Monday, March 30, 2009

பிற்பகல் அஞ்சும் கூடவே ஒரு போனஸும் (2009 பயணம்: பகுதி 4)

மொட்டை வெயிலில்! இன்னும் ரெண்டரை மணி நேரத்தைப் போக்கணுமே. ரொம்ப மெதுவாவே அந்த வெறுஞ்சோத்தைத் தின்னாலும் முப்பது நிமிசத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியலை(-: இடைப்பட்ட நேரத்துக்குப் பூம்புகார் போயிட்டுவரலாமுன்னு வினோத் சொல்படிக் கிளம்பியாச்சு. வேகாத வெய்யில்வேற மண்டையைப் பிளக்குது. அங்கே போய் இறங்குனா...... 'முந்தி இது ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில்' பார்த்த மாதிரி இல்லாமல் என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. (1972 வது வருசம் போயிருக்கேன்) அப்போ எல்லாம் பிரமாண்டமா இருந்ததா நினைப்பு. இப்ப என்னடான்னா.....

சுவரில் புடைப்புச் சிற்பங்களா பலகைபலகையாப் பதிச்சு வச்சுருக்காங்க. அதுக்குக் கீழே ஆங்கில விளக்கங்கள். கண்ணகி சிலையைத் தனியாக ஒரு இடத்திலும் மாதவியைத் தனியாக ஒரு இடத்திலும் அப்பப் பார்த்த நினைவு. இப்போ? ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... தோட்டத்தில் ரெண்டு சிலைகளும் ஒரே மட்டத்தில். நடுவில் ஒரு சிலம்பு. நாமும் இவர்களை ஒன்னாப் படமெடுக்க முடியாதபடி உள் முற்றவாசல் அடைச்சு வச்சுருக்காங்க. அதுலே இருந்த துளைகளின் வழியா தனித்தனிப் படமா எடுத்தார் கோபால்.



(மாதவிக்குத் தலைக்கோல் பட்டம் கிடைச்சதாம்)
வெளியே படிகளில் நல்லா ஜில்லுன்னு காத்து வருதேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். (இதே மாதிரிதான் எல்லாக் கோயில்களிலும் கோபுரவாசலில் நல்லாக் காத்து வருது. வாசல் உயரம் கூடுதலா இருப்பதாலேன்னு நினைக்கிறேன்) நம்மைப்போலவே அங்கே இருந்த இரு இளைஞர்களிடம் ஊர் உளவாரம் பத்தித் தெரிஞ்சுக்கப் பேச்சுக் கொடுத்தால்..... அரசியல் வியாதிகளைக் கிழிகிழின்னு கிழிச்சாங்க. அரசாங்கத்துலே இருக்கும் லஞ்ச லாவண்யங்களைச் சொல்லிப் புலம்புனாங்க. ரோடு சீரமைக்க காண்ட்ராக்ட் எடுத்த கதையைச் சொல்லி அழுதாங்க. இவரோட ரோட் ரோலர் அங்கே வேலை செய்யுதாம். கூட இருக்கும் நண்பர் அதன் ஓட்டுனராம். ஒரு கட்சியும் சரி இல்லை. வேற வழியும் தெரியலை. இதுதான் பல இளைஞர்கள் மனசுலே இருக்கு.
பூம்புகார்லே இருக்கோமுன்னு வீட்டுக்குச் செல்பேசினால்...... அங்கே கடற்கரையில் மீன் வறுத்து விக்கறாங்கன்னு தகவல் வருது!! வம்பே வேணாம். ச்சும்மாக் கடற்கரையைப் பார்க்கலாமுன்னு போனால் சில கடைகள் இருந்துச்சு. சங்கு, சோழிகள் அதுலே செஞ்ச கைவினைப்பொருட்கள் இப்படி விற்பனை. அதுக்கு எதிர்ப்பக்கம் சில கைவண்டிகளில் மீன் வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. கிடைச்ச தகவல் மெய்:-)

மூணரை ஆனதும் கிளம்பினோம். நேராக் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் ஸ்தலம். ரெண்டு பஸ் நிறைய கர்னாடகாவில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள். கோவிலுக்கு வெளியே மண்டபத்தினருகில் அடுப்புப் பத்தவச்சு பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் நடக்குது. சிலர் காய்கறிகள் வெட்டிச் சிறுமலையாக் குவிச்சுக்கிட்டு இருந்தாங்க. கோவிலுக்குப் பின்னாலே ஓடும் வாய்க்காலில் குளிச்சுத் துவைச்சுன்னு சிலர். கோவிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வேலியில் புடவைகளும் உள்ப்பாவாடைகளுமாக் காய்ஞ்சுக்கிட்டு இருக்கு! கோயில் குருக்களின் வீடு ( பெயர்ப்பலகை இருந்துச்சே) வசதியான முறையில். முன்பக்கம் ஓய்வெடுக்கும் மக்கள் கூட்டம்.

வேண்டுதல்களுக்கு முடிவே கிடையாதா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையும், அதுக்கடையாளமாக இடுப்பு முழுசும் சரடு கட்டி நிற்கும் மரமும்
கோயில் திறந்ததும் முதல்ஆளாப்போய்க் கும்பிட்டுக்கிட்டு நேரா திருவெண்காடு.

திருவிழா முடிஞ்ச இடம் போல இருக்குன்னு உவமை சொல்வாங்க பாருங்க.அதேதான். முதல்நாள் உண்மைக்குமே திருவிழா நடந்து முடிஞ்சதாம். கோயில் வெளிப்பிரகாரம் முழுசும் பந்தலுக்கு நட்ட மூங்கில்களும் குப்பைகளுமா களேபரம். கோயில் உள்ளே போக முடியாதபடி பெருங்கதவு அடைபட்டு இருக்கு. திட்டிவாசல் கதவையும் திறக்க முடியலை. உள்ப்பக்கமா அதுக்குப் போட்ட தாழ்ப்பாள் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு இருக்காம்.
'தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்.
மறை நாயகன் முகம் காணத் தாழ் திறவாய்
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்'

ஏ.பி.நாகராஜன் புண்ணியம் கட்டிக்கிட்டார் மகாராஜன் குரலில்

மனசுக்குள் என்னையே நான் பாராட்டிக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன் பாட்டை. (சீனுக்கு ஏத்தது சட்னு நினைவுக்கு வந்துருச்சே)
அங்கிருந்த சப்பரம் ஒன்னை உருட்டிக்கிட்டுப்போய் அதுமேலே ஏறி மதில்வழியா கோயில் ஊழியர் ஒருத்தர் உள்ளே இறங்கிக் கதவைத் திறந்தார். இந்தக் கோயில் பற்றி வால்மீகி ராமாயணத்துலேயே குறிப்புகள் இருக்காம். சுமார் மூவாயிரம் ஆண்டுகள் ஆச்சு இதை கட்டின்னு சொல்ராங்க. அங்கிருந்த பெரிய குளத்தில் தெப்போற்சவம் முடிஞ்ச அடையாளமா ட்ரம் மிதவைகளைக் கழட்டி எடுத்துக்கிட்டு இருந்தாங்க,. கோலாகலமா இருந்துருக்கும்போல. மிச்ச எச்சங்களைப் பார்த்தே மனசு கணக்கு போட்டுருச்சு.

செல்லம்போல அட்டகாசமான நந்தி ஒன்னு. பளபளன்னு ஜொலிச்சுக்கிட்டுக் கம்பிக்கூண்டில் உக்கார்ந்துருக்கு. சாப்பாடு ரொம்ப பலமோ என்னவோ..... அருமையா நாக்கை நீட்டி மேலுதட்டைத் துழாவியடி ...அடடா நகையும் நட்டுமா என்ன ஒய்யாரம். பக்தர்களுடைய புலம்பல்களைக் கேட்டுக்கேட்டுக் காதுகூட விடைச்சு ,நிமிர்ந்துருக்கு:-) இது புதனுக்குரிய ஸ்தலம். ஆச்சு சாமி கும்பிட்டாச்சு.

அடிச்சுத் தள்ளிக்கிட்டு அடுத்த ஸ்டாப் வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் கிரகநாயகன். சட்ன்னு கிளம்பிக் கஞ்சனூர் சுக்கிரனையும் சேவிச்சுக்கிட்டுச் சூரியனார் கோயிலில் நுழைந்தோம். சூரியனுடைய சந்நிதி நடுநாயகமா இருக்க மற்ற எண்மர்களின் தனித்தனிச் சந்நிதிகள் அவர்கள் இயல்பாய்ப் பார்க்கும் திசைகள் பார்த்தபடியே அமைஞ்சுருந்துச்சு. குட்டிச் சந்நிதிகள் எல்லாத்துக்கும் ஒரு வகை வெள்ளிநிற பெயிண்ட் அடிச்சுவச்சுருந்தாங்க.
ஓட்டமா ஓடுனமாதிரி இன்னிக்கே எட்டு இடங்களுக்குப் போய்வந்துருக்கோம். காலையில் வந்ததும், திங்களூர் சந்திரனில் இருந்து ஆரம்பிக்கலாமுன்னு வினோத் சொன்னார்தான். ஆனா.... தஞ்சைக்குப் போகும் எண்ணம் இருந்ததால் (கார்க்கார ரஷ்யா மருத்துவரையும் சந்திக்கலாமுன்னுதான்) அப்போ பார்த்துக்கலாமுன்னு சொல்லிவச்சோம். ஒவ்வொரு கோவில் வாசலிலும் இறங்கும்போது முதலில் கோபுரத்தை ஒரு க்ளிக் செஞ்சுக்கணுமுன்னு மனசுக்குள்ளே போட்ட தீர்மானங்கள் எல்லாம் மாயமாய் மறைஞ்சுருச்சு. கோபுரவாசலைப் பார்த்ததும் கை (கெமெரா)பைக்குள் போகாமல், கால்கள் ஏதோ பசுவை நோக்கி ஓடும் கன்றுபோல கோவிலுக்குள் பாய்ஞ்சுருது. இறைவனின் திரு உளம் அதுவானால்........அதுவானால்........('சக்குபாய் நீயும் சாவுடி'ன்னு சமயசந்தர்ப்பம் இல்லாமல் சினிமா வசனம். நான் எங்கே உருப்படப்போறேன்)

எல்லாக் கோயில்களிலும் மூலவரைத் தரிசித்தாலும்..... என்னவோ அங்கெல்லாம் அவ்வளவா அலங்காரம், ஆரவாரம் இல்லாமல்தான் விரிச்சோன்னு இருக்கு. இருட்டுக் கர்ப்பகிரகத்துள் 'முணுக் முணுக்'குன்னு ஒரே ஒரு திரியின் முத்துச் சுடர் மட்டும் இருளோடு இருளாக லேசாத் தெரிய, சிவலிங்க வடிவில் உக்கார்ந்துருக்கார். (புதிய)ஆகம விதிகளின்படி 'ஓம் நமசிவாயா'ன்னு ஒலிக்கும் ஒலிப்பேழை இடைவிடாமல் அவருக்குத் துணையா இருக்கு. சிவலிங்கத்தில் ரசிச்சுப் பார்க்க ஒன்னுமில்லாததால் 'போனேன், கும்பிட்டேன்,வந்தேன்'தான்.

நவகிரகங்களின் சந்நிதிகள்தான் கோலாகலமா இருக்கு. ஒரு பதினைஞ்சு வருசமாத்தான் இப்படிக் கிரகக்கோளாறுன்னு மக்கள்ஸ் படையெடுத்து வந்துக்கிட்டு இருக்காங்களாம். இங்கேயுள்ள குருக்களுக்கும் கிரகநிலை ஓஹோன்னு இருக்கு. சில்லரை வேணுமுன்னு சொன்னப்பக் கோபால், 'இதோ வாங்கிக்கலா'முன்னு போய்க் கேட்ட இடம்? ஒரு குருக்களைத்தான். அவரும் ஆயிரம் ரூபாய்க்குச் சில்லரைகளா எடுத்துக் கொடுத்தார். இப்பெல்லாம் தட்டில் போடும் சில்லரையே 'பத்து ரூபாய் நோட்டு'களாம்.

'என்னம்மா இது எல்லாமே சிவன் கோயில்களாப் போயிருக்கோம்? உன் பெருமாளை இதுவரை பார்க்கலையே'ன்னு கோபால் திருவாய் மலர்ந்தருளினார். (ஆஹா.... பத்தவச்சுட்டேயே பரட்டை....)'நீங்க தான் எப்பப் பார்த்தாலும் 'முருகா முருகா'ன்றதால் உங்களுக்காகவே சிவன் கோயில்களாப் போயிருச்சு'ன்னேன்.

மறுநாள் எட்டுமணிக்கு வினோத்தை வரச்சொல்லிட்டு, நடந்துநடந்து வீங்கிப்போன காலுக்கு ஓய்வு கொடுத்தேன்.
தொடரும்:-)

45 comments:

  1. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரே ஒரு லைன் தானா? அநியாயம். அந்த கோவில் மரம், காலைல கிடைக்கிற மருந்து, கோவில் குளம், சந்தனக்குழம்பு விரிவா சொல்லாம இப்படி செய்தா எப்படி. சரி உப்பிலியப்பன் கோவில் பத்தியாவது டீடெயிலா எழுதுங்க.

    ReplyDelete
  2. வாங்க பத்மா.

    ரொம்ப விரிவாச் சுத்திப் பார்க்கலைப்பா இந்தக் கோயில்களை.

    நவகிரக டூர்ன்னு ஒரே நாளில் முடிச்சுடறாங்க(-:

    அப்புறம் தனியாத்தான் இன்னும் ஒருமுறை மனசுக்கு உகந்தவைகளைப் போய் விலாவரியாப் பார்க்கணும்.

    ReplyDelete
  3. ஓட்டமான ஓட்டம்...கொஞ்சம் மெதுவா போங்க டீச்சர்

    ReplyDelete
  4. வாங்க நரேன்.


    சம்பவங்கள் நடந்தது நடந்தபடி.....
    அது ஓடுனா பதிவும் ஓடும். அது நின்னு நிதானமாப்போனா பதிவிலும்..... நி....தா....ன.....ம்:-)

    ReplyDelete
  5. //'தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்.
    மறை நாயகன் முகம் காணத் தாழ் திறவாய்
    ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்'//

    எனக்கு 'பூங்கதவே தாழ் திறவாய்' பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது. உங்க வகுப்புல படிக்கறதோட விளைவோ. பழைய பாடமும் படிச்சுட்டேன். எனக்கு வசதியா நீங்களும் லீவு விட்டுட்டீங்க

    ReplyDelete
  6. வாங்க சின்ன அம்மிணி.

    நலமா? செட்டில் ஆயிட்டீங்களா?

    கோயில் வாசலில் நின்னுக்கிட்டுப் 'பூங்கதவே'வா?

    அச்சச்சோ..... சாமி கண்ணைக் குத்திரும். :-))))

    ஆன்மீகமா இருக்கணும்ப்பா.
    அததுக்கு இடம்பொருள் ஏவல் ன்னு இருக்குல்லே?

    ReplyDelete
  7. //கோயில் திறந்ததும் முதல்ஆளாப்போய்க் கும்பிட்டுக்கிட்டு நேரா திருவெண்காடு//

    அகோரமூர்த்தி உண்டு அஞ்சலென்ன நெஞ்சமேன்னு எங்க தாத்தா ஒரு பாட்டு எழுதிருக்காரு. கோரம் யாவும் நீக்குபவராம்.

    //எல்லாக் கோயில்களிலும் மூலவரைத் தரிசித்தாலும்..... என்னவோ அங்கெல்லாம் அவ்வளவா அலங்காரம், ஆரவாரம் இல்லாமல்தான் விரிச்சோன்னு இருக்கு.//

    இறைவனைச்சரணடைந்து நற்கதி பெறலாம் அப்படீங்கறத விட்டுட்டு சுத்தியிருக்கறவங்கள ஐஸ் வைச்சாலே போதும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டமோ

    //உன் பெருமாளை இதுவரை பார்க்கலையே'ன்னு கோபால் திருவாய் மலர்ந்தருளினார்//

    ஒப்பிலாத பெருமானை பாத்தீங்களா

    ReplyDelete
  8. பூம்புகாரை நானு உங்களுடன் பார்த்துடேன்ம்மா...

    ReplyDelete
  9. ம்ம்ம்..பதிவுலையும் வேகம் ;)

    \\........('சக்குபாய் நீயும் சாவுடி'ன்னு சமயசந்தர்ப்பம் இல்லாமல் சினிமா வசனம். நான் எங்கே உருப்படப்போறேன்)\\

    டீச்சருக்கே இந்த நிலைமைன்னா அப்போ நாங்க எல்லாம் அதேகதி தான் ;)))

    ReplyDelete
  10. // ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... தோட்டத்தில் ரெண்டு சிலைகளும் ஒரே மட்டத்தில். நடுவில் ஒரு சிலம்பு//

    ஆகா அரசியல், எல்லாப் புகழும் கருணாமூர்த்திக்கே, ஐ மீன் இறைவனுக்கே :)

    ReplyDelete
  11. கோவி.கண்ணன் said...
    // ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... தோட்டத்தில் ரெண்டு சிலைகளும் ஒரே மட்டத்தில். நடுவில் ஒரு சிலம்பு//

    ஆகா அரசியல், எல்லாப் புகழும் கருணாமூர்த்திக்கே, ஐ மீன் இறைவனுக்கே :)


    கட்டுக்குள் அடங்காத கருணாமூர்த்தியை, ஐ ஆல்சோ மீன் இறைவனை, ரெண்டு பொண்டாட்டியை மட்டும் கணக்கிட்டதற்க்கு அண்ணன் கோவி.கண்ணனை கண்டிக்கிறேன்.


    அம்மா நல்லா எழுதியிருக்கீங்க.,(அரசியல் பேசியதற்க்கு மன்னிக்கவும்)

    ReplyDelete
  12. நான் ஒண்ணாப்பு ரெண்டாப்பு படிச்ச ஊருங்க திருவெண்காடு.. திருவிழான்னைக்கு அம்மா போயிருந்தாங்க.. நீங்க அடுத்த நாள் போனீங்களாக்கும்..
    இங்கே உங்க அண்ணாத்தை சபரி எப்படா பீச்சுக்கு போவொம்ன்னு லீவுக்கு வெயிட்டிங்க்..

    ReplyDelete
  13. vதுளசி,
    ரெண்டு பொண்டாட்டிக்கு மூதாதையர்கள் எல்லாம் வழிகாட்டிட்டாங்க. நீங்க கோவலனைச் சொல்லப் போயிட்டீங்க:)

    காலமடி காலம் கலிகாலமடி காலம்னு நானும் பாடிக்கிட்டேன். எனக்குத்தான் இந்த சினிமா பாட்டுகள் ஞாபகம் வருமுன்னு நினைச்சேன். அந்தப் பெருமையைத் தகர்த்திட்டீங்களே :(((((((

    அரியும் சிவனும் ஒண்ணில்லையா. கோபாலோட தெய்வமா இருந்தா என்ன. துளசியோட பெருமாளா இருந்தா என்ன, பதிவைப் படிக்கிற எங்களுக்கு நல்ல தீனி:)

    இவ்வளவு சோழி கடை இருந்ததா???? ம்ம்ம்ம்ம்.

    :)

    ReplyDelete
  14. பூம்பூகார்!

    ஆஹா! இந்த பேரை கேட்டாலே மனம் பூரிக்கின்றது

    காதலித்த காலங்களில் நானும் சுற்றித்திருந்த இடம்.

    மிக்க நன்றி டீச்சர், பழைய நினைவுகளில் மூழ்க விட்டதற்கு

    ReplyDelete
  15. அந்த இளைஞர்களின் உள்ள குமுறல் கேட்கவே நாராசமாக இருக்கு.
    இவர்கள் மாதிரி எத்தனை இளைஞர்களை(முன்னுக்கு வர நினைக்கும்) கெடுக்கப்போகிறோமோ!!

    ReplyDelete
  16. /மாதவியைத் தனியாக ஒரு இடத்திலும் அப்பப் பார்த்த நினைவு. இப்போ? ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... //

    மாதவி இப்போ ஒரே ஸ்டேட்டஸ்-ஆஆ....?
    டீச்சர், இதுக்கும் பந்தலுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! :))

    //அதுக்கு எதிர்ப்பக்கம் சில கைவண்டிகளில் மீன் வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க//

    வாவ்! வேர் இஸ் தி மீன் ஃபோட்டோ? :)

    //அடிச்சுத் தள்ளிக்கிட்டு அடுத்த ஸ்டாப் வைத்தீஸ்வரன் கோயில்//

    தையல் நாயகி பத்தி நீங்களே சொல்லலீன்னா எப்படி டீச்சர்? :(

    //சிவலிங்கத்தில் ரசிச்சுப் பார்க்க ஒன்னுமில்லாததால் 'போனேன், கும்பிட்டேன்,வந்தேன்'தான்.//

    ஆகா....இது அநியாயம்! :)))
    இதுக்குத் தான் சிவலிங்கப் பதிவைப் படிக்கணும்-ங்கிறது!

    ReplyDelete
  17. //'என்னம்மா இது எல்லாமே சிவன் கோயில்களாப் போயிருக்கோம்? உன் பெருமாளை இதுவரை பார்க்கலையே'ன்னு கோபால் திருவாய் மலர்ந்தருளினார்//

    ஆகா...டீச்சர்! என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன் ஒப்பார் இல் ஒப்பிலியப்பனா? ஹைய்யோ...சொல்லுங்க...சொல்லுங்க! அடுத்த பதிவை இப்பவே போடக் கூடாதா?

    ReplyDelete
  18. சின்ன அம்மிணி,

    இப்பெல்லாம் சுற்றுவட்டாரத்துக்குத்தான் மதிப்புன்னு இங்கேயும் ஆகி இருக்கு.

    ReplyDelete
  19. வாங்க ஞானசேகரன்.

    சரியாப் பார்த்தீங்கதானே? :-)))

    ReplyDelete
  20. வாங்க கோபி.

    மனசு இருக்கே கிடந்து அலையுதுப்பா.

    ஆன்மீகமா இருன்னா கூடவே லௌகீகமும் சேர்த்துக்குது:-)

    ReplyDelete
  21. வாங்க கோவியாரே.

    சாமி ஆரம்பிச்சு வச்சதை இன்னிக்கு ஆஆஆஆஆஆசாமி செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

    கடவுளைக் கண்டுபிடிச்ச மனுசனுக்கு, உள்ளே இருந்த ஆசைதானே இது:-)

    ReplyDelete
  22. வாங்க அப்பாவி முரு.

    அரசியலும் சினிமாவும் இப்படிப் பல்கிப்பெருகி ஊசி நுழையாத இடத்திலும் பரவியிருக்கே.....

    இதுலே நான் என்ன மன்னிப்பது:-))))

    ReplyDelete
  23. வாங்க கயலு..

    அம்மா திருவிழாவுக்குப் போனாங்களா? கூட்டம் நெரிஞ்சுருக்குமே!!!!!
    மறுநாளும் கொஞ்சம் கூட்டம் இருந்துச்சுப்பா அங்கே

    ReplyDelete
  24. வாங்க வல்லி,
    மூதாதையர் சாமிக்கு ஆரம்பிச்சுவச்சு, அவுங்களும் இறைவழி நடக்கறோமுன்னு
    செஞ்சுக்கிட்ட ஏற்பாடு(-:

    //இவ்வளவு சோழி கடை இருந்ததா???? ம்ம்ம்ம்ம்.//

    சோழீஸ் கடை:-)))

    ReplyDelete
  25. வாங்க நட்புடன் ஜமால்.

    காதலுக்கு முற்றுப்புள்ளி வச்சு, இப்ப அவுங்க மனைவியா ஆகி இருக்கணுமே:-)

    ReplyDelete
  26. வாங்க குமார்.

    இன்னிக்கு உயிரோசையில் வாசந்தி இப்படி எழுதி இருக்காங்க பாருங்க.

    //ஒரு பத்திரிகை நண்பர் ஒரு முறை சென்னையில் அங்கலாய்த்தார். தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாமர மக்களுக்கும் இருக்கும் தொடர்பற்ற தன்மையைப் பற்றி. இன்றைய இளைஞர்களுக்கு தமது வாழ்க்கையில் முன்னேற என்ன வழி என்பது மட்டுமே பிரச்சினை. அதுவே அவர்களது இலக்கு. அவர்களது பார்வை இப்போது உலகளாவியது. தமிழ் நாட்டுக்கு அப்பால் விரிகிறது, சுய முன்னேற்றத்திற்காக. தமிழ்ப் பற்றோ வேறு எதுவோ அவர்களது agenda இல்லை. இந்த அரசியல்வாதிகள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார். //

    ReplyDelete
  27. டீச்சர்!நாங்களும் பதிவு போடுவோமில்ல:)வாங்க சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள் பதிவுக்கு!

    ReplyDelete
  28. வாங்க கேஆரெஸ்.

    வாட் டூ யூ மீன்? சோழிக்கடைக்கு எதிரில் மீன் இருப்பதைப் பார்க்கலையா?
    டோண்ட் பி ஸோ மீன்:-)))

    இன்றைய நவகிரக டூர்லே ஒப்பிலியைப் பார்க்கமுடியலை. ஆனா அங்கங்கே கோயில் விளம்பரப் போர்டைப் பார்த்தோம்.

    சிவலிங்கத்துலே என்ன அழகு இருக்குன்னு இன்னும் புரியலை(-:

    ReplyDelete
  29. வாங்க சிஜி.

    நன்றி.

    இதுக்குத்தான் ஆசைப்பட்டீரா சிஜி?:-))))

    ReplyDelete
  30. வாங்க ராஜநடராஜன்.

    மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கணுமோ மேட்டருக்கு :-))))

    ReplyDelete
  31. 8 koil orey nalla patheengala ?

    Unga kittey kathukanum suruppai pathi.

    Enakennamo koil ellam orey commericial centera ayittu varudhunnu thonudhu.

    --
    Pona padhivula comments varaleynnu parthuttu erundhen :))

    5 naal diet panni 3 kilo kuranjadhu teacher

    ana friendkku 1/2 kila dhaan koranjadhu

    avanga avanga karma pola :P

    ReplyDelete
  32. me too present,teacher..!!

    ReplyDelete
  33. பெருமாளை சேவிச்சீங்களா இல்ல கோபால்ஜிக்காக தியாகம் பண்ணிட்டீங்களா?

    சோழிக்கடைல ஏதாவது வாங்கனீங்களா? மீன் கடை மீன் கலரு பயமுறுத்துது.

    ReplyDelete
  34. அந்த நந்தி ரொம்ப க்யூட்டா இருக்கு...அப்புறம் மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி :0))...

    அடுத்த பாகம் எப்ப?

    ReplyDelete
  35. //சம்பவங்கள் நடந்தது நடந்தபடி.....
    அது ஓடுனா பதிவும் ஓடும். அது நின்னு நிதானமாப்போனா பதிவிலும்..... நி....தா....ன.....ம்:-)//

    :-))

    நீங்க எப்போதும் சரியான அளவுல தான் சொல்லுவீங்க மேடம்..அதனால பிரச்சனை இல்லை

    ReplyDelete
  36. \\காதலுக்கு முற்றுப்புள்ளி வச்சு, இப்ப அவுங்க மனைவியா ஆகி இருக்கணுமே:-)\\

    முற்றுப்புள்ளி வைக்கவில்லை

    ஆனால் அவுக தான் எமது இல்லத்து-அரசி

    ReplyDelete
  37. வாங்க ஸ்ரீவத்ஸ்.

    எல்லாக் கோயிலும் இப்ப கமர்ஸியலாத்தான் ஆகி இருக்கு.

    நின்னு நிதானமா ரசிக்கவோ, கும்பிடவோ யாருக்குமே நேரம் இல்லை(-:

    உங்க ஃப்ரெண்ட் அதிர்ஷடசாலி. அரைக் கிலோன்னா சும்மாவா?

    எனக்கானா ஒரு பத்து கிராம் இளைக்குமோ என்னவோ!!!!

    ReplyDelete
  38. oops...spelling மிஷ்டேக்கு(-:

    அதிர்ஷ்டசாலி

    ReplyDelete
  39. வாங்க தாமரை.
    பதிவேட்டில் பதிஞ்சாச்சு:-)

    ReplyDelete
  40. வாங்க சிந்து.

    சேவிச்சோம் பலமுறை பல இடங்களில்.

    மீனோ இல்லை சோழியோ, இல்லை சாப்பாடோ....எல்லாம் கண்ணுக்கு மட்டுமே!!!

    ReplyDelete
  41. வாங்க அது சரி.

    உங்கூர்லே மீனு கிடைக்கறதில்லைங்களா?

    வேதாளம் கிட்டே சொல்லி அனுப்புங்களேன்:-))))

    ReplyDelete
  42. வாங்க கிரி.

    'ஆத்துலே போட்டாலும் கதைதான்'

    அளந்துருவொம்லெ:-))))

    ReplyDelete
  43. வாங்க நட்புடன் ஜமால்.

    காதலிக்கு முற்றுப்புள்ளின்னு சொல்லி இருக்கணும் நான்.

    காதலுக்கு முடிவேதுங்க?

    இல்லத்தரசிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    'ஒரு காதல் திருமணத்தின் மதிப்பும் அருமையும் இன்னொரு காதல் திருமணத்துக்குத்தான் தெரியும்'னு பெரியவுங்க (ஹிஹி...நாங்கதான்) சும்மாவா சொல்லி வச்சுருக்காங்க?

    ReplyDelete
  44. வேண்டுதல்களுடன் அதே மரம். “இடுப்பில் சரடு”.. நேர்க்கோணத்தில் நீங்கள் எடுத்திருப்பதில் ‘ஒட்டியாணம்’ என்றும் கொள்ளலாம்:). மக்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியிருக்கட்டுமாக!

    ReplyDelete