்க குமார்.

    கொஞ்சம் பின்னாலே திருப்பிப்போடுங்க (தோசையான்னு கேக்காதீங்க)

    'சுப்ரியானந்தாமயி' ன்னு நாந்தான் பட்டம் கொடுக்கணும்.

    ReplyDelete
  11. வாங்க கோவியாரே.

    நல்ல ஐடியாவா இருக்கே. 'கூறாமல் சந்நியாசம் கொள்'ளவா?

    ReplyDelete
  12. என்னங்க ag_y,

    உங்க ப்ரொஃபைல் தெரியல்லை. அதனால் உங்க பின்னுட்டத்தை வெளியிடலை.

    ஆமாம்... ஒரு சாமியாரைப் புகழ்ந்து இன்னொருத்தரை இழிவு செஞ்சுருக்கீங்களே. இது என்ன மனித(சாமி) நேயம்?

    ReplyDelete
  13. நன்றி துளசி மேடம்,

    //ஆன்மீகக் கூட்டங்களுக்கு அழைப்பு வந்தால் கூடியவரை போயிட்டு வர்றதுதான் வழக்கம்.

    கடவுளைப்பற்றிய தேடல்கள் வாழ்வின் கடைசிவரை இருக்கும்தானே?//

    சரியான அணுகுமுறை. கௌரவமான போர்வையில், ஏற்கெனவே அதிமரியாதையுடனான முற்சாய்வு எண்ணத்துடன் வந்திருப்பவர்களை சிலிர்க்க வைக்கும் ஃப்ராடுத்தனங்கள் எப்படி எல்லாம் செய்யலாம்; செய்யப்படுகின்றன என்று அறிந்து கொள்ள இது மிகவும் அவசியம்.

    //மேடைப் பேச்சின் வழமையைக் காப்பாத்தும்விதமா ஒரு கதையும் சொன்னார். அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான்.

    ஒரு பையன்கிட்டே ஒருத்தர் கேக்கறார், இப்ப உன் காது ரெண்டையும் வெட்டிட்டா என்ன ஆகுமுன்னு. அதுக்கு அந்தப் பையன் சொல்றான், என்னாலே படிக்க முடியாதுன்னு. கேட்டவருக்கு ஒரே குழப்பம். நீ என்ன காதாலேயா படிக்கிறே? அதான் கண்ணு இருக்குல்லேன்னு. அதுக்குப் பையன் சொன்னானாம், காது இல்லேன்னா என் மூக்குக்கண்ணாடியை எப்படி மாட்டிக்குவேன்னு!
    எதுக்கும் எதுக்கும் சம்பந்தம் பாருங்க...மனசில் அன்பு இருக்கணும். அதுதான் சாமின்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்//

    இதில் கூடப்பாருங்கள்; மேலோட்டமாக சிலிர்க்க வைக்கும் உதாரணம்; ஏனய்யா, காண்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொள்வதற்கு காது எதற்கு என்று என்று கேட்கத் தோன்றியதா?

    எம்.ஆர்.ராதா ஒரு உதாரணம் சொல்வார்; ஐந்தரை அடி உயர மனிதன் ஐந்தேகால் அடி உயர வாசலில் இடித்துக் கொண்டால், "கடவுளே" என்கிறான். வாசல் நான்கு இன்ச் உயரம் கூடுதலாக இருந்து விட்டால் அங்கே கடவுள் காணாமல் போய்விடுகிறாரே!

    ReplyDelete
  14. இன்னொன்றும் சொல்லியாக வேண்டும் மேடம்.

    இதே அம்மையார், தனி மனுஷியாக இருந்திருந்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தோருக்காக அப்படி ஓர் குடியிருப்பு கட்டித் தந்திருக்க முடியுமா? அப்படி ஒரு நல்லெண்ணத்தோடு இவர் உண்டியல் குலுக்கி இருந்தால் தான் இன்றைக்கு அள்ளித்தரும் 'அன்பர்கள்' அப்படித் தந்திருப்பார்களா?

    அவருடைய நடவடிக்கைகளின் முழுப் பரிமாணமும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாமே.

    ReplyDelete
  15. துளசி, ஈவினிங் ஸ்னாக்ஸ், நைட்டு டின்னர் பிரச்சனை சால்வ் ஆகும் என்றால் நான் கூட ஆன்மீக மகாநாடுகளில் இனி
    கலந்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், இந்தியா ஏழை நாடு மற்றும் குவியும் கூட்டத்துக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாதே :-)
    துளசி, நான் போட்ட பதிவுக்கு இதுக்கு ஏதாவது சம்மந்தம் உண்டா :-))))))))

    ரத்தனேஷ், அந்த ஆன்மீக அம்மா பற்றி கேட்க ஆவலாய் உள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தந்தது குறித்து சரியான விவரம் சொல்ல முடியுமா? ஸ்கூல், காலேஜ் என்று ஜகஜோதியாய் இருக்கிறார்.

    ReplyDelete
  16. துள்சி!!
    'பித்தம் தெளிய மருந்தொன்றிருக்கு
    பேரின்பம் அஃதொன்றே!!!'என்றொரு பாட்டிருக்கு. அதனால் தான் இப்படிப்பட்ட கூட்டங்களுக்கென்றே ஒரு கூட்டமுமிருக்கு!!
    சர்தானே வாத்தியாரம்மா..சர்தானே?

    ReplyDelete
  17. //ஃபிஜி இந்தியர்களின் சத் சங்கம் நடத்தும் பூஜை. இதே நாளில் இன்னும் நாலு இடத்தில் பூஜை வச்சுருக்காங்க. (ஒற்றுமை வெல்க)//

    இது கூட இல்லேன்னா அப்புறம் இந்தியனா இருந்து என்ன புண்ணியம்? :)

    பித்தம் தெளிஞ்சுச்சான்னு தெ(ளி)ரிஞ்சுக்க ஆசை :)

    ReplyDelete
  18. எனக்கென்னமோ சாமியார்(ரிணி) களைப் பார்த்தாலே பிடிப்பதில்லை. அமிர்தானந்தமயி எங்க ஊருக்கு வராங்கன்னு ஊர்ல பெரிய அமர்க்களம். ஊர்ல இருக்கிற பணக்கார பெரிய மனுசங்க தான் அவர்களுக்கு சீடர்கள். ஒவ்வொருத்தர் வீட்டிலும் தினமும் பூஜை, பஜனை. அதற்கு தனி ரேட்டாம். அரசியல் கட்சி கூட்டம் மாதிரி மேடை, பந்தல், கடஅவுட் விளம்பரம். ச்சேன்னு ஆகிடுச்சு. தோற்றத்தில் மட்டும் எளிமை இருந்தால் போதாது. செயல்களிலும் வேண்டும். அவருக்கு இந்த ஆடம்பரங்களில் உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அல்லக்கை சீடர்களை கொஞ்சம் அடக்கி வைக்கலாம் அல்லவா? ஏன் செய்வதில்லை என்பது கேள்வி. :). நான் சாமியை நம்புறவன். சாமியார்களை அல்ல.

    பின்னூட்டம் பெரிசாயிருச்சோ? :)

    ReplyDelete
  19. என்னப்பா துள்ி,ஒரேஆனந்தயமாய்ப் பதிVஊகள்
    வருதே. இதுதன் வாழும் வழியோ


    கட்டிப்பிடி வைத்தியம் என்ன ஆச்சு.
    திகட்டுகிறதுப்பா:(

    ReplyDelete
  20. 'துளசிதானந்தமாயி' தமிழ்நாட்டுக்கு எப்ப டீச்சர் வருவாங்க..?

    ReplyDelete
  21. ராமச்சந்திரன் உஷா மேடம்,

    // ரத்தனேஷ், அந்த ஆன்மீக அம்மா பற்றி கேட்க ஆவலாய் உள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தந்தது குறித்து சரியான விவரம் சொல்ல முடியுமா? ஸ்கூல், காலேஜ் என்று ஜகஜோதியாய் இருக்கிறார்.//

    1. அந்தம்மா பற்றி முதலில் நான் கேள்விப்பட்டது ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு. அப்போது காரைக்காலில் இருந்தேன். என்னுடன் பணிபுரிந்த ஒருவர் ஐம்பத்தொன்பது வயது மலையாளி. என்னிடம் அன்பாக, பிரியமாகப் பழகியவர். அவரிடம் தான் அந்தம்மா பற்றி முதலில் கேட்டேன். "உங்க ஊர் அம்மாவாச்சே! உலகப்புகழும் பணமும் பெருகி வருதே; நிஜமாவே ஏதாவது விசேஷம் உண்டா?'

    அவர் சொன்னது: "நானும் ஒரே ஒரு தடவை போயிருக்கேன். எல்லாரையும் கட்டி கட்டி புடிக்கும்னு சொன்னாங்க; அதுக்காகத் தான் போனேன். என்னையும் கட்டிப் புடிச்சுது. எதுவும் ஆகலை" என்றார். எனக்கும் அப்படி எதுவும் அந்தம்மா பற்றி அறிந்தே ஆகவேண்டும் என்கிற ஆர்வம் இல்லாததால் விட்டுவிட்டேன்.

    2. சுனாமியின் போது நான் காரைக்காலில் தான் இருந்தேன். வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், கடலூர் ஆகிய பகுதிகள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த சமயத்தில் அந்தப் பகுதிகளில் உதவிக்கும் சேவைக்கும் வந்தவர்கள் யார் என்றெல்லாம் அங்குள்ள அனைவருக்கும் தெரியும். எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களும், இந்திய தமிழக என்ஜிஓ அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டின; எந்த அளவுக்கு உதவிகள் சீரற்ற வேகத்தில் செய்யப்பட்டதால், வீணடிப்புகள் ஏற்பட்டன என்பதும் வெளிப்படையாக இருந்தது. கிறித்தவ இஸ்லாமிய அமைப்புகள் அந்த அளவுக்கு உள்புகுந்து பணி செய்தன; அந்த மாவட்டங்களைச் சுற்றி ஏராளாமான சொத்துக்களைக் கொண்டு சத்தமில்லாமல் உண்டு கொழுத்து தொப்பை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்து மடங்களும், ஜகத் குருக்களும் தான் காணாமல் போயிருந்தனர்.

    அப்படி சேவை செய்த அமைப்புகளில் இந்தம்மாவின் அமைப்பும் ஒன்று என்பதில் பலருடைய கவனம் அங்கே திரும்பியது.

    அப்போது வீடிழந்தவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியை இந்தாம்மாவின் இயக்கம் ஏற்றது. மிக வேகமாக, அதே நேரம் தரமான வீடுகள் (அரசாங்க வீடுகள் கட்டி முடிக்கப்படும் முன்) கட்டி முடிக்கப்பட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வுகள் நெகிழ்ச்சி பூர்வமாக நடந்தவை. (அந்த சமயத்தில் நான் பணிமாற்றத்தில் அஸ்ஸாம் வந்து விட்டேன்; ஆனால் நண்பர்கள் மூலம் இன்னும் தொடர்புகள் தொடர்கின்றன. எத்தனை வீடுகள் என்கிற எண்ணிக்கையை இன்று மாலைக்குள் சொல்வதாக நண்பர் கூறி இருக்கிறார்).

    அதன் பிறகு அரசாங்க குடியிருப்புகள்
    உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் படுவதற்கு மூன்பாகவே கூரை கீழே இறங்கிய கதைகளும், போராட்டங்களும் நடந்தது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    3. பணமும் செல்வாக்கும் சேர்ந்தால் ஜெகஜ்ஜோதித் தனம் ஏன் வராது? 'போடாபோடா புண்ணாக்கு' பாடலில் வடிவேலு எப்பாடி இருந்தார்; இப்போது எப்படி இருக்கிறார்! புதிதாக மடத்துக்குள் நுழைந்தபோது எப்படி இருந்த காஞ்சியின் சிறிய சாமியார் இப்போது எப்படி இருக்கிறார்!

    எல்லாம் தாண்டி, சாய்பாபா இயக்கத்தின் மிது விழுந்திருக்கும் கல்லூரி மாணவர்களின் மர்மக்கொலை போன்ற கரும்புள்ளிகள் இன்னும் இந்தம்மா இயக்கத்தின் மீது விழவில்லை என்பது இன்றைய நிலவரம்.

    ReplyDelete
  22. நன்றி ரத்தனேஷ். இன்னும் விவரங்கள் சொல்லவும். அப்படியே பாபா அருளிய கிருஷ்ணா நதி நீர் என்னவாச்சு என்றும்
    சொல்லவும். சென்னைக்கு வருகிறதா? நேற்று இங்கு பழக்கமான மார்வாரி பெண் மருத்துவர் ஸ்வாமி நாராயணா டிரஸ்ட், ஆஸ்பத்திரியில்
    வேலை செய்யும் மருத்துவர்களுக்கு மிக குறைவான சம்பளம் தருகிறார்களாம். அதனால் விருப்பம் இல்லாமல், தகுதி குறைவான
    மருத்துவர்களே அங்கு வேலை செய்கிறார்கள் என்றார்.இதில் கோடிகளை செலவழித்து கோவில்கள், உலகமெங்கும் :-(

    ReplyDelete
  23. வாங்க ரத்னேஷ் சீனியர்.

    நீங்க சொன்னதுபோலத் தனி மனுஷியாப்போய் மக்கள் சேவைக்கு நிதி கேட்டிருந்தா ஒண்ணும்தான் தேறி இருக்காது.

    நம்ம மக்களுக்கு, எந்த சாமியாரானாலும் சரி. அங்கே போய்வந்த பிறகு எதாவது அதிசயம் நடந்துச்சுன்னு கேள்விப்பட்டாலே போதும். (காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாலும் சரி) காட்டுத்தீயை விட வேகமாப் பரவிரும் இந்தச் செய்தி. அதான் பித்தம் பிடிச்சுக் கிடக்குதே ஜனம். கூட்டங்கூட்டமாப் போய் சேர்ந்துருவாங்க. காசு கொஞ்சம்கூட இருக்கறவங்க அதுலே இருந்தாங்கன்னா...அவுங்களுக்கு அங்கே புதுசாக் கௌரவம் கிடைச்சிரும். ஆனா எல்லாத்துக்கும் காசு வேணும். காசில்லேன்னா சாமியும் இல்லை.

    சுநாமி சமயத்துலே நிறைய தனிமனிதர்களும் ஓசைப்படாம நிறைய செஞ்சுருக்காங்க. சிலர் தங்கள் சக்தியையும் மீறியே உதவி செஞ்சாங்க. பல நிறுவனங்களும் நல்லாவே செயல்பட்டாங்கன்னு தெரிஞ்சது. ஆபத்துன்னு வரும்போது இரக்கம் காமிக்கலைன்னா அப்புறம் மனுசனா பிறந்து என்ன பயன்?

    'அம்மா'வின் மகிமையால் கொல்லத்தில் அமிர்தாபுரின்னே ஒரு ஊர் உருவாகி இருக்கு.கூட்டம் அம்முதாம். வலையில் பார்த்தேன். ஹைய்யோ..........என்ன பிரமாண்டமான ஹால்!!! வெளிநாட்டு & உள்நாட்டு மக்கள் போய் குவியுறாங்களாம்.

    என் மலேசியத்தோழி ஒருத்தர் (வயசு 66) சிலபல காரணங்களால் திருமணம் செய்யாமலேயே இருந்துட்டாங்க. பொருளாதார நிலமையும் சரி இல்லை. அம்மாவின் பக்தை. தன்னுடைய தாய் 3 வருசமுன்பு இறந்த பிறகு தனிமனுஷியா இருக்கோமே. அம்மாவின் ஆசிரமத்துலே போய் சேர்ந்து சேவை செஞ்சு கடைசிகாலத்தைக் கழிக்கலாமுன்னு கேட்டுருக்காங்க. வெளிநாட்டு பக்தர் என்றதால் மாசம் ----- வெள்ளி கொடுத்துட்டு வந்து சேவை செய்யலாமுன்னு சொன்னாங்களாம். அவுங்க சொல்லும் அந்தக் காசு இருந்தால் இங்கே மலேசியாவுலேயே நல்லபடி வாழ்க்கையை நடத்திக்கலாமாம். சொல்லி விசனப்பட்டாங்க.

    ReplyDelete
  24. வாங்க உஷா.

    கல்லூரி பள்ளிக்கூடம், மருத்துவமனைன்னு சேவைகள் செய்தாலும் எல்லோருக்கும் இலவசம் இல்லைன்னு தெரியுது.

    உங்க பதிவுக்குச் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு மக்கள்தான் சொல்லணும்:-))))

    மார்ச் மாசம் முழுசும் மதங்களின் பிடியில் அல்லாடுவேன்னு மாசபலன் சொல்லுது எனக்கு! திடீர்ன்னு என்னென்னவோ நடக்குது என்னைச் சுத்தி.

    ReplyDelete
  25. வாங்க நானானி.

    நம்மூர்லே கூட்டத்துக்கு என்னப்பா குறைச்சல். அதான் ஒரு பில்லியனுக்கு மேலேயே நிறைஞ்சு வழியுதே. பைத்தியத்தைச் சுத்தியும் பத்துப்பேர் இருப்பாங்கதானே?

    ReplyDelete
  26. வாங்க தஞ்சாவூரான்.

    பித்தம் தெளிஞ்சா உடனே பதிவில் சொல்லிற
    மாட்டேனா என்ன? :-))))

    ReplyDelete
  27. வாங்க பொன்வண்டு.

    //பின்னூட்டம் பெரிசாயிருச்சோ? :)//
    நெவர்:-)))))
    அல்லக்கைன்னு சொன்னீங்க பாருங்க அது மெத்தச் சரி. அடிபொடிகளின் அட்டகாசம் கூடிப்போச்சு. ஆளாளுக்கு ஏஜன்ஸி எடுத்துக்கறாங்கப்பா.

    ReplyDelete
  28. வாங்க வல்லி.

    ஆனந்தமா... அது எங்கே இருக்கு? திகட்டுதா? அதுக்குத்தான் மாற்றுவழி வேணுங்கறது!

    ReplyDelete
  29. வாங்க உண்மைத்தமிழன்.

    என் கைவசம் இருக்கும் ரிட்டயர்மெண்ட் ப்ளான்லே ஆசிரமம் இருக்கு. நான் பூனைச்சாமி (யாரிணி) ஆயிருவேன். பக்கத்துலே ஜிகே உக்கார்ந்துருப்பார். பக்தர்கள் வரிசையில் வரும்போது ஜிகே எப்பவாவது 'மியாவ்' சொல்வார். அந்த பக்தர்க்கு அன்னிக்கு அதிர்ஷ்டம் பிச்சுக்கிட்டுப்போகும். எப்ப எந்த நேரம் 'மியாவ்' சொல்வாருன்னு தெரியாததால் கூட்டம் எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கும். நமக்கும் வருமானம் ஆச்சு. :-)))

    கூடிய சீக்கிரம் முழுப்பக்க விளம்பரம் செய்தித்தாளில் வரும் பாருங்க.

    ReplyDelete
  30. வாங்க டெல்ஃபீன்.

    இஞ்சி நல்லதுதான். எந்தக்கூடையில் இருக்கும் இஞ்சி ரொம்ப நல்லா வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கத்தான் சிரமமா இருக்கு.

    பித்தத்துக்கும் சாமியாரிணிக்கும் மட்டுமில்லை சாமியார்களுக்கும் சம்பந்தம் இருக்கு. என்ன ஏதுன்னு புரியாத தலைசுற்றல். எல்லாம் 'மதம்' பிடிச்சதாலேன்னு சொல்லிக்கலாமா?

    ReplyDelete
  31. என்ன இன்னிக்கு கிளாசில் கூட்டம் அலைமோதுது!! நானும் உள்ளேன் ரீச்சர்ன்னு சொல்லிக்கிறேன். :))

    ReplyDelete
  32. "சனிக்கிழமை நடக்கப்போகும் ஆன்மீகக்கூட்டத்தைப் பத்திச் சொல்லி, வாங்கன்னு அழைப்பு கொடுத்துட்டு வந்தோம்."
    ஒரு சின்ன சந்தேகம், அழைப்பு நீங்க கொடுத்ததா.. அப்ப ஒரு விஷயத்தில நம்பிக்கை இல்லாமலே செய்யறீங்களா இல்ல சும்மா எழுத்து சுவரசியத்திற்காக இத்தகைய பதிவா.. புரியல அதுதான் கேட்டேன்…

    ReplyDelete
  33. வாங்க கொத்ஸ்.

    கிளாஸ் லீடர் பேசற பேச்சா இது?
    லீடரா லட்சணமா அலைமோதும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேணாமா?

    அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டா மட்டும் போதுமா?

    சரி சரி. போய் வகுப்புக்கு வராதவங்களை இழுத்துக்கிட்டு வாங்க:-))))

    ReplyDelete
  34. வாங்க கிருத்திகா.

    உங்க சந்தேகம் நியாயம்தான்.
    இந்த அழைப்புகளைப் பொறுத்தவரை இந்த மீட்டிங்ஸ் எல்லாம் ஓப்பன் டு பப்ளிக்.

    நம்ம கம்யூனிட்டி ஆளுகளுக்குச் செய்தி போகணுமுன்னா வாய்வார்த்தையால் செய்'தீ'யைப் பரவவிடுவோம்.

    பத்திரிக்கையில் விளம்பர இலாக்கா மாதிரி.

    விளம்பரத்துக்கும், கூட்டம் நடத்துபவர்களுக்கும் என்ன சம்பந்தமோ அப்படி:-)))))


    இங்கே நாங்க 20 வருசத்துக்கும் மேலாக இருக்கோம். நம்ம இந்தியன் கம்யூனிட்டியில் அநேகரைத் தெரிஞ்சிருக்கும் வாய்ப்பு இருக்குதானே?

    ReplyDelete
  35. இதெல்லாம் அவங்க அவஙக நம்பிக்கைய்ப் பொருத்தது.

    ReplyDelete
  36. நாங்களிருக்கும் இந்த அமேரிக்க மாநிலத்தில் அம்மா சாமியாரிணிக்கு நிறைய பின்பற்றுவோர் உண்டு.

    சில புகைப்படங்களை இங்கு காணலாம்

    ≈ Amma ≈ my teacher ≈

    ReplyDelete
  37. வாங்க சாமான்யன் சிவா.

    நம்புனாத்தாங்க சாமி. இல்லேன்னா ஆ......சாமிதான்.

    ரசனைகள் பலவிதம் இல்லையா. மனுஷனுக்கு வெரைய்ட்டி வேணும்.

    சமையல் மாதிரிதான்:-)

    ReplyDelete
  38. வாங்க வாசன்.

    சுட்டிக்கு நன்றிங்க.

    ReplyDelete
  39. <==
    துளசி கோபால் said
    அம்மாவின் ஆசிரமத்துலே போய் சேர்ந்து சேவை செஞ்சு கடைசிகாலத்தைக் கழிக்கலாமுன்னு கேட்டுருக்காங்க. வெளிநாட்டு பக்தர் என்றதால் மாசம் ----- வெள்ளி கொடுத்துட்டு வந்து சேவை செய்யலாமுன்னு சொன்னாங்களாம்
    அவுங்க சொல்லும் அந்தக் காசு இருந்தால் இங்கே மலேசியாவுலேயே நல்லபடி வாழ்க்கையை நடத்திக்கலாமாம். சொல்லி விசனப்பட்டாங்க.
    ==>
    ஆசிரம் நடத்தவும் பணம் வேணுமில்லையா?
    இலவச ஆசிரமம் இருந்தால் நம் நாட்டில் பாதி பேருக்குமேல் அங்குதான் இருப்பார்கள் =)))

    சென்னையில் ஏதோ ஒரு அமைப்பு("உதவும் கரங்கள் ???") பணி செய்ய ஆட்கள் தேவையென்று விளம்பரம் கொடுத்ததாக ஞாபகம் "மாதம் ரூ.1000 சம்பளம், தங்கும் இடமும், உணவும் கொடுப்பார்களாம். உங்கள் தோழி இந்த மாதிரி இடத்தை அனுகணும்.

    ReplyDelete
  40. சாமானியன் சிவா,

    நானும் இந்த விளம்பரத்தைப் பார்த்திருக்கேன்.அவுங்களும் 45 வயசுக்குள்ளான பெண்களைத்தான் இந்த வேலைகளுக்கு எடுத்துக்குறாங்க.

    இவுங்க வயசுக்கு இதெல்லாம் செய்ய முடியாது.

    அண்ணந்தம்பிகள் மூணுபேர் இருந்தும், இவுங்க நிலை இப்படி இருக்குன்றதுதான் விசனம்(-:

    ReplyDelete
  41. <==
    துளசி கோபால் said...

    சாமானியன் சிவா,
    ...
    அண்ணந்தம்பிகள் மூணுபேர் இருந்தும், இவுங்க நிலை இப்படி இருக்குன்றதுதான் விசனம்(-:
    ==>
    இப்பத்தான் என்னை மாதிரி மக்கு மாணவனுக்கும் விளங்குற மாதிரி சொல்லியிருக்கீங்க -
    விசனம் தான் ஆதரவற்றவர்ங்கிறதுனாலதான், ஆஸ்ரமத்தினால இல்லைன்னு

    நன்னிங்கோ.

    ReplyDelete
  42. சிவா,

    இந்த 'விசனம்'என்னோடது.

    ReplyDelete
  43. Your blog is very interesting one... Thank you

    ReplyDelete
  44. வாங்க சி எம்.

    ரெண்டு வருசத்துக்குப்பிறகு உயிர்ப்பித்து இருக்கீங்க!!!!!

    நன்றி. நன்றி

    ReplyDelete