Tuesday, March 31, 2009

விடுறதா இல்லை, கும்பகோணத்தை:-)......(2009 பயணம்: பகுதி 5)

நம்ம 'வீட்டு ஜன்னலுக்கு' எதிரில் தகப்பனுக்கு உபதேசம் செய்யும் மகனை, மலைமேலேயும் போய்ப் பார்க்கணும். இன்னிக்கு முதல் வேலையே இதுதான். ச்சலோ, ஸ்வாமி மலைக் கோயில். படிகள் ஏறிப்போனதும் கண்ணுக்கு எதிரா புள்ளையார் சந்நிதி. 'வா வா'ன்னு கூப்புட்டதும் கோபால் அங்கே போய் நின்னார். தீபாராதனை. தட்டுலே 'சில்லரை' போடச் சட்டைப் பையிலேக் கைவிட்டதும், புள்ளையார் தன்னோடக் குசும்பைக் காமிச்சுட்டார். கையோட வந்துச்சு அஞ்சு மடங்கு 'சில்லரை' நோட்டு. இடது பக்கம் இருக்கும் உள்ளே இருக்கும் முருகன் சிரிச்சுக்கிட்டேப் பார்த்துக்கிட்டு நிக்கிறார். கோயிலின் வெளி மாடியில் அருமையான வண்ணச் சிலைகள். நாரதரும் அகத்தியரும், பிள்ளையாரும், நந்தியும் மயிலும்கூட இருக்காங்க. ஆனால் சீனில் நம்ம பார்வதி பாய் மட்டும் மிஸ்ஸிங்(-: மதிள் பூராவும் யானைகள்.
ராமர் கோயிலுக்குப் போயிருங்கன்னு சொன்னதும் கோபுரத்தை அடையாளமா வச்சு நம்ம வினோத் எங்களை இறக்கி விட்ட இடம் ஆதி கும்பேஸ்வரர் கோயில். திருவுளம் அப்படியோ? இங்கே யானையை நல்லாவே பராமரிப்போமுன்னு உறுதி சொல்லிக்கிட்டு ஒரு அறிவிப்புப் பலகை. (இப்படி ஒன்னும் இல்லாமலேயே கோபால் ஏறக்குறைய முப்பத்தியஞ்சு வருசமா சேவை செய்ஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார்,இல்லை?)

கும்பகோணத்துலே 'பீச்' இல்லாத குறையைக் கோயில்கள்தான் தீர்க்குது.
கும்பேஸ்வரர் வெளிப்பிரகாரத்தில் கடலை வகைகள். நந்திகளே, நீரே சாட்சி.

'ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்'னு பாடிக்கிட்டே ராம(ர்)சாமி கோயிலுக்குள் நுழைந்தேன். வயதான பட்டர், ராமலக்ஷ்மண சீதை திருமேனிகளைக் காமிச்சு விளக்கிக்கிட்டு இருந்தாலும் என் மனசென்னவோ வீணை வாசிக்கும் ஹனுமானைப் பார்க்கப் பரபரத்துக்கிட்டே இருந்துச்சு. இரா.முவின் பத்திகளில் படிச்சேனே...... மலர்வனம் லக்ஷ்மியும் மடலில் நினைவுபடுத்திட்டுப் போயிருந்தாங்களே......உள்பிரகாரத்தை ரெண்டு முறை வலம்வந்தேன். கண்ணில் அனுமனைக் காணோம்....
"இன்னும் எத்தனை முறை சுத்தறதா இருக்கே? காணோம் காணோமுன்னா ..... யாராவது எடுத்து ஒளிச்சுவச்சுட்டாங்களா என்ன? பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

யாருமே கண்ணுலே படலையே.....'பேசாம ' அந்தப் பட்டரையே 'கேக்கலாமு'ன்னு மூலவர் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். பாவம் ரொம்பவே வயசானவர். கண்ணும் மங்கலா இருக்கு போல. ரெண்டு நிமிசத்துக்கு முன் என்னைக் 'கண்ட' பாவம் அடியோடு இல்லை. ஆள் நடமாட்டம் பார்த்ததும் 'டகால்'னு எண்ணெய் தீபத்தின் பிடியைப் பிடிச்சுத் தூக்கியபடி ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், சீதாப் பிராட்டின்னு டேப் ரிக்காடர்போல ஆட்டோமாடிக்காச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வீணை வாசிக்கும் ஹனுமார் எங்கே இருக்கார்ன்னு தவிப்போட கேட்டேன். அதே தீபத்தால் இங்கேன்னு வலதுபக்கம் கையைக் காமிச்சார். அட! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கார், காலை மடிச்சு அரைமண்டி போட்டவிதமா. வெயிஸ்ட் கோட்டா போட்டுருக்கார்? தங்க(???)க்கவசம் போல இருக்கே!!!!
சைடு போஸ் மட்டும்தான் தெரியுது. ராமனுக்கு மட்டுமே முகம் காட்டும்விதமா.......... நான் ஒருத்தி...முதலில் இங்கே சந்நிதிக்கு வந்தப்பயே கண்ணைச் சுழற்றி இருந்தால்..... பட்டுருப்பார். நான்தான் ஒரு மனசா, ஒரு முகமா ராமன் மேல் கண்ணு நட்டுவச்சுட்டேனே...

பிரகாரம் முழுசும் ஸீன் பை ஸீனா ராமாயணம்தான். அழகானச் சித்திரங்கள். சுவர்களில் காமிக்ஸ் புத்தகம். கும்பகர்ணனை எழுப்பும் யானைகள். ஹைய்யோ..........
இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?
தலைகளற்றக் குதிரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அடுத்த திருவிழாவரை ஓய்வு! தலைமட்டுமே புல்மேயப் போயாச்சு!
வெளியே வந்ததும், கோவிலையொட்டியே அரிசிக்கடை ஒன்னு. சதுரமான ஆளுயர ஸ்டீல் ட்ரம்களில் வகைவகையா அரிசி. (இங்கே நியூஸியில் அரிசித் தட்டுப்பாடு. இந்திய அரசு ஏற்றுமதியைத் தடை செஞ்சுருக்காம். தாய்லாந்து அரிசியைத்தான் தின்னாறது பலவருசங்களா. இதுவாவது கிடைக்குதேன்னு இருக்கும்போது 'வகை'க்கு எங்கே போவோம்?) ச்சின்னச் சின்ன அரிசிகள்.(ஐயோ....எவ்வளோ நாளாச்சு இப்படிப்பார்த்து. எனக்குக் கிடைப்பதெல்லாம் எமலோகத்து அரிசிதான். அங்கேதான் பெரிய பெரிய அரிசிச்சோறு போடுவாங்களாம் போன உடனே) இட்லி அரிசின்னு ரெண்டுவகை தடிமனா இருக்கு. எந்த அரிசிம்மா வேணும்னு கேட்டக் கடைக்காரரிடம், ச்சும்மாப் பார்க்கணும். வாங்கலைன்னேன். சட்னு அவர் முகத்தில் ஒரு பரிதாபம். பாருங்க நல்லாப் பார்த்துக்குங்கன்னார். சாப்பாட்டு அரிசி 25 ரூபாய். இட்டிலி அரிசி விலை 80 ரூபாயாம். அட! எப்படிக் கட்டுப்படியாகும்? அதான் ஹோட்டல் இட்லி இந்த அழகில் இருக்கா?

சாரங்கா..... தோ...வந்துட்டேன். கோபுரத்திலேயே ஸ்ரீசார்ங்கா, ஸ்ரீசார்ங்கா ஸ்ரீசார்ங்கா எழுதிவச்சுருக்கு. சாரங்கபாணி கோயில்.
தேரின் மேல் ஸ்வாமி. மண்டபமே இப்படித்தான் அமைஞ்சுருக்கு. கடவுள் 'கிடக்கிறார்'. பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டுனதாம். அவுங்களுக்குப் பெரியமனசு. எல்லாமே பிரமாண்டம்தான். மனசு நிறைவான தரிசனம். இது நூற்றியெட்டில் ஒன்னு!
தாயார் கோமளவல்லி. மாமி நினைவு வந்தது. 'கோமளா'ன்னு குண்டக்க மண்டக்கப் போடும் கையெழுத்து. கையோடு ஒப்பில்லாத அந்த உப்பிலியப்பனையும் சேவிச்சுட்டே போகலாமேன்னு போனோம்.
தென் திருப்பதி. ஸ்ரீநிவாசனாக இருக்கார். கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம். திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டுப் போகமுடியலைன்னா இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!

திருவிண்ணகர். இதுவும் நூற்றியெட்டில் ஒன்னுதான். ஒப்புவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பிலியப்பனா மாறி அதுக்கும் ஒரு கதையை வச்சுருக்கார். மனைவியா வந்த இளம்பெண்ணுக்கு, சாப்பாட்டுக்குத் தேவையான உப்புப்போட்டுச் சமைக்கத் தெரியலை. குழந்தை அவள். மன்னிக்கணுமுன்னு பொண்ணின் தோப்பனார் கேட்டுண்டதுக்கு இணங்கி உப்பில்லாமச் சாப்பிடறாராம் எ(ன்)ம்பெருமாள். (இந்தக் கணக்கில் கோபாலும் ஒரு உப்பிலியப்பந்தான். டாக்குட்டர் சொன்னபடி உப்பைச் சேர்க்காமல் இருக்கார் துளசித்தாயார்).

(ஆமாம். இந்த உப்பு என்ற சமாச்சாரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டாத் தேவலைன்னு இருக்கேன். எப்போ முதல் இது சமையலுக்கு வந்துச்சு? எப்படி மனுசன் இதைப் பயன்படுத்தத் தெரிஞ்சுக்கிட்டான்? எப்படி முதல்முதல் உப்பு கிடைச்சது? வெள்ளைக்காரன், சம்பளத்தின் ஒரு பகுதியா உப்பைக் கொடுத்தான்னா..... அவனுக்கு உப்போட 'மகிமை' எப்படித் தெரிஞ்சதுன்னு ஏகப்பட்ட சுவையான தகவல்கள் இருக்குமே...... ஆராயத்தான் வேணும். உப்பில்லாப் பதிவு குப்பையிலேன்னு புதுமொழி வந்துறப்போகுது!!!)

திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப லக்ஷ்மியுடன் துளசி தேவியும் தோன்றினாளாம். ஆனால் லக்ஷ்மிக்கு விஷ்ணுவின் மார்பில் இடம் கிடைச்சது. துளசிக்கு இடமில்லை. 'இதுக்காக வருத்தப்படாமல் இந்த இடத்தில் போய் துளசிச் செடியா வளர்ந்துக்கோ. அர்ச்சனை என்ற பெயரிலும் மாலை என்ற பெயரிலும் உன்னை(யும்) மார்பில் தாங்கிப்பேன்'னு பெருமாள் சொன்னதை நம்பி இங்கே துளசி 'துளசி'யாக அவதரித்ததாக ஸ்தலபுராணம்..............(அவதாரமுன்னு சொன்னதும், இந்தப் பயணத்தில் பார்த்த ஒன்னு ஞாபகத்துக்கு வருது. 'அம்மா'வின் பிறந்தநாளுக்கு அடிப்பொடிகள் வச்ச ஒரு பேனரில் 'அஞ்சாமை அவதரித்த நாள்' னு எழுதி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நிற்கும் அளவில் அம்மாவின் படம்!)

கோயில் குளம் அட்டகாசமா நடுவில் சின்ன நீராழி மண்டபத்துடன் இருக்கு. பொதுவாக் கோயில் குளங்களில் விளக்கு வச்சபின்னே இரவுநேரத்தில் தீர்த்தாடனம் (இது வேறவகை)செய்யக்கூடாதுன்னு ஒரு விதி இருக்குல்லே. அது இங்கே மட்டும் கிடையாது. பகலோ இரவோ எப்பவேணுமுன்னாலும் நீராடலாம். இதுக்குத் தோதா, குளமும், கோயிலுக்கு வெளியே இருக்கு!

சொல்லமறந்துட்டேனே..... இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் என்னன்னு தெரியுமா? வேற யார்? சாக்ஷாத் 'துளசி'தான்:-)

பகலுணவு நேரமாகிருச்சே.... டவுனில் போய்ச் சாப்பிடலாமுன்னு வண்டியை விரட்டுனப்ப... ஐய்யோ..... அய்யாவாடி. 'அம்மா'வால் பிரபலமடைஞ்ச ப்ரத்தியங்கரா தேவியின் கோயில். தெருவில் இருந்து பிரியும் சந்துலே, கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு. நாங்கள் கோவிலில் நுழையவும், நடையைச் சாத்திக்கிட்டுப் பூஜாரி நடையைக் கட்டவும் சரியா இருந்துச்சு. இனி மாலை நாலு மணிக்குமேல்தானாம். யாகசாலையைப் பார்க்கணுமுன்னா பின்பக்கமாப் போய்ப் பாருங்கன்னார். கோவிலையொட்டி மூணுபுறமும் கம்பிச் சுவர்கள் போட்டுவச்சுருக்கும் பிரமாண்டமான ஹால். நடுவிலே ஹோமகுண்டம். இந்தக் கோயில் எட்டு மயான பூமிக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளதாம். தேவி ரொம்பவே உக்கிரமா இருப்பாங்களாம்.

அமாவாசை சமயம் ரெண்டு கிலோமீட்டருக்கு 'க்யூ வரிசை' நிக்குமாம். முந்தி ஒரு காலத்துலே இங்கே ஈ, காக்கை இல்லாம வெறிச்சோடிக்கிடக்குமாம். அம்மா யாகம் செஞ்ச மறுநாள் திருவிழாபோலக் கூட்டம் கூடிருச்சாம். என்னமோ இருக்கு இந்தக் கோவிலில்....அம்மாவே வந்துருந்தாங்கன்னா........ மக்கள் முண்டியடிச்சுக்கிட்டுக் கூடி, இப்போ கோயில் நல்லா செழிப்பா 'ஜெஜெ'ன்னு இருக்கு:-)

( எத்தனையோ கோயில்கள் இப்பவும் ரொம்ப ஏழ்மை நிலையிலே பாழடைஞ்சுக்கிட்டு இருக்கே. அம்மா மனசில் இரக்கம் வச்சு அங்கெல்லாம் ஒருமுறை போயிட்டு வந்தாங்கன்னா..... நல்ல காலம் (கோயிலுக்குங்க) பொறக்காதா? அம்மாகிட்டே இந்த விண்ணப்பம் போடலாமுன்னு யோசனையா இருக்கேன்)

அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்சாங்கன்னு கேள்வி. எனக்குப் புரியாத ஒன்னு என்னன்னா..... ஒருத்தரை ( அவர் பெயரை 'ஏ'ன்னு வச்சுக்கலாம்) அழிக்கணுமுன்னு சாமிகிட்டே போய்க் கேப்பாங்களா? எனக்கு நல்லவாழ்க்கையைக் கொடுன்னு கடவுள்கிட்டே கேட்டு மன்றாடுவது உலகில் உண்டு. ஆனால் ஒருத்தர் அழியணுமுன்னு சாமிகிட்டே கேக்கலாமா? அதே சாமியை அந்த 'ஏ' கும்பிட்டு இன்னொருத்தரை ( இவுங்களை 'பி'ன்னு வச்சுக்கலாமா?) அதாவது அந்த 'பி'யை அழிக்கணுமுன்னு யாகம் செஞ்சா சாமி யார் பேச்சைக் கேப்பாரு? நியாய அநியாயம் பார்த்தா? இல்லே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு மாதிரியா? இல்லே இந்த ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவாரா?

இதேபோலத்தான் நாங்க ஃபிஜியில் இருக்கும்போது இந்தியர்களுக்குள்ளே அதுவும் தென்னிந்தியர், குறிப்பாத் தமிழ்க்காரர்களிடம் இப்படி பரவலான ஒரு எண்ணம் இருந்துச்சு. (இப்ப அதெல்லாம் நியூஸி, ஆசின்னு பரவி இருக்கணும். ராணுவப்புரட்சிக்குப் பின் இவர்களில் பலரும் வேற நாடுகளுக்குப் போயிட்டாங்களே). செய்வினை வச்சுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுலே நம்ம அக்காவேற 'ஆமாம்ம்மா.... பூஜாரி ஐயா வந்து நம்ம தோட்டத்துலே செடிகிட்டே தோண்டி ரெண்டு ஏலக்காய், கிராம்பு எடுத்தாரும்மா. மந்திரிச்சுப் புதைச்சுட்டாங்க யாரோ'ன்னு சொல்வாங்க. மசாலா அரைக்காம மந்திரிச்சு வச்சுட்டாங்களா? ஒரு குழம்புக்குள்ளது வீணாப்போச்சே:-))))

சாமிகிட்டேயோ இல்லை ஆசாமிகிட்டேயோ இப்படி ஒருத்தரை அழிக்கணுமுன்னு சொல்றதே அசிங்கமா இருக்காதா? மனசுலே அவ்வளவு ஆங்காரமும் அழுக்கும் இருந்தா சாமி நம்மையே கோச்சுக்காதா? என்னவோ போங்க.......

கோயிலில் வச்சுருந்த அறிவிப்பைப் பார்த்ததும் நான் நினைச்சது சரின்றமாதிரி இருந்துச்சு. மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கடவுள் மட்டுமே. அதுக்கெதிரா யாரும் யாரையுமே ஒன்னும் செய்ய முடியாது.

தொடரும்......:-)

63 comments:

  1. பெரிய டூர் போல இருக்கு!
    எப்ப வந்தீங்க?
    இப்ப எங்க இருக்கீங்க?

    ஊருக்கு திரும்பிப் போயிட்டீங்களா?

    ReplyDelete
  2. வாங்க சுரேகா.

    நலமா?

    திரும்பி வந்ததாலேதான் பதிவே வருது. இந்தியாவில் இருக்கும்போது நேரமே கிடைக்கறதில்லை. எப்படியோ நேரம் போயிருது(-:

    ReplyDelete
  3. அனுமன் வீணை மீட்டினானா... அதை வீணே மீட்டாமல்.. நீங்களும் கேட்க (காண) மீட்டினானே.... அதனாலேயே மீண்டான். :-)

    ராமர் கோயிலுக்குப் போய் ராவணனை நினைச்சிருக்கீங்க. வில்லன்னு சொல்லப்படுறவன வெச்சித்தான் கதாநாயகனுக்கே பொழப்பு. ஆகையால கதாநாயகர்கள் எல்லாரும் வில்லன்களைக் கும்பிடனும்னு சொல்லீருவோம். :-)

    ReplyDelete
  4. ரொம்ப கத்திரி போடறீங்க...எடிட்டிங்க சொல்றேன்.
    'தந்தைக்கு உபதேசம் செய்த மலை'யை அம்போனு விட்டுட்டு
    அடுத்த கோவிலுக்கு தாவிட்டீங்க.

    ReplyDelete
  5. பதிவுல பல இடங்களில் பெருமாள் கோவில் தீர்த்த வாசனை:-) ரசிச்சேன்.

    //இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் // ஆஹா, நியூசி அரசாங்கத்துக்குத் தெரியுமா? இல்லையின்னா புராதனச் சின்னம், செடி அது,இதுன்னு சொல்லி உங்களையும் நோ என்ட்ரி சொல்லிடப் போறாங்க:-)

    செய்வினை: நான் வளர்றப்போ எங்க வீட்டுப் பக்கத்தில் இருந்தவங்க பலர் இதை நம்பி பரிகாரம் செய்யிறதைப் பாத்துருக்கேன் (ரங்க்ஸ் நகரவாசி, அதுனால இப்படியெல்லாம் நம்புவாங்கன்னு நான் சொல்லிட்டிருந்தப்போ 'போடி பட்டிக்காடு'ன்னு சொன்னாரு:-)

    //ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவா//ரு உம்மாச்சி. பின்ன அவருக்கு போரடிக்காதா, மாத்தி மாத்தி கேட்டா? இன்னொரு உயிருக்கு ஆபத்து வரணும்னு விரும்பிக்கேட்பவர்களுக்கு ஆட்டமாடிக் ஆயுள்தண்டனை.

    ம்ம், அப்புறம் எங்கே போனீங்க?

    ReplyDelete
  6. நல்லா இருக்கு பதிவு, அடுத்து தஞ்சாவூர்தானே

    மலரும் நினைவுகள் வரும் எனக்கு.

    ReplyDelete
  7. அட்டகாசமான டூர், படங்கள், பதிவு...

    விர்ச்சுவலா(!!) கும்மோணத்தை சுத்தி வர்றோம் நாங்களும்....

    ReplyDelete
  8. \\ முந்தி ஒரு காலத்துலே இங்கே ஈ, காக்கை இல்லாம வெறிச்சோடிக்கிடக்குமாம். அம்மா யாகம் செஞ்ச மறுநாள் திருவிழாபோலக் கூட்டம் கூடிருச்சாம். என்னமோ இருக்கு இந்தக் கோவிலில்....அம்மாவே வந்துருந்தாங்கன்னா........ மக்கள் முண்டியடிச்சுக்கிட்டுக் கூடி, இப்போ கோயில் நல்லா செழிப்பா 'ஜெஜெ'ன்னு இருக்கு:-)
    \\

    அம்மாவால் அந்த அம்மானுக்கே வழிபிறந்தது என்றால் அம்மாவுக்கு அடிப்பொடிகள் வச்ச பேனர் தப்பேல்ல ;))

    ReplyDelete
  9. சுவாமிமலைக்கும் கும்பகோணத்துக்குமா வந்திருந்தீர்கள்.

    அடடா ! நீங்க வர்ற நேரம் பார்த்து இங்கன உட்கார்ந்து இருக்கோமே நாங்க...

    மீனாட்சி பாட்டி.
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  10. துளசி வாசம் கமகமக்குது டீச்சர் பதிவுலயும்...அடுத்து எந்த ஊர் ...எந்தக் கோயில்? சீக்கிரம் பதிவை போடுங்க ...சுவாமி மலைக்கு நானும் கூடவே வந்த மாதிரி தோன வச்சிட்டிங்க உங்க எழுத்துல.

    ReplyDelete
  11. துளசி நம்ம ராம்சாமி உங்களை அவ்வளவா ,அசத்தலை போல:)

    இன்னா ஜெட்ஸ்பீடுப்பா. இது.
    திருவெண்காடு,சீர்காழி சாலைல ஒரு ஹோட்டல்ல கீரைக்குழம்பு ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்குத்தான் ஒத்துக்குமோ இல்லையோன்னு குறிப்பிடலை!!
    கோமளவல்லி முனாலஒரு பெரிய வெள்ளிப்பீடம் பார்த்தின்ங்களா!!!
    அது மாதிரி இப்பல்லாம்நினைச்சே பார்க்கமுடியாது!!

    ReplyDelete
  12. மலரும் நிணைவுகள். பூம்புகாரையும் கும்பகோணத்து கோயில்களையும் மறக்கவே முடியாது...

    ReplyDelete
  13. கும்பகோணம் போய் பல வருடங்களாகிவிட்டது.உங்கள் புண்ணியத்தில் திரும்ப பார்த்தாகிவிட்டது.

    ReplyDelete
  14. எங்க ஊருக்கு பக்கத்துல எல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க!

    ReplyDelete
  15. நம்ம ஊரு எப்படி இருந்தது?
    வருகைக்கு நன்றி!
    அப்பறம் என்ன சொன்னீங்க....
    //
    கும்பகோணத்துலே 'பீச்' இல்லாத குறையைக் கோயில்கள்தான் தீர்க்குது.
    கும்பேஸ்வரர் வெளிப்பிரகாரத்தில் கடலை வகைகள். நந்திகளே, நீரே சாட்சி.
    //
    ஹீ.. ஹி.. ஹீ.. கொஞ்சம் வெயில் இருக்கும் பொது போயிருக்கீங்க அதான் கூடம் கம்மி. மாலை வேளைகளில் மகாமக குளம் பக்கம் போய் பாருங்க தெரியும். படித்துறை ரொம்பிடும் ;-)

    ReplyDelete
  16. Super teacher, Kaliketeenga - prey postla ethanai vidhamana information solli erukeenga


    (இப்படி ஒன்னும் இல்லாமலேயே கோபால் ஏறக்குறைய முப்பத்தியஞ்சு வருசமா சேவை செய்ஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார்,இல்லை?)

    Sir kku edhavadhu pattam kodakkalama ? :P

    கும்பகோணத்துலே 'பீச்' இல்லாத குறையைக் கோயில்கள்தான் தீர்க்குது.
    கும்பேஸ்வரர் வெளிப்பிரகாரத்தில் கடலை வகைகள். நந்திகளே, நீரே சாட்சி.

    Vadivelu padathula solra maari , rangamani thangamani kkellam endha koil manidhaan signal , koil dhaan meetin ground.

    பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

    Sema cute, unga funny touch! varthai velayaadudhu

    (இந்தக் கணக்கில் கோபாலும் ஒரு உப்பிலியப்பந்தான். டாக்குட்டர் சொன்னபடி உப்பைச் சேர்க்காமல் இருக்கார் துளசித்தாயார்).

    Sandhadi saakula avadhara purshargala ayiteengaley , erukattum Teacher dhaaney - kadvul maari nenachukkalam :))

    மசாலா அரைக்காம மந்திரிச்சு வச்சுட்டாங்களா? ஒரு குழம்புக்குள்ளது வீணாப்போச்சே:-))))

    correcta soneenga, eppavum kudava edhela ellam nambikkai vachurukaanga , hiyooo!!

    Romba rasichu padichen. Kadaiseya sonna varthaigal romba arumai.

    This is what spirituality is , having love for one another and always thinking good for one and others.

    Anbudan
    Sri

    ReplyDelete
  17. ரீச்சர் டூர் முடிந்து நியுசி வந்தாச்சா?

    ReplyDelete
  18. //இங்கே நியூஸியில் அரிசித் தட்டுப்பாடு. இந்திய அரசு ஏற்றுமதியைத் தடை செஞ்சுருக்காம். தாய்லாந்து அரிசியைத்தான் தின்னாறது பலவருசங்களா. இதுவாவது கிடைக்குதேன்னு இருக்கும்போது 'வகை'க்கு எங்கே போவோம்?) ச்சின்னச் சின்ன அரிசிகள்.//

    ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரிப் பிரச்சினை.பலசரக்கு டிபார்ட்மெண்ட தங்ஸ் எடுத்துகிட்டதால சின்னச் சின்ன அரிசி பசுமதிதான் எனக்கு கதி.கொஞ்சம் புழுங்கல் அரிசி சோறுதான் பொங்க வையேன்னு சொன்னா பசுமதி வடிக்க 10 நிமிசமாம் புழுங்கல் அரிசி 1/2 மணியாகுதாம்.

    புழுங்கல் அரிசிய நினைக்கும் போதே குண்டு குண்டா சோறும் மீன்குழம்பும் கண்ணுக்குள்ள வந்து போகுது!

    ReplyDelete
  19. துளசி
    சாரங்கபாணி கோவில் தேர் படம் இருக்கும் பார்த்தா கோபுரம்படம் போடறீங்க. அந்த கோவில் சிறப்பு தட்சினாயண, உத்திராயண தனிவழி:) சக்ரபாணி கோவில் பிரும்மர் கோவில் நாகேஸ்வரன் போகலைய? அதை விடுங்க பிள்ளையார் கோவில் பக்கமாவது போனீங்களா?

    ReplyDelete
  20. ஆஹா, இதென்ன ஜெட் வேகத்துல எழுதிட்டீங்க...அவ்வளவு வேகமா போனீங்களோ கோவில்களுக்கு?.

    நிறைந்த தகவல்கள், மற்றும் படங்கள்.. நன்றி டீச்சர்.

    ReplyDelete
  21. சாமிமலைக்குப் போனீங்களே... அங்க கோயில்ல பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டீங்களா? நாம் உண்ட பிரசாதங்களிலே சாமிமலை முருகன் கோயில் பிரசாதம் போல இனிதாவதெங்கும் காணேம். :-) சக்கரப் பொங்கலும் உழுந்து வடையும்... அடடா... அடடடடா!

    ReplyDelete
  22. வாங்க ராகவன்.

    இந்த அனுமன் வச்சுருக்க வீணை ஒரு வேளை ராவணனிடம் இருந்து அபேஸ் பண்ணதோ என்னமோ!!!!

    வில்லன் இல்லைன்னா கதை 'சப்'ன்னுல்லே இருக்கும்:-)))

    ReplyDelete
  23. வாங்க சிஜி.

    இதென்ன கிட்டப்பா, பி.யூ. சின்னப்பா காலமா? நாலுமணி நேரம் இழுத்துப் படம் காமிக்க?

    உலகமே வேகமா ஓடுது. அதுக்கேத்தமாதிரித்தானே நாமும் ஓடணும்.

    போனோம், கும்பிட்டோம் வந்தோம்தான்:-)))

    ReplyDelete
  24. வாங்க கெக்கே பிக்குணி.

    ரசிச்சதுக்கு நன்றி. அதுவும் பார்ட் பார்ட்டா!!!!

    ReplyDelete
  25. வாங்க குடுகுடுப்பை.

    அனுபவப் பதிவுகளே மலரும் நினைவுகளைக் கிளப்பி விடுவதுதானே?

    சுருக்கமாச் சொன்னா 'கொசுவத்தி':-))))

    ReplyDelete
  26. வாங்க ச்சின்னப்பையன்.

    நீங்களும் கூடவே வருவது மகிழ்ச்சியாத்தான் இருக்கு.

    நம்ம சிஜி பாருங்க.... தாவறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்:-)))

    ReplyDelete
  27. வாங்க நான் நரேந்திரன்.

    அநேகக் கோயில்கள் நூத்தியெட்டு திவ்ய தேசங்கள் பட்டியலில் இருக்கே! அதுதான் திவ்ய தரிசனம்:-))))

    ReplyDelete
  28. வாங்க கோபி.

    அம்மாவுக்கும் அய்யாவுக்கும் போட்டிகள்தான் இந்த பேனர் விஷயத்துலே:-)))

    ReplyDelete
  29. வாங்க மீனாட்சியக்கா.

    ஸ்டாம்ஃபோர்டு எப்படி இருக்கு?

    நாம் சந்திக்கும் வேளை இன்னும் வரலைக்கா.

    நீங்க இந்தியாவந்ததும் நானும் வந்தேன்னா கட்டாயம் சந்திக்கணும் அக்கா.

    ReplyDelete
  30. வாங்க மிஸஸ்.தேவ்.

    கூடவே வர்றதுக்கு நன்றி சொல்லிக்கறேன்.

    மகிழ்ச்சியா இருக்கு நீங்கெல்லாம் துணை இருப்பது!

    ReplyDelete
  31. வாங்க வல்லி..
    இருக்கும் நிலையில் கீரைக்குழம்பா?
    அடி ஆத்தீ..........

    உள்ளூர்க்காரங்களுக்குத்தான் நிதானம் சரிப்படும். நாங்க பறக்கற ஆளுங்க. வேகம்தான் எதிலும். ஆனாலும் ஸ்பீடு லிமிட்டைத் தாண்ட மாட்டோம்:-))))

    ReplyDelete
  32. வாங்க சுகுமார்.

    'பசுமை நிறைந்த நினைவுகளை மறக்க முடியுமா'?

    ReplyDelete
  33. வாங்க குமார்.

    நானும் ஒரு நாப்பது வருசத்துக்கு முன்னாலே போனேந்தான். இப்பப் பார்த்தால் எல்லாமே புதுசா இருக்கு. எக்கச்சக்க மாற்றங்கள்!!!

    ReplyDelete
  34. வாங்க ஜோதிபாரதி.

    கவிஞரின் ஊர்ப்பக்கம் எதுன்னு சொல்றது?

    ReplyDelete
  35. வாங்க வாழவந்தான்.

    உங்க ஊர் நல்லாத்தான் இருந்துச்சு. டூரிஸ்ட்டாப் போனால் எல்லாமே அருமைதான். இருந்து பார்த்தால்தான் உண்மையைச் சொல்லமுடியும்:-))))

    குளத்தாண்டையும் போய்ப் பார்த்தேன்:-)))

    ReplyDelete
  36. வாங்க ஸ்ரீவத்ஸ்.

    முதலில் நீங்க 'கலப்பை'யைப் பிடிக்கக் கத்துக்கணும். எவ்வளோ நாள்தான் தங்லீஷ்?

    கோபாலுக்குப் பொறுமைத்திலகமுன்னு சிஜி ஏற்கெனவே பட்டம் கொடுத்துட்டார்:-))))

    அவதாரப் புருஷி ஆனது....
    எல்லாம் 'அஹம் ப்ரம்மாஸ்மி' ன்னு உணர்ந்ததாலேதான். 'நான் கடவுள்' பார்த்துட்டொம்லெ:-)))

    ReplyDelete
  37. வாழவந்தான்.

    நியூஸி திரும்புனதாலேதான் பதிவெழுத நேரமே கிடைச்சது:-))))

    ReplyDelete
  38. வாங்க ராஜநடராஜன்.

    அப்ப நித்தம் நித்தம் நெல்லுச்சோறுதானாக்கும்!!!!

    பாசுமதி சாதம் , சாம்பாருக்குச் சரிவரலை. ரெண்டும் ரெண்டு வாசனை(-:

    ReplyDelete
  39. வாங்க பத்மா.

    உள்ளூர்க்காரங்க தொல்லை தாங்கமுடியலை:-))))))

    நானோ டூரிஸ்ட். தெரிஞ்சவரை, முடிஞ்சவரை, நேரம் இருக்கும்வரை(ட்ரைவருக்கு) பார்த்ததுதான்.

    தேர் அமைப்பு மண்டபம் ஜோர். ஆனா படம் எடுக்க முடியலையேப்பா.

    'சுட்டு'ப்போட மனசு வரலை(-:

    எல்லாம் தாமாய்(முடிஞ்சவரை)

    ஹோம் மேட் தான்:-)

    ReplyDelete
  40. வாங்க மதுரையம்பதி.

    சின்னதாக் குறுகின தெருக்களா இருந்தாலும் நம்ம வினோத் ஓட்டுன 'இன்னோவா' ஜெட் வேகத்துலே கொண்டுபோய் கோவில்களில் தள்ளிருச்சு:-))))

    இருந்த ரெண்டே நாளில் எத்தனை முடியுமோ அத்தனை:-))))

    ReplyDelete
  41. வாங்க ராகவன்.

    பிரசாதமேன்னாலும், தீர்த்தமேன்னாலும்,
    வாயைத் திறக்கமாட்டேன் பயணத்துலே.

    (இப்படியே எப்பவும் இருந்தால் எவ்வளோ நல்லா இருக்குன்னு நம்ம கோபால் நினைச்சுக்குவாரா இருக்கும்)

    பயம்தான்!!!!

    ReplyDelete
  42. வாங்க கொத்ஸ்.

    நான் பூனை.
    அதான் மதில்/மதிள் மேல்:-))))

    எது சரின்னு இன்னமும் தெரியலையேப்பா......

    ReplyDelete
  43. அந்த ஜேஜே கோயில் நான் இன்னமும் போகலை.. எப்ப போகமுடியுதோ தெரியல..முன்னல்லாம் எங்க வீட்டுக்கு வர்ரவங்க சிதம்பரம் சீர்காழி , திருமணஞ்சேரி ன்னு கேப்பாங்க ... இப்ப ப்ரத்யங்கரா பார்க்கப்போனும்ன்னு தான் அம்மாவைக் கூப்பிடறாங்களாம்.. :)

    ReplyDelete
  44. இன்னோவா மாதிரியே பதிவும் ஓடுது.கும்பகோணம் இதுவரைக்கும் போனதேயில்லை...இப்ப டீச்சர் உபயத்தில் இங்கெல்லாம் தரிசனம் கிடைச்சிட்டிருக்கு.

    ReplyDelete
  45. naan romba late endha vaati..naethikku leave eduthadhukku leave letter vaenum naa submit panniduraen teacher..

    eppidi ungaloda travel blogs padikum podhu,next time nammalum eppidi oru trip organize panni fulla ensoi pannanum nnu thondradhu..okok teacher,annual leave la poitta pochu!!

    ReplyDelete
  46. டீச்சர் இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களா....!

    நானும் அதே டைம்ல கும்பகோணம் மாயவரம்ன்னு சுத்திக்கிட்டிருந்தேன் ஆனா கம்யூனிகேஷன் கேப் பாக்க முடியாம போயிடுச்சு போல :((

    ReplyDelete
  47. //அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்சாங்கன்னு கேள்வி. எனக்குப் புரியாத ஒன்னு என்னன்னா..... ஒருத்தரை ( அவர் பெயரை 'ஏ'ன்னு வச்சுக்கலாம்) அழிக்கணுமுன்னு சாமிகிட்டே போய்க் கேப்பாங்களா? எனக்கு நல்லவாழ்க்கையைக் கொடுன்னு கடவுள்கிட்டே கேட்டு மன்றாடுவது உலகில் உண்டு. ஆனால் ஒருத்தர் அழியணுமுன்னு சாமிகிட்டே கேக்கலாமா? அதே சாமியை அந்த 'ஏ' கும்பிட்டு இன்னொருத்தரை ( இவுங்களை 'பி'ன்னு வச்சுக்கலாமா?) அதாவது அந்த 'பி'யை அழிக்கணுமுன்னு யாகம் செஞ்சா சாமி யார் பேச்சைக் கேப்பாரு? நியாய அநியாயம் பார்த்தா? இல்லே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு மாதிரியா? இல்லே இந்த ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவாரா?
    //

    ஒ அப்ப நான் கேள்விப்பட்ட வரைக்கும் “ஏ” சக்ஸஸ் பண்ணிய அந்த ஸ்பெஷல் பூஜையை இனி எந்த பி-இசட் வகையறாக்களும் செய்யமுடியாத படி நைட் பூஜை அப்பவே ரத்து செஞ்சுட்டாங்கன்னுல்ல சொன்னாங்க! :))))

    ஸோ சாமியும் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டு நிம்மதியா இரவு பூஜையின்றி உறக்கத்தில் ஆழ்ந்துக்கொண்டிருக்கிறார் அன்றிலிருந்து...!

    ReplyDelete
  48. //இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?
    //
    புராதானங்கள் வரலாற்று ஆதாராங்களாய் இன்று நம்மிடையே நின்றுக்கொண்டிருக்கும் கோவில்கள் சாதாரண செடி கொடிகளின் ஆக்கிரமிப்பில் அழியும் அபாயம் !

    கோவில் வருமானத்தில் பணி/நேரம் கழிக்கும் ஊழியர்கள் கூட கண்டுக்கொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விசயம் தான்!

    ReplyDelete
  49. மதில் தான் சரியான வார்த்தை அப்படின்னு நானும் சொல்லிக்கிறேன் டீச்சர் :)))

    ReplyDelete
  50. aakaa aakaa கண்ணில் கண்டவற்றை எல்லாம் ( கண்டதெல்லாம்னு தப்ப எடுத்துக்கக் கூடாது ) அழகாகப் புகபிபடத்துடன் விளக்கிய துளசியின் பதிவு பாராட்டத்தக்கது. சின்னஞ்சிறு செய்திகளைக் கூட - கோபாலின் யானை வளர்ப்பு - துளசித்தாயார் - உப்பிடாத துளசி - வெளிப்பிரகாரக் கடற்கரை - பேசாமக் கேட்பது - அரிசித் தட்டுபாடு - அதன் விலை -
    அழிக்க யாகம் - ம்ம்ம்ம்ம்

    நல்லாவே இருக்கு பதிவு துளசி

    ReplyDelete
  51. நடுவினில் இரா.மு மற்றும் கோணல் மானலாக கையெழுத்திடும் கோமளம் மாமி - சட் சட்டென்று முடிச்சுப் போடும் திறமை வாழ்க - அபார நினைவாற்றல் -யானைன்னா சும்மாவா

    ReplyDelete
  52. வாங்க கயலு.

    எல்லாம் புது மோகம்தான்:-)

    ReplyDelete
  53. வாங்க சிந்து.

    டீச்சர் சொன்னது சரியா இருக்கான்னு பார்க்கவாவது ஒருமுறை போய்வாங்க:-)

    ReplyDelete
  54. வாங்க தாமரை.

    பயணம் செவது மனசுக்கு புத்துயிர் கொடுக்குமாம்.

    ஒவ்வொரு லீவிலும் சில இடங்கள்ன்னு வச்சுக்கலாம்.

    ReplyDelete
  55. வாங்க ஆயில்யன்.


    ஒரு கோயிலில் தெரிஞ்ச முகம் மாதிரி ஒன்னு பார்த்தேன். நீங்களா இருக்குமோ:-))))

    கோயில் கோபுரச்செடிகள் அபாயமானதுன்னு ஏன் நிர்வாகிகளுக்குப் புரியலை?

    நம்ம கல்கியே பொன்னியின் செல்வனில் 'மதிள்'ன்னு எழுதி இருக்கார். இதைப்பற்றி முந்தியே (4 வருசம்) ஒன்னு எழுதுனேன். அதையே இங்கேயும் தரேன்:-)

    இந்த மதில் & மதிள் எனக்கும் சந்தேகம் ரொம்பநாளா இருக்கு.
    பொன்னியின் செல்வனில் 'கோட்டை மதிள் சுவர்' ன்னு பல இடங்களில் வருது.
    ஆனால் மதில், மதில்மேல் பூனை இப்படியெல்லாம் கேட்டிருக்கோம்.
    இதுக்காகவே உக்காந்து யோசிச்சா குழப்பம்தான். அப்படியும் சொந்தமா
    ஒரு தெளிவு வந்துருக்கு.!!!!!

    கோட்டை மதிள் ரொம்ப உயரம். அதுமேலே பூனை ஏற முடியாது.
    வீட்டை சுத்தி வரும் மதில் ச்சின்னதா இருக்கும் அதுமேலே பூனை ஏறலாம்.
    ஆகக்கூடி வீட்டைச் சுத்தி இருப்பது மதில்
    கோட்டை கொத்தளங்களைச் சுற்றி இருப்பது மதிள்

    எப்படி இருக்கு? :-))))

    ReplyDelete
  56. வாங்க சீனா.

    பதிவைச் சரியாப் படிக்கலைன்னு என்னாலே நாக்குமேலே பல் போட்டுச் சொல்லமுடியாது:-)))))
    இதுக்குப் பெயர், பிரிச்சு மேயறதாம்:-)

    ReplyDelete
  57. எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  58. எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  59. இட்லி அரிசி விலை 80 ரூபாயா?
    காமடி கீமடி பண்ணலையே......
    எங்க வீட்டுல கலைஞர் 1 ரூபாய் அரிசிதான் இட்லிக்கு.

    ReplyDelete
  60. வாங்க குடந்தை அன்புமணி.

    முதல் வருகையா?
    ரொம்ப நன்றி.

    நலமா?

    விவரம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க. சரி இல்லைன்னா உடனே தகவல் கொடுங்க. என்னதான் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிஞ்சுக்க வாய்ப்பு இல்லைதானே?

    ReplyDelete
  61. வாங்க தீப்பெட்டி.

    கடையின் படம் போட்டுட்டுக் காமெடி பண்ணுவேனா?

    ஒருவேளை அவர் அம்பதுன்னது என் காதுலே எம்பதுன்னு விழுந்துச்சோ.....

    ReplyDelete